சனி, 20 மே, 2023

எஸ் சார் - இமையம் (சிறுகதை)

                                                எஸ் சார் - இமையம்


பணியாளர் கதவைத் திறந்துவிட, ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இருந்த பார்வையாளர்கள் காத்திருப்பு அறைக்குள் வந்தார் டி.ஜி.பி. பணியாளர் தண்ணீர் பாட்டில், காபி, ஸ்நாக்ஸ் என்று எடுத்துக்கொண்டு வந்து டீபாயில் வைத்தார். “காபி கலக்கட்டுமா ஐயா?” என்று பணியாளர் கேட்டதற்கு, “வேண்டாம்” என்று சிடுசிடுப்புடன் சொன்னார். சத்தம் எழுப்பாமல் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார் பணியாளர். தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியைத் திறக்க ஆரம்பித்தார் டி.ஜி.பி. அப்போது பணியாளர் கதவைத் திறந்துவிட தலைமைச் செயலாளர், அறைக்குள் வந்ததைச் சற்றும் எதிர்பார்க்காத டி.ஜி.பி., “குட் ஈவினிங் சார்” என்று சொல்லிவிட்டு எழுந்து நின்று சல்யூட் அடித்தார்.

“ப்ளீஸ் சிட் டவுன்” என்று சொல்லிவிட்டு சோபாவில் உட்கார்ந்தார் தலைமைச் செயலாளர். அவருக்கு எதிரில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார் டி.ஜி.பி.

“வாட் எ சர்ப்ரைஸ்” டி.ஜி.பி. சொன்னார். அப்போது பணியாளர் தண்ணீர் பாட்டில், காபி, ஸ்நாக்ஸ் என்று எடுத்துக்கொண்டு வந்து தலைமைச் செயலாளர் உட்கார்ந்திருந்த சோபாவிற்கு எதிரில் இருந்த டீபாயில் வைத்துவிட்டு மிகவும் சன்னமான குரலில், “காபி கலக்கட்டுமா ஐயா?” என்று கேட்டார். 

“வேண்டாம்.” தலைமைச் செயலாளர் சொன்னதும் பணிவுடன் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனார் பணியாளர்.

“எனிதிங் ஸ்பெஷல் சார்.” டி.ஜி.பி. கேட்டார்.

“சார் பாக்கணும்னு சொன்னாரு. ஃபைவ் டென்னுக்கு அப்பாயிண்மண்ட்னு கவர்னரோட செகரட்டரி சொன்னாரு.” தலைமைச் செயலாளர் சொன்னதைக் கேட்டு வியந்துபோன டி.ஜி.பி., “அஞ்சி மணிக்கு வரச் சொல்லி எனக்கும் அவர்தான் போன் பண்ணி சொன்னார்” என்று சொன்னார்.

“அப்படியா” என்று கேட்ட தலைமைச் செயலாளர் மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துவிட்டு மீண்டும் போட்டுக்கொண்டார்.

“ஒங்களையும் என்னையும் ஒரே நேரத்தில் வரச் சொன்னது புதுசாவும் இருக்கு, ஆச்சரியமாவும் இருக்கு.” டி.ஜி.பி. சொன்னதற்குத் தலைமைச் செயலாளர் சன்னமான குரலில், “எஸ்” என்று மட்டும் சொன்னார். சாதாரணமாகத் தலைமைச் செயலாளர் அதிகம் பேச மாட்டார். இவர் மட்டுமல்ல பொதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே அப்படித்தான். கோபத்தை, அதிகாரத்தைப் பார்வையில் மட்டும்தான் காட்டுவார்கள். ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரிகள் அவர்களுக்கு நேரெதிர். தனக்குக் கீழே இருக்கிற அதிகாரிகளை டி.எஸ்.பி.களாக இருந்தாலும் ‘இடியட்’ என்று சொல்லித் திட்டுவார்கள். மிரட்டுவதன் மூலமாகவே தங்களுக்கான அதிகாரத்தைக் காட்டுவார்கள். 

“சென்ட்ரல் கவர்மண்ட்டுலயிருந்து ஏதாவது ரகசியமா சர்க்குலர் அனுப்பி இருக்காங்களா?”

“இதுவர என்னோட நாலேஜிக்கு எதுவும் வரல.” தலைமைச் செயலாளர் பட்டும்படாமலும் சொன்னார். அவர் எப்போதுமே இப்படித்தான் பதில் சொல்வார். அவருடைய பதிலிலிருந்து யாரும் எதையும் அனுமானித்துவிட முடியாது.

“சாதாரணமா கவர்னர் ஆட்சி நடக்கும்போதுதான் சீஃப் செகரட்டரியையும் டி.ஜி.பி.யையும் ஒரே நேரத்தில் வரவழைச்சிப் பேசுவாங்க. இவரு கொஞ்சம் வித்தியாசமா இருக்காரு. ஸ்டேட் கவர்மண்ட் ‘ஆ’ன்னா சென்ட்ரல் கவர்மண்ட் ‘ஊ’ங்குறாங்க, சென்ட்ரல் கவர்மண்ட் ‘ஆ’ன்னா ஸ்டேட் கவர்மண்ட் ‘ஊ’ங்குறாங்க. நடுவுல இந்த கவர்னரு வேற, இதுவர எந்த கவர்னரும் செய்யாத புது பாலிட்டிக்ஸ் பண்றாரு. பொலிட்டிக்கல் பார்ட்டிங்கக்கிட்ட மாட்டிக்கிட்டு நாமதான் சாக வேண்டியிருக்கு.” 

டி.ஜி.பி. சலிப்பாகச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, “சி.எம்.க்குத் தகவல் சொல்லிட்டீங்களா?” என்று தலைமைச் செயலாளர் கேட்டார்.

“எஸ் சார்.”

“நானும் சொல்லிட்டுத்தான் வந்தன்.” தலைமைச் செயலாளர் சொல்லிக்கொண்டிருக்கும்போது பணியாளர் கதவைத் திறந்துவிட ஆளுநரின் செயலாளர் அறைக்குள் வந்தார்.

“ஹலோ சார்” என்று சொல்லிவிட்டு தலைமைச் செயலாளருக்குப் பக்கத்தில் இருந்த சோபாவில் ஆளுநரின் செயலாளர் உட்கார்ந்தார். அவரும் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். எத்தனை ஆளுநர்கள் மாறிமாறி வந்தாலும் அத்தனை ஆளுநர்களுக்கும் தனிச் செயலாளராகவும், பிடித்தமான செயலாளராகவும் இருக்கிற வித்தை அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 

 “காபி சாப்பிட்டீங்களா?” ஆளுநரின் செயலாளர் கேட்டார். அவர் கேட்ட விதம் ஸ்டார் ஹோட்டலில் வரவேற்பாளராக இருக்கும் பெண் கேட்பதுபோல இருந்தது. 

“எஸ்” என்று தலைமைச் செயலாளர் சொன்னதும், நாட்டில் நடக்கிற விஷயங்கள் எதுவுமே தனக்குத் தெரியாது என்பதுபோல, “வேலை எப்படிப் போகுது?” என்று ஆளுநரின் செயலாளர் கேட்டார்.

“குட். வழக்கம்போலத்தான்” என்று தலைமைச் செயலாளர் நாடகப் பாணியில் சொல்லி முடித்ததும், டி.ஜி.பி. “எனிதிங் ஸ்பெஷல்?” என்று ஆளுநரின் செயலாளரிடம் கேட்டார்.

“நத்திங்” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். ஆளுநரின் செயலாளர் சிரித்த விதம் சினிமா நடிகை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்போது  சிரித்தது போல் இருந்தது.

“ஒன் மினிட் ப்ளீஸ், சார்கிட்ட கேட்டுட்டு வந்திடுறன்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே போனார் ஆளுநரின் செயலாளர். போன வேகத்திலேயே திரும்பிவந்து டி.ஜி.பி.யைப் பார்த்து, “சார் கூப்பிடுறாங்க. ப்ளீஸ் கம்” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார். அவருக்குப் பின்னால் டி.ஜி.பி., தன்னுடைய உடை, இடுப்பில் போட்டிருந்த பெல்ட், தலையிலிருந்த தொப்பி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்துவிட்டு, உடலை விறைப்பாக்கிக்கொண்டு போனார். 

ஆளுநரின் இருக்கைக்குப் பத்திருபதடி தூரம் தள்ளி நின்றுகொண்டு உச்சபட்ச உயர் அதிகாரிகளுக்கு எப்படி சல்யூட் அடிக்க வேண்டுமோ அதே முறையில் சல்யூட் அடித்தார். அதே நேரத்தில் சத்தம் வராமல் பார்த்துக்கொண்டார். அப்போது ஆளுநரின் செயலாளர் அறையைவிட்டு வெளியே போனார். மணலில் பாம்பு ஊர்ந்து போகும்போது எப்படிச் சத்தம் உண்டாகாதோ அதே மாதிரிதான் ஆளுநரின் செயலாளர் வெளியே போகும்போது சிறு சத்தமும் எழவில்லை. காற்றின் அசைவுகூட இல்லை.

“நேத்து என்னோட புரோகிராம் ஷெடியூல் உங்களுக்குத் தெரியும்தான?” ஆளுநர் கேட்டார்.

அதிகப்படியான மரியாதை வெளிப்படும் குரலில் டி.ஜி.பி. சொன்னார். “எஸ் சார்.”

“நேத்து பட்டமளிப்பு விழாவுக்கு யூனிவர்சிட்டிக்குப் போய்க்கிட்டு இருக்கும் போது ரெண்டு மாடுங்க குறுக்க வந்துடுச்சி. டிரைவர் பிரேக் போட்டான். அடுத்த பத்தாவது நிமிஷத்துல பன்றிங்க கூட்டமா ரோட்ட கிராஸ் பண்ணுதுங்க. டிரைவர் பிரேக் போட்டான். ஒரு ஆளு பொறுமையா மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டுப் போறான். ஹாரன் அடிச்சா மாடுங்க ஒதுங்க மாட்டங்குது. தெரியுமா?”

“எஸ் சார். நோ சார். சாரி சார். செக்யூரிட்டிய டைட் பண்ணியிருந்தன் சார்.”

“என்னத்தப் பண்ணியிருந்திங்க மிஸ்டர்” ஆளுநரின் குரலில் நக்கல் இருப்பது தெரிந்தது. முன்பைவிடக் கூடுதல் கவனத்துடன் ஆளுநரைப் பார்த்தார் டி.ஜி.பி. ஆளுநரின் அலுவலக அறை பெரிய பங்களா அளவுக்குப் பிரம்மாண்டமாக இருந்தது. அவ்வளவு பெரிய இடத்தில் ஆளுநர் உட் கார்ந்திருந்தது ஒரு பூச்சி உட்கார்ந்துகொண்டிருப்பதுபோல் தெரிந்தது. தானும் ஒரு பூச்சியைப் போலத்தான் நின்றுகொண்டிருக்கிறோம் என்று நினைத்தாலும் உடலை விறைப்பாக்கிக்கொண்டு டி.ஜி.பி. சொன்னார்: “எஸ் சார், சாரி சார். இனிமே அப்படி நடக்காம பாத்துகிறது என்னோட டூயூட்டி சார்.”

“நடந்த பிறகு பாத்துக்கிறதுக்கு நீங்க எதுக்கு டி.ஜி.பி.யா இருக்கணும்.” ஆளுநரின் குரலில் சூடேறியிருப்பது டி.ஜி.பி.க்கு நன்றாகவே தெரிந்தது. ‘மாடு எப்ப குறுக்க வரும், பன்றிங்க எப்ப ரோட்ட கிராஸ் பண்ணும்னு எப்படி சார் தெரியும்? தெரிஞ்சாலும் அதப் பாக்கிறதா சார் போலீஸோட வேல’ என்று டி.ஜி.பி.க்குக் கேட்கத் தோன்றியது. மனதிலிருந்ததைக் கேட்கவில்லை. கடைநிலை ஊழியர் மாதிரி மிகவும் பணிவான குரலில், “எஸ் சார். யூனிவர்சிட்டி இருக்கிற இடம் ஃபாரஸ்ட் ஏரியா. அதனால தவறு நடந்துடுச்சி. இனிமே இப்படி நடக்காது. ஐயாம் ஸ்ஷுயூர் சார்” என்று சொன்னார்.

மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வேகமாக விட்டெறிவதுபோல் மேசைமீது வைத்தார். ஆளுநர் கண்ணாடியைக் கழற்றி வைத்த விதம் அவர் ரொம்பவும் கோபத்தில் இருக்கிறார் என்பதைக் காட்டியது. நாமாகப் பேச வேண்டாம். அவராகப் பேசட்டும் என்று டி.ஜி.பி. காத்துக்கொண்டிருந்தார். கேட்டால் மட்டும்தான் வாயைத் திறக்க வேண்டும் என்று டி.ஜி.பி.யே தனக்குக் கீழே வேலை செய்கிற அதிகாரிகளிடம் அடிக்கடிச் சொல்வார். உயர் அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும்தான் கீழ் அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும். கேட்காத கேள்விகளுக்குப் பதில் சொல்வதோ, தானாகவே ஒரு வார்த்தை கூடுதலாகப் பேசுவதோ குற்றம் என்பதுதான் காவல்துறையின் நடைமுறை. அதிகாரம் செய்தலும் கீழ் பணிதலும்தான் காவல்துறையின் சட்டம்.  அதைச் சரியாகவே டி.ஜி.பி. கடைப்பிடித்தார். பேச்சில் மட்டுமல்ல, அவர் நின்றுகொண்டிருந்த விதமும் காவல்துறையின் நடைமுறைபடியே இருந்தது. ஆளுநரின் முகத்தைத் தவிர அறையிலிருந்த பொருட்களை, சுவரில் மாட்டப்பட்டிருந்த நவீன ஓவியங்களை, பிரதமர், ஜனாதிபதி, பழைய ஆளுநர்களின் புகைப்படங்களைக்கூட அவர் பார்க்கவில்லை. ஐ.பி.எஸ். பயிற்சியின் போதுகூட அவர் தன்னுடைய உடலை இவ்வளவு விறைப்பாக வைத்துக்கொண்டு நின்றதில்லை. சாதாரணமாக ஆளுநரை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சந்திக்க வரும்போது உட்காரவைத்துப் பேசுவதுதான் நடைமுறை. டீ கொடுப்பது வழக்கம். ஆனால், ஆளுநர் ‘உட்காருங்கள்’ என்றுகூடச் சொல்லாதது வருத்தமாக இருந்தது. ஆனால் அதை வெளிகாட்டாமல் சாமி சிலையின் முன் நிற்பதைவிடவும் கூடுதலான பயபக்தியுடன் நிற்பதுபோல் டி.ஜி.பி. நின்றுகொண்டிருந்தார்.

“போகும்போதுதான் நான்சென்ஸா இருந்ததுன்னா, திரும்பி வரும்போது ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு, குரங்குங்க அங்கங்க கூட்டம் கூட்டமா நடுரோட்டுல ஒக்காந்திருக்குது. ஹாரன் அடிச்சாலும் போகல. கார ஸ்லோ பண்ற நேரத்தில ரெண்டு மானுங்க குறுக்க ஓடுது. அந்த நான்சென்ஸ் டிரைவர் அடிக்கடி பிரேக் போடுறான்.” ஆளுநர் பல்லைக் கடிக்கிற சத்தம் கேட்டதும் டி.ஜி.பி.யின் உடல் மேலும் விறைப்பானது. அவர் நின்றுகொண்டிருந்த விதம் ஒரு இரும்புக் கம்பியை நிறுத்திவைத்ததுபோல் இருந்தது. மாநிலத்தின் மொத்த போலீஸும் சட்டம் ஒழுங்கும் தன்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆனால், எங்கு வந்து எப்படி நின்றுகொண்டிருக்கிறோம்? அதிகாரத்தின் வலிமை என்ன என்பதையும், அதிகாரத்தின் முன்பு நின்றுகொண்டிருக்கிறோம் என்பதையும் முழுமையாக உணர்ந்தவராக டி.ஜி.பி. நின்றுகொண்டிருந்தார்.

“எனக்கு எதுவும் தெரியாதுன்னு நெனைக்கிறிங்களா மிஸ்டர்? நான் ரெண்டாவது முறையா கவர்னரா இருக்கன் தெரியும்தான?” ஆளுநரின் குரலில் வேகம் கூடியிருப்பது நன்றாகவே தெரிந்தது. மொழுமொழுவென்றிருந்த அவருடைய கன்னத் தசைகள் துடிப்பது தெரிந்தது.

“எஸ் சார்.”

“ரூட்ட முடிவு செஞ்சது யாரு? 

டி.ஜி.பி.யால் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., டி.ஐ.ஜி.யைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்று நினைத்தார். கொஞ்ச நேரம் கழித்து சத்தமில்லாமல் சொன்னார்: “அது கொஞ்சம் ஃபாரஸ்ட் ஏரியா சார்.” 

“ஃபாரஸ்ட் ஏரியாவுல யார் யூனிவர்சிட்டியக் கட்டச் சொன்னது?” கோபமாகக் கேட்டார் ஆளுநர். 

பல்கலைக்கழகம் கட்டுவது காவல்துறையின் கட்டுப்பாட்டில வராது. அது மாநில அரசின், ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று சொல்லலாமா? உயர் அதிகாரிகளின் முன், அதிகாரத்தின் முன் கூடுதலாகப் பேசுவது குற்றச்செயல், அது பதவியைக் காலி செய்துவிடும் என்று அவருடைய போலீஸ் மூளை சொன்னதும் பேசாமலிருந்தார் டி.ஜி.பி.

“டைரக்ட்டா எஸ்.பி.யா?”

“எஸ் சார்.”

“ட்ரெயினிங்கில ஒண்ணும் சொல்லித் தரலியா?”

“...”

“போயி டூயூட்டிய ஒழுங்கா பாருங்க.”

“எஸ் சார். தேங்க் யூ சார். அது ஃபாரஸ்ட் ஏரியாங்கிறதாலதான் தவறு நடந்துடிச்சி. கன்சர்ன் ஆபிசர்ஸ் மேல இன்னிக்கே நடவடிக்க எடுத்துடுறன் சார்.” டி.ஜி.பி.யின் குரலில் முழுமையான பணிவு நிறைந்திருந்தது.

“ஃபாரஸ்ட் ஏரியாவாவே இருக்கட்டுமே. கவர்னரோட காருக்கு முன்னால மாடு போறதும், பன்றிங்க போறதும், மாட்டு வண்டி போறதும், மான் ஓடுறதும், கூட்டம்கூட்டமா குரங்குங்க ஒக்காந்திருக்கிறதும் சரியா? கவர்னருக்கும், கவர்னரோட காருக்கும் என்ன மரியாத? அந்த ரூட்டுல இந்த மாதிரி இருக்கும்னு போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு முன்னாடியே தெரியும்தானே. அதுக்காக என்ன நடவடிக்க எடுத்திங்க? லோக்கல்ல என்ன நடக்குது, என்ன இருக்குதுன்னு தெரியாம எதுக்கு டி.ஜி.பி.யா இருக்கிங்க? கவர்னர கார்ல ஒக்கார வச்சிக்கிட்டுத்தான் ரோட்டுல இருக்கிற டிஸ்டபென்ஸ கிளியர் பண்ணுவாங்களா? அதுக்குப் பேர்தான் செக்யூரிட்டியா? போலீஸ் டிபார்ட்மண்டா?” 

“இனிமே அப்படி நடக்காது சார்” சத்தியம் செய்வதுபோல சொன்னார். டி.ஜி.பி. சிறிது நேரம் பேசாமல் இருந்தார். “உங்க அனுமதியோட ஒரு வார்த்த பேசலாமா சார்?” கடைநிலை ஊழியர் மாதிரி அனுமதி கேட்டார். முகத்தைச் சுளித்துக்கொண்டே, வேண்டா வெறுப்பாக, “சொல்லுங்க” என்று ஆளுநர் சொன்னார்.

“இனிமே சாரோட புரோகிராம் எல்லாத்தயும் என்னோட நேரடிக் கட்டுப்பாட்டுல வச்சி நானே பாத்துக்கிறன் சார். அதே மாதிரி சாரோட கார் போற ரூட்ல குரங்கு இருக்கா, மான் இருக்கா, பன்றிங்க இருக்கா, ஆடுமாடுகள் இருக்கானு செக் பண்ண தனியா ஒரு டீம் போட்டுடுறன். குரங்கப் புடிக்கிறதுக்கு, மானப் புடிக்கிறதுக்கு வலையோட ஒரு டீம் போடுறன். ஆடு, மாடு, பன்றி வச்சியிருக்கவங்கக்கிட்ட முன்னாடியே அலர்ட் பண்ணிடுறன். மாட்டு வண்டி, டயர் வண்டி, லோடு வண்டினு எதுவும் போகாம பாத்துக்கிறன் சார். சாரோட புரோகிராமுக்கு முதல் நாளிலிருந்து புரோகிராம் முடிஞ்ச மறுநாள் வரைக்கும் ஆடுமாடுகள வீட்டிலியே கட்டி வச்சியிருக்கணும். கோழியக் கூண்டவிட்டு வெளிய விடக் கூடாது. பன்றியிருந்தா காட்டுக்கு ஓட்டிக்கிட்டுப் போயிடணும். மீறுறவங்க மேல தேச விரோத வழக்கு, குண்டாஸ் போடப்படும்னு இன்னிக்கே ஆர்டர் போட்டு எல்லா எஸ்.பி.களுக்கும் அனுப்பிடுறன். சாரோட கார் போகும்போது வானத்தில காக்கா, குருவினு எது பறந்தாலும் முன்கூட்டியே சுடச் சொல்லிடுறன். ரோட்டுல ஈ, எறும்பு இருந்தாக்கூடப் பூச்சி மருந்து தெளிக்கச் சொல்லிடுறன். தெரு நாயிங்க இருந்தா அதுகளப் புடிக்கிறதுக்கு நாய் வேன் ஒண்ணு அரேன்ஞ் பண்ணிடுறன் சார். ஒங்களோட பாதுகாப்புத்தான் சார் எங்களுக்கு முக்கியம். ஒங்களப் பாதுகாக்கறதுக்காகத்தான் நாங்க இருக்கம். ஏன்னா அது நாட்டோட பாதுகாப்பு, கௌரவம்” என்று சொன்ன டி.ஜி.பி.க்குத் தான் அதிகமாகப் பேசிவிட்டோமே என்ற கவலை வந்தது. ஆளுநர் என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்காக அவருடைய முகத்தையே உற்றுப் பார்த்தார். ஆளுநரின் முகத்தில் எந்தச் சலனமுமில்லை. 

“என்ன செய்யனுமோ செய்ங்க.” ஆளுநர் வேண்டாவெறுப்பாகச் சொன்னார்.

“எஸ் சார்.”

“நீங்க போகலாம்.”

“தேங்க் யூ சார்” என்று சொன்ன டி.ஜி.பி. எந்த அளவிற்குத் தன்னுடைய உடலை விறைப்பாக்கிக்கொண்டு சல்யூட் அடிக்க முடியுமோ அந்த அளவிற்கு ஆளுநருக்கு சல்யூட் அடித்தார். பிறகு, தண்ணீருக்குள் மீன் போவதுபோல எந்தச் சத்தமும் எழாமல் அறையைவிட்டு வெளியே வந்தார். முன்பு உட்கார்ந்திருந்த அறைக்குள் வந்தார். அறையில் தலைமைச் செயலாளர் மட்டும்தான் இருந்தார். டி.ஜி.பி. வெளியே வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்ததுபோல எங்கிருந்தோ அறைக்குள் வந்த ஆளுநரின் செயலாளர், “ப்ளீஸ் கம் சார்” என்று சொன்னார். தலைமைச் செயலாளர், எஜமானருக்குப் பின்னால் போகும் பணியாளர் மாதிரி ஆளுநரின் செயலாளருக்குப் பின்னால் போனார். 

டி.ஜி.பி. டீபாய் மீதிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்தார். அவருக்கு இன்னும் ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும்போல் இருந்தது. தலையிலிருந்த தொப்பியை எடுத்து டீபாயின் மீது வைத்தார். வியர்த்துவிட்டதோ என்ற சந்தேகத்தில் நெற்றியை, கழுத்தின் பின்பகுதியைத் தடவிப்பார்த்தார். லேசாக ஈரமாக இருப்பதுபோல உணர்ந்தார். இடுப்பு பெல்ட், நெஞ்சுக்கிடையே குறுக்காகப் போட்டிருந்த பெல்ட், இறுக்கமாக இருப்பதுபோல் தெரிந்ததால் லேசாகத் தளர்த்திவிட்டார். கிளம்பி போய்விடலாமா? என்று யோசித்தார். தலைமைச் செயலாளர், ஆளுநரின் அறைக்குள் இருக்கும்போது சொல்லாமல் போவது சட்டச் சிக்கலாகிவிடும் என்று நினைத்தார். “ஐ.ஏ.எஸ். பசங்களே திமிர் பிடிச்சவனுங்க. ட்ரான்ஸ்ஃபர் பண்ற அதிகாரம் அவங்கக்கிட்டதான இருக்கு” என்று சொல்லி முனகினார்.

டி.ஜி.பி.யாகப் பதவி உயர்வு பெற்று நான்காண்டுகள் முடிந்துவிட்டது. ஆனாலும் அதிகாரம்மிக்க மாநில சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாகவோ, மாநில தலைநகரின் கமிஷனராகவோ பதவி வகிக்கவில்லை. ஓய்வுபெற இருக்கிற காரணத்தினால்தான் அவருக்குக் கடைசியாகப் பாவம் பார்த்து சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாகப் பதவி கொடுத்தார்கள். அதுவும் மூன்று மாதமே இருக்கும்போது, அவர் ஓய்வுபெறுவதற்கு இன்னும் முப்பத்தி ஆறு நாட்களே இருக்கின்றன. இந்த நேரத்தில் இப்படியொரு சிக்கல் வந்துவிட்டதே என்று நினைத்த டி.ஜி.பி.க்குச் சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி.யின் மீது ஆத்திரம் உண்டானது. “இடியட்” என்று சொன்னார்.

ஐந்து, பத்து நிமிடங்களிலேயே தலைமைச் செயலாளர் திரும்பிவந்த தலைமைச் செயலாளர், “நீங்க இன்னும் போகலியா?” கேட்டுக்கொண்டே களைப்படைந்த மாதிரி தளர்ந்துபோய் சோபாவில் உட்கார்ந்தார்.

“சார்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு இருந்தன் சார்.” டி.ஜி.பி. சொன்னார். 

“வேல முடிஞ்சா போக வேண்டியதுதான? எதுக்கு ஃபார்மலிட்டிஸ்” என்று சொல்லிவிட்டுத் தலைமைச் செயலாளர் சிரிக்க முயன்றார். அவருக்குச் சிரிப்பு வரவில்லை. அவர் சிரித்துப் பேசி இதுவரை யாரும் பார்த்ததில்லை என்று தலைமைச் செயலகத்தில் பேச்சு இருந்தது. அவர் யாருக்கும் நன்மை செய்ய மாட்டார். அதே மாதிரி தனக்கும் செய்துகொள்ள மாட்டார். அவரிடம் ஒரு ஃபைலில் கையெழுத்து வாங்குவது எளிதல்ல என்பது தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிற கடைநிலை ஊழியர்கள்வரை தெரியும். ‘மிஸ்டர் கிளின்’ என்ற பெயருக்காகப் பிச்சைக்கூடப் போட மாட்டார். அவர் தலைமைச் செயலகத்திற்கு வரும்போதும் போகும்போதும், ‘ரூல்ஸ் வருது, ரூல்ஸ் போவுது’ என்று கடைநிலை ஊழியர்கள்கூடக் கிண்டலடிப்பார்கள்.

டி.ஜி.பி.க்கு ஆளுநர் என்ன சொன்னார் என்று கேட்க வேண்டும்போல இருந்தது. கேட்டாலும் சொல்ல மாட்டார் என்பது நன்றாகவே தெரியும் என்றாலும், “எனிதிங் ராங் சார்?” என்று கேட்டார்.

“வெளியே போயிடலாமா?”

“எஸ் சார்” என்று டி.ஜி.பி. சொன்னதும் எழுந்து நின்ற தலைமைச் செயலாளர், “நேத்து புரோகிராம்ல ஏதாவது பிரச்சனயா?” என்று கேட்டார். டி.ஜி.பி.யும் எழுந்து நின்றுகொண்டு, “நேத்து சார் போகும்போது மாடு, பன்றிங்கனு குறுக்க வந்திருக்கு. திரும்பி வரும்போது ரோட்டுல குரங்குங்க இருந்திருக்கு. மாட்டு வண்டி போயிருக்கு. மான் குறுக்க ஓடியிருக்கு. டிரைவர் பிரேக் போட்டிருக்கான்” என்று சொன்னார். 

“ஓ” என்று தலைமைச் செயலாளர் சொன்னார்.

“அனிமல்ஸுக்கு மாநில மந்திரியோட காரு, மத்திய மந்திரியோட, கவர்னரோட, முதலமைச்சரோட, பிரதமரோட, ஜனாதிபதியோட, நீதிபதியோட காருனு தெரியுமா சார்?” என்று கேட்டார் டி.ஜி.பி. 

 “---"

“மனுசனுக்குத்தான் கவர்னர், முதலமைச்சர், பிரதமர், ஜனாதிபதி, எம்.எல்.ஏ., எம்.பி., ஸ்டேட் மினிஸ்டர், சென்ட்ரல் மினிஸ்டர் தேவ. போலீஸ், கோர்ட், நீதிபதி தேவ. பணம், செல்வாக்கு, அதிகாரம் தேவ. இதெல்லாம் அனிமல்ஸுக்கு என்ன தெரியும்? கொரானா காலத்தில சனங்க சோத்துக்கு இல்லாம செத்துக்கிட்டிருந்தப்பதான் நம்ப நாட்டுல ஒரு கட்சியோட தலைவரு ஒரே ஒரு நாள் போட்டுக்கிற கோட்டுக்காக பதிமூணு லட்சம் செலவு செஞ்சாரு. எதனால? அதிகாரத்தினாலதான்” என்று சொல்லி டி.ஜி.பி. முடிப்பதற்குள்ளாகவே அவசரப்பட்ட மாதிரி, “பாலிடிக்ஸ் வேண்டாம் ப்ளீஸ்” என்று தலைமைச் செயலாளர் சொன்னார். அவருடைய குரலில் எச்சரிக்கையும் அதிகாரத் தொனியும் வெளிப்பட்டது. 

“எஸ் சார்.”

“கவர்னர் கேட்டதுக்கு என்ன சொன்னிங்க?”

“கவர்னர் எந்த ரூட்டுல போனாலும், அந்த ரூட்டுல குரங்கு இருந்தாலும், மான் இருந்தாலும் புடிக்கறதுக்கு வளையோட ஒரு போலீஸ் டீமயே போடுறன். ஆடு, மாடு, பன்றி வளர்க்கிறவங்க வீடுகளுக்கு ஒரு போலீஸுனு போட்டு, ஆடு, மாடுகள எதயும் அவிழ்த்துவிடாம பாத்துக்கிறனு சொல்லி அஷ்யூரன்ஸ் கொடுத்திருக்கன்.”

“குட்” தலைமைச் செயலாளர் சொன்னார். அவர் சொன்ன விதம் இதுதான் சரியான சட்ட ரீதியான நடவடிக்கை என்பது போலிருந்தது.

“ஒரு சின்னத் தகவல் சார்.”

“நாம வெளிய நின்னுகூடப் பேசலாம். ஜர்னலிஸ்ட்ங்க பாத்தாங்கன்னா சீஃப் செகரட்டரியும், டி.ஜி.பி.யும் கவர்னரை ஒன்றாகச் சந்தித்தனர்னு நியூஸ் போட்டு பெரிய புரளியக் கிளப்பிடுவாங்க. அதிலயும் யூடியூப் சேனல்காரங்களுக்குக் குண்டூசி கீழ விழறதும் இப்ப நியூஸ்தான். அதுக்குப் பயந்துகிட்டுத்தான் ரூமுலியே பேச வேண்டியிருக்குது. ரூலிங் பார்ட்டிக்குப் பயப்படுறமோ இல்லியோ, மீடியா பீப்பில்ஸுக்கு பயந்து சாக வேண்டியிருக்கு. இதுதான் அதிகாரத்தோட மர்மம். அதிகாரத்தோட தன்மை. தனிமையும்கூட” என்று சொன்னார். தலைமைச் செயலாளரின் பேச்சு டி.ஜி.பிக்குப் பிடித்திருந்தது. ‘மத்தவங்ககிட்டத்தான்னு இல்லை, நம்மகிட்டகூட நாமே பேசிக்க முடியாது. அதுதான் அதிகாரத்தோட பெரும. மகிம’ என்று சொன்ன வார்த்தை கூடுதலாகப் பிடித்திருந்தது.

“கேரளாவில் ஒரு ஜட்ஜ் ரயில் ஏறுறதுக்குப் போயிருக்காரு. பிளாட்பார்மில அவர ஒரு கொசு கடிச்சிடிச்சிபோல. அதுக்காக ஸ்டேட் கவர்மண்டுக்கும், செண்ட்ரல் கவர்மண்டுக்கும் அவர் போட்ட உத்தரவு இருக்கே, அது மாதிரி உத்தரவ ஒலகத்தில எந்த நீதிபதியும் போட்டதில்ல. இதுக்கே அவர் கீழ் லெவல்ல உள்ள நீதிபதிதான்” என்று சொல்லிவிட்டு டி.ஜி.பி. சிரித்தார். தலைமைச் செயலாளரும் சிரித்தார். அவர் சிரித்தது அரசாங்க சிரிப்புப்போல இருந்தது.

“நானும் பேப்பர்ல அந்தச் செய்தியப் பாத்தன், போன குடியரசு விழாவுக்காக ஜனாதிபதிய அழைச்சிக்கிட்டு வரும்போது ஒரு குதிர அப்பப்ப தலை ஆட்டிக்கிட்டே இருந்திருக்கு. இன்னொரு குதிர யூரின் போயிருக்கு. குதிரைக்கு ஏன் சரியா ட்ரெயினிங் கொடுக்கல? பப்ளிக்கில அதுவும் ஜனாதிபதிய அழைச்சிக்கிட்டு வரும்போது, குதிர எப்பிடித் தலய ஆட்டலாம், குதிர எப்படி யூரின் போகலாம்னு கேட்டு, பிரதமர் அலுவலகத்திலிருந்து, ஜனாதிபதியோட அலுவலகத்திலிருந்து என்கொயரி மேல என்கொயரி செஞ்சதோட, குதிரைப் படை சம்பந்தப்பட்ட டீமையே டோட்டலா காலிப் பண்ணிட்டாங்க. நியூஸ் தெரியும்தான? என் சர்விஸ்ல இது மாதிரி பல விஷயங்களச் சொல்ல முடியும். ஒங்களாலயும் சொல்ல முடியும். அதுக்காக நாம என்ன செய்ய முடியும்? அதிகாரம்” சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு தலைமைச் செயலாளர் சொன்னார். 

“ட்ரூ சார். ஒன் மோர் திங் சார். ஒலகத்திலியே செல்வாக்கான அமெரிக்காவையே மிரள வைக்கிற சீன அதிபரும், நம்ம நாட்டு பிரதமரும் மகாபலிபுரத்தில சந்திச்சப்ப இரு நாட்டு போலீஸையும் உளவுத் துறையையும் ஏமாத்திட்டு ஒரு நாய் ஓடிப்போனதுக்கு நாம பட்டமே சார். வாழ்க்கயில மறக்கக்கூடிய விஷயமா சார்? அதுதான் அன்னிக்கி உலக நியூஸா இருந்துச்சி. அந்த டென்ஷன் ஒரு வாரத்துக்கு இருந்துச்சி. என் வாழ்க்கயில அந்த நாய மறக்க முடியாது சார். அந்த நாயி எப்படி அங்க வந்துச்சிங்கிற ரகசியத்த மட்டும் என்னால புரிஞ்சிக்கவே முடியல சார். ஒரு நாயிக்கு முன்னால சீனா நாட்டு போலீஸும் உளவுத் துறையும், நம்ம நாட்டு போலீஸும் உளவுத் துறையும் தோத்துப்போயிடிச்சி. சொல்றதுக்கே அசிங்கமா இருக்கு. நாயிக்குத் தெரியுமா இவர் பிரதமர், இவர் ஜனாதிபதினு. அதிபர் பதவியெல்லாம் மனுசங்களுக்குத்தான். அனிமல்ஸுக்கு இல்ல” என்று டி.ஜி.பி. சொல்லி முடிப்பதற்குள், “நான் ஐ.ஏ.எஸ். ஆனதும் நீங்க ஐ.பி.எஸ். ஆனதும் பதிவிக்காகத்தான், அதிகாரத்திற்காகத்தான். யூ நோ.” தலைமைச் செயலாளர் சொன்னதும், சட்டென்று டி.ஜி.பி.யின் முகம் மாறி விட்டது. “ட்ரூ சார்” என்று சொன்னார் டி.ஜி.பி. 

“வாங்க போகலாம்” என்று சொல்லிவிட்டுத் தலைமைச் செயலாளர் கதவைத் திறந்துகொண்டு முதலில் வெளியே போக, அவருக்கடுத்து டி.ஜி.பி.யும் அறையைவிட்டு வெளியே வந்தார். இருவரும் வாசலை நோக்கி பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.

“முதலமைச்சர்கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு, ஒங்கள ட்ரெயினிங் அகாடமி டி.ஜி.பி.யா ட்ரான்ஸ்ஃபர் பண்ண சொல்லிட்டாரு. டிரைவருக்கு சஸ்பெண்ட், துணை வேந்தருக்கு நோட்டீஸ்.” 

“தேங்க் யூ சார். காத்திருப்போர் பட்டியல்ல வையிங்க. இல்லன்னா மாநகராட்சி ட்ரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் விஜிலென்ஸ் டி.ஜி.பி.யா போடுங்கன்னு சொல்லுவார்னுதான் நெனைச்சன் சார். அந்த ஆபிசில ஒக்காருறதுக்கு நாற்காலிகூட இல்ல. ஒங்களுக்குத் தெரியும். அப்படிச் செஞ்சியிருந்தா ரிட்டையர் ஆகப்போகிற சமயத்தில டிபார்ட்மண்டுல ரொம்ப அசிங்கமா ஆகியிருக்கும்.”

“என்னெத் தப்பா எடுத்துக்கக் கூடாது. முதலமைச்சரும் கவர்னரும் சொல்றதச் செய்யுறது மட்டும்தான் என்னோட வேல. அது மட்டும்தான். யூ நோ.”

“எஸ் சார். ஐ நோ சார்” என்று டி.ஜி.பி. சொன்னார். 

அப்போது நடைபயிற்சிக்காக அழைத்துக்கொண்டு போயிருந்த, கொழுத்த பன்றி போன்றிருந்த உயர் ரக வெளிநாட்டு நாயைக் காவலர் ஒருவர் இழுத்துக்கொண்டு ஆளுநரின் மாளிக்கைக்குள் போவது தெரிந்தது. தலைமைச் செயலாளரும் டி.ஜி.பி.யும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. 

சைரன் விளக்கு ஒளிர தலைமைச் செயலாளரின் காரும், டி.ஜி.பி.யின் காரும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வாசலில் நின்றன. இருவரும் அவரவர் காரில் ஏறிக்கொண்டனர்.


உயிர்மை மே - 2023







புதன், 21 டிசம்பர், 2022

வியாழன், 8 டிசம்பர், 2022

தாலிமேல சத்தியம் - இமையம்

தாலிமேல சத்தியம் 

இது என்னுடைய ஏழாவது சிறுகதைத்தொகுப்பு. 


தொடர்புக்கு:

க்ரியா

புதிய எண் 2, பழைய எண் 25, முதல் தளம், 17ஆவது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், 

திருவான்மியூர்,  சென்னை - 600 041. தொலைபேசி:  72999-05950

ஞாயிறு, 27 நவம்பர், 2022

சனி, 12 நவம்பர், 2022

பிணத்துக்குச் சொந்தக்காரி – இமையம்


“ராமன்ங்கிற பேஷன்ட்டோட அட்டண்டர் யாரு?” என்று நர்ஸ் கேட்டதும், “நான்தான்” என்று சொல்லிக்கொண்டே பதைபதைப்புடன் எமர்ஜென்சி வார்டின் கதவை நோக்கி மீனாட்சி ஓடினாள்.

“டாக்டர் கூப்பிட்டாரு. உள்ளார வாங்க” என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்துவிட்டாள் நர்ஸ்.

ராமனின் படுக்கையை நோக்கி வேகமாகப் போனாள் மீனாட்சி. படுக்கை திரைச்சீலையால் மூடப்பட்டிருந்தது. ராமனின் படுக்கைக்குச் சற்று தள்ளி நின்றுகொண்டிருந்த ஒரு மருத்துவர், “நீங்கதான் அட்டண்டரா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்.”

“ட்ரை பண்ணினோம். முடியல. முடிஞ்சிடிச்சு. யாருக்குத் தகவல் சொல்லணுமோ சொல்லிடுங்க” என்று மருத்துவர் சொன்னதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத மீனாட்சி, “என்ன சார் ஆச்சி?” என்று கேட்டாள்.

“எறந்துட்டாரு. தகவல் சொல்லத்தான் கூப்பிட்டேன்” என்று சொன்ன மருத்துவரின் வார்த்தை மின்சாரம் தாக்கியதுபோல் இருந்தது மீனாட்சிக்கு. அடுத்த வார்த்தை பேச முடியவில்லை. வாய் உலர்ந்துபோய்விட்டது. கை, கால்கள் நடுங்கின. உடல் குளிர்ந்து சில்லிட்டு, வியர்த்துப்போயிற்று.

“புரசிஜர் முடியுறதுக்கு ஒரு மணி நேரமாகும். புரசிஜர் முடிஞ்சதும் பாடி மார்ச்சுவரிக்குப் போயிடும். அப்புறம் நீங்க வாங்கிக்கிட்டுப் போயிடலாம்” என்று மருத்துவர் சொன்ன வார்த்தைகள் எதுவும் மீனாட்சியின் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. ‘ஹெல்ப் டெஸ்க்’ என்று எழுதியிருந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த நர்ஸைக் கூப்பிட்டு, “புரசிஜர் செய்யுறதுக்குச் சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு மருத்துவர் தனது அறையை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், “சார்” என்று கூப்பிட்டதும், “என்ன வேணும்?” என்பதுபோல் பார்த்தார். மீனாட்சிக்கு அழுகைதான் வந்தது, பேச்சு வரவில்லை. கை கால்கள் நடுங்க, வியர்த்துப்போய், நின்றுகொண்டிருந்த மீனாட்சியைப் பார்த்த மருத்துவர்,  “சிவியர் ஸ்ட்ரோக்கா வந்திருக்கு. ஒண்ணும் செய்ய முடியல. சோ, விஷயம் முடிஞ்சிடிச்சி” என்று சொல்லிவிட்டு அறைக்குள் போய்விட்டார்.

ராமன் இறந்துவிட்டார் என்ற விஷயத்தைத் தான் சொல்வதைவிட மருத்துவர் சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைத்த மீனாட்சி மருத்துவரின் அறைக்குள் போனாள்.

விஷயம்தான் முடிந்துவிட்டதே அப்புறம் என்ன என்பது போல் மருத்துவர் பார்த்தார்.  மீனாட்சி மருத்துவரையே பார்த்துக்கொண்டிருந்தாளே தவிர அவளால் பேச முடியவில்லை. “என்ன?” என்று மருத்துவர் கேட்டார்.

“நான் வெறும் அட்டண்டர் சார்.”

“சரி.”

“பிணத்துக்குச் சொந்தக்காரி நான் இல்ல சார்.”

“வாட்?” என்று அதிர்ச்சி அடைந்ததுபோல் கேட்ட மருத்துவர், “லேபரா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்.”

“சொந்தக்காரங்ககிட்ட சொல்லிடுங்க.”

“இறந்துபோனவரோட மகனும் மகளும் அமெரிக்காவில இருக்காங்க. அவரோட அக்கா மட்டும்தான் இங்க இருக்காங்க. செத்திட்டார்ன்னு சொல்றதுக்குப் பயமா இருக்கு. நீங்க சொன்னா நல்லா இருக்கும்  சார்” என்று மீனாட்சி சொல்லி முடிப்பதற்குள், “அது என்னோட வேல இல்ல. நான் சொல்லவும் கூடாது. நான் ரிப்போர்ட் மட்டும்தான் கொடுப்பன்” என்று சொல்லிவிட்டு மருத்துவர் வெளியே போனார்.

“என்னடா இது வம்பா இருக்கு?” என்று சொல்லி, தன்னுடைய தலையில் அடித்துக்கொண்ட மீனாட்சி மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்தாள்.

அழுதுகொண்டே செல்போனில் வாட்ஸ்அப் கால் போட்டு ராமனின் மகனிடம் விஷயத்தைச் சொன்னதும், “அப்படியா? எப்ப நடந்துச்சு? டாக்டர் என்ன சொன்னாரு? முடியலன்னுட்டாங்களா?” என்று நூறு கேள்விகளை கேட்டுவிட்டு போனை வைத்துவிட்டான்.

ராமனின் மகளுக்குச் செய்தியைச் சொன்னாள். “என்ன சொல்ற? பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நல்லா இருக்காருன்னு சொன்னியே” என்று கேட்டுக்கொண்டே அழ ஆரம்பித்துவிட்டாள். போனின் இணைப்பு கட் ஆனதும், ஏஜென்ஸிகாரருக்கு போன் போட்டு ராமன் இறந்த செய்தியைச் சொன்னதோடு, “எனக்குப் பயமா இருக்கு வர முடியுமா சார்?” என்று கேட்டாள். சாரோட பையன்கிட்டயும், பொண்ணுகிட்டயும் பேசுறேன். என்ன ஏற்பாடு செய்றாங்கன்னு தெரிஞ்சுக்கிட்டு சொல்றன். ரிலாக்ஸா இருங்க. நானே கூப்பிடுறேன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்தது மீனாட்சிக்கு எரிச்சலாக இருந்தது.

ராமனின் மகனிடமும் மகளிடமும், ஏஜென்ஸிக்காரரிடமும் விஷயத்தைச் சொன்ன பிறகுதான் மீனாட்சிக்கு நெஞ்சின் படபடப்பு குறைந்தது. கை, கால்கள் நடுங்குவதும், வியர்ப்பதும் மட்டுப்பட்டது. ஏஜென்ஸிக்காரரிடமிருந்து போன் வந்தது. “சாரோட பொண்ணுகிட்டயும், பையன்கிட்டயும் பேசிட்டேன். பாடிய என்ன செய்யுறதுங்கிறதப் பத்தி சொல்றேன்னு சொல்லியிருக்காங்க. தகவல் வந்ததும் சொல்றேன்” என்று சொன்ன வேகத்தில் போனை வைத்துவிட்டார். ஏஜென்ஸிக்காரர் போனை வைத்த மறுநிமிஷமே ராமனின் மகனிடமிருந்து போன் வந்தது.

“காலயில அத்த வருவாங்க. பாடிய நாளைக்கே வாங்கிக்கிறதா, நாங்க வந்த பிறகு வாங்கிக்கிறதாங்கிறத கொஞ்ச நேரம் கழிச்சி சொல்றன். நீங்க ஆஸ்பிட்டலியே இருங்க. நான் கூப்பிடுறன். எங்க அத்த ஒங்ககிட்ட பேசுவாங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டான்.

ராமனின் அக்காவிடமிருந்து போன் வந்தது. பதற்றத்தில் சொல்லாமல் விட்டுவிட்டோமே என்று தன்னையே திட்டிகொண்டு போனை எடுத்துப் பேசினாள். “விஷயம் கேள்விபட்டன். எனக்கு முன்னாடியே அவன் போயிட்டான். அதான் வருத்தமா இருக்கு. பாடிய எப்ப வாங்குறதுங்கிறது இன்னும் முடிவாகல. முடிவானதும் சொல்றன். இப்ப என்னால வர முடியாது. வந்தாலும் செய்யுறதுக்கு ஒன்னுமில்ல. எனக்கும் வயசாயிடிச்சி இல்லையா? பில் செட்டில்மண்ட் எல்லாம் ஆன்லைனிலியே பண்ணிடுவாங்க. அதப் பத்தி நீ ஒண்ணும் கவலப்பட வேண்டாம்.   காலயில வரன். வச்சிடு” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

ராமன் இறந்துவிட்டார் என்று சொன்ன போது ஏற்பட்ட பயத்தைவிட மீனாட்சிக்கு இப்போதுதான் கூடுதலாக பயம் ஏற்பட்டது. ராமனின் மகனும் மகளும் வந்த பிறகுதான் பிணத்தை வாங்குவார்களா, அவருடைய அக்கா வந்து  வாங்குவார்களா, அவருடைய மகனும் மகளும் ஊருக்கு வருவதற்கு எத்தனை நாளாகும்? அதுவரை பிணம் மருத்துவமனையிலேயே இருக்குமா? பிணத்தை வாங்கினால் எத்தனை நாள் வீட்டில் வைத்திருப்பார்கள்? அதுவரைக்கும் இருக்க வேண்டுமா? பிணத்துடன் எத்தனை நாட்கள் இருக்க முடியும், மீனாட்சிக்கு கோபத்திலும் பயத்திலும் அழுகை வந்தது. “இப்படி வந்து மாட்டிக்கிட்டனே” என்று தன்னையே நொந்துகொண்டான்.

எமர்ஜென்ஸி வார்டை விட்டு வெளியே போய்விடலாம் என்று நினைத்தாள். பிணத்தை ஒரு முறை பார்த்துவிட்டு போய்விடலாம் என்று தோன்றியது. பிணம் இருந்த படுக்கை பக்கம் பார்த்தாள். நான்கு பக்கமும் திரைச் சீலையால் மூடப்பட்டிருந்தது.  “இப்படியா ஒரு ஆளுக்கு சாவு வரும்? சனங்க எப்படி எப்படியோ எல்லாம் செத்துப்போறாங்க” என்று முனகிய மீனாட்சிக்கு வாய்விட்டு அழ வேண்டும்போல் இருந்தது.

என்றும் போல்தான் இன்றும் இரவு எட்டு மணிக்கு ராமன் சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்த ஐந்தாவது நிமிஷமே கழிவறைக்குப் போனார். வெளியே வந்து, “ஒரு மாதிரியா இருக்கு” என்று சொன்னார். “கொஞ்சம் நடந்துட்டு வர்றீங்களா சார்” என்று கேட்டதற்கு, “நெஞ்சடைக்கிற மாதிரி இருக்கு. என்னான்னு தெரியல” என்று சொல்லிவிட்டு சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்தார். “ஃபேன கூட்டிவை” என்று சொன்னார். சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த மீனாட்சி, பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு வந்து, ஃபேனின் வேகத்தைக் கூட்டி வைத்தாள். “ஆஸ்பத்திரிக்குப் போகலாமா சார்” என்று கேட்டாள். “தேவயில்ல” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே நெஞ்சைப் பிடித்தபடி நாற்காலியிலிருந்து கீழே விழுந்துவிட்டார். ஓடிப்போய், தூக்கி உட்கார வைத்து, நெஞ்சைத் தடவிக் கொடுத்து, “ஒண்ணுமில்ல சார். ஃபிரியா இருங்க. சுடுதண்ணி தரட்டுமா? ஆஸ்பத்திரிக்குப் போகலாமா சார்?” என்று கேட்டாள். எதற்கும் பதில் இல்லை என்பதால் ராமனுடைய மகனுக்கும் மகளுக்கும் போன் போட்டு விஷயத்தை சொன்னாள். பதற்றமாக இருந்தாலும் ஏஜென்ஸிகாரருக்கு விஷயத்தைச் சொன்னாள். ஆம்புலன்சுக்கு போன் போட்டாள். எந்த மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று ராமனின் மகனிடம் கேட்டாள். தனிவீடு என்பதால் அக்கம்பக்கத்தில் யாரையும் துணைக்குக்கூட கூப்பிட முடியாமல் ஆம்புலன்ஸ் வரும்வரை ஒற்றை ஆளாக அல்லாடினாள். ஆம்புலன்ஸ் வந்ததும் ராமனை ஏற்றிக்கொண்டுவந்து, எமர்ஜென்ஸி வார்டில் சேர்த்த பிறகுதான் மீனாட்சிக்கு மூச்சு விடவே முடிந்தது. வீட்டிலிருந்து மருத்துவமனை வரும்வரை நிமிஷத்திற்கு நிமிஷம் ராமனின் மகனிடமும் மகளிடமும் வாட்ஸ்அப் காலில் தகவல் சொல்லிக்கொண்டே இருந்தாள். ராமன் வீட்டில் சாப்பிடும்போது மணி எட்டு. அவர் இறந்துவிட்டார் என்று மருத்துவர் சொல்லும் போது மணி ஒன்பதே கால்.

 ராமனின் மகனிடமிருந்து போன் வந்தது. போனை எடுத்து. “சொல்லுங்க சார்” என்று சொன்னாள்.  “இங்க பேசக் கூடாது, வெளியே போயி பேசுங்க” என்று முகத்தில் அறைவதுபோல் நர்ஸ் சொன்னதும், “நான் எமர்ஜென்ஸி வார்டுகுள்ளார இருக்கிறன் வெளியே வந்திட்டு பேசறன் சார்” என்று சொன்ன மீனாட்சி, “நான் பாக்கலாமா?” என்று கேட்டாள்.

“பார்த்துட்டு ஒடனே போயிடனும்.”

“கொஞ்சம் கூட வர முடியுமா?” என்று மீனாட்சி கெஞ்சுவதுபோல் கேட்டாள்.  ஃபைலில் ஏதோ எழுதிக்கொண்டே, “நீங்கதான அட்டண்டர்? ஒங்களுக்கு என்ன பயம்?” நர்ஸ் கேட்டாள்.

“நான் பொணத்துக்கு சொந்தக்காரி இல்லெ. சம்பளத்துக்கு வேல செய்ய வந்த அட்டண்டர்தான்” மீனாட்சி சொன்னதும், ஏற இறங்க பார்த்த நர்ஸ், “வெயிட் பண்ணுங்க” என்று சொன்னாள். ஃபைலை எழுதி முடித்துவிட்டு, “வாங்க” என்று சொன்னாள். நர்ஸுடன் போனாள். திரைச்சீலையை லேசாக விலக்கிவிட்டு, “பாருங்க” என்று சொல்லும்போது போன் மணி அடிக்கிற சத்தம் கேட்டது. “பார்த்திட்டு ஒடனே வந்திடணும்” என்று சொல்லிவிட்டு, போனை எடுப்பதற்காக வேகமாக ஓடினாள்.

பிணம் பச்சைநிற போர்வையால் மூடப்பட்டிருந்தது. பிணத்தை ஒட்டி நின்றுகொண்டிருப்பது மாய உலகத்தில் நின்றுகொண்டிருப்பதுபோல இருந்தது.

பிணத்தை மூடியிருந்த போர்வையை விலக்கிவிட்டு பார்ப்பது எப்படி? அதுதான் அவளுக்குத் தெரியவில்லை. “முடிஞ்சிடுச்சி” என்று மருத்துவர் சொன்ன போது ஏற்பட்ட பயத்தைவிட இப்போதுதான் கூடுதலான பயமும் நடுக்கமும் ஏற்பட்டிருந்தது. தண்ணீர் தொட்டியில் மூழ்கி எழுந்து வந்ததுபோல் வியர்த்துக் கொட்டிவிட்டது.

“புரசிஜர் செய்யுறதுக்கு வந்துட்டாங்க, வெளியே வாங்க” என்று நர்ஸ் சொன்னது கேட்டதும், பிணத்தின் மீது இருந்த போர்வையை விலக்கிவிட்டு முகத்தைப் பார்த்தாள். தூங்கிக்கொண்டிருப்பதுபோல் இருந்தது. பிணத்தின் முகத்தைப் பார்த்த மறுநொடி முதன் முதலாக வேலைக்குச் சேர்ந்த அன்று ராமன், “ஓட்டர் ஐடி, ரேஷன் கார்டு, பேங்க் புக் கொடுங்க. ஏஜென்ஸிக்காரர் தவிர ஒங்களப் பாக்குறதுக்கு இங்கே யாரும் வரக் கூடாது. லீவு போட்டா, மாற்று ஆள் வந்த பிறகுதான் போகணும். இஷ்டத்துக்கு லீவ் போடக் கூடாது” என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

ராமன் காலையில் ஒரு மணி நேரம், சாயங்காலம் ஒரு மணி நேரம் நடைபயிற்சிக்குப் போவார். யோகா பயிற்சி செய்வார். அவ்வளவுதான். பேப்பர் படிப்பது, மியூசிக் கேட்பது மட்டும்தான் அவருடைய வேலை. ஒரு நாளும் மீனாட்சியின் அறைக்குள் வந்ததில்லை. முன்னே விட்டு பின்னால் ஓரக்கண்ணால் பார்த்ததில்லை. நேற்று இரவு சாப்பிடும்போது, “என்னோட ஒய்ஃப் எறந்து நாலு மாசம் தனியாத்தான் இருந்தன். வயசு எழுபத்தி நாலு ஆகுது. ஒரு அட்டண்டர் கூட இருக்கட்டும்னு கட்டாயப்படுத்தினதாலதான் ஒன்னெ வேலக்கி எடுத்தன். என்னெ அமெரிக்காவுக்கு வந்திட சொல்லி கட்டாயப்படுத்துகிறாங்க. நான் இந்த வீட்டுல அம்பத்திரண்டு வருஷமா இருந்துட்டன். இந்த வயசில இனிமே எங்க போறது? போனாலும் அது என்னோட வீடுல்லதானே. இங்கயும் எனக்கு ஒரு வேலயும் இல்லெ. ஆன்லைனிலேயே எல்லா வேலயயும் பசங்க செஞ்சிடுறாங்க. பென்ஷன் வாங்குறதுக்காக  வருஷத்துக்கு ஒரு முற  ‘நான் இன்னும் சாகல’னு ஒரு படிவம் தரணும். அதுக்காக ட்ரசரிக்குப் போவன். எனக்கும் என் பசங்களுக்கு இருக்குற ஒரே தொடர்பு செல்போன்தான். படிக்கிறப்பவே அமெரிக்காவுல வேல பாக்குற மாதிரி படிங்கனு சொன்னதும், அமெரிக்காவில போயி வேல பாக்குறது நல்லதுன்னு சொன்னதும் நாங்கதான்” என்று சொல்லிவிட்டு, சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தன்னுடைய அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார். ஒரு நாளும் இல்லாமல் அதிகமாப் பேசியது, குடும்ப விஷயத்தைப் பேசியதெல்லாம் மீனாட்சிக்கு ஆச்சரியமாக இருந்தது. “இப்படி செத்துப்போறதுக்காகத்தான் அப்படி பேசினாரா?”

பிணத்தின் முகத்தைப் பார்க்கபார்க்க மீனாட்சிக்கு அழுகை வந்துகொண்டேயிருந்தது. ராமனின் வீட்டுக்கு மீனாட்சி அட்டண்டராக வந்த பிறகு, உறவினர் வீட்டுக்கென்று அவர் ஒரு நாளும் போனதில்லை. உறவினர்கள் என்று சொல்லிக்கொண்டு, அவரைத் தேடிக்கொண்டு யாரும் வந்ததில்லை. அவருடைய அக்காகூட ஒரே ஒருமுறைதான் வந்தார். அதுவும் காலையில் வந்து சாயங்காலமே போய்விட்டார். நண்பர்கள் என்று அபூர்வமாக ஒரு ஆள், இரண்டு ஆள் என்று வருவார்கள். வந்தாலும் அரை மணி நேரத்தில், ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே போய்விடுவார்கள். ‘அதிசயமான ஆள்தான்’ என்று நினைத்துக்கொள்வாள்.

 மீனாட்சி இதுவரை மருத்துவரின் வீட்டில் குழந்தையை பார்த்துக்கொண்டது, மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுடன் இருந்தது, சினிமாவில் நடிக்கப் போகிறேன் என்று பைத்தியமான பையனை பார்த்துக்கொண்டது, வயதான கணவன் மனைவியைப் பார்த்துக்கொண்டது என்று மொத்தம் எட்டு இடங்களில் வேலை செய்திருக்கிறாள். எட்டு இடங்களில் வேலை செய்தாலும் குளியலறையில் வழுக்கி விழுந்து இடுப்பு ஒடிந்த பெண்ணுடன் இருந்தபோதுதான் அவஸ்தைப்பட்டாள். அதிலிருந்து எலும்பு முறிவு என்று படுத்திருக்கும் நோயாளிகளுக்கு அட்டண்டராகப் போகக் கூடாது என்று முடிவாக இருந்துவிட்டாள். பல இடங்களில் அட்டண்டராக வேலை பார்த்தாலும் ராமனின் வீட்டில்தான் கொஞ்சம் சொகுசாக இருந்தாள். ஒரே ஆள். தன்னுடைய வேலைகளைத் தானே பார்த்துக்கொள்கிற, சம்பளத்தையும் முதல் தேதியே தந்துவிடுகிற ஆள் என்பதால் முடிந்தவரை ராமனின் வீட்டிலேயே காலத்தை ஓட்டிவிடலாம் என்றுதான் நினைத்துகொண்டிருந்தாள்.

“அமெரிக்காவுல வேல பாக்குறதால அங்கியே வேல பாக்குற பெண்ணையும், பையனையும் பார்த்து கல்யாணம் கட்டிவச்சம். ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு முறதான் வருவாங்க. அதுவும் கல்யாணம், சாவுன்னாத்தான். கடசியா அவங்க வந்தது என்னோட ஒய்ஃப் சாவுக்குத்தான். இனிமே எப்போ வருவாங்கன்னு சொல்ல முடியாது” என்று ராமன் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

“எவ்வளவு நேரமாப் பாத்துக்கிட்டு இருப்பீங்க, வெளியே போங்க. புரோசிஜர் செய்யறதுக்கு ஸ்டாஃப்ங்க வந்துட்டாங்க” என்று அதட்டும் குரலில் நர்ஸ் சொன்ன பிறகுதான் மீனாட்சிக்கு சுயநினைவு வந்த மாதிரி பிணத்தின் முகத்தைக் கவனமாகப் பார்த்தாள். படுக்கையை ஒட்டி வந்து நின்றுகொண்டு,  “வெளியே போயி வெயிட் பண்ணுங்க. பாடி வெளியே வரும்போது பாத்துக்கங்க” என்று நர்ஸ் சொன்னதும், திரைச்சீலைக்குள்ளிருந்து அரைகுறை மனதுடன் வெளியே வந்தாள் மீனாட்சி. 

காக்கி நிற உடையணிந்திருந்த இரண்டு பேர் பிணம் இருந்த இடத்துக்கு வந்ததும், நர்ஸ் திரைச்சீலையை விலக்கிவிட்டாள். எல்லோரும் திரைச்சீலைக்குள் போய்விட்டார்கள். புரோசிஜர்  என்றால் என்ன? எப்படிச் செய்வார்கள்? என்று பார்க்கலாம் என்று தோன்றியது. எமர்ஜென்ஸி வார்டு முழுவதுமே மருந்து வாடையால் நிரம்பியிருந்தது. பகல்போல் வெளிச்சமாக இருந்தது. அதிசயமான உலகம்போல் இருந்தது. ராமனின் பிணம் இருந்த படுக்கையை ஒட்டி மூன்று படுக்கைகளும் அதற்கு எதிர்ப்புறம் நான்கு படுக்கைகளும் இருந்தன. எல்லாப் படுகைகளிலும் ஆட்கள் இருப்பது தெரிந்தது. உதவியாளர்கள் என்று யாரும் இல்லை. ஒரு ஆள் ஸ்ட்ரெச்சரைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான். “இங்க ஏன் நிக்கிறீங்க, வெளியே போங்க” என்று  அடித்து விரட்டுவதுபோல் சொன்னான். எமர்ஜென்ஸி வார்டைவிட்டு வெளியே வந்த மீனாட்சி உதவியாளர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தைப் பார்த்தாள். நாற்காலியில் உட்கார்ந்தபடியே இரண்டு ஆண்கள் தூங்கிக்கொண்டிருந்தனர்.

மருத்துவமனை எப்படி இருக்கிறது? எந்த மாடியில் இருக்கிறோம்? பக்கத்தில் என்ன நடக்கிறது? யார் இருக்கிறார்கள்? என்று பார்ப்பதற்குக்கூட மீனாட்சிக்கு நேரமில்லை. வீட்டை விட்டு கிளம்பும்போது எப்படியாவது போய் மருத்துவமனையில் சேர்த்தால் போதும் என்ற அவசரத்தில் இருந்தாள். மருத்துவமனையில் சேர்த்தப் பிறகு எப்படியாவது உயிர் பிழைத்தால் போதும் என்ற பதைபதைப்புடன் இருந்தாள். இறந்துவிட்டார் என்று தெரிந்ததும், ஐயோ இறந்துவிட்டாரே என்று அழுதாள். இப்போது பிணத்தை வாங்கிக்கொண்டுபோய் எப்போது புதைப்பார்களோ என்ற கவலையில் நின்றுகொண்டிருந்தாள். ராமன் இப்படிச் சட்டென்று இறந்துபோவார் என்றோ தன்னந்தனியாக இப்படியொரு சிக்கலில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவோம் என்றோ அவள் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

 ‘இப்படி வந்து நிக்குறேனே’ என்று நினைத்ததுமே அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது. “எனக்கு ஏன் இந்தத் தலயெழுத்து?”

மீனாட்சி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதுதான் அவளுடைய அப்பா இறந்தார். அவர் இறந்த மூன்றாவது மாதமே, “உனக்கு கல்யாணம் பண்ணபோறேன்” என்று அவளுடைய அம்மா பூங்கோதை சொன்ன போது, “நான் படிக்கப் போறன்” என்று சொல்லி அடம்பிடித்து, பன்னிரண்டாம் வகுப்புவரைப் படித்தாள். “அண்ணன், தம்பி இல்ல. ஆம்பள தொணா இல்ல, சொத்துபத்து இல்ல, வயசுக்கு வந்த பொண்ண வச்சியிருக்க மாட்டன்” என்று சொல்லி, கட்டாயப்படுத்தித் தன்னுடைய அண்ணன் மகன் பாலுவுக்குக் கட்டி வைத்தாள் பூங்கோதை. கல்யாணமான மறுவருசமே மீனாட்சிக்கு ஆண் பிள்ளை பிறந்தது, அதற்கடுத்த வருசம் பெண் பிள்ளை பிறந்தது. பாலு டிரைவராக இருந்தான். லாரி ஓட்டப் போனால் திரும்பி வருவதற்குப் பத்திருபது நாட்கள் ஆகும். ஆந்திராவுக்குப் போன போது விபத்தில் சிக்கி இறந்துவிட்டான் என்று போன் வந்தது. பிணம் வந்துசேர்வதற்கு மூன்று நாள் ஆனது. பாலு இறந்து மூன்று நான்கு மாதம் கழித்து விசாரிப்பதற்காக வந்த ஜீவிதா, “மெட்ராசுக்கு வா, நான் வேலை வாங்கித் தர்றேன், நானும் அட்டண்டர் வேலதான் செய்யுறன், நீயும் செய்” என்று சொன்னாள். கூட படித்தவள் கூப்பிடுகிறாள், போய் பார்க்கலாம். பிடித்தால் செய்வோம், இல்லை என்றால் ஊருக்குப் போய்விடுவோம் என்ற எண்ணத்தில் முதன்முதலில் அட்டண்டர் வேலைக்குப் போனாள்.

ஆறு வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது. சென்னைக்கு வந்து ஆறு வருடத்திற்கு மேல் ஆனாலும் ஊருக்குப் போனது மொத்தமாக ஏழெட்டு முறைதான் இருக்கும். ஊருக்குப் போகிற ஒவ்வொரு முறையும் மீனாட்சியினுடைய அம்மாவும் மாமியாரும், “திரும்பிப் போகக் கூடாது, மீறி போனா, உன்னோட ரெண்டு குட்டிகளையும் இழுத்துகிட்டு போ, ஒனக்கு வேல முக்கியமா? புள்ளைங்க முக்கியமா?” என்று கேட்பார்கள்.

“புள்ளைங்கள இங்க விட்டுட்டுப் போய் அங்கு இருக்கிறதுக்கு எனக்கு ஆசயா? எனக்கும்தான் புள்ளைங்ககூட இருக்க ஆச. வீட்டிலேயே இருந்தா பணம் எப்படி வரும்? சோறு எப்படித் திங்கிறது?” என்று எதிர்க் கேள்வி கேட்டாலும் சின்ன பிள்ளைகளை விட்டுவிட்டுப் போகிறோம், சென்னையில் தங்கி இருக்கிறோம் என்ற கவலை எப்போதும் அவளுக்கு இருக்கத்தான் செய்தது.

“புள்ளைங்க அழுவது. மாமியாரும் திட்டுறா, எங்கம்மாவும் ஊருக்கு வந்திடச் சொல்லி திட்டுவது” என்று சொல்லும்போதெல்லாம், “நான் ஏஜென்ஸி ஆரம்பிக்கலாம்னு இருக்கன். நம்பகமான ஆள் வேணும். அதனாலதான் சொல்றேன் கொஞ்சம் நாள் மட்டும் பாரு” என்று சமாதானம் செய்து விடுவாள். ஏஜென்ஸி ஆரம்பித்தால், அங்கே இங்கே என்று யாருடைய வீட்டிலும் போய் வேலை செய்யாமல் அலுவலகத்திலேயே இருந்துகொண்டு வேலை செய்யலாம் என்ற ஆசை மனதில் இருந்ததால்தான் ஜீவிதாவின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்தாள்.  ஏஜென்சி ஆரம்பிப்பதும் நடத்துவதும் சுலபமல்ல என்று தெரிந்தாலும், ‘நானா பணம் போடப்போறன். கூட இருந்து வேலதான செய்யப்போறேன்” என்று தன்னையே சமாதானம் செய்துகொள்வாள்.

 ஏஜென்ஸி நடத்துவதற்குப் பெரிய வீடு வேண்டும். ஏஜென்ஸியைப் பதிவு செய்ய வேண்டும் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதற்கு ஆள் வேண்டும். கம்ப்யூட்டரும், கம்ப்யூட்டரில் வேலை செய்வதற்கு ஆள் வேண்டும். ஆன்லைனில் விளம்பரம் செய்ய வேண்டும். முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என்று எல்லா வகையிலும் விளம்பரம் செய்ய வேண்டும். மருத்துவர்களோடும் மருத்துவமனைகளோடும் தொடர்பில் இருக்க வேண்டும். மருத்துவமனைகளின் வழியாகத்தான் அட்டண்டர்கள் தேவை பற்றிய தகவல்கள் அதிகமாக வரும். எந்தெந்த வயதில் ஆட்களைக் கேட்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் ஆண், பெண், பிள்ளைகள் என்று அனுப்ப வேண்டும். வேலை கேட்டு போன் செய்கிறவர்களோடு தொடர்பில் இருக்க வேண்டும். வேலைக்குப் போகிற அட்டண்டர்களால் பிரச்சினை வந்தாலும், வேலைக்கு ஆள் எடுக்கிறவர்களால் பிரச்சினை வந்தாலும் பேசித் தீர்ப்பதற்கு வாய் திறமை வேண்டும். அட்டண்டரால் பிரச்சினை வந்தால்,  ‘எதுக்கு ஏஜென்ஸியோட பேர கெடுக்குறீங்க? அனுப்புறப்பவே போற எடத்துல சொல்றத மட்டும் செய்யுங்க. தேவ இல்லாமப் பேச வேண்டாம். தேவயில்லாம வெளியே போகக் கூடாது. செக்ஸ் டார்ச்சர் கொடுத்தா, திட்டுனா, அடிச்சா  மட்டும் சொல்லுங்கன்னுதான் சொல்லி அனுப்புனன். நீங்க வேல புடிக்கலன்னு போயிடுவீங்க, ஏஜென்ஸி பேருதான கெட்டுப்போகும்’ என்று அட்டண்டர்களிடம் சொல்வது போல், வேலைக்கு ஆள் எடுக்கும் ஆட்களிடம், ‘ஆள் சரியில்லன்னா, வேற ஆள் மாத்தி அனுப்புறன். பேமண்ட் மட்டும் ஒடனே அனுப்பிடுங்க’ என்று சொல்வார்கள். எவ்வளவுதான் உண்மையைச் சொன்னாலும்  ‘அட்டண்டர்கள் சொல்வதைவிட, வேலைக்கு ஆள் எடுத்தவர்கள் சொல்வதைத்தான் ஏஜென்ஸிகாரர்கள் கேட்பார்கள். ஏனென்றால் அவர்கள்தான் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பதினெட்டாயிரம் ரூபாய் கமிஷன் தருகிறவர்கள். ஒரு ஏஜென்ஸி பிடிக்கவில்லை என்று அடுத்த ஏஜென்ஸிக்கு அட்டண்டர்கள் எளிதில் போய்விட முடியாது. ஏஜென்ஸிகாரர்களுக்கிடையே போட்டியிருந்தாலும், ஒற்றுமையும் உண்டு, ஒரு அட்டண்டர் தவறு செய்துவிட்டால், தவறு செய்த அட்டண்டர் பற்றி, ‘ஆள் சரியில்லை, வந்தா பாத்துக்கங்க’ என்று அடுத்தடுத்த ஏஜென்ஸிகாரர்களிடம் சொல்லிவிடுவார்கள்.

ஏஜென்ஸி ஆரம்பிப்பது பற்றி ஜீவிதா பேசும்போதெல்லாம், “ஏஜென்சி ஆரம்பிச்சி பணம் சம்பாதிக்கிறமோ இல்லியோ அட்டண்டரா இருந்து நல்ல பேர் வாங்கினாலே போதும்” என்று சொல்வாள். மீனாட்சி இதுவரை வேலைக்குப் போன எந்த இடத்திலும், “எனக்கு இங்க புடிக்கல. என்னெ வேற எடத்துக்கு மாத்திவிடுங்க” என்று கேட்டதில்லை. அதே மாதிரி வீட்டுக்காரர்களும் இதுவரை, “நீங்கள் அனுப்பி ஆள் சரியில்ல. வேற ஆள அனுப்புங்க” என்றும் ஏஜென்ஸிக்காரரிடம் கேட்டதில்லை.

அட்டண்டராக வேலைக்குப்போகிறவர்கள் எல்லாருமே நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பணம் திருடுபவர்கள், நகை திருடுபவர்கள், சபல புத்திகொண்ட ஆண்கள் இருந்தால் அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு பணம் பறிப்பவர்கள், அடிக்கடி வெளியே போகிறவர்கள், ஓயாமல் போன் பேசிக்கொண்டேயிருப்பவர்கள் என்று ஒரு சிலர் இருப்பார்கள். அந்த மாதிரியெல்லாம் மீனாட்சி ஒருநாளும் இருந்ததில்லை. அட்டண்டர்கள் என்றாலே மிஷின் மாதிரி இருப்பார்கள் என்று பெயர் எடுத்தவளில்லை. ஓயாமல் தொலைக்காட்சி பார்க்கிறாள் என்று கெட்ட பெயரும்  எடுத்தவளில்லை.

சினிமா எடுக்கப்போகிறேன் என்று பைத்தியமான பையனைப் பார்த்துக்கொண்டபோதுதான் தொந்தரவு இருந்தது. பணமும் கொடுத்தான். பொருட்களும் வாங்கிக் கொடுத்தான். “தம்பி நான் வயித்து சோத்துக்காக வேல செய்ய வந்திருக்கன். ஒன்னோட அஞ்சி நிமிஷ ஆசைக்காக என்னோட வயித்த நிரப்பி வுட்டுடாத. அப்புறம் சாவு வரைக்கும் நாந்தான் அவஸ்தைப் படணும். எனக்கு ஒன்னோட பணமும் வாணாம், பொருளும் வாணாம்” என்று சொல்லிவிட்டாள். ஆனாலும் அந்தப் பையன் அவ்வப்போது  ‘அங்கே இங்கே’ என்று தொடுவான், தட்டுவான். அவன் தொடுவதும் தட்டுவதும் தெரிந்தாலும் தெரியாதது போலவே நடந்துகொள்வாள். கோபம் வரும்போதும், வருத்தம் வரும்போதும், ”எம் புருஷன் சாவாம இருந்திருந்தா நான் எதுக்கு இங்க வந்து புழுக்க வேல செய்யுறன்” என்று தன்னைத் தானே நொந்துகொள்வாள். எப்போதெல்லாம் வேலை கடினமாக இருக்கிறதோ, எப்போதெல்லாம் மனம் கஷ்டமாக இருக்கிறதோ அப்போதெல்லாம், “ஏன்தான் அடிப்பட்டு செத்தானோ” என்று பாலுவைத் திட்டுவாள். வேலையெல்லாம் முடித்துவிட்டு படுத்தப் பிறகுதான் அவளுக்குத் தன்னுடைய பிள்ளைகள் பற்றி, தன்னுடைய அம்மா பற்றி ஞாபகம் வரும். வீடியோ கால் போட்டு பேசுவாள். எப்போதாவது, “சொத்து பத்து இருந்தா நான் எதுக்கு யாரோட வீட்டிலேயோ படுத்திருக்கேன்?” என்று மனம் சலித்து புலம்புவாள். சலிப்பு ஏற்படும் போதெல்லாம், “விடிஞ்சதும் ஊருக்குப் போய்விட வேண்டும்” என்று முடிவெடுப்பாள். மறுநொடியே ஊருக்குப் போய் என்ன செய்வது என்ற கேள்வி எழும். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்வரை காட்டு வேலைக்குப் போனதில்லை, அவளுடைய அம்மாவும் கூப்பிட்டதில்லை. பாலு லாரி டிரைவராக இருந்ததால் பணப்புழக்கம் இருந்தது. வேலைக்குப் போ என்று பாலுவும் கட்டாயப்படுத்தவில்லை, காட்டு வேலைக்குப் பழகியிருந்தால் அட்டண்டர் வேலைக்கே வந்திருக்கவே மாட்டாள்.

பாலுவுடன் மொத்தமே ஏழு வருசங்கள்தான் இருந்தாள். ஏழு வருசத்தில் எத்தனை நாள் அவன் வீட்டிலிருந்தான் என்று எண்ணிவிடலாம். “வண்டிக்கிப் போவணும்” என்றுதான் வீட்டிலிருக்கும்போதுகூட சொல்லிக்கொண்டிருப்பான். பாலுவைப் பற்றி நினைக்கும்போதெல்லாம், “ரொம்ப அவாரமாய் போயி சேந்திட்டான். என்னெ ரோட்டுல வுட்டுட்டு” என்று சொல்வாள்.

‘யாரோட சாவுக்காகவோ இப்பிடி நடு ராத்திரியில் நின்னுக்கிட்டிருக்கனே’ என்று நினைத்ததுமே மீனாட்சிக்குக் கண்கள் கலங்கிவிட்டது. ராமன் இரவில் இறந்ததற்குப் பதிலாகப் பகலில் இறந்திருக்கலாம் என்று தோன்றியது. பகலில் இவ்வளவு பயம் இருக்காது என்று நினைத்தாள். காலையில் யார்தான் வந்து பிணத்தை வாங்குவார்கள் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது ராமன் மகனிடமிருந்து போன் வந்தது. “காலையில எங்கத்தையும் மாமாவும் வருவாங்க. எனக்கு டிக்கெட் போட்டிருக்கன். ஆஸ்பிட்டலியே இருங்க. பாடியக் காலையிலேயே வாங்குறதா, நானும் என் தங்கச்சியும் வந்த பிறகு வாங்குறதான்னு இன்னும் முடிவாகல, முடிவானதும் சொல்றன் ரெண்டு, மூணு நாளக்கி இருங்க. மத்த விஷயத்த அப்புறம் சொல்றன்” என்று சொல்லிவிட்டு  போனை வைத்துவிட்டான். மீனாட்சிக்கு கோபம் வந்துவிட்டது. “இவங்க எப்ப வந்து பிணத்த வாங்குறது? அதுவரைக்கும் பொணத்துக்கு யாரு காவல் இருக்கிறது?” என்று சொல்லி முணுமுணுத்தாள். அப்போது எமர்ஜென்ஸி வார்டிலிருந்து வெளியே வந்த நர்ஸ்,   “ராமனோட அட்டண்டர் யாரு?” என்று கேட்டு, ஒரு படிவத்தில் கையெழுத்து கேட்டாள்.

“நான் பொணத்துக்குச் சொந்தக்காரி இல்லீங்க. அட்டண்டர்.”

“அட்மிஷன் போட்டது யாரு?”

“நான்தான்.”

“அப்படின்னா நீங்களே போடலாம். போடுங்க, தப்பு ஒன்னுமில்ல” என்று சொல்லி கட்டாயப்படுத்தியதால் பயந்துகொண்டே கையெழுத்துப் போட்டாள். படிவத்தை எடுத்துக்கொண்டு நர்ஸ் உள்ளே போனதும், அவசரஅவசரமாக ராமனின் மகனுக்கு நர்ஸ் கையெழுத்து வாங்கிய விஷயத்தைச் சொன்னாள். “கையெழுத்துப் போட்டச்சில்ல. விடுங்க விஷயத்த. அப்புறம் பேசறன்” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.

“பெத்த அப்பன விட்டுட்டுப் போயி அப்படியென்ன வெளிநாட்டுல பணம் சம்பாதிக்கிறது? பணத்துக்காக, சொத்துக்காக, சொகத்துக்காகத்தான் போயிட்டாங்க?” என்று யோசித்த அடுத்த நொடியோ மீனாட்சிக்குக் கல்லால் மண்டையில அடித்ததுபோல், “நானும் பத்து வயசு, பதினோரு வயசு புள்ளைங்கள வுட்டுட்டு வந்து பணத்துக்காகத்தான் அட்டண்டர் வேல பார்க்குறன்” என்ற எண்ணம் உண்டானதும் அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

“அநாத பொணமா கெடந்து சாகணும்னு அவருக்கு விதிபோல. அநாத பொணத்துக்குக் காவ காக்கணும்னு எனக்கு விதிபோல” என்று சொல்லும்போது ராமனின் பிணத்தை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிக்கொண்டு வருவது பிணத்திற்குச் சொந்தக்காரி ஓடுவதுபோல் ஸ்டெச்சரை நோக்கி அரக்கப்பரக்க ஓடினாள் மீனாட்சி.



 

ஆனந்த விகடன் 10/11/2022

 

 

 

புதன், 26 அக்டோபர், 2022

பச்சைகுத்துதலும் உயிர் வாழ்தலும் – இமையம் Translated by Kavitha Muralidharan

 

                    பச்சைகுத்துதலும் உயிர் வாழ்தலும் – இமையம்

    என்னைப் ‘படி’ என்று சொன்னவர்கள் தி.மு.க.காரர்கள், தி.க., கம்யூனிஸ்ட்காரர்கள். யாரும் சாதியைக் கேட்டதில்லை. நானும் சொன்னதில்லை. 1994இலில் என்னுடைய கோவேறு கழுதைகள் நாவல் வெளிவந்ததும் இலக்கியவாதிகளில் ஒரு சிலர் பேசியதும் விவாதித்ததும் என்னுடைய சாதியைப் பற்றித்தான். நான்  ‘தலித்’ எழுத்தாளன். நான் எழுதியது ‘தலித்’ இலக்கியம். பச்சை குத்திவிட்டார்கள். அழியா முத்திரை. தமிழில் சிலரைப் பொறுத்தவரை இலக்கிய விமர்சனத்தின் அளவுகோல் ‘சாதி’. என் பிறப்புக்கு, எழுத்திற்கு முத்திரை குத்தியதுபோல் ‘கட்சிக்காரன்’ முத்திரையும் குத்திவிட்டார்கள் இலக்கியவாதிகள் சிலர். 

அரசியலற்றதா இலக்கியம்? அரசியலின் வீரியமான செயல்பாடு எழுதுதல். என்னுடைய அரசியல் எழுதுதல். என்னுடைய எழுத்து அரசியல் நீக்கம் செய்யப்பட்டதல்ல. சமூக அரசியலைப் பேசாத படைப்பு இலக்கியமல்ல. அரசியல் அதிகாரத்தை அடைவதற்காக என் எழுத்தில் இதுவரை ஒரு சொல்லைக்கூட அதனுடைய இயல்பிலிருந்து மாற்றி எழுதியதில்லை. அதிகாரத்தைப் பெறுவதற்காக, வாழ்வதற்குப் பணம் தேவைப்படும் உலகில் வாழ்ந்தாலும், இத்தனை ஆண்டுக் கால எழுத்து வாழ்க்கையில் ஒரு கணம்கூட நான் யாரிடமும் மண்டியிட்டு நின்றதில்லை. அரசியல் அதிகாரத்திற்கு நிகழ்காலம் மட்டும்தான். வரலாற்றில் அரசியல் அதிகாரத்தின் நாற்காலிகள் ஒருநாளும் காலியாக இருப்பதில்லை.

நான் இலக்கிய நூல்களைப் படிக்க ஆரம்பித்தபோது எழுத்தாளர்களிடம், வாசகர்களிடம், நாடக ஆசிரியர்களிடம், நாடக நடிகர்களிடம், சிறு பத்திரிகையாசிரியர்களிடம், பதிப்பாளர்களிடம், சமுகச் செயல்பாட்டாளர்களிடம், கம்யூனிஸ்ட்டுகளிடம் சமுகத்தை மாற்றப்போகிறோம் என்ற பெரும் கனவு இருந்தது. அது இப்போது தீய்ந்த மலர். பொசுங்கிய கனவு. இப்போது இலக்கிய உலகில் தன்முனைப்புக்கான ஆரவாரக் கூச்சலும் ஆர்ப்பரிப்பும்தான் அதிகம் ஒலிக்கின்றன. தரமான படைப்பிற்கும் தரமற்ற படைப்பிற்குமான இடைவெளி அழிக்கப்பட்டுவிட்டது.

மேலானவை என்று சமூகம் நம்புகிற சாதி, சமயம், சடங்குகள், சட்டங்கள், அதிகாரம், மூச்சு முட்ட வைக்கும் சமூக ஒழுக்க நெறிகள் அனைத்துமே அழுக்கானவை. இவற்றை நம்புகிற எழுத்தாளனும் அழுக்கானவன். பூட்டிய வீட்டிற்குள் இருப்பவன். ‘எழுத்தாளன் என்ற  பெருமிதம்’ உளவியல் பூட்டு. கல்சுவர். பூட்டுகள் நீக்கப்பட்டால்தான், கல்சுவருக்கு வெளியே வந்தால்தான் எழுத்து சாத்தியம். எழுத்தும் ஒரு பொறிதான்.

கவிதை, நாவல், சிறுகதைகள் எழுதப்படுவது தேர்வுக்காக, தேர்வில் வெற்றி பெறுவதற்காக அல்ல. கண்களைத் திறந்துவிடவும் தூக்கத்தைக் கலைத்துவிடவும்தான். உலகின் சிறந்த மருந்து இது. வாதுமைக் கொட்டையை அப்படியே தின்ன முடியாது. ஆசிரியர் வேறு, குரு வேறு. யாரிடம் படிக்க விரும்புகிறோம்? ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருக்கிறது. பாலத்தின் கீழே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. நாம் பார்க்க விரும்புவது பாலத்தையா, ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரையா?

என் சிறுகதைகள், நாவல்கள் தீர்வுகளை ஒரு தாம்பாளத்தில் வைத்துத் தராது. கோட்பாட்டிற்கான அரிய விளக்கமாக இருக்காது. சமூகத்தைப் படிப்பதும் எழுதுவதும் எனக்கு வேறு வேறல்ல – உயிர் வாழ்தல்

 Tattooing and surviving – Imayam translated by Kavitha Muralidharan

    Members of DMK, DK and the Left have told me to read. None had asked for my caste. Neither have I revealed it to them. In 1994 after the Beasts of Burden (Koveru Kazhuthaigal) was published, some writers spoke about my caste, in fact it was a topic of debate for them. I am a ‘Dalit’ writer. I write ‘Dalit’ literature. I was tattooed. An indelible mark. Caste is the yardstick that some in Tamil use to evaluate literature. Like my birth and writing that were branded, a few writers also branded me as a ‘partyman.’ Is literature apolitical? Writing is a vigorous political activity. Writing is my politics. My writing is not apolitical. A work that doesn’t speak of socio-politics is not literature. Not a single letter of my writing had changed its character for the sake of political clout. Though I still live in a world that needs money to exist, I hadn’t bent before anyone in my several years of life spent in literary pursuit seeking to gain power. Political power is only in the present. No chairs of political power remain vacant in the history.

    When I started reading literary works, there was a common dream about changing the society among writers, readers, playwrights, actors, alternative media persons, publishers and communists. Today the dream is just a burnt flower. Today the world of literature is filled with loud noises of self-promotions and clamor. The gap between a good writing and substandard writing stands erased.  

    Everything the society believes as superior – caste, religion, traditions, rituals, laws, power, and choking social ethical morals – are actually dirty. The writer who believes in them is also dirty. He stays in a locked house. The ‘pride of being a writer’ is a psychological lock. It is a stone wall. Writing is possible only when the locks are broken, only when the stone wall is crossed. Writing is also a spark.

    Poetry, novel, short stories are not written for examinations, or to pass the examinations. They are written to open the eyes, to wake you up from the sleep. It is the best medicine in the world. You cannot eat walnut as a whole. Teacher is different from a Master. Who do we want to learn from? A bridge is built across the river. The water flows beneath the bridge. Do we want to watch the bridge or the running water?

    My short stories, novels are not going to handover a solution on a platter. They are not any sort of ideological explanation. Writing and reading the society for me is nothing but – surviving.

திங்கள், 17 அக்டோபர், 2022

முறைப்பாடுகள் ஏதுமில்லை – இமையம் Translated by Kavitha Muralitharan

 முறைப்பாடுகள் ஏதுமில்லை – இமையம்

நாற்பதாண்டு காலப் படிப்பு எனக்குச் சொல்லித் தந்தது, ‘பேசாமலிரு’ என்பது. என்னுடைய வேலை பேசுவதல்ல, நான் பேச்சாளனுமல்ல. எழுத்தாளன். என்னுடைய எழுத்துகள் குறித்து நானே சிலாகித்துப் பேசுவது அசிங்கம். சில எழுத்தாளர்களுடைய பேச்சை இலக்கிய விழாக்களிலும், யூ-டியூப் சேனல்களிலும் கேட்ட பிறகு, சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுடைய கவிதைகளை, சிறுகதைகளை, நாவல்களைப் படிப்பதற்குச் சிரமமாக இருந்தது. 

கவிதைகளில், சிறுகதைகளில், நாவல்களில் எழுத்தாளர்களின் குரல்களே அதிகமாகக் கேட்கின்றன. சற்று சத்தமாகவும் கேட்கிறது. கதாபாத்திரங்களின் குரல்களைக் கேட்க முடியவில்லை. என்னுடைய பேச்சுகளின் வழியாக நான் எழுதிய சிறுகதைகளுக்கு, நாவல்களுக்கு உயிர்கொடுக்க முயல மாட்டேன். அப்படி முயன்றால் என்னுடைய எழுத்துகளுக்கு வேறு துரதிர்ஷ்டம் எதுவும் இருக்க முடியாது. நாடக இயக்குநர்களும், திரைப்பட இயக்குநர்களும் திரைக்குப் பின்னால்தான் இருப்பார்கள். எழுத்தாளனுக்கும் அதுதான் விதி. தன்னுடைய எழுத்துகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வது. தூரமாகப்போய்விடுவது.

அபூர்வமாக நிகழும் விவரிக்க முடியாத அமைதியில் படைப்புக்கான மனநிலை உருவாகும். படைப்பும். பேசுவதனால் அல்ல. தறி, நூல், நெய்தல் – இதுதான் எழுத்து. அதற்குப் பெரிதும் துணை நிற்பது அமைதி, மௌனம்.

என் வாழ்நாள் முழுவதும் நல்ல மாணவனாக, சீடனாகக் கற்பது மட்டுமே வேலையாக இருக்க வேண்டும். ஆசிரியனாக அல்ல. பேச்சாளனாக அல்ல. எனக்கு நானே காவடி தூக்கிக்கொள்ள மாட்டேன். என்னை நானே கட்டிப் பிடித்துக்கொள்ள மாட்டேன். எழுத்தில் புதிய சாத்தியங்களை, புதிய எல்லைக் கோடுகளை, உருவாக்கி, அவற்றை நானே அழித்து, புதிய எல்லைக் கோடுகளை உருவாக்க முயல்வது. தேடுவது. கண்டடைவது. எழுத்துப் பயிற்சி.

பிரபலமான எழுத்தாளர், பரிசு பெற்ற எழுத்தாளர் என்ற அடைமொழிகள் என்னைக் கூசச் செய்கின்றன. எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்க்கையோடு அவர் எழுதிய படைப்புகளைப் பொருத்தி ஒப்பிட்டுப்பார்க்க வேண்டுமா, வேண்டாமா? எழுத்துதான் முக்கியம். எழுத்தாளன் அல்ல. அவனுடைய தனிப்பட்ட வாழ்க்கை அல்ல.

“போதிய அங்கிகாரமில்லை”என்று நான் இதுவரை முறைப்பாடு சொன்னதில்லை. இனியும் சொல்ல மாட்டேன்.

No complaints – Imayam; Translated by Kavitha Muralitharan

The lesson I have learned from my forty-year-old reading is this: Do not speak. My job is not to be the speaker, I am neither an orator. I am a writer. It is shameful to speak highly of my own writing. After hearing the speeches of some writers on YouTube Channels and Literary events, it was difficult for me to read their novels and short stories.

 The writers' voices are heard most in poems, short stories, and novels. It is loud. I am unable to hear the voices of the characters. I wouldn’t try to give life to my novels and short stories through my speeches. If I tried so, there couldn’t be a more unfortunate thing to happen to my words. Theatre directors and film directors stay behind the screens. The writer meets with the same fate. He will have to free himself from his words. Maintain a distance.

A mood for creativity happens in an inexplicable silence that is rare. A work of creativity too. Not by speaking. Loom, yarn, and weaving – this is writing. Silence and peace greatly support it.

 As a good student and a disciple, I must learn throughout my life. Not as a teacher. Neither as a speaker. I wouldn’t blow my own trumpet. I wouldn’t hug and pat myself on the back. To attempt to create new possibilities and borders in writing and then to erase them myself and create a new border. It is a quest. It is a finding. Writing is practice. Epithets like a famous writer or an award-winning writer make me cower. Should a writer’s personal life be compared with his works? Writings are important. Not the writer. Not his personal life.

I have never complained till now about not getting ‘enough recognition.’ Neither will I in the future