திங்கள், 9 ஜூன், 2025

சொந்த வீடு - இமையம்

 படுக்கையை விட்டு எழுந்த துளசியம்மாள் ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு வெளியே பார்த்ததும், ‘ஊருக்குப் போய் வந்தால் என்ன’ என்ற எண்ணம் வந்தது.

“மவனும் மருமவளும் பெரிய வேலயில இருக்கயில, நீ மட்டும் எதுக்கு இங்க இருந்துகிட்டு ஒத்தயில கஷ்டப்படுற? ஒம் மருமவ ஒனக்கு மட்டுமா தனியா ஒல வச்சி வடிக்கப்போறா? போயி நாலு ஊரு, நாட்டெ பாத்துட்டு வா” என்று ஊரில் சொல்லாதவர்கள் இல்லை. அப்படிச் சொல்லும்போதெல்லாம் துளசியம்மாளுக்குச் சந்தோஷமாக இருக்கும். ஊரை விட்டுவந்து இருபத்தியெட்டு நாட்களாகிறது. இப்போது ஊருக்குப் போனால் ஊர்க்காரர்கள், “மவன் ஊட்டுக்குப்போயி இட்லியும் தோசயும் தின்னதால ஊரு நெனப்பெல்லாம் இல்லாமப் போயிடுச்சா?” என்றுதான் கேட்பார்கள். 

ஊருக்குப்போய் தன் மகனும் மருமகளும் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கிறார்கள், வீட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருக்கிறார்கள், என்னென்ன விதமான சாப்பாடெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் சொல்ல வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. மகனைப் பற்றியும் மருமகளைப் பற்றியும், அவர்களுடைய பெருமைகளைப் பற்றியும் சொல்வதற்காகவே ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்தாள். 

ஊருக்குப் போகிறேன் என்று சொன்னால், “வயசான காலத்திலெ, சரியா நடக்க முடியாத நிலையில, ஒத்தயில தனியா எதுக்கு இருக்கணும்? ஒங்களால எங்களுக்கு என்னா தொந்தரவு. ஊருக்குப் போறங்கிற பேச்ச விட்டுட்டு வேற பேச்சு பேசுங்க” என்று சொல்லி வாயை அடைத்துவிடுவார்களோ என்று யோசித்தாள்.

மகனுடைய பெருமைகளையும் மருமகளுடைய பெருமைகளையும் ஊரார்களிடம் போய் சொல்லாமல் எப்படி இருப்பது? ஒரே ஒரு நாள் மட்டும் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு அறையைவிட்டு வந்தாள்.

ஹாலில் லதா புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள், கெளதமும், கௌசிகாவும் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தனர். ராமன் தன் அறையில் கணினியில் எதையோ டைப் செய்துகொண்டிருந்தான். துளசியம்மாளை யாருமே பார்க்கவில்லை. அடுப்படிக்கு வந்து தண்ணீர் குடித்தாள். 

ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததிலிருந்து வீடு என்னவாயிற்றோ என்ற கவலை வந்துவிட்டது. துளசியம்மாவுக்கு ஒரு மாதத்திற்கு முன் உடம்பு சரியில்லாமல் போய், படுத்த படுக்கையாகிவிட்டதைப் பார்க்க வந்த ராமன், “இனிமே நீ இங்க இருக்கவே கூடாது. நெலம் இருக்கிறதாலதான இங்கியே இருக்கணுங்கிற. அது இல்லன்னா இங்க என்னா இருக்கு? நெலத்தயும் வீட்டையும் வித்துடலாம். ஒன்னெ இனிமே தனியா விடுறது நல்லதில்லெ” என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி நிலத்தை விற்றான்.

வீட்டையும் தோட்டத்தையும் விற்க முடியாது என்று துளசியம்மாள் பிடிவாதம் பிடித்ததாலும் அவன் அக்கா மூன்று பேருமே வீட்டை விற்க வேண்டாம் என்று சொன்னதாலும்தான் விற்கவில்லை. நிலத்தை விற்ற கையோடு சென்னைக்கு வந்ததுதான். வீடு என்னவாகியிருக்கும்? தோட்டத்தில் இருந்த புளியமரத்தின் பழத்தை எல்லாம் யாராவது உலுக்கிக்கொண்டு போய்விடுவார்களே, தோட்டத்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ஏழெட்டு வேப்ப மரங்களிலிருந்த பழத்தையெல்லாம் பிள்ளைகள் பொறுக்கிக்கொண்டு போய்விடுவார்களே என்று பல கவலைகள் மனதில் நிறைந்தது. வீட்டில் தினமும் யாரையாவது விளக்கு ஏற்றச் சொல்லிவிட்டு வந்திருக்கலாம். ராமன் படுத்திய அவசரத்தில் ஒழுங்காக எதையும் செய்யவில்லையே என்று தன்னையே நொந்துகொண்டாள். 

துளசியம்மாள் அறைக்குள் வந்ததுகூடத் தெரியாமல் ராமன் கணினியில் எதையோ டைப் செய்துகொண்டிருந்தான். ராமனுடைய முகத்தைப் பார்த்தாள். இந்த நேரத்தில் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தாள். அப்போது எதேச்சையாகப் பார்த்த ராமன், “என்னம்மா?” என்று கேட்டான். “ஒண்ணும் இல்லப்பா சும்மாதான் வந்தன். நீ வேலயப் பாரு” என்று சொல்லி, ராமனுடைய நாற்காலிக்கு எதிரில் இரண்டு மூன்றடி தள்ளி தரையில் உட்கார்ந்தாள். “ஊட்டுக்கு வந்ததிலிருந்து இந்த மிஷினிலியே ஒக்காந்து வேல பாக்குறியே. கண்ணு கெட்டுப் போவாது? செத்த படுத்தா என்ன?” என்று கேட்டாள். 

ராமன் கண்களை அழுத்தி தேய்த்துவிட்டுக்கொண்டு, “பொழப்பு அப்பிடி இருக்கு. என்னா செய்ய முடியும். பதவி பெருசுன்னா வேலயும் அப்படித்தான இருக்கும். மத்தியானம் சாப்புட்டியா?” என்று கேட்டான்.

“சாப்புடாம என்னப்பா.”

“சாயங்காலம் டீ, காபி குடிச்சியா?” என்று கேட்டுவிட்டு, ஹாலில் உட்கார்ந்திருந்த லதாவைப் பார்த்து, “சாயங்காலம் டீ, காபி ஏதாச்சும் அம்மா சாப்புட்டிச்சா?” என்று கேட்டான். லதா பதில் சொல்லவில்லை. “பொயிதோடவே சாப்புட்டம்பா” என்று துளசியம்மாள்தான் சொன்னாள்.

“ஏம்மா ஒரு மாதிரியா இருக்க?” 

“எப்பியும்போல நல்லாத்தான் இருக்கன், ஊருக்குப் போயிட்டு வரலாமின்னு நெனைக்கிறன்.”

“பேசாம இரும்மா. ஊருகீருன்னுக்கிட்டு.” 

“'ஊடு என்னாச்சின்னு தெரியல. நான் இங்க வந்த நாளா வெளக்கு ஏத்தாம ஊடு இருண்டுபோயிக் கெடக்கும்.”

“அதுக்குத்தான் நான் அன்னிக்கே அதெயும் சேத்து வித்துடலாமின்னு சொன்னன். நீ கேக்கல, அக்காவுளும் கேக்கல. அந்த ரவ ஊட்டுக்காக நீ ஊருக்குப் போவணுமா? திரும்பியும் ஒடம்பு சரியில்லாம போனா என்னா செய்வ?” கரிசனத்தோடு கேட்டான் ராமன்.

“நீ பொறந்து வளந்த ஊட்ட மட்டரகமா பேசாதப்பா.” 

“நான் பொறந்தங்கிறதுக்காக அந்த ரவ வீட்டுலியே சாவுறமுட்டும் இருக்கச் சொல்றியாம்மா?”

“கூடுன்னாலும் குருவிக்கு அதுதாம்ப்பா அரண்மன. இன்னிக்கி நம்பளுக்குப் பணம் காசி வத்துட்டதால அது ஊடு இல்லன்னு ஆயிடாது. நீ அந்த ஊட்டுக்கு வர வாணாம். நான் மட்டும் போயி என்னா ஏதுன்னு பாத்துட்டு வந்துடுறன்.”

“மொதல்ல போயிப் பாத்துட்டு வரன்ம்ப. அப்புறம் அங்கியே தங்குறன்ம்ப. ஏசி போட்டுக்கிட்டு நான் இங்க படுத்துத் தூங்குவன். நீ தனியா அங்க மண்ணுத் தரயில கெடப்பியாம்மா?” என்று ராமன் கேட்டது துளசியம்மாளின் நெஞ்சில் சந்தோஷத்தை உண்டாக்கியது. மகன் தன்மீது பாசத்தோடுதான் இருக்கிறான் என்று நினைத்தாள்.

பத்து வருசத்துக்கு முன்பு திடீரென்று ஒருநாள் ராமன் வந்து, “எங்கூட வேல பாக்குற பொண்ணு ஒண்ணு இருக்கு. நம்ப குடும்பத்துக்குத் தோதுபட்டுவரும். ரெண்டு சம்பளம் வந்தா நம்பளுக்கு நல்லதுதான? பொண்ணு நம்ப இனம்தான்” என்று சொன்னான்.

“பொண்ணு ஒனக்குப் புடிச்சிருந்தா சரி. நீதான அந்தப் பொண்ணுகூட வாழப் போற?” என்று துளசியம்மாள் சொன்னாலும், தன் மகள்களை அனுப்பி பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்துவர அனுப்பினாள். பெண்ணைப் பார்த்துவிட்டு வந்து, “பொண்ணு நல்ல நிறமாத்தான் இருக்கு. படிச்சியிருக்கு. தம்பிகூடத்தான் வேல பாக்குது. ரெண்டு சம்பளம் வந்தா, தம்பி நல்லாதான இருப்பான்” என்று மூன்று பேருமே சொன்னார்கள்.

லதாவுக்கும் ராமனுக்கும் கல்யாணம் நடந்த பிறகு எப்போதாவது சென்னைக்கு வரும்போது, ‘படிச்சி இருக்கா, வேலயில இருக்கா, அவகிட்ட வாயக் கொடுக்கக் கூடாது’ என்ற எண்ணத்தில் லதாவிடம் தேவையில்லாமல் ஒருவார்த்தைக்கூட பேச மாட்டாள் துளசியம்மாள். ஏதாவது பேச வேண்டும் என்றால்கூட ராமனிடம்தான் சொல்வாள். துளசியம்மாள்தான் என்றில்லை, அவளுடைய மூன்று மகள்களும்கூட அநாவசியமாக லதாவிடம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டார்கள். 

“படிச்ச பொண்ணு, வேலயில இருக்கிற பொண்ணு, மெட்ராஸிலியே பொறந்து வளந்து, வேல பாக்குற பொண்ணு, அதுகிட்ட வாயக் கொடுக்க வேணாம்” என்று ஒதுங்கிப்போய்விடுவார்கள். ஊர்த் திருவிழா, உறவினர்களுடைய ‘நல்லது கெட்டது’ என்று நூறு சொன்னால் பத்து விசேஷத்திற்குத்தான் லதா வருவாள். மற்ற விசேஷங்களுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டால், ‘வேல, வர முடியல” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவாள். அவளுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்காவிடம் பேசுகிற வார்த்தைகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட ராமன் சம்பந்தப்பட்ட ஆட்களிடம் பேச மாட்டாள்.

ராமன் கோபித்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, துளசியம்மாளும், அவளுடைய மகள்களும் லதாவிடம் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டார்கள். வாய்த்துடுக்கான ராமனுடைய கடைசி அக்கா ராஜம்மாள்கூட லதாவிடம் குறைத்தே பேசுவாள். அப்படி இருக்கும்போது எதற்காக லதா ஒரு மாதிரியாக இருக்கிறாள் என்பதுதான் துளசியம்மாளுக்குப் புரியவில்லை. 

“சும்மா கெடக்குற ஊட்டெ பாத்து ஊருல நாலு பேரு நாலு விதமா பேச மாட்டாங்க? நம்பப் பொருளுன்னு ஊருல அது ஒண்ணுதான இருக்கு. அதெ என்னா ஏதுன்னு பாத்துட்டு வரக் கூடாதா? ஒனக்கும் ஒம் பொண்டாட்டிக்கும்தான் பேங்க் வேல ஓயல. நாள் பொயிதினிக்கும் சீக்குப்புடிச்ச கோழியாட்டம் குந்துன எடத்திலதான் நான் குந்திக்கெடக்குறன். சும்மா குந்தியிருந்து எனக்குப் பழக்கம் இருக்கா? கவருமண்டுல கேசு அடுப்பு தரன்னாங்க. போன வருசம் டி.வி. கொடுத்தானில்லெ அந்த மாரி. ஊருல அப்பப்ப தலய காட்டுலன்னா மணியக்காரன் கேசு அடுப்ப எடுத்துக்கிட்டுப்போயிடுவான். அப்பறம் மாசா மாசம் வாங்குற இலவச அரிசியும் வாங்கல.” 

“விடும்மா ஊடு, காடுன்னுக்கிட்டு. அதெல்லாம் ஒரு வீடா?”

“என்னப்பா அப்பிடிப் பேசுற? நீ பொறந்து வாயிந்த மண்ணு அது. அந்த ஊட்டுலதான் நான் ஒங்கப்பாகூட நாப்பத்தாறு வருசம் இருந்தன். அவுரு செத்த இந்த ஏயி வருசமாவும் அந்த ஊட்டுலதான் இருந்தன். இந்த இருவத்தி எட்டு நாளாத்தான் இங்க இருக்கன்.”

“ஒனக்கு இங்க என்னா கொற, சொல்லு. லதா எதுனா சொன்னாளா?”

“அந்தப் பொண்ண கொற சொன்னா வாயி அயிவிப் போயிடும். ஊரான் ஊட்டுப் புள்ளெய பாத்து பொழப் பேச்சுப் பேசுறதா?” என்று சொன்ன துளசியம்மாள். திரும்பி லதாவின் பக்கம் பார்த்தாள். அதுவரை ராமன் உட்கார்ந்திருந்த அறையைப் பார்த்துக்கொண்டிருந்த லதா சட்டென்று முகத்தைத் தொலைக்காட்சிப் பக்கம் திருப்பிக்கொண்டாள். அது தெரிந்ததும் துளசியம்மாளுக்குத் தான் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் வந்தது. 

“அந்த ஊட்டயும் வித்துப்புட்டாதான் நீ ஊரு பேச்ச எடுக்க மாட்டன்னு நெனக்கிறன்.”

“அப்பிடிச் செய்யாத தம்பி. நான் போனதுக்குப் பின்னாடி ஒன் இஷ்டம்போல செஞ்சிக்க. அந்த ரவ ஊட்டுலதான் நாத்தனாரு ரெண்டு பேருக்கும் கொழுந்தனாரு மூணு பேருக்கும் கண்ணாலம் கட்டிவச்சன். ஒன்னோட அக்காளுவோ மூணு பேரு கண்ணாலமும் அந்த எடத்திலதான் நடந்துச்சி. ஒன்னோட ஒரு கண்ணாலம் மட்டும்தான் மண்டபத்திலே நடந்துச்சி. நாலு புள்ளெய நான் அந்த எடத்திலதான் பெத்தன். அக்காளுவோ மூணு பேரும் ஆளுக்கு மூணு நாலு புள்ளிவோன்னு அதுலதான் பெத்தாளுவோ. ஒரு கொறயும் கெடயாது. எல்லாப் புள்ளிவுளும் ஒரு பழுதும் இல்லாம மண்ணுல தரிச்சி நெலச்சி நிக்குதுவோ. நல்ல காரியமின்னு இல்லெ. ஒங்கப்பா சாவோட சேத்து நாலு கெட்ட காரியத்தயும் அந்த ஊட்டுலதான் தம்பி பாத்தன்.”

“அதெல்லாம் சரிம்மா. எல்லாக் காலத்துக்கும் அதையே பேசிக்கிட்டு இருக்க முடியுமா? அந்தக் காலம் வேற, இந்தக் காலம் வேற. ஒங்காலத்திலெ ஒரு வல்லம் சோளமோ வரகோ இருந்தா போதும், ஒரு நாளுபொழுது ஓடிடும். இப்ப அப்பிடியா? எம்மாம் வாங்குனாலும் பத்தல? ஒரு புட்டியில சோளம் வரவுன்னு எடுத்துக்கிட்டுபோயி செட்டிக் கடயிலெ கொடுத்தா உப்பு, மிளகா, புளின்னு கொடுப்பான். இப்ப அப்பிடியா? சோளக் கதிரு கொடுத்துத்தான நானே ஐஸ், மிட்டாயின்னு வாங்கித் தின்னுயிருக்கன். இப்ப தானியத்த கடயில கொடுத்தா எவன் வாங்கிக்கிட்டு பொருளு கொடுக்கிறங்கிறான் சொல்லு.”

“ஊடு முயிக்க மிஷினா வாங்கிப்போட்டா எப்பிடிப்பா சம்பளம் பத்தும்?”

“இன்னிக்கி இருக்கிற ஒலகம் ஒனக்குப் புரியாதும்மா. கம்ப்யூட்டர் இல்லன்னா இந்தப் பசங்களுக்குப் பொழுது போகாது. ஏ.சி.யில்லன்னா தூக்கம் வராது” என்று சொன்ன ராமன் ஹால் பக்கமாகப் பார்த்து, “லதா, தண்ணி கொடு” என்று சொன்னான். லதா படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டுப் போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். அந்த இடத்தில் நிற்பதற்குப் பிடிக்காததுபோல் திரும்பவும் ஹாலில் போய் உட்கார்ந்துகொண்டாள். லதாவின் முகம் எப்போதும் போல் இல்லாமல் இருப்பதாக துளசியம்மாளுக்குத் தோன்றியது. தலைவலியாக இருக்குமா, உடம்பு சரியில்லாமல் இருக்குமா என்று சந்தேகப்பட்டு லதாவின் பக்கம் திரும்பி, “ஒடம்புக்கு முடியலியாம்மா?” என்று கேட்டாள். துளசியம்மாள் கேட்டதைக் காதில் வாங்காத மாதிரி லதா உட்கார்ந்திருந்தாள். தொலைக்காட்சியின் சத்தத்தில் கேட்டிருக்காது என்று நினைத்துக்கொண்டு ராமன் பக்கம் திரும்பினாள். அவன் ஏதோ ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தான்.

அவன் படிப்பதைப் பார்த்ததும் துளசியம்மாள், “நான் ரூமுக்குப் போறம்பா” என்று சொன்னாள். “இரும்மா. என்னா அவசரம்?”

படித்துக்கொண்டிருந்த காகிதத்தை மேசைமீது வைத்தான். மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே தணிந்த குரலில், “சின்ன வயசு புள்ளைங்க மாரி அங்க போறன், இங்க போறன்னுக்கிட்டு அலயாதம்மா. இனிமே அலஞ்சி திரிஞ்சி என்னா செய்யப்போற? மழயில நனயக் கூடாது, வெயில்ல அலயக் கூடாது, காட்டுலப் போயி கஷ்டப்படக் கூடாதின்னுதான என்னெ படிக்க வச்செ?”

“ஆமா.”

“எனக்கு சௌகரியம் வந்தா அது ஒனக்கும் வந்த மாதிரிதான். அதனால வயசான காலத்திலெ எங்கேயும் அலயாம இரு. அந்த வீடு எப்பிடியாவது கெடந்தா போவுது. மொதல்ல ஒன்னெக் கவனிச்சிக்க. என்னோட ஒரு மாச சம்பளத்தோட மதிப்புக்கூட அந்த ஊடு இருக்காது.”

“பணமும் ஊடும் ஒண்ணாவாது தம்பி.” 

“அப்பிடின்னா இது வீடு இல்லியா?”

“ஊட்டுல இருக்கிற நாலு சனமும் சண்டக்காரங்க மாரி மூலாமூலக்கி குந்திக்கிட்டு ஒருத்தருக்கொருத்தரு பாத்துக்காம, பேசிக்காம இருக்கிறதுதான் ஊடா? பத்து சனம் வந்து போற எடத்துக்குப் பேருதான் ஊடு. நம்ப ஊட்டுல என்னிக்காச்சும் ஒரு மூட்டெ தானியம்கூட இல்லாம இருந்திருக்கா? இல்லாதவங்க, வழிப்போக்கின்னு யாராச்சும் ஒரு நாளாச்சும் வந்து சோறு வாங்காம இருந்திருக்காங்களா? காலயிலெ ஏயி எட்டு மணிக்கி ஊட்டப் பூட்டிட்டுப் போயி, வெளக்கு வைக்கிற நேரத்துக்கு வந்து அவதிஅவதின்னு எதியோ ஆக்கித் தின்னுப்புட்டு தூங்க வேண்டியது. அப்புறம் காலயில எயிந்திருச்சி ஓட வேண்டியது” என்று துளசியம்மாள் சொன்னபோது லதா திரும்பி அறைப் பக்கம் பார்த்தாள். அவளுடைய பார்வையும் முகமும் ஒரு மாதிரியாக இருப்பதாக துளசியம்மாளுக்குத் தெரிந்தது.

“இது நம்ப ஊர் இல்ல. புரியுதாம்மா” என்று ராமன் கேட்டான்.

படிக்கிற காலத்திலும், வேலைக்குப் போன பிறகும், ராமன் அதிகமாகப் பேச மாட்டான். கல்யாணமான இந்தப் பத்து வருசத்தில் அவன் துளசியம்மாளிடம் பேசிய வார்த்தைகளை எண்ணிவிடலாம். இங்கு வந்து நிலையாகத் தங்கிய இந்த இருபத்தியெட்டு நாட்களில் இன்றுதான் அதிசயமாகக் கூடுதலாகப் பேசியிருக்கிறான். அதுகூட அவளுக்குப் பிடிக்கவில்லையா? “சாப்புட்டியா?”, “டீ குடிச்சியா?”, “ஜாக்கிரதயா பூட்டிக்கிட்டு, டி.வி.யப் பாத்துக்கிட்டு இரு” என்பதுதான் அவன் தினமும் பேசுகிற வார்த்தைகள். அதற்கு மேல் அவனும் பேச மாட்டான், இவளும் பேச மாட்டாள். அப்படியிருக்கும்போது லதா கோபப்படுவதற்கு விசயமில்லையே. தான் இங்கு வந்திருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. “யாரு மனசுல என்னா இருக்கோ” என்று சொல்லி முனகினாள். “ஊடு மட்டுமில்லெ. ஊட்டுக்குப் பின்னால இருக்கிற புளியமரத்துப் பழங்களயும், வேப்பமரத்துப் பழங்களயும் யாராவது பறிச்சிக்கிட்டுப் போயிடுவாங்கப்பா, அதனால் அதெயெல்லாம் பொறுக்கி உரு சேத்துட்டு வரன். அக்காளுவுளயும் பாத்திட்டு வந்துடுறன். ஊர்ல இருந்தா வாராவாரம் மொற வச்சிக்கிட்டு வந்து பாப்பாளுங்க. நான் இல்லன்னு நம்ப ஊட்டுக்கு வராம இருப்பாளுவோ. இல்லாதப்பட்ட ஊடுன்னாலும் பொறந்த எடத்துக்குப் போயிட்டு வரதுதான் பொண்ணுங்களுக்குச் சந்தோஷம்”

“இல்லாதவங்க பறிச்சிக்கிட்டுப் போனா போறாங்கம்மா. எட்டணா, ஒரு ரூவாய எல்லாம் பெருசா பேசிக்கிட்டு. விடும்மா அந்தப் பேச்ச. பேன் காத்து சூடாயிருந்தா ஏ.சி. போடச் சொல்றன். அந்த ரூம்ல போயி படுத்துக்க” என்று ராமன் சொன்னபோது அறைப் பக்கம் லதா பார்த்ததை துளசியம்மாள் கவனித்தாள்.

“அதெல்லாம் வாண்டாம்ப்பா” என்று சொன்னாள். லதாவினுடைய மனதை அறிந்துவிட வேண்டும் என்று நினைத்தாள். “அந்தப் புள்ளெதான செருமப்படுது. வேலைக்கும் போயிக்கிட்டு ரெண்டு புள்ளெவுளயும் வளக்கிறதின்னா சும்மாவா? அந்தப் புள்ளெ ஊட்டுலயிருந்தும் ஒருத்தரும் வந்து ஒத்தாச பண்ற மாரி தெரியல. ஒண்டிக்காரப் புள்ளெ என்னாப் பண்ணும்” என்று சொல்லிவிட்டு லதாவைப் பார்த்தாள்.

லதா இந்த முறை திரும்பிப் பார்க்காதது மட்டுமல்ல; துளசியம்மாளின் பேச்சைக் கேட்ட மாதிரியே காட்டிக் கொள்ளவுமில்லை. தனியாக ஆளில்லாத இடத்தில் உட்கார்ந்திருப்பது மாதிரி இருந்தது அவளுடைய தோற்றம். ‘ஊருக்கு எதுக்குப் போறங்குறீங்க? இங்க உங்களுக்கு என்ன கஷ்டம், கடைசி காலத்தில நாங்கதான உங்களப் பாக்கணும். பேசாம இருங்க’ என்று ஒரு வார்த்தை ஏதாவது லதா சொல்வாள் என்று எதிர்பார்த்தாள். அவளிடமிருந்து சிறு முனகல் சத்தம்கூட வரவில்லை. “பொய்யாக்கூட பேசலியே, வாய் வாத்தக்கூட அவளுக்குப் பஞ்சமாப் போயிடிச்சே” என்று பொருமினாள் துளசியம்மாள்.

 ‘இதே அவளோட அம்மாவா இருந்தா வாய மூடிக்கிட்டு இருப்பாளா? அவளோட சொந்தக்காரங்களா இருந்தா வாயத் தொறக்காம இருப்பாளா?’ என்று யோசித்த துளசியம்மாளுக்கு முதன்முதலாக லதாவின் மீது சந்தேகம் வந்தது. சந்தேகக் கண்ணோடு லதாவைப் பார்த்தாள். “சரிம்மா வேற ஒண்ணுமில்லியே” என்று கேட்டான் ராமன்.

“எங்கிட்ட என்னப்பா சேதி இருக்கப்போவுது? ஒக்காந்தே கெடக்குறதுதான் கஷ்டமா இருக்கு. தனியா ஆளில்லாத ஊட்டுல எப்பிடி பொயிதினிக்கும் ஒக்காந்திருக்கிறது?”

“ஒக்காந்து இருக்கிறதிலெ என்னம்மா கஷ்டம்?”

“வேல செய்யாம எப்பிடித் தம்பி இருக்கிறது? ஒக்காந்துகிட்டே சோறு தின்னா, தின்னச் சோறு எப்பிடிச் செரிமானம் ஆவும்?”

“எழுவது வயசிக்கு மேல ஒன்னால என்னம்மா வேல செய்ய முடியும்?”

“இப்பிடி இருக்கிற பொருள அப்பிடித் தூக்கிப்போடாம, அப்பிடி இருக்கிற பொருள இப்பிடித் தூக்கிப்போடாம எப்பிடியிருக்கிறது? சும்மா குந்திக்கெடக்குறது பித்துப் புடிச்சாப்ல இருக்கு தம்பி.” துளசியம்மாவின் குரலில் சலிப்பு கூடியிருந்தது.

“வீட்டுல இருக்க போர் அடிச்சா அக்கம்பக்கத்திலெ பேசிக்கிட்டு இரேன். பக்கத்தில இருக்கிற கோயிலுக்குப் போயிட்டுவாயேன்.”

“எந்தச் சனத்த தெருவுல பாக்க முடியுது? காலயிலேயே அங்க இங்கேன்னு ஓடிப்போவுதுவோ. இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும் கேட்டப் பூட்டிக்கிட்டு, கதவச் சாத்திக்கிட்டு உள்ளாரியே டி.வி.யப் பாத்துக்கிட்டு கெடக்குதுவோ. அநாத காட்டுக்கு வந்த மாரி இருக்கு. காரு சத்தம்தான் ராத்தியும் பகலும் ஓயாம கேக்குது. சத்தத்தில தூக்கம் வர மாட்டங்குது. நீ சொல்ற கோயிலுக்குப் போயிட்டு, திரும்ப ஊட்ட கண்டுபிடிச்சி வர வழி தெரியுமான்னு தெரியல.”

“சென்னைன்னா அப்பிடித்தாம்மா இருக்கும். பசங்கக்கூட பேசிக்கிட்டு இருக்க வேண்டியதுதான?”

“ஒனக்காவது ஒரு நேரம் வுட்டா ஒரு நேரம் ரெண்டு வாத்த பேச நேரம் இருக்கு. அதுவுளுக்கு அதுகூட இல்லெ. இங்கிலிஸிலியே பேசிக்குதுவோ. காலயிலேயே போயி சாயங்காலம்தான் வருதுவோ. அப்புறம் எயிதுதுவோ. அதிலயும் ரவ நேரம் கெடச்சா இந்தா இந்த மிஷினுக்கு மின்னாடி வந்து குந்திக்குதுவோ. ஒம் புள்ளிவுள ஓடி ஆடி வௌயாண்டு நான் என் கண்ணால பாக்கல தம்பி.”

“இங்கலாம் அப்பிடித்தாம்மா.”

“நான் ஊர்ல இருந்தா தண்ணிக்கிப் போகயில ரெண்டு பேத்துக்கிட்ட பேசலாம். வெளிய வாசலுக்குப் போவயில ரெண்டு பேத்துக்கிட்ட பேசலாம். ஊடு கூட்ட, வாச கூட்டன்னு எம் பொயிது போயிடும். வாசல்ல ஒக்காந்தா ஊரு சனங்களயே பாத்துப் பேசிப்புடலாம். இங்க இருந்தா, ஒம் மூஞ்சிய நான் பாக்கலாம், எம் மூஞ்சிய நீ பாக்கலாம், அவ்வளவுதான்” என்று சொல்லும்போது லதா எதையோ தேடுவது மாதிரி ராமனுக்குப் பக்கத்தில் வந்து தேடினாள். அதைப் பார்த்ததும் துளசியம்மாளுக்கு என்ன தோன்றியதோ சற்று அழுத்தமாகவே, “நம்ப ஊட்டுக்குப் போனாத்தான் தம்பி எனக்கு நல்லாத் தூக்கம் வரும்” என்று சொன்னாள். “என்னம்மா சொல்ற?” என்று ஆச்சரியத்துடன் ராமன் கேட்டான்.

பக்கத்திலிருந்த லதா ஒரு வார்த்தை பேசாதது மட்டுமல்ல துளசியம்மாள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதையும் இதையும் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் நாற்காலியில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். லதாவையே பார்த்த துளசியம்மாவால் அவள் மௌனத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ராமனுக்கும் லதாவுக்கும் கல்யாணம் முடிந்து சரியாகப் பத்து வருசங்கள் முடிந்துவிட்டன. இந்தப் பத்து வருசத்தில் லதாவுக்கும் துளசியம்மாளுக்கும் சிறு சண்டையோ மனக்கசப்போ வந்ததில்லை. மகன் வீட்டுக்கு வந்தால் ஒரு நாள், இரண்டு நாள்தான் தங்குவாள். அதற்குமேல் அவளால் இருக்க முடியாது. “வீட்டு வேல கெடக்கு, காட்டு வேல கெடக்கு” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள். ராமனுடைய அக்காள்கள்கூட எப்போதாவதுதான் சென்னைக்கு வருவார்கள். எப்போது வந்தாலும் ஒருநாள், இரண்டு நாள்தான் தங்குவார்கள். கூடுதலாக ஒருநாள்கூட இருக்க மாட்டார்கள். லதாவினுடைய குணம் அவர்களுக்குத் தெரியும். இப்போதுதான் இருபத்தியெட்டு நாள் தங்கியிருக்கிறாள். அப்படியிருக்கும்போது ஏன் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன்கிறாளே என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் துளசியம்மாள்.

ஒரு வார்த்தைகூட பேசாத பெண் போடுகிற சோத்தை எப்படிச் சாப்பிடுவது, இத்தனை நாட்களாக என்ன எண்ணத்தில் சோறு போட்டிருப்பாள். தன்னைத் தனியாகப் படுக்க வைத்த மாதிரி, சாப்பிடுகிற தட்டையும் தனியாகத்தான் வைத்திருப்பாளோ? செல்லாத பொருளை மூலையில் போட்டு வைப்பது மாதிரி தன்னை தனியாகப் போட்டுவிட்டாளோ என்ற சந்தேகம் வந்ததுமே, “விடிஞ்சதுமே நான் ஊருக்குப் போறன். என்னெ காரு ஏத்திவிட்டுடு தம்பி” என்று சொன்னாள்.

“முட்டாள்தனமா பேசாம, போயி படும்மா” என்று சொன்ன ராமன் லதாவின் பக்கம் பார்த்து “லதா, அம்மா ஏதோ உளறிக்கிட்டு இருக்கு, அதெ என்னா ஏதுன்னு கேளு” என்று முறைப்பாடு செய்தான். லதா, அறைக்குள்ளும் வரவில்லை, வாயையும் திறக்கவில்லை. 

ஒரு நாள்கூட, “சாப்புட வாங்க” என்றோ, “சாப்புடுங்க”என்றோ சொன்னதில்லை. “சாப்புடுறீங்களா?”, “டீ குடிக்கிறீங்களா?” என்றுதான் கேட்டிருக்கிறாள். இந்த இருபத்தியெட்டு நாட்களாக இந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு ஒரு வார்த்தைகூடப் அவள் பேசவில்லை என்பது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. ‘மகள்களுடைய வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறாள் என்று நினைக்கிறாளா?’ லதாவைப் பற்றி நினைக்கநினைக்க துளசியம்மாளுக்குக் கோபம் வந்தது. 

“நான் இங்க இருக்கிறது ஒனக்குத் தொந்தரவா இருக்காம்மா?” என்று நேரடியாகவே லதாவிடம் கேட்டாள். துளசியம்மாள் கேட்டதைக் காதில் வாங்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள் லதா. முன்பைவிட இப்போதுதான் துளசியம்மாளுக்கு அதிகக் கோபம் உண்டானது. ஒரு வார்த்தை பேசினால் என்ன? துளசியம்மாளுக்கு வெட்கமாக இருந்தது. சம்பந்தமில்லாத இடத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. உடனே ஊருக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்தாள். ராமனுடைய அக்காள்கள் மூன்று பேருமே சாதாரண குடும்பங்களில்தான் கல்யாணம் கட்டிக்கொண்டு போனார்கள். எல்லாருக்குமே காட்டு வேலைதான். “எங்கூட வந்து ரெண்டு நாளு இரும்மா” என்று மூன்று பேருமே போட்டிப்போட்டுக்கொண்டு கூப்பிடுவார்கள். “நீங்க வந்து இருந்திட்டு போங்க” என்று துளசியம்மாள் சொல்லிவிடுவாள். மீறிப்போனாலும் ஒரு வேளை சாப்பாட்டுடன் “வீட்டுல வேல கெடக்கு, காட்டுல வேல கெடக்கு” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாள். 

கௌதமும் கெளசிகாவும் இவளாகப் பேசினால்தான் பேசுவார்கள். அப்படியே பேசினாலும் இவள் கேட்கிற கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வார்கள். ஆனால் அவளுடைய மகள்களுடைய பிள்ளைகள் துளசியம்மாள் மேல் உயிரையே விட்டுவிடுவதுபோல்தான் இருப்பார்கள். இந்தப் பிள்ளைகள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒவ்வொரு விசயமாகத் துளசியம்மாள் யோசித்தாள். தன்னுடைய அறைக்குப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த துளசியம்மாள், “காலயில நான் ஊருக்குப் போறன். ஒனக்கு செலவா இருக்கல” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே வந்த ராமன், “ஒன்னால எனக்கு என்னம்மா செலவு?” என்று கேட்டான்.

“குந்த வச்சி சோறு போடுற இல்லெ. அதான் செலவு. ஒரு ஆளுக்குச் சோறு போடுறதின்னா சும்மாவா?”

“அதிகமாப் பேசாத, திட்டிப்புடுவன். ஊருக்குப் போவ வேற காரணம் இருந்தா சொல்லு. இப்பவே எங் கார்லியே அனுப்பி விடுறன்.”

 “இங்க இருக்கிறது ஜெயில்ல இருக்கிறது மாதிரி இருக்குப்பா.”

“இந்த ஊர்ல நெறயா பேரு அப்படித்தாம்மா இருக்காங்க.”

“பதினெட்டாவது மாடியில இருக்கிறது, ஆகாசத்துல இருக்கிற மாதிரி இருக்குப்பா. எங்காலு தரய மிதிச்சு இருவத்தியெட்டு நாளாச்சிப்பா.”

வியாழன், 5 ஜூன், 2025

ஆசைகள் - இமையம்

ஆசைகள் - இமையம்

டுத்த எடுப்புலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? போன வருசமே மயமாரி இல்லெ. கொல்ல நல்லாவும் வௌயல. இந்த வருசமாச்சும் மய நல்லா பேஞ்சி, கொல்ல நல்லா வௌயணுமின்னு கீய வியிந்து கும்புட்டுட்டு மம்பட்டிய எடு” என்று மாரியம்மா சொன்னதும், ஒரு இலந்தை முள் செடியை வெட்டப்போன துரைசாமி மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு கிழக்கு முகமாக விழுந்து கும்பிட்டான். அவன் தரையில் விழுந்து கும்பிட்டதைப் பார்த்ததும், சங்கரும் ராணியும் தாங்களாகவே விழுந்து கும்பிட்டனர். அவர்கள் கும்பிட்டதைப் பார்த்ததும் மாரியம்மாவுக்குச் சிரிப்பு வந்தது. “கிராக்குக்குப் பொறந்ததுங்க” என்று சொன்னாள்.

“இந்த வருசம் என்னா கதயா ஆவப்போவுதோ? நாம்ப ஒண்ணு நெனச்சா காடு ஒண்ணு நெனைக்குது. மானம் பேஞ்சிக் கெடுக்கப்போவுதா? காஞ்சிக் கெடுக்கப்போவுதா? யாரு கண்டா?” என்று சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்து இலந்தை முள் செடியை வெட்டினான் துரைசாமி. அடுத்து, கண்ணில் பட்ட புல், பூண்டு, நுனா செடிகள் என்று வெட்ட ஆரம்பித்தான். அவன் வெட்டிப்போடுகிற செடிகளை எடுத்து ஒன்றுசேர்த்து குவிப்பதற்காக சங்கரும் ராணியும் போட்டி போட்டனர். “இந்த செடிய வெட்டுப்பா, இந்த முள்ள வெட்டுப்பா” என்று சங்கரும் ராணியும் ஒவ்வொரு செடியின் முன்னும் ஓடிச் சென்று காட்டினர். 

புல், பூண்டு, காவாளச் செடி, ஊனான் கொடிகளையும் இன்னும் கையால் பிடுங்க முடிகிற செடி, கொடிகளையும் மாரியம்மா பிடுங்கிப்போட்டுக்கொண்டிருந்தாள். மழை பெய்து இரண்டு நாட்களாகிவிட்டாலும் மண்ணில் ஈரம் இருந்ததால் செடிகொடிகளைப் பிடுங்குவது எளிதாக இருந்தது. 

 “கிட்டகிட்ட வராதீங்க, ஒரு நேரம் மாரி ஒரு நேரம் இருக்காது. மம்பட்டியோட எல கழட்டிக்கிட்டு வந்து மேல பட்டாலும் பட்டுடும். வெட்டுன பிறவு எடுங்க, வெட்டுறதுக்கு மின்னாடியே கிட்ட வராதீங்க” என்று துரைசாமி சொன்னான். அவன் சொல்வதைக் காதில் வாங்காமல், முன்பு போலவே ஓடிஓடிச் சென்று செடி, கொடிகளைக் காட்டவும், வெட்டுவதற்குள்ளாகவே அவற்றை எடுக்கவும் சங்கரும் ராணியும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தனர்.

வரகு விதைத்து அறுத்திருந்த நிலம் என்பதால் பூண்டுச் செடிகள்தான் அதிகமாக முளைத்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நுணாச் செடிகள், இலந்தை முள் செடிகள், ஓணான் கொடிகள் முளைத்திருந்தன. எரு கொட்டி வைத்திருந்த இடங்களில் மட்டும் கோரையும், அம்மக்காய் செடியும் நாத்து நட்டு வளர்த்தது போல் முளைத்திருந்தன. கோரைப்புல்லையும் அம்மக்காய்ச் செடிகளையும் வேரோடு பிடுங்கிப்போட ஆரம்பித்தாள் மாரியம்மா.

“நீங்க ஒண்ணும் செடியக் காட்ட வாணாம். நானே பாத்து வெட்டிக்கிறன். நீங்க அம்மாகிட்டப் போங்க” என்று சொல்லி துரைசாமி விரட்டியதும் சங்கரும் ராணியும் ஓடிவந்து மாரியம்மாவுடன் சேர்ந்து கோரைப் புல்லையும் அம்மக்காயையும் பிடுங்க ஆரம்பித்தனர். இருவரும் வேகவேகமாகப் பிடுங்கியதால் கோரையும் அம்மக்காய் செடியையும் வேரோடு பிடுங்காமல் அரைகுறையாகப் பிடுங்கினார்கள். அதைப் பார்த்த மாரியம்மா, “பாதிப் பாதியா புடுங்குனா திலுப்பியும் மொளச்சிக்கும், ரவ ஈக்கு இருந்தாக்கூடப் போதும், உசுரு பொழச்சிக்கும். செடியோட தலையப் புடிச்சிப் புடுங்கக் கூடாது. செடியோட சூத்துல புடிச்சிப் புடுங்கணும்” என்று சொன்னதோடு, செடிகளைப் பிடுங்கியும் காட்டினாள். அவள் பிடுங்கியது மாதிரியே சங்கரும் ராணியும் பிடுங்க ஆரம்பித்தனர்.

மூன்று தக்காளிச் செடிகளும், ஏழெட்டு மிளகாய்ச் செடிகளும் வளர்ந்திருந்தன. அவற்றை ராணியும் சங்கரும் போட்டிபோட்டுக்கொண்டு பிடுங்கினர். மிளகாய், தக்காளிச் செடிகளை மாரியம்மாவிடம் காட்டி, “இதெ நான் எடுத்துக்கிட்டுப்போய் ஊட்டுக்குப் பின்னால நட்டு வைக்கப்போறன்” என்று ராணி சொன்னாள். சங்கர், “நானும்தான்” என்று சொன்னான். “ஊட்டுக்குப் போறதுக்குள்ளார வதங்கிப்போயிடும். நட்டு வச்சாலும் மொளைக்காது. தூக்கிப்போட்டுட்டு வேலயப் பாருங்க” என்று மாரியம்மா சொன்னாள். மிளகாய், தக்காளிச் செடிகளை இடது கையில் வைத்துக்கொண்டே குனிந்து கோரை, அம்மக்காய் செடிகளைப் பிடுங்கிப்போட ஆரம்பித்தனர். மாரியம்மா எரு கொட்டி வைத்திருந்த அடுத்த இடத்திற்குப் போனாள். போகும்போதே கண்ணில்பட்ட பூண்டு செடிகளையும் சீலைப் புல்லையும் பிடுங்கிப்போட்டுக்கொண்டே போனாள். அவளோடு சேர்ந்துகொண்டு சங்கரும் ராணியும் போனார்கள். 

துரைசாமி கண்ணில்பட்ட முள் செடிகளையும் பிற செடி, கொடிகளையும் வெட்டிப்போட்டுக்கொண்டே போனான். நிலத்தின் சனி மூலையில் ஒரு தோட்டப்பாய் அளவுக்கு அருகு முளைத்திருந்தது. அதை வெட்ட ஆரம்பித்தான். அருகுவின் வேர் படர்ந்திருந்த இடமெல்லாம் ஓர் அடி ஆழத்திற்கு வெட்டினான். ஒரு கணு அருகு இருந்தால்கூட போதும், முளைத்துவிடும். முளைப்பதோடு கொடி மாதிரி படர்ந்துவிடும். அதனால் சிறு துண்டு அருகுகூட இல்லாமல், வேர்கூட இல்லாமல் வெட்டி போட்டான். 

“இங்க ஒரு எடத்தில் அருவம் புல்லு இருக்கு, வந்து வெட்டு” என்று மாரியம்மா கூப்பிட்டாள். “வட்டம் போட்டு அடையாளம் பண்ணி வை, வந்து வெட்டுறன்” என்று துரைசாமி சொன்னான். அருகு படர்ந்திருந்த இடம்வரை வட்டமாகக் காலால் வட்டமிட்டாள் மாரியம்மா. அவள் வட்டமாகப் போட்ட இடத்திலேயே சங்கரும் ராணியும் காலால் வட்டம் போட ஆரம்பித்தனர். 

ஒரு இடத்தில் வரகு பயிரும், அம்மக்காய் செடியும் கொசகொசவென்று தண்ணீர் ஊற்றி வளர்த்தது மாதிரி வளர்ந்திருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மாரியம்மா, “ஒரம் போட்டு வளத்த மாதிரி வளந்து நிக்குது பாரேன்” என்று சொல்லிவிட்டு அம்மக்காய் செடிகளைப் பிடுங்க ஆரம்பித்தாள். சங்கரும், ராணியும் வரகுச் செடியைப் பிடுங்கிப்போடுவதைப் பார்த்த மாரியம்மா, “அதெப் புடுங்க வாணாம். ஏர் ஓட்டும்போது தானாவே செத்துப்போவும்” என்று சொன்னாள். 

அப்போது பக்கத்து நிலத்துக்காரி கருப்பாயி வந்தாள். “என்னா மாரியம்மா விடியறதுக்குள்ள வந்திட்டியா? கொல்ல வேல பாதி முடிஞ்சிப்போச்சே!” என்று சொன்னாள். சங்கரும் ராணியும் புல் பூண்டு செடியைப் பிடுங்குவதைப் பார்த்துவிட்டு, “பள்ளிக்கூடத்துப் புள்ளிவுள ஏண்டி கொண்டாந்து காட்டுலப் போட்டு அடிக்கிற?” என்று கேட்டாள்.

“இப்பியே காடு எது, ஊடு எதுன்னு தெரிஞ்சிக்கிட்டா நல்லதுதான. நம்ப காட்டுலதான செய்யுதுவோ” என்று மாரியம்மாள் சொன்னாள்.

“இப்பத்தான் பத்தாவது படிச்சவனே பெரிய படுப்புப் படிச்சாப்ல குனிஞ்சி நிமிந்து வேல செய்ய மாட்டங்கிறான். காட்டுக்கு எதுக்கு என்னெ கூப்புடுறன்னு கேக்குறான்.”

“ஒங் கொல்லயிலெ வேல முடிஞ்சிப் போச்சா?”

“அட நீ ஒண்ணு, நான் ஒருத்தியா எம்மா வேல செய்ய முடியும்? தண்ணீ கொண்டாந்தன், கால் தடுக்கி ஊத்திப்புட்டன். குடமும் ஒடுக்கு வியிந்துப்போச்சி, அதுக்காக சாயங்காலம் ஊட்டுல என்னா சண்ட நடக்கப் போவுதின்னு தெரியல.”

“வேணுமின்னா போட்ட? காலு தடுக்கிறதுக்கு யாரு என்னா பண்ண முடியும்? ஆனாலும் ஒம் மாமியாக்காரி இருக்காளே யே அப்பா.”

“அந்தப் பாவியப் பத்தி பேசி, எதுக்கு இந்த நேரத்தில வவுத்து எரிச்சலக் கிளப்புற? குதிரன்னு சொன்னா கழுதன்னு அர்த்தம் பண்ணிக்கிறவகிட்ட வந்து மாட்டிக்கிட்டன். எந்த நேரத்திலெ என்னப் புடிச்சி அந்தக் குருடி மவன்கிட்ட கொடுத்தாங்களோ, அன்னாமுன்னா நான் படுறது சொல்லி மாளாது. நாக்க வறட்டுது, ரவ தண்ணி கொடு” என்று கருப்பாயி கேட்டதும், மாரியம்மா தண்ணீர் எடுத்துக்கொண்டு வா என்று சொல்வதற்குள்ளாகவே வன்னி மரத்தின் கீழ் வைத்திருந்த தண்ணீர்க் குடத்தை நோக்கி சங்கர் ஓட்டமாக ஓடினான்.

“ஒனக்குத் தேவலாம். வரவு வெறச்ச கொல்ல. வேல சட்டுன்னு முடிஞ்சிடும், எனக்கு அப்பிடி முடியுமா? சோளம் வெறச்ச கொல்ல. ரெண்டு காணி பூராவும் தட்டய இயித்து ஆவுணுமே” என்ற சலிப்புடன் சொன்னாள் கருப்பாயி.

“இந்த வருசம் என்னா பயிரு வுடப் போற?”

“இனிமே இந்த சோளம், வரவு மொகத்திலியே முழிக்கக் கூடாது. கல்ல, எள்ளுன்னு பணப்பயிறா வுட வேண்டியதுதான்.”

“சோத்துக்கு என்னாப் பண்ணுவ?”

“இன்னம் எம்மாம் நாளக்கித்தான் சோள சோத்தயும், வரவு சோத்தயுமே தின்னுக்கிட்டு இருக்கிறது. இப்பத்தான் ரேசன் கடயில இலவசமா அரிசிப் போடுறானே. அப்பறம் என்னா இருக்கு?”

“அதுவும் சரிதான்.”

தண்ணீரைக் குடித்து முடித்த கருப்பாயி, “வெயில்ல புள்ளியுளப் போட்டு வாட்டாத” என்று சொல்லிக்கொண்டே தன் நிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

நான்கு இடங்களிலிருந்த அருகம்புல்லை வெட்டினான் துரைசாமி. அதோடு கண்ணில்பட்ட இலந்தை, நுனா செடிகளையும் வெட்டினான். ஒன்றிரண்டு இடங்களில் முனைத்திருந்த எருக்கஞ்செடிகளையும் வெட்டினான். ஒரே இடத்தில் ஏழு எட்டு பனங்கன்றுகள் முளைத்திருந்ததைக் கண்டு, “நடு கொல்லயில எப்பிடி மொளச்சியிருக்கும்” என்று சொல்லிவிட்டு பனங்கன்றுகளை வெட்ட ஆரம்பித்தான். அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் ராணி.

ஒரு இடத்தில், தோட்டப்பாய் அளவுக்குச் சுக்கங்காய் செடி படர்ந்திருந்தது. முதலில் செடியை வெட்டாமல் அதிலிருந்த காய்களைப் பறித்தான். ராணியிடம் இரண்டு, மூன்று காய்களைத் தின்னச் சொல்லிக் கொடுத்தான். தன் வாயிலும் ஒரு காயைப் போட்டு மென்று தின்றான். சங்கரைக் கூப்பிட்டு அவனிடமும் மூன்று, நான்கு காய்களைக் கொடுத்தான். எஞ்சிய பத்து, இருபது காய்களைத் துண்டில் போட்டு சிறு மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு செடியை வெட்டினான். வெட்டிய செடியைச் சுருட்டி அவனே எடுத்துக்கொண்டுபோய் குவியலாகப் போட்டிருந்த இடத்தில் போட்டான். நிலத்தில் புல், பூண்டு, செடி, கொடி, முள்செடி என்று இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தான். அவன்கூடவே சங்கரும் ராணியும் போனார்கள். “நிழலுக்குப் போங்க. சுக்கங்காய எடுத்துக்கிட்டுப்போயி தின்னுங்க” என்று சொன்னான். துரைசாமியின் பேச்சைக் கேட்காமல் சங்கரும் ராணியும் அவன் பின்னாலேயே அலைய ஆரம்பித்தனர்.

தண்ணீர்க் குடத்துடன் வந்த கோசலை, “என்னாடி மாரியம்மா வேல முடிஞ்சிட்டாப்ல இருக்கு” என்று கேட்டுக்கொண்டே வந்தாள். “இதென்ன ஐம்பது, நூறு காணியா? கோமணத்துணியாட்டம் ரவ நெலம். வேல முடியாம என்னா செய்யும்? தல சொமயோட நிக்குற போ, போயி நேரத்தோட ஆளுவுளுக்குத் தண்ணியக் கொடு” என்று மாரியம்மா சொன்னாள்.

“என்னாத்த பாத்து என்னாத்துக்கு ஆவப்போவுது? நாம்ப ஒண்ணு நெனச்சா மானம் ஒண்ணு நெனைக்குது, பூமி ஒண்ணு நெனைக்குது. சாவுற முட்டும் இந்தக் கல்லுகருமாந்தரம்தான். இந்த வருசம் மானம் என்னாத்த செய்யப்போவுதோ? எம்மாம் பாடுபட்டு என்னாத்துக்கு ஆவப்போவுதோ? நாலு புதுத்துணிய எடுத்துக் கட்டிப்பாக்க போறமா, ஒரு நக நட்டத்தான் எடுத்துப் போட்டுப்பாக்கப் போறமா? நம்ப சுயிநாதம் மண்ணுல கெடந்து பொரள வேண்டியதுதான். யே, தண்ணி கொடத்துல காக்கா ஒக்காருது பாரு” என்று சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.  

“யே, யேய்” என்று கத்திக்கொண்டே காக்காவை விரட்ட ஓடினான் சங்கர்.

“கருப்பாயி ஊட்டுக் காட்டுல போயி சோளத்தட்டயும் சருவும் கொண்டா. நெருப்ப வச்சி கொளுத்தி வுட்டுட்டுப் போவலாம்” என்று துரைசாமி சொன்னான். “செடி கொடி, முள்ளு மெளாறலாம் காய வாணாமா? பச்சயா இருந்தா எப்பிடி எரியும்” என்று பதிலுக்குக் கேட்டாள். 

“காஞ்சிது போதும், போயி சோளத்தட்டயக் கொண்டா, எரியுறவர எரியட்டும்.”

“சொன்னா கேக்கணும். மூள இருந்தாத்தான கேக்குறதுக்கு?” என்று சொல்லி முனகிக்கொண்டே கருப்பாயி நிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மாரியம்மா. அவள் எங்கே போகிறாள் என்று தெரியாமல் சங்கரும் ராணியும் அவளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

பிடுங்கிப்போட்டிருந்த, வெட்டி, கொத்திப் போட்டிருந்த செடி, கொடி, முள் எல்லாவற்றையும் ஏழெட்டு இடத்தில் குவியலாகக் குவித்துப் போட்டிருந்தான். மாரியம்மா கொண்டு வந்திருந்த சருகையும், சோளத்தட்டையையும் வைத்து ஒரு குவியலில் நெருப்பை உண்டாக்க முயன்றான் துரைசாமி. செடி கொடிகள் பச்சையாக இருந்ததால் நெருப்பு பற்றவில்லை. நெருப்புப் பற்றாததைப் பார்த்து, “காயணும் காயணுமின்னு சொன்னத கேட்டாதான” என்று சொல்லி மாரியம்மா முனகினாள். அவள் முனகியதைப் பொருட்படுத்தாமல், “இன்னம் ஒரு கொடங்க சோளத்தட்ட கொண்டா” என்று துரைசாமி சொன்னான். அவனை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள் மாரியம்மா. 

பெரும்பாடுபட்டுத்தான் நெருப்பை உண்டாக்கினான் துரைசாமி, “நெருப்புக்கிட்ட போவாதீங்க. நெருப்புப் பொறி கண்ணுல பட்டுடும்” என்று மாரியம்மா கத்திக்கொண்டேயிருந்தாள். அவள் கத்துவதைப் பொருட்படுத்தாமல் சங்கரும் ராணியும் எரிகிற நெருப்புக்குப் பக்கத்தில் கிடந்த செடி, கொடி, புல் பூண்டுகளை எடுத்துப் போட்டவாறு இருந்தனர். துரைசாமி ஒவ்வொரு குவியலுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டே போனான். கடைசி குவியலுக்குப் பக்கத்தில் ஒரு முறம் அளவுக்கு ‘அருகு’ முளைத்திருந்தது தெரிந்ததும் மண்வெட்டியை எடுத்துவரச் சொல்லி வெட்டினான். மண்ணுக்குள்ளிருந்து மூன்று, நான்கு பூரான்கள் வெளியே வந்து அங்குமிங்கும் ஓடின. ஒவ்வொரு பூரானாக அடித்துக் கொன்றான். செத்த பூரான்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் போடப்போவது மாதிரி சங்கரும் ராணியும் பயமுறுத்தி பாசாங்கு செய்தனர்.

“சீ நாயிவுள, எதுல வௌயாடுறதின்னு ஒரு இது இல்லியா? வாங்க கயிதவுளா” என்று சொல்லி ராணியையும் சங்கரையும் அழைத்துக்கொண்டு வன்னிமர நிழலில் வந்து உட்கார்த்தாள் மாரியம்மா. வன்னி மரத்தின் அடியில் கட்டெறும்புகள் திரிந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும், “மரத்துக்கிட்டெ போவாதீங்க, ஒரே எறும்பா கெடக்கு. கடிச்சா தடிச்சிப்போயிடும்” என்று சொன்னாள்.

பொன்வண்டு ஒன்று பறந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதைப் பிடிப்பதற்காக சங்கர் ஓடினான். அவனோடு ராணியும் ஓடினாள்.

ஒவ்வொரு குவியலாகப் பார்த்துக்கொண்டே வந்தான் துரைசாமி. எரியாமல் கிடந்த செடி கொடிகளை எடுத்து நெருப்பில் போட்டான். ஒரு சில குவியல்களை நன்றாக எரியும்படி கிண்டி கிளறிவிட்டான். தவறிப்போய் எதையாவது வெட்டாமல் விட்டுவிட்டோமோ என்ற சந்தேகத்தில் நிலத்தை ஒருமுறைச் சுற்றிப் பார்த்துவிட்டு வன்னி மர நிழலுக்கு வந்தான். வியர்வையைத் துடைத்துக்கொண்டே தரையில் உட்கார்ந்தான். “கருப்பாயி வந்தாளே என்னா சொல்லிட்டுப்போனா?” என்று கேட்டான்.

“வரவு, சோளமின்னு வெறைக்காம, எள்ளு கல்லன்னு வெறைக்கப்போறாளாம். நம்பளும் கல்ல எள்ளுன்னு இந்த வருசம் வெறைக்கலாமா?”

“சோத்துக்கு ஒங்கப்பன் ஊட்டுலயிருந்து வருமா?”

“எங்கப்பன் ஊட்டெ எதுக்கு இப்ப இயிக்கிற? இப்பத்தான் ரேஷன்ல இலவச அரிசி கொடுக்கிறான்னுல. வரவ அரச்சிச் சாவணும். சோளத்த துவச்சி சாவணும். இதுன்னா அரிசிய வாங்குனமா ஓலயில போட்டமான்னு போயிடும்.” 

“மாட்டுக்குத் தீனி?”

“இப்பத்தான் டிராக்டர வச்சி ஏறு ஓட்டுறாங்க. வரவு, சோளம், நெல்லு அறுக்கவும் மிஷினு வந்துடுச்சி.”

“அப்ப மாடு வாணாங்கிற? வாசல எதால தெளிப்ப? ஊட்ட எதால மொழுவ?”

“நீ வரவு, சோளமின்னே வெறச்சிக்கிட்டு இரு. நானா வாணாங்கிறன். இந்தா, அடுத்த எட்டாம் நாளு மூட்டுத்தரன்னு காதுல, மூக்குல கெடந்ததோட, காலுல கெடந்த கொலுசயும் அடவுவச்ச. ஆச்சி, வருசம் அஞ்சி. போன பொருளு இன்னம் ஊடு திரும்பல. கேட்டா வட்டியே சாப்புட்டிருக்கும், புதுசா வாங்கிப்புடலாம்ங்கிற. நான் செத்தாதான் வாங்குவ?” என்று சொல்லும்போதே மாரியம்மாவுக்குக் கண்கள் கலங்கின.

“வித்து சாராயம் குடிச்சிட்டனா?”

“எனக்குத்தான் இல்லெ. அந்தக் குட்டிக்கி ஒரு பொருளு எடுத்து வைக்க வாணாமா?”

“பாலு குடிக்கிற புள்ளைக்காடி சீரு கேக்குற?”

“அவ பாலு குடிக்கிற புள்ளயா? ஆச்சி பதனாலு வயசு. பள்ளிக்கூடம் தொறந்தா ஒம்பதாவதுக்குப் போவப்போறா, எந்த நேரத்திலயும் வயசுக்கு வந்துடுவா. அன்னிக்கிப் போயி ஒவ்வொரு பொருளும் வாங்குவியா?”

“அதான் ஒந்தம்பி இருக்காரில்ல பட்டி பரூர் ஜமீன், அவுரு கொண்டாந்து வண்டி வண்டியா எறக்கிட மாட்டாரா?” என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தான். துரைசாமியை எரித்துவிடுவது மாதிரி பார்த்த மாரியம்மா. “எந் தம்பிகிட்டெ போவலன்னா ஒனக்குத் தூக்கம் வராது. நேத்தா தாலி கட்டிக்கிட்டு வந்தன், எந் தம்பி கொடுக்கிறதுக்கு. எனக்கு இருக்கிறதே ஒரு தம்பி. போன மொற வந்தப்ப, என்னா எதுன்னு கேக்கலன்னு கோவிச்சிக்கிட்டு போனவன் ரெண்டு, மூணு மாசமா இந்தத் திச திரும்பாம இருக்கான்” என்று சொல்லும்போதே மாரியம்மாவின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

“வெளயுற கொல்லயும் வௌயாமப் போறதுக்கு அயிவுறியா? நானே ஆத்த மாட்டாதவன் ஊத்த வெட்டி எறக்கிறமாரி இந்த மண்ணுல கெடந்து உருண்டு புரண்டுக்கிட்டு கெடக்குறன்” என்று சொல்லிவிட்டு எழுந்து ஒவ்வொரு குவியலாகச் சென்று எரியாமல் கிடத்தவற்றைக் குவித்துப்போட்டு எரிய விட்டான்.

வன்னி மர நிழலுக்கு ராணியும் சங்கரும் வந்தனர். ராணியைப் பக்கத்தில் உட்கார வைத்து அவளுடைய தலையில் பேன் பார்க்க ஆரம்பித்தாள் மாரியம்மா. வன்னி மரத்துக்கு வந்த துரைசாமி, “வெளயுற கொல்லயில எவளாவது பேனு பாப்பாளா? நேரம் என்னா ஆவுது? பொடி சுட ஆரம்பிச்சிடிச்சி, ரெண்டு மையிலு தூரம் போவ வாணாமா? புள்ளிவோ எப்பிடி இந்தப் பொடியில ஊடுப் போயிச் சேரும்?” என்று கேட்டான்.

“புள்ளிவோமேல ரொம்ப அக்கறதான்” என்று ஒரு தினுசாகச் சொன்னாள் மாரியம்மா. 

“புள்ளப் பெத்தவனுக்குத் தெரியாதாடி? புள்ளக்கி என்னா செய்யுறதின்னு?”

“தெரியாம என்னா கெடக்கு. பள்ளிக்கூடத்துக்குப் போற எடத்தில ‘இந்தமாரி’ ஆயிப்போச்சின்னு வந்து நின்னா அன்னிக்கி ஆடுவியா?” என்று கேட்டாள். துரைசாமி பதில் பேசவில்லை. தூரத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“காதுல, மூக்குல போட்டுக்கிறதுக்கு ஒரு பொட்டுத் தங்கம் எம் பொண்ணுக்கு இருக்கா? காலுக்கு ஒரு கொலுசுகூட இல்ல. எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு பொட்டப் புள்ளெ, அதுக்கு இந்த வயசில போட்டு அழகு பாக்காம அப்பறம் எப்பப் போட்டுப்பாக்கறது?” 

“நாளக்கி ஏறு ஓட்டணும். பருவத்தில மய பேயணும். வெரைக்கணுமேன்னு கவலப்படாம துணிய எடு, நகய எடுன்னு என்னமோ பேசிக்கிட்டு இருக்கிறவ?”

“நல்லத் துணி கட்டாம, நல்ல சோறு திங்காம இருக்குறதுக்கு எதுக்குக் காட்டுல வந்து பாடுபடணும்?”

“நகதான எடுக்கணும்? எடுத்திடலாம், கொல்ல வௌயட்டும்.”

“கொல்ல என்னிக்கி நல்லா வெளஞ்சிருக்கு? நீ நக எடுத்து எம்புள்ளக்கிப் போடுறதுக்கு. ஒரு கருவ மணிகூட எடுத்துப்போட மாட்ட. நான் போட்டுக்கிட்டு வந்தது இருந்தா நான் எதுக்கு ஒங்கிட்ட கேக்கப்போறன்?” என்று சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தான் துரைசாமி. 

“ஒடம்புத் தெரியாமத்தான் பூட்டிவுட்டு அனுப்புனாங்க ஒங்க அப்பனும், அம்மாளும். ஏண்டி போக்கத்தப் பேச்சப் பேசிக்கிட்டுக் கெடக்குற?”

“கட்டுன துணியோடதான் வந்தனா? ஏயி எட்டு பவுனு போட்டுக்கிட்டு வல்ல? எல்லாத்தயும் வித்துத் தின்ன வாயாலதான் சொல்ற ஒண்ணும் போட்டுக்கிட்டு வல்லன்னு. அதயும்தான் மண்ணாப்போன சாமிவோ பாத்துக்கிட்டு இருக்கு. இன்னிக்கோ நாளைக்கோ எம்பொண்ணு தெரண்டு நிக்கப்போறா, அதுக்கு என்னாச் செய்யப்போற?” என்று எதிராளியிடம் கேட்பது மாதிரி கேட்டாள். அதற்குச் சிரித்துக்கொண்டே, “அதான் ஒந்தம்பி இருக்காரில்ல மந்திரி. அவுரு எடுத்துக்கிட்டு வர மாட்டாரா அக்கா மவளுக்குக் கிலோ கணக்குல தங்கத்த?” 

“இன்னொரு தரம் எந் தம்பிய இயித்தா மானம் மரியாத பூடும். நீ பெத்தப் புள்ளக்கி எந் தம்பி எதுக்குக் கிலோ கணக்குல தங்கம் போடணும். இந்த வருசம் காட்டுல என்னா பயிர் வுடப் போற?” என்று கேட்டாள்.

“என்னாடி புது கேள்வியெல்லாம் கேக்குற? எப்பியும் போல வரவு, சோளமின்னு தூவி வுட்டுட்டுப் போவ வேண்டியதுதான?”

“எள்ளு, கல்லப் போடு. மூணு மாச பயிறு. கார்த்திக ஐப்பசியில கையிக்குக் காசி வந்துடும். எள்ளு, கல்லயப் புடுங்குனதும் கொத்தமல்லிய தூவி வுடு, அதுவும் மூணு மாசம்தான். பொங்க கழிஞ்சி திருனா போடுற சமயத்தில் கையிக்குக் காசி வந்துடும். போன வருச பொங்க, தீவாளிக்குக்கூட ஒரு சீட்டித்துணிகூட எடுத்துத் தரல. காடு வெளயட்டும்ன்னு சொன்ன. காடு என்னிக்கி வௌயறது, நீ என்னிக்கி புது துணிய எடுத்துத் தர்றது? ஊரு ஒலகத்திலே பொட்டச்சிவோ எல்லாம் எப்பிடி மேனி கொலயாம இருக்காளுவோ, நம்பளுக்குத்தான் எந்தக் கொடுப்பனயும் இல்லியே.”

“எள்ளு, கல்லன்னு போட்டுட்டு சோத்துக்கு ரேசன் கடயிலப்போயி நிக்கப்போறியா?”

“ஊரே நிக்குதில்ல.”

“வெக்கம் மானம் இருந்தா நிக்க மாட்டானுவோ.”

“ஊரு நடப்பு தெரியணும். இல்லன்னா ஒலக நடப்பாவது தெரியணும். ஒண்ணுக்கும் ஒதவாத மண்ணாந்தய கட்டிக்கிட்டு என்னாப் பண்றது? தண்ணி வேணுமின்னா குடிச்சிபுட்டு மிச்சத் தண்ணிய கீய ஊத்திப்புட்டு கொடத்த எடு” என்று ராணியிடம் சொல்லிலிட்டு எழுந்தாள். தலைமுடியை அவிழ்த்து, உதறித் தட்டிவிட்டு மீண்டும் கொண்டை போட்டாள். “வாடா பயலே" என்று சங்கரைக் கூப்பிட்டுக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள். 

மாரியம்மாளுக்கு அடுத்து சங்கரும், அவனுக்கு அடுத்து ராணியும் நடந்துகொண்டிருந்தனர். கடைசியில் துரைசாமி நடந்துகொண்டிருந்தான். வண்டி பாட்டைக்கு வந்தபோது யாரிடமோ சொல்வது மாதிரி, “வர எட்டாம் நாளு பள்ளிக்கூடம் தொறக்கப்போவுது. பயலக் கொண்டுபோயி ஆறாவது சேக்கணும். அவனுக்கு ஒரு புதுத்துணி எடுக்க வாணாமா?” என்று கேட்டாள்.

“தோளுல மாட்டுறமாரி பையும் வேணும்மா” என்று சங்கர் சொன்னான்.

“எனக்குப் புதுப்பாவாடயும் சட்டயும் எடுக்கணும்மா. யூனிபார்ம் கிழிஞ்சிப்போச்சி. புள்ளைங்க கிண்டல் பண்ணுதுவோ” என்று ராணி சொன்னாள்.

“புது பேனா, புது ஜாமண்டரி பாக்ஸ், செருப்பு எல்லாம் வாங்கித் தரணும். இப்பியே துணி எடுத்து கொடுத்தாத்தான் டெய்லரு தச்சி தருவான்” என்று சங்கர் சொன்னான். அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ராணி, “எனக்கும் புது பேனாவும் ஜாமண்ட்ரி பாக்ஸும் வேணும்” என்று சொன்னாள். “பாதயப் பாத்து போம்மா” என்று துரைசாமி சொன்னான்.

ஆறாம் வகுப்பு போவது பற்றியும், என்னென்ன பொருள்களை வாங்கித்தர வேண்டும் என்பது பற்றியும் சங்கர் சொல்லிக்கொண்டே நடந்தான். ராணியும் தன் பங்குக்குத் தனக்கு வேண்டிய பொருட்களின் பட்டியலைச் சொல்ல ஆரம்பித்தாள்.

 “எல்லாம் வாங்கித்தரன். காடு வெளயட்டும். மொதல்ல தடத்தப் பாத்து நடங்க. எல்லாத்துக்கும் மானத்து மகாராசன் மனசு வைக்கணும், கொல்ல வெளயணும்” என்று சொன்னான். 

 ‘எல்லாம் வாங்கித் தரன்’ என்று துரைசாமி சொன்னதைக் கேட்டதும் சங்கரும் ராணியும் தாங்கள் கேட்ட எல்லாப் பொருள்களும் கிடைத்துவிட்டது மாதிரி மகிழ்ச்சியில் மாரியம்மாளைத் தாண்டி முன்னால் போட்டிபோட்டுக் கொண்டு ஓடினர். சிறிது தூரம் சென்றதும் சட்டென்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு ராணி உட்கார்ந்தாள். 

“கால இடிச்சிக்கிட்டியாடி” என்று 

கேட்டுக்கொண்டே விஷயம் புரியாமல் ராணியை நோக்கிப் போனாள் மாரியம்மா.



வியாழன், 8 மே, 2025

வீம்பு (சிறுகதை) - இமையம்

 வீம்பு - இமையம்

“போனா, எம் பொணம்தான் போவும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சிவமாலை.

“ஏண்டி அப்பிடிச் சொல்றவ? வாசப்படியில குந்திக்கிட்டு அப்பிடிச் சொல்லலாமாடி? மவளுக்குக் கண்ணாலம் கட்டணும். மவனுக்குப் பொண்ணு பாக்கணும். பேரன் பேத்தின்னு எடுக்க வாணாமா?” என்று துளசி கேட்டாள்.

“ஆமாம், ஆமாம். பெத்தவ நீயே என்னெ எப்பிடியாப்பட்ட படுகுழில தள்ளி வுட்ட. அந்த மாரிதான் நான் பெத்ததும் படுகுழியில தள்ளி வுடும். யாரு வந்தா என்ன, யாரு போனா என்ன. நான் இனி அந்த ஊட்டுல அடியெடுத்து வைக்க மாட்டன்.”

“அப்பறம் எங்க போவ?”

“எங்கியோ போறன். எனக்குன்னு யாரு இருக்கா? நான் எப்ப வருவன்னு சுடுகாடு காவக் காத்துக்கிட்டு இருக்கில்ல, அங்க போறன். அந்த எடத்த யாரும் புடுங்கிக்க மாட்டாங்கல்ல” என்று சொன்ன சிவமாலை, முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவள் அழுததைப் பார்த்ததும் துளசிக்குக் கண்கள் கலங்கின. அவளுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த கோகிலாமணியும் அழுதாள். அழுதுகொண்டிருந்த மூன்று பெண்களையும் பார்த்த கதிரவன் பக்கத்திலிருந்த மர உரலில் உட்கார்ந்தான். 

“வளர்ற புள்ள எதுக்குடா தேயுற உரல்ல குந்துற? போயி திண்ணையில குந்து” என்று துளசி சொன்னதைக் காதில் வாங்காமல், “நேரமாவறது தெரிலியா?” என்று கேட்டான். மூன்று பெண்களில் ஒருவர்கூட வாயைத் திறக்கவில்லை. அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கண்ணாயிரம், “இன்னிக்கி அயிது என்னாப் பண்றது? ஆதிகாலத்தில எம் பேச்ச ரெண்டு பொட்டாசிவுளும் கேக்கல. ஒறவு கொண்டாடப் போனீங்க. சட்டியா, பானயா அப்பப்ப மாத்திக்கிறதுக்கு?” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் பின்புறம் சென்றார். இரண்டு மாடுகளை அவிழ்த்து ஓட்டிக்கொண்டு வந்து சிவமாலைக்குச் சற்றுத் தள்ளி, ‘என்ன செய்தி?’ என்று கேட்பதுபோல நின்றார். கண்ணாயிரம் தன் பதிலுக்காகத்தான் நிற்கிறார் என்று தெரிந்ததும் சிவமாலை தலையைக் குனிந்துகொண்டு, “நான் இனி அந்த ஊட்டுக்குப் போவ மாட்டன்” என்று சொன்னாள்.

“நிசமாவா” என்று கண்ணாயிரம் கேட்டார்.

 ‘ஆமாம்’ என்பதுபோல சிவமாலை தலையை மட்டும் ஆட்டினாள்.

“நீ சாவறதா இருந்தாலும் அந்த ஊட்டுலதான் சாவணும், அப்பத்தான் இந்த ஊருல என்னால வேட்டி கட்டிக்கிட்டுப் போவ முடியும். அப்பறம் ஒன்னிஷ்டம்” என்று சொல்லிவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார் கண்ணாயிரம்.

கண்ணாயிரம் கோபித்துக்கொண்டு போவதைப் பார்த்ததும் சிவமாலைக்கு அழுகை வந்தது. மூக்கை உறிஞ்சினாள். “ஊர்க்காலி மாடு மேய்க்கிறவனோட போயிருந்தாக்கூட எனக்கு இம்மாம் தீம வந்து நேந்திருக்காது” என்று சொன்னாள்.

“ஒங்கப்பன் சீமானுக்கு ஒன்னெக் கட்டிக்கொடுக்கிறத நானாடி வாணாமின்னன். நானாடி மறிச்சிக்கிட்டன்” என்று துளசி கேட்டாள்.

“தம்பி வேணும், தம்பி வேணுமின்னு பாதாளத்தில என்னெத் தள்ளிவுட்ட பழிகாரி நீதான். எங்கப்பன் அப்பவே வாணாமின்னுதான் சொன்னாரு” என்று சிவமாலை கோபமாகச் சொன்னாள்.

“அப்ப, நீயும்தாண்டி சொன்ன, கட்டுனா மாமனத்தான் கட்டுவன்னு” என்று துளசி சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தாள் சிவமாலை. பிறகு தலையைக் கவிழ்த்துக்கொண்டு விரலால் தரையைக் கீறிக்கொண்டே சொன்னாள், “ஆமாம், சொன்னன், புத்திக்கெட்டுப்போயி.”

“எந் தம்பிக்கு என்னாடிக் கொறச்ச? இந்த வயசிலயும் புது மாப்ளமாரிதாண்டி இருக்கான்.”

“பன்னியும் தளதளன்னுதான் இருக்கு. அதனால ஊரு மேயப் போவச் சொல்லு.”

“சீ, வாய மூடு, புள்ள மக்களாயிட்ட, ஒரு குடும்பமாயிட்ட. இந்த வயசில அப்பன் ஊடு, ஆத்தா ஊடுன்னு வந்து குந்தியிருக்கலாமா? போயி ஒன்னோட ஊட்டப் பாரு. பொழப்பப் பாரு. போயி ஒழுங்குமுறமயா வாழறதுக்குண்டான வழியப் பாரு.”

“அது இந்த சென்மத்தில நடக்காது. நான் என்ன அம்மாம் ரோசம் கெட்டவனுக்குப் பொறந்தவன்னு எண்ணிக்கிட்டியா?” என்று கேட்டுச் சீறினாள் சிவமாலை.

“நீ இங்க வந்து இன்னியோட பதனஞ்சி நாளு ஆவுது. இத்தன நாளுல ஒன்ன கூப்பிட ஒரு நாளாவது வராம இருந்திருக்கானா?”

“அவனால முடியலன்னுதான் இன்னிக்கி விடியறதுக்குள்ள எம் புள்ளிவுள அனுப்பிவுட்ருக்கான். நடக்கட்டும், அப்பியாச்சும் ஒந் தம்பியோட ஓக்கிதயும் ஒங்கப்பன் ஊட்டு ஓக்கிதயும் நாலு பேருக்குத் தெரியட்டும். எல்லாத்தயும் மூடி மறச்சிப் போறதாலதான என்னெ எருக்கம் பூவாட்டம் நெனக்கிறீங்க? கண்ணாயிரம் மவ யாருன்னு காட்டுறன்” என்று வீம்பாகச் சொன்னாள் சிவமாலை.

“எங்க அப்பன் ஊட்டு ஓக்கித ஊருக்குத் தெரிஞ்சா போவுது. மொதல்ல ஒங்கப்பன் ஊட்டு ஓக்கித கப்பலு ஏறாமப் பாத்துக்க” என்று துளசி சொன்னதும் சிவமாலைக்குக் கோபம் தலைக்கு ஏறியது. சண்டைக்காரியிடம் கத்துவது மாதிரி கத்தினாள்: “எங்கப்பன இயித்தா அவ்வளவுதான். பெத்தவனுகூடப் பாக்க மாட்டன். ஊரு சிரிச்சிப்போற மாரி பேசிப்புடுவன். கூடப்பொறந்தவன 'ஏண்டா மயிரான் இப்பிடிச் செய்யுற'ன்னு கேக்க ஒனக்கு ஓக்கித மசுரு இல்ல, ஏழு ஊருக்கு ஞாயம் பொளக்க வந்துட்ட.”

சிவமாலையின் கோபத்தை துளசி பொருட்படுத்தவில்லை. லேசாகச் சிரித்துகொண்டே, “வாய மூடுறி நாதேறி, யாருகிட்ட என்னா பேசுறதின்னு ஒரு கணக்கு வாணாம்?” என்று கேட்டாள்.

“ஒன்னோட கணக்கும் தெரியும், வழக்கும் தெரியும். ஊர்க்காலி மாடாட்டம் திரியிற ஒந் தம்பியோட கணக்கும் வழக்கும் எனக்குத் தெரியும். எங்கப்பன மட்டும் இழுக்காத. அப்பறம் வாயில வந்தபடி பேசிப்புடுவன்.”

“அப்பன் அப்பன்னு சொல்லுறியே, ஒங்கப்பன் என்ன பெரிய சீமானாடி? நாலே நாலு செம்பறி ஆட்ட மேய்ச்சிக்கிட்டுக் கெடந்தவன்தாண்டி ஒங்கப்பன். நான் தாலி கட்டிக்கிட்டு இந்த ஊட்டுக்கு வந்தப்ப, இந்த ஊட்டுல என்னா இருந்துச்சி? நாலு செம்பறி ஆடும், அது போட்ட புழுக்கயும், மூத்திர வாடையும்தான் இருந்துச்சி. இதான் ஒங்கப்பனோட ஆஸ்தி. அண்டா, தேக்குசா, வெங்கலப் படி, சொம்பு, தம்பளரு, விளக்கு, பண்டபாத்திரம்னு எல்லாச் சாமானையும் நான்தான் கொண்டாந்தன். கை கரவ மாடு ஒண்ணு ஓட்டியாந்தன். ஒரு ஜோடி உழவுமாடு எங்கப்பன் புடிச்சி வுட்டாரு. வருசா வருசம் எங்கப்பன்தான் வந்து இந்த ஊட்டக்கூட மேஞ்சாரு. ஒரு தீவாளி வுடாம, ஒரு பொங்க வுடாம ஒரு ஜோடி வேட்டி சீல எடுத்துக் கொடுக்கல? நீ பொறந்ததிலிருந்து தாலி கட்டிக்கிட்டுப் போறவரைக்கும் நீ கட்டிக்கிட்டு மினுக்கினியே அது எல்லாம் யாரு எடுத்துக் கொடுத்தது? ஒங்கப்பனா எடுத்துக் கொடுத்தான்?”

“எல்லாம் ஒங்கப்பன் ஊட்டுல இருந்துதான் வந்துச்சி. ஊரே சொல்லும்” என்று சிவமாலை ஒரு தினுசாகச் சொன்னதும் துளசிக்குக் கோபம் வந்துவிட்டது.

“நான் சொல்றதெல்லாம் பொய்யாடி? நீ என்னா பண்ணுவ? கட்டுன கோமணத்த அலசிக் கட்டத் தெரியாதவனுக்குப் பொறந்தவதான நீ? வாங்கித் தின்னுப்புட்டு 

‘இல்ல’ன்னு சொல்ற வகயிறாவில பொறந்தவதாண்டி நீ. ஒவ்வொரு பதினெட்டுக்கும், தீவாளிக்கும் தூக்குத் தூக்கா கறி எடுத்தாந்து எங்கப்பன் போடல? குந்திக்கிட்டு அத நீ திங்கல? கண்ணுல தண்ணீ வரவரத் தின்னியே மறந்துபோச்சா? ஒங்கப்பனா ஒனக்கு ஒரு சோறுக்கு ஒரு கறின்னு ஆக்கிபோட்டுத் திங்க வச்சி ஒன்னெ வளத்தான்? விடிஞ்சா காடு, பொயிது போனா ஊடு, இதத் தவுத்து ஒங்கப்பனுக்கு வேற என்னா தெரியும்? இன்னியமுட்டும் ஒரு காரு ஏறியிருப்பானா, ஒரு ரயிலு ஏறியிருப்பானா?”

“எதுவும்தான் இல்ல. அப்பறம் எதுக்கு எங்கப்பன நீ கட்டிக்கிட்ட?” என்று கிண்டலாகக் கேட்டாள் சிவமாலை.

“விதிடி விதி. நெல்லு வெளயுற ஊருல பொறந்து வரவு வெளயுற ஊருல வந்து தாலி கட்டிக்கிட்டது விதிதாண்டி. அதிலயும் ஒங்கப்பனக் கட்டிக்கிட்டது போன சென்மத்தில நான் செஞ்ச பாவம். தண்ணி குடிக்கிற சொம்பு மொதகொண்டு, குத்துற ஒலக்க மொதகொண்டு எங்கம்மாதான் வாங்கிக் கொடுத்தா. ஒங்கப்பன பெத்த மகராசியும் இருந்தா ஒருத்தி, சோத்துக்குத் தெண்டமா. என்னாத்த சம்பாரிச்சி வச்சா? வாயத்தான் ஏழு ஊருக்கு நீளுற மாரி வளத்து வச்சியிருந்தா. தெக்க பாருன்னு சொன்னா மேற்க பாப்பா. வான கண்ணு முண்ட, அவ என்னெ செஞ்ச சித்ரவத சொல்லி முடியாது. பாக்கு உரல்ல பாக்கப் போட்டுக் குத்துற மாரிதான் என்ன ராவும் பவலும் சொல்லால குத்துவா. அம்மானயும் நான் பொறுத்துக்கிட்டன். பொட்ட சிறுக்கி நீ பொறந்திட்டியேன்னு” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்ட துளசி குரலை மாற்றிச் சலிப்புடன் சொன்னாள்: “சாவயில அவ எப்பிடிச் செத்தான்னு எனக்குத்தான் தெரியும். எம் பாவம் அவளக் கேட்டுச்சி. மூணு மருமவ இருந்தாலும் அவளுக்கு எல்லா கருமாந்தரத்தயும் நான்தான் எடுத்தன்.”

“பேசு. பேசு. எம்மாம் பேசணுமோ பேசு. ஒன்னால முடியும் மட்டும் பேசு. எங்கப்பன மாரி இந்த ஒலகத்தில ஒரு ஆளு இருப்பானா? அவுரு பேச்ச நான் கேக்கல. அதான் இப்பப் படுறன்” என்று சிவமாலை கோபத்தோடு சொன்னாள். 

“செத்த நேரம் வாய மூடிக்கிட்டு இருக்க மாட்டீங்களா?” என்று கதிரவன் கேட்டான். துளசியும் சிவமாலையும் சிறிது நேரம் பேசாமலிருந்தனர். எழுந்து வீட்டுக்குள் போன கோகிலாமணி தண்ணீர் கொண்டுவந்து சிவமாலைக்குக் கொடுத்தாள்.

“போடி அந்தாண்ட. இப்பத்தான் நாடகம் காட்டுறா. பெத்தவ போயி இத்தினி நாளாச்சே, என்னாச்சி ஏதாச்சின்னு கேக்கறதுக்கு வரல. மனசுல திக்குங்குல. பெத்தவன் துரத்தி வுட்டதும் இன்னிக்கி வந்து நாடகம் காட்டுறா” என்று சிவமாலை திட்டியதும் அழுதுகொண்டே போய் துளசிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள் கோகிலாமணி. அப்போது சிரித்துகொண்டே துளசி சொன்னாள், “நீ பெத்ததுதாண்டி.”

“ஆமாம். நான்தான் பெத்தன். கல்லயும், மண்ணயும்” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள் சிவமாலை. அப்போது எழுந்து அவளிடம் வந்த கதிரவன், “எழுந்திரும்மா, போவலாம். நேரமாச்சி, நான் காலேஜிக்குப் போவணும்” என்று சொன்னான்.

“நான் வல்ல. நீ போப்பா.”

“என்னா பேசுற நீ? நாங்க முக்கியமில்லியா?” என்று கோபமாகக் கேட்டான்.

“போடா. ஒங் கதயும் எனக்குத் தெரியும். நாளக்கி ஒனக்கின்னு ஒருத்தி வந்தா நீயும்தாண்டா இப்பிடிச் செய்வ. நீயும் ஒங்கப்பன மாரிதாண்டா இருப்ப” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள். அழுகைக்கு இடையில், “நம்பி போனன். நம்பி இருந்தன். நானா போயி முள்ளுமேல சீலயப்போட்டுட்டன். இந்த வயசில இப்பிடி இருக்கானே” என்று சொன்னாள். மூக்கைச் சிந்தி விட்டெறிந்தாள். “மருமவன் ஊட்டுக்கு வர நேரத்தில, மவன் கூத்தியா சேக்க அலயுற நேரத்தில, அப்பங்காரன் புதுப் பொண்டாட்டி சேத்துக்கிட்டு நிக்குறான்” என்று சொல்லி முருகனைத் திட்ட ஆரம்பித்தாள். என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் சலிப்புடன் திரும்பி வந்து உரலில் உட்கார்ந்தான் கதிரவன்.

துபாய்க்குப் போகிறேன் என்று ஒரு லட்சம் ரூபாயை ஏஜெண்டிடம் கொடுத்து ஏமாந்த பிறகு ஆறு வருசமாக முருகனுக்கு கேரளாவில் செங்கல் சூளையில் வேலை. முதல் வருசம் நல்லபடியாகத்தான் இருந்தான். அதன் பிறகுதான் அவனிடம் மாற்றங்கள் தெரியத் தொடங்கின. மழைக் காலத்திலும் சூளையில் வேலை என்று போக ஆரம்பித்தான். சந்தேகப்பட்டு கேட்டதற்கு, “மொதலாளி தொல்ல” என்று சொன்னான். மூன்றாவது வருசத்தில்தான் சூளையில் வேலை செய்கிற ரோசம்மா என்ற பெண்ணோடு தொடர்பு என்று செய்தி அடிபட ஆரம்பித்தது. அவனோடு வேலைக்குப் போகும் பக்கத்து ஊர் ஆட்களிடம் விசாரித்தபோது உண்டு என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. மழுப்பினார்கள். கடைசியாகப் போன மாதம் மேலப்பாளையூர் செல்வராஜ்தான், “ஆமாம்” என்பதுபோல் தலை ஆட்டினான். முருகனிடம் கேட்டதற்கு, “ஊரான் பேச்சக் கேக்காத” என்று மட்டும்தான் சொன்னான்.

சிவமாலை அவன் சொன்னதை நம்பினாள். இருபது நாட்களுக்கு முன் கேரளாவிலிருந்து வந்தபோது அவன் சட்டைப்பையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. கேட்டதற்கு, “கீழ கெடந்தது” என்று சொல்லிவிட்டு போட்டோவை எடுத்து எரிந்துகொண்டிருந்த அடுப்பில் போட்டுவிட்டான். அப்போது ஆரம்பித்தது சண்டை. அன்று சாயங்காலமே கிளம்பி தன் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டாள். பதினைந்து நாட்களாகிவிட்டது. பதினைந்து நாட்களாகக் காலையிலும், சாயங்காலமும் நாள் தவறாமல் வந்து கூப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறான் முருகன். சிவமாலை ஒரு நூல்கூட அசைந்து கொடுக்கவில்லை. இன்று காலையில் கோகிலா மணியும், கதிரவனும் வந்தார்கள். வீட்டுக்கு வரச்சொல்லி மாறிமாறிக் கூப்பிட்டுப்பார்க்கிறார்கள். அவர்களுடைய கெஞ்சலுக்கும், அழுகைக்கும்கூட அவள் அசரவில்லை.

“பதினெட்டு பத்தொம்பது வருசமா கூடப் படுத்து எயிந்திரிச்சவளுக்குத் தெரியாதா ஒரு ஆம்பளயோட குணாச்சாரம். நான் அந்த அளவுக்கா குருடி?” என்று சொல்லிப் புலம்பி அழுதுகொண்டிருந்தாள். சிவமாலையின் மனதை அறியாமல் உரலில் உட்கார்ந்தபடியே, “இன்னும் எத்தினி நாளக்கித்தான் இப்பிடியே அயிதுகிட்டு இருக்கப் போற? நான் வேணுமின்னா வா, இல்லன்னா இங்கியே இரு” என்று கோபத்துடன் சொன்னான் கதிரவன்.

“எனக்கு யாரும் வாணாம். நான் செத்துப்போறன். நான் செத்துப்போனாத்தான் கண்ணாயிரம் மவ யாருன்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும். அப்பன் செய்யுற கூத்த 'ஏன்'னு ஒரு வார்த்த கேக்க முடியல. பஞ்சாயத்துக்கு எங்கிட்ட வரான்” என்று கதிரவனை எடுத்தெறிந்து பேசிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

“ஒனக்கு மூள இருக்கா இல்லியா? பெத்த அப்பன்கிட்ட இதெப் போயி நான் கேக்கலாமா?”

“அப்பறம் யாரு கேக்குறது? யாரும் கேக்காட்டி அவன் எப்பிடித் திருந்துவான்?” என்று சிவமாலை கோபமாகக் கேட்டாள். கதிரவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவனை முறைத்து, திட்டி, எடுத்தெறிந்து அவள் இதுவரை ஒருமுறைகூடப் பேசியது கிடையாது. அதேமாதிரி முருகனையும் அவள் இதற்கு முன் 'அவன்', 'இவன்' என்று பேசியது கிடையாது. அவளுடைய நடவடிக்கை அவனுக்குப் புதிதாக இருந்தது. அப்போது வேகமாக எழுந்து போன துளசி சிவமாலையின் வாயில் அடித்து, “பெத்த புள்ளக்கிட்ட போயி என்னாடி கேக்குற நாதேறி முண்ட. வாயக் கழுவுடி. வயசானா வாயும் வளந்துடுமாடி? இப்பிடிப்பட்ட ஒன்னயாடி நான் பெத்தன்” என்று சொல்லி மீண்டும் அவளுடைய வாயில் ஒன்று போட்டாள், சிவமாலைக்கு வேகம் வந்துவிட்டது. துளசியின் கைகளைப் பிடித்துத் தன் முகத்திலேயே அடித்துக்கொண்டு, “நீதான என்னெ பெத்த? நீயே அடிச்சி என்னெக் கொன்னுப்புட்டுப் போ” என்று சொல்லி அழுதாள்.

கைகளை இழுத்துக்கொண்ட துளசி ஆத்திரத்தோடு திரும்பி வந்து, “நீ ஏம்பா நிக்குற? அது நாயி. நாயின்னா கத்ததான செய்யும்? அவ பொறந்த வகயிறாவே வாயால அடிச்சித்தான் ஒலயில போடும். வாயக் கட்டாது. நீ போயி சாப்புடு” என்று சொன்னாள். கோகிலாமணி பக்கம் திரும்பி, “போயி அவனுக்குச் சோறு போடு. நேரம் என்னாவுது?”' என்று கேட்டாள். அவள் நகராததால், “ஆயாளும் மவளும் நெஞ்சழுத்தகாரிவோதான். ஆம்பளவுள மட்டு மரியாத இல்லாம பேச எங்கடி கத்துக்கிட்டீங்க?” என்று கேட்டு கோகிலாமணியைத் துளசி முறைத்தாள்.

“கண்ணாலம் கட்டுறாப்ல ஊட்டுல ஒரு புள்ள இருக்கான். வயசுக்கு வந்த ஒரு பொட்ட புள்ள இருக்கா. அவள ஊட்டுல வுட்டுட்டு வந்தோமே, ஊருல ஒண்ணு சொல்ல மாட்டாங்களான்னு மனசுல அக்கறப்படுறாளா பாரு. எந்த ஊருலப் போயி வாய வளத்துக்கிட்டு வந்தான்னு தெரியல சிறுக்கி” என்று துளசி சொன்னதும் அவளிடம் சண்டைக்குப் பாய்ந்து, “அவள பெத்தவன் இல்லியா? அவன் அவளப் பாத்துக்க மாட்டானா? போனா அவன் மானம்தான் போவும், எனக்கென்னா?” என்று கேட்ட சிவமாலைக்கு அழுகை வந்தது. அழுதுகொண்டே, “நான் வந்து எத்தினி நாளாச்சி? இன்னிக்கி வர்றா திருட்டு முண்டெ. கல்லு நெஞ்சுக்காரன் விந்துக்குப் பொறந்தவதான. வேற எப்பிடி இருப்பா? அவ மொகரயப் பாரன். அந்தக் கருவாயன் மொகரய வச்சிக்கிட்டு பொறந்திருக்கிறத. நாலு சாதி சனத்தோட புழங்குனவனுக்குப் பொறந்திருந்தா அந்த அறிவு இருக்கும்? அவந்தான் தானே ஆக்கி, தானே திங்கிறவனாச்சே” என்று சொன்னாள். 

“அங்க யாரு சோறு ஆக்குறதாம்?” என்று கோகிலாமணி கேட்டாள்.

“வாய மூடுறி. பெத்தவளாச்சேன்னுகூடப் பாக்காம வாயடுற? யாருகிட்டயிருந்து வந்துச்சி இந்தப் பயக்கம்?” என்று சிவமாலை கேட்டாள்.

“ஒங்கிட்டயிருந்துதான்” என்று சொன்ன துளசி, சிவமாலையிடம், “புள்ளிவோ நிக்குறது தெரியலியாடி? போ. போயி பெரியாண்டவர் கோவுல்ல மனக்கொறய சொல்லி அழுதுட்டு திருநீறு எடுத்துப் பூசிக்கிட்டு போ. ஒனக்கு ஒரு கொறயும் வராது. திருந்தி வசத்துக்கு வந்துடுவான்” என்று சொல்லிகொண்டே வந்து சிவமாலையைத் தூக்கினாள். வெடுக்கென்று கைகளைத் தட்டிவிட்ட சிவமாலை சொன்னாள். “பெரியாண்டவர பாரு, பெரியாண்டவர. அவனோட சந்நிதானத்திலதான என்னோட கண்ணாலம் நடந்துச்சி. அவன் என்னெ நல்லபடியா வாழ வுட்டானா? நான் இப்ப இப்பிடி அந்தல சிந்தலயா நிக்குறது அவனுக்குத் தெரியாது? எல்லாத்தயும் பாத்துக்கிட்டு சும்மாக் குந்தியிருக்கிற மண்ணுக்கிட்டப் போயி என்னாத்தச் சொல்லச் சொல்ற?”

“அது நம்ப குடிசாமிடி.”

“மன்னாருசாமிதான்.”

“புது பொண்ணாடி நீ? பொணக்கிக்கிட்டு வரதுக்கு? பாதி கிழவியாயிட்ட. இந்த வயசில சண்ட சாடின்னு போட்டுக்கிட்டு வந்து என்னாத்த வாரிக்கப்போற? போ. இன்னியமுட்டும் நம்ப ஊட்டு சண்டதான், கதெதான், தெரு சிரிச்சிப்போவாம, ஊரு சிரிச்சிப்போவாம இருந்துச்சி. அந்தக் கொறயும் எதுக்குன்னா, நீ இங்கியே குந்தியிரு. இதான் ஒனக்கு நான் கடசியா சொல்றது. ஒங் கறியில வெக்க மானம் இல்லெ” என்று சொல்லிவிட்டுத் துளசி வந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் போய் உட்கார்ந்தாள்.

“தாலி கட்டிக்கிட்டு போன நாளுலயிருந்து எத்தினி வாட்டி ஒன் ஊட்டுக்கு நான் கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து இருக்கன்? வாழும்போதே வாழப்பூ சேல வல்லியாம், சாவும்போதுதான் சாமந்திப்பூ சேல வரப்போவுதாம்” என்று வீறாப்பாகச் சொன்னாள் சிவமாலை.

“இந்த சனியனெல்லாம் என்னிக்குத்தான் தீரப் போவுதோ” என்று சொல்லி கதிரவன் அலுத்துக்கொண்டான். அப்போது தெருப் பக்கம் பார்த்த கோகிலாமணி, “அப்பா வராரு” என்று சொல்லிவிட்டு எழுந்து வீட்டுக்குள் போனாள்.

கோகிலாமணி தண்ணீர் கொண்டுவந்து முருகனுக்குக் கொடுத்தாள். கதிரவன் எழுந்து போய் திண்ணையில் உட்கார்ந்ததும், அவன் உட்கார்ந்திருந்த உரலில் உட்கார்ந்தான் முருகன். சிரித்துக்கொண்டே, “என்னா சொல்றா ஒங்கம்மா?” என்று கோகிலாமணியிடம் கேட்டான். அவள் வாயைத் திறக்கவில்லை. அவள் பேசாததால் துளசியின் பக்கம் திரும்பி, “ஒம் மவ நடத்துற நாடகத்தப் பாத்தியா? ஊரான் பேச்சக் கேட்டுக்கிட்டு ஆடுறா. ஆடட்டும். அவளோட ஆட்டம் எத்தினி நாளக்கின்னு நானும் பாக்குறன்” என்று சொன்னான்.

“அவ கேட்டா இல்லன்னு ருசுப் பண்ணிட்டுப்போ. எதுக்காக அவள மாட்டப் போட்டு அடிக்கிற மாரி அடிச்ச? அதான் சாக்குன்னு அவ சாமியாடுறா” என்று கோபமாகத் துளசி சொன்னாள்.

“அவ பேசுன பேச்சுக்கு வாயக் கிழிக்காம வுட்டதே பெருசு” என்று முருகன் சொன்னான்.

“போயி சோத்த போடுடி. ஆயாளுக்கு ஏத்த மவளாத்தான் பொறந்திருக்கிற. பொட்டச்சிவோ ஒரு ஓரம்சாரமா குந்த வாணாமா?” என்று சொல்லி துளசி முறைத்தாள். ஒன்றும் சொல்லாமல் எழுந்து வீட்டுக்குள் போனாள் கோகிலாமணி.

“மவளக் கொடுத்து என்னெ வாழ வச்சிட்ட. இப்ப சோத்தப்போட்டு வாழ வைக்கப்போறியா?” என்று முறைத்த மாதிரி முருகன் கேட்டான். அதற்குச் சிரித்துக்கொண்டே துளசி, “ரெண்டு நாயும் அன்னிக்கி ஒண்ணா குலாவுச்சி. இப்ப எந் தலயப் போட்டு உருட்டுது” என்று சொன்னாள். அவளை ஏறஇறங்கப் பார்த்த சிவமாலை முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாள். 

“சோறு திங்க வாப்பா” என்று கோகிலாமணி கூப்பிட்டாள். “ஒண்ணும் வாணாம்மா. கெளம்பு, ஊட்டுக்குப் போவலாம்” என்று சொல்லிவிட்டு “ஊரான் பேச்சக் கேக்காத. வா. ஊட்டுக்குப் போவலாம். ஊட்டுல போட்டது போட்டபடியே கெடக்கு” என்று சொன்னதோடு நில்லாமல் சிவமாலையின் இரண்டு கைகளையும் பிடித்துத் தூக்கினான் முருகன்.

“சீ, என்னெத் தொடாத. மல நாட்டுக்காரிய போயி தூக்கு. ரோசம்மாவோ கீசம்மாவோ இருக்காள்ள. அவளப் போயி தூக்கு. என்னெ எதுக்குத் தூக்க வர்ற?” என்று சொல்லிவிட்டு முருகனின் கைகளைத் தட்டிவிட்டாள் சிவமாலை.

“எனக்கு கோவத்த உண்டாக்காத, வழியே போறவன் பேச்சக் கேட்டுக்கிட்டு ஆடுற. இனிமே நான் கேரளாவுக்குப் போவல. வா ஊட்டுக்கு” என்று சொல்லிவிட்டு மீண்டும் தூக்கினான். வெறி வந்தது மாதிரி அவனை நெட்டித்தள்ளிவிட்டு, “வெக்கம் மானம் இருந்தா என்னெத் தொடக் கூடாது” என்று சொல்லிக் கத்தினாள்.

வெலவெலத்துப் போய் நின்றுகொண்டிருந்தான் முருகன். கதிரவன் பக்கம் பார்த்தான். திரும்பி கோகிலாமணியைப் பார்த்தான். சலிப்புடன் பெருமூச்சுவிட்டான். ரொம்பவும் பணிவாக, “தெருவுல குந்திக்கிட்டு எதுவும் பேச வேணாம், ஊட்டுல போயிப் பேசிக்கலாம் வா” என்று கூப்பிட்டான்.

“நான் வல்ல நீ போவலாம்.”

“என்னிக்குமே வர மாட்டீயா?”

“வர மாட்டன். என் பொணம்கூட வராது.”

“நான் செத்தாலும் வர மாட்டியா?”

“ஆமாம். கடவுளு மேல சத்தியம்.”

“அப்பிடின்னா இங்கியே இரு. இன்னம் நாலு நாளயில ஒருத்தியக் கொண்டாந்து ஊட்டுல குடி வைக்கலன்னா என்னெ மசுருன்னு கூப்புடு. ஒன்னிய வுட்டா ஒலகத்தில் வேற பொம்பளயே கெடயாது பாரு.”

“எதுக்கு புதுசா புடிக்கப்போற? அதுக்குத்தான் ஏற்கனவே ரோசம்மான்னு செவப்புத்தோலா மலயாள நாட்டுக்காரிய புடிச்சியிருக்கியே. அது போதாதா? போ. போயி அவளப் புடி, தூக்கு, ஒளக்காட்டுல கெடக்குறவ வேணாமின்னுதான மலநாட்டுக்காரிய போயி புடிச்சியிருக்க. ஒந் தப்புக்கணக்கு இனிமே செல்லாது.”

“வாய மூடுறி” என்று சொல்லிவிட்டு ஓங்கி சிவமாலையின் கன்னத்தில் அறைந்தான். மறுஅடி அடிப்பதற்குள் திண்ணையில் உட்கார்ந்திருந்த கதிரவன் வேகமாக ஓடிவந்து, “யோவ், போயா எட்ட. பெரிய இது மாரி வந்துட்ட அடிக்க. இனிமே அடிச்சின்னா மரியாத கெட்டுப்போயிடும்” என்று சொன்னதும், முருகனுக்கு உடம்பு நடுங்கியது. கோபத்தில் உதடுகள் துடித்தன. சுற்றும்முற்றும் பார்த்தான். சீறப்போகும் பாம்பு மாதிரி சிவமாலையைப் பார்த்தான். “'நான் பெத்த புள்ளயவே எனக்கு எதிரா ஏவி வுடுறியாடி? வா ஒன்னெ வச்சிக்கிறன். புள்ளயா புருசனான்னு ஒனக்குக் காட்டுறன்” என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய் உரலில் உட்கார்ந்து தலையை கவிழ்த்துக்கொண்டான்.

வேகமாக எழுந்த சிவமாலை முந்தானையை வேகமாக உதறி இடுப்பில் செருகினாள். தலைமுடியை உதறி, தட்டி முடிந்துகொண்டு, மூக்கைச் சிந்திவிட்டு முருகனிடம் வந்து வீறாப்பாக நின்றுகொண்டு, “இப்ப எம் புள்ளக்கி பதிலு சொல்லு. கேக்குறதுக்கு ஆளில்லன்னு நெனச்சிக்கிட்டியா?” என்று கேட்டவளுக்குச் சிரிப்பு வந்தது. கதிரவனிடம் வந்து, “போதும்டா சாமி. ஒரு வருசம் ஒன்னெ என் வவுத்தில சொமந்ததுக்கு, ஏழெட்டு வருசம் மாருல செமந்ததுக்கு, பீ, மூத்திரத்த அள்ளுனதுக்கு இது போதும்டா. இப்பத்தாண்டா எம் மனசு குளுகுளுன்னு இருக்கு. அவன் எவ கூடயோ போறான், எவ கூடயோ வரான், எனக்கென்னா? கண்ணாட்டம் ரெண்டு புள்ள இருக்கு. அது போதாதா எனக்கு? இந்த வயசிலதான் எனக்குப் பிரிசன் ஆச கேக்குதா?” என்று கேட்டாள்.

“வாய மூடுறி” என்று துளசி சொன்னாள்.

“பாஞ்சி நாளா எம் புள்ளிவோ சரியா சோறு குடிச்சிதுவுளோ இல்லியோ? காலேஜுக்கும் போவல. எம் புள்ளிவோ பொழப்பு கெட்டுப்போச்சே” என்று சொன்ன சிவமாலை, முருகன் பக்கம் திரும்பி, “வா, ஒன்ன வச்சிக்கிறன். பெரியாண்டவர் கோவுல்ல ஒனக்குச் சீட்டு கட்டறன், கைகாலு வெளங்காம பண்றன்” என்று சொன்னாள்.

“வாப்பா போவலாம்” என்று கதிரவனிடம் சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். பத்து தப்படி தூரம் போனதும் நின்று திரும்பிப் பார்த்தாள். கோகிலாமணி துளசியிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், “நானே பெத்தவ வாணாமின்னு போறன். ஒனக்கு என்னாடி ஒறவு? பொயிது ஆவுதே, நேரத்தில ஊட்டுக்குப் போவனுமின்னு அறிவு வாணாம் கயிசர நாயிக்கு? இதாண்டி பொட்ட கழுதயோட புத்திங்கிறது” என்று சொல்லிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். அவளோடு நடந்துகொண்டிருந்தான் கதிரவன்.

 “பேயாட்டம் சிலுப்பிக்கிட்டுப் போறா பாரு” என்று சொன்ன துளசி, “யேய், சிவமால சோறு குடிச்சிட்டு போடி” என்று சொன்னாள். துளசியின் குரல் கேட்டு நின்ற சிவமாலை, “நீ செத்தாதான் இனி ஒன் ஊட்டுல அடி வைப்பன். நீயும் ஒந் தம்பியும் ஆக்கித் தின்னுட்டு மண்ணாப் போங்க. வெளங்க மாட்டீங்க. தொலங்க மாட்டீங்க. கொள்ளயில போயிடுவீங்க” என்று சொல்லிவிட்டு முன்பைவிட வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

“அதுக்கு மட்டும் எதுக்கு வர்ற? வராமியே இரு. அதான் ஒனக்கும் நல்லது, எனக்கும் நல்லது” என்று துளசி சிரித்தபடியே சொன்னது சிவமாலைக்குக் கேட்கவில்லை.

“வாப்பா போவலாம்” என்று கோகிலாமணி முருகனைக் கூப்பிட்டாள்.

“நான் வல்ல நீ போம்மா” என்று சொல்லிவிட்டு துளசியை முறைப்பது மாதிரி பார்த்தான். 

“அம்மா ஊட்டுக்குப் போவுது. வாப்பா, நாம்பளும் போவலாம்” என்று சொல்லி கோகி

லாமணி முருகனின் கையைப் பிடித்து இழுத்தாள். முருகன் மறுபேச்சு பேசவில்லை.

உயிர்மை _ மே 2025

சனி, 22 மார்ச், 2025

தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள் - இமையம்.

 

வாழ்வின் துயரங்கள் வாழச் சொல்கின்றன

       போர், அரசியல் காரணங்கள், கல்வி, வணிகம், வேலை, உயிர் பிழைக்க என்று பல்வேறு காரணங்களுக்காக, பல்வேறு காலங்களில் புலம்பெயர்தல் நடந்திருக்கிறது. இன்றும் உலகெங்கும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த கட்டுரை புலம்பெயர்தலுக்கான காரணங்களையோ, புலம்பெயர்ந்தவர்கள், புகலிடத்தில் சந்தித்த கொடூரங்களையோ ஆராயாது. புலம்பெயர்ந்தவர்கள் புகலிடத்திலிருந்து எழுதிய சிறுகதைகளில் – பன்னாட்டு வாழ்வை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, அரசியலை, நிலவியலை எவ்வாறு எழுதியிருக்கிறார்கள் என்பதை மட்டுமே ஆராயும். தமிழ்நாட்டிலிருந்து, அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர் என்று சென்றவர்கள் எழுதிய சிறுகதைகளிலும் இலங்கையில் இனவாத அரசு நடத்திய போரினால் புலம்பெயர்ந்து சென்றவர்கள் எழுதிய சிறுகதைகளிலும் பன்னாட்டு வாழ்க்கைமுறை எவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே இக்கட்டுரை ஆராய்கிறது. பிரன்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், மலாய், சீன மொழிகளில் அந்தந்த நாட்டு எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை ஆங்கிலத்தின் வழியாக, அல்லது ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து படிக்கும்போது தமிழ் வாசகனுக்கும் படைப்புக்குமிடையே ஏற்படுகிற புரிதலைவிட, இணக்கத்தைவிட, தமிழை தாய்மொழியாகக்கொண்ட ஒருவர் கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மன், பிரான்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, க்யூபா போன்ற பல நாடுகளைப்பற்றி எழுதுவதை படிக்கும்போது கூடுதலான புரிதலும், இணக்கமும் ஏற்படுகிறது.  அந்த வகையில் புலம்பெயர்ந்தவர்கள் எழுதிய சிறுகதைகளின் வழியாக தமிழ்மொழியில் பன்னாட்டு வாழ்க்கை எப்படி சேமிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்வதே நோக்கம். ஒவ்வொரு கதைக்கும் கூடுதலான விளக்கங்களையோ, விவரங்களையோ கட்டுரையாசிரியர் என்ற முறையில் தருவது கதைகளை சிறுமைப்படுத்தும் என்பதால் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

       ஷோபா சக்தி எழுதியுள்ள எழுச்சி’, இலங்கையிலுள்ள சரவண கிழக்கை பிறப்பிடமாகவும் பிரான்சை வாழ்விடமாகவும் கொண்ட ஆழ்வார் தர்மலிங்கம் என்பவருடைய வாழ்க்கையை சொல்கிறது. சரவண கிழக்கில் ஆழ்வார் தர்மலிங்கத்தின் குடும்பம், ஊரினுடைய சூழல், அன்றைய இலங்கையின் அரசியல் சூழல், பிறகு பிரான்ஸ் தேசத்திற்கு பயணம், அங்கு வாழப்படும் வாழ்க்கை என்று விரிகிறது கதை.

       பிரான்ஸில் முந்நூறுபேர் வேலை செய்யக்கூடிய கம்பனியில் ஆழ்வார் தர்மலிங்கம் வேலை செய்கிறார். அந்த கம்பனியில் ஆப்பிரிக்கர்கள், போலந்துக்காரர்கள், அரபுக்காரர்கள், பிரான்சுக்காரர்கள் என்று பல நாட்டவரும் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கம்பனியில் நுழையும்போதும் ஒவ்வொரு பணியாளனையும் முழுமையாக சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். அதே மாதிரி மாலையில் சோதனை செய்த பிறகே ஊழியர்களை வெளியே அனுப்புகிறார்கள்.  காவலாளி காலையிலும் மாலையிலும் செய்கிற சோதனை ஆழ்வார் தர்மலிங்கத்திற்கு நரக வேதனையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் என் கொட்டையை தடவ இவன் யார்?’ என்று பொறுமிப்போகிறார். சோதனையிலிருந்து தப்பிப்பதற்கு ஒரு தந்திரம் செய்கிறார். அந்த தந்திரம் ஜட்டி அணியாமல் செல்வது. வழக்கம்போல சோதனை செய்கிற காவலாளி தவறுதலாக தர்மலிங்கத்தின் விரைத்திருக்கிற குறியை தொட்டு அருவருப்பு அடைகிறார். அதனால் தர்மலிங்கத்திற்கு மகிழ்ச்சி. தினமும் ஜட்டி அணியாமல் போகிறார். வேறு வழியின்றி காவலாளி தினமும் சோதனை செய்யாமல் தர்மலிங்கத்தை கம்பனிக்குள் அனுமதிக்கிறார். இதைப் பார்த்த மற்ற தொழிலாளிகள் வியந்துபோய் ரகசியத்தை அறிந்துகொண்டு ஜட்டி போடாமல் போகிறார்கள். சோதனை செய்த காவலாளி நொந்துபோகிறார். முந்நூறு தொழிலாளியும் ஜட்டி அணியாமல் வருவதால் காவலாளி சோதனை செய்யாமல் அனுமதிக்கிறார். நிர்வாகத்திடம் முறையிடுகிறார். தனிமனித சுதந்திரத்தில் எப்படி தலையிடுவது என நிர்வாகம் தத்தளிக்கிறது. ஜட்டி அணியாமல் வேலைக்கு செல்கிற ரகசியம் நாடு முழுவதும் பரவுகிறது. பிரச்சினையை எப்படி தீர்ப்பது என தெரியாமல் கம்பனியும், நாடாளுமன்றமும் கூடி விவாதிக்கிறது. ஜட்டி அணியாமல் வேலைக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு உலகெங்குமிருந்தும் ஆதரவு குரல்கள் பெருகுகிறது. 1960ல் அமெரிக்காவில் பெண்கள் முன்னெடுத்த பிரேசியர் அணியாத போராட்டம் திரும்பப் பேசப்படுகிறது. உலகில் உள்ளாடை அணியாதவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்ற விவாதம் நடக்கிறது. தொழிலாளர்களின் கண்ணியமற்ற போராட்டம் இது என்று கத்தோலிக்க திருச்சபை அறிக்கை வெளியிடுகிறது. ஏசு கிருஸ்துவின் வஸ்திராபரணங்களில் ஜட்டிஇல்லை என்ற விவாதம் எழுகிறது. ஆழ்வார் தர்மலிங்கத்தின் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறுகிறது.

       பிரான்ஸ் விமான நிலையத்திலும், துபாய் விமான நிலையத்திலும், சென்னை விமான நிலையத்திலும் சோதனை என்ற பெயரில் ஆழ்வார் தர்மலிங்கத்தின் கொட்டைகள் தடவப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் சோதனை என்ற பெயரில் தனது கொட்டை தடவப்படும்போது அவர் அவமானத்திலும், கூச்ச உணர்விலும் நொந்துபோகிறார்.

       ஆழ்வார் தர்மலிங்கம் சரவண கிழக்கிலும், பிரான்ஸிலும் வாழ்கிறார். அதோடு தனது மனைவி அசோக மலருடன் சென்னையிலும் சில நாட்கள் வாழ்கிறார். தனது குறியின் எழுச்சியை வைத்து கம்பனியில், நாட்டில், நாடாளுமன்றத்தில், சர்வதேசத்தில் பெரிய பிரச்சினையை உருவாக்குகிற ஆழ்வார் தர்மலிங்கத்தினுடைய மனைவி அசோகமலருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

      

ஆழ்வார் தர்மலிங்கத்தின் எழுச்சி வீரியமிக்கதா? இது இலங்கை அரசியலை விமர்சிப்பதாகவும் கொள்ள முடியும்.

       ‘எழுச்சி’ – தமிழ் மொழியில் எழுதப்பட்ட பிரான்ஸ் நாட்டு கதை என்றும், இலங்கை கதை என்றும்தமிழ்நாட்டில் சில நாள் வாழ்வதால் தமிழ் நாட்டுக் கதை என்றும் சொல்லலாம். அதோடு பன்னாட்டு தொழிலாளர்களுடைய கதை என்றும் சொல்லலாம். வேலை செய்கிற இடத்தில் ஏற்படுகிற நெருக்கடியை ஷோபா சக்தியின் எழுச்சி’ - கதை சொல்கிறது என்றால் பொ.கருணாகர மூர்த்தியின் வாழ்வு வசப்படும்’ - கதை அகதியாக இருப்பவர்கள் வேலை தேடுவதில் இருக்கிற நெருக்கடிகளைப் பேசுகிறது.

    

1980 கால பகுதியில் ஜெர்மனியில் குறிப்பாக பெர்லினில் அகதிகளாக வாழ்பவர்களைப்பற்றி  பொ.கருணாகரமூர்த்தி எழுதிய வாழ்வு வசப்படும்கதை பேசுகிறது. இலங்கையிலிருந்து அகதிகளாக ஜெர்மனிக்கு சென்று வாழ்கிற முத்து ராசா, அத்வைதன், திலகன், நகுலன், நிமலன் மற்றும் சபீனா ஆகியோரின் வழியே கதை நிகழ்கிறது. கானா நாட்டு  அகதிகள் பற்றியும் கதை பேசுகிறது. ஒவ்வொரு அகதிக்கும் ஜெர்மன் அரசு மாதம் 300 டி.எ.ம். தொகை வழங்குகிறது. குடும்பமாக இருந்தால் மாதம் 1000 டி.எம். வழங்குகிறது. இது நல்ல  தொகைதான். 300 டி.எம்.மிலிருந்து மிச்சம் பிடித்து ஊருக்கு அனுப்புகிறவர்களும் உண்டு.

       வாழ்வு வசப்படும் கதை அகதிகள் வாழ்வைப்பற்றி, அவர்கள் வேலை தேடி அலைவதை மட்டும் சொல்லவில்லை. பெர்லின் நகர வாழ்வையும் சேர்த்தே சொல்கிறது. பெர்லின் நகரில் மிகபெரியதும், மிக முக்கியமானதுமான Kufursf tendamm சாலை, பொம்சன் சாலை, அந்த சாலையில் இருக்கக்கூடிய டியூலிப் ஹோட்டல், சாதாரண மக்கள் தங்கக்கூடிய நாலாந்தர ஹோட்டலில் இருக்கக்கூடிய பென்ஷியோன்கள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. பென்ஷியோன்களில் வாழ்பவர்களின் வாழ்க்கை தரம்பற்றியும், மனப்போக்குப்பற்றியும் நகைச்சுவையுடன் கதை சொல்கிறது.

       பெர்லின் நகரின் வீதிகளில் ஆண்களும் பெண்களும் செய்யும் காதல் லீலைகள், காதல் விளையாட்டுகள், தழுவல்கள், முத்தங்கள்பற்றியும் விரிவாக சொல்கிறது. பெரியவர்கள் மட்டுமல்ல பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் பொதுவிடங்களில் நடந்துகொள்ளும் முறைப்பற்றியும் பேசுகிறது. அதோடு பெர்லினில் வரக்கூடிய தினசரி நாளேடு எப்படியான செய்திகளை தாங்கி வருகிறது. அதில் வரக்கூடிய விளம்பரங்கள் எப்படிப்பட்டதாக இருக்கிறது? நாற்பத்தி ஆறு வயது கொண்ட ஏவாள் என்ற பெண் தனக்கான பார்ட்னர் வேண்டும் என்று விளம்பரம் செய்திருக்கிறார். பார்ட்னருக்கான தகுதிகள் என்னென்ன என்பதையும் விளம்பரத்தில் பட்டியலிட்டுள்ளார். பட்டியல் நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது. ஆனால் அது பெர்லினில் ரொம்ப சாதாரணம். இப்படியான விளம்பரங்களை கொண்ட BZ என்ற Berlines Zeitung தினசரிதான் ஜெர்மனியில் பிரபலமானது. ஹோமோ செக்ஸிற்கு ஆண் தேடும் விளம்பரம் வருவது அந்தப் பத்திரிக்கையில் சர்வ சாதாரணம்.

       அகதிகளின் மனநிலை, வேலை தேடும் போராட்டம் அகதிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள், ஜெர்மனியர்களின் சட்டம் சார்ந்த பயம் என்று பல கதைகளின் தொகுப்பாக வாழ்வு வசப்படும்இருக்கிறது.

       கதையில் சபீனா என்ற பெண் வருகிறாள். இளம் பெண், அவளுடைய தொழில் விநோதமானது. யார் என்று தெரியாத ஆணுடன் இணைந்து கர்ப்பமாகி, குழந்தையை பெற்று, குழந்தையற்ற தம்பதிகளுக்கு தான் பெற்ற குழந்தையை விற்பதுதான். இந்தியாவிற்கு டூரிஸ்டாக வந்து, கோவாவில் ஒரு ஆணுடன் இணைந்து கர்ப்பமாகி, ஜெர்மன் சென்று குழந்தையைப் பெற்று விற்றுவிடுகிறாள். பிரவுன் நிற குழந்தைகளுக்குத்தான் ஜெர்மனியில் அதிக மவுசு. அதனால் சபீனாவின் விருப்பம் என்பது பிரவுன் நிறக் குழந்தைகளை வயிற்றில் சுமப்பது. ஒரு குழந்தைக்கு அவள் பெறுகிற தொகை அதிகமானது. ஜெர்மனியில் பத்து முதல் பனிரெண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்தால் மட்டுமே சாம்பாதிக்கக்கூடிய தொகையை ஒரு குழந்தையை விற்பதின்மூலம் பெறுகிறாள். தன்னுடைய வாழ்க்கை முறை குறித்து கூறும்போது அந்தரங்கம்என்று வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்று கூறுகிறாள். அவள் அணிந்திருந்திருக்கிற டி.சர்ட்டில் Eatable Fruits  என்று அச்சிடப்பட்டிருக்கிறது.

       வாழ்வு வசப்படும் கதையில் ஏவாள், சபீனா, BZ பத்திரிக்கை, அகதிகள் வாழும் வாழ்க்கை, தங்குமிடம் ஓரின சேர்க்கைக்கு அழைக்கப்படும் அகதிகள் என்று பல கதைகளுடைய தொகுப்பாக இருக்கிறது. அதே நேரத்தில் இலங்கையிலிருந்து சென்ற அகதிகள் தங்களோடு ராமர், சீதை, விநாயகர், மயிலேறும் முருகன், ஸ்ரீதுர்கா தேவி, ஐயனார், ஸ்ரீ ரெங்கநாதர் சாமி படங்களையும் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதை வைத்து வணங்குகிறார்கள். அகதியாக இருந்தாலும் தமிழர்கள் பக்தியோடுதான் இருக்கிறார்கள். ஆபாசபடம் பார்த்துக்கொண்டே மயிலேறு முருகனையும் கும்பிடுகிறார்கள்.

       பொ.கருணாகர மூர்த்தியின் வாழ்வு வசப்படும் கதை பெர்லின் நகரின் வாழ்வைப் பேசுகிறது. இது தமிழ் மொழியில் எழுதப்பட்ட ஜெர்மன் நாட்டுக் கதை. கானா நாட்டு அகதிகளின் கதையும்தான்.

 

கூபாவுக்குப் போன க்யூபா அமெரிக்கர்கள்என்பது காஞ்சனா தாமோதரன் எழுதிய கதை. மூன்று தலைமுறைகளின் வாழ்க்கையை பேசுகிறது. கற்பனை, யூகம், புனைவு என்பது குறைந்து உண்மை சம்பவங்களும், வரலாற்றுச் சம்பவங்களும், நிறைந்திருக்கிறது. ஐம்பது ஆண்டுகால அமெரிக்க, க்யூபாவின் அரசியல் நடவடிக்கைகளைப் பேசுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறையினரின் மனவோட்டம், சிந்தனை, விருப்பம், செயல்பாடு, வாழ்க்கை மாற்றம் எப்படி மாறி இருக்கிறது என்பதை பேசுகிறது.

       க்யூபாவில் பட்டீஸ்டாவின் ஆட்சி முடிந்து ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆட்சி அறிவிக்கப்பட்டபோது, இடதுசாரி அரசியல் பிடிக்காமல் திரளாக மக்கள் க்யூபாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். க்யூபாவைவிட்டு அமெரிக்காவிற்கு வந்த குடும்பங்களில் ஒன்று எம்பரீத்தோ யெலீனா என்பவர்களுடையது. க்யூபாவில் ஓரளவு வசதியானது. கரும்புத் தோட்டமும், புகையிலைத் தோட்டமும் சொந்தமாக இருக்கிறது. சுருட்டு வியாபாரம் செய்கிறவர்கள். க்யூபா சுருட்டுக்கு அமெரிக்காவில் நல்ல வரவேற்பு உண்டு. உலகெங்கும் க்யூபா சிகர்ஸ்க்கு இன்றும் மதிப்புண்டு.

       எம்பரீத்தோ அமெரிக்காவிற்கு வந்து ஐம்பது ஆண்டுகளாகிவிட்டது. அவருக்கு ஒரு மகன் பிறக்கிறான். 1980ல் க்யூபாவில் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் காஸ்ட்ரோவின் ஒப்புதலுடன் பெரும் திரளான மக்கள் மாரியெல்துறைமுகத்திலிருந்து அமெரிக்காவிற்கு புகலிடம் தேடி வருகிறார்கள். மாரியெல் துறைமுகத்திலிருந்து வந்த க்யூபா மக்களை அமெரிக்கர்களும், அமெரிக்காவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் குடியேறிய க்யூபா மக்களும் மாரியெலீத்தோஎன்றே தரக்குறைவாக அழைக்கின்றனர். மாரியெலீத்தோ என்று அழைக்கப்படுகிற ஒரு பெண்ணைக் காதலித்துக் கல்யாணம் செய்துகொள்கிறார் எம்பரீத்தோவின் மகன். மருமகளை கௌரவக்குறைவாக நடத்துகின்றனர் எம்பரீத்தோவும், அவருடைய மனைவி யெலீனாவும்.

       1960களில் அமெரிக்காவில் அகதியாக குடியேறிய க்யூபாக்காரர்கள் 1980ல் அகதியாக  குடியேறிய க்யூபாகாரர்களை ஏன் மட்டமாக நினைக்கிறார்கள், மட்ட ரகமாக நடத்துகிறார்கள்? ஒரே நாடுதான். ஒரே மொழிதான். ஒரே இனம்தான். இருவருமே புகலிடம் தேடி வந்தவர்கள்தான். முன்னால் வந்தவர்கள், பின்னால் வந்தவர்கள் என்ற வேறுபாடு மட்டும்தான் இருக்கிறது. முன்னால் வந்தவர்கள் என்பது எப்படி ஒரு உயர் தகுதியாக இருக்க முடியும்?

       எம்பரீத்தோவின் மகனுக்கு ரமோசன், அனீதா என்று இரண்டு குழந்தைகள். கல்லூரியில் படிப்பவர்கள். தாத்தா எம்பரீத்தோவின் பேச்சை மீறி பராக் ஒபாமாவுக்கு வாக்களித்தவர்கள். ஓயாமல் தாத்தாவுடன் அரசியல் பேசுகிறவர்கள். அமெரிக்காவின் மல்ட்டி மில்லியனர்ஸ் வசதி வாய்ப்புகளை அனுபவிக்கிறவர்கள்.

       எம்பரீத்தோ - யெலீனா ஒரு தலைமுறை. இவர்கள் க்யூபாவில் பிறந்து வளர்ந்தவர்கள். அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்கள். இவர்களுக்கு ஸ்பானிஷ் மட்டும்தான் தெரியும். எம்பரித்தோவின் மகன் அமெரிக்காவில் சின்ன ஹவானா என்று அழைக்கப்படுகிற இடத்தில் பிறந்தவர். இவருக்கு ஸ்பானிஷ் தெரியும். ஆங்கிலம் ஓரளவு தெரியும். இவருடைய மனைவி க்யூபாவில் பிறந்தவர். அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தவர். இவருக்கு ஸ்பானிஷ் மட்டும்தான் தெரியும். இவர்கள் இரண்டாம் தலைமுறையினர். இவர்களுடைய குழந்தைகளான ரமோசனும், அனீதாவும் அமெரிக்காவிலேயே பிறந்தவர்கள். இவர்களுக்கு ஆங்கிலம் மட்டும்தான் தெரியும். எம்பரீத்தோவிற்கு எப்போதும் க்யூபாபற்றிய எண்ணமும், பெருமையும் உண்டு. அவருடைய மகனுக்கு தன்னுடைய நாடு அமெரிக்காவா, க்யூபாவா என்று முடிவு எடுக்க முடியாத நிலை. ஆனால் ரமோசனுக்கும் அனீதாவிற்கும் எந்தக் குழப்பமும் இல்லை. எங்களுடைய நாடு அமெரிக்கா. நாங்கள் அமெரிக்கர்கள். எங்கள் மொழி ஆங்கிலம்என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அமெரிக்காவும், க்யூபாவும் வீணாக பகையை வளர்த்துக்கொண்டிருக்கின்றன என்ற எண்ணமும் இவர்களிடம் உண்டு. அதே மாதிரி ஐம்பது ஆண்டுகள் கழித்த பின்னும் காஸ்ட்ரோவுக்கு க்யூபாவில் எப்படி இவ்வளவு பெயரும், புகழும் இருக்கிறது என்பது இருவருக்கும் ஆச்சரியம்.  

1962ல் அமெரிக்காவிலிருந்து க்யூபாவிற்கோ, க்யூபாவிலிருந்து அமெரிக்காவிற்கோ யாரும் எளிதில் சென்றுவர முடியாத நிலை. இந்த கட்டுப்பாட்டை ஓரளவு தளர்த்தியவர் கார்ட்டர். அதன்பிறகு வந்த கிளின்ட்டன், ஜார்ஜ் புஷ் போன்றவர்கள் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தினார்கள். ஒபாமா ஜனாதிபதியானதும் க்யூபாக்காரர்கள், க்யூபாவிற்கு எப்போது வேண்டுமானாலும் போகலாம், வரலாம் என்ற ஆணையைப் பிறப்பித்தார். ஒபாமா ஏற்படுத்திய சலுகையைப் பயன்படுத்தி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2009ல் எம்பரீத்தோ, அவருடைய மனைவி, மகன், மருமகள், பேரக் குழந்தைகள் க்யூபாவிற்கு பயணமாகிறார்கள்.

       பயணத்தின்போது எம்பரீத்தோ தன்னுடைய இளமைக் காலம், ட்ரினிடாட்ப் என்ற இடத்திலிருந்த சொந்தமான கரும்புத் தோட்டம், ‘வின்யாலெஸ்என்ற இடத்திலிருந்த சொந்தமான புகையிலை தோட்டம், க்யூபாவின் செம்மண், கடற்கரை, அப்பா, அம்மா, தங்கை, வீடு, கிடார் இசை, அண்ணன் என்று என்று ஒவ்வொன்றாக சொல்லி விவரிக்கிறார். சொந்த நாட்டுக்கே சுற்றுலாக்காரன் மாதிரி போவதைக் கிண்டலாகவும், வேதனையாகவும் சொல்கிறார்.

       க்யூபாவில் எம்பரீத்தோவின் அண்ணன் நாசியனோலினும், தங்கையும், அவருடைய மகள் மரிஸஸாவும் இருக்கிறார்கள். எம்பரீத்தோவின் குடும்பம் நாசியனோலீன் வீட்டில் தங்குகிறது. நாசியனோலின் இடதுசாரி அரசியலை ஆதரிப்பவர். காஸ்ட்ரோவின் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். கட்சிக்காக திருமணம் செய்துகொள்ளாதவர். க்யூபா புரட்சிக் கழகத்தில் தீவிர உறுப்பினர். இடதுசாரி அரசியலை ஆதரிக்கக்கூடாது என்று கூறிய தந்தையிடம் சண்டை போட்டுக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியவர். நாசியனோலின் தந்தை இடதுசாரி அரசியலை எதிர்த்தவர். பட்டீஸ்டாவின் ஆட்சியை ஆதரித்தவர். நாசியனோலின் தங்கையின் கணவர் பட்டீஸ்டாவின் ஆட்சிகாலத்தில் உயர் பதவியில் இருந்தவர். அண்ணனும் தம்பியும் கடந்தகால அரசியல் செயல்பாடுகளையும், இன்றைய அரசியல் செயல்பாடுகளையும் பேசுகின்றனர். பேச்சில் அமெரிக்காவின் முதலாளிய பண்பாடு பற்றியும், க்யூபாவிற்கும் சோவியத் யூனியனுக்குமான நட்புப்பற்றியும், அந்த நட்பு பின்னாளில் எப்படி கசப்பாக மாறியது என்பதுபற்றியும் பேச்சு வளர்கிறது. கென்னடியின்மேல் இருந்த கோபத்தைவிட க்ருசோவ் மீது காஸ்ட்ரோவுக்கு அதிக கோபம் ஏன் ஏற்பட்டது? வியட்நாம் போர், 1962ல் நடந்த வளைகுடா போர் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். போரில் அமெரிக்கா, க்யூபா, ரஷ்யா ஆகிய நாடுகளில் நிலைப்பாடுகள்பற்றியும் பேசுகிறார்கள். 1950களில் அமெரிக்காவில் வாழ்ந்த ப்ராட்டஸ்டாண்டு கிருத்துவர்களுடைய எளிமை, அடக்கம் பற்றியும் பேசுகிறார்கள். ஐம்பது ஆண்டுகள் கழிந்த பிறகும் க்யூபா எப்படி மாறாமல் அப்படியே இருக்கிறது என்ற பேச்சும் வருகிறது. எம்பரீத்தோவுக்கு அதுதான் ஆச்சரியம். ரமோசனும், அனீதாவும் க்யூபாவின் சட்டதிட்டங்கள் பற்றியும், ஊடக, தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாதது பற்றியும் பேசுகிறார்கள். க்யூபாவின் நடைமுறைகள் அவர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ரமோசன் க்யூபாவில் தங்கிக்கொள்வதாக முடிவெடுக்கிறான்.

       1960 காலத்தில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்களின் வழியாக இந்த கதை சொல்லப்படுகிறது. ஐம்பதாண்டு காலத்தில் அமெரிக்காவிலும், க்யூபாவிலும் ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்கள்பற்றியும் பேசப்படுகிறது. புலம்பெயர்ந்தவர்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகளின் மனவோட்டமும், வாழ்வியல் முறைகளும் எப்படி மாறிப்போகின்றன என்பதையும் இக்கதை விவரிக்கிறது. 1960களிலும் 1980களிலும் க்யூபாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்களுடைய கதையை மட்டும் இக்கதை பேசவில்லை. மற்றுமொரு முக்கியமான கதையையும் பேசுகிறது. அக்கதைதான் க்யூபாவின் அடிமை சரித்திரம். ஆப்பிரிக்க நைஜீரியாவிலிருந்த யொரூபாஎன்ற இனத்தவர்களை அடிமைகளாக கொண்டுவந்து க்யூபாவின் கரும்புத் தோட்டங்களிலும், புகையிலைத் தோட்டங்களிலும் வேலை செய்ய வைத்த கதை, யொரூபா இனத்தவர்களை கத்தோலிக்க மதத்திற்கு கட்டாய மதமாற்றம் செய்த கதை முக்கியமானது. சர்க்கரை உற்பத்தியில் க்யூபா உலகில் முதலிடம் வகிப்பதற்கு நைஜீரிய அடிமைகளின் உழைப்புதான் காரணம். யொரூபா கலாச்சாரமும், கத்தோலிக்க கலாச்சாரமும் இணைந்து புதிய பண்பாடாக எப்படி சானட்டரியாஎன்ற பெயரில் க்யூபாவில் வளர்ந்துள்ளது என்ற வரலாற்றையும் இக்கதை பேசுகிறது.

       இக்கதையில் தமிழர்கள் யாருமே இல்லை. தமிழர்களுடைய கதையோதமிழ் வாழ்வை மையப்படுத்திய கதையோ அல்ல இது. க்யூபாவிலிருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்தவர்களுடைய வாழ்க்கையை பேசுகிறது. அதுவும் தமிழ் மொழியில். அமெரிக்கா, க்யூபா, ரஷ்யா போன்ற நாடுகளின் கடந்த 50-60 ஆண்டுகளாக அரசியல் நிகழ்வுகளையும் எழுதிய கதை இது.

 

       தமிழர்கள் எங்கு இருந்தாலும், வாழ்ந்தாலும் சும்மா இருப்பார்களா என்றால் இருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல முடியும். வம்பு அவர்களைத் தேடி வரும். இல்லையென்றால் வம்பைத் தேடிப் போவார்கள்.       உதவி செய்யப்போய் மாட்டிக்கொண்டு அவஸ்தைப்படுகிற ஒரு மனிதனுடைய கதை – ‘பிள்ளை கடத்தல்காரன்’. அ.முத்துலிங்கம் எழுதியது. லோகநாதன் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு அகதி. கனடா நாட்டில் அகதியாக வாழ மனு செய்து நிராகரிக்கப்பட்டவன். நிராகரிக்கப்பட்ட மனுவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு செய்து காத்திருப்பவன். கனடா வந்து மூன்றாண்டுகளாக அல்லல் படுகிறவன். ஒரு நாளைக்கு இரண்டு இடத்தில் வேலை செய்பவன். காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை ஒரு கம்பனியிலும், மாலை நான்கு மணி முதல் இரவு ஒன்பது மணிவரை ஒரு சூப்பர் மார்க்கெட்டிலும் பணி செய்கிறான். இரண்டு இடத்தில் வேலை செய்தும், மாடாக உழைத்தும் கனடா வருவதற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தத்தளிக்கிறான்.

       காலையில் கம்பனி வேலை முடித்து சூப்பர் மார்க்கெட்டுக்கு போகும் கணத்தில்தான் கதை நிகழ ஆரம்பிக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் தன்னந்தனியாக ஒரு தமிழ்க்குழந்தை நிற்பதை பார்த்துவிட்டு குழந்தையிடம் விசாரிக்கிறான். குழந்தையினுடைய பெயர் ஷிவானி. அதனுடைய தாயின் பெயர் லலித குமாரி. பொருள்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டிற்குள் சென்றிருக்கிறாள். குழந்தையோடு பேசிக்கொண்டிருந்த லோகநாதன் நேரமாக நேரமாக பதட்டமடைகிறான். வேலைக்குப் போக நேரமாகிறது. அதே நேரத்தில் குழந்தையை தன்னந்தனியாக விட்டுவிட்டு போகவும் மனமில்லை. வேறு வழியின்றி காவலாளி அப்துல் ஆஹாட்டியுடன் பேசுகிறான். அப்துல் ஆஹாட்டி சோமாலியாவைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் சோமாலியாவின் அமைச்சராக இருந்தவர். சோமாலியாவில் இருக்கிறவர்களில் பாதி பேர் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான். காவலாளி குழந்தையின் தாய்க்கு போன் மூலம் அறிவிக்கலாம் என்ற யோசனையைக் கூற லோகநாதன் அப்படியே செய்கிறான். லலித குமாரி இதோ வந்து விடுகிறேன்என்று சொல்கிறாள். ஆனால் ஆள் வந்த பாடில்லை. நேரமாகிறது. லோகநாதன் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துப்போகிறான். மீண்டும் குழந்தையின் தாயுடன் தொடர்பு கொள்கிறான். அவள் முன்பு சொன்ன பதிலையேத்தான் சொல்கிறாள். இதோ வந்து விடுகிறேன்ஆனால் ஆள் வந்து சேரவில்லை. லோகநாதனும், அப்துல் ஆஹாட்டியும் பலமுறை தொடர்பு கொண்டும் குழந்தையினுடைய தாய் வராத காரணத்தால் பயந்துபோய் காவல்துறைக்கு தகவல் கொடுக்கிறார்கள். காவல்துறை வருகிறது. அவர்கள் வந்து அழைத்த பிறகுதான் லலித குமாரி வருகிறாள். குழந்தையை விட்டுவிட்டு பொருள் வாங்க சென்றதாக கூறுகிறாள். அதை ஏற்காமல் காவல்துறை லலித குமாரியை கைது செய்து அழைத்து செல்கிறது. அப்போது தன்னுடைய குழந்தையை லோகநாதன் கடத்திவிட்டான் என்று குற்றம் சுமத்துகிறாள். ‘I will pin you’ என்று ஓயாமல் கத்துகிறாள். வேலைக்கு செல்ல முடியவில்லை. குற்றவாளி என்ற பட்டம். உன்னை மாட்டிவிடுகிறேன் பார் என்ற மிரட்டல். குழம்பிப்போகிறான் லோகநாதன். அவனுடைய பதட்டமும், தத்தளிப்பும்தான் கதை.

       கதை டொர்னோட்டோ வார்டன் வீதியிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் நடக்கிறது. முதல் பார்வைக்கு இது நமது நாட்டில் நடப்பது மாதிரி பெற்றோர்கள் குழந்தைகளை தங்களுடைய இஷ்டத்திற்கு விட்டுவிட்டு செல்ல முடியாது என்று சொல்வதாக இருக்கிறது. எது நடந்தால் எனக்கு என்ன என்று போகிற மேலை நாட்டு மனோபாவம் முற்றிலுமாக தமிழர்களிடம் வந்துவிடவில்லை என்று சொல்வதாகவும் கொள்ள முடியும். சோமாலியாவில் மந்திரியாக இருந்தவர் கனடாவில் அகதியாக மட்டுமல்ல, காவலராகவும் பணி செய்கிறார் என்ற செய்தி நமக்கு புதிது. ஆச்சரியம்.

       பிள்ளை கடத்தல்காரன் – தமிழ் மொழியில் எழுதப்பட்ட கனடா நாட்டுக்கதைபன்னாட்டுக் கதை.

 

மலேசியாவில் தமிழர்கள் எப்படி இருக்கிறார்கள், எப்படி வாழ்கிறார்கள்? என்று ம.நவீன் எழுதிய ஒலிகதை சொல்கிறது. சின்னி ஒரு சீனப் பெண். தமிழர்கள் வாழும் பகுதியில் பாக்கெட் சாராயம் விற்கக்கூடியவள். மலேசியாவில் லூனாஸ் என்ற இடத்தில் சாராயம் காய்ச்சமுடியாது. பட்வெர்த் என்ற இடத்தில்தான் காய்ச்ச முடியும். பட்வெர்த்தில் காய்ச்சப்படும் சாராயத்தை பாக்கெட் செய்துவந்து லூனாஸில் சின்னி விற்கிறாள். தன்னந்தனியாக. சின்னி மனவலிமையோடு உடல் வலிமையும் கொண்டவள். ஆனாலும் அனுசரித்துப்போகும் விட்டு கொடுத்துப்போகும் பண்பு உள்ளவள். எவ்வளவு அனுசரித்து, விட்டுக்கொடுத்து போகிறாளோ அந்த அளவுக்கு அவளுக்கு வியாபாரம் லாபம். அவளுடைய வாழ்க்கையில் சின்னச்சின்ன காரியங்கள்கூட லாப நட்ட கணக்கு சார்ந்ததுதான். வியாபாரத்தினுடைய அடிப்படையே பணம் சம்பாதிப்பதுதான். வியாபாரத்தினுடைய தர்மமும் அதுதான். சின்னி ஒரு வியாபாரி. தன்னுடைய தொழிலுக்கான தர்மத்தை அவள் கடைப்பிடிக்கிறாள்.

       தமிழ் பெண்கள் மாதிரி உடம்பு முழுவதும் துணிகளை சுற்றிக்கொண்டிருக்கிற பெண்ணல்ல சின்னி. சீனர்களுக்கு புழுக்கம் அறவே ஆகாது. ஆகவே அவர்கள் முடிந்த அளவுக்கு துணிகளைக் குறைத்துதான் உடுத்துவார்கள். தமிழ் ஆண்களுக்கு சின்னி விற்கும் பாக்கெட் சாராயம் ஓரளவுதான் போதையை ஏற்றும். மீதியை அவளுடைய உடல் ஏற்றும். அதனால் விறைத்த தங்களுடைய குறிகளை தமிழ் ஆண்கள் வேண்டும் என்றே சின்னியிடம் காட்டுகிறார்கள். அதற்கு அவள் உன்னுடைய மனைவி கொடுத்து வைத்தவள்என்று சொல்வாள். அச்சொல் கூடுதலாக தமிழ் ஆண்களை போதையேற்றும். அதோடு அவளுடைய தொடைகளும், முலைகளும் போதையேற்றும். அந்த போதையில் அவ்வப்போது அவளுடைய புட்டத்தில் தட்டவும் செய்வார்கள். அதுவும் அவர்களுக்குப் போதை ஏற்றும். தமிழ் ஆண்களுக்கு எவ்வளவு போதை ஏறுகிறதோ அந்த அளவுக்கு சின்னிக்கு வியாபாரம் கூடுதல். லாபம் கூடுதல். எல்லை மீறும்போது மட்டும்தான் சின்னிக்கு கோபம் வரும். கை வலிமையைக் காட்டுவாள். அவளுடைய கை வலிமையை தமிழர்கள் அறிவார்கள்.  

       தமிழர்கள் காட்டமான பாக்கெட் சாராயத்தைக் குடிப்பவர்கள். மலாய்க்காரர்களும் காட்டமான சாராயத்தைக் குடிப்பவர்கள்தான். ஆனால் சீனர்கள் காட்டமான சாராயத்தைக் குடிப்பவர்கள் அல்ல. வெறும் பீர் மட்டும்தான் குடிப்பார்கள். அதுவே அவர்களுக்கு போதுமான போதையை தந்துவிடும்.

ஒலி கதையில் மூன்று விதமான சமூக வாழ்க்கை பேசப்படுகிறது. மலேசிய தமிழர்கள், சீனர்கள், மலாய்க்காரர்கள். இது மூன்று இனத்தினுடைய கதை – தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது. மலேசியாவை நிகழிடமாக கொண்டு நிகழ்வதால் இது – தமிழ் மொழியில் எழுதப்பட்ட மலேசிய நாட்டுக் கதை என்று சொல்லலாம். குறிப்பாக மூன்று சமூகத்தின் உளவியலை ஒலிகதை பேசுகிறது.  

தமிழர்களும், இந்தியர்களும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும், உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், உணவில்லாமல், உடையில்லாமல்கூட இருப்பார்கள். ஆனால் சாதி இல்லாமல் இருக்க மாட்டார்கள். ‘சைகையிற் பொருளுணர்’ – கருப்பி எழுதிய கதை. தனுஜா, விஷ்ணு இருவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். கனடாவில் வசிப்பவர்கள். இருவருக்கும் காதல் ஏற்பட்டு டொரனோட்டோ நகரம் முழுவதும் உல்லாசமாக சுற்றியவர்கள். ஒரு கட்டத்தில் விஷ்ணுவின் சாதி தெரியவர, படிப்படியாக தனுஜா விஷ்ணுவிடமிருந்து விலக ஆரம்பிக்கிறாள். நல்ல படிப்பு, நல்ல வேலையில் இருக்கிறான் என்று விஷ்ணுவிடம்  மகளை நன்றாக உறவாட விடுகிற தனுஜாவின் பெற்றோர்கள் அவனுடைய சாதி தெரிந்த பிறகு அந்த உறவை எதிர்க்கிறார்கள். விஷ்ணுவின் சாதி தெரிந்த பிறகு அவனை படிப்படியாக தவிர்க்கச்சொல்லி தனுஷாவை நிர்பந்திக்கிறார்கள். தனுஷா நல்ல தமிழச்சி. பெற்றோரின் சொல்படியே நடக்கிறாள். காதல் அவளுக்கு முக்கியமல்ல. சாதிதான் முக்கியம். காரணம் தெரியாது தவிக்கிற விஷ்ணு தனுஜாவின் நினைவிலிருந்து      மெல்ல-மெல்ல விலகி இலங்கையை சேர்ந்த நீரோ என்ற பெண்ணை சந்திக்கிறான். அவள் தற்போதைக்கு இணைந்து வாழலாம். விருப்பம் இருந்தால் திருமணம் செய்துகொள்ளலாம் என்று அழைக்கிறாள். நல்ல உடன்பாடு. சரி என்று விஷ்ணு நீரோவுடன் கெட் டூ கெதர் என்ற முறையில் இணைந்து வாழ்கிறான்.

மூன்றாண்டுகள் கழித்து திடீரென்று ஒரு நாள் தனுஜா விஷ்ணுவை போனில் அழைத்து அவசரமாக அமெரிக்கா செல்ல வேண்டும் விமான நிலையத்தில் இறக்கிவிட முடியுமா என்று கேட்கிறாள். முதலில் தயங்குகிறான். நீரோ கட்டாயப்படுத்தவே சரி என்று ஒப்புக்கொண்டு தனுஜாவை காரில் ஏற்றிக்கொண்டு விமான நிலையத்திற்கு செல்கிறான். பயணத்தின் முடிவில் தனுஜா கேட்கிறாள் என்னிடம் சாதியை மறைத்தது மாதிரியே நீரோவிடமும் மறைத்துவிட்டுதான் வாழ்கிறாயா?” என்று கேட்டு நமட்டு சிரிப்பு சிரித்துவிட்டுப் போகிறாள். அப்போதுதான் விஷ்ணுவிற்கு தனுஜா ஏன் தன்னைவிட்டு விலகிப்போனாள் என்கின்ற காரணம் புரிய வருகிறது. நொறுங்கிப்போகிறான்.

       சைகையிற் பொருளுணர் கதையில் விஷ்ணு, தனுஜா, நீரோ மூன்று பேருடைய காதல் கதை வருகிறது. அதே மாதிரி மற்றொரு முரண்பட்ட காதல் கதையும் வருகிறது. ஜேய்சன் என்ற இளைஞனும் யூலியா என்ற இளம்பெண்ணும் காதலிக்கிறார்கள். யூலியாவின் தோழி மரியா. ஒரு கட்டத்தில் ஜேய்சனுக்கும் மரியாவிற்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துகொள்கிறார்கள். ஜேய்சன், யூலியா காதல் முறிந்துபோகிறது. அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அதற்குப் பெயர் யூலியா. யூலியா தமிழ்நாட்டுப் பெண் மாதிரி கண்ணீர் விட்டுக்கொண்டு நிற்கவில்லை. நீல் என்ற இளைஞனை காதலிக்கிறாள். மாறிமாறி காதலித்தாலும், கல்யாணம் செய்துகொண்டாலும் ஜேய்சன், மரியா, யூலியா, நீல் ஆகிய நான்கு பேரும் இணைந்து சுற்றுலா செல்கிறார்கள். இது தமிழ்நாட்டிலோ, இலங்கையிலோ நடக்குமா?

       கதை டொரோனொட்டாவில் நடக்கிறது. கனடா நாட்டு பழக்க வழக்கம் குடித்தல், நடனமாடுதல் என்று இன வேறுபாடின்றி சாதாரணமாக இருப்பது என்று சித்திரிக்கப்படுகிறது. லேக் ஓண்டாரியோசி என்ற புகழ்பெற்ற இடத்தில் நடப்பது, ஃபளுமவுண்ட் ரிசாட் பற்றிய குறிப்புகள் கதையில் இடம் பெற்றுள்ளன.

       கதை நிகழும் இடம், கதையில் வரக்கூடிய மனிதர்களில் பலர், இலங்கையைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆகவே கருப்பி எழுதிய சைகையிற் பொருளுணர் கதை தமிழ் மொழியில் எழுதப்பட்ட கனடா கதை கனடா வாழ்க்கை. காரணம் கதை விவரிக்கும் வாழ்க்கை முற்றிலும் கனடிய சமூக வாழ்க்கை. சாதி ஒன்றுதான் புதிது. தமிழர்கள் எங்கு சென்றாலும் பழக்க வழக்கத்தை மட்டுமல்ல சாதியையும் கூடவே எடுத்து செல்கிறார்கள் என்பதையும் இக்கதை சொல்கிறது. வாழும் இடம் தந்த சுதந்திரத்தினால் எழுதப்பட்டது சைகையிற் பொருளுணர்.

 

உலகில் சிறிய நாடு. ஆனால் அழகிய இடம். அபரிமிதமான வளர்ச்சி. ஒழுங்கு, தூய்மை என்று போற்றப்படுகிற சிங்கப்பூர் வாழ்க்கையும், மனிதர்களும் எப்படி இருக்கிறார்கள் என்பதை ஷா நவாஸ் எழுதிய சாட்சிஎன்ற கதை சொல்கிறது. தினசரி நாளிதழ் போடுகிற மனிதனுடைய ஒரு நாள் காலை பொழுதைப்பற்றி பேசுகிறது. சீனர்களுடைய வீடுகளிலும் பங்களா தேஷிகள், தமிழர்களுடைய வீடுகளிலும் செய்தித்தாள்களை போடும்போதும் ஒவ்வொரு வீட்டு மனிதர்களும் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்? காலை வணக்கத்தை ஒவ்வொரு மொழியிலும் எப்படி சொல்கிறார்கள்? எப்படி பழகுகிறார்கள் என்பதில் ஆரம்பித்து ஒவ்வொரு வீட்டு மனிதர்களைப்பற்றியும்,  அவர்களுடைய குண இயல்புகள்பற்றியும், அவர்கள் பார்க்கும் வேலை, வருமானம், உடை என்று மூன்று இனத்தவருடைய பல தகவல்கள் சொல்லப்படுகின்றன.

                செய்தித்தாளை போட்டுக்கொண்டே போகும்போது எதிர்பாராத விதமாக ஒரு லாரியில் அடிப்பட்டு ஒரு சீனக் கிழவி செத்துப்போக நேரிடுகிறது. லாரி போய்விடுகிறது. பிழைப்பதற்காக சீனாவிலிருந்து வந்த இளம்பெண் ஒருத்திதான் லாரியில் அடிப்பட்ட கிழவியை தூக்கிப்பார்க்கிறாள். காவல்துறைக்கு, மருத்துவமனைக்கு தகவல் தருகிறாள். கிழவியின் உடல் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்படுகிறது. காவல்துறை விபத்துபற்றி விசாரணையை ஆரம்பிக்கிறது. செய்தித்தாள் போடுகிற நபர் விபத்தைப் பார்க்கவில்லை என்று பொய் சாட்சி சொல்கிறான். அப்படி சொல்ல அவனுடைய நண்பன் சங்கர்தான் தூண்டிவிடுகிறான். சங்கர் சொல்லாவிட்டாலும் செய்தித்தாள் போடுகிறவன் அப்படித்தான் சொல்லியிருப்பான். சீன இளம் பெண், செய்தித்தாள் போடுகிறவன் என்று பலரும் சீனக்கிழவி இறந்துவிட்டாளா, உயிரோடு இருக்கிறாளா என்று விவாதிக்கிறார்கள்.

                சீனக்கிழவியின் விபத்துப்பற்றி மட்டுமே கதை விவரிக்கவில்லை. சீனர்கள்பங்களா தேஷிகள், தமிழர்களுக்கிடையிலான உறவுகள் எப்படி இருக்கிறது என்பதையும் சொல்கிறது. தீபாவளி, ஹரிராயா போன்ற விசேஷ தினங்களில் சிங்கப்பூரில் செய்யப்படும் சிறப்பு உணவான குவேஎப்படி ஒவ்வொரு வீட்டாருக்கும் பறிமாறப்படுகிறது என்பதையும், மரியம், ஜோசப், அப்துல் சாலா போன்ற மனிதர்களின் வழியே நிகழ்த்திக் காட்டப்படுகிறது.            தமிழர் ஒருவர் இந்த கதையை சொல்கிறார். என்பதால் இது தமிழ் கதையாகிவிடாது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட சிங்கப்பூர் கதை. சிங்கப்பூர் இலக்கியம்.

 

நானும் ஒகஸ்டீனாவும், ஒரு பந்தயக்குதிரையும்என்பது சக்ரவர்த்தி எழுதிய சிறுகதை. இங்கிலாந்திலுள்ள ஜார்ஜ் டவுனுக்கு அருகில் ஒரு மலை அடிவாரத்தை ஒட்டிய பகுதியில் நடக்கிறது கதை. டானியல் இங்கிலாந்துக்காரன். குதிரைப் பண்ணை வைத்திருப்பவன். அவனிடம் வேலை செய்பவன் பாபு. இலங்கையைச் சேர்ந்தவன். அகதி. டானியலுடன் ஒகஸ்டீனா  என்ற இளம்பெண் இருக்கிறாள்.  தென் ஆப்பிரிக்கக்காரி. அகதி. இவர்களை மையமாக வைத்துதான் கதை நிகழ்கிறது.

       ஒகஸ்டீனா ஒரு வெள்ளைக்காரி. அவளுடைய தந்தை ஒரு கருப்பினத்தவருடைய நாயுடன் தன்னுடைய நாய் புணர்ந்ததற்காக நாயின் உரிமையாளரான கருப்பினத்தவரை சுட்டுக்கொன்றவர். ஒரு வெள்ளைக்காரனுடைய நாயுடன் ஒரு கருப்பினத்தவனுடைய நாய் புணர்வதா என்பதுதான் அவருடைய கோபத்திற்கான காரணம். கருப்பினத்தவர்களிடையே இருந்த தீவிரவாத இயக்கத்தினர் ஒகஸ்டீனாவின் தந்தையை கொன்றுவிடுகிறார்கள். அதனால் தன்னையும் கொல்லலாம் என்ற பயத்தில் நாட்டைவிட்டு ஓடிவந்துவிடுகிறாள். அவளோடு அவளுடைய டால்மேஷன் என்ற நாயும் வருகிறது. அது டானியலினுடைய பண்ணையில் புகுந்துவிட நாயை பிடிக்கப்போன இடத்தில் ஒகஸ்டீனா டானியலை சந்திக்க நேர்கிறது. நாட்டைவிட்டு ஓடிவந்த அகதி. என்பதை அறிந்து, பயமுறுத்தி, அவளை அதிகமாகக் குடிக்க வைத்து தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒரு அடிமையைப்போன்று நடத்துகிறான் டானியல். நாள் தவறாமல் அவளோடு முரட்டுத்தனமாக உறவு கொள்கிறான். அதிலிருந்து தப்பித்து செல்ல முயன்று கொண்டிருக்கும்போது பாபுவுக்கும் ஒகஸ்டீனாவுக்கும் நட்பாகிறது. பாபு, டானியலின் - குதிரை பண்ணையில் வேலைப் பார்ப்பவன். ஒகஸ்டீனாவை ஸ்ரீரங்கத்து மடிசார் மாமி மாதிரி மாற்றி, இலங்கை பெண் மாதிரி சீலைக் கட்டி கல்யாணம் கட்டி, பிள்ளைப்பெற்று வளர்ப்பது மாதிரி கனவு காண்கிறான் பாபு. அவனுடைய கனவை வளர்ப்பது மாதிரிதான் ஒகஸ்டீனாவினுடைய நடவடிக்கையும் இருக்கிறது. பாபுவுக்கு காதலும் இருக்கிறது. டானியல் என்ன செய்வானோ என்ற கவலையும் இருக்கிறது. வெள்ளைக்காரியை ஒரு கருப்பன் காதலிப்பதா என்ற அச்சமும் கூடுதலாக இருக்கிறது.

       டானியல் ஒரு நாள் பந்தயத்திற்கு குதிரையுடன் சென்றுவிட அந்த நேரத்தில் ஒகஸ்டீனா தன்னை இங்கிருந்து அழைத்து சென்றுவிடு என்று பாபுவிடம் கேட்கிறாள். இருவரும் பேசுகிறார்கள். பாபு பிருதிவிராஜன் கதை சொல்கிறான். தமிழ் கவிதை சொல்கிறான்.  அவள் சூலு’ மொழி கவிதை சொல்கிறாள். ஓடிப்போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அன்று மாலை வந்த டானியல் தன்னுடைய குதிரை பந்தயத்தில் ஓடிப்போய் தோற்காமல், ஓடாமல் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டது என்று கூறி சுட்டு கொன்றுவிடுகிறான். அதே நேரத்தில் பாபுவையும் ஒகஸ்டீனாவையும் ஒன்றாக பார்த்ததில் சந்தேகம் வந்து நீயும் என்னை ஏமாற்றுகிறாயா? பெண் நாயேஎன்று சொல்லி ஒகஸ்டீனாவையும் சுட்டு கொன்றுவிடுகிறான். காத்திரு. உன்னோடு பேசவேண்டும்என்று சொல்லிவிட்டு டானியல் போய்விடுகிறான். குதிரையின் கதை, ஒகஸ்டீனாவின் கதை முடிந்த மாதிரி தன்னுடைய கதையும் முடியப்போகிறது என்ற கவலையில் பாபு காத்திருக்கிறான் என்பதோடு கதை முடிகிறது.

       இந்த கதையில் இலங்கையிலுள்ள படுவான்கரைப்பற்றிய குறிப்பும், தென் ஆப்பிரிக்கா பற்றின குறிப்பும் வருகிறது. ஆனால் கதை மில்டன் சிட்டியிலிருந்து ஜார்ஜ் டவுனுக்குப் போகும் வழியிலுள்ள மலை அடிவாரத்தில் நடக்கிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட இங்கிலாந்து நாட்டுக்கதை. உயிருக்கு பயந்து, உயிரை காப்பாற்றிக்கொள்ள நாடுவிட்டு நாடு ஓடிவந்தவர்களின் கதை. ஓடிவந்தவர்கள் சந்திக்கும் புள்ளிதான் நானும் ஒகஸ்டீனாவும் ஒரு பந்தயக் குதிரையும் கதை.  இனவெறி, நிரவெறி பற்றிய கதை இது. வெள்ளை நிறத்தவனுடைய நாய் கருப்பினத்தவனுடைய நாயை புணர்வதா? வெள்ளைக்காரி ஒரு கருப்பினத்தவனை காதலிப்பதற்கான காரணம் அன்பல்ல. சூழல். இக்கதைக்குள் நுட்பமான அரசியல் விவாதிக்கப்படுவதை எளிய வாசகன்கூட அறியமுடியும்.

 

                ‘சன்னலொட்டி அமரும் குருவிகள்என்பது நாகரத்தினம் கிருஷ்ணா எழுதிய கதை. பாண்டிச்சேரியிலும் பிரான்சிலுமாக கதை நடக்கிறது. பாண்டிச்சேரியை சேர்ந்த வீரப்பனுக்கும் திலகத்திற்கும் பிறந்தவன் சின்னதுரை. வீரப்பனுக்கு மீன் பிடிப்பது தொழில். திலகத்திற்கு பெரிய மார்க்கெட்டில் மீன் விற்பது வேலை. மீன் பிடிக்க சென்ற வீரப்பன் புயலில் சிக்கி இறந்துவிட, திலகம் பெரிய மார்க்கெட்டில் இருக்கிற தண்டல்காரனுடன் வேறுவரியின்றி இணைந்து வாழ ஆரம்பிக்கிறாள். நாளடைவில் அந்த உறவு கசப்படைகிறது. சின்னதுரை பல இடங்களில்  வேலை செய்கிறான். எதிலும் நிலைத்து நிற்க முடியவில்லை. பிரான்சிற்கு செல்ல வேண்டும் என்பது அவனுடைய ஆசை. அதற்கு பிரான்ஸ் நாட்டு குடியுரிமை வேண்டும். அதற்காக பிரான்ஸ் குடியுரிமை உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறான். அந்த பெண்ணுக்கு நான்கு குழந்தைகள் இருக்கிறது. நான்கு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவள். வயது நாற்பதுக்கும் மேல். அவளுடைய முக்கியமான தொழில் பிரான்சுக்கு செல்ல விரும்பும் ஆண்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு தொகையைப் பேசி, பணத்தை வாங்கிக்கொண்டு திருமணம் செய்வது, பிறகு விவாகரத்து பெறுவதுதான். அதே முறையை பின்பற்றி சின்னதுரை அந்தப்பெண்ணுக்கு ஐந்தாவது கணவனாக பதிவு திருமணம் செய்து, குடியுரிமை பெற்று பிரான்சுக்கு செல்கிறான்.

       பிரான்சில் பாகிஸ்தானியர் நடத்தும் ஹோட்டலில் சின்னதுரை வேலை செய்கிறான். ஆறு மாதம் முடிந்த நிலையில் எதிர்பாராத விதமாக போலீஸில் மாட்டிக்கொள்கிறான். போலி பாஸ்போர்ட்டில் வந்ததாக போலீஸ் கூறுகிறது. போலீஸ் விசாரணையோடு கதை முடிகிறது. சின்னதுரை திரும்பி பாண்டிச்சேரிக்கு அனுப்பப்பட்டானா இல்லையா? தெரியாது. இந்தக் கதையில் பாகிஸ்தான், பிரான்சு, ஆப்பிரிக்கா, அல்ஜீரியா, இலங்கை, பங்களாதேஷ், மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த மனிதர்கள் என்று பலரும் வருகிறார்கள். அதே மாதிரி பிரான்சு தேசத்து உணவு வகைகள் இடம்பெறுகின்றன. பாண்டிச்சேரியில் கதை நடப்பது போல தோற்றம் தந்தாலும், கதை நடப்பது பிரான்சு தேசத்தில்தான். வெளிநாடு செல்ல விரும்புகிறவன் படுகிற அவஸ்தையும், வெளிநாடு சென்ற பிறகு அங்கு படுகிற அவஸ்தையும்தான் சன்னலொட்டி அமரும் குருவிகள். ஷோபா சக்தி, பொ.கருணாகரமூர்த்தி போன்ற இலங்கையைச் சேர்ந்தவர்கள் வெளிநாடு சென்ற காரணம் வேறு. நாகரத்தினம் கிருஷ்ணா கதையில் வரும் சின்னதுரை பிரான்சுக்கு சென்றதற்கான காரணம் வேறு. வழிமுறையும் புதிது. அதே மாதிரி சிங்கப்பூர், மலேசியா சென்றவர்கள் எழுதிய கதைகளில் வரும் மனிதர்களும், இலங்கை எழுத்தாளர்களுடைய கதைகளில் வரும் மனிதர்களும், அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் வேறுவேறானவை.

                        

குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட இடத்தில், ஒன்றிரண்டு பாத்திரங்களோடு நிகழ்வதுதான் சிறுகதை என்ற வரையறுக்கப்பட்ட இலக்கணத்தை மெலிஞ்சி சித்தனுடைய வேருலகு’ சிறுகதை உடைத்தெறிந்துவிட்டது. பாரிஸ், ஸ்பெயின், மெக்சிகோ என்று மூன்று நாடுகளில் கதை நிகழ்கிறது. ஒரு சிறுகதை மூன்று நாடுகளில் நிகழமுடியுமா என்றால் முடியும் என்று இக்கதை சொல்கிறது.

       சூசை த/பெ.மரியதாசன், கடற்கரை வீதி, கெட்டில், யாழ்ப்பாணம், இலங்கை என்ற உண்மையான முகவரிகொண்ட இளைஞன் அகதியான பிறகு, பட்ட அல்லலும், அலைக்கழிக்கப்பட்டதும்தான் கதை. வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு சமயங்களில் கதை நடக்கிறது. தாய் நாட்டில் சிறைச்சாலை மட்டுமல்ல, வீடு மட்டுமல்ல, திறந்த வெளியும் சிறைச்சாலையாகிவிட்ட நாட்டிலிருந்து தப்பி உயிர் பிழைப்பதற்கு செல்கிறான் சூசை. பாரிஸில் ஒரு உணவு விடுதியில் வேலை பார்க்கிறான். அது பவானி என்ற பெண் மூலம் கிடைக்கிறது. அகதியாக அங்கீகரிக்கவும், அகதிக்குரிய உதவித் தொகை வழங்கவும் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு முதல் முறையல்ல இரண்டாவது முறையும் தோற்றுப்போகிறது. வேறு வழியில்லாமல் பாரிஸைவிட்டு வெளியேற வேண்டும். வெளியேறுகிறான். பாரிஸிலிருந்து ஸ்பெயின் வழியாக மெக்சிகோ செல்ல திட்டமிட்டுப் பயணிக்கும்போது மூன்று நாட்டு போலிசும் சோதனையிடுகிறது. விசாரணை செய்கிறது. போலி பாஸ்போர்ட் என தெரியவர மெக்சிகோ போலிஸ் ஸ்பெயின் போலிசிடம் ஒப்படைக்கிறது. ஸ்பானிஷ் சிறையில் ஒரு மாதம் கழிக்கிறான் சூசை. ஸ்பெயின் மெற்றிட் நகரத்தில் அலைகிறான். கடைசியில் ஆனந்த மார்க்கா என்ற தியான மடத்தில் சேர்கிறான். அங்கு முந்தின நாள் கண்ட கனவை சொல்லச் சொல்கிறார்கள். சூசை சொல்கிறான். கதை முடிந்து விடுகிறது.

       வேருலகு கதையில் ஸ்பெயினின் அழகிய மலைத் தொடர்கள், பாரிஸின் மார்ன் சிற்றோடைப்பற்றிய விவரிப்பும் வருகிறது. பங்களாதேஷ் பெண் காசு எதுவும் தர வேண்டாம் ஆப்பிளை சாப்பிடு என்று சொல்கிறாள். மரியா என்ற பாரிஸ் பெண் யாரென்றே தெரியாத சூசைக்கு மெட்ரோ ட்ரெயின் டிக்கெட் எடுத்துகொடுத்து உதவுகிறாள். பாரிஸ், ஸ்பெயின், மெக்சிகோ விமான நிலையத்தில் போலிஸ்காரர்கள் சோதனை என்ற பெயரில் எப்படி க்ரிமினலாக நடத்துகிறார்கள், ரேகைகளை பதிக்கிறார்கள், ஆடைகளை களைக்கிறார்கள், உடலிலுள்ள ஒவ்வொரு ஓட்டையின் வழியாகவும் சோதனையிடுகிறார்கள் என்பதையும் கதை விரிவாக சொல்கிறது.

       எளிய வாசகன்கூட வேருலகு கதை படித்து முடித்ததும் இது தமிழ் கதை அல்ல. இது ஒரு பன்னாட்டு கதை என்று சொல்லிவிடுவான்.

 

       லதா எழுதிய அரச மரம்சிங்கப்பூரிலுள்ள சிராங்கூன் சாலையில் இருக்கிற ஒரு அறையில் நடக்கிறது. மலர், பேராசிரியர், துப்புரவு செய்ய வந்த பர்மாவை சேர்ந்த தமிழ்ப்பெண் ஆகியோரின் உரையாடலின் வழியே கதை நிகழ்கிறது. கதையில் சிங்கப்பூர் சவுத் பிரிட்ஜ் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவில், தாய்லாந்திலுள்ள பிள்ளைவரம் கொடுத்த நான்குதலை புத்தர், இலங்கை வடமாகாணம், அநுராதபுரத்தில் அசோக மன்னரின் மகள் சங்கமித்திரை வைத்ததாக நம்பப்படும் ஆயிரங்காலத்து அரசமரம், நீர் கொழும்பில் இருந்த அரச மரம் ஆகியவற்றின் கதைகள் சொல்லப்படுகின்றன. 1980, 1990 காலத்தில் இலங்கையில் நடந்த இன அழித்தொழிப்பு போர்ப்பற்றியும், கடைசியாக நடந்த முள்ளி வாய்க்கால் முடிவுப்பற்றியும் கதை பேசுகிறது. கடைசியாக போர் முடிந்த பிறகு இலங்கை அரசு அரச மரம்எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் புத்தர் சிலைகளை அமைப்பதைப்பற்றியும் பேசுகிறது. புதிதாக இலங்கை அரசால் நிறுவப்படும் புத்தர் சிலைகள் எப்படி இருக்கின்றன? “புத்தரின்ர புன்சிரிப்பு பயமாத்தான் கெடக்குஎன்றும், “இந்த புத்தர் சிரிக்கவே இல்லைஎன்றும் பேராசிரியர் சொல்கிறார். பயமுறுத்துகிற, சிரிக்காத புத்தர் சிலைகளை ஏன் இலங்கை அரசு ஓயாமல் நிறுவிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் லதாவின் கேள்வி. கதையின் கேள்வி. இலங்கையிலுள்ள ஆயிரங்காலத்து அரச மரத்தைப் பார்க்கப்போகிற மலர், அரச மரங்களை பார்க்காமலேயே ஏன் திரும்புகிறார் என்பது மற்றொரு முக்கியமான கேள்வி.

       இலங்கையில் மட்டும்தான் இனவாதம் இருக்கிறதா? பர்மாவில் இல்லையா என்றால் அங்கும் இருக்கிறது என்பதை பர்மாவிலேயே பிறந்து வளர்ந்த தமிழ்பெண் நாங்க நல்லா தமிழ் பேசுவோம். படிப்போம். தமிழ்காரங்கதான் நல்லாப் படிப்பாங்க. கஷ்டப்பட்டு உழைப்பாங்க. ஆனா எங்கள மதிக்க மாட்டான். அந்த நாட்டிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும் தோலு பார்ப்பான்என்று கூறுகிறாள். இலங்கையில் நடந்த அதே வன்முறைகள், ஒடுக்குதல்கள், நிறம் சார்ந்த, இனம் சார்ந்த நசுக்குதல்கள் பர்மாவிலும் நடக்கின்றன என்பதை அரச மரம் கதை சொல்கிறது. அரச மரம் கதை தமிழில்தான் எழுதப்பட்டிருக்கிறது. கதை நடப்பது சிங்கப்பூரில். ஆனால் கதை சிங்கப்பூரைப்பற்றி, இலங்கையைப்பற்றி, பர்மாவைப்பற்றி, தாய்லாந்தைப்பற்றிப் பேசுகிறது. இக்கதையில் ஆசையை துறஎன்று சொன்ன புத்தர்தான், பிள்ளை வரம் கொடுப்பவராகவும் இருக்கிறார் நான்கு தலை புத்தர்.

     

மீண்டும் ஓர் ஆதாம்நடேசன் எழுதிய கதை. மெல்பர்னிலும், தாய்லாந்திலும் நடக்கிறது. இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த நிரஞ்சனுடைய குடும்பமும், மலேசியாவிலிருந்து குடிபெயர்ந்த சீன இனத்தவரான பாட்ரிக் வொங் குடும்பமும் நட்பாகிறது. இந்த நட்பு குழந்தைகளின் மூலமாக நடக்கிறது. பாட்ரிக் வொங்கின் மனைவி சூசன். நல்ல அழகி. பாட்ரிக் வொங் பண ஆசை கொண்டவன். ஆனால் வேலை இல்லாதவன். நிரஞ்சனும் வேலை இல்லாதவர்தான். ஆனால் இரண்டு பேரினுடைய மனைவிகளும் வேலை செய்கின்றனர்.

       பாட்ரிக் வொங் தனக்கு வேலை கிடைத்துள்ளதாக கூறிவிட்டு தாய்லாந்துக்குப் போய்விடுகிறான். தாய்லாந்துக்கு வரும்படி நிரஞ்சனை நட்பு ரீதியாக பாட்ரிக் வொங் அழைக்கிறான். நிரஞ்சன் தாய்லாந்து சென்ற பிறகுதான் தெரிகிறது பாட்ரிக் வொங், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிற வேலையில் இருக்கிறான் என்பது. குறிப்பாக தாய்லாந்திலிருந்து படிப்பதற்காக என்று பெண்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வருவது பிறகு பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது. அதே மாதிரி சீனாவிலிருந்தும் படிப்பதற்கு என்று இளம்பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகிறான். ஜென்டில் மேன் க்ளப்என்ற பெயரில்தான் பாலியல் தொழில் நடக்கிறது.

       தாய்லாந்துக்கு செல்கிற நிரஞ்சன் அங்குள்ள புத்த கோவில், அரச அரண்மனை, மிதக்கும் மார்க்கெட் என்று பார்க்கிறார். கடைசியில் ஜென்டில் மேன் க்ளப்ற்கு பேட்ரிக் அழைத்துச்சென்று லின்என்ற இளம்பெண்ணை அறிமுகப்படுத்துகிறன். அவள் ஷாங்காயிலிருந்து படிப்பதற்காக வந்தவள். ஆனால் ஆஸ்திரேலியாவில் பாட்ரிக் வொங்கால் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டவள். நாள் ஒன்றுக்கு பதினைந்து வாடிக்கையாளர்களுடன் படுக்க வேண்டும். மூன்று மணி நேரம் மட்டுமே தூங்க முடிகிறது. தன்னால் பதினைந்து வாடிக்கையாளர்களுடன் படுக்க முடியவில்லை. அதனால் தப்பித்துப்போக விரும்புகிறேன். உதவுங்கள் என்று கேட்கிறாள். நிரஞ்சனும் லின்னின் நிலையை அறிந்து உதவுகிறார். விசயத்தை அறிந்த பாட்ரிக் நிரஞ்சனை கத்தியால் குத்தி விடுகிறார். உயிருக்குப் போராட்டமான நிலையில் நிரஞ்சன் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இந்த கதை புலம்பெயர்ந்து வாழ்கிற நிலையை ஒரு பக்கம் விவரிக்கிறது. மறுப்பக்கம் புலம்பெயர்ந்தவர்கள் என்னென்ன விதமான வேலைகளை  எல்லாம் செய்ய நேரிடுகிறது என்பதை சொல்கிறது. மூன்றாவதாக படிப்பதற்காக வருகிற இளம்பெண்களை பாலியல் தொழிலில் எப்படி ஈடுபடுத்துகிறார்கள் என்பதையும் சொல்கிறது. தன்னுடைய வேலை மார்கெட்டிங் ஏஜென்ட் அவ்வளவுதான்என்று பாட்ரிக் வொங் கூறுகிறான். ஆனால் தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அவனால் பாலியல் தொழிலை நடத்துகிறான். பாலியல் தொழில் பன்னாட்டு அளவில் எப்படி ஒருங்கிணைக்கப்பட்டதாக இருக்கிறது என்பதை இக்கதை விவரிக்கிறது.

     

கலாமோகனுடைய மூன்று நகரங்களின் கதைஅகதி வாழ்வை பிண வாழ்க்கை என்று சொல்கிறது. இலங்கையில் ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்கிற இளைஞன் கொழும்புவில் சில காலமும், யாழ்ப்பாணத்தில் சில காலமும் வாழ்கிறான். போர்ச்சூழல் காரணமாக பிரான்சுக்கு வந்து வேலையின்றி அகதியாக வாழ்கிறான். அகதி வாழ்க்கையை வாழ்கிற ஒவ்வொரு மனிதனும் சந்திக்கக்கூடிய அத்தனை சிக்கல்களையும் சந்திக்கிறான். அதோடு கூடுதலாக சில புது சிக்கல்களையும் சந்திக்கிறான். அந்த புது சிக்கல்கள்தான் இக்கதைக்கு மதிப்பைக் கூட்டுகிறது. போர்ச்சூழல் காரணமாக, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் வெளிநாடு போ வெளிநாடு போஎன்றும் நீ எங்களுக்கு ஒழச்சி தரவேணாம்என்று சொல்லியும் கட்டாயப்படுத்தியும் பாரிசுக்கு அனுப்புகிற குடும்பத்தார்கள் பிறகு என்ன செய்கிறார்கள்? “பணம் அனுப்பு, பணம் அனுப்புஎன்று நச்சரிக்கிறார்கள். அதோடு தங்கையையும் தம்பியையும் அழைத்துக்கொள்என்ற ஓயாத பிடுங்கல்வேறு. பிரான்சில் அகதியாக வாழ்கிறவனுடைய நிலை என்னவென்று அறியாமல் பெற்றோர்களும், உறவினர்களும் கொடுக்கிற நெருக்கடிதான் கதை. இலங்கையில் அப்பா இறந்துவிட்டார் என்ற செய்தி வருகிறது. எப்படி இறந்தார், எங்கே இறந்தார் என்று விசாரிப்பதற்குக்கூட போனில் காசில்லாத நிலை. மரணங்களைப்பற்றி பேசுவதற்கும், ஒரு சொட்டு கண்ணீர் விடுவதற்கும்கூட அகதி வாழ்க்கையில் இடமில்லை. உயிரோடு இருப்பது மட்டும்தான் முக்கியம். அதற்குத்தான் எல்லாப் போராட்டமும். தந்தையின் மரணச் செய்தி, அதைப்பற்றி விரிவாக அறிய முடியாத நிலையில் சாப்பிடவும், குடிக்கவும் விரும்புகிறான். அதற்கு வழியில்லை. தனக்குத்தெரிந்த போர்ச்சுகல் நண்பனைத் தேடிப்போகிறான்.

       போர்ச்சுகல்காரன் ஒரு அகதி. ஆனால் அவனுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்ததால் நான்காண்டுகள் ஒரு பிரான்சுக்காரியுடன் இணைந்து வாழ்ந்து மூன்று பிள்ளைகளுக்குத் தகப்பனாகிறான். ஒரு நிலையில் உதவாக்கரை என்று போர்ச்சுகல்காரனை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிடுகிறாள் பிரான்சுக்காரி. பிரான்சில் அகதிவாழ்க்கை. பிரான்சுக்காரியுடன் நான்காண்டு குடும்ப வாழ்க்கை. ஆனாலும் ஒன்றிரண்டு பிரஞ்சு சொற்கள் மட்டும்தான் அவனுக்குத் தெரியும். அவன் பிரன்ஞ் மொழியை அறியவும், கற்கவும், பேசவும் திட்டவட்டமாக மறுக்கிறான். ஏன்? எதனால் அவனுக்கு ஆழ்ந்த வெறுப்பு இருக்கிறது? பிரஞ்சு மொழி தெரியாதவன் பிரஞ்சுக்காரியுடன் எப்படி நான்காண்டுகள் குடும்பம் நடத்தி மூன்று பிள்ளைகளைப் பெற்றான்? ‘அந்த விசயத்திற்கு மொழி அவசியமில்லைதானேஎன்று கதாசிரியர் எழுதுகிறார். அது எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்.

       போர்ச்சுகல்காரன் ஓயாமல் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறான். ஒரு கடிதத்திற்குக்கூட பதில் வந்ததில்லை. அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா, இல்லையா என்ற தகவலும் தெரியாது. ஆனாலும் விடாமல் கடிதங்களைப் பித்துப்பிடித்த நிலையில் எழுதிக்கொண்டே இருக்கிறான் போர்ச்சுகல்காரன்.

       இக்கதையில் கதை சொல்லிக்கு மட்டுமல்ல, அவனுடைய நண்பன் போர்ச்சுகல்காரனுக்கும் பெயரில்லை. அவனுடைய காதலியான பிரஞ்சுக்காரிக்கும் பெயரில்லை. கதை சொல்லியின் ஊர் பெயர் இல்லை. அப்பா, அம்மா, தம்பி, தங்கைக்கும் பெயரில்லை. அத்தை, மாமாக்களுக்கும் பெயரில்லை. ஒரே ஒரு பெயர் மாமா ராமசுந்தரம் என்று மட்டும்தான் வருகிறது. உறவினர்கள் எல்லாம் இலங்கையில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பெயர் எதற்கு? பிரான்சு தேசத்தில் வாழ்கிற அகதிகளுக்கும் பெயர் எதற்கு? வீடு, தெரு, ஊர், நாடுமொழி என்று எதுவுமில்லாதவர்களுக்கு பெயர் மட்டும் எதற்கு என்று கலாமோகன் விட்டிருக்க்கலாம். அதனால்தான் எனக்கு வீடில்லை. நான் தூங்குமிடங்களும் எனது வீடில்லைஎன்று எழுதியிருக்கிறார்.

       இந்த கதையில் இரண்டு முக்கியமான விசயங்கள் பேசப்படுகின்றன. அகதியாக வாழ்கிறவனிடம் பணம் அனுப்பு, பணம் அனுப்புஎன்றும் தங்கை, தம்பியை அழைத்துக்கொள்என்றும் வீட்டார் கொடுக்கிற நெருக்கடி. மற்றொன்று போர்ச்சுகலை சேர்ந்த அகதி பிரான்சுக்காரியுடன் இணைந்து மூன்று குழந்தைகளைப் பெறுவது. அகதி வாழ்க்கையில் இதுதான் என்றில்லை. எல்லாமும் சாத்தியமே என்று சொல்கிறது மூன்று நகரங்களின் கதை. ஒவ்வொரு சிறுகதையும் அகதி வாழ்வின் ஒவ்வொரு முகத்தைக் காட்டுகிறது. எல்லா முகமும் சேர்ந்ததுதான் அகதி வாழ்வின் மொத்த முகம். மற்றவர்கள் அறியாத, அறிய முடியாத துயர முகம்.

       உழைத்து வாழ்வதற்கு சொந்தமாக ஒரு தொழிலோ உழுது வாழ்வதற்கு ஒரு துண்டு நிலமோ, படுத்து தூங்குவதற்கு ஒரு கூரையோ, தன்னுடைய பிள்ளைகள் ஓடி விளையாட ஒரு மர நிழலோ இல்லாத மனிதன் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவன் அகதிதான் என்பதை இக்கதைகள் ஆடம்பரமில்லாமல்  யதார்த்தத்தின் வழியாக மட்டுமல்ல உண்மையின் வழியாக நிரூபிக்கின்றன.

       இந்த சிறுகதைகளின் வழியே பிரான்ஸ், ஆஸ்திரேலியா, க்யூபா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், மொராக்கோ, ஸ்பெயின், தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், சோமாளியா, அல்ஜீரியா, மொரீஷியஸ், பாகிஸ்தான், தாய்லாந்து என்று பல தேசத்து நிலவியல் நமக்கு காட்சியாக தரப்பட்டிருக்கிறது. அதே மாதிரி பிரன்ச், சிங்களம், சீனம், மலாய், ஸ்பானிஷ், ஜெர்மன், ஸ்பெயின், தென்ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், சோமாளியா, அல்ஜீரியா, மொரீஷியஸ், பாகிஸ்தான், தாய்லாந்து என்று பல தேசத்து மொழிகளையும் ஒன்றிரண்டு வாக்கியங்களின் வழியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. தென்ஆப்பிரிக்காவின் சூலு’ மொழியின் நாட்டுப்புற பாடல்கூட நமக்கு அறிமுகமாகிறது. இதுதான் ஒரு எழுத்தாளன் – மொழிக்கு செய்கிற பெருமை.

 

இதுவரை சொல்லப்பட்ட கதைகள் – ‘தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள்என்பதற்கு சில மாதிரிகள் மட்டும்தான். இக்கதைகளில் தமிழ்நாட்டுக்காரர்கள், பாண்டிச்சேரி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மாவை சேர்ந்த தமிழர்களைப்பற்றி, புலம்பெயர்ந்து வாழ்கிற இடத்தில் நடந்த விசயங்கள்பற்றி மட்டும்தான் எழுதியிருக்கிறார்கள் என்று மட்டுமே சொல்ல முடியாது. தமிழர்கள் எழுதிய சிறுகதைகளில் போலந்துக்காரர்கள், ஜெர்மன், சோமாலியா, சீனா, இங்கிலாந்து, நைஜீரியா, தாய்லாந்து, கானா, பிரான்ஸ், பாகிஸ்தான், மெக்சிகோ, ஆஸ்திரேலியே, ஸ்பெயின், அல்ஜீரியா, மொரீஷியஸ், அரபு, க்யூபாக்காரர்கள், ஆப்பிரிக்கர்கள், பங்களாதேஷிகள் என்று பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். தமிழ் சிறுகதைகளில் நிகழ்ந்த அதிசயம் இது. அதே மாதிரி சீனம், மலாய், ஜெர்மன், பிரன்ஞ்ச், ஸ்பானிஷ், சிங்களம் என்று பல தேசத்து மொழியும், நிலவியலும் கதைகளில் வருகிறது. எதுவும் உறுத்தலாக இல்லை. இக்கதைகளை படிக்கும்போது புலம்பெயர்ந்ததோர் இலக்கியம் புலம்பல் இலக்கியம் அல்ல. அது பன்னாட்டு இலக்கியமாக இருக்கிறது என்பது நிரூபணமாகிறது. கடந்த இருபது முப்பதாண்டுகளில் தமிழ் மொழியில் எழுதப்பட்ட சிறுகதைகளை படிக்கும்போது உள்ளடக்க ரீதியாக, வடிவ ரீதியாக, செறிவான மொழி என்ற அளவில், பன்முக வாசிப்புக்கு இடமளிக்கக்கூடிய சிறுகதைகளாக இருப்பது புலம்பெயர்ந்தோர் எழுதிய கதைகளே. இவை தமிழ் மொழியில் எழுதப்பட்ட பன்னாட்டு சிறுகதைகள் என்பதற்கு வேறு சாட்சிகள் வேண்டுமா? நெருக்கடியும், துயரமும், வலியும் ஏற்படும்போது திறமை தானாக வளரும்.

 

அந்தந்த நாட்டு சாப்பாட்டில் அந்தந்த சூரியன் இருக்கிறது.

 பின்குறிப்பு : 

1.  எழுச்சி                                  -      கண்டி வீரன் (சிறுகதைத் தொகுப்பு - 2014),

ஷோபா சக்தி,

கருப்புப் பிரதிகள்,

B.55, பப்பு மஸ்தான் சாலை,

லாயிட்ஸ் சாலை,

சென்னை – 05.

 

2.   கூபாவுக்குப்போன க்யூபாக்காரர்கள்  -      மரகதத்தீவு, (சிறுகதைத் தொகுப்பு – 2009),

காஞ்சனா தாமோதரன்,

உயிர்மை பதிப்பகம்,

11/29 சுப்பிரமணியம் தெரு,

அபிராமபுரம்,

சென்னை.

 

3.   வாழ்வு வசப்படும்                  -                  ஒரு அகதி உருவாகும் நேரம்,

(சிறுகதைத் தொகுப்பு) – 1996

பொ.கருணாகரமூர்த்தி,

ஸ்நேகா பதிப்பகம்,

348, டி.டி.கே. சாலை,

சென்னை – 14.

 

4.   பிள்ளைக் கடத்தல்காரன்           -                          அ.முத்துலிங்கம்,

ஆனந்த விகடன்,

மே 24, 2015.

 

5.   ஒலி                              -                                        மண்டை ஓடி (சிறுகதைத் தொகுப்பு – 2015),

ம.நவீன்,

வல்லினம் பதிப்பகம்,

மலேசியா.

 

6.   அரசமரம்                          -                                    லதா,

மணற்கேணி காலாண்டிதழ்,

ஜுலை ஆகஸ்ட் 2014

 

7.   மீண்டும் ஓர் ஆதாம்               -                               நடேசன்,

அம்ருதா மாத இதழ்,

செப்டம்பர் – 2015.

 

 

8.   நானும் ஒகஸ்       டீனாவும்            -      யுத்தத்தின் இரண்டாம் பாகம்,  

ஒரு பந்தைய குதிரையும்                 (சிறுகதைத்தொகுப்பு – 2000),

சக்ரவர்த்தி,

எக்சில் – BP – 204,

92604 Asnieres Cedey,

France.

 

9.   சைகையிற் பொருளுணற்           -                          கருப்பி,

காலம் மார்ச் 2015.

 

10.  வேருலகு                                      -                       வேருலகு (சிறுகதைத் தொகுப்பு – 2009),

மெலிஞ்சி சித்தன்,

உயிர்மை பதிப்பகம்,

11/29 சுப்பிரமணியம் தெரு,

அபிராமபுரம்,

சென்னை.

 

11.  சாட்சி                                             -      மூன்றாவது கை (சிறுகதைத் தொகுப்பு – 2014),

ஷா நவாஸ்,

F – 4, சாகஸ் அடுக்ககம்,

83 – திருமங்கலம் சாலை,

வில்லிவாக்கம்,

சென்னை- 49.

 

12.  சன்னலொட்டி அமரும் குருவிகள்   -      நாகரத்தினம் கிருஷ்ணா,

அம்ருதா மாத இதழ்.

 

13.  மூன்று நகரங்களின் கதை                         -      கலாமோகன்,

பாரிஸ் முரசு (29.04.1992)