“இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவுப்படுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் மாறி இருப்பதால்,
இனி இந்தச்சொல்லை அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ‘பள்ளப்பட்டி’,‘பறையப்பட்டி’,‘நாவிதன்குளம்’,‘சக்கிலிப்பட்டி’, ‘பறையன்குளம்’ என்று இருக்கும் சாதியைக் குறிக்கும் பல ஊர்ப் பெயர்களும் மாற்றப்படும்” என்று 29.4.2025இல் சட்டமன்றத்தில் அறிவித்ததால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், வரலாற்றில் நீடித்த, நிலைத்த புகழைப் பெற்றுவிட்டார். சிறைக்கு வருபவர்களிடமும் இனி ‘சாதி’ குறித்துக் கேட்கக்கூடாது, சாதி சார்ந்த பதிவுகள் ஆவணங்களில் இடம்பெறக் கூடாது என்று அரசாணையும் வெளியிட்டுள்ளார்.
சமூகத்தின் எளிய மக்கள் வாழும் ஒரு பகுதியைக் குறிக்க, சேரி, பறத்தெரு, பள்ளத்தெரு, அருந்ததியர்தெரு, காலனி, ஹரிஜனகாலனி, பழையகாலனி, புதுகாலனி, அம்பேத்கர்காலனி, ஆதிதிராவிடர் காலனி என்று ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான சொற்கள் இருந்தன, இனி அரசு ஆவணங்களில் இந்தச் சொற்கள் இருக்காது. இரயில்வே காலனி, ஜெயேந்திரர் காலனி, எஸ்.பி.ஐ காலனி என்று நகரங்களில் பல காலனிகள் இருக்கின்றன. அதனால் ‘காலனி’ என்ற சொல்லை நீக்குவதன் மூலம் பெரிய நன்மை ஏற்பட்டுவிடாது என்று சொல்கிறார்கள். நகர்ப்புறங்களில் ‘காலனி’ என்ற சொல் சாதியைக் குறிப்பதில்லை. ஆனால் கிராமங்களில், ‘காலனி’ என்ற சொல் பட்டியலின மக்களைக் குறிக்கும் சொல்லாக, அவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாக தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் ‘காலனி’ என்ற சொல் பொதுவான குடியிருப்புப் பகுதி என்று அர்த்தப்படுத்தாமல் பட்டியலின மக்கள் வாழும் பகுதியைக் குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டிருக்கிறது. பள்ளிச்சான்றுகளில்(EMIS), ஆதார் அட்டையில், வாக்காளர்அட்டையில், வங்கி புத்தகத்தில், குடும்ப அட்டையில், பாஸ்போர்ட்டில் என்று அனைத்து அரசு ஆவணங்களிலும் ‘காலனி’, ‘பழையகாலனி’, ‘புதுகாலனி’, ‘அம்பேத்கர்காலனி’ என்ற சொல் இடம் பெற்றிருக்கும்.ஆவணங்களை எடுத்துக் கொண்டு போய் அரசு அலுவலகத்தில் காட்டும்போது முகவரியைப் படித்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரியின் மனதில், “நீயா?” “நீங்களா?” என்ற எண்ணம் ஏற்படுகிறது. உடனே அவருடைய சிந்தனையில், முகத்தில் மாற்றம் நிகழ்கிறது. அந்த மாற்றத்தால் அதிகாரியின் நடத்தையில், உடல்மொழியில், பயன்படுத்தும் சொற்களில் வெளிப்படும் அலட்சியத்தை, புறக்கணிப்பை அனுபவித்தவர்களுக்குத் தெரியும், அது தரும் வலி என்னஎன்பது.
இதுவரை அரசு ஆவணங்களில் ஊர் என்பது வேறாகவும், ‘காலனி’ என்பது வேறாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இனி ஊர் என்று மட்டும் தான் இருக்கும்.
பிரிட்டிஷ் நிர்வாகம், 90 நாடுகளுக்கு மேல் காலனிய மேலாதிக்கம் செய்தது. பிரான்ஸ் 70 நாடுகளுக்கு மேலாகவும், ஸ்பெயின் 35 நாடுகளுக்கு மேலாகவும், மற்றும் போர்த்துகல், டச்சு, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் நூற்றுக்கணக்கான பல பகுதிகளை காலனி மேலாதிக்கம் செய்தன. பிறநாட்டினரின் அரசாட்சியின் கீழ், ஆதிக்கத்தின் கீழ், நிர்வாகத்தின் கீழ் இருந்த எல்லாநாடுகளுமே ‘காலனி’ய நாடுகள் தான். மேலாதிக்கம் செய்த நாடுகளையும் காலனிய நாடுகள் என்றுதான் சொல்லப்படுகின்றன. இந்தியாவும் ‘காலனி’ய நாடாகத்தான் இருந்தது.
இன்று நாம் பயன்படுத்துகிற விதத்தில் ‘காலனி’ என்ற சொல்லோ, ‘சேரி’ என்ற சொல்லோ பழையகாலத்தில் பயன்படுத்தப்படவில்லை. ‘சேரி’ என்ற சொல் அனைவரும் ‘சேர்’ந்து வாழும் இடம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘காலனி’ என்ற சொல் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதோ அதே மாதிரி தான், ‘சேரி’ என்ற சொல்லும் இழிவுபடுத்தும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது
‘காலனி’ என்ற சொல் எப்படி உருவானது? உழவுசெய்’ அல்லது ‘சுற்றிவா’ என்னும் பொருள் குறித்த ‘க்வெல்’ என்னும் தொல் இந்தோ ஐரோப்பிய வேர்ச்சொல்லில் இருந்து ‘கொலெயரே’ மற்றும் ‘கொலொனுஸ்’ ஆகிய இலத்தின் வார்த்தைகள் உருவாகின. இவ்வார்த்தைகளுக்கு உழவு செய்பவன் மற்றும் குடியேறுபவன் என்று பொருள் கூறப்படுகின்றன. இவற்றிலிருந்தே அனைத்து நவீன ஐரோப்பிய மொழிகளான பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம், ஆங்கிலம், டச்சு மற்றும் ஜெர்மன் ஆகியவற்றில் ‘காலனி’ என்ற வார்த்தை உருவாகிறது. கி.பி 15 ம் நூற்றாண்டில் இருந்து கி.பி 20 ம் நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய ஏகாதிபத்தியம் செய்த நில ஆக்கிரமிப்புகளுக்கு காலனி ஆதிக்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது. அந்த ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் காலனிகள் என்றே அழைக்கப்பட்டன. 1947-ல் சுதந்திரம் அடையும் வரை இந்தியா பிரிட்டிஷ் காலனி என்றே அறியப்பட்டது.
கி.பி.1498ஆம் காலகட்டத்தில் போர்த்துக்கீசியரும், அவர்களையடுத்து டச்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும், டேனிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் இந்தியாவுக்கு வந்தார்கள்.அவர்கள் குடியிருப்பதற்காக உருவாக்கியப் பகுதிகளை‘காலனி’(colony) என்ற வார்த்தையால் அழைத்தார்கள். இந்திய நகரங்களில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கிற குடியிருப்புப் பகுதிகளை ‘காலனி’ என்ற சொல்லால் தான்அழைக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட பல வினோத நடைமுறைகளில், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியை ‘ஊரில்’ இருந்து வேறான ‘காலனி’ பகுதியாக அழைக்கும் முறையும் ஏற்பட்டது. ‘காலனி’ என்றாலே பட்டியலின மக்கள் வாழும் பகுதி என்ற சொல்லாடல் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் வேரூன்றி விட்டது.
கி.மு.7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் தொல்காப்பியத்தில், 'சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து /தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்/ புலனென மொழிப் புலனுணாந் தோரே' என்று பொருளதிகாரத்தில் வருகிறது. சேரியில்(ஊரில்) வாழக் கூடிய மக்களுடைய மொழி எளிமையானது, அனைவருக்கும் புரியக்கூடியது என்ற அர்த்தத்தில் தான் எழுதப்பட்டிருக்கிறது. சமுகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்ற பொருளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இளம்பூரணார் உரையும் இதே பொருளைத்தான் குறிக்கிறது.கி.மு. 300 – கி.பி. 100 காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் பதினெண் மேற்கணக்கு நூல்களில் ‘சேரி’ என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. குறுந்தொகையில் ஆறுபாடல்களில்(231, 258, 262, 298, 251) ‘சேரி’ என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது.தெரு, ஊர், கூடி வாழும் இடம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.“புன்னைஅம்சேரிஇவ்வூர்” (320)“புன்னை ஓங்கிய புலால் எம்சேரி”(251) என்று தான் எழுதப்பட்டிருக்கிறது. பட்டியலின மக்களையோ,அவர்கள் வாழும் பகுதி என்றோ எழுதப்படவில்லை.
அகநானூற்றில் 15பாடல்களில் (15, 65, 76, 110, 115, 140, 146, 200, 216, 220, 276, 346, 383, 386, 390) ‘சேரி’ என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது. எந்த ஒரு பாடலிலும் பட்டியலின மக்களைக் குறிக்கும் விதமாகவோ,அவர்கள் வாழும்பகுதியைக் குறிக்கும் விதமாகவோ எழுதப்படவில்லை.“யானும் நூன் சேரியனே”(386) “அவர் சேரியாம் செலினே" (110) என்று தான் எழுதப்பட்டிருக்கிறது. நற்றிணையில் 9 பாடல்களில் (63, 77, 145, 175, 171, 249, 331, 342, 380) ‘சேரி’ என்ற சொல் இடம் பெற்றிருந்தாலும் பட்டியலின மக்களைக் குறிக்கும் சொல்லாக, அவர்கள் வாழ்கிற இடத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படவில்லை. “கல்லென் சேரிப் புலவற் புன்னை” (63) என்று தான் எழுதப்பட்டிருக்கிறது. ‘செறிந்த சேரி செம்மல்மூதூர்’ என்று 15ஆவது பாடலில் வருகிறது. இதற்கு நன்றாக வடிவமைக்கப்பட்ட செழுமையான பழைய நகரம் என்றுதான் பொருள். பிரெஞ்சுமொழியில் ‘சேரி’ என்ற சொல் ‘அன்புள்ள’ என்ற பொருளில் தான் இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மதுரைகாண்டத்தில் –புறஞ்சேரி இருத்தகாதையில், கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளும் மதுரை நகருக்கு வெளியே ‘மாதிரி’ வீட்டில் தங்கியிருந்த இடம் புறஞ்சேரி. அங்கே தங்கியிருந்தவர்கள் பிராமணர்கள். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தில் பிராமணர்கள் ஊருக்குள், அதாவது சேரிக்குள் இல்லை. ஊருக்கு வெளியே ‘புறஞ்சேரி’யில் இருந்திருக்கிறார்கள். புறஞ்சேரியில் வாழ்ந்தவர்கள் எப்படி சேரிக்குள் வந்தார்கள் என்பதையும்,சேரிக்குள் வாழ்ந்தவர்கள் எப்படி புறஞ்சேரிக்குள் வந்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வரலாற்றைப் படிக்க வேண்டும். கி.பி.6ஆம் நூற்றாண்டில் பக்தி இலக்கியம் எழுதப்பட்டாலும் சோழர்கள் காலத்தில்தான்அவை பரவலாக்கப்பட்டன.
கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டுகளிலும், அதன் பிறகு சோழர்கள் ஆட்சியின்போதும், முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு மற்றும் பிற சிறுதெய்வ, நாட்டார் வழிபாட்டு முறைகளைத் தவிர்த்துப் பெருந்தெய்வ வழிபாட்டு முறை மேலோங்குகிறது. பிரமாண்டமான கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆகமவிதிகள் பின்பற்றப்படுகின்றன. சைவசாமிகள் பெருகுகின்றன. அதுவரை சமூகத்தின் பொதுச்சொத்தாக இருந்த கல்வி அறிவு, நாகரிகம், பண்பாடு, கலை அனைத்தும் கோயிலின் கருவறைக்குள் இருந்த இருட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்படுகின்றன. கருவறையின் கதவைத் திறக்கிற அதிகாரம் பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், கோயிலுக்குள் யார் வர வேண்டும், யார் வரக் கூடாது, யார் எங்கே வாழ வேண்டும், யார் படிக்க வேண்டும், யார் படிக்கக் கூடாது, கோயில் இருக்கும் தெருவில் யாரெல்லாம் நடக்கக்கூடாது என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மன்னர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அவை நடைமுறைக்கு வந்த பிறகுதான் (மனுநீதி), புறஞ்சேரி ஊரின் மையமாகவும், ஊரின் மையமாக இருந்த சேரி புறஞ்சேரியாகவும் மாறுகிறது. சேக்கீழார் எழுதிய பெரியபுராணத்தில் தான் முதன் முதலாக ‘தீண்டாச்சேரி’ என்ற சொல் இடம் பெறுகிறது. இது 12-ஆம் நூற்றாண்டு. இக்காலகட்டத்தில் தான் பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நடந்தால் தீட்டு என்ற கருத்தாக்கம் தமிழர் வாழ்வில் வலுவாக நிலைபெறுகிறது.கேரள மாநிலம் வைக்கத்தில்உள்ள வைக்கத்தப்பன் (சிவன்கோயில்) கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் நடப்பதற்கு உரிமை கேட்டுத்தான் பெரியார் போராடினார், சிறை சென்றார்.
சோழர்கள் ஆட்சிக்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்தவர்கள் விஜயநகரப் பேரரசு(14ஆம்நூற்றாண்டுமுதல்17ஆம்நூற்றாண்டுவரை). சோழர்களை விடவும் விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த மன்னர்கள், வர்ணாசிரம தர்மத்தைக் கூடுதல் அக்கறையுடன் பின்பற்றவும், செயல்படுத்தவும், பாதுகாக்கவும் செய்தார்கள். விஜயநகரப் பேரரசுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் (16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை) வைதீக முறையையும் வர்ணாசிரம தர்மத்தையும் மிக வன்மையுடன் செயல்படுத்தி போற்றிப் பாதுகாக்கவே செய்தார்கள். இவர்களுடைய காலத்தில் தான் சிற்றிலக்கியங்கள் செழித்தன. நாயக்கர்கள், மராட்டியர்கள் மற்றும் நவாபுகளின் ஆட்சியின் முடிவின் போது தான் பிரிட்டிஷ் நிர்வாகம் வருகிறது.
பட்டியலின பழங்குடி மக்களை மேன்மைப்படுத்துகிறேன் என்று சொல்லி ‘ஹரிஜன்’ என்று அழைத்தார் காந்தி. கோயிலுக்குள் போகவும், கோயில் இருக்கும் தெருவில் நடக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்த மக்கள் எப்படி ஹரியோட குழந்தைகளாக இருக்க முடியும்? ‘ஹரிஜன காலனி’ என்ற புதுப்பெயரை உருவாக்கியவர் காந்தி தான்.
மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு, தீண்டாமைக்குள்ளான அனைத்து மக்களையும் ஒரே அடையாளத்தின் கீழ் கொண்டுவந்து பட்டியலிட்டனர் பிரிட்டிஷ் நிர்வாகத்தினர். இது சிறுசிறு மன்னர்களையும், நிர்வாகப் பிரிவுகளையும் ஒன்றிணைத்து ‘இந்தியா’ என்று அழைத்தது போலத்தான். பறையர், பஞ்சமர் என்று அழைக்கக் கூடாது, ‘ஆதிதிராவிடர்’ என்று அழைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில்1922இல் தீர்மானம் கொண்டு வந்தார் எம்.சி.ராஜா. சட்டம் நிறைவேறிய காலத்திலிருந்து இன்றுவரை ‘ஆதிதிராவிடர்’ என்று தமிழிலும், SC என்று ஆங்கிலத்திலும் சாதிச் சான்றுகளில் இடம் பெறுகிறது. இந்த மண்ணின் பூர்வகுடிகள், திராவிட இனத்தைச்சேர்ந்தவர்கள் (பறையர்கள் அல்ல). ஆதிதிராவிடர்கள் என்று முதன் முதலில் பேசியும் எழுதியும் வந்தவர் அயோத்தித்தாச பண்டிதர்.
பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இந்தியா சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. அவர்களது வாழிட நிர்வாக வகைப்படுத்தல் பதிவேடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ‘சேரி‘ மற்றும் இதர சாதி குறித்த இழிபெயர்கள் ஆவணங்களில் அச்சேறின. அந்தப் பட்டியலில் நாளடைவில் ‘காலனி’ என்ற சொல்லும், ‘சேரி’ என்ற சொல்லுக்குச் சமமாக பட்டியலின மக்கள் வாழும் பகுதியை மட்டுமே அடையாளப்படுத்துகிற சொல்லாக சேர்ந்து கொண்டது. அதனால் இன்றும் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஊர்களின் பெயர்கள் ‘சேரி’ என்ற சொல்லோடு முடிவதைப் பார்க்க முடியும். ‘பாண்டிச்சேரி’, ‘வேளச்சேரி’ – என்பது படியலினத்தவர் வாழும் பகுதி மட்டுமே அல்ல. ‘சேரி’,‘காலனி’ என்ற சொற்கள் எல்லோரையும் அவமானப்படுத்துவதில்லை.எல்லோரும் வாழும் இடத்தைக் குறிப்பதில்லை. நாகப்பட்டினமாவட்டத்தில் ‘பார்ப்பனசேரி’ என்று ஒரு ஊர் இருக்கிறது.
முதலமைச்சரின் அறிவிப்பினால் ஊரகக் கிராமப்புறங்களில் அரசு ஆவணங்களில் இருக்கும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும். நகர்ப்புறங்களில் இருக்கும் பொதுவான குடியிருப்பைக் குறிக்கும் ‘காலனி’ என்ற சொல் ஆவணங்களிலிருந்து நீக்கப்படாது. ‘காலனி’ என்ற சொல்லுக்கு மாற்றாக மலர்களின் பெயர்கள், புலவர்களின் பெயர்கள், அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்படமாட்டாது.
‘காலனி’ என்ற பெயர் நீக்கப்படும் என்ற அறிவிப்பு சமூகநலத்திட்ட அறிவிப்பல்ல. உலகமே ‘காலனி’ என்ற சொல்லை வேறுவிதமாகப் பயன்படுத்துகிறபோது தமிழ்நாட்டில் சாதியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது. அதனால் அச்சொல்லை நீக்குகிறேன் என்று அறிவித்திருக்கிற தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலம் தோறும் போற்றப்படுவார்.
முரசொலி 12.06.2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக