வெள்ளி, 22 ஜனவரி, 2016

நறுமணம் - இமையம்



நறுமணம் - இமையம்
       கைக்கடிக்காரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி ஐந்து. பத்து இருபதடி தூரத்தில் முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டின் வழியே விருத்தாசலத்தைச் சுற்றி செல்லும் புறவழிச்சாலை போடுவதற்கான வரைபடத்தையும், அதற்கான நிலத்தையும் பார்த்துக்கொண்டிருந் ஆனந்தனைப் பார்த்தான். பிறகு நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு மேற்கில் பார்த்தான். சூரியன் நல்ல வெளிச்சத்தோடு இருந்தது. பக்கத்திலிருந்த நெல் வயலைப்பார்த்தான். புழுக்களை கொத்தித் தின்றுகொண்டிருந்தன கொக்குகள். இந்த பாயிண்ட்டோட நிறுத்திடலாமா சார் என்று கேட்டான். ஆனந்தனிடமிருந்து எந்த பதிலும் இல்லை. தான் சொன்னது சரியாக கேட்கவில்லையோ என்ற சந்தேகத்தில் மீண்டும் சொன்னான்.
மணி ஆயிடிச்சி சார்.
       கதிரேசன் சொன்னதை காதில் வாங்காத ஆனந்தன் நீ நிக்கிற எடத்திலிருந்து பின்னால நகந்து மார்க் பண்ணு என்று சொன்னான். அவன் சொன்னது மாதிரியே பின்னால் நகர்ந்து சென்று ஒரு அடி நீளமுள்ள இரும்பு கம்பி ஊசியை நிலத்தில் ஊன்றி, அதைச்சுற்றி வெள்ளை மாவைத் தூவிவிட்டான். பிறகு ஊன்றிய கம்பிக்கு நேரெதிராக வடக்கில் வந்து, ஒரு கம்பியை ஊன்றி அடையாளமிட்டான். அடுத்து என்ன செய்வது என்பது மாதிரி ஆனந்தனைப் பார்த்தான். அவன் வாயைத் திறக்காததால் நேரமாயிடிச்சி சார். இங்கிருந்து ரோட்டுக்கு நடக்கணும். அப்பறம் கார வரச்சொல்லணும். வீட்டுக்குப்போறதுக்குள்ளார இருட்டாயிடும் சார். கதிரேசன் சொன்னதை காதில் வாங்காமல் மேற்க வடக்குத் தெற்குல ஒரு ரோடு போவுதே, அது என்னா ரோடு? என்று கேட்டான்,
விருத்தாசலம் டு ஆலடிக்கு போற ரோடு சார்.
இரண்டு பர்லாங் தூரம் இருக்குமா?
இருக்கும் சார்.
அதுவரைக்கும் மார்க்ப்பண்ணிடலாம். அடுத்த பாயிண்டுக்கு போ ஆனந்தன் சொன்னதும் மறு பேச்சு பேசாமல் இரும்பு கம்பி ஊசிகள் இருந்த பையையும், வெள்ளை மாவு இருந்த பையையும் தூக்கிக்கொண்டு மேற்கில் நடக்க ஆரம்பித்தான். இந்த அளவுதான் வரும் என்று நினைத்த மாதிரி ஒரு இடத்தில் நின்றான். காலையிலிருந்து ஒவ்வொரு இடமாக அடையாளமிடுவது, கம்பி ஊசியை, வெள்ளை மாவு பைகளைத் தூக்கிக்கொண்டு நெல்வயல், கரும்பு, முந்திரிக்காடு, முள்காடு என்று நடப்பது, கடுமையான வெயில் என்று எல்லாம் சேர்ந்து அவனை களைப்படைய செய்திருந்தது. ஆனந்தனுக்கு எந்த இடத்தில் அடையாளமிட வேண்டும் என்று சொல்வது மட்டும்தான் வேலை. அதிலும் தியோட லைட்டைப் பார்த்து. கதிரேசனுக்கு ஆனந்தன் சொல்கிற இடத்தில் கம்பி ஊசி ஊன்றி அடையாளமிடுவதோடு அதற்கு நேர் எதிர்புறத்திலும் சரியான அளவில், சரியான இடத்தில் ஊசியை ஊன்றி அடையாளமிட வேண்டும். அது முன்பு அடையாளமிட்ட இடத்திற்கும், புதிதாக அடையாளமிடுகிற இடத்திற்கும் நேராக இருக்க வேண்டும். அது கல்லாக இருந்தாலும், முள்ளாக, சேறு, சகதி, உளையாக இருந்தாலும் அடையாளமிட்டுத்தான் தீர வேண்டும். வடக்கிலும் தெற்கிலுமாக இரண்டு அடையாளங்களுக்கிடையே உள்ள தூரத்தை அவ்வப்போது டேப்பால் அளந்து பார்க்க வேண்டும். அளவு பொருந்தி வரவில்லையென்றால் அடையாளத்தை மாற்றவேண்டும். ஆனந்தனுக்கு நின்றுகொண்டே செய்கிற வேலை. தியோட லைட்டின் வழியே பார்ப்பது, கையிலுள்ள காகிதத்தில் வரைவது, பிறகு கதிரேசனிடம் அடையாளமிடு என்று சொல்வது. புறவழிச்சாலையில் எந்தெந்த இடத்தில் கல்வெர்ட் பாலம் வருகிறது, மேம்பாலம், ஆற்றுப்பாலம், ரயில்வே மேம்பாலம் வருகிறது என்பதை அடையாளமிடுகிற வேலையை எட்டு நாட்களாக செய்துகொண்டிருக்கிறான். இன்னும் இரண்டு  மூன்று நாட்களில் முடித்துவிடுவான். முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டில் கண்களைப் பொருத்திவிட்டால் அவனாகப் பேசினால்தான் உண்டு. பெரும்பாலும் கைசாடைதான் காட்டுவான். முன்னால் பின்னால் நகர்ந்து நிற்பது தவறாக இருந்தால் தான் ஒரு மேலதிகாரி என்பதைக் காட்டத் தவற மாட்டான். அவனுடைய குரல் எப்போது வரும், கை அசைவு எப்போது வரும் என்று கதிரேசன் காத்திருந்தான். சிறிது நேரம் கழித்து ஆனந்தனிடமிருந்து கட்டளை வந்தது.
அங்க தூரத்தில ஏழுஎட்டு மரம் நிக்குதில்ல அங்க போய் நில்லு. நான் பாக்குறன்.
ஆனந்தன் சொன்னபடியே கதிரேசன் செய்தான்.
இது சாமி கோவில் சார் கதிரேசன் கத்தினான்.
எதாயிருந்தாலும் கிளியர் பண்ணித்தான் ஆவணும். நீ நேரா நில்லு.
சாமி குத்தம் வந்துடும் சார்.
அதெல்லாம் பாத்தா நம்ப நாட்டுல ஒரு அடி ரோடுகூட போட முடியாது. பொக்லைன் வந்தா எல்லாத்தயும் ஒரு நிமிசத்தில கிளியர் பண்ணிடும். பொக்லைனை சாமி குத்தம் ஒண்ணும் செய்யாது. அந்த பெரிய ஆலமர வேர்ல பாயிண்ட் பண்ணு. அதுக்கு எதிர் சைடுலயும் மார்க்ப் பண்ணு கட்டளையாக வெளிப்பட்டது ஆனந்தனுடைய குரல். மறுபேச்சு பேசாமல் இரும்பு கம்பி ஊசிகள், வெள்ளை மாவு இருந்த பையை எடுத்துக்கொண்டு போய் ஆனந்தன் சொன்ன இடத்தில் அடையாளமிட்டான். அதற்கு தெற்குப்புறத்திலும் அடையாளமிட்டான். சரியா இருக்கா சார் கதிரேசன் கேட்டான்.
முன்னாடி போட்ட பாயிண்டயும், இப்பப் போட்ட பாயிண்டயும் செக் பண்ணு என்று சொல்லிவிட்டு ஆனந்தன் தியோட லைட்டில் கண்களைப் பொருத்திக்கொண்டான். கதிரேசன் அடையாளமிட்ட இடங்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்தான். பிறகு ஆனந்தனை நோக்கி சொன்னான்  ஓ.கே. சார்.
ஆனந்தன் பதில் சொல்லவில்லை.
முன்னாடி போவட்டுமா சார்?
போ என்பது மாதிரி ஆனந்தன் கையை மட்டும் காட்டினான். பிறகு முக்கோணத் தாங்கியை தூக்கிக்கொண்டு மேற்கு நோக்கி இருபது முப்பதடி தூரம் முன்னோக்கி வந்தான். சந்தேகப்பட்டது மாதிரி ஒரு இடத்தில் முக்கோணத் தாங்கியை நிறுத்தி தியோட லைட்டில் பார்த்தான். உடனே தலையைத் தூக்கி கொஞ்சம் வடக்க நவுந்து நில்லு கதிரேசனை நோக்கி கையைக் காட்டினான். கதிரேசன் தவறாக புரிந்துகொண்டு தெற்குப்பக்கமாக நடந்தான்.
அங்க நிக்குற வேப்ப மரத்துக்கிட்டப்போ. முந்திரி காடு முடியுற எடத்தில கத்தி சொன்ன பிறகுதான் கதிரேசன் ஆனந்தன் சொன்ன இடத்தில்போய் சரியாக நின்றான். மறுநொடியே ஆனந்தன் தியோட லைட்டில் கண்களைப் பொருத்திக்கொண்டான்.
       சிறிதுநேரம் வரைக்கும் ஆனந்தனிடமிருந்து எந்த சத்தமும் வராது என்பது தெரியும். அதனால் கதிரேசன் சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் நின்றுகொண்டிருந்த இடம் முந்திரிக்காடு. அதை ஒட்டி கரும்புவயல். இரண்டுக்குமிடையேதான் புறவழிச்சாலை அமையப்போகிறது. எங்குப் பார்த்தாலும் பசுமையாக இருந்தது. தெற்கில் விருத்தாசலம் நகரத்திலிருந்த செல்போன் டவர்கள் தெரிந்தன. இன்னும் ஒரு இடம்தான். அடுத்து விருத்தாசலத்திலிருந்து ஆலடிபோகிற ரோடு. ரோட்டில் அடையாளமிட்டுவிட்டால். வேலை முடிந்துவிடும் என்று நினைத்தான். அப்போது ஆலடி, பாலகொல்லை போகிற டவுன்பஸ் போயிற்று. விருத்தாசலம் ஆலடி போகிற ரோட்டின் மீது மேம்பாலம் போடுவானோ என்று நினைத்தான். அவன் தானாக எதையும் சொல்லக்கூடிய ஆளில்லை. கேட்கவும் முடியாது. அவன் மேலதிகாரி.
கதிரேசன் கொஞ்சம் நகந்து நில்லுங்க. முன்னாடி மார்க் செஞ்ச இடத்துக்கும் இப்ப நீங்க நிக்கிற எடத்துக்கும் நேரா இருக்கா? பாருங்க. ஆனந்தனுடைய குரல் கேட்டதும், குரலுக்கேற்றவாறு கதிரேசன் நகர்ந்து நின்றுகொண்டு சொன்னான் நேரா இருக்கு சார்”.
ஓ.கே. பாயிண்ட் பண்ணு ஆனந்தன் கை சைகை காட்டினான். உடனே கதிரேசன் கம்பி ஆணியை ஊன்றி வெள்ளை மாவைத் தூவினான். அந்த கம்பிக்கு நேராக வடக்கில் வந்து ஒரு ஆணியை ஊன்றி அடையாளமிட்டான். பிறகு தானாகவே அடுத்து அடையாளமிட வேண்டிய இடத்தை நோக்கி அனுமானமாக நடக்க ஆரம்பித்தான். அப்போது ஆனந்தன் தியோட லைட்டில் கண்களைப் பொருத்தி அடுத்து அடையாளமிட வேண்டிய இடத்தை தேட ஆரம்பித்தான்.
       கதிரேசன் விருத்தாசலம் ஆலடிக்குப் போகிற ரோட்டிற்கு அருகில் வந்து நின்றான். அதைப்பார்த்த ஆனந்தன் இன்னும் கொஞ்சம் முன்னால என்பது மாதிரி இடது கையால் சைகைக்காட்டினான். உடனே முன்னால் நடந்துவந்து நின்றான். வடக்கில் நவுரு என்பது மாதிரி ஆனந்தன் கையைக்காட்டினான். கதிரேசன் நகர்ந்து நின்றான். மறுநொடியே தியோட லைட்டில் கண்களை பொருத்திகொண்டு சாலை நேராக வருகிறதா, அளவு சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு மார்க் என்று சொல்லி கத்தினான். கதிரேசன் ஊசியை ஊன்றி வெள்ளை மாவைத்தூவி அடையாளமிட்டான். அதேமாதிரி தெற்கிலும் சென்று அடையாளமிட்டான். பாயிண்ட் செக் பண்ணு ஆனந்தன் சொன்னதும் ரோட்டை ஒட்டி அடையாளமிட்ட இடத்திலிருந்து கிழக்கில் நடந்து மூன்று நான்கு இடங்களில் நின்று அடையாளமிட்ட இடங்கள் நேராக இருக்கிறதா என்று பார்த்தான். ஓ.கே. சார் என்று சொன்னான்.
பேக் அப் ஆனந்தன் சொன்னான்.
       இரும்பு கம்பி ஊசிகள் இருந்த பை, வெள்ளை மாவு இருந்த பையோடும் வந்த கதிரேசன் தியோட லைட்டை கழற்றி அதற்குரிய பையில் போட்டான். முக்கோணத் தாங்கியை கழற்றி, மடக்கி அதற்குரிய பையில் வைத்தான்.
போவலாமா சார்?
டிரைவர வரச்சொல்லு. லேண்ட் மார்க் சொல்லிடு என்று சொல்லிவிட்டு அடையாளமிட்ட ஒன்றிரண்டு இடங்களில் நின்று பார்த்தான். பிறகு பைகளை தூக்கிக்கொண்டு ரோட்டிற்கு சென்றுகொண்டிருந்த கதிரேசனை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
தண்ணி இருக்கா?
இல்ல சார்.
கூல் ட்ரிங்க்?
தீந்துடுச்சி சார்.
நாளைக்கி வரும்போது ரெண்டு மூணு பாட்டில் கூடுதலா வாங்கிக்கிட்டு வா என்று சொல்லிவிட்டு ஒரு சிகரட்டை பற்றவைத்துகொண்டு கேட்டான் டிரைவர்கிட்ட  சொல்லிட்டியா?
சொல்லிட்டன் சார்.
       ரோட்டில் நின்றுகொண்டு வடக்கிலும் தெற்கிலும் பார்த்த ஆனந்தனுடைய கண்ணில் ரோட்டை ஒட்டி இருபது முப்பதடி தூரத்தில் மேற்குப் பக்கமாக ஒரு கூரை வீடு இருப்பது தெரிந்தது. இங்க ஒரு வீடு இருக்கே. ஆளு இருப்பாங்களா?
இருப்பாங்க சார்.
குடிக்கிறதுக்கு தண்ணி இருக்குமா?
இருக்கும் சார். அதக் குடிச்சா ஏதாச்சும் இன்பெக்ன் ஆயிடும் சார் அக்கறையோடு சொன்னான் கதிரேசன். அவன் சொன்னதை காதில் வாங்காமல் கூரைவீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் ஆனந்தன்.
       மட்கிப்போன சிறிய கூரை வீடு. வாசல் தெற்குப்பக்கம் பார்த்து இருந்தது. வீட்டு வாசலிலிருந்து பத்தடி தள்ளி ஒரு கிழவரும், கிழவியும் எதிரெதிராக உட்கார்ந்து கொண்டு புளிச்சக்கீரையை உருவிக்கொண்டிருந்தனர். இரண்டுபேருக்கிடையில் முறம் இருந்தது. கிழவிக்குப்பக்கத்தில் அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. அடுப்பிலிருந்து ஏழுஎட்டு அடி தூரத்தில் இரண்டு மாடுகள் கட்டப்பட்டிருந்தன. மாடுகள் கட்டப்பட்ட இடத்திலிருந்து மேற்கில் பத்தடி தூரத்தில் ஆறு ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. கிழவியைச்சுற்றி ஒரு கோழியும் ஏழு எட்டுகுஞ்சுகளும் சுற்றிச்சுற்றி மேய்ந்துகொண்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துகொண்டே வந்த ஆனந்தன் யாரிடம் என்றில்லாமல் கொஞ்சம் தண்ணி கொடுங்க என்று கேட்டான்.
கீரை உருவிப்போடுவதை விட்டுவிட்டு எழுந்து வீட்டிற்குள் சென்று ஒரு சொம்பு நிறைய தண்ணீரை கொண்டுவந்து கொடுத்தாள் கிழவி. தண்ணீரை வாங்கி குடித்தான் ஆனந்தன்.
ஏதாச்சும் பிரச்சன வந்துடப்போவுது சார்
இன்னம் வேணுமா? கிழவி கேட்டாள்.
போதும்மா என்று சொன்னான் ஆனந்தன். திரும்பி கதிரேசனிடம் தண்ணி வேணுமா? என்று கேட்டான்.  வேணாம் சார் அவசரமாக சொன்னான் கதிரேசன்.
சீக்கிரம் டிரைவர வரச்சொல்லு அதிகாரமாக சொன்னான் ஆனந்தன்.
மூணு கிலோமீட்டர்தான் சார். அஞ்சி நிமிசத்தில வந்துடுவான்.
       கிழவி தரையில் உட்கார்ந்து முன்புபோல புளிச்சகீரையை மீண்டும் உருவிப்போட ஆரம்பித்தாள்.
கார் எப்ப வரும்? முறைப்பது மாதிரி ஆனந்தன் கேட்டதும் உடனே செல்போனை எடுத்து யாருக்கோ போன்போட்டான் கதிரேசன். போன் பேசுகிற சாக்கில் ரோட்டில் போய் நின்றுகொண்டான்.
என்ன இங்க சமையல் பண்றிங்க? யாரிடம் என்றில்லாமல் ஆனந்தன் கேட்டான்.
அடுப்பு எரிஞ்சா சோறு எங்கனாலும் வேவும் கிழவர் லேசாக சிரித்தார்.
எப்பவும் இந்த எடத்திலதான் சமைப்பிங்களா?
கல்யாணத்துக்கா ஆக்குறன்? ஒரு சோறு. ஒரு குழம்பு. அதுவும் ஒரு நாளக்கி ஒருவாட்டி. அத இங்க வச்சே பொங்கிடுவன் கிழவி இரண்டு முந்திரிக் குச்சிகளை எடுத்து அடுப்பினுள் செருகினாள்.
மழ காலத்தில என்னா செய்வீங்க?
நாள் மூச்சூடுமா மழ பெய்யப்போவுது? என்று கேட்ட கிழவி பக்கத்தில் படியில் இருந்த அரிசியை ஒரு குண்டானில் கொட்டி அலசிவிட்டு அள்ளி உலையில் போட்டாள். கரண்டியால் கிண்டிவிட்டு உலையை மூடினாள். அடுப்பில் இரண்டு குச்சிகளை வைத்தாள். கிழவி செய்கிற ஒவ்வொரு வேலையையும் பார்த்த ஆனந்தன் ஊருக்குள்ளார இல்லாம எதுக்கு தனியா காட்டுல இருக்கிங்க? என்று கேட்டான்.
ஊருக்குள்ளார குடியிருந்தாலும் தூங்குறது மட்டும்தான? மத்த நேரமெல்லாம் இந்த காட்டுலதான? இந்த எடத்திலியே படுத்து, இந்த எடத்திலியே எந்திரிச்சா கால் நட மிச்சம்தான? வயசான காலத்தில நடக்க முடியுதா? கிழவி சாதாரணமாக சொன்னாள்.
திருடன் பயம் இல்லியா?
கடகடவென்று  சிரித்தார் கிழவர். ஆனந்தனிடம் திருப்பி கேள்வி கேட்பது மாதிரி கேட்டார். நக பணம் இருக்கா? வெலகொண்ட பொருளு இருக்கா? எங்ககிட்ட கைகாலுதான் இருக்கு. அத திருடுறதுக்கு எந்தத் திருடன் வரப்போறான்?
       கிழவிக்கு பின்னால் சுற்றிக்கொண்டிருந்த கோழிகுஞ்சுகளில் ஒன்று அவளுடைய மடியில் ஏறியது. அதைத் தூக்கி தரையில் விட்டுவிட்டு தூரமா போங்க கழுதகளா? என் இடுப்பிலியா தீனி கெடக்கு? என் இடுப்ப சுத்திசுத்தியே வரிங்க? என்று கேட்டு சிரித்தாள். அடுப்பில் வெந்துகொண்டிருந்த சோற்றில் ஒரு கரண்டி அள்ளி வாயால் ஊதி ஆறவைத்து தரையில் ஒரு இடத்தில் கொட்டினாள். கோழி குஞ்சுகள் சோற்றைக் கொத்தித்தின்ன ஆரம்பித்தன.
யாரு நீங்க? என்னா ஊரு? கிழவர் கேட்டார்.
விருத்தாசலம். காரு வதுக்காக வெயிட்ப் பண்ணிக்கிட்டிருக்கன்.
காரு வரமுட்டும் குந்துங்களன் பக்கத்தில் கிடந்த ஒரு முந்திரி மரக் கட்டையை காட்டினார். கிழவர் காட்டிய முந்திரி மரக் கட்டையில் உட்கார்ந்தான். ரோட்டில் நின்றுகொண்டிருந்த கதிரேசன் ஆனந்தன் மரக்கட்டையில் உட்கார்ந்ததைப் பார்த்துவிட்டு வேகமாக வந்து நடந்துபோய்க்கிட்டு இருக்கலாம் சார். கார் வந்ததும் அப்படியே ஏறிக்கலாம் என்று சொன்னான்.
கார் வருதான்னு ரோட்டுல நின்னுப்பாரு. எடம் தெரியாமப் போயிடப்போறான்”. மறுபேச்சு பேசாமல் ரோட்டிற்குப் போனான் கதிரேசன். செல்போனில் பேச ஆரம்பித்தான்.
       வீட்டைப் பார்த்தான் ஆனந்தன். மூன்று நான்குபேர்தான் படுக்க முடியும். கூரை மட்கிப்போயிருந்தது. வீட்டிற்கு பின்புறம் இரண்டு வாழை மரம் இருந்தது. ஒரு முருங்கை மரமும், ஒரு தென்னை மரமும் இருந்தது. வீட்டை ஒட்டியே வடக்கில் நெல்வயல் இருந்தது. மேற்கில் கரும்புகாடு, தெற்கில் முந்திரிகாடு, மேற்கில் பார்த்தான். சூரியன் சற்றுநேரத்தில் மறைந்துவிடும் போலிருந்தது. ஜிலுஜிலுவென்று காற்று வீசிக்கொண்டிருந்தது. வானத்தில் குறுக்கும் நெடுக்குமாக பறவைகள் பறந்துகொண்டிருந்தன. அவ்வப்போது ரோட்டில் செல்கிற வாகனங்களின் சத்தத்தைத்தவிர வேறு சத்தம் இல்லை. பகலிலேயே இவ்வளவு அமைதியாக இருந்தால் இரவில் எப்பிடி இருக்கும்? எப்பயும் இங்கதான் குடியிருப்பிங்களா?
பத்து வருசமா இங்கதான் இருக்கம்.
ஊருல இருக்க வேண்டியதுதான? அக்கறையாகக் கேட்டான்.
இங்கிருந்து பாத்தா ஊரும் காடு மாதிரிதான் இருக்கும் கிழவர் சிரித்தார்.
ராத்திரியில பயமா இருக்காதா? எப்பிடி தூங்குறிங்க?
எதுக்கு? எங்ககிட்ட இந்த மண்ணுதான் இருக்கு. இதெ திருடிக்கிட்டு போறதுக்கு எந்த நாட்டுத் திருடன் வரப்போறான்?
புள்ளைங்க இல்லியா? தனியா இருக்கிங்க?
அதெல்லாம் நெறயா இருக்கு. மூணு மவனுவோ, ரெண்டு மவ. பேரப்புள்ளைங்கன்னு ஒருபயிர் ஆடு அளவுக்கு இருக்கு. சலிப்புடன் சொன்னார் கிழவர்.
அப்பிடியா? சந்தேகப்பட்டது மாதிரி கேட்டான் ஆனந்தன்.
பத்து வருசத்துக்கு முன்னாடி பங்குபாகத்த பிரிக்கும்போது மூணுபேரும் எங்களுக்கு யாரு சோறு போடுறதின்னு சண்டப் பண்ணிக்கிட்டானுவ. எங்களுக்காக நீங்க சண்டப்பண்ணிக்க வாணாம். காட்டுல இருக்கிற மோட்டாரு கொட்டாயிக்கிட்ட இருக்கிற களத்தில தங்கிக்கிறம்னு நாங்களே ஒதுங்கி வந்துட்டம். கிழவரின் குரலில் கசப்போ வெறுப்போ துளியும் இல்லை. எப்போதும்போல கீரையை உருவி முறத்தில் போட்டுக்கொண்டிருந்தார். கீரை உருவுவது, அடுப்பிலிருக்கும் சோற்றை கிண்டிவிடுவது, சுற்றிவரும் கோழிகுஞ்சுகளை விரட்டிவிடுவது என்று பலவேலைகளை செய்துகொண்டிருந்தாள் கிழவி.
ஆடு மாடெல்லாம் உங்களுதா?
மாடு ரெண்டும் பெரியவனது. ஆடுவோ நடு மவனோடது. முதல்ல மேய்க்கிறதுக்கு ஆளில்லன்னு சொல்லி பெரியவன்தான் மாடுவுள ஓட்டியாந்து எங்கிட்ட வுட்டான். அதப் பாத்திட்டு ‘அவனோட மாடுவுள மட்டும்தான் மேய்ப்பியா? இதெயும் மேயி’ன்னு கொண்டாந்து ஆடுவுள கட்டிப்புட்டுப் போயிட்டான் நடு மவன். முடியாதின்னு சொல்லமுடியுமா? கிழவர் சிரித்தார். அவருக்கு எல்லா பற்களுமே இருந்தது. ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
முடியாதின்னு சொல்ல வேண்டியதுதான?
நாங்க சும்மாதான குந்தியிருக்கம். எங்களுக்கு வேல வாணாமா? பொழுதுபோவ வேணாமா? மாட்டு சாணிய, ஆட்டுபுழுக்கய அள்ளட்டுமின்னுதான் கொண்டாந்து வுட்டு இருக்கானுவ.
செலவுக்குத் தருவாங்களா?
தருவாங்க. போட்டிப்போட்டுக்கிட்டு. கூலி ஆளுவுள கொண்டாந்து வுட்டுட்டு வேல வாங்குன்னு சொல்லிட்டுப்போவாங்க. முந்திரி கொட்டப்பொறுக்கி வையின்னு சொல்லுவாங்க. காட்டுல ஆடுமாடு நுழயாம பாத்துக்க சொல்லுவாங்க. கரண்ட் உள்ள நேரத்துக்கு மோட்டாரு போடும்பாங்க. இப்பிடி நூறுவேல தருவாங்க. அதுபோதாதா? கிழவர் வாய்விட்டு சிரித்தார்.
வயசு என்னா இருக்கும்.
எழுவத தாண்டிடிடுச்சி.
கண்ணுலாம் நல்லாத் தெரியுதா?
ஓ, பஸ்ட்டா.
நடக்க முடியுதா?
இங்க கட்டியிருக்கிற ஆடு, மாடெல்லாம் யாரு மேய்க்கிறது? இந்த ஆடுமாடு எல்லாம் எங்கூட நடக்க முடியாது கிழவர் சொன்னதும் சோற்றைக் கிண்டிவிட்டு வெந்துவிட்டதா என்று பார்த்த கிழவி நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
ஒங்களோட இன்னொரு மவன் கொண்டாந்து கோழிய வுட்டுட்டாரா? சிரித்துக்கொண்டே ஆனந்தன் கேட்டான்.
மெட்ராசில வேலயில இருக்கான். இஞ்ஞினீர், ரோடுபோடுற வேல. கவர்மண்டு உத்தியோகம்.” கிழவர் சிரித்தார்.
அப்பிடியா? ஆச்சரியமாகக் கேட்டான்.
படிச்சி என்னாப் பண்றது? பணம் காசி சம்பாரிச்சி, உத்தியோகத்திலிருந்து என்னாப் பண்றது? மண்ணுல கெடந்து கூடப்பொறந்த அண்ணன் தம்பிவோ, அக்காளுவோ கஷ்டப்படுறாங்களேன்னு அம்பது, நூறுண்ணு தர மாட்டான். பத்துவருசத்துக்கு மின்னாடி அவனாலதான் ஊட்டுல சண்டவந்துச்சி. ஒடனே பங்கு பாகத்த பிரின்னுட்டான். தனக்கு சேந்த காட்ட, ஊட்ட வித்து காசாக்கிக்கிட்டுப் போயிட்டான். எதயும் விக்காத, ‘நாங்க உசுரோட இருக்கமட்டும் ஒன்னோட பாகத்த பாத்துக்கிறம். நம்ப காட்டுக்குள்ளார பிறத்தியாள கொண்டாந்து வுடாத’ன்னு இந்த கிழவரு எம்மானோ சொல்லிப்பாத்தாரு. கால்ல வியிந்துகூட கேட்டாரு. அவன் நாங்க சொன்ன எதயும் கேக்கல. ‘இனிமே இந்த பட்டிக்காட்டுக்கு எதுக்கு வரப்போறம்? எல்லாத்தயும் வித்து காசாக்கு. மெட்ராசில ஊடு கட்டி வாடகக்கி வுட்டுறலாம்’ன்னு பொண்டாட்டிக்காரி சொன்னதத்தான் கேட்டான். அதுலயிருந்து தம் பேச்ச கேக்கலியேன்னு இவுரு அவங்கிட்ட பேசற வுட்டுட்டாரு. இதுவே போதுமின்னு அவனும் போயிட்டான். அதுலயிருந்து ஊருக்கு வரதயும் வுட்டுட்டான். நாங்க சாவுற அன்னிக்காச்சும் வருவானோ மாட்டானோ. எதுக்கு காசி செலவுன்னு ஊட்டுலியே இருந்தாலும் இருப்பான். எங்கள மறந்துகூட குத்தமில்ல. பொறந்ததிலிருந்து சோறுபோட்டு வளத்த இந்த செங் காட்ட மறந்திட்டானே கிழவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்த கிழவர் போன கதய எல்லாம் எதுக்கு இப்பச் சொல்ற? வேகமாகக் கேட்டார்.
காட்டுல வேல செஞ்ச புள்ளய கட்டியிருந்தா காடு வேணும், ஊடு வேணும், ஊரு வேணும், காட்டுல வேல செய்ய நாலு சனம் வேணும்ன்னு அனுசரிச்சிப்போயிருப்பா. படிச்சவ. கவர்மண்டு உத்தியோகத்தில உள்ளவ. அவளுக்கு எதுக்கு காடு, ஊடு? ப்ப எங் காட்டுல யார்யாரோ வராங்க, யார்யாரோ போறாங்க சொல்லிக்கொண்டே சோறு வெந்துவிட்டதா என்று பார்த்தாள். சோறு வெந்துவிட்டது தெரிந்ததும் இறக்கிவைத்து வடித்தாள். கீரை சட்டியைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். வடிகஞ்சித்தண்ணீரை கிழவர் நன்றாக ஆற்றினார். எடுத்துகொண்டுபோய் மாடுகளின் முன் வைத்தார். கீரையை உருவிக்கொண்டு போட்டிருந்த புளிச்சதண்டுகளை அள்ளிக்கொண்டுபோய் ஆடுகளுக்கு முன்போட்டார். வீட்டிற்குள் சென்று ஏழுஎட்டு மிளகாய் களை எடுத்துவந்து கிழவியின் முன்வைத்தார்.
பூண்ட ஒங்கப்பனா எடுத்தாருவான்? கிழவிகேட்டதும் திரும்பிப்போய் மூன்று பூண்டு கட்டிகளை எடுத்துவந்து கிழவியிடம் கொடுத்தார். கிழவி பூண்டை உரிக்க ஆரம்பித்தாள். கிழவிக்குப்பக்கத்தில் உட்கார்ந்து கிழவர் மிளகாய்களை கிள்ளி கீரைசட்டியில் போட்டார். உடனே கிழவி உரித்திருந்த பூண்டுகளை எடுத்துசட்டியில் போட்டு உருவி வைத்திருந்த கீரையையும் அள்ளிப்போட்டு கொஞ்சம் தண்ணீரை ஊற்றினாள்.
கிழவரும் கிழவியும் வேலை செய்ததை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த ஆனந்தன் கேட்டான் இப்ப உங்கள யார்தான் பாக்குறாங்க?
ஒருத்தருமில்ல அழுத்தமாக சொன்னாள் கிழவி.
என்னம்மா சொல்ற? ஆச்சரியமாகக் கேட்டான்.
ரேசன் கடயில இருவது கிலோ அரிசிதரான். அதுலதான் காலம் ஓடுது.
மத்த செலவுக்கு?
காட்டுல கெடக்குற கீரதான். குச்சிதான். நீதான் பாக்குறல்ல சிரித்தாள் கிழவி.
உங்க மகனுங்ககிட்ட கேக்கக் கூடாதா?
சோறுபோடுன்னா? அப்பிடி கேக்கலாமா நானு? அலுப்பாகச் சிரித்தார் கிழவர். கீழே கிடந்த இரண்டு மூன்று அரிசிகளை எடுத்து கோழியின் முன் போட்டுவிட்டு சொன்னார்.
அவனவன் சோத்த அவனவன்தான் சம்பாரிக்கணும். அவனவன் வவுறு அவனவன்கிட்டதான இருக்கு?
ஆனந்தனுக்கு பதில் சொல்ல தெரியவில்லை. சிறிதுநேரம் பேசாமல் இருந்துவிட்டு கேட்டான். சனங்களே இல்லாத எடத்தில இருக்கிறது கஷ்டமா இல்ல?
கிழவர் கடகடவென்று சிரித்தார். காட்டுல இருக்கிறது கஷ்டமில்ல. ஊருல இருக்கிறதுதான் கஷ்டம். பாம்பு பல்லியவிட துஷ்ட மிருகம் மனுசங்கதான்.
பேசுறதுக்குக்கூட ஆளில்லியே.
கிழவர் கோபப்பட்ட மாதிரி கேட்டார். எதுக்கு அப்பிடி சொல்றீங்க? இங்க ஆடுவோ நிக்குது, மாடுவோ நிக்குது. அப்பறம் கோழி குஞ்சுவோ நிக்குது. இதுபோதாதா? சுத்தி நிக்குற பயிர் பச்சய பாத்தா போதாதா? கரும்புகாடு, முந்திரிகாடுன்னு எம்மாம் நிக்குது, எல்லாத்துக்கும்மேல ரோட்டே போறவங்க எம்மாம் பேரு வருவாங்க தெரியுமா? சைக்கிளு பஞ்சரு, காரு பஞ்சரு, மோட்டார் பைக்கு பஞ்சருன்னு தெனம் ஒரு ஆளாவது வந்து இங்க கொண்டாந்து வண்டிய நிறுத்தாம இருக்க மாட்டாங்க. பள்ளிக்கூடத்துக்குப் போற புள்ளைங்க தெனம்தெனம் வந்து தண்ணீ கேக்குங்க. அதுக்குன்னே குடம் வச்சியிருக்கன். ந்தா அங்க இருக்குதில்ல கிழவர் கை காட்டிய இடத்தைப் பார்த்தான். வாசலை ஒட்டி ஒரு செப்புக்குடம் இருந்தது. அதற்குப்பக்கத்தில் சில்வர் சொம்பு ஒன்றும் இருந்தது.
தனியா நீங்க இருக்கிறதுதான் ஆச்சரியமா இருக்கு? சிரித்துக்கொண்டே சொன்னான் ஆனந்தன்.
நாங்க தனியா இல்ல. எங்கூட கள்ளவீரன் இருக்கான்.
அது யாரு?
ந்தா கிழக்கால நிக்குறான்பாரு ஒருத்தன் கிழவர் கிழக்குப் பக்கமாக கையைக்காட்டினார். ஆனந்தன் ரோட்டுப்பக்கம் பார்த்தான். ஆள் யாரும் கண்ணில்படாததால் நீங்க யார சொல்றிங்க என்று கேட்டான்.
லேசாக சிரித்த கிழவர் அங்க வெள்ள குதிரமேல கள்ளவீரன் சாமி குந்தியிருக்கான் பாரு.
ஆனந்தன் எழுந்து நின்று கிழக்கில் பார்த்தான். ரோட்டிலிருந்து கிழக்கில் ஒருபர்லாங் தொலைவில் ஏழுஎட்டு மரங்களுக்கிடையே சிமெண்ட்டால் செய்யப்பட்ட குதிரை மட்டும்தான் மங்கலாக தெரிந்தது. சாமிசிலை இருப்பது தெரியவில்லை. கதிரேசன் என்று கூப்பிட்டான்.
இப்ப கார் வந்துடும் சார். கிளம்பிட்டானாம் சொல்லிக்கொண்டே கதிரேசன் ஆனந்தனுக்குப் பக்கத்தில் வந்தான்.
முன்னாடி மார்க் பண்ணும்போது சாமி கோவில் இருக்குன்னு சொன்னியே அந்த எடமா அங்க மரம் நிக்குற எடம்?
அந்த எடம்தான் சார்.
அந்த எடமா சாமி கோவிலு? லேசாக சிரித்தான் ஆனந்தன். கிழவருக்கு கோபம் வந்துவிட்டது. எதுக்கு சிரிக்கிறிங்க? நீ நெனைக்கிற மாதிரி கள்ள வீரன் சாமி சாதாரண ஆளில்ல. அவனுக்கு இருவத்தியொரு சேனாதிபதி இருக்காங்க தெரியுமா? முப்லி வாங்கக்கூடியவன். எதிரிய வெல்றவன். என்னா ஒண்ணு, சாராயம் வச்சி படைக்கலன்னா மட்டும் கோபப்படுவான். பெருமையாக சொன்னார்.
போவலாம் சார் கதிரேசன் சொன்னான். அதற்கு ஆனந்தன் பதில் சொல்லாமல் கிழவி கீரை வெந்துவிட்டதா என்று பார்ப்பதையும், கீரையைக் கிண்டிவிட்டதையும் பார்த்தான். அப்போது தானாகவே கிழவர் சொன்னார்.
கள்ள வீரன் வேட்டையில பெரிய சூரன். இருபத்தியொரு சேனாதிபதியோடதான் ஒவ்வொரு நாளும் வேட்டக்கிப்போவான். அப்ப எதிர்ல யார் வந்தாலும் சாம்பதான். பேய், பிசாசு, துர்தேவாதிங்க ஊருக்குள்ளார அண்டாம அவன்தான் பாத்துக்குவான். அவனோட கண்ணமீறி ஒரு ஈ, எறும்பு, ஊருக்குள்ளார நுழய முடியாது. முப்பூசப் போட்டு மனசுல உள்ளத அவங்கிட்டப்போயி முறையிட்டாபோதும். அப்பிடியே நிறவேத்தி கொடுத்துடுவான். அவனோட நிழலு எப்பவும் ஊருமேல விழுந்துகிட்டேயிருக்கும். எங்க ஊருசனங்களுக்கு அவந்தான் மூச்சுக்காத்து. அந்த பயல நம்பித்தான் நான் இந்த காட்டுல குந்தியிருக்கன்.
       கிழவருக்கு உற்சாகம் கூடிவிட்டது. கள்ள வீரன் சாமியினுடைய வீரம், பராக்கிரமம், ஊரை காக்கிறவிதம், வேட்டைக்கிச் செல்கிறவிதம், குதிரை, சேனாதிபதிகள், திருவிழா எப்படி நடக்கும், திருவிழாவில் எவ்வளவு ஆடு, கோழி, பன்றி காவு கொடுப்பார்கள், எத்தனை ஊர் சனங்கள் திருவிழாவிற்கு கூடுவார்கள், ஊரில் யார்யாருக்கு என்னென்ன நல்லது செய்திருக்கிறான் என்று பட்டியலிட ஆரம்பித்தார். கிழவருடைய உற்சாகமானப் பேச்சைக் கேட்ட ஆனந்தன் எழுந்து நின்று கோவில் இருக்கிற இடத்தையும் கிழவருடைய வீட்டையும் பார்த்தான். நேராக இருந்தது. “ரோட்ட ஒட்டி கிழக்கால மார்க் செஞ்சியே அந்த எடத்துக்கிட்டப் போ” ஆனந்தன் சொன்னதும் லேசாகத் தயங்கிய கதிரேசன் கடைசியாக அடையாளமிட்ட இடத்தில் போய் நின்றான். கதிரேசன் நின்ற இடமும் கிழவருடைய வீடும் நேராக இருந்தது. ஒன்றும் சொல்லாமல் வெறுமனே ‘வா’ என்பது மாதிரி கை சைகை மட்டும் காட்டினான்.
       கிழவி கீரையை இறக்கிவைத்து கடைய ஆரம்பித்தாள். கிழவி கேட்காமலேயே வீட்டிற்குள் சென்று கிழவர் உப்பை ஒரு பிடி அள்ளிக்கொண்டுவந்து கொடுத்தார். பாதி உப்பை வாங்கி கீரையில் போட்டுவிட்டு எஞ்சியதை திருப்பி கிழவரிடமே கொடுத்தாள். உப்பை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் சென்று வைத்துவிட்டு வந்தார்.
சொல்ல வேண்டிய விசயம் மறந்துபோனது நினைவுக்கு வந்த மாதிரி சிரித்துக்கொண்டே கிழவர் சொன்னார் “கள்ள வீரன் சாமியப் பத்தி சொன்னப்ப சிரிச்சிங்கள்ள? அவன் யாரு தெரியுமா? கருப்புசாமி, தூண்டிக்காரன், குள்ளக்கருப்பு, முனியன் சாமிவுளவிட பெரியாளு. காட்டு தெய்வம். எப்பவும் ஊருக்கு வெளியதான் இருப்பான். வெள்ளிக்கி வெள்ளி பூச கேப்பான். மொட்டப் போட்டு முப்பூச கொடுத்து இன்னத செய்டான்னு சொன்னா ரவ பிசகாம காரியத்த செஞ்சி முடிச்சிடுவான். ஆடு, மாடு காணாமப் போனா, நக நட்டு திருட்டுப்போனா, திருடுனவங்களக் காட்டிக்கொடுத்திடுவான். எப்பவுமே கும்ப மர சாலயில, நீர்நெல தேங்கிய எடத்திலதான் அவனுக்கு இருப்பு. பவரான சாமி” கிழவரின் முகத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்தது.
       கீரையைக் கடைந்து முடித்த கிழவி கிழவரைப் பார்த்து ‘கோமணத் துணி தளந்துபோய் கெடக்குறதுகூடமா தெரியாம ஒரு ஆளு இருப்பான்? வெக்கம் மானம் வாணாம்?” என்று கேட்டு சிரித்தாள். அடுப்பை தண்ணீர் தெளித்து அணைத்தாள். எழுந்து வீட்டிற்கு பின் புறமாக சென்று  குண்டானில் தண்ணீரைக் கொண்டுவந்து மாடுகளுக்கு முன் வைத்தாள். மீண்டும் வீட்டிற்கு பின்புறம் சென்று ஒரு குண்டானில் தண்ணீரைக் கொண்டுவந்து ஆடுகளுக்கு வைத்தாள். ஒரு சில்வர் தட்டில் கொஞ்சம் தண்ணீரை ஊற்றி வைத்தாள். கோழி குஞ்சுகள் தண்ணீரைக் குடிக்க ஆரம்பித்தன.
       கிழவியினுடைய ஒவ்வொரு செயலையும் பார்த்த ஆனந்தன் கிழக்கில் கள்ள வீரன் சாமி கோவில் பக்கம் பார்த்தான். பிறகு கிழவர் கிழவி உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். நாளைக்கு காலையில் வந்ததும் அடையாளமிட வேண்டிய இடம் கிழவருடைய வீடு. பேண்ட் பாக்கெட்டில் இருந்த வரைபடத்தை எடுத்துப் பார்த்தான். பிறகு அணைக்கப்பட்டிருந்த அடுப்பைப் பார்த்தான். சோற்றுக் குண்டான், கீரை சட்டி, ஆடு, மாடு, கோழி, பள்ளிக் குழந்தைகள், வழிபோக்கிகளுக்காக தண்ணீர் வைத்திருந்த செப்பு குடத்தைப் பார்த்தான். எல்லாம் இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் வரைதான் இருக்கும். பிறகு பொக்லைன் வந்து எல்லாவற்றையும் சமமாக்கும். கருங்கல் ஜல்லி கொட்டப்படும், தார் ஊற்றப்பட்டு சாலையாகும். இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் ஹாரன் அடித்தபடி எந்தத் தடையும் இல்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும்.
பெரு மூச்சுவிட்ட ஆனந்தன் கதிரேசனிடம் கேட்டான் “கார் என்னாச்சி?”
“இப்ப வந்துடும் சார்”
“ரோட்டுல நின்னு பாரு”
       கதிரேசன் ரோட்டிற்குப்போய் நின்ற சில நொடிகளிலேயே கார் வந்து நின்றது. “கார் வந்துடுச்சி சார்”.
“வண்டியில ஏறு” என்று சொன்ன ஆனந்தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து வரைபடத்தை எடுத்துப்பார்த்தான். கடலூர் – சேலம் செல்வதற்கு விருத்தாசலம் நகரத்திற்கு வெளியே செல்லும் புறவழிச்சாலை பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட வேண்டும். பனிரெண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு அளந்து அடையாளமிடப்பட்டுவிட்டது தெரிந்தது. இன்னும் மூன்று கிலோமீட்டர் தூரம்தான். நாளைக்கு முடிந்துவிடும். நாளைக் காலையில் வந்ததும் அடையாளமிட ஆரம்பிக்கவேண்டிய இடம் கிழவருடைய வீட்டை ஒட்டியுள்ள ரோடுதான். அதை சொல்லலாமா?
“இப்பவே நெருப்ப வைக்க வாணாம்” என்று நினைத்தான். கிழவரையும் கிழவியையும் ஆனந்தனுக்கு ரொம்ப பிடித்திருந்ததால் “ரெண்டு பேரும் அப்படியே இருங்க. ஒரு போட்டோ எடுத்துக்கிறன்” செல்போனை எடுத்தான்.
“படமெல்லாம் எடுக்காதிங்க. நம்ப படத்த எடுத்து நம்பளே பாத்துகிறதா பெருசு?” கிழவர் வெடுக்கென்று கேட்டார். ஆனந்தனுக்கு வெட்கமாகிவிட்டது. ஆனாலும் ஒன்றிரண்டு படங்கள் எடுத்தான். அப்போது அருகில் வந்த கதிரேசன் அக்கறையுடன் சொன்னான் “மணி ஆயிடிச்சி சார். டீ, காபிகூட குடிக்கல” .
“இந்த இடம் நல்லா இருக்கு. ஏ.சி.யில வர்ற மாதிரி காத்து ’ஜிலுஜிலு’னு வருது.”
“இருட்டப்போவுது சார்.”
“கார்ல போயி இரு” ஆனந்தன் வேகமாக சொன்னதும் மறுபேச்சு இல்லாமல் கதிரேசன் காரிடம்போய் நின்றுகொண்டு “கிறுக்கன்” சொன்னான்.
திடீரென்று நினைவுக்கு வந்த மாதிரி ஆனந்தன் கேட்டான் “இந்த ஊரு பேரு என்ன?”
“நறுமணம்”
“நல்லா இருக்கு. அந்த நகர், இந்த நகர்னு இல்லாம.”
“நீங்க வடக்கத்தி ஆளா?”
“இல்லெ. மெட்ராஸ் பக்கம்.”
“என்னா வேலயா இங்க வந்தீங்க?” ஆர்வமாகக் கேட்டார் கிழவர்.
“விருத்தாசலத்த சுத்தி பைபாஸ்  போடுறாங்க. அதுக்கு அளக்க வந்தன்”
“ரோடு போடுறவங்களா?”
“ஆமாங்க. ஹைவேஸ் டிபார்ட்மண்ட்.”
“ரோடு எந்தப் பக்கம் வருது?”
       ஆனந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. கிழவருடைய முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான். அப்போது கிழவி “இருட்டாவ போவுது. ஊட்டுல வௌக்க ஏத்தல?” என்று கேட்டாள். உடனே கிழவர் வீட்டிற்குள் சென்று சிறிய விளக்கு ஒன்றை ஏற்றி வைத்துவிட்டு இரண்டு சாப்பாட்டு தட்டுடன் வெளியே வந்தார். தட்டுகளை வாங்கி அதில் சோற்றையும், கீரையையும் போட்டு வைத்தாள் கிழவி.
“ஒரு வா சோறு சாப்புடுங்களன்” கிழவி ஆனந்தனிடம் சொன்னாள்.
“வேண்டாம்மா. வரன்” காரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அப்போது கிழவர் கேட்டார்,
“கிளம்பிட்டிங்களா?”
“ஆமாங்க. நேரமாயிடிச்சி.” மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.
“ரோடு எந்தப் பக்கமா வருது?”
 ஆனந்தன் வருவதைப் பார்த்துவிட்டு டிரைவர் காரை ஸ்டார்ட் செய்துவிட்டதால் கிழவர் கேட்டது அவனுடைய காதில் விழவில்லை.
“இந்த கூர ஊட்டுல நெருப்ப வச்சிடாதிங்க. நாங்க போறதுக்கு சுடுகாட்டத் தவிர வேற எடமில்ல” கிழவர் சொன்னது காரில் ஏறிவிட்ட ஆனந்தனுடைய காதில் விழவில்லை. சைலோ கார் விருத்தாசலத்தை நோக்கி ஓட ஆரம்பித்தது. காரிலிருந்தபடியே திரும்பிப் பார்த்தான். கிழவியும், கிழவரும், வீடும் தூசு மாதிரி காணாமல் போயிருந்தனர்.

                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக