புதன், 4 மே, 2022

துன்பியலும் அபத்தமும் கலந்த கலவை - அ. ராமசாமி

 

இப்போது உயிரோடிருக்கிறேன் நாவல் குறித்து அ. ராமசாமி

துன்பியல் முடிவுகளைச் சந்திக்கும் பாத்திர உருவாக்கம் எப்போதும் இலக்கியத்தின் சக்தி வாய்ந்த வெளிப்பாடாக இருந்து வருகிறது. துன்பியல் முடிவைத் தவிர்க்கும் வாய்ப்புகளைக் காட்டத் தவறியதற்காக அந்தப் பாத்திரத்தைத் சுற்றி வாழ்ந்த மனிதர்கள் மீது நேரடியாகவும் மறைமுகமாகவும் குற்றச்சாட்டுகளை வைப்பதின் வழியாகவே திறன்வாய்ந்த எழுத்தின் – எழுத்தாளரின்- தனித்துவம் உருவாகிறது. ஒரு பாத்திரம் தானே தெரிவுசெய்த வாழ்க்கைமுறையின் காரணமாக ஆகப்பெரும் துன்பியல் முடிவைச் சந்திக்க நேர்ந்தது என்பதைத் தனது பனுவலில் முன்வைக்கும் எழுத்தாளர்கூட, தன்னையும் உள்ளடக்கிய சமூகத்தைக் குற்றவுணர்வுக்குள் நிறுத்தி விவாதிக்கும் சாத்தியங்களைத் தவறவிடுவதில்லை. உலக இலக்கியத்தில் கொண்டாடப்படும் இலக்கியப்பனுவல்களைக் கவனித்தால் இந்தக்கூற்றின் உண்மை புரியவரலாம்.


தானே தெரிவுசெய்த வாழ்க்கைமுறையால் பாதிக்கப்பட்டவர்களைக் குறைவாக எழுதியவர் இமையம். மரபான இந்திய சமூகம் வழங்கிய வாழ்க்கையால் பாதிக்கப்பட்டவர்களைத் தனது புனைகதைகளில் உருவாக்கிக் காட்டுவதைத் தனது இலக்கியப் பார்வையாக – எழுத்தின் அடையாளமாக நிறுவிக் கொண்டவர். அந்த இலக்கியப்பார்வையைத் தனது நாவல்களிலும் சிறுகதைகளிலும் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வரும் அவர், தெரிவுசெய்து முன்வைக்க வேண்டிய பாத்திரங்கள், அவை உலவும் வெளி, கால அளவு என்பதில் காட்டும் கச்சிதத்தன்மை ஆகியனவற்றால் சிறந்த இலக்கியப் பனுவல்களைத் தருபவராக அறியப்படுகிறார். பேசப்படுகிறார்.

புதிய நகர்வு.                


இமையத்தின் முதல் நாவலான கோவேறு கழுதைகள் தொடங்கி ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாகத் தனித்தன்மையோடு வெளிப்பட்ட நாவல்கள். ஒவ்வொன்றையும் தனித்தன்மை கொண்ட நாவல்களாக ஆக்கியதில் முதன்மையான இடம் வகிப்பது அவரது புனைவாக்கத்திறன். குறிப்பாக அவரது பாத்திரத் தெரிவுகளையும் பாத்திரமாக்கலையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். அத்தோடு பேச்சுமொழியின் ஒலிப்புத் தன்மையைக் கவனமாக எழுத்தில் கொண்டுவரும் நீண்ட உரையாடல்கள் வழியாகக் கதை நிகழ்வுகளை முன்வைப்பது அவரது எழுத்தின் அடுத்த சிறப்பு. அதன் வழியாகத் தனது புனைவுலகத்திற்கு நம்பகத் தன்மையை உண்டாக்கும் இமையம், பெரும்பாலும் கதைசொல்லியைப் படர்க்கை இடத்தில் நிறுத்தி அடையாளமற்ற ஆளாகவே இதுவரை கையாண்டு வந்துள்ளார். 

நாவல்கள், குறுநாவல்கள், சிறுகதைகள் எனத் தானெழுதிய புனைவுகளில் படர்க்கைக் கூற்றுக் கதைசொல்லல் முறையையே பின்பற்றி வந்த இமையம். ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற புதிய நாவலில் (2022, ஜனவரி,க்ரியா) அதிலிருந்து விலகியிருக்கிறார். எழுத நினைத்த உரிப்பொருளின் (Content) தேவைக்காகவே இந்த விலகல் நிகழ்ந்திருக்கிறது. உரிப்பொருளே வடிவத்தைத் தீர்மானிக்கிறது என்பது இலக்கியத்திறனாய்வில் முக்கியமான கருத்து.

ஆழ்மன நினைவோட்ட விவரிப்புப் போல ஆரம்பிக்கும் முதல் அத்தியாயத்திலிருந்து தொடங்கும் துயரத்தின் அலைவுகளும் அச்சத்தின் பரவலும் இணைந்து, இந்த நாவலைப் படர்க்கைக் கூற்றுக் கதைசொல்லலைப் பின்பற்றாமல், தன்மைக் கூற்றுக் கதைசொல்லலுக்கு நகர்த்தியுள்ளது. இந்த நகர்வு,‘மரபான இந்திய சமூகம் உருவாக்கும் நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டவர்களை–ஒதுக்கப்படுகிறவர்களை எழுதும் எழுத்தாளர் இமையம்’ என்ற அடையாளத்தையும் மாற்றியிருக்கிறது. அதற்குப் பதிலாக நிகழ்கால வாழ்க்கையில் பெரும் தாக்கம் செலுத்தும் அமைப்பொன்றின் அபத்தமான நிகழ்வுகளுக்குள் இருக்கும் நம்பிக்கை அழிப்பை விவாதிக்கும் எழுத்தாளராக மாறியிருக்கிறார். அதற்காக நிகழ்காலத்தின் ஆகப்பெரும் சேவையாகவும் வணிகமாகவும் விளங்கும் மருத்துவ உலகத்தைப் பின்னணியாக்கிய எழுத்தாக ‘நான் இன்னும் உயிரோடிருக்கிறேன்’ நாவலை தந்துள்ளார். அந்நாவலை வாசிப்பவர்கள், பல்நோக்கு வசதிகள் கொண்ட – கார்ப்பரேட்- மருத்துவ அமைப்புக்குள் இருக்கும் குரூரமான உண்மைகளையும் கைவிட முடியாத அபத்தங்களையும் வாசித்துக் கடக்க முடியாமல் திணறித்தான் ஆகவேண்டும்.


நாவலின் கட்டமைப்பு விவரணத் தொகுப்பும்

பள்ளிக்கல்வியில் மேல்நிலை வகுப்புக்குள் நுழையும் நிலையில் இருக்கும் பதினைந்து வயதைத் தாண்டிய தமிழரசன் தன் கதையைச் சொல்வதே நாவலின் பரப்பு. நீண்டு விரியும் கதையைச் சொல்கிறான் என்பதுகூடச் சரியானதில்லை. தமிழரசன் சொல்வது கதையல்ல; நிகழ்வுகள். சாதாரணக் காய்ச்சல் போலத் தமிழரசனின் உடலில் வெளிப்பட்ட நோயின் தீவிரம் சிறுநீரகப்பாதிப்பாக மாறியதின் தொடர்ச்சியால் நடந்த நிகழ்வுகளே நாவலாக – மூன்று பாகங்கள் கொண்ட நாவலாக – இமையத்தால் எழுதப் பெற்றுள்ளது.

குறிப்பான காலம், வெளி, பாத்திரங்கள் என எதையும் அடையாளம் காட்டாமல் அச்சத்தில் இருக்கும் மனித மனத்தின் ஆழ்மன நினைவோட்டத்தை எழுதிக் காட்டித் தொடங்குகிறது நாவல்.

நான் நின்றுகொண்டிருந்த இடம் காடு மாதிரி தெரிந்த து மரம், செடி, கொடி என்று எதுவும் கண்ணில் படவில்லை. வெறும் கட்டாந்தரையாக இருந்தது கண்பார்வை எட்டும் தூரம்வரை ஆள்நடமாட்டம் இல்லை. நான் எங்கே இருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்ள முயன்றேன். எந்த இடம் என்பதை என்னால் அடையாளம் காணமுடிய வில்லை.

என்பது தொடக்கச் சித்திரிப்பு. இச்சித்திரிப்பு கனவு நிலையை விவரிக்கும் சித்திரிப்புக் காட்சி என்பதை விளக்கிக் காட்டிவிட்டு தன் நினைவுகளைச் சொல்லப்போகும் பாத்திரம் கனவு நிலையிலிருந்து நனவு நிலைக்கு வருவதாகச் சொல்லி முதல் பாகத்தின் முதல் இயலைத் தொடங்குகிறார் இமையம்:

என் ஓட்டத்தின் முடிவில் ஊர் வரவில்லை. கடல் மாதிரி பெரிய நீர்ப்பரப்புதான் வந்தது. கண்ணுக்கு எட்டும் தூரம் வரை நீர்ப்பரப்பு. ஓடுவதை நிறுத்திவிட்டு நீர்ப்பரப்பையும் என்னை நோக்கி ஓடிவரும் பாம்புக்கூட்டத்தையும் மாறிமாறிப் பார்த்தேன். ஒரு சில நொடிகளிலேயே மொத்தப்பாம்புக்கூட்டமும் என்னை வட்டமிட்டது. ஆயிரக்கணக்கான பாம்புகள் என்னைக் கொத்துவதற்காக ஒரே நேரத்தில் தலையைத் தூக்கியதும் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு ‘ஐயோ, அம்மா’ என்று கத்தினேன்.

இக்கனவு நிலையில் வரும் நீர்ப்பரப்பும், பாம்புக்கூட்டமும் தமிழரசனின் உடலுக்குள் உருவாகப்போகும் சிறுநீரகச் சிக்கலையும் மருத்துவ உலகத்தின் இறுக்கமான வலைப் பின்னலையும் முன்னுணர்த்தும் குறியீட்டுக் காட்சிகளாக வந்து விலகிவிடுகின்றன. முதல் இயலைத் தொடர்ந்து 23 இயல்களாக விரியும் நிகழ்வுகள் முதல் பாகத்தில் எழுதப்பெற்றுள்ளன. ஊரிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து, காய்ச்சல் அல்ல; சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்துவிட்டன என்பது உறுதியான பின் தொடரும் நீண்ட 28 நாட்கள் எழுதப்பெற்றுள்ளன. சோதனைகள், மருந்து மாத்திரைகள், ஐ.சி.யூ. வார்டில் மருத்துவக் கண்காணிப்புகள், ஐ.ஜே.வி. லைன் வழியாக டயாலிசிஸ் என்னும் ரத்தச்சுத்திகரிப்பு என நீண்ட 28 நாட்கள் எழுதப்பெற்றுள்ளன. இவ்விருபத்தெட்டு நாட்களோடு மருத்துவ மனை இருப்பு முடிவடையவில்லை என்ற குறிப்பையும் முதல் பாகத்தின் கடைசிப் பத்தி தருகிறது:

திலகவதிக்குப் போன் போட்டு, “ரிசல்ட்டு நல்லா வந்திடிச்சி. ஒரு வீடு பாருங்க. கொஞ்சம் உதவி செய்யுங்கம்மா” என்று சொல்லிக் கெஞ்சினார். மெடிக்கல் சிவாவுக்கு போன் போட்டு கிராஸ் மேட்சிங் ரிசல்ட்பற்றி சொன்னார். அப்பா என்ன பேசுகிறார், யாரிடம் பேசுகிறார் என்பதைக் கவனிக்காமல் இருபத்தெட்டு நாள் கழித்து, வீட்டுக்குப் போகிறேன் என்ற சந்தோஷத்தில் காரில் ஏறிய கொஞ்ச நேரத்திலேயே நான் தூங்கி விட்டேன்.

இப்படி முடியும் அந்தப் பகுதியிலேயே திரும்பவும் அதே மருத்துவமனைக்கு வரப் போகிறார்கள். சிறுநீரக மாற்று என்னும் ட்ரான்ஸ்பிளாண்ட் செய்து கொள்ளப் போகிறார்கள் என்கிற குறிப்பும் இருக்கிறது.

****

நாவலின் இரண்டாம் பாகம் முழுவதும் (16 இயல்கள்) ட்ரான்ஸ்பிளாண்ட் செய்வதற்கான நடவடிக்கைகளின் விரிவு. அப்பாகம் இப்படி ஆரம்பிக்கிறது;

“வீடு பிடிச்சிருக்கா?” என்று லேசாகச் சிரித்துக்கொண்டே கிருஷ்ணன் கேட்டார்.

எனத் தொடங்கும் இரண்டாவது பாகத்தை, மருத்துவ மனையின் நடைமுறைகள் மீது விமரிசன வெளிச்சத்தைப் பாய்ச்சும் பகுதியாக அமைத்துள்ளார். தனி வீடுபிடித்துத் தங்கி, தமிழரசனின் தாய் வள்ளியம்மையின் சிறுநீரகத்தையே மாற்றுச் சிறுநீரகமாகப் பொருத்தலாம் என்ற முடிவோடு திரும்பக் கொண்டுவரப்படும் தமிழரசனின் உடலுக்குள் அதைப் பொருத்துவதற்கு மருத்துவர்கள் பின்பற்றும் மருத்துவ நடைமுறைகள், மருத்துவமனை நிர்வாகமும் பின்பற்றும் நிர்வாக நடைமுறைகள், அரசு விதிகளின் குறுக்கீடுகள் என ஒவ்வொன்றையும் விரிவாக எழுதுகிறார். அந்தப் பாகம் முடியும்போதும் தமிழரசனின் துயரம் தீர்ந்தபாடில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தி முடிக்கும் அந்த முடிவுப்பத்தியை இமையம் எழுதி முடிக்கும் விதம் இப்படி இருக்கிறது:

……….. அந்தப் பெண் ஸ்டெச்சரைத் தள்ள ஆரம்பித்தார். ஸ்டெச்சரின் சக்கரங்கள் உருளும் சத்தம் கேட்க ஆரம்பித்த து. ஸ்டெச்சர் தரையில் போய்க்கொண்டிருப்பது தண்ணீருக்குள் போய்க்கொண்டிருப்பதுபோல இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தேன். ஒரே வெளிச்சமாக இருந்தது. கண்களை மூடிக்கொண்டேன். இருட்டாக இருந்தது.

வெளிச்சத்தைத் தொடர்ந்து, இருட்டு கவிவதற்குக் காரணம், அவனது உடல் தாயின் சிறுநீரகத்தை முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.

நம்பிக்கை இழப்பின் உச்சத்தவிப்புடன் தொடங்கும் மூன்றாம் பாகம் (8 இயல்கள்) முதல் பாகத்தின் ஆரம்ப வரிகளைப்போலக் கனவுநிலை விவரிப்பாகவே தொடங்குகிறது:

ஏரியோ, குளமோ, கடலோ தெரியவில்லை. பெரிய நீர்ப்பரப்பின் மீது நான் நிமிர்ந்த வாட்டத்தில் படுத்துக்கொண்டிருப்பது தெரிந்தது. நீர்ப்பரப்பில் அலைகள் ஏதுமில்லை. தொட்டிக்குள் ஊற்றிவைத்த தண்ணீர்போன்று சலனமற்றிருந்தது. படுத்திருந்த நிலையிலேயே இரண்டு பக்கமும் திரும்பிப் பார்த்தேன். ஆட்கள் யாருமே இல்லை. பேச்சுக் குரல் இல்லை. காற்றடிக்கிற சத்தம்கூடக் கேட்கவில்லை. நான் எங்கே இருக்கிறேன் என்பது தெரியவில்லை.

கனவுநிலைப் பிதற்றலின் பின்னணியில் இருப்பது தொடரும் மருத்துவமனை சூழலில் இருக்கவேண்டியதின் மீது உண்டாகும் எரிச்சல். மருத்துவமனையின் அலைக்கழிப்புகள், மருத்துவ விளக்கங்கள், நம்பிக்கையூட்டல்கள், சோதனைகள் என்பதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தனது இருப்பையே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் தமிழரசனின் பின்வரும் கூற்றோடு நாவல் முடிகிறது:

சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டிருப்பது கொதிக்கிற அண்டா தண்ணீருக்குள் உட்கார்ந்துகொண்டிருப்பதுபோல் இருந்தது. உடம்பு சூடாகி வாய் உலர்ந்தது. தொண்டைக்குழி வறண்டு போயிருந்தது. பயாப்சியின் முடிவு நன்றாக வருமா? நான் ஊருக்குப் போவேனா? பள்ளிக்கூட த்துக்குப் போவேனா? தெரியவில்லை. பயாப்சியின் முடிவு மோசமாக வந்தால் நான்வீட்டுக்குப் போகமுடியாததோடு, மருத்துவ மனையை விட்டும் போக முடியாது. மருத்துவமனைக்குள் இருப்பது பைத்தியக்கார விடுதியில் இருப்பதை போன்றதுதான் என்று நினைத்ததுமே எனக்கு அழுகை வந்தது. அழுகையை அடக்குவதற்குப் பற்களைக் கடித்துக்கொண்டிருந்தேன். அப்படியும் அழுகையை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கால்களின் நடுக்கத்தை, கைகளின் நடுக்கத்தைப் போர்வை மூடியிருந்த தால் அழுகையை மறைக்க முடிந்தது. போர்வையால் முகத்தையும் மூடியிருந்ததால் அழுகையை மறைத்திருப்பேன். அழுகையை மறைப்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டேன். உடனே என்னைச் சுற்றி இருட்டாகிவிட்டது போலிருந்தது. முதன் முதலாக என்மீதே எனக்கு வருத்தமும் கோபமும் அருவருப்பும் உண்டானது. “சீ” என்று சொன்னேன்.

நான் உட்கார்ந்துகொண்டிருந்த சக்கர நாற்காலியின் சக்கரங்கள் உருள்கிற சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தம் இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது.


*********


தன்னிலையும் இருப்பும்

தனிமனிதர்களின் தன்னிலை உருவாக்கத்தோடு உருவாகும் அறிவுத்தோற்றத்தின் விளைவாக, ஒவ்வொரு மனிதர்களும் இந்த உலகத்திற்கு எப்படி வந்தோம்? என்ற கேள்வியைக் கேட்டுகொள்வதுண்டு. அறிவியல் தரும் விடையோடு, சமய நம்பிக்கை தரும் விடைகளையும் இணைத்துக் கடந்துவிடுவதுமுண்டு. வந்ததைப் பற்றிய கேள்விக்கான விடைகளைப்போல இருப்புக்கான கேள்விகளையும் மனிதர்கள் கேட்டுக் கடக்கவே செய்கிறார்கள். அப்படிக் கடக்கும் நிலையிலும் இந்த உலகம் வாழ்வதற்கானது என்ற நம்பிக்கை தூக்கலாக வெளிப்படுவதுண்டு. அதன் தொடர்ச்சியாக, இந்த உலகத்தைவிட்டு எப்போது போவோம்; எப்படிப் போவோம்? என்று கேட்டு விடைதேடும் வேலையைச் சாதாரண மனிதர்கள் செய்வதில்லை. ஆனால் எல்லா மனிதர்களும் அந்த இறுதி நாளை – உலகத்தைவிட்டுப் போகும் நாளைத் தள்ளிப் போட முடியும் என்று நம்புகிறார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகச் சமய நடவடிக்கைகளும் இருக்கின்றன. அதைவிடக் கூடுதலாக மருத்துவ அறிவு தரும் நம்பிக்கைகளும் இருக்கின்றன.

15 வயதுச் சிறுவனாக வளர்ந்தது வரை தமிழரசன் இந்த உலகத்தின் அனைத்து உருவாக்கங்களையும் மகிழ்ச்சிகளையும் தனக்கானதாக ஆக்கி வாழ வந்ததாகவே நினைத்திருப்பான்; நம்பியிருப்பான். ஆனால் சிறுநீரகச் செயலிழப்பு என்னும் நோய்க்குப் பின் அவனது எதிர்காலம் சார்ந்த நம்பிக்கை தொலைந்தது மட்டுமல்லாமல், நிகழ்காலத்தின் இருப்பே வெறுப்பானதாக மாறுவிடுகிறது. அந்த நிலையில் அவனது இருப்பு கேலிக்குரிய ஒன்றாக அவனுக்கே தோன்றுவதை யார் தடுக்க முடியும்?. அப்படி தோன்றியபின் உருவான சொற்களின் கூட்டம் தான் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற தலைப்புக்குப் பின்னிருந்து வந்து விழும் நம்பிக்கையற்ற நம்பிக்கைக் குரல்.


*********


இமையத்தின் புனைகதைத்திறன்

ஒரு புனைகதையை வாசிக்கும்போது வாசிப்பவரின் தன்னுணர்வைத் தாண்டி உருவாகி வினையாற்றக்கூடிய கூறுகள் இரண்டு. கதைசொல்லியாக இருக்கும் பாத்திரத்தின் இடம் முதல் கூறு; சொல்பவர் வழியாக வெளிப்படும் காலம் இரண்டாவது கூறு. வாசிக்கப்படும் புனைவு கடந்த காலத்தின் நிகழ்வுகளால் பின்னப்பட்ட புனைவாக இருக்கும் நிலையில், எழுதிய எழுத்தாளரின் அனுபவம் சார்ந்த புனைவாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவோடு வாசிக்க முடியும். எல்லாப்பாத்திரங்களுக்குள்ளும் எழுதுபவரே பாத்திரமாக இருக்கிறார் என்ற புரிதலோடு கூடிய வாசிப்பு அது. அதற்குப் பதிலாக முழுவதும் நிகழ்காலத்து நிகழ்வுகளால் பின்னப்படும் நிலையில் எழுதியவரின் நேரடி அனுபவங்களின் பங்கு பற்றிய கேள்வி வாசிப்பவரின் மனதிற்குள் எழுவதைத் தவிர்க்க முடியாது. விரியும் நிகழ்வுகளில் எழுத்தாளரின் இடம் சொல்லியின் இடமாக இல்லாமல் நேரடிப்பங்கேற்புகொண்ட பாத்திரத்தின் இடமாக மாறும்போது படர்க்கைக் கதைசொல்லல் முறை தவிர்க்கப்பட்டு தன்மை அல்லது முன்னிலை கதைசொல்லல் முறை சொல்முறையாக மாறிவிடுகிறது. இந்நாவலில் பதினைந்து வயதுச் சிறுவனின் வழியாகச் சொல்லப்படும் நிகழ்வுகள் எழுத்தாளர் இமையத்தின் பங்கேற்ற அனுபவம் என்பதைவிடப் பக்கத்திலிருந்து பார்த்துச் சேகரித்த ஆவணங்களின் தொகுதியாக விரிந்துள்ளது எனலாம். தமிழரசனின் தந்தை அருணாசலத்திற்குள் புகுந்து இமையம் பேசுவதாக அவரையும் அவரது எழுத்துகளையும் அறிந்தவர்கள் நினைத்துக்கொள்ள அதிக வாய்ப்புண்டு.


நடப்பியலின் இருநிலைகள்

இப்போது உயிரோடிருக்கிறேன் நாவலை வாசிக்கும்போது நடப்பியல் எழுத்தின் இரண்டு வகைமைகளின் வெளிப்பாடுகள் உள்ளதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. நோயை எதிர்கொண்ட உடலின் இருப்பையும், நோயைக் குணப்படுத்த மருத்துவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளையும் சொல்லும் தமிழரசன், தன்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் நுட்பமாக கவனிக்கிறான்; விவரிக்கிறான். அந்தக் கவனிப்பும் விவரிப்பும் ஒரு ஆவணப்படக் காமிராவின் பதிவுகளைப்போல ஒவ்வொரு நகர்வையும், ஒவ்வொரு பொருட்களின் இருப்பையும், இயக்கத்தையும், இயக்கும் மனிதர்களின் மனவோட்டங்களையும் தகவல்களாகவும் காட்சிகளாகவும் உணர்ச்சி வெளிப்பாடுகளாகவும் தருவதாக இருக்கின்றன. அவனது கவனமும் விவரிப்பும் மருத்துவமனை என்னும் வெளிக்குள் இயங்கும் மருத்துவப் பணியாளர்களின் செயல்பாடுகளையும் ஈடுபாட்டையும் மட்டும் பேசுவதாக இருக்கிறது என்று நினைக்க வேண்டியதில்லை. அவனது உறவினர்களின் இருப்பையும் அதே கவனத்துடன் முன்வைத்துள்ளது. தன்னுடன் இருப்பவராகவும், தனது சிறுநீரகங்களில் ஒன்றைத் தனக்குத் தருவதின் மூலம் தனது வாழ்நாளை நீட்டிக்க விரும்பும் அம்மா வள்ளியம்மையின் மனவோட்டங்களில் எந்தவிதத் தயக்கமும் வெளிப்பட்டதில்லை என்பதைச் சொல்வதோடு, அப்பா அருணாசலம் மருத்துவச் செலவுக்காகப் பணம் திரட்டுவதற்குப் படும்பாடுகளை அவரது தொலைபேசி உரையாடல்களைக் கவனித்துச் சொல்வதின் வழியாகவும் முன்வைக்கிறான். அரிசி&மாவு அரைக்கும் மில்லின் உரிமையாளரான அப்பாவின் படிப்புக்காலத் தொடர்புகள் வழியாக் கிடைக்கும் உதவிகளைப் பேசும்போது இந்த உலகம் நல்லவர்களாலும் நிரம்பியிருப்பதைக் காட்டுகிறான். அப்பாவின் ஆசிரியரான திலகவதியின் உதவி, அவரது தொடர்பால் அறிமுகமாகும் தாமரைச்செல்வியின் உதவி, சென்னையில் வாடகை வீட்டிற்கு ஏற்பாடு செய்யும் கிருஷ்ணனின் பங்களிப்பு என ஒவ்வொன்றையும் – ஒவ்வொருவரையும் – கவனித்துச் சொல்லும் விதம் நுட்பமான அவதானிப்புகள். இதில் வெளிப்படும் மொழிநடையும் அடுக்குகளும் ஆவண நடப்பியலாக அமைந்துள்ளது.

மையப்பாத்திரத்தின் சொல்முறைமைக்குள் ஆவண நடப்பியல் (Documentary Realism) வெளிப்படுகிறது என்றால், அவனது அப்பாவின் பேச்சுகளிலும், உணர்ச்சி வெளிப்பாடுகளிலும், ஒவ்வொன்றிலும் அவருக்கு எழும் சந்தேகங்களிலும், அதன் தொடர்ச்சியான வினாக்களிலும் வெளிப்படுவது விமரிசன நடப்பியல் (Critical Realism)தன்மை. மருத்துவமனை ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் – அடிமட்ட ஊழியரான தாதியிடம் தொடங்கி, நர்சு, கம்பவுண்டர், பணம் வசூலிக்கும் கணக்காளர், பயிற்சி மருத்துவர், துறைத்தலைவர், மருத்துவ இயக்ககத்தின் விசாரணைக்குழு உறுப்பினர்கள் என ஒவ்வொருவரின் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார். அந்த ஆர்வம் தெரிந்துகொள்ளும் ஆர்வமாக மட்டுமல்லாமல், அவர்களின் செயல்பாட்டில் இருக்கும் மனித உறவுகளுக்கப்பாலான இயந்திரத்தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் விமரிசனப்பாங்கையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆலோசனை வழங்கும் அதிகாரி அகிலாவோடு அவர் நடத்தும் உரையாடல்களில் தனது அறியாமையையும், காலந்தாழ்ச்சி உண்டாவதால் அடையும் எரிச்சல்களையும் முன்வைத்துக் கேள்விகளால் மொத்த அமைப்பையும் விமரிசனத்திற்குட்படுத்துகிறார். அவரது பொறுமையான பதில்களுக்குப் பின் தெளிவு கிடைக்கும்போது நடைமுறைகள் ஏன் இப்படிச் சிக்கலாக இருக்கின்றன என்ற தவிப்பையும் ஆற்றாமையையும் காட்டுகிறார். அவரது விமரிசனம், ஆகப்பெரும் மருத்துவ அமைப்பு மீது சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் விமரிசனம். .


*******

இமையத்தின் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற நாவலை வாசித்து முடித்தவுடன், இந்நாவல் எழுதப்பெற்ற நோக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்வியை ஒருவர் எழுப்பலாம். அந்தக் கேள்விக்கு ஒன்றிற்கு மேற்பட்ட விடையை நாவல் முன்வைக்கிறது. தமிழரசனின் துயரம் சுமக்கும் வாழ்க்கையையும், நாவலின் முடிவில் அவன் வெளிப்படுத்தும் நம்பிக்கையிழப்புச் சொற்களையும் முன்வைத்து, மனிதர்களின் இருப்புக்குப் பின்னால் இருக்கும் அபத்தத்தைக் காட்டுவதற்காக எழுதப்பெற்ற நாவல் என ஒரு விடையை உருவாக்கிக் கொண்டு ஒருவர் விலகலாம். அந்த விடையே பொதுவான வாசகர்கள் உருவாக்கிக்கொள்ளும் விடை. அதைத் தாண்டிய இன்னொரு நோக்கம் இந்நாவலை எழுதியதின் பின்னால் இருக்கிறது. பொறுப்புமிக்க எழுத்தாளர் ஒருவர் தனது காலத்தின் மீது கவியும் – மனிதர்களின் வாழ்க்கை மீது செலுத்தும் அழுத்தத்தை விசாரிக்கும் விசாரணை அது. மரபான சமூக நடைமுறைகளின் பின்னணியில் சமய நம்பிக்கைகள் உருவாக்கும் அழுத்தம் போலவே, நவீன வாழ்க்கையில் அறிவியல் நடைமுறைகளும் கண்டுபிடிப்புகளும் உருவாக்கும் அழுத்தங்களும் விசாரிக்கப்படவேண்டும் என்பதின் வெளிப்பாடே அந்த நோக்கம். மரபான அமைப்புகளை விசாரணை செய்து, நவீனத்துவத்தைப் பரிந்துரை செய்ததைத் தாண்டிய நோக்கம் கொண்டது இது. நவீனத்துவ அறிவான மருத்துவத்தின் மீதும் விசாரணையைக் கோரும் பின் நவீனத்துவ நிலை இது.

நவீன அறிவியலின் ஆதாரத்தில் இயங்கும் பெரும் மருத்துவமனைகள் – கார்ப்பரேட் / பல்நோக்கு மருத்துவ மையங்கள், அறிவியல் தரவேண்டிய உறுதியான முடிவுகளை முன்வைக்கத் தயங்கிக் கொண்டே இருக்கின்றன; தொடர்ச்சியாக நிச்சயமற்ற தன்மையைத் தருவதையே தொடர் வினைகளாகக் கொண்டிருக்கின்றன என்ற கடும் விமரிசனத்தை நாவல் வழி உருவாக்கியுள்ளார். சேவையாகவும் வணிகமாகவும் இயங்கும் அப்பெரும் அமைப்புக்குள் புலப்படாத விதிகள் செயல்படுகின்றன; அவையே மனிதர்களைத் தொடர்ச்சியான வேதனைச் சுழலில் இயங்கும்படி நிர்ப்பந்திக்கின்றன என்பதைத் காட்சிப்படுத்தும் மொழியின் மூலம் வாசிக்கத் தருகின்றார். ஒவ்வொரு நிகழ்வையும் நகர்வையும் சித்திரிப்பவராக மட்டுமல்லாமல், அந்நிகழ்வில் பங்கேற்கும் பாத்திரங்கள் வழி தொடர்ச்சியாக வினாக்களை எழுப்பிக்கொண்டே இருக்கிறார். மருத்துவ மனைக்குள் இருக்கும் பிரமாண்டமான வெளி, கருவிகள், பணியாளர்களான மருத்துவர்கள், தாதியர்கள், ஆலோசகர்கள், செயலர்கள் ஆகியோரின் இயக்கம், சுத்தம் பேணுதல் ஆகியவற்றை இயக்கும் நிர்வாக அமைப்பு பணப் பரிவர்த்தனைக்குக் கையாளும் உத்திகள் என ஒவ்வொன்றும் புதிர்களாகவும் ஆச்சரியமூட்டுவனவாகவும் இருப்பதை நுட்பமாக விவரிக்கிறார். அவ்விவரிப்புகளின் வழியாகவே அங்கு நிலவும் பொருளாதார ரீதியான வேறுபாடுகளையும், உள்ளே நுழைந்தவர்கள் அந்தச் சுழலில் சிக்கி வெளியேற முடியாமல் தவிக்கும் பரிதவிப்புகளையும் கவனப்படுத்தியிருக்கிறார். இதுவரையிலான தனது எழுத்துப்பரப்பில் அதிகமும் கிராமப்புற வெளிகளையும் மனிதர்களையும் எழுதிக்காட்டிய இமையம், இந்நாவலில் தேர்வுசெய்த பொருண்மையால் புதிய பரப்பை விசாரணைக்குள்ளாக்கித் தனது புனைவுத்திறனைக் கூட்டியிருக்கிறார். *********************


முதல் நாவலிலிருந்து ஒவ்வொரு நாவலிலும் சிறுகதைத் தொகுதியிலும் தொடர்ச்சியாக வித்தியாசங்களையும் படைப்பு நுட்பங்களையும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ள இமையம், கடந்த ஆண்டு தனது ‘செல்லாத பணம்’ நாவலுக்காக இந்திய அரசு, இலக்கியத்திற்காக வழங்கும் சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர். கிராமப்புற மனிதர்களை எழுதும் போக்கிலிருந்து நகரும் திசையை அந்த நாவலே கொண்டிருந்தது. அந்த நாவலின் கதைக்களனில் ஒன்றாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இருந்தது. தீக்காயங்களுடன் மருத்துவ மனைக்குள் அனுமதிக்கப்பட்ட நோயாளியோடு தொடர்புடைய காட்சிகளை நுட்பமாக எழுதியதன் மூலம் இலக்கியவியலின் அடிப்படைக் கூறுகளான காலம், வெளி, பாத்திரங்கள் என்ற மூன்றிலும் நூறுசதவீதம் தனது ஈடுபாடும் வெளிப்பாடும் இருக்கவேண்டும் என்பதைக் காட்டியிருந்தார். தான் எழுத நினைக்கும் பொருண்மை சார்ந்து கூடுதல் அர்ப்பணிப்பை வழங்கும் இமையம், அந்த அர்ப்பணி காரணமாகவே பல விருதுகளைப் பெற்றவராக ஆகியிருக்கிறார். அதே அர்ப்பணிப்பை இன்னும் கூடுதலாக்கி இன்னும் இன்னும் விருதுகள் பெற வேண்டியவர் என்பதை இந்த நாவலில் உறுதிப்படுத்தியிருக்கிறார். பொதுவாக சாகித்திய அகாதெமி விருதுக்குப் பிறகு தனது முந்திய எழுத்துகளைத் தாங்களே தாண்ட நினைக்காத நிலையே தமிழின் சாகித்திய அகாதெமி பெற்றவர்களின் நிலையாக இருக்கிறது. ஆனால் இமையம், சாகித்திய அகாதெமி விருதுக்குப் பின் அடுத்த நாவலிலேயே அதனைத் தாண்டியிருக்கிறார் எனச் சொல்வது புகழ்ச்சியில்லை.


தலித்/மார்ச்- ஏப்ரல் 22,

உயிர்மை, மார்ச் 22 










திங்கள், 2 மே, 2022

நேர்காணல் - புத்தகம் பேசுது




 கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்து 26 ஆண்டுகளாகிவிட்டது. அதன் பிறகு 7 நாவல்கள், 6 சிறுகதை தொகுப்புகள் என்று எழுதிவிட்டீர்கள். இத்தனை ஆண்டுகால எழுத்து வாழ்க்கையில் எழுத்தில் சாதித்துவிட்டேன் என்று சொல்ல முடியுமா? எழுத்து வாழ்க்கையில் நீங்கள் கற்றுக்கொண்டது என்ன? சாதித்தது என்ன?

எழுதுதல் என்பதே படிப்பதுதான். பயிற்சிதான். எழுத்தில் சாதித்துவிட்டேன் என்று என்னால் ஒருபோதும் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. சாதித்துவிட்டேன் என்று சொல்வது நிறைவடைந்துவிட்ட செயல். எழுத்தாளனின் வாழ்க்கையில் அப்படி ஒரு நிலை இல்லை. இதுதான் உச்சம், இதற்கு மேல் ஒன்றுமில்லை என்பது இல்லை. ஒவ்வொரு சிறுகதையும் ஆரம்பம்தான். ஒவ்வொரு நாவலும் ஆரம்பம்தான். எழுத்தில் முடிவு என்பது கிடையாது.  சாதித்துவிட்டேன், உச்சத்தைத் தொட்டுவிட்டேன் என்று ஓர் எழுத்தாளன் சொன்னால் அது அவனுடைய வீழ்ச்சியையே காட்டும்.

ஒவ்வொரு சிறுகதையை எழுதும்போதும், ஒவ்வொரு நாவலை எழுதும்போதும் எனக்கு ஒரு தொடக்க நிலை எழுத்தாளனின் மனநிலைதான் இருக்கிறது. பதற்றம் இருக்கிறது. நன்றாக வர வேண்டும் என்ற கவலை இருக்கிறது. எழுதியது சரியாக இருக்கிறதா என்று கூடுதல் அக்கறையுடன் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு நாளும் சமூகத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. நான் எழுத்தில் எதையும் சாதிக்கவில்லை. என்னுடைய எழுத்து பெரிய சாதனையான எழுத்து என்றும் நான் சொல்ல மாட்டேன். எல்லாமே எனக்குப் புதியதாக இருக்கிறது. தொடக்க நிலையாகவே இருக்கிறது. எழுத்துப் பயிற்சியில் இருக்கும் மாணவன் நான். எழுத்து என்பது தொடர் ஓட்டம்.

கோவேறு கழுதைகள்’ நாவல் தொடங்கி இப்போது வந்திருக்கிற ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவல்வரை, உங்களுடைய எழுத்து, யதார்த்த வகை பாணியிலான எழுத்தாகவே இருக்கிறது. நீங்கள் ஏன் புது வகையிலான கதைசொல்லல் முறையை முயற்சிக்கவில்லை.

 ஒரு சிறுகதையோ, நாவலோ எப்படி எழுத வேண்டும் என்பதை எழுத்தாளன் முடிவெடுக்கிறான் என்பதைவிட, அந்தச் சிறுகதையும், நாவலும்தான் தீர்மானிக்கிறது. யதார்த்த வகையில் எழுத வேண்டும் என்பது என்னுடைய லட்சியமல்ல, கொள்கை அல்ல. புது வகையான எழுத்தை எழுதிப்பார்க்க வேண்டும் என்றுதான் எல்லா எழுத்தாளர்களுமே விரும்புகிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளரும் தன்னுடைய எழுத்தை மாற்றிமாற்றி எழுதிப்பார்க்க வேண்டும் என்றுதான் முயற்சிக்கிறார்கள். அது வெளிப்படையாகத் தெரியாது. புது முயற்சியில் வெற்றி பெறலாம், தோல்வி அடையலாம், வெற்றி தோல்வி சம்பந்தப்பட்டது அல்ல படைப்பிலக்கியம். முயற்சி எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது, எழுதப்படுவது இலக்கியப் படைப்பாக இருக்கிறதா என்பது.

என்னுடைய ‘பொன்னம்மாவின் குடும்பக் கதை’ என்ற சிறுகதை சர்ரியலிசப் பாணியில் எழுதப்பட்டது. ‘எங் கதெ’ நாவல் சங்க இலக்கியப் பாடல் முறையைப் பின்பற்றி எழுதியது. தற்போது வந்திருக்கிற ‘இப்போது உயிரேடிருக்கிறேன்’ என்ற நாவல் 15 வயது சிறுவனின் பார்வையில் எழுதப்பட்டது. ‘கோவேறு கழுதைகள்’ நாவலை எழுதும்போது எனக்கு 19 வயது. 19 வயதில் 65-70 வயது கொண்ட மனிதர்களை எழுதினேன். இப்போது எனக்கு 56 வயது. 15 வயது சிறுவனின் மனநிலையில் எழுதியிருக்கிறேன். இது ஓர் எழுத்தாளன் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்கிற சவால், நான் சவாலை ஏற்றுக்கொண்டு செயல்பட்டிருக்கிறேன்.

புதிய உத்தியில், புதிய மொழியில், புதிய முறையில் கதை எழுதுகிறோம் என்பதும், இசங்களின் புரிந்துணர்வில் எழுதுகிறோம் என்று ஆவேசமாகப் பேசுவதும் முக்கியமல்ல. எழுதப்பட்டப் படைப்பு தரமாக இருக்கிறதா, இலக்கியப் படைப்பாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

உங்களுடைய ‘வாழ்க வாழ்க’ நாவல் முற்றிலும் அரசியலை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. நாவலில் விவரிக்கப்பட்டுள்ள மாதிரிதான், பொதுமக்களும், அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் இருக்கிறார்களா? சற்று மிகையாக இருக்குமோ என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. 

மிகை அல்ல. நிஜம். தமிழ்நாட்டு அரசியலில் 32 ஆண்டு கால நேரடி அனுபவம் எனக்கு இருக்கிறது. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு அழைத்துக்கொண்டு செல்லப்படும் மனிதர்கள், குறிப்பாகப் பெண்கள், எதற்காக வருகிறார்கள்? கட்சியில் விருப்பம் கொண்டா, கட்சித் தலைவரின் மீது விருப்பம் கொண்டா என்றால், இல்லை என்றுதான் நான் சொல்வேன். கூலிக்காக வருகிறார்கள். முதல் நாள் 500 ரூபாய்க்காக அ.தி.மு.க. கூட்டத்திற்குப் போகிறவர்கள், மறுநாள் பி.ஜே.பி., தி.மு.க. கூட்டத்திற்கும் போவார்கள். அரசியல் கட்சியினரைப் பொறுத்தவரை கூட்டம் கூட்டிக் காட்ட வேண்டும். ஜனநாயகக் கடமை என்பதெல்லாம் கற்பனையான வார்த்தை. கட்சி ஈடுபாட்டுடன் செல்கிறவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் ஒரு சதவிகிதத்திற்கும் கீழ்தான் இருக்கும். அரசியல் கட்சிகள் எப்படி இருக்கின்றன. அரசியல் தலைவர்கள் எப்படி இருக்கிறார்கள், நம்முடைய மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பச்சையாக விவரித்துக்காட்டிய நாவல்தான் ‘வாழ்க, வாழ்க’. நான் அறிந்தவரையில் தமிழ்நாட்டில், இந்தியாவில் தற்போதைய நடைமுறைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நேரடியாக விவரித்த நாவல் வேறில்லை. 

வளர்ந்து வரும் டிஜிட்டல் வாழ்க்கைச் சூழலில் ஓர் எழுத்தாளராக, வாசகராக நீங்கள் சந்திக்கும் சவால்கள், நெருக்கடிகள் என்ன? வாசிப்பு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து உங்களுடைய கருத்தென்ன?

ஓலைச்சுவடியில் ஊசியால் எழுதினார்கள், பின்பு பேனாவால் எழுதினார்கள். பிறகு டைப் மெஷினில் டைப் செய்தார்கள். இப்போது கம்ப்யூட்டரில் டைப் செய்கிறார்கள். கவிதைகளை, குறிப்புகளை செல்போனிலேயே டைப் செய்கிறார்கள். அதையும் தாண்டி வாயாலேயே பேசி டைப் செய்கிற முறையும் புழக்கத்திற்கு வந்துவிட்டது. அதே மாதிரி இப்போது கிண்டிலில் படிக்கிறார்கள். டிஜிட்டல் புக்ஸ், பி.டி.எஃப். என்ற முறையில் படிக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி இப்போது ஆடியோ புக்ஸ் வந்துவிட்டது. படிக்க வேண்டியதில்லை. கதை கேட்கலாம். முன்பு ரேடியோவில் கேட்டது மாதிரி, நாடகம் கேட்டது மாதிரி. அதையும் தாண்டி பல யூடியூப் சேனல்களில் கதை சொல்கிறார்கள். விமர்சனம் செய்கிறார்கள். இதிலிருந்து படிப்பது என்பது ஏதோ ஒரு வடிவத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இருக்கும். காரணம் மனிதனால் கதை சொல்லாமலோ, கதை கேட்காமலோ இருக்க முடியாது. ஓர் எழுத்தாளனாக, ஒரு வாசகனாக எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை. சமூகம் எப்படி இருந்தது. எப்படி மாறுகிறது என்பதை எழுதுவதுதான் எழுத்தாளனின் வேலை. டிஜிட்டல் உலகத்தில் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்பதும், அச்சு ஊடகம், அழிந்துவிடும் என்பதும் மிகை கற்பனை. டிஜிட்டல் யுகம் எழுத்தாளர்களுக்கு, வாசகர்களுக்கு நன்மை செய்திருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.


உங்களுடைய ‘பெத்தவன்’ நெடுங்கதை பேசப்பட்ட அளவிற்கு மற்ற சிறுகதைகள் பேசப்படவில்லையே ஏன்?

அரசியல் சூழல், சமூக சூழல்தான் காரணம். ‘பெத்தவன்’ நெடுங்கதை வெளியான மறு மாதம்தான் திவ்யா-இளவரசன் பிரச்சினை உருவானது. அதன் காரணமாக, ‘பெத்தவன்’ கதைக்குக் கூடுதல் கவனம் கிடைத்தது. மற்ற சிறுகதைகளுக்குப் போதிய வெளிச்சம் கிடைக்கவில்லை என்று கூற முடியாது. ‘வீடியோ மாரியம்மன்’ என்ற தலைப்பில் 17 கதைகள் The speaking Tiger என்ற பதிப்பகத்தின் மூலம் வெளிவந்துள்ளது. Ratna Books வெளியீட்டில் If there is a God என்ற தலைப்பில் 13 கதைகள் ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கிறது. Korpor Collins பதிப்பகத்தின் மூலம் 11 கதைகள் Order of the Sky என்ற தலைப்பில், மே மாத இறுதியில் வெளிவர இருக்கிறது. நான் எழுதிய சிறுகதைகளில் 90 சதவிகிதக் கதைகள் ஆங்கிலத்தில் வெளியாகி இருக்கிறது, வெளிவர இருக்கிறது முக்கியமான விஷயம். சிறுகதைகள் போதிய கவனம் பெறவில்லை என்பது தவறானது.

உங்களுடைய ‘செல்லாத பணம்’ நாவலும், ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலும், ‘ஆண்டவரின் கிருபை’ என்ற சிறுகதையும் முழுக்க மருத்துவமனையிலேயே நிகழக்கூடியவை. மருத்துவமனைக்குள் நிகழ்கிற சம்பவங்களைத் தத்துரூபமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள். மருத்துவமனை சம்பந்தமான கதைகளை விரும்பி எழுதுகிறீர்களா?

நிச்சயமாக இல்லை. கட்டாயம் எழுத வேண்டும், எழுதாமல் விடக் கூடாது என்ற மனக்கொந்தளிப்பு ஏற்பட்ட பிறகுதான் எழுத ஆரம்பித்தேன். ‘செல்லாத பணம்’ தீக்குளித்து இறந்துபோகிற ரேவதி என்கிற ஒரு இளம் பெண்ணின் கதை. 15 வயது சிறுவன் சிறுநீரகச் செயலிழப்பால் சந்திக்க நேரிடுகிற கொடும் துயரம்தான் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற கதை. தமிழரசன் என்ற சிறுவன்தான் கதையின் மையம். அவனுடைய பார்வையில்தான் கதை எழுதப்பட்டுள்ளது. ‘ஆண்டவரின் கிருபை’ என்ற சிறுகதை, குழந்தை பெறுவதற்காக அவஸ்தைப்படுகிற பிரேமா என்ற பெண்ணின் கதை. இந்த மூன்று கதைகளும் மருத்துவமனை, மருத்துவர்கள், நர்சுகள், நோயாளிகள் என்று பேசப்படுகிறது.

பெண்கள் ஏன் தீக்குளிக்கிறார்கள்? சிறுநீரகச் செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது? குழந்தையின்மை பிரச்சினை ஏன் வருகிறது? என்றுதான் கேட்க வேண்டும். ஏன் மருத்துவமனையை வைத்து கதையை எழுதினீர்கள் என்று கேட்கக் கூடாது. மருத்துவமனைகளிலும் மனிதர்கள்தானே இருக்கிறார்கள். நாம் வேறு எங்குமே கேட்டிராத அவலக் குரல்களை மருத்துவமனைகளில்தான் கேட்க முடியும். வேறு எங்குமே பார்த்திராத கண்ணீரை, நெஞ்சின் தவிப்பை மருத்துவமனைகளில் மட்டும்தான் பார்க்க முடியும். சுடுகாட்டில்கூட அவ்வளவு வேதனையை, கண்ணீரைப் பார்க்க முடியாது. என்னைக் கேட்டால் மருத்துவமனைகளைவிட கதை எழுதுவதற்கு சிறந்த இடம் உலகில் வேறு இல்லை. அந்த உலகத்தைப் பற்றி எழுதியதில் எனக்கு மகிழ்ச்சிதான்.

உயிர்நாடி I, உயிர்நாடி II, நறுமணம் மூன்று சிறு கதைகளுமே சிறு விவசாயிகள், பல காரணங்களுக்காக நிலத்தை இழக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அம்பேத்கார் கிராமத்தைவிட்டு வெளியேறுங்கள் என்று சொன்னார். கிராமம் என்பது நிலத்தோடு சம்பந்தப்பட்ட வாழ்க்கை. ஆனால், நீங்கள் நிலத்துடனான வாழ்வைப் பெருமைப்படுத்தி எழுதுவதாகத் தோன்றுகிறது.

அம்பேத்கார் வேறு ஒரு பொருளில் சொன்னார். நான் வேறு ஒரு பொருளில் மூன்று சிறுகதைகளையும் எழுதியிருக்கிறேன். நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை, புற வழிச்சாலை, பெரிய தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியின் அடையாளங்களாகப் பார்க்கப்படுகிறது. ஒரு கிராமத்தில் பத்து, இருபது மாடி வீடுகள் வந்துவிட்டாலே பெரிய வளர்ச்சி ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறோம். எது வளர்ச்சி, எது வீழ்ச்சி என்று அறியாததன் விளைவுதான் அப்படிப் பேசவைக்கிறது. கால் காணி, அரை காணி, ஒரு காணி நிலம் வைத்திருந்த மனிதர்களை நான்குவழி, எட்டுவழி, புறவழிச் சாலை அமைப்பதற்காக, பெருநிறுவனங்களுக்காகக் கட்டாயப்படுத்திப் பிடுங்கப்பட்டவர்களின் நிலை என்ன என்று ஆராய்ந்து இதுவரை எழுதியிருக்கிறார்களா? சென்னை போன்ற பெருநகரங்களுக்குக் கிராமப்புறங்களிலிருந்து கூலிகளாக வருகிற மனிதர்கள் எத்தகைய சூழ்நிலையிலிருந்து வருகிறார்கள் என்று நாம் யோசித்திருக்கிறோமா? கதை எழுதுவது என்பது சமுகத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்வது, கலையாக. இலக்கியமாக. மொழியின் வழியாக. வறட்டுத்தனமாகக் கொள்கை பேசுவது அல்ல. இலக்கியம் மேடைப் பேச்சல்ல. அரசியல் கட்சியின் கொள்கை விளக்க அறிக்கை அல்ல.


இப்போதும் கிராமத்தில் வாழ வேண்டும், விவசாயம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா?

நிச்சயமாக. என்னுடைய இளமைக் காலம் முழுவதும் கிராமத்தில்தான் கழிந்தது. நிலத்துடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. சோறு இல்லாவிட்டால் மனிதன் வாழ முடியாது. சோறு நிலத்திலிருந்துதானே வருகிறது. உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்றால் என்ன அர்த்தம்? நமக்குச் சோறு போட்டவரை நன்றியுணர்வோடு நினைக்க வேண்டும் என்பது. அந்த விதத்தில் எனக்கு நிலம் முக்கியம். அதைவிடவும் மனிதன் நிலத்தில்தான் வாழ்கிறான். வாழ முடியும். ஆகாயத்திலோ, கடலிலோ அல்ல. அந்த விதத்திலும் நிலம் முக்கியம். நான் நிலத்தைப் பற்றி எழுதுகிறேனா மருத்துவமனைகளைப் பற்றி எழுதுகிறேனா என்பது முக்கியமல்ல. அது மனித வாழ்க்கையாக இருக்கிறதா. சமூக வாழ்க்கையாக இருக்கிறதா, வாசகனின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதுதான் முக்கியம். எந்த மனிதனின் கண்ணீர் நிறைந்திருக்கிறதோ, அந்த மனிதனின் கண்ணீருக்கான காரணத்தைத் தேடுவதுதான் என் எழுத்து. என் இலக்கியப் படைப்பு.

உங்களுடைய ‘ஆறுமுகம்’ நாவலும், ‘செல்லாத பணம்’ நாவலும் முழுக்க பாண்டிச்சேரியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. நான் பாண்டிச்சேரியில் வாழ்பவன். ஆனாலும், நான் பார்க்காத பல தெருக்களையும், நான் பார்க்காத ஜிப்மர் மருத்துவமனையின் பல வார்டுகளையும் எழுதியிருக்கிறீர்கள். இது எப்படிச் சாத்தியம் ஆயிற்று?

நான் பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள புளிச்சப்பள்ளம் என்ற கிராமத்திலிருக்கும் பள்ளியில் நான்காண்டுகள் ஆசிரியராக வேலைப்பார்த்தேன். அப்போதுதான் நான் பாண்டிச்சேரியைப் புரிந்துகொள்ள முயன்றேன். அதாவது படிக்க முயன்றேன். எனக்கு இன்றும் ஆரோவில் நிறுவனத்தின் மீது கோபம் இருக்கிறது. பல விவசாயிகளிடமிருந்த நிலத்தைக் கையகப்படுத்தித்தான் அந்த நிறுவனம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்குச் செய்யப்படும் தியானம் யாருக்கானது? தியானத்தினால் பசியைப் போக்க முடியுமா? கண்ணீரைத் துடைக்க முடியுமா? வறுமையை அகற்ற முடியுமா? என்ற கேள்வியில் எழுந்ததுதான் ஆறுமுகம் நாவல்.

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என்பது கடலூர், விழுப்புரம் மாவட்டத்து மக்கள் அதிகமாக வரக்கூடிய ஒரு இடம். நான் இரண்டு சந்தர்ப்பங்களில் ஜிப்மர் மருத்துவமனைக்குள் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நான் புளிச்சப்பள்ளத்தில் ஆசிரியராகப் பணியாற்றும்போது எங்கள் மாணவி ஒருவர் தீக்குளித்து இறந்துவிட்டார். இரண்டாவதாக எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண் தீக்குளித்து இறந்துவிட்டார். ஜிப்மருக்குச் சென்ற இரண்டு முறையும், தீக்குளித்து இறந்துபோனவர்களைப் பார்ப்பதற்காகத்தான் போனேன். நான் ஜிப்மர் மருத்துவமனையில் இருந்த நேரத்தில் 90 சதவிகித நேரம், பிணவறைக்கு முன்தான் இருந்தேன். பிணவறைக்கு முன் காத்திருந்த நேரத்தில் உருவானதுதான் ‘செல்லாத பணம்’ நாவல். மருத்துவமனையில் இருக்கிற பிணவறையும் கிராமத்திலிருக்கிற சுடுகாடும்தான் எனக்குச் சிறந்த பள்ளிக்கூடங்கள்.

உங்களுடைய நாவல்களிலும் சரி, சிறுகதைகளிலும் சரி, மகிழ்ச்சி, கொண்டாட்டம், நகைச்சுவை என்பது அரிதாகவே இருக்கிறது. துயரத்தையும் கண்ணீரையுமே அதிகமாக எழுதுகிறீர்களே ஏன்?

என்னுடைய நாவல்களில், சிறுகதைகளில் நகைச்சுவை குறைவாக இருக்கிறது என்று சொல்வது உண்மையல்ல. ‘செடல்’ நாவலில், ‘எங் கதெ’ நாவலில் ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ நாவலிலும்கூட நிறைய நகைச்சுவை மிக்க இடங்கள் இருக்கின்றன. நகைச்சுவை அற்ப விசயங்களில் வெளிப்படுவதில்லை. என்னுடைய மணலூரின் கதை, ஆகாசத்தின் உத்தரவு, பிராது மனு போன்ற சிறுகதைகளைப் படிக்க வேண்டும். நகைச்சுவை உணர்வு சில்லி ஜோக்குகளால் ஏற்படாது.

நாவல்களிலும், சிறுகதைகளிலும் சோகத்தையே எழுத வேண்டும் என்பது என்னுடைய விருப்பத் தேர்வல்ல. சமூகம் மகிழ்ச்சியாக இல்லை. அதனால் படைப்பிலக்கியமும் மகிழ்ச்சியைப் பற்றி பேசவில்லை. ஈழ எழுத்தாளர்களிடம் ஏன் கொண்டாட்டமான கதையை எழுதவில்லை என்று கேட்பீர்களா? இஸ்ரேலில் அப்படிக் கேட்க முடியுமா? இன்று உக்ரேனியில் உள்ள எழுத்தாளர்களிடம் ஏன் கொண்டாட்டமான இலக்கியத்தை எழுதவில்லை என்று கேட்க முடியுமா? அங்கெல்லாம் போர். நம் நாட்டில் போரில்லையே என்று கேட்கலாம். போரைவிடக் கொடிய பாதிப்பை ஏற்படுத்தும் சாதி நம்மிடம் இருக்கிறது. மதவாத சக்தி இருக்கிறது. வறுமை இருக்கிறது. நம்முடைய நாட்டில் 90 சதவிகித மக்கள் ஒவ்வொரு நாளும் துயரத்தோடுதான் தூங்கச் செல்கிறார்கள். சமூகம் எப்படி இருக்கிறதோ. அப்படித்தான் இலக்கியமும் இருக்கும். தமிழ்நாட்டில், இந்தியாவில் நேர்மையான எழுத்தாளனாக இருப்பதே சாகசச் செயல்தான். என்னுடைய 35 ஆண்டுகால எழுத்து வாழ்க்கையை இப்போது திரும்பிப்பார்க்கிறேன். எதன் பொருட்டும் நான் சறுக்கி விழவில்லை. அது போதும்.

நீங்கள் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதவந்தவர்கள் எல்லாம் 100, 50 புத்தகங்கள் என்று எழுதிக் குவித்துவிட்டார்கள். ஆனால், நீங்கள் இதுவரை 14 புத்தகங்கள் மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். உங்களுடைய எழுத்துக்கு உரிய கெளரவம் கிடைத்திருக்கிறதா?

எண்ணிக்கை முக்கியமல்ல. தரம் மட்டுமே முக்கியம். அதே நேரத்தில் உலகத்தரமான இலக்கியப் படைப்பு என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அந்தந்த மொழியில் சிறந்ததாக இருக்க வேண்டும். நிறைய எழுதிக் குவித்தவர்கள் நல்ல எழுத்தாளர்கள் என்றும் குறைவாக எழுதியவர்கள் நல்ல எழுத்தாளர்கள் இல்லை என்றும் எண்ணுவது தவறு.

ஒரு கிலோ தங்கத்தின் மதிப்பு, ஒரு கிலோ வெள்ளி, வெங்கலத்தின் மதிப்பு எப்படி வேறுபடுகிறதோ, அப்படிதான். அதே மாதிரி, விருது பெற்றவர்கள்தான் தரமான எழுத்தாளர்கள், விருது பெறாதவர்கள் தரமற்ற எழுத்தாளர்கள் என்றும் எண்ணக் கூடாது. விருதுகள் எழுத்தின் வலிமையை நிர்ணயிக்காது. தமிழ்நாட்டில் பட்டிமன்றப் பேச்சாளர்கள்தான் அதிகமாக விருதுகளைப் பெறுகிறார்கள். புகழ் வெளிச்சத்தில் இருக்கிறார்கள். எதன் பொருட்டு சாலமன் பாப்பையாவுக்குப் பத்ம விருது வழங்கப்பட்டது?

என்னுடைய எழுத்துக்கு உரிய மரியாதை கிடைத்துகொண்டுதான் இருக்கிறது. ‘கோவேறு கழுதைகள்’ நாவல் 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து விற்றுக்கொண்டிருக்கிறது. அதே போன்று என்னுடைய 14 புத்தகங்களும் அச்சில் இருக்கிறது. விற்பனையாகிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து வாசகர்கள் எந்தப் புத்தகத்தை வாங்குகிறார்களோ, எந்தப் புத்தகம்பற்றி அதிகமாகப் பேசுகிறார்களோ, அதுவே சிறந்த புத்தகம். அந்தப் பட்டியலில் என்னுடைய புத்தகங்கள் இருக்கின்றன. 

சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, அரசியல் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் என்று 35 ஆண்டுகளுக்கு மேலாக ரவிக்குமார் எழுதிக்கொண்டிருக்கிறார். தலித், போதி, மணற்கேணி என்று பத்திரிகைகளை நடத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு எந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கப்படவில்லை என்பதற்காக அவர் நல்ல எழுத்தாளர் இல்லை என்று அர்த்தமா? அதே மாதிரி அ. மார்க்ஸ், ஆர். ராமசாமி போன்றவர்களும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் என்ன விருது வழங்கப்பட்டிருக்கிறது? எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இதுவரை சாகித்ய அகாதெமி விருது வழங்கப்படவில்லை. வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. யார் நல்ல எழுத்தாளர்? யார் தரமற்ற எழுத்தாளர்? விருதுகள் இலக்கியத் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.

என்னை தலித் எழுத்தாளன் என்று சொல்லக் கூடாது. என்னுடைய எழுத்தை தலித் இலக்கியம் என்று வகைப்படுத்தக் கூடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறீர்கள். உங்களுடைய நிலைப்பாடு எந்த அளவுக்குச் சரியானது?

நான் மார்க்சியவாதி, பெண்ணியவாதி, பெரியாரியவாதி, தலித்தியவாதி, அம்பேத்காரியவாதி என்று அடையாளப்படுத்திக்கொள்வது அரசியல் ரீதியாக சரி. ஒரு நாவலாசிரியன் அப்படி அடையாளப்படுத்திக்கொள்வது சரியா? மார்க்சியவாதி, பெண்ணியவாதி என்ற அடையாளத்தோடு செயல்படுவது மனத் தடையை, சிந்தனைத் தடையை ஏற்படுத்தும். நம்மைச் சிந்தனை அடிமைகளாக்கும். பெண்ணியவாதி, தலித்தியவாதியை முழுமையாக ஏற்பதில்லை அல்லது சிந்தனையை ஏற்பதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டில் இருந்துகொண்டு மற்றொரு வீட்டைப் பற்றி தெரிந்துகொள்ளாமல் இருப்பதற்குச் சமமானது, நான் ஆன்மீக நம்பிக்கை அற்றவன், அதற்காக நான் பக்தி இலக்கியங்களைப் படிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். மதவாதத்தை நான் ஏற்பதில்லை அதற்காக நான் ராமாயணத்தை, மகாபாரதத்தைப் படிக்க மாட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஓர் எழுத்தாளனுக்குப் பொருள் முதல் வாதமும் தெரிய வேண்டும். பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்பதும் தெரிய வேண்டும். பெண்ணியம், தலித்தியம், ஆன்மீகம் எதைப் பேசுகிறது, நடைமுறையில் ஆன்மீகம் என்பது என்னவாக இருக்கிறது? என்பதும் தெரிந்திருக்க வேண்டும். மார்க்சியப் பார்வையில்தான் எழுதுவேன் என்பதும், பெண்ணிய, தலித்தியப் பார்வையில் மட்டும்தான் சிறுகதை, நாவல் எழுதுவேன் என்பதும் என்னை நானே ஒரு சிந்தனைக்கு, ஒரு தத்துவத்திற்கு அடிமையாக்கிக்கொள்வதற்கு சமம். நான் சிந்தனை அடிமையாக இருக்க மாட்டேன். அதனால்தான் நான் என்னை தலித் எழுத்தாளன் என்று சொல்லக் கூடாது, என்னுடைய எழுத்தைத் தலித் எழுத்து என்று சொல்லக் கூடாது என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டுவருகிறேன். ஒரு எழுத்தாளன் திறந்த மனதுடன் இருக்க வேண்டும். சமூக நிகழ்வுகளைச் சார்பற்ற நிலையில் அணுக வேண்டும்.

உங்களுடைய வாழ்க்கை லட்சியமாக எதைச் சொல்வீர்கள்?

சீக்கிரம் செத்துப்போவதுதான். செத்துவிடுவோம் என்பது தெரிந்தே உயிரோடிருப்பதுதான் சாகசம். அந்த சாகசத்தை ரொம்ப காலத்திற்கு நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அப்புறம் முடிந்தவரை ஆட்களுடன் பேசுவது, பழகுவது, எவ்வளவு முடியுமோ அவ்வளவு படிப்பது, இயன்றவரை ஊர்சுற்றுவது, மன அரிப்பு, சிந்தனைக் குழப்பம் ஏற்பட்டால் சிறுகதை, நாவல் எழுதுவது, முடிந்தவரை இலக்கியச் சண்டை போடாமல் இருப்பது, இலக்கியச் சர்ச்சையில் சிக்காமல் இருப்பது, யாரிடமும் கெட்டவன் என்று பெயர் எடுக்காமல் இருப்பது, எந்தச் சமயத்திலும் எழுத்தில் சமரசம் செய்துகொள்ளாமல் இருப்பது. விருதுக்காக யாருடைய காலிலும் விழாமல் இருப்பது.

உங்களுடைய பெத்தவன், ஆகாசத்தின் உத்தரவு, அம்மா, ஆஃபர், வீடும் கதவும், கடிதம் என்று பல கதைகள் நாடகமாக்கப்பட்டிருக்கின்றன. நாடகமாக்கியவர்கள் எந்த அளவிற்குச் சிறப்பாக நாடகமாக மாற்றியிருந்தார்கள்?

பெத்தவன் கதையை பேரா. ராஜீ தமிழகத்தின் பல பகுதிகளிலும் நாடகமாக நிகழ்த்திக் காட்டினார். விவசாயிகளின் மாநாட்டில் லயோலா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரிகளில் நாடகம் நிகழ்ந்தபோது பார்வையாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆகாசத்தின் உத்தரவு, போலீஸ் ஆகிய கதைகளையும் பேரா. ராஜீ, பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாடகத்துறையைச் சார்ந்த மாணவர்களைக் கொண்டு நாடகமாகப் பல இடங்களில் நிகழ்த்திக்காட்டினார். கூத்துப்பட்டறையைச் சார்ந்த பாஸ்கர் ‘அம்மா’ என்ற கதையையும், கூத்துப்பட்டறையின் சார்பில் ‘கடிதம்’ என்ற கதையையும் நாடகமாக்கினார்கள். பிரசன்ன ராமசாமி, ‘வீடும் கதவும்’, ‘ஆஃபர்’ ‘நன்மாறன் கோட்டைக் கதை’, ‘நறுமணம்’ ஆகிய கதைகளை மையமாகக் கொண்டு ‘கதையல்ல வாழ்க்கை’ என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளார். ‘போலீஸ்’ என்ற கதையை ‘எல்லா உயிர்க்கும்’ என்ற பெயரில் நாடகமாக்கியுள்ளார். எனக்குத் தெரிந்த வகையில் எல்லாருமே நல்ல விதமாகத்தான் நாடகமாக்கியிருந்தார்கள். நான் எதிலும் தலையிடுவதில்லை, அது அவர்களுடைய வடிவம் அதில் நான் தலையிடக் கூடாது. கதைகள் ஏற்படுத்திய தாக்கத்தில்தான் அவர்கள் நாடகப் பிரதியாக மாற்றுகிறார்கள், ரசனையின் அடிப்படையில் அவர்களுடைய நோக்கமும், ரசனையும், செயல்பாடும் உண்மை. அப்படி இருக்கும்போது அவர்களுடைய செயல்பாட்டில் நான் ஒருபோதும் தலையிட்டதில்லை, குறுக்கிட்டதில்லை அவ்வாறு குறுக்கீடு செய்வது நாகரீகமற்ற செயல்.


உங்களுடைய நாவல்களில், சிறுகதைகளில் எவையெல்லாம் பிரெயில் எழுத்தில் இருக்கிறது? பார்வை குறைபாடுடைய வாசகர்கள் உங்களுடைய எழுத்துகளை எந்த அளவிற்குப் படிக்கிறார்கள்? உங்களுடைய எழுத்துகள் குறித்து அவர்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது?

 ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘ஆறுமுகம்’, ‘எங் கதெ’ போன்ற நாவல்களும் ‘ஈசனருள்’ உள்ளிட்ட இருபதுக்கும் அதிகமான சிறுகதைகளும் பிரெயில் எழுத்தில் இருக்கிறது. மதுரையில் இருக்கக்கூடிய பார்வையற்றோர் நலச்சங்கம் வெளியிட்டது. அச்சில் வெளிவந்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே பிரெயிலியில் வெளிவந்துவிடும், உண்மையைச் சொன்னால் பார்வை திறன்கொண்டவர்கள் படிப்பதைவிட பார்வை குறைபாடு உடையவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள். ஆச்சரியப்படும்படிதான் அவர்கள் போனில் பேசுவார்கள். என்னுடைய நாவல்களும், சிறுகதைகளும் பிரெயிலியில் வருவதற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் ந. ரமணி.

நீங்கள் அதிகமாக விரும்பிப் படிக்கக்கூடிய எழுத்தாளர்கள் யார் யார்? எந்த மாதிரியான புத்தகங்களைப் படிக்கிறீர்கள்?

சில எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் வெளிவந்த உடனே வாங்கிப் படித்துவிடுவேன். நான் கட்டுரை நூல்களை அதிகமாகப் படிக்க மாட்டேன். நாவல்கள், சிறுகதைகள், கவிதை, மொழிபெயர்ப்பு நூல்களைத்தான் அதிகம் படிப்பேன். விருப்பமான எழுத்தாளர்கள், விருப்பமில்லாத எழுத்தாளர்கள் என்று நான் யாரையும் கூற மாட்டேன். ஓர் எழுத்தாளரின் ஒரு சிறுகதை, ஒரு நாவல் சரியில்லை என்பதால், அவர் மோசமான எழுத்தாளர் என்றாகிவிடாது. எல்லா விதமான புத்தகங்களையும் படிப்பதுதான் எழுத்தாளருக்கும் நல்லது. வாசகருக்கும் நல்லது. அம்பேத்காரின் எழுத்துகளை மார்க்சிய எழுத்தாளர்கள் மோற்கோளுக்காக மட்டுமே படிப்பார்கள். அம்பேத்காரியவாதிகள் மார்க்சியத்தை முழுமையாகப் படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. அதே மாதிரிதான் பெண்ணியவாதிகள், தலித்தியவாதிகள், பெரியாரியவாதிகள், நவீன இலக்கியவாதிகள் எல்லாம் ஒரு எல்லைக்கோட்டிலேயே நின்றுவிடுகிறார்கள். நவீன இலக்கியவாதிகள் திராவிட இயக்க இலக்கியத்தைப் படிக்க மாட்டார்கள். எனக்குத் தெரிந்தது, எனக்குப் பிடித்தமானது மட்டும்தான் உன்னதமானது உலகிலேயே சிறந்தது என்ற எண்ணம் எல்லாரிடமும் இருக்கிறது. அந்த எண்ணத்தை விட்டவன்தான் சிறந்த வாசகன், சிறந்த எழுத்தாளன்.

மொழிபெயர்க்கப்படும் எழுத்துகள், தரமான, நம்பகமான மொழிபெயர்ப்புகளாக இருக்கின்றனவா?

எழுத்தாளனைவிட மொழிபெயர்ப்பாளனுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. இரண்டு விதமான கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளையும் குறித்த தெளிவான பார்வை வேண்டும். நல்ல மொழிபெயர்ப்புகளும் வருகின்றன. மொழிபெயர்ப்பாளர் திறமை வாய்ந்தவராக இருந்தால் மோசமான படைப்பையும் தரமான படைப்பாக மாற்ற முடியும். மோசமான மொழிபெயர்ப்பாளர் தரமான படைப்பையும் மோசமாக்குவார். இரண்டுக்கும் நிறைய உதாரணங்கள் தமிழில் இருக்கின்றன. நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் என்று ஒரு பட்டியலையும், மோசமான மொழிபெயர்ப்பாளர்கள் என்று ஒரு பட்டியலையும் என்னால் தர முடியும். பிற மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கிறவர்கள் இருக்கிறார்கள். நம்முடைய பல தமிழ் எழுத்தாளர்கள் தங்களுடைய நூல்கள் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பாகி இருக்கிறது என்று சொல்லிப் பெருமைப்படுகிறார்கள். அது தரமான மொழிபெயர்ப்பில் வந்து இருக்கிறதா என்று அக்கறை கொள்வதில்லை.


இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

 ‘நெஞ்சறுப்பு’ என்ற ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘கடவுளைக் கைவிட்டவன்’ என்ற சிறுகதையை எழுதிக்கொண்டிருக்கிறேன். ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற நாவலின் இரண்டாவது பாகம் எழுதலாம் என்ற திட்டம் இருக்கிறது.

நீங்கள் எழுதவந்த காலத்தில் இருந்த இலக்கிய வகைமைக்கும் இப்போது இருக்கிற இலக்கிய வகைமைக்கும் வித்தியாசம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

நிறைய இருக்கிறது. மார்க்சிய எழுத்து, பெண்ணிய, தலித்திய, விளிம்பு நிலை எழுத்துகள் என்று உத்வேகத்துடன் செயல்பட்ட காலம் இருந்தது. இப்போது அது இல்லை. முன்பு சமூக மாற்றம் என்ற லட்சிய நோக்கம் எழுத்தாளர்களிடம் இருந்தது. அது இப்போது இல்லை. முகநூலில் பதிவிடுவது மட்டுமே இப்போது நோக்கமாக இருக்கிறது. நம்முடைய எழுத்தாளர்கள் முகநூல் பதிவாளர்களாக மாறிவிட்டார்கள். முக்கியமான கவி ஆளுமைகள் என்று போற்றப்பட்டவர்கள்கூட இன்று முகநூல் கவிஞர்களாக மாறிவிட்டார்கள். எழுத்தாளர்கள் இப்போது பதிப்பாளர்களாகவும் மாறிவிட்டார்கள், புதிய இலக்கியப் போக்கு என்பது இல்லை. சமூக மாற்றம் என்ற பேச்சே இல்லை. தற்போது இலக்கியப் பேச்சு, விவாதம், விமர்சனம் என்பதெல்லாம் முகநூலில் ஒருவருக்கொருவர் காறித்துப்பிக்கொள்வதாக மட்டுமே இருக்கிறது.

புதிதாக எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

நிறைய எழுதுங்கள், நிறைய படியுங்கள், நிறைய பேசாதீர்கள், எழுத்து என்பது இலக்கியம் என்பது மொழி என்பது தற்காலத்துக்கானது என்று எண்ணாதீர்கள்.

உங்களுடைய 14 நூல்களில் வாசகர்களுக்குப் பரிந்துரைக்கும் முதல் புத்தகம் எதுவாக இருக்கும்?

14 நூல்களையும்தான் சொல்வேன். நீங்கள் கேட்டதற்காக ‘இப்போது உயிரோடிருக்கிறேன்’ என்ற நாவலைச் சொல்வேன். 

உங்களுடைய நாவல்களிலேயே, உங்களால் திரும்பவும் எழுத முடியாது என்று எதைச் சொல்வீர்கள்?

 ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’. தமிழ், இலக்கியப் பரப்பில் அதிசயமான நாவல் செடல், அதே மாதிரி ‘எங் கதெ’. அப்படியொரு எழுத்து முயற்சி தமிழில் மேற்கொள்ளப்படவில்லை.

இதுவரை நீங்கள் எந்த இலக்கிய அமைப்புடனும் சேர்ந்திருந்ததில்லை, எந்த ஒரு இலக்கியக் குழுவுடனும், இலக்கியப் பத்திரிகையுடனும் அடையாளப்படுத்திக் கொண்டதில்லையே ஏன்?

ஓர் எழுத்தாளனுக்கு நீங்கள் சொன்னதெல்லாம் அவசியமற்றவை. அமைப்புக்கு அடையாளத்துக்கு எதிரானவன் எழுத்தாளன். மனதை, சிந்தனையை, எழுத்தைச் சுருங்கிப்போகச் செய்யும் எதையும் நான் செய்வதில்லை. என்னுடைய எழுத்து வாழ்க்கையில் நான் எந்த இடத்திலும் சமரசம் செய்துகொண்டதில்லை. யாருக்காகவும் எதன் பொருட்டும், இதுதான் என் எழுத்தின் மேன்மையான பகுதி என்று நான் கருதுகிறேன்.

இப்படிச் சொல்கிற நீங்கள்தான் “நான் திராவிட இயக்க எழுத்தாளன், தி.மு.க.க்காரன்” என்று பல இடங்களிலும் பேசி இருக்கிறீர்கள். அது எந்த விதத்தில் சரி?

நீங்கள் சொல்வது உண்மைதான். மறுக்கவில்லை. நான் விரும்புகிற அரசியல் நிலைப்பாட்டை ஒருபோதும் மறைத்ததில்லை. என்னுடைய எழுத்தில் அரசியல் இல்லை என்றும் சொன்னதில்லை. தமிழ்நாட்டை சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் என்று பல பரம்பரையினர் ஆண்டுள்ளனர். பொற்காலம் என்று சில பரம்பரையினரின் ஆட்சிக் காலம் சொல்லப்படுகிறது. வரலாற்றில், நான் முதன் முதலாகப் படிக்க வேண்டும், மனிதனாக வாழ வேண்டும் என்று சொன்னது. மற்றவர்களைப் போல் நானும் வாழ வேண்டும் என்று சொன்னது, இட ஒதுக்கீடு முறையைத் தமிழ்நாட்டில் கொண்டுவந்தது யார்? நீதிக்கட்சி, அடுத்ததாக திராவிடர் கழகம், அதற்கடுத்து தி.மு.க.தான் பேசிக்கொண்டிருக்கிறது. அதனால்தான் நான் திராவிட இயக்க எழுத்தாளன், தி.மு.க.காரன் என்று சொல்கிறேன். இந்த இடத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களும் எனக்காகப் போராடின என்பதைச் சொல்ல மறந்தால் நான் நன்றி கெட்டவன் என்று அர்த்தம். நான் திராவிட இயக்க எழுத்தாளன், தி.மு.க.க்காரன் என்றாலும் நான் என் எழுத்தில் சமரசம் செய்துகொண்டதில்லை என்பது நட்டுக்கே தெரியும். நான் யாருக்காகவும், எந்தச் சூழ்நிலையிலும், எதன் பொருட்டும் எழுத்தில் சமரசம் செய்துகொண்டதில்லை. இனி மேலும் செய்துகொள்ள மாட்டேன்.

உங்களுடைய நாவல்களில் சிறுகதைகளில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் என்றுதான் நிறைந்திருக்கிறார்கள். இதை திட்டமிட்டே செய்கிறீர்களா? படித்தவர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் உங்கள் எழுத்தில் அதிகம் இடம்பெறுவதில்லை. அது முறையாகத் தெரியவில்லையா?

நீங்கள் என்னுடைய சிறுகதைகளை, நாவல்களைச் சரியாகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. ‘எங் கதெ’ நாவலில் வரும் கமலா, சி.இ.ஒ. அம்பலவாணன் என்று எல்லாருமே படித்தவர்கள்தான். ‘வீடும் கதவும்’ கதையில் வரக்கூடிய இரண்டு பெண்களுமே நன்றாகப் படித்தவர்கள்தான். ‘ஆஃபர்’ கதையில் வரக்கூடியவர்கள் படித்தவர்கள்தான். ‘செல்லாத பணம்’ நாவலில் வரும் பல பாத்திரங்கள் திறமையானவர்கள்தான் படித்தவர்கள்தான். ஆகவே, படிக்காதவர்களை மட்டுமே நான் எழுதுகிறேன் என்பது உண்மையல்ல. ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘செல்லாத பணம்’ நாவலில் வரக்கூடிய பல பாத்திரங்கள் உயர் வகுப்பைச் சார்ந்தவர்களே. ‘ஈசனருள்’ கதையில் வரக்கூடிய சந்திரோதயம் மேல் இனத்துப் பெண்தான். நான் கதை எழுதும்போது சாதி பார்த்து கதை எழுதுவதில்லை. வர்க்கம் பார்த்து கதை எழுதுவதில்லை. மேல்தட்டு வர்க்கமோ, கீழ்த்தட்டு வர்க்கமோ - மனிதர்கள் வாழும் சூழ்நிலையைத்தான் நான் கதையாக எழுதுகிறேன். குறிப்பாக, மனித மனங்களின் காயங்களை, குரூரங்களை, கண்ணீரைத்தான் நான் கதையாக்குகிறேன். நாவலாக்குகிறேன். நீங்கள் சொல்கிற பொருளில் நான் இதுவரை ஒரு சிறுகதையோ ஒரு நாவலையோ எழுதியதில்லை.


புத்தம் பேசுகிறது 

இதழ் : ஏப்ரல் 2022 

பிரதிபா ஜெயசந்திரன்