படுக்கையை விட்டு எழுந்த துளசியம்மாள் ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு வெளியே பார்த்ததும், ‘ஊருக்குப் போய் வந்தால் என்ன’ என்ற எண்ணம் வந்தது.
“மவனும் மருமவளும் பெரிய வேலயில இருக்கயில, நீ மட்டும் எதுக்கு இங்க இருந்துகிட்டு ஒத்தயில கஷ்டப்படுற? ஒம் மருமவ ஒனக்கு மட்டுமா தனியா ஒல வச்சி வடிக்கப்போறா? போயி நாலு ஊரு, நாட்டெ பாத்துட்டு வா” என்று ஊரில் சொல்லாதவர்கள் இல்லை. அப்படிச் சொல்லும்போதெல்லாம் துளசியம்மாளுக்குச் சந்தோஷமாக இருக்கும். ஊரை விட்டுவந்து இருபத்தியெட்டு நாட்களாகிறது. இப்போது ஊருக்குப் போனால் ஊர்க்காரர்கள், “மவன் ஊட்டுக்குப்போயி இட்லியும் தோசயும் தின்னதால ஊரு நெனப்பெல்லாம் இல்லாமப் போயிடுச்சா?” என்றுதான் கேட்பார்கள்.
ஊருக்குப்போய் தன் மகனும் மருமகளும் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கிறார்கள், வீட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருக்கிறார்கள், என்னென்ன விதமான சாப்பாடெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் சொல்ல வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. மகனைப் பற்றியும் மருமகளைப் பற்றியும், அவர்களுடைய பெருமைகளைப் பற்றியும் சொல்வதற்காகவே ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்தாள்.
ஊருக்குப் போகிறேன் என்று சொன்னால், “வயசான காலத்திலெ, சரியா நடக்க முடியாத நிலையில, ஒத்தயில தனியா எதுக்கு இருக்கணும்? ஒங்களால எங்களுக்கு என்னா தொந்தரவு. ஊருக்குப் போறங்கிற பேச்ச விட்டுட்டு வேற பேச்சு பேசுங்க” என்று சொல்லி வாயை அடைத்துவிடுவார்களோ என்று யோசித்தாள்.
மகனுடைய பெருமைகளையும் மருமகளுடைய பெருமைகளையும் ஊரார்களிடம் போய் சொல்லாமல் எப்படி இருப்பது? ஒரே ஒரு நாள் மட்டும் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு அறையைவிட்டு வந்தாள்.
ஹாலில் லதா புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள், கெளதமும், கௌசிகாவும் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தனர். ராமன் தன் அறையில் கணினியில் எதையோ டைப் செய்துகொண்டிருந்தான். துளசியம்மாளை யாருமே பார்க்கவில்லை. அடுப்படிக்கு வந்து தண்ணீர் குடித்தாள்.
ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததிலிருந்து வீடு என்னவாயிற்றோ என்ற கவலை வந்துவிட்டது. துளசியம்மாவுக்கு ஒரு மாதத்திற்கு முன் உடம்பு சரியில்லாமல் போய், படுத்த படுக்கையாகிவிட்டதைப் பார்க்க வந்த ராமன், “இனிமே நீ இங்க இருக்கவே கூடாது. நெலம் இருக்கிறதாலதான இங்கியே இருக்கணுங்கிற. அது இல்லன்னா இங்க என்னா இருக்கு? நெலத்தயும் வீட்டையும் வித்துடலாம். ஒன்னெ இனிமே தனியா விடுறது நல்லதில்லெ” என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி நிலத்தை விற்றான்.
வீட்டையும் தோட்டத்தையும் விற்க முடியாது என்று துளசியம்மாள் பிடிவாதம் பிடித்ததாலும் அவன் அக்கா மூன்று பேருமே வீட்டை விற்க வேண்டாம் என்று சொன்னதாலும்தான் விற்கவில்லை. நிலத்தை விற்ற கையோடு சென்னைக்கு வந்ததுதான். வீடு என்னவாகியிருக்கும்? தோட்டத்தில் இருந்த புளியமரத்தின் பழத்தை எல்லாம் யாராவது உலுக்கிக்கொண்டு போய்விடுவார்களே, தோட்டத்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ஏழெட்டு வேப்ப மரங்களிலிருந்த பழத்தையெல்லாம் பிள்ளைகள் பொறுக்கிக்கொண்டு போய்விடுவார்களே என்று பல கவலைகள் மனதில் நிறைந்தது. வீட்டில் தினமும் யாரையாவது விளக்கு ஏற்றச் சொல்லிவிட்டு வந்திருக்கலாம். ராமன் படுத்திய அவசரத்தில் ஒழுங்காக எதையும் செய்யவில்லையே என்று தன்னையே நொந்துகொண்டாள்.
துளசியம்மாள் அறைக்குள் வந்ததுகூடத் தெரியாமல் ராமன் கணினியில் எதையோ டைப் செய்துகொண்டிருந்தான். ராமனுடைய முகத்தைப் பார்த்தாள். இந்த நேரத்தில் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தாள். அப்போது எதேச்சையாகப் பார்த்த ராமன், “என்னம்மா?” என்று கேட்டான். “ஒண்ணும் இல்லப்பா சும்மாதான் வந்தன். நீ வேலயப் பாரு” என்று சொல்லி, ராமனுடைய நாற்காலிக்கு எதிரில் இரண்டு மூன்றடி தள்ளி தரையில் உட்கார்ந்தாள். “ஊட்டுக்கு வந்ததிலிருந்து இந்த மிஷினிலியே ஒக்காந்து வேல பாக்குறியே. கண்ணு கெட்டுப் போவாது? செத்த படுத்தா என்ன?” என்று கேட்டாள்.
ராமன் கண்களை அழுத்தி தேய்த்துவிட்டுக்கொண்டு, “பொழப்பு அப்பிடி இருக்கு. என்னா செய்ய முடியும். பதவி பெருசுன்னா வேலயும் அப்படித்தான இருக்கும். மத்தியானம் சாப்புட்டியா?” என்று கேட்டான்.
“சாப்புடாம என்னப்பா.”
“சாயங்காலம் டீ, காபி குடிச்சியா?” என்று கேட்டுவிட்டு, ஹாலில் உட்கார்ந்திருந்த லதாவைப் பார்த்து, “சாயங்காலம் டீ, காபி ஏதாச்சும் அம்மா சாப்புட்டிச்சா?” என்று கேட்டான். லதா பதில் சொல்லவில்லை. “பொயிதோடவே சாப்புட்டம்பா” என்று துளசியம்மாள்தான் சொன்னாள்.
“ஏம்மா ஒரு மாதிரியா இருக்க?”
“எப்பியும்போல நல்லாத்தான் இருக்கன், ஊருக்குப் போயிட்டு வரலாமின்னு நெனைக்கிறன்.”
“பேசாம இரும்மா. ஊருகீருன்னுக்கிட்டு.”
“'ஊடு என்னாச்சின்னு தெரியல. நான் இங்க வந்த நாளா வெளக்கு ஏத்தாம ஊடு இருண்டுபோயிக் கெடக்கும்.”
“அதுக்குத்தான் நான் அன்னிக்கே அதெயும் சேத்து வித்துடலாமின்னு சொன்னன். நீ கேக்கல, அக்காவுளும் கேக்கல. அந்த ரவ ஊட்டுக்காக நீ ஊருக்குப் போவணுமா? திரும்பியும் ஒடம்பு சரியில்லாம போனா என்னா செய்வ?” கரிசனத்தோடு கேட்டான் ராமன்.
“நீ பொறந்து வளந்த ஊட்ட மட்டரகமா பேசாதப்பா.”
“நான் பொறந்தங்கிறதுக்காக அந்த ரவ வீட்டுலியே சாவுறமுட்டும் இருக்கச் சொல்றியாம்மா?”
“கூடுன்னாலும் குருவிக்கு அதுதாம்ப்பா அரண்மன. இன்னிக்கி நம்பளுக்குப் பணம் காசி வத்துட்டதால அது ஊடு இல்லன்னு ஆயிடாது. நீ அந்த ஊட்டுக்கு வர வாணாம். நான் மட்டும் போயி என்னா ஏதுன்னு பாத்துட்டு வந்துடுறன்.”
“மொதல்ல போயிப் பாத்துட்டு வரன்ம்ப. அப்புறம் அங்கியே தங்குறன்ம்ப. ஏசி போட்டுக்கிட்டு நான் இங்க படுத்துத் தூங்குவன். நீ தனியா அங்க மண்ணுத் தரயில கெடப்பியாம்மா?” என்று ராமன் கேட்டது துளசியம்மாளின் நெஞ்சில் சந்தோஷத்தை உண்டாக்கியது. மகன் தன்மீது பாசத்தோடுதான் இருக்கிறான் என்று நினைத்தாள்.
பத்து வருசத்துக்கு முன்பு திடீரென்று ஒருநாள் ராமன் வந்து, “எங்கூட வேல பாக்குற பொண்ணு ஒண்ணு இருக்கு. நம்ப குடும்பத்துக்குத் தோதுபட்டுவரும். ரெண்டு சம்பளம் வந்தா நம்பளுக்கு நல்லதுதான? பொண்ணு நம்ப இனம்தான்” என்று சொன்னான்.
“பொண்ணு ஒனக்குப் புடிச்சிருந்தா சரி. நீதான அந்தப் பொண்ணுகூட வாழப் போற?” என்று துளசியம்மாள் சொன்னாலும், தன் மகள்களை அனுப்பி பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்துவர அனுப்பினாள். பெண்ணைப் பார்த்துவிட்டு வந்து, “பொண்ணு நல்ல நிறமாத்தான் இருக்கு. படிச்சியிருக்கு. தம்பிகூடத்தான் வேல பாக்குது. ரெண்டு சம்பளம் வந்தா, தம்பி நல்லாதான இருப்பான்” என்று மூன்று பேருமே சொன்னார்கள்.
லதாவுக்கும் ராமனுக்கும் கல்யாணம் நடந்த பிறகு எப்போதாவது சென்னைக்கு வரும்போது, ‘படிச்சி இருக்கா, வேலயில இருக்கா, அவகிட்ட வாயக் கொடுக்கக் கூடாது’ என்ற எண்ணத்தில் லதாவிடம் தேவையில்லாமல் ஒருவார்த்தைக்கூட பேச மாட்டாள் துளசியம்மாள். ஏதாவது பேச வேண்டும் என்றால்கூட ராமனிடம்தான் சொல்வாள். துளசியம்மாள்தான் என்றில்லை, அவளுடைய மூன்று மகள்களும்கூட அநாவசியமாக லதாவிடம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
“படிச்ச பொண்ணு, வேலயில இருக்கிற பொண்ணு, மெட்ராஸிலியே பொறந்து வளந்து, வேல பாக்குற பொண்ணு, அதுகிட்ட வாயக் கொடுக்க வேணாம்” என்று ஒதுங்கிப்போய்விடுவார்கள். ஊர்த் திருவிழா, உறவினர்களுடைய ‘நல்லது கெட்டது’ என்று நூறு சொன்னால் பத்து விசேஷத்திற்குத்தான் லதா வருவாள். மற்ற விசேஷங்களுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டால், ‘வேல, வர முடியல” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவாள். அவளுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்காவிடம் பேசுகிற வார்த்தைகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட ராமன் சம்பந்தப்பட்ட ஆட்களிடம் பேச மாட்டாள்.
ராமன் கோபித்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, துளசியம்மாளும், அவளுடைய மகள்களும் லதாவிடம் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டார்கள். வாய்த்துடுக்கான ராமனுடைய கடைசி அக்கா ராஜம்மாள்கூட லதாவிடம் குறைத்தே பேசுவாள். அப்படி இருக்கும்போது எதற்காக லதா ஒரு மாதிரியாக இருக்கிறாள் என்பதுதான் துளசியம்மாளுக்குப் புரியவில்லை.
“சும்மா கெடக்குற ஊட்டெ பாத்து ஊருல நாலு பேரு நாலு விதமா பேச மாட்டாங்க? நம்பப் பொருளுன்னு ஊருல அது ஒண்ணுதான இருக்கு. அதெ என்னா ஏதுன்னு பாத்துட்டு வரக் கூடாதா? ஒனக்கும் ஒம் பொண்டாட்டிக்கும்தான் பேங்க் வேல ஓயல. நாள் பொயிதினிக்கும் சீக்குப்புடிச்ச கோழியாட்டம் குந்துன எடத்திலதான் நான் குந்திக்கெடக்குறன். சும்மா குந்தியிருந்து எனக்குப் பழக்கம் இருக்கா? கவருமண்டுல கேசு அடுப்பு தரன்னாங்க. போன வருசம் டி.வி. கொடுத்தானில்லெ அந்த மாரி. ஊருல அப்பப்ப தலய காட்டுலன்னா மணியக்காரன் கேசு அடுப்ப எடுத்துக்கிட்டுப்போயிடுவான். அப்பறம் மாசா மாசம் வாங்குற இலவச அரிசியும் வாங்கல.”
“விடும்மா ஊடு, காடுன்னுக்கிட்டு. அதெல்லாம் ஒரு வீடா?”
“என்னப்பா அப்பிடிப் பேசுற? நீ பொறந்து வாயிந்த மண்ணு அது. அந்த ஊட்டுலதான் நான் ஒங்கப்பாகூட நாப்பத்தாறு வருசம் இருந்தன். அவுரு செத்த இந்த ஏயி வருசமாவும் அந்த ஊட்டுலதான் இருந்தன். இந்த இருவத்தி எட்டு நாளாத்தான் இங்க இருக்கன்.”
“ஒனக்கு இங்க என்னா கொற, சொல்லு. லதா எதுனா சொன்னாளா?”
“அந்தப் பொண்ண கொற சொன்னா வாயி அயிவிப் போயிடும். ஊரான் ஊட்டுப் புள்ளெய பாத்து பொழப் பேச்சுப் பேசுறதா?” என்று சொன்ன துளசியம்மாள். திரும்பி லதாவின் பக்கம் பார்த்தாள். அதுவரை ராமன் உட்கார்ந்திருந்த அறையைப் பார்த்துக்கொண்டிருந்த லதா சட்டென்று முகத்தைத் தொலைக்காட்சிப் பக்கம் திருப்பிக்கொண்டாள். அது தெரிந்ததும் துளசியம்மாளுக்குத் தான் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் வந்தது.
“அந்த ஊட்டயும் வித்துப்புட்டாதான் நீ ஊரு பேச்ச எடுக்க மாட்டன்னு நெனக்கிறன்.”
“அப்பிடிச் செய்யாத தம்பி. நான் போனதுக்குப் பின்னாடி ஒன் இஷ்டம்போல செஞ்சிக்க. அந்த ரவ ஊட்டுலதான் நாத்தனாரு ரெண்டு பேருக்கும் கொழுந்தனாரு மூணு பேருக்கும் கண்ணாலம் கட்டிவச்சன். ஒன்னோட அக்காளுவோ மூணு பேரு கண்ணாலமும் அந்த எடத்திலதான் நடந்துச்சி. ஒன்னோட ஒரு கண்ணாலம் மட்டும்தான் மண்டபத்திலே நடந்துச்சி. நாலு புள்ளெய நான் அந்த எடத்திலதான் பெத்தன். அக்காளுவோ மூணு பேரும் ஆளுக்கு மூணு நாலு புள்ளிவோன்னு அதுலதான் பெத்தாளுவோ. ஒரு கொறயும் கெடயாது. எல்லாப் புள்ளிவுளும் ஒரு பழுதும் இல்லாம மண்ணுல தரிச்சி நெலச்சி நிக்குதுவோ. நல்ல காரியமின்னு இல்லெ. ஒங்கப்பா சாவோட சேத்து நாலு கெட்ட காரியத்தயும் அந்த ஊட்டுலதான் தம்பி பாத்தன்.”
“அதெல்லாம் சரிம்மா. எல்லாக் காலத்துக்கும் அதையே பேசிக்கிட்டு இருக்க முடியுமா? அந்தக் காலம் வேற, இந்தக் காலம் வேற. ஒங்காலத்திலெ ஒரு வல்லம் சோளமோ வரகோ இருந்தா போதும், ஒரு நாளுபொழுது ஓடிடும். இப்ப அப்பிடியா? எம்மாம் வாங்குனாலும் பத்தல? ஒரு புட்டியில சோளம் வரவுன்னு எடுத்துக்கிட்டுபோயி செட்டிக் கடயிலெ கொடுத்தா உப்பு, மிளகா, புளின்னு கொடுப்பான். இப்ப அப்பிடியா? சோளக் கதிரு கொடுத்துத்தான நானே ஐஸ், மிட்டாயின்னு வாங்கித் தின்னுயிருக்கன். இப்ப தானியத்த கடயில கொடுத்தா எவன் வாங்கிக்கிட்டு பொருளு கொடுக்கிறங்கிறான் சொல்லு.”
“ஊடு முயிக்க மிஷினா வாங்கிப்போட்டா எப்பிடிப்பா சம்பளம் பத்தும்?”
“இன்னிக்கி இருக்கிற ஒலகம் ஒனக்குப் புரியாதும்மா. கம்ப்யூட்டர் இல்லன்னா இந்தப் பசங்களுக்குப் பொழுது போகாது. ஏ.சி.யில்லன்னா தூக்கம் வராது” என்று சொன்ன ராமன் ஹால் பக்கமாகப் பார்த்து, “லதா, தண்ணி கொடு” என்று சொன்னான். லதா படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டுப் போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். அந்த இடத்தில் நிற்பதற்குப் பிடிக்காததுபோல் திரும்பவும் ஹாலில் போய் உட்கார்ந்துகொண்டாள். லதாவின் முகம் எப்போதும் போல் இல்லாமல் இருப்பதாக துளசியம்மாளுக்குத் தோன்றியது. தலைவலியாக இருக்குமா, உடம்பு சரியில்லாமல் இருக்குமா என்று சந்தேகப்பட்டு லதாவின் பக்கம் திரும்பி, “ஒடம்புக்கு முடியலியாம்மா?” என்று கேட்டாள். துளசியம்மாள் கேட்டதைக் காதில் வாங்காத மாதிரி லதா உட்கார்ந்திருந்தாள். தொலைக்காட்சியின் சத்தத்தில் கேட்டிருக்காது என்று நினைத்துக்கொண்டு ராமன் பக்கம் திரும்பினாள். அவன் ஏதோ ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தான்.
அவன் படிப்பதைப் பார்த்ததும் துளசியம்மாள், “நான் ரூமுக்குப் போறம்பா” என்று சொன்னாள். “இரும்மா. என்னா அவசரம்?”
படித்துக்கொண்டிருந்த காகிதத்தை மேசைமீது வைத்தான். மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே தணிந்த குரலில், “சின்ன வயசு புள்ளைங்க மாரி அங்க போறன், இங்க போறன்னுக்கிட்டு அலயாதம்மா. இனிமே அலஞ்சி திரிஞ்சி என்னா செய்யப்போற? மழயில நனயக் கூடாது, வெயில்ல அலயக் கூடாது, காட்டுலப் போயி கஷ்டப்படக் கூடாதின்னுதான என்னெ படிக்க வச்செ?”
“ஆமா.”
“எனக்கு சௌகரியம் வந்தா அது ஒனக்கும் வந்த மாதிரிதான். அதனால வயசான காலத்திலெ எங்கேயும் அலயாம இரு. அந்த வீடு எப்பிடியாவது கெடந்தா போவுது. மொதல்ல ஒன்னெக் கவனிச்சிக்க. என்னோட ஒரு மாச சம்பளத்தோட மதிப்புக்கூட அந்த ஊடு இருக்காது.”
“பணமும் ஊடும் ஒண்ணாவாது தம்பி.”
“அப்பிடின்னா இது வீடு இல்லியா?”
“ஊட்டுல இருக்கிற நாலு சனமும் சண்டக்காரங்க மாரி மூலாமூலக்கி குந்திக்கிட்டு ஒருத்தருக்கொருத்தரு பாத்துக்காம, பேசிக்காம இருக்கிறதுதான் ஊடா? பத்து சனம் வந்து போற எடத்துக்குப் பேருதான் ஊடு. நம்ப ஊட்டுல என்னிக்காச்சும் ஒரு மூட்டெ தானியம்கூட இல்லாம இருந்திருக்கா? இல்லாதவங்க, வழிப்போக்கின்னு யாராச்சும் ஒரு நாளாச்சும் வந்து சோறு வாங்காம இருந்திருக்காங்களா? காலயிலெ ஏயி எட்டு மணிக்கி ஊட்டப் பூட்டிட்டுப் போயி, வெளக்கு வைக்கிற நேரத்துக்கு வந்து அவதிஅவதின்னு எதியோ ஆக்கித் தின்னுப்புட்டு தூங்க வேண்டியது. அப்புறம் காலயில எயிந்திருச்சி ஓட வேண்டியது” என்று துளசியம்மாள் சொன்னபோது லதா திரும்பி அறைப் பக்கம் பார்த்தாள். அவளுடைய பார்வையும் முகமும் ஒரு மாதிரியாக இருப்பதாக துளசியம்மாளுக்குத் தெரிந்தது.
“இது நம்ப ஊர் இல்ல. புரியுதாம்மா” என்று ராமன் கேட்டான்.
படிக்கிற காலத்திலும், வேலைக்குப் போன பிறகும், ராமன் அதிகமாகப் பேச மாட்டான். கல்யாணமான இந்தப் பத்து வருசத்தில் அவன் துளசியம்மாளிடம் பேசிய வார்த்தைகளை எண்ணிவிடலாம். இங்கு வந்து நிலையாகத் தங்கிய இந்த இருபத்தியெட்டு நாட்களில் இன்றுதான் அதிசயமாகக் கூடுதலாகப் பேசியிருக்கிறான். அதுகூட அவளுக்குப் பிடிக்கவில்லையா? “சாப்புட்டியா?”, “டீ குடிச்சியா?”, “ஜாக்கிரதயா பூட்டிக்கிட்டு, டி.வி.யப் பாத்துக்கிட்டு இரு” என்பதுதான் அவன் தினமும் பேசுகிற வார்த்தைகள். அதற்கு மேல் அவனும் பேச மாட்டான், இவளும் பேச மாட்டாள். அப்படியிருக்கும்போது லதா கோபப்படுவதற்கு விசயமில்லையே. தான் இங்கு வந்திருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. “யாரு மனசுல என்னா இருக்கோ” என்று சொல்லி முனகினாள். “ஊடு மட்டுமில்லெ. ஊட்டுக்குப் பின்னால இருக்கிற புளியமரத்துப் பழங்களயும், வேப்பமரத்துப் பழங்களயும் யாராவது பறிச்சிக்கிட்டுப் போயிடுவாங்கப்பா, அதனால் அதெயெல்லாம் பொறுக்கி உரு சேத்துட்டு வரன். அக்காளுவுளயும் பாத்திட்டு வந்துடுறன். ஊர்ல இருந்தா வாராவாரம் மொற வச்சிக்கிட்டு வந்து பாப்பாளுங்க. நான் இல்லன்னு நம்ப ஊட்டுக்கு வராம இருப்பாளுவோ. இல்லாதப்பட்ட ஊடுன்னாலும் பொறந்த எடத்துக்குப் போயிட்டு வரதுதான் பொண்ணுங்களுக்குச் சந்தோஷம்”
“இல்லாதவங்க பறிச்சிக்கிட்டுப் போனா போறாங்கம்மா. எட்டணா, ஒரு ரூவாய எல்லாம் பெருசா பேசிக்கிட்டு. விடும்மா அந்தப் பேச்ச. பேன் காத்து சூடாயிருந்தா ஏ.சி. போடச் சொல்றன். அந்த ரூம்ல போயி படுத்துக்க” என்று ராமன் சொன்னபோது அறைப் பக்கம் லதா பார்த்ததை துளசியம்மாள் கவனித்தாள்.
“அதெல்லாம் வாண்டாம்ப்பா” என்று சொன்னாள். லதாவினுடைய மனதை அறிந்துவிட வேண்டும் என்று நினைத்தாள். “அந்தப் புள்ளெதான செருமப்படுது. வேலைக்கும் போயிக்கிட்டு ரெண்டு புள்ளெவுளயும் வளக்கிறதின்னா சும்மாவா? அந்தப் புள்ளெ ஊட்டுலயிருந்தும் ஒருத்தரும் வந்து ஒத்தாச பண்ற மாரி தெரியல. ஒண்டிக்காரப் புள்ளெ என்னாப் பண்ணும்” என்று சொல்லிவிட்டு லதாவைப் பார்த்தாள்.
லதா இந்த முறை திரும்பிப் பார்க்காதது மட்டுமல்ல; துளசியம்மாளின் பேச்சைக் கேட்ட மாதிரியே காட்டிக் கொள்ளவுமில்லை. தனியாக ஆளில்லாத இடத்தில் உட்கார்ந்திருப்பது மாதிரி இருந்தது அவளுடைய தோற்றம். ‘ஊருக்கு எதுக்குப் போறங்குறீங்க? இங்க உங்களுக்கு என்ன கஷ்டம், கடைசி காலத்தில நாங்கதான உங்களப் பாக்கணும். பேசாம இருங்க’ என்று ஒரு வார்த்தை ஏதாவது லதா சொல்வாள் என்று எதிர்பார்த்தாள். அவளிடமிருந்து சிறு முனகல் சத்தம்கூட வரவில்லை. “பொய்யாக்கூட பேசலியே, வாய் வாத்தக்கூட அவளுக்குப் பஞ்சமாப் போயிடிச்சே” என்று பொருமினாள் துளசியம்மாள்.
‘இதே அவளோட அம்மாவா இருந்தா வாய மூடிக்கிட்டு இருப்பாளா? அவளோட சொந்தக்காரங்களா இருந்தா வாயத் தொறக்காம இருப்பாளா?’ என்று யோசித்த துளசியம்மாளுக்கு முதன்முதலாக லதாவின் மீது சந்தேகம் வந்தது. சந்தேகக் கண்ணோடு லதாவைப் பார்த்தாள். “சரிம்மா வேற ஒண்ணுமில்லியே” என்று கேட்டான் ராமன்.
“எங்கிட்ட என்னப்பா சேதி இருக்கப்போவுது? ஒக்காந்தே கெடக்குறதுதான் கஷ்டமா இருக்கு. தனியா ஆளில்லாத ஊட்டுல எப்பிடி பொயிதினிக்கும் ஒக்காந்திருக்கிறது?”
“ஒக்காந்து இருக்கிறதிலெ என்னம்மா கஷ்டம்?”
“வேல செய்யாம எப்பிடித் தம்பி இருக்கிறது? ஒக்காந்துகிட்டே சோறு தின்னா, தின்னச் சோறு எப்பிடிச் செரிமானம் ஆவும்?”
“எழுவது வயசிக்கு மேல ஒன்னால என்னம்மா வேல செய்ய முடியும்?”
“இப்பிடி இருக்கிற பொருள அப்பிடித் தூக்கிப்போடாம, அப்பிடி இருக்கிற பொருள இப்பிடித் தூக்கிப்போடாம எப்பிடியிருக்கிறது? சும்மா குந்திக்கெடக்குறது பித்துப் புடிச்சாப்ல இருக்கு தம்பி.” துளசியம்மாவின் குரலில் சலிப்பு கூடியிருந்தது.
“வீட்டுல இருக்க போர் அடிச்சா அக்கம்பக்கத்திலெ பேசிக்கிட்டு இரேன். பக்கத்தில இருக்கிற கோயிலுக்குப் போயிட்டுவாயேன்.”
“எந்தச் சனத்த தெருவுல பாக்க முடியுது? காலயிலேயே அங்க இங்கேன்னு ஓடிப்போவுதுவோ. இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும் கேட்டப் பூட்டிக்கிட்டு, கதவச் சாத்திக்கிட்டு உள்ளாரியே டி.வி.யப் பாத்துக்கிட்டு கெடக்குதுவோ. அநாத காட்டுக்கு வந்த மாரி இருக்கு. காரு சத்தம்தான் ராத்தியும் பகலும் ஓயாம கேக்குது. சத்தத்தில தூக்கம் வர மாட்டங்குது. நீ சொல்ற கோயிலுக்குப் போயிட்டு, திரும்ப ஊட்ட கண்டுபிடிச்சி வர வழி தெரியுமான்னு தெரியல.”
“சென்னைன்னா அப்பிடித்தாம்மா இருக்கும். பசங்கக்கூட பேசிக்கிட்டு இருக்க வேண்டியதுதான?”
“ஒனக்காவது ஒரு நேரம் வுட்டா ஒரு நேரம் ரெண்டு வாத்த பேச நேரம் இருக்கு. அதுவுளுக்கு அதுகூட இல்லெ. இங்கிலிஸிலியே பேசிக்குதுவோ. காலயிலேயே போயி சாயங்காலம்தான் வருதுவோ. அப்புறம் எயிதுதுவோ. அதிலயும் ரவ நேரம் கெடச்சா இந்தா இந்த மிஷினுக்கு மின்னாடி வந்து குந்திக்குதுவோ. ஒம் புள்ளிவுள ஓடி ஆடி வௌயாண்டு நான் என் கண்ணால பாக்கல தம்பி.”
“இங்கலாம் அப்பிடித்தாம்மா.”
“நான் ஊர்ல இருந்தா தண்ணிக்கிப் போகயில ரெண்டு பேத்துக்கிட்ட பேசலாம். வெளிய வாசலுக்குப் போவயில ரெண்டு பேத்துக்கிட்ட பேசலாம். ஊடு கூட்ட, வாச கூட்டன்னு எம் பொயிது போயிடும். வாசல்ல ஒக்காந்தா ஊரு சனங்களயே பாத்துப் பேசிப்புடலாம். இங்க இருந்தா, ஒம் மூஞ்சிய நான் பாக்கலாம், எம் மூஞ்சிய நீ பாக்கலாம், அவ்வளவுதான்” என்று சொல்லும்போது லதா எதையோ தேடுவது மாதிரி ராமனுக்குப் பக்கத்தில் வந்து தேடினாள். அதைப் பார்த்ததும் துளசியம்மாளுக்கு என்ன தோன்றியதோ சற்று அழுத்தமாகவே, “நம்ப ஊட்டுக்குப் போனாத்தான் தம்பி எனக்கு நல்லாத் தூக்கம் வரும்” என்று சொன்னாள். “என்னம்மா சொல்ற?” என்று ஆச்சரியத்துடன் ராமன் கேட்டான்.
பக்கத்திலிருந்த லதா ஒரு வார்த்தை பேசாதது மட்டுமல்ல துளசியம்மாள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதையும் இதையும் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் நாற்காலியில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். லதாவையே பார்த்த துளசியம்மாவால் அவள் மௌனத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ராமனுக்கும் லதாவுக்கும் கல்யாணம் முடிந்து சரியாகப் பத்து வருசங்கள் முடிந்துவிட்டன. இந்தப் பத்து வருசத்தில் லதாவுக்கும் துளசியம்மாளுக்கும் சிறு சண்டையோ மனக்கசப்போ வந்ததில்லை. மகன் வீட்டுக்கு வந்தால் ஒரு நாள், இரண்டு நாள்தான் தங்குவாள். அதற்குமேல் அவளால் இருக்க முடியாது. “வீட்டு வேல கெடக்கு, காட்டு வேல கெடக்கு” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள். ராமனுடைய அக்காள்கள்கூட எப்போதாவதுதான் சென்னைக்கு வருவார்கள். எப்போது வந்தாலும் ஒருநாள், இரண்டு நாள்தான் தங்குவார்கள். கூடுதலாக ஒருநாள்கூட இருக்க மாட்டார்கள். லதாவினுடைய குணம் அவர்களுக்குத் தெரியும். இப்போதுதான் இருபத்தியெட்டு நாள் தங்கியிருக்கிறாள். அப்படியிருக்கும்போது ஏன் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன்கிறாளே என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் துளசியம்மாள்.
ஒரு வார்த்தைகூட பேசாத பெண் போடுகிற சோத்தை எப்படிச் சாப்பிடுவது, இத்தனை நாட்களாக என்ன எண்ணத்தில் சோறு போட்டிருப்பாள். தன்னைத் தனியாகப் படுக்க வைத்த மாதிரி, சாப்பிடுகிற தட்டையும் தனியாகத்தான் வைத்திருப்பாளோ? செல்லாத பொருளை மூலையில் போட்டு வைப்பது மாதிரி தன்னை தனியாகப் போட்டுவிட்டாளோ என்ற சந்தேகம் வந்ததுமே, “விடிஞ்சதுமே நான் ஊருக்குப் போறன். என்னெ காரு ஏத்திவிட்டுடு தம்பி” என்று சொன்னாள்.
“முட்டாள்தனமா பேசாம, போயி படும்மா” என்று சொன்ன ராமன் லதாவின் பக்கம் பார்த்து “லதா, அம்மா ஏதோ உளறிக்கிட்டு இருக்கு, அதெ என்னா ஏதுன்னு கேளு” என்று முறைப்பாடு செய்தான். லதா, அறைக்குள்ளும் வரவில்லை, வாயையும் திறக்கவில்லை.
ஒரு நாள்கூட, “சாப்புட வாங்க” என்றோ, “சாப்புடுங்க”என்றோ சொன்னதில்லை. “சாப்புடுறீங்களா?”, “டீ குடிக்கிறீங்களா?” என்றுதான் கேட்டிருக்கிறாள். இந்த இருபத்தியெட்டு நாட்களாக இந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு ஒரு வார்த்தைகூடப் அவள் பேசவில்லை என்பது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. ‘மகள்களுடைய வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறாள் என்று நினைக்கிறாளா?’ லதாவைப் பற்றி நினைக்கநினைக்க துளசியம்மாளுக்குக் கோபம் வந்தது.
“நான் இங்க இருக்கிறது ஒனக்குத் தொந்தரவா இருக்காம்மா?” என்று நேரடியாகவே லதாவிடம் கேட்டாள். துளசியம்மாள் கேட்டதைக் காதில் வாங்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள் லதா. முன்பைவிட இப்போதுதான் துளசியம்மாளுக்கு அதிகக் கோபம் உண்டானது. ஒரு வார்த்தை பேசினால் என்ன? துளசியம்மாளுக்கு வெட்கமாக இருந்தது. சம்பந்தமில்லாத இடத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. உடனே ஊருக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்தாள். ராமனுடைய அக்காள்கள் மூன்று பேருமே சாதாரண குடும்பங்களில்தான் கல்யாணம் கட்டிக்கொண்டு போனார்கள். எல்லாருக்குமே காட்டு வேலைதான். “எங்கூட வந்து ரெண்டு நாளு இரும்மா” என்று மூன்று பேருமே போட்டிப்போட்டுக்கொண்டு கூப்பிடுவார்கள். “நீங்க வந்து இருந்திட்டு போங்க” என்று துளசியம்மாள் சொல்லிவிடுவாள். மீறிப்போனாலும் ஒரு வேளை சாப்பாட்டுடன் “வீட்டுல வேல கெடக்கு, காட்டுல வேல கெடக்கு” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாள்.
கௌதமும் கெளசிகாவும் இவளாகப் பேசினால்தான் பேசுவார்கள். அப்படியே பேசினாலும் இவள் கேட்கிற கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வார்கள். ஆனால் அவளுடைய மகள்களுடைய பிள்ளைகள் துளசியம்மாள் மேல் உயிரையே விட்டுவிடுவதுபோல்தான் இருப்பார்கள். இந்தப் பிள்ளைகள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒவ்வொரு விசயமாகத் துளசியம்மாள் யோசித்தாள். தன்னுடைய அறைக்குப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த துளசியம்மாள், “காலயில நான் ஊருக்குப் போறன். ஒனக்கு செலவா இருக்கல” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே வந்த ராமன், “ஒன்னால எனக்கு என்னம்மா செலவு?” என்று கேட்டான்.
“குந்த வச்சி சோறு போடுற இல்லெ. அதான் செலவு. ஒரு ஆளுக்குச் சோறு போடுறதின்னா சும்மாவா?”
“அதிகமாப் பேசாத, திட்டிப்புடுவன். ஊருக்குப் போவ வேற காரணம் இருந்தா சொல்லு. இப்பவே எங் கார்லியே அனுப்பி விடுறன்.”
“இங்க இருக்கிறது ஜெயில்ல இருக்கிறது மாதிரி இருக்குப்பா.”
“இந்த ஊர்ல நெறயா பேரு அப்படித்தாம்மா இருக்காங்க.”
“பதினெட்டாவது மாடியில இருக்கிறது, ஆகாசத்துல இருக்கிற மாதிரி இருக்குப்பா. எங்காலு தரய மிதிச்சு இருவத்தியெட்டு நாளாச்சிப்பா.”
“
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக