செவ்வாய், 6 நவம்பர், 2018

இரட்டைக் கோபுரத்தின் பின்னால் உள்ள இருள்




இரட்டைக் கோபுரத்தின் பின்னால் உள்ள இருள்!

இரட்டைக் கோபுரத்தின் பின்னால் உள்ள இருள்!
மதுரை பிரேம் நிவாஸ் ஹோட்டலில் கடந்த ஞாயிறு (அக்டோபர் 21) அன்று வல்லினம் – யாவரும் கூட்டு பதிப்பகத்தின் சார்பில் நூல்கள் வெளியீடு மற்றும் விமர்சனக்கூட்டம் நடைபெற்றது.
மலேசியா எழுத்தாளர் மா.சண்முகசிவாவின் சிறுகதைத்தொகுப்பை வெளியிட்டு எழுத்தாளர் இமையம் உரையாற்றினார். “மலேசியா குறித்தும், மலேசிய இலக்கியம் குறித்தும் தமிழக மக்களும், தமிழக வாசகர்களும் வைத்திருக்கும் மனக்கற்பனைக்கு எதிரானதாகவே மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் இருக்கின்றன. மலேசியா என்றாலே இரட்டைக் கோபுரத்தின் பிரமாண்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால் மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் அந்த இரட்டைக் கோபுரத்தின் பின்னால் இருக்கும் இருளைக் காட்டுவதாக இருக்கிறது. தொகுப்பில் உள்ள எட்டு கதைகளில் 5 கதைகள் குழந்தைகளைப் பற்றியது. சாமிகுத்தம் என்ற கதை அரசியல் கதை. எல்லாம் சரி தான் என்ற கதை மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அன்பைப் பற்றி சொல்கிறது. மா.சண்முகசிவாவிற்கு குழந்தைகள் மன உலகமும், சமூக அரசியல், உளவியல் உலகமும் தெளிவாக தெரிந்திருக்கிறது. செய்திகளை, தகவல்களை எப்படி ஒரு கதையாக மாற்றுவது என்ற நுட்பம் தெரிந்திருக்கிறது” என்று கூறினார்.
“1998ல் வீடும் விழுதுகளும் என்ற சிறுகதைத்தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தொகுப்பு வெளியிடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டுக்கு பத்து புத்தகங்கள் என்று கொத்தாக வெளியிடுகிற தமிழ்ச்சூழலில் 20ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிடுகிறார் என்பதிலிருந்தே அவர் தனித்துவம் மிக்கவர் என்று தெரியவருகிறது. சண்முகசிவாவின் சிறுகதைகளில் ஆர்ப்பாட்டம் இல்லை. கூச்சல் இல்லை. தன்முனைப்பு இல்லை. எதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அதை நல்ல தமிழில் தெளிவாக எழுதியிருக்கிறார். கதாசிரியர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது கதைகளை படிக்கும்போது தெரியும். சமயம் சார்ந்த சடங்குகள் மீது ஓயாமல் கேள்விகளையும், கிண்டல்களையும் வைத்தபடியே இருக்கிறார். தமிழ் மொழியைப் புதுப்பிக்க வந்தேன். மீட்டெடுக்க வந்தேன். என்னால்தான் நவீன தமிழ் இலக்கியம் செழித்திருக்கிறது என்ற ஆணவப்பேச்செல்லாம் கதையாசிரியரிடம் இல்லை. மலேசியாவில் வாழக்கூடிய தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாகப் புரிந்து கொள்வதற்கு இந்த சிறுகதைகள் நிச்சயமாக உதவும். அதோடு இந்த தொகுப்பை படிக்கும்போது நல்ல சிறுகதைகளைப் படித்த உணர்வு ஏற்படும்” என்று தொகுப்பில் உள்ள எட்டு சிறுகதைகள் குறித்தும் இமையம் விரிவாகப் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக