வெள்ளி, 9 டிசம்பர், 2016

ததும்பி வழியும் மௌனம் (கட்டுரைத் தொகுப்பு)– அ.வெண்ணிலா விமர்சனம் – எழுத்தாளர் இமையம்.

ததும்பி வழியும் மௌனம் (கட்டுரைத் தொகுப்பு)– அ.வெண்ணிலா
விமர்சனம் – எழுத்தாளர் இமையம்.
ததும்பி வழியும் மௌனம் நூலில் முப்பத்தியெட்டு கட்டுரைகள் இருக்கின்றன. தமிழ்ச் சமூக வாழ்வை முப்பத்தியெட்டு விதமாக பார்த்திருக்கிறார், விமர்சித்திருக்கிறார் அ.வெண்ணிலா என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். குழந்தைகளைப்பற்றி, கல்வி முறை, மருத்துவம், வீடு, சினிமா, நகர்மயம், காட்சி ஊடகங்கள், கிராமம், நவீன வாழ்க்கைமுறை தொழில்நுட்பம், கைவிடப்பட்ட முதியோர்கள், பெண்கள் சந்திக்கும் கொடூரங்கள், உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், நவீன வாழ்க்கை, விளையாட மறந்த குழந்தைகள் என்று சமூகத்திலுள்ள பல விசயங்கள் குறித்து தெளிவாகவும், துல்லியமாகவும் இக்கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன.
       இன்றையக் கல்விமுறை குறித்த அ.வெண்ணிலாவின் அக்கறை முக்கியமானது. இலவசமாக பெற வேண்டிய கல்வியை ஏன் விலைகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டது? எல்.கே.ஜி. முதல் மருத்துவப் படிப்புவரை ஒவ்வொரு படிப்புக்கும் ஒவ்வொரு விலையென பகிரங்கமாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படுவது எப்படி? தனியார்மய கல்வி கொள்ளையை அரசும், பெற்றோர்களும் ஆதிரிப்பதற்கான, ஊக்கப்படுதுவதற்கான காரணங்கள் என்ன? பத்தாம் வகுப்பு பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலிருந்தும், பனிரெண்டாம் வகுப்பு பாடத்தை பதினொன்றாம் வகுப்பிலேயே தனியார் பள்ளிகள் ஏன் நடத்துகின்றன? இந்த போக்கை அரசும், பெற்றோர்களும் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று நூற்றுக்கணக்கான கேள்விகளை கட்டுரைகளின் வழியே ஆசிரியர் கேட்கிறார். இந்தக் கேள்விகள் கற்பனையாகவோ, யூகமாகவோ கேட்கப்படவில்லை. தமிழ்நாட்டிலுள்ள எல்லாருக்குமே இந்த கேள்விகளுக்குப் பின்னால் உள்ள உண்மை தெரியும். ஆனால் யாருமே பதில் சொல்லப்போவதில்லை. காரணம் – எல்லாருமே குற்றவாளிகள். கல்வித்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சி என்பது சமூகத்தின் வீழ்ச்சி. என்பதை ‘அனல் மேலே பனித்துளி’ என்ற கட்டுரை விவரிக்கிறது. அசலான அறிவை பெறுவதற்கு எதிராக நம்முடைய கல்விச்சூழல் இருக்கிறது என்பது கட்டுரை -  ஆசிரியரின் கவலை.
       மூன்று நான்கு நூற்றாண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை, மாற்றத்தை கடந்த இருபது முப்பதே ஆண்டுகளில் தமிழகம் பெற்றிருக்கிறது. குறிப்பாக தொலைத்தொடர்பில், போக்குவரத்தில், காட்சி ஊடகத்துறையில். இந்த வளர்ச்சி தனிமனித வாழ்வில், சமூக வாழ்வில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது? இந்த மாற்றங்களினால் தமிழ்ச்சமூகம் பெற்றது என்ன, இழந்தது என்ன? பெற்றது அதிகமா, இழந்தது அதிகமா என்பதை மிகவும் நுணுக்கமாக புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மட்டுமல்ல சமூக உளவியலின் அடிப்படையிலும் நிதானமாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார் அ.வெண்ணிலா. எதையும் உயர்த்தியோ, தாழ்த்தியோ பேச வேண்டும் என்ற உள்நோக்கம் சிறிதுமின்றி பிரச்சினைகளையும் அது ஏற்படுத்திய தாக்கங்களையும் மட்டுமே எழுதியிருக்கிறார். மனதில் பதியும்படியும், உரைக்கும்படியும். தொலைபேசிகள் பொய்களை வளர்க்கும் கருவியாக மாறிப்போன விந்தைப்பற்றியும் பேசியிருக்கிறார்.
       நகர்மயம் கிராமத் தற்சார்பு தன்மையை எப்படி அழித்தது என்பதுபற்றி அ.வெண்ணிலா எழுதியிருக்கிறார். விளை நிலங்கள் மனைகளானது, ஏரி, குளங்கள் பிளாட்டுகளானது, நீர்நிலைகளை அழித்தது மட்டுமல்ல, தயிர்க்காரி, வளையல்காரன், பூம்பூம் மாட்டுக்காரன், இரவில் குறி சொல்கிறவன் என்று நூற்றுக்கணக்கான கிராம வாழ்வோடு ஒட்டியிருந்த மனிதர்களை காணாமல் செய்துவிட்டது. மனிதர்கள் மட்டும் அழிந்து போகவில்லை. அவர்களோடிருந்த தொழிலும் மறைந்துவிட்டது. கிராமத் தெருக்கள் இன்று வெறிச்சோடி கிடக்கின்றன என்பதை ‘தெரு மனிதர்கள்’ கட்டுரையில் பார்க்கலாம். கிரிக்கெட் என்ற மீடியா அரசியல் விளையாட்டு – தமிழகத்திலுள்ள எல்லா கிராம விளையாட்டுகளையும் அடையாளமில்லாமல் செய்துவிட்டது. நகரத்து மனிதர்கள் மட்டுமல்ல கிராமத்து மனிதர்களும் இன்று தொலைக்காட்சியின்முன்தான் உட்கார்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சியைத்தான் பார்க்கிறார்கள். தொலைக்காட்சியோடு மட்டும்தான் பேசுகிறார்கள். மனிதர்களோடு பேசுவதற்கு யாருக்கும் நேரமில்லை. விருப்பமுமில்லை. இன்று நகரத்து மனிதர்களுக்கும் கிராமத்து மனிதர்களுக்குமிடையே மனரீதியான வேற்றுமைகளைப் பார்ப்பது அரிது. நகரம் – கிராமம் இரண்டு வாழ்வையும் ஒப்பிட்டு, சமூக வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் மிகுந்த அக்கறையோடு எழுதியிருக்கிறார். கட்டுரை ஆசிரியரின் அக்கறையும், கவலையும், நம்மையும் பிடித்துக்கொள்கிறது. இன்றைய இளைஞர்களின் மனோபாவம் என்னவாக இருக்கிறது? எப்படிப்பட்ட உயர்வான விசயத்தையும் உதாசினம் செய்கிற குணம் எப்படி வளர்ந்தது என்று வேதனையோடு கேட்கிறார்.
       பெண்கள் என்றாலே சமையல், பட்டுப் புடவை, நகை, அலங்காரம், ஊர் வம்பு பேசுதல் என்பதாக மட்டுமே சமுக மனதில் பதிந்துள்ளதற்கு யார் காரணம்? பெண்கள் சமைப்பது பெண்களுக்காக மட்டுமா? முதல் குழந்தை – பெண்ணாக பிறந்தால் ‘லட்சுமி’ வந்துள்ளது என்று பெருமை கொள்கிறோம். பெண் தெய்வங்களை அதிகமாக கொண்டுள்ள சமூகம். எல்லாவற்றிற்கும் பெண்களை முன்னிருத்துகிற தமிழ்ச்சமூகத்தில்தான் ஐந்துவயது பெண் குழந்தை பாலியல் சீண்டலுக்கு ஆளாகிறது. காதலிக்க மாட்டேன் என்று சொல்கிற பெண்ணின் மீது ஆசிட் ஊற்றப்படுகிறது. கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்ததால் வன்புணர்ச்சிக்குட்படுத்தப்பட்டாள் என்று கூறுகிறது. படித்த, நாகரீகமிக்க சமூகத்தில் நடைபெறக்கூடிய செயல்களா இவை என்று அ.வெண்ணிலா கேட்கிறார். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், பணிக்கு செல்லும் பெண்கள், பஸ்ஸில், ரயிலில், அலுவலகத்தில் தினம்தினம் சந்திக்கும் இழிவுகள், கொடூரங்கள் எவ்வளவு? பெண் என்பதைத்தவிர இவர்கள் செய்த குற்றம் என்ன என்ற கட்டுரை ஆசிரியரின் கேள்விக்கு யாரிடத்தில் பதில் இருக்கிறது? உண்மையை உண்மையாக எழுதி இருக்கிறார். தமிழ் சமூகம் வெட்கப்பட வேண்டிய பல இடங்களை நாசூக்காக சுட்டிக்காட்டிருக்கிறார். பெண்ணிய கோசமில்லாமல், முழக்கமில்லாமல், நடைமுறை வாழ்விலிருந்தே அனைத்து விசயங்களும் பார்க்கப்ட்டுள்ளன. விமர்சிக்கப்பட்டுள்ளன. அ.வெண்ணிலா ஒரு பெண். அதனால் அவர் பெண்களுக்கு ஆதரவாகவும், ஆண்களுக்கு எதிராகவும் எழுதியிருப்பார் என்று சந்தேகப்பட அவசியமில்லாமல் ‘ஆண் குழந்தைகளை அரவணைப்போம்’ என்ற கட்டுரையில் ஆண் குழந்தைகளின் இன்றைய பரிதாப நிலைக்காகவும் வருந்துகிறார். இது கட்டுரை ஆசிரியரின் சமநிலை மனதினைக் காட்டுகிறது.
       ததும்பி வழியும் மௌனம் கட்டுரைத் தொகுப்பில் ‘சாயுங்கால மனிதர்கள், பசுமை நிறைந்த நினைவுகளில், வேருக்கு நீரானவர்கள் ஆகிய கட்டுரைகளை கண்ணீருடன்தான் படிக்கமுடியும். இந்த மூன்று கட்டுரைகளையும் – கட்டுரை என்று சொல்லாமல் சிறுகதைகள் என்று சொல்வது கூடுதல் பொருத்தமாக இருக்கும். இன்று படிப்பும், பணமும், நகரமும் மனித உறவுகளை பிய்த்தெறிந்துவிட்டது. கிராமத்தில் இருப்பதே இழிவானது என்ற மனப்போக்கு. ஏற்பட்டுள்ளது. சொந்த வீட்டிலேயே எத்தனையோ மனிதர்கள் அனாதைகளாக வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வாழ்க்கை எல்லாவற்றையுமே பணமாகவும், பொருளாகவும் பார்க்க கற்றுத்தந்திருக்கிறது. மனித உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் கேலிக்குரியனவாகிவிட்டன என்பதை மூன்று கட்டுரைகளிலும் நேர்த்தியாக எழுதியிருக்கிறார். தமிழ் சினிமா பெண்களுடைய வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த மாற்றங்கள் என்ன விதமான விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது என்பதை விரிவாக எழுதியிருக்கிறார். பெண்களுடைய மனதுக்கு பெரிய ஆறுதலை சினிமாப் பாடல்கள் தந்திருக்கின்றன. 1990க்கு முந்தைய சினிமாப் பாடல்கள் ஏதாவது ஒரு விதத்தில் நம்மை பாதித்திருக்கிறது. சமூகத்தைப் பாதித்திருக்கிறது. இதன் தாக்கம்தான் தமிழகத்தினுடைய அரசியல்வாதிகள் சினிமாத்துறையிலிருந்தே வருகிறார்கள் என்பதை சரியான உதாரணங்களுடன் அ.வெண்ணிலா எழுதியிருக்கிறார். அதே நேரத்தில் ஒரு நடிகர் அரசியல்வாதியாக மாறும்போது சமூகம் அவரைப் பார்க்கிற விதமும், விமர்சிக்கிற விதமும் வேறாக இருக்கிறது. ஒரு நடிகை அரசியல்வாதியாக மாறும்போது சமூகம் அவரைப் பார்க்கிற விதம், விமர்சிக்கிற விதம் வேறாக இருக்கிறது, இந்த வேறுபாடு ஏன்? ஒரு கட்டுரையை கண்ணீர் நிறைந்த கண்களுடன் படிக்கமுடியும் என்று நிரூபித்த கட்டுரைத் தொகுப்பு இது. கட்டுரையை படிக்கிறோம் என்ற உணர்வு மொத்த நூலிலும் வரவில்லை. உண்மையாகவே இது அதிசயம். இதற்குக் காரணம் பல கட்டுரைகள் சுயசரிதை தன்மையுடன் எழுதப்பட்டிருப்பது. கட்டுரையை வெறும் தகவல்களாக, புள்ளிவிபரத்தொகுப்புகளாக இல்லாமல் சமூகத்தில் நடந்த யாரோ ஒருவருடைய விசயம் என்ற அளவில் மட்டும் எழுதாமல் பொது விஷயத்தோடு தன்னுடைய சொந்த விசயத்தையும் இணைத்து எழுதியிருப்பதுதான் இக்கட்டுரைகளின் பலம். அதுதான் படிக்க வைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையும் பாரபட்சமற்ற கூர்மையான சமூக விமர்சனம்.
       இன்று விசேஷ நாட்கள், பண்டிகை நாட்கள் என்பது நடிகர், நடிகைகளின் சிறப்பு பேட்டிகளையும், சிறப்பு பட்டிமன்றங்களையும் பார்ப்பது என்றாகிவிட்டது. தீபாவளி, பொங்கல் என்பது பெரிய கொண்டாட்டத்திற்குரியன அல்ல. பொங்கல் என்பது இன்று ஒன்றுமே இல்லை. தீபாவளிதான் தமிழர் பண்டிகை என்று மாற்றிவிட்டது ஊடகங்கள், இன்றைய தலைமுறையினருக்கும், முந்தைய தலைமுறையினருக்கும் பொங்கல் என்பது வேறுவேறு பொருளில் உணரப்படுகிறது. நேற்றைய வாழ்க்கை இன்றைய வாழ்க்கைக்கு படிப்பாக இல்லை. வெறும் நினைவாக மட்டுமே இருக்கிறது. தொலைக்காட்சியாலும், சினிமாவாலும் தமிழ்ச்சமூகம் இழந்ததை அளவிட முடியுமா என்று கட்டுரை. ஆசிரியர் கவலை கொள்கிறார். அவருடைய கவலை மொத்த சமூகத்திற்குமானது. அதே மாதிரி போன தலைமுறைக்கும் இந்த தலைமுறைக்கும் ‘வீடு’ என்பதின் பொருள் மாறியிருக்கிறது. இன்று வீடு என்பது ஆடம்பரம். பிரம்மாண்டம். பிற மனிதர்களிடமிருந்து துண்டித்துக்கொள்வதற்கான இடம். ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று போர்டு தொங்கவிடுகிற இடம். தகுதி. கௌரவம். அந்தஸ்து. வீடு பற்றிய நம்முடைய மதிப்பீடுகள் எப்படி மாறிவிட்டன என்பது குறித்து ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்.
       வீடே இன்று சினிமா தியேட்டர்போல இருக்கிறது. இன்றைய நம்முடைய வீடுகளில் பேச்சு என்பது அரிதான ஒன்றாக இருக்கிறது. ஒரு காலத்தில் பேச்சுதான் மனிதர்களை வாழ வைத்தது. ஒன்றிணைத்தது. சோறாக இருந்தது என்பதை ‘அனிச்சை மலரல்ல’ என்ற கட்டுரை விரிவாகப் பேசுகிறது. படித்தவர்கள், நாகரீகமிக்கவர்கள் என்ற போர்வையில் நாம் தொலைத்த, பேச மறுத்த சொற்கள் எவ்வளவு? இன்று நாம் பேசுகிற சொற்களில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? பொருளிழந்த, சாரமிழந்த சொற்களைத்தான் இன்று பயன்படுத்துகிறோம். ‘சூப்பர்’ என்ற ஒரு சொல் எத்தனை தமிழ் சொற்களை கொன்றிருக்கிறது? சொற்களில் இழிவானது, கெட்டது என்று உண்டா? ஆனால் நாம் அப்படித்தான் பாகுபடுத்தி வைத்திருக்கிறோம். இந்த பாகுபாடு மனித மனதிற்கு மட்டுமே உண்டானது. சொற்களுக்கு அல்ல என்பது அ.வெண்ணிலாவின் வாதம். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம். ‘அழகு மலராட’ கட்டுரையில் பள்ளி ஆண்டுவிழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளை அப்படியே காட்சியாக்கி இருக்கிறார். நிர்வாகத்திற்கு ஒரு கவலை, ஆரிரியர்களுக்கு ஒரு கவலை, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளின் மனநிலை, தங்களுடைய பிள்ளைகளின் நிகழ்ச்சியை காணவந்த பெற்றோர்களின் மனநிலை, சிறப்பு அழைப்பாளர்களின் மனநிலையென்று ஒவ்வொரு விசயமாக விவரித்து ஒரு சினிமாவை பார்த்த நிறைவை ஏற்படுத்தியிருக்கிறார் அ.வெண்ணிலா.
       மரணங்கள் ஏன் நம்மை அதிரவைப்பதில்லை? அழ வைப்பதில்லை என்று ‘நிழல் மனிதர்கள்’ என்ற கட்டுரையில் கேட்கிறார். எது நம்மை மரத்துப்போக வைத்திருக்கிறது? மரணங்களின் எண்ணிக்கையா? அது ஒரு காரணம் மட்டுமே. தனிமனித மனோபாவமும், சமூகத்தின் மனோபாவமும் முற்றிலும் இன்று மாறிவிட்டது. தனிமனித அறமும், சமூக அறமும் இன்று பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது. எங்கே நாம் தோற்றுப்போனோம்? நகர வாழ்வும், தொழில்நுட்பமும் நம்மை இயந்திரங்களாக்கிவிட்டன என்ற கவலை அ.வெண்ணிலாவுக்கு மட்டுமே உரியதல்ல. ஒரே நாளில் நாம் விபத்துகளின் வழியே விதவிதமான மரணங்களை ஒரு துளி கண்ணீரின்றி கடந்துபோகிறோம். எப்படி? சமூக வெளி என்பது இன்று அச்சுறுத்தக்கூடிய இடமாக இருக்கிறது. யாருமே இன்று பாதுகாப்பாக இல்லை. ஏன்? காட்சி ஊடகங்கள்தான் குழந்தைகளுக்கு இன்று பெரும் ஆபத்தாக இருக்கிறது. அந்த ஆபத்திலிருந்து குழந்தைகளை எப்படி காப்பாற்றப் போகிறோம்? அதே மாதிரி பொது வெளியும் இன்று குழந்தைகளுக்கு ஆபத்தான இடமாகத்தான் இருக்கிறது.
கட்டுரைகளில் அறிவார்ந்த விசயம், தமிழக, இந்தியப் பிரச்சனைகள், சமூகத்தை உலுக்கிய விசயங்கள் மட்டுமே பேசப்பட்டிருக்கும். ரொம்ப பெரியப்பெரிய விசயங்கள்தான் விவாதிக்கப்பட்டிருக்கும் என்று நம்பினால் – நமது நம்பிக்கையை பொய்யாக்கும் விதமாக பல கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ‘அப்படியே சாப்பிடலாம்’ என்ற கட்டுரை உணவைப்பற்றி பேசுகிறது. நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், பீட்சா, பர்கர், கட்லெட், குளிர்பானங்கள், சாக்லெட்டுக்கள் எப்படி நம்முடைய அன்றாட உணவாக மாறின என்பதையும், வாரத்தின் ஏழு நாட்களும் இட்லியும், தோசையும் சாப்பிடும் தலைமுறையின் உணவின் ருசி எப்படி இருக்கிறது என்பதையும் பாரம்பரிய தமிழ் உணவு கலாச்சாரம் எப்படி மாறியது, உணவையே மருந்தாக, கடவுளாக கருதிய நமது பாரம்பரியம் என்னவானது? அரிசி மரத்தை காட்டுங்கள் என்று கேட்கிற குழந்தைகள், சாப்பிடுவது என்றால் என்னவென்றே தெரியாத குழந்தைகள் என்று உணவின் அருமைப்பற்றி நேர்த்தியாக எழுதியிருக்கிறார் அ.வெண்ணிலா. நாகரீகம், நவீன உணவு என்ற பெயரில் உடலுக்கு தீங்கான உணவுகளை விரும்பி சாப்பிடுகிற அவலத்திற்கு எது நம்மை தள்ளியது என்று பெரிய ஆய்வையே நடத்தியிருக்கிறார். இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது. உணவுதான் வாழ்க்கை.
சமூகத்தை திறந்த மனதோடு பார்த்திருக்கிறார். சமூகத்தை பாதித்த, பாதிக்கக்கூடிய அத்தனை விசயங்களையும் பாரபட்சமின்றி எழுதியிருக்கிறார். மேம்போக்காக போகிற போக்கில் எழுதியிருக்கிறார் என்று ஒரு வாக்கியத்தைக்கூட காட்ட முடியாது அதே மாதிரி அவர் எழுதாத விசயம் என்று ஒன்றையும் சுட்டிக்காட்ட முடியாது. சில இடங்களில் அன்பாகவும், சில இடங்களில் கோபமாகவும் எழுதியிருக்கிறார். அன்பும், கோபமும் சமூக அக்கறையினால் ஏற்பட்டது. கட்டுரை ஆசிரியருக்கு வெறும் சமூக அக்கறை மட்டும் இருக்கவில்லை. பரந்துபட்ட பல்துறை சார்ந்த அறிவும் இருக்கிறது என்பதற்கு, கட்டுரைக்குத் தேவையான சான்றுகளை இலக்கியங்களிலிருந்தும் வரலாறுகளிலிருந்தும் நடைமுறை வாழ்விலிருந்தும் எடுத்து பயன்படுத்தியிருப்பது மட்டுமல்ல, சரியான இடத்தில் சரியான மேற்கோளை பயன்படுத்தி வாசகரின் கவனத்தைத் தக்க வைக்கிறார். அதே நேரத்தில் நாட்டுப்புற வழக்குகளையும் சிறப்பாக கையாண்டிருக்கிறார். படித்துவிட்டு மறந்துபோகிற, தூக்கிப்போடுகிற கட்டுரைத் தொகுப்பல்ல இது.    முப்பத்தியெட்டு கட்டுரையும் உயிரோட்டமான மொழியில், சிடுக்குகளற்ற சரளமான மொழியில் மனதை நெகிழச்செய்யக்கூடிய விதமாக எழுதப்பட்டிருப்பதால் அலுப்பு, சோர்வு எந்தக் கட்டுரையிலும் ஏற்படவில்லை. தமிழ்ச் சமூகத்தை புரிந்துகொள்வதற்கு காலத்தின் கண்ணாடியாக இருக்கிறது அ.வெண்ணிலா எழுதிய ‘ததும்பி வழியும் மௌனம்’. இந்நூல்பற்றி சொல்வதற்கு ஏராளம் இருக்கிறது. நான் அள்ளியது கைப்பிடி நீர்தான்.

ததும்பி வழியும் மௌனம்,
(கட்டுரைத் தொகுப்பு – 2015),
அ.வெண்ணிலா,
சூரியன் பதிப்பகம்,
229 – கச்சேரி சாலை,
மயிலாப்பூர்,
சென்னை – 4,
விலை – ரூ.160
அம்ருதா – டிசம்பர் 2016


1 கருத்து: