வீம்பு - இமையம்
“போனா, எம் பொணம்தான் போவும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் சிவமாலை.
“ஏண்டி அப்பிடிச் சொல்றவ? வாசப்படியில குந்திக்கிட்டு அப்பிடிச் சொல்லலாமாடி? மவளுக்குக் கண்ணாலம் கட்டணும். மவனுக்குப் பொண்ணு பாக்கணும். பேரன் பேத்தின்னு எடுக்க வாணாமா?” என்று துளசி கேட்டாள்.
“ஆமாம், ஆமாம். பெத்தவ நீயே என்னெ எப்பிடியாப்பட்ட படுகுழில தள்ளி வுட்ட. அந்த மாரிதான் நான் பெத்ததும் படுகுழியில தள்ளி வுடும். யாரு வந்தா என்ன, யாரு போனா என்ன. நான் இனி அந்த ஊட்டுல அடியெடுத்து வைக்க மாட்டன்.”
“அப்பறம் எங்க போவ?”
“எங்கியோ போறன். எனக்குன்னு யாரு இருக்கா? நான் எப்ப வருவன்னு சுடுகாடு காவக் காத்துக்கிட்டு இருக்கில்ல, அங்க போறன். அந்த எடத்த யாரும் புடுங்கிக்க மாட்டாங்கல்ல” என்று சொன்ன சிவமாலை, முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டாள். அவள் அழுததைப் பார்த்ததும் துளசிக்குக் கண்கள் கலங்கின. அவளுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த கோகிலாமணியும் அழுதாள். அழுதுகொண்டிருந்த மூன்று பெண்களையும் பார்த்த கதிரவன் பக்கத்திலிருந்த மர உரலில் உட்கார்ந்தான்.
“வளர்ற புள்ள எதுக்குடா தேயுற உரல்ல குந்துற? போயி திண்ணையில குந்து” என்று துளசி சொன்னதைக் காதில் வாங்காமல், “நேரமாவறது தெரிலியா?” என்று கேட்டான். மூன்று பெண்களில் ஒருவர்கூட வாயைத் திறக்கவில்லை. அப்போது வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்த கண்ணாயிரம், “இன்னிக்கி அயிது என்னாப் பண்றது? ஆதிகாலத்தில எம் பேச்ச ரெண்டு பொட்டாசிவுளும் கேக்கல. ஒறவு கொண்டாடப் போனீங்க. சட்டியா, பானயா அப்பப்ப மாத்திக்கிறதுக்கு?” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் பின்புறம் சென்றார். இரண்டு மாடுகளை அவிழ்த்து ஓட்டிக்கொண்டு வந்து சிவமாலைக்குச் சற்றுத் தள்ளி, ‘என்ன செய்தி?’ என்று கேட்பதுபோல நின்றார். கண்ணாயிரம் தன் பதிலுக்காகத்தான் நிற்கிறார் என்று தெரிந்ததும் சிவமாலை தலையைக் குனிந்துகொண்டு, “நான் இனி அந்த ஊட்டுக்குப் போவ மாட்டன்” என்று சொன்னாள்.
“நிசமாவா” என்று கண்ணாயிரம் கேட்டார்.
‘ஆமாம்’ என்பதுபோல சிவமாலை தலையை மட்டும் ஆட்டினாள்.
“நீ சாவறதா இருந்தாலும் அந்த ஊட்டுலதான் சாவணும், அப்பத்தான் இந்த ஊருல என்னால வேட்டி கட்டிக்கிட்டுப் போவ முடியும். அப்பறம் ஒன்னிஷ்டம்” என்று சொல்லிவிட்டு மாடுகளை ஓட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தார் கண்ணாயிரம்.
கண்ணாயிரம் கோபித்துக்கொண்டு போவதைப் பார்த்ததும் சிவமாலைக்கு அழுகை வந்தது. மூக்கை உறிஞ்சினாள். “ஊர்க்காலி மாடு மேய்க்கிறவனோட போயிருந்தாக்கூட எனக்கு இம்மாம் தீம வந்து நேந்திருக்காது” என்று சொன்னாள்.
“ஒங்கப்பன் சீமானுக்கு ஒன்னெக் கட்டிக்கொடுக்கிறத நானாடி வாணாமின்னன். நானாடி மறிச்சிக்கிட்டன்” என்று துளசி கேட்டாள்.
“தம்பி வேணும், தம்பி வேணுமின்னு பாதாளத்தில என்னெத் தள்ளிவுட்ட பழிகாரி நீதான். எங்கப்பன் அப்பவே வாணாமின்னுதான் சொன்னாரு” என்று சிவமாலை கோபமாகச் சொன்னாள்.
“அப்ப, நீயும்தாண்டி சொன்ன, கட்டுனா மாமனத்தான் கட்டுவன்னு” என்று துளசி சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தாள் சிவமாலை. பிறகு தலையைக் கவிழ்த்துக்கொண்டு விரலால் தரையைக் கீறிக்கொண்டே சொன்னாள், “ஆமாம், சொன்னன், புத்திக்கெட்டுப்போயி.”
“எந் தம்பிக்கு என்னாடிக் கொறச்ச? இந்த வயசிலயும் புது மாப்ளமாரிதாண்டி இருக்கான்.”
“பன்னியும் தளதளன்னுதான் இருக்கு. அதனால ஊரு மேயப் போவச் சொல்லு.”
“சீ, வாய மூடு, புள்ள மக்களாயிட்ட, ஒரு குடும்பமாயிட்ட. இந்த வயசில அப்பன் ஊடு, ஆத்தா ஊடுன்னு வந்து குந்தியிருக்கலாமா? போயி ஒன்னோட ஊட்டப் பாரு. பொழப்பப் பாரு. போயி ஒழுங்குமுறமயா வாழறதுக்குண்டான வழியப் பாரு.”
“அது இந்த சென்மத்தில நடக்காது. நான் என்ன அம்மாம் ரோசம் கெட்டவனுக்குப் பொறந்தவன்னு எண்ணிக்கிட்டியா?” என்று கேட்டுச் சீறினாள் சிவமாலை.
“நீ இங்க வந்து இன்னியோட பதனஞ்சி நாளு ஆவுது. இத்தன நாளுல ஒன்ன கூப்பிட ஒரு நாளாவது வராம இருந்திருக்கானா?”
“அவனால முடியலன்னுதான் இன்னிக்கி விடியறதுக்குள்ள எம் புள்ளிவுள அனுப்பிவுட்ருக்கான். நடக்கட்டும், அப்பியாச்சும் ஒந் தம்பியோட ஓக்கிதயும் ஒங்கப்பன் ஊட்டு ஓக்கிதயும் நாலு பேருக்குத் தெரியட்டும். எல்லாத்தயும் மூடி மறச்சிப் போறதாலதான என்னெ எருக்கம் பூவாட்டம் நெனக்கிறீங்க? கண்ணாயிரம் மவ யாருன்னு காட்டுறன்” என்று வீம்பாகச் சொன்னாள் சிவமாலை.
“எங்க அப்பன் ஊட்டு ஓக்கித ஊருக்குத் தெரிஞ்சா போவுது. மொதல்ல ஒங்கப்பன் ஊட்டு ஓக்கித கப்பலு ஏறாமப் பாத்துக்க” என்று துளசி சொன்னதும் சிவமாலைக்குக் கோபம் தலைக்கு ஏறியது. சண்டைக்காரியிடம் கத்துவது மாதிரி கத்தினாள்: “எங்கப்பன இயித்தா அவ்வளவுதான். பெத்தவனுகூடப் பாக்க மாட்டன். ஊரு சிரிச்சிப்போற மாரி பேசிப்புடுவன். கூடப்பொறந்தவன 'ஏண்டா மயிரான் இப்பிடிச் செய்யுற'ன்னு கேக்க ஒனக்கு ஓக்கித மசுரு இல்ல, ஏழு ஊருக்கு ஞாயம் பொளக்க வந்துட்ட.”
சிவமாலையின் கோபத்தை துளசி பொருட்படுத்தவில்லை. லேசாகச் சிரித்துகொண்டே, “வாய மூடுறி நாதேறி, யாருகிட்ட என்னா பேசுறதின்னு ஒரு கணக்கு வாணாம்?” என்று கேட்டாள்.
“ஒன்னோட கணக்கும் தெரியும், வழக்கும் தெரியும். ஊர்க்காலி மாடாட்டம் திரியிற ஒந் தம்பியோட கணக்கும் வழக்கும் எனக்குத் தெரியும். எங்கப்பன மட்டும் இழுக்காத. அப்பறம் வாயில வந்தபடி பேசிப்புடுவன்.”
“அப்பன் அப்பன்னு சொல்லுறியே, ஒங்கப்பன் என்ன பெரிய சீமானாடி? நாலே நாலு செம்பறி ஆட்ட மேய்ச்சிக்கிட்டுக் கெடந்தவன்தாண்டி ஒங்கப்பன். நான் தாலி கட்டிக்கிட்டு இந்த ஊட்டுக்கு வந்தப்ப, இந்த ஊட்டுல என்னா இருந்துச்சி? நாலு செம்பறி ஆடும், அது போட்ட புழுக்கயும், மூத்திர வாடையும்தான் இருந்துச்சி. இதான் ஒங்கப்பனோட ஆஸ்தி. அண்டா, தேக்குசா, வெங்கலப் படி, சொம்பு, தம்பளரு, விளக்கு, பண்டபாத்திரம்னு எல்லாச் சாமானையும் நான்தான் கொண்டாந்தன். கை கரவ மாடு ஒண்ணு ஓட்டியாந்தன். ஒரு ஜோடி உழவுமாடு எங்கப்பன் புடிச்சி வுட்டாரு. வருசா வருசம் எங்கப்பன்தான் வந்து இந்த ஊட்டக்கூட மேஞ்சாரு. ஒரு தீவாளி வுடாம, ஒரு பொங்க வுடாம ஒரு ஜோடி வேட்டி சீல எடுத்துக் கொடுக்கல? நீ பொறந்ததிலிருந்து தாலி கட்டிக்கிட்டுப் போறவரைக்கும் நீ கட்டிக்கிட்டு மினுக்கினியே அது எல்லாம் யாரு எடுத்துக் கொடுத்தது? ஒங்கப்பனா எடுத்துக் கொடுத்தான்?”
“எல்லாம் ஒங்கப்பன் ஊட்டுல இருந்துதான் வந்துச்சி. ஊரே சொல்லும்” என்று சிவமாலை ஒரு தினுசாகச் சொன்னதும் துளசிக்குக் கோபம் வந்துவிட்டது.
“நான் சொல்றதெல்லாம் பொய்யாடி? நீ என்னா பண்ணுவ? கட்டுன கோமணத்த அலசிக் கட்டத் தெரியாதவனுக்குப் பொறந்தவதான நீ? வாங்கித் தின்னுப்புட்டு
‘இல்ல’ன்னு சொல்ற வகயிறாவில பொறந்தவதாண்டி நீ. ஒவ்வொரு பதினெட்டுக்கும், தீவாளிக்கும் தூக்குத் தூக்கா கறி எடுத்தாந்து எங்கப்பன் போடல? குந்திக்கிட்டு அத நீ திங்கல? கண்ணுல தண்ணீ வரவரத் தின்னியே மறந்துபோச்சா? ஒங்கப்பனா ஒனக்கு ஒரு சோறுக்கு ஒரு கறின்னு ஆக்கிபோட்டுத் திங்க வச்சி ஒன்னெ வளத்தான்? விடிஞ்சா காடு, பொயிது போனா ஊடு, இதத் தவுத்து ஒங்கப்பனுக்கு வேற என்னா தெரியும்? இன்னியமுட்டும் ஒரு காரு ஏறியிருப்பானா, ஒரு ரயிலு ஏறியிருப்பானா?”
“எதுவும்தான் இல்ல. அப்பறம் எதுக்கு எங்கப்பன நீ கட்டிக்கிட்ட?” என்று கிண்டலாகக் கேட்டாள் சிவமாலை.
“விதிடி விதி. நெல்லு வெளயுற ஊருல பொறந்து வரவு வெளயுற ஊருல வந்து தாலி கட்டிக்கிட்டது விதிதாண்டி. அதிலயும் ஒங்கப்பனக் கட்டிக்கிட்டது போன சென்மத்தில நான் செஞ்ச பாவம். தண்ணி குடிக்கிற சொம்பு மொதகொண்டு, குத்துற ஒலக்க மொதகொண்டு எங்கம்மாதான் வாங்கிக் கொடுத்தா. ஒங்கப்பன பெத்த மகராசியும் இருந்தா ஒருத்தி, சோத்துக்குத் தெண்டமா. என்னாத்த சம்பாரிச்சி வச்சா? வாயத்தான் ஏழு ஊருக்கு நீளுற மாரி வளத்து வச்சியிருந்தா. தெக்க பாருன்னு சொன்னா மேற்க பாப்பா. வான கண்ணு முண்ட, அவ என்னெ செஞ்ச சித்ரவத சொல்லி முடியாது. பாக்கு உரல்ல பாக்கப் போட்டுக் குத்துற மாரிதான் என்ன ராவும் பவலும் சொல்லால குத்துவா. அம்மானயும் நான் பொறுத்துக்கிட்டன். பொட்ட சிறுக்கி நீ பொறந்திட்டியேன்னு” என்று சொல்லிப் பெருமூச்சுவிட்ட துளசி குரலை மாற்றிச் சலிப்புடன் சொன்னாள்: “சாவயில அவ எப்பிடிச் செத்தான்னு எனக்குத்தான் தெரியும். எம் பாவம் அவளக் கேட்டுச்சி. மூணு மருமவ இருந்தாலும் அவளுக்கு எல்லா கருமாந்தரத்தயும் நான்தான் எடுத்தன்.”
“பேசு. பேசு. எம்மாம் பேசணுமோ பேசு. ஒன்னால முடியும் மட்டும் பேசு. எங்கப்பன மாரி இந்த ஒலகத்தில ஒரு ஆளு இருப்பானா? அவுரு பேச்ச நான் கேக்கல. அதான் இப்பப் படுறன்” என்று சிவமாலை கோபத்தோடு சொன்னாள்.
“செத்த நேரம் வாய மூடிக்கிட்டு இருக்க மாட்டீங்களா?” என்று கதிரவன் கேட்டான். துளசியும் சிவமாலையும் சிறிது நேரம் பேசாமலிருந்தனர். எழுந்து வீட்டுக்குள் போன கோகிலாமணி தண்ணீர் கொண்டுவந்து சிவமாலைக்குக் கொடுத்தாள்.
“போடி அந்தாண்ட. இப்பத்தான் நாடகம் காட்டுறா. பெத்தவ போயி இத்தினி நாளாச்சே, என்னாச்சி ஏதாச்சின்னு கேக்கறதுக்கு வரல. மனசுல திக்குங்குல. பெத்தவன் துரத்தி வுட்டதும் இன்னிக்கி வந்து நாடகம் காட்டுறா” என்று சிவமாலை திட்டியதும் அழுதுகொண்டே போய் துளசிக்குப் பக்கத்தில் உட்கார்ந்தாள் கோகிலாமணி. அப்போது சிரித்துகொண்டே துளசி சொன்னாள், “நீ பெத்ததுதாண்டி.”
“ஆமாம். நான்தான் பெத்தன். கல்லயும், மண்ணயும்” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள் சிவமாலை. அப்போது எழுந்து அவளிடம் வந்த கதிரவன், “எழுந்திரும்மா, போவலாம். நேரமாச்சி, நான் காலேஜிக்குப் போவணும்” என்று சொன்னான்.
“நான் வல்ல. நீ போப்பா.”
“என்னா பேசுற நீ? நாங்க முக்கியமில்லியா?” என்று கோபமாகக் கேட்டான்.
“போடா. ஒங் கதயும் எனக்குத் தெரியும். நாளக்கி ஒனக்கின்னு ஒருத்தி வந்தா நீயும்தாண்டா இப்பிடிச் செய்வ. நீயும் ஒங்கப்பன மாரிதாண்டா இருப்ப” என்று சொல்லிவிட்டு அழ ஆரம்பித்தாள். அழுகைக்கு இடையில், “நம்பி போனன். நம்பி இருந்தன். நானா போயி முள்ளுமேல சீலயப்போட்டுட்டன். இந்த வயசில இப்பிடி இருக்கானே” என்று சொன்னாள். மூக்கைச் சிந்தி விட்டெறிந்தாள். “மருமவன் ஊட்டுக்கு வர நேரத்தில, மவன் கூத்தியா சேக்க அலயுற நேரத்தில, அப்பங்காரன் புதுப் பொண்டாட்டி சேத்துக்கிட்டு நிக்குறான்” என்று சொல்லி முருகனைத் திட்ட ஆரம்பித்தாள். என்ன சொல்வது, என்ன செய்வது என்று தெரியாமல் சலிப்புடன் திரும்பி வந்து உரலில் உட்கார்ந்தான் கதிரவன்.
துபாய்க்குப் போகிறேன் என்று ஒரு லட்சம் ரூபாயை ஏஜெண்டிடம் கொடுத்து ஏமாந்த பிறகு ஆறு வருசமாக முருகனுக்கு கேரளாவில் செங்கல் சூளையில் வேலை. முதல் வருசம் நல்லபடியாகத்தான் இருந்தான். அதன் பிறகுதான் அவனிடம் மாற்றங்கள் தெரியத் தொடங்கின. மழைக் காலத்திலும் சூளையில் வேலை என்று போக ஆரம்பித்தான். சந்தேகப்பட்டு கேட்டதற்கு, “மொதலாளி தொல்ல” என்று சொன்னான். மூன்றாவது வருசத்தில்தான் சூளையில் வேலை செய்கிற ரோசம்மா என்ற பெண்ணோடு தொடர்பு என்று செய்தி அடிபட ஆரம்பித்தது. அவனோடு வேலைக்குப் போகும் பக்கத்து ஊர் ஆட்களிடம் விசாரித்தபோது உண்டு என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. மழுப்பினார்கள். கடைசியாகப் போன மாதம் மேலப்பாளையூர் செல்வராஜ்தான், “ஆமாம்” என்பதுபோல் தலை ஆட்டினான். முருகனிடம் கேட்டதற்கு, “ஊரான் பேச்சக் கேக்காத” என்று மட்டும்தான் சொன்னான்.
சிவமாலை அவன் சொன்னதை நம்பினாள். இருபது நாட்களுக்கு முன் கேரளாவிலிருந்து வந்தபோது அவன் சட்டைப்பையில் ஒரு பெண்ணின் படம் இருந்தது. கேட்டதற்கு, “கீழ கெடந்தது” என்று சொல்லிவிட்டு போட்டோவை எடுத்து எரிந்துகொண்டிருந்த அடுப்பில் போட்டுவிட்டான். அப்போது ஆரம்பித்தது சண்டை. அன்று சாயங்காலமே கிளம்பி தன் அப்பா வீட்டிற்கு வந்துவிட்டாள். பதினைந்து நாட்களாகிவிட்டது. பதினைந்து நாட்களாகக் காலையிலும், சாயங்காலமும் நாள் தவறாமல் வந்து கூப்பிட்டுக்கொண்டுதான் இருக்கிறான் முருகன். சிவமாலை ஒரு நூல்கூட அசைந்து கொடுக்கவில்லை. இன்று காலையில் கோகிலா மணியும், கதிரவனும் வந்தார்கள். வீட்டுக்கு வரச்சொல்லி மாறிமாறிக் கூப்பிட்டுப்பார்க்கிறார்கள். அவர்களுடைய கெஞ்சலுக்கும், அழுகைக்கும்கூட அவள் அசரவில்லை.
“பதினெட்டு பத்தொம்பது வருசமா கூடப் படுத்து எயிந்திரிச்சவளுக்குத் தெரியாதா ஒரு ஆம்பளயோட குணாச்சாரம். நான் அந்த அளவுக்கா குருடி?” என்று சொல்லிப் புலம்பி அழுதுகொண்டிருந்தாள். சிவமாலையின் மனதை அறியாமல் உரலில் உட்கார்ந்தபடியே, “இன்னும் எத்தினி நாளக்கித்தான் இப்பிடியே அயிதுகிட்டு இருக்கப் போற? நான் வேணுமின்னா வா, இல்லன்னா இங்கியே இரு” என்று கோபத்துடன் சொன்னான் கதிரவன்.
“எனக்கு யாரும் வாணாம். நான் செத்துப்போறன். நான் செத்துப்போனாத்தான் கண்ணாயிரம் மவ யாருன்னு ஒங்களுக்கெல்லாம் தெரியும். அப்பன் செய்யுற கூத்த 'ஏன்'னு ஒரு வார்த்த கேக்க முடியல. பஞ்சாயத்துக்கு எங்கிட்ட வரான்” என்று கதிரவனை எடுத்தெறிந்து பேசிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“ஒனக்கு மூள இருக்கா இல்லியா? பெத்த அப்பன்கிட்ட இதெப் போயி நான் கேக்கலாமா?”
“அப்பறம் யாரு கேக்குறது? யாரும் கேக்காட்டி அவன் எப்பிடித் திருந்துவான்?” என்று சிவமாலை கோபமாகக் கேட்டாள். கதிரவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவனை முறைத்து, திட்டி, எடுத்தெறிந்து அவள் இதுவரை ஒருமுறைகூடப் பேசியது கிடையாது. அதேமாதிரி முருகனையும் அவள் இதற்கு முன் 'அவன்', 'இவன்' என்று பேசியது கிடையாது. அவளுடைய நடவடிக்கை அவனுக்குப் புதிதாக இருந்தது. அப்போது வேகமாக எழுந்து போன துளசி சிவமாலையின் வாயில் அடித்து, “பெத்த புள்ளக்கிட்ட போயி என்னாடி கேக்குற நாதேறி முண்ட. வாயக் கழுவுடி. வயசானா வாயும் வளந்துடுமாடி? இப்பிடிப்பட்ட ஒன்னயாடி நான் பெத்தன்” என்று சொல்லி மீண்டும் அவளுடைய வாயில் ஒன்று போட்டாள், சிவமாலைக்கு வேகம் வந்துவிட்டது. துளசியின் கைகளைப் பிடித்துத் தன் முகத்திலேயே அடித்துக்கொண்டு, “நீதான என்னெ பெத்த? நீயே அடிச்சி என்னெக் கொன்னுப்புட்டுப் போ” என்று சொல்லி அழுதாள்.
கைகளை இழுத்துக்கொண்ட துளசி ஆத்திரத்தோடு திரும்பி வந்து, “நீ ஏம்பா நிக்குற? அது நாயி. நாயின்னா கத்ததான செய்யும்? அவ பொறந்த வகயிறாவே வாயால அடிச்சித்தான் ஒலயில போடும். வாயக் கட்டாது. நீ போயி சாப்புடு” என்று சொன்னாள். கோகிலாமணி பக்கம் திரும்பி, “போயி அவனுக்குச் சோறு போடு. நேரம் என்னாவுது?”' என்று கேட்டாள். அவள் நகராததால், “ஆயாளும் மவளும் நெஞ்சழுத்தகாரிவோதான். ஆம்பளவுள மட்டு மரியாத இல்லாம பேச எங்கடி கத்துக்கிட்டீங்க?” என்று கேட்டு கோகிலாமணியைத் துளசி முறைத்தாள்.
“கண்ணாலம் கட்டுறாப்ல ஊட்டுல ஒரு புள்ள இருக்கான். வயசுக்கு வந்த ஒரு பொட்ட புள்ள இருக்கா. அவள ஊட்டுல வுட்டுட்டு வந்தோமே, ஊருல ஒண்ணு சொல்ல மாட்டாங்களான்னு மனசுல அக்கறப்படுறாளா பாரு. எந்த ஊருலப் போயி வாய வளத்துக்கிட்டு வந்தான்னு தெரியல சிறுக்கி” என்று துளசி சொன்னதும் அவளிடம் சண்டைக்குப் பாய்ந்து, “அவள பெத்தவன் இல்லியா? அவன் அவளப் பாத்துக்க மாட்டானா? போனா அவன் மானம்தான் போவும், எனக்கென்னா?” என்று கேட்ட சிவமாலைக்கு அழுகை வந்தது. அழுதுகொண்டே, “நான் வந்து எத்தினி நாளாச்சி? இன்னிக்கி வர்றா திருட்டு முண்டெ. கல்லு நெஞ்சுக்காரன் விந்துக்குப் பொறந்தவதான. வேற எப்பிடி இருப்பா? அவ மொகரயப் பாரன். அந்தக் கருவாயன் மொகரய வச்சிக்கிட்டு பொறந்திருக்கிறத. நாலு சாதி சனத்தோட புழங்குனவனுக்குப் பொறந்திருந்தா அந்த அறிவு இருக்கும்? அவந்தான் தானே ஆக்கி, தானே திங்கிறவனாச்சே” என்று சொன்னாள்.
“அங்க யாரு சோறு ஆக்குறதாம்?” என்று கோகிலாமணி கேட்டாள்.
“வாய மூடுறி. பெத்தவளாச்சேன்னுகூடப் பாக்காம வாயடுற? யாருகிட்டயிருந்து வந்துச்சி இந்தப் பயக்கம்?” என்று சிவமாலை கேட்டாள்.
“ஒங்கிட்டயிருந்துதான்” என்று சொன்ன துளசி, சிவமாலையிடம், “புள்ளிவோ நிக்குறது தெரியலியாடி? போ. போயி பெரியாண்டவர் கோவுல்ல மனக்கொறய சொல்லி அழுதுட்டு திருநீறு எடுத்துப் பூசிக்கிட்டு போ. ஒனக்கு ஒரு கொறயும் வராது. திருந்தி வசத்துக்கு வந்துடுவான்” என்று சொல்லிகொண்டே வந்து சிவமாலையைத் தூக்கினாள். வெடுக்கென்று கைகளைத் தட்டிவிட்ட சிவமாலை சொன்னாள். “பெரியாண்டவர பாரு, பெரியாண்டவர. அவனோட சந்நிதானத்திலதான என்னோட கண்ணாலம் நடந்துச்சி. அவன் என்னெ நல்லபடியா வாழ வுட்டானா? நான் இப்ப இப்பிடி அந்தல சிந்தலயா நிக்குறது அவனுக்குத் தெரியாது? எல்லாத்தயும் பாத்துக்கிட்டு சும்மாக் குந்தியிருக்கிற மண்ணுக்கிட்டப் போயி என்னாத்தச் சொல்லச் சொல்ற?”
“அது நம்ப குடிசாமிடி.”
“மன்னாருசாமிதான்.”
“புது பொண்ணாடி நீ? பொணக்கிக்கிட்டு வரதுக்கு? பாதி கிழவியாயிட்ட. இந்த வயசில சண்ட சாடின்னு போட்டுக்கிட்டு வந்து என்னாத்த வாரிக்கப்போற? போ. இன்னியமுட்டும் நம்ப ஊட்டு சண்டதான், கதெதான், தெரு சிரிச்சிப்போவாம, ஊரு சிரிச்சிப்போவாம இருந்துச்சி. அந்தக் கொறயும் எதுக்குன்னா, நீ இங்கியே குந்தியிரு. இதான் ஒனக்கு நான் கடசியா சொல்றது. ஒங் கறியில வெக்க மானம் இல்லெ” என்று சொல்லிவிட்டுத் துளசி வந்து முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் போய் உட்கார்ந்தாள்.
“தாலி கட்டிக்கிட்டு போன நாளுலயிருந்து எத்தினி வாட்டி ஒன் ஊட்டுக்கு நான் கண்ணக் கசக்கிக்கிட்டு வந்து இருக்கன்? வாழும்போதே வாழப்பூ சேல வல்லியாம், சாவும்போதுதான் சாமந்திப்பூ சேல வரப்போவுதாம்” என்று வீறாப்பாகச் சொன்னாள் சிவமாலை.
“இந்த சனியனெல்லாம் என்னிக்குத்தான் தீரப் போவுதோ” என்று சொல்லி கதிரவன் அலுத்துக்கொண்டான். அப்போது தெருப் பக்கம் பார்த்த கோகிலாமணி, “அப்பா வராரு” என்று சொல்லிவிட்டு எழுந்து வீட்டுக்குள் போனாள்.
கோகிலாமணி தண்ணீர் கொண்டுவந்து முருகனுக்குக் கொடுத்தாள். கதிரவன் எழுந்து போய் திண்ணையில் உட்கார்ந்ததும், அவன் உட்கார்ந்திருந்த உரலில் உட்கார்ந்தான் முருகன். சிரித்துக்கொண்டே, “என்னா சொல்றா ஒங்கம்மா?” என்று கோகிலாமணியிடம் கேட்டான். அவள் வாயைத் திறக்கவில்லை. அவள் பேசாததால் துளசியின் பக்கம் திரும்பி, “ஒம் மவ நடத்துற நாடகத்தப் பாத்தியா? ஊரான் பேச்சக் கேட்டுக்கிட்டு ஆடுறா. ஆடட்டும். அவளோட ஆட்டம் எத்தினி நாளக்கின்னு நானும் பாக்குறன்” என்று சொன்னான்.
“அவ கேட்டா இல்லன்னு ருசுப் பண்ணிட்டுப்போ. எதுக்காக அவள மாட்டப் போட்டு அடிக்கிற மாரி அடிச்ச? அதான் சாக்குன்னு அவ சாமியாடுறா” என்று கோபமாகத் துளசி சொன்னாள்.
“அவ பேசுன பேச்சுக்கு வாயக் கிழிக்காம வுட்டதே பெருசு” என்று முருகன் சொன்னான்.
“போயி சோத்த போடுடி. ஆயாளுக்கு ஏத்த மவளாத்தான் பொறந்திருக்கிற. பொட்டச்சிவோ ஒரு ஓரம்சாரமா குந்த வாணாமா?” என்று சொல்லி துளசி முறைத்தாள். ஒன்றும் சொல்லாமல் எழுந்து வீட்டுக்குள் போனாள் கோகிலாமணி.
“மவளக் கொடுத்து என்னெ வாழ வச்சிட்ட. இப்ப சோத்தப்போட்டு வாழ வைக்கப்போறியா?” என்று முறைத்த மாதிரி முருகன் கேட்டான். அதற்குச் சிரித்துக்கொண்டே துளசி, “ரெண்டு நாயும் அன்னிக்கி ஒண்ணா குலாவுச்சி. இப்ப எந் தலயப் போட்டு உருட்டுது” என்று சொன்னாள். அவளை ஏறஇறங்கப் பார்த்த சிவமாலை முகத்தை வெடுக்கென்று திருப்பிக்கொண்டாள்.
“சோறு திங்க வாப்பா” என்று கோகிலாமணி கூப்பிட்டாள். “ஒண்ணும் வாணாம்மா. கெளம்பு, ஊட்டுக்குப் போவலாம்” என்று சொல்லிவிட்டு “ஊரான் பேச்சக் கேக்காத. வா. ஊட்டுக்குப் போவலாம். ஊட்டுல போட்டது போட்டபடியே கெடக்கு” என்று சொன்னதோடு நில்லாமல் சிவமாலையின் இரண்டு கைகளையும் பிடித்துத் தூக்கினான் முருகன்.
“சீ, என்னெத் தொடாத. மல நாட்டுக்காரிய போயி தூக்கு. ரோசம்மாவோ கீசம்மாவோ இருக்காள்ள. அவளப் போயி தூக்கு. என்னெ எதுக்குத் தூக்க வர்ற?” என்று சொல்லிவிட்டு முருகனின் கைகளைத் தட்டிவிட்டாள் சிவமாலை.
“எனக்கு கோவத்த உண்டாக்காத, வழியே போறவன் பேச்சக் கேட்டுக்கிட்டு ஆடுற. இனிமே நான் கேரளாவுக்குப் போவல. வா ஊட்டுக்கு” என்று சொல்லிவிட்டு மீண்டும் தூக்கினான். வெறி வந்தது மாதிரி அவனை நெட்டித்தள்ளிவிட்டு, “வெக்கம் மானம் இருந்தா என்னெத் தொடக் கூடாது” என்று சொல்லிக் கத்தினாள்.
வெலவெலத்துப் போய் நின்றுகொண்டிருந்தான் முருகன். கதிரவன் பக்கம் பார்த்தான். திரும்பி கோகிலாமணியைப் பார்த்தான். சலிப்புடன் பெருமூச்சுவிட்டான். ரொம்பவும் பணிவாக, “தெருவுல குந்திக்கிட்டு எதுவும் பேச வேணாம், ஊட்டுல போயிப் பேசிக்கலாம் வா” என்று கூப்பிட்டான்.
“நான் வல்ல நீ போவலாம்.”
“என்னிக்குமே வர மாட்டீயா?”
“வர மாட்டன். என் பொணம்கூட வராது.”
“நான் செத்தாலும் வர மாட்டியா?”
“ஆமாம். கடவுளு மேல சத்தியம்.”
“அப்பிடின்னா இங்கியே இரு. இன்னம் நாலு நாளயில ஒருத்தியக் கொண்டாந்து ஊட்டுல குடி வைக்கலன்னா என்னெ மசுருன்னு கூப்புடு. ஒன்னிய வுட்டா ஒலகத்தில் வேற பொம்பளயே கெடயாது பாரு.”
“எதுக்கு புதுசா புடிக்கப்போற? அதுக்குத்தான் ஏற்கனவே ரோசம்மான்னு செவப்புத்தோலா மலயாள நாட்டுக்காரிய புடிச்சியிருக்கியே. அது போதாதா? போ. போயி அவளப் புடி, தூக்கு, ஒளக்காட்டுல கெடக்குறவ வேணாமின்னுதான மலநாட்டுக்காரிய போயி புடிச்சியிருக்க. ஒந் தப்புக்கணக்கு இனிமே செல்லாது.”
“வாய மூடுறி” என்று சொல்லிவிட்டு ஓங்கி சிவமாலையின் கன்னத்தில் அறைந்தான். மறுஅடி அடிப்பதற்குள் திண்ணையில் உட்கார்ந்திருந்த கதிரவன் வேகமாக ஓடிவந்து, “யோவ், போயா எட்ட. பெரிய இது மாரி வந்துட்ட அடிக்க. இனிமே அடிச்சின்னா மரியாத கெட்டுப்போயிடும்” என்று சொன்னதும், முருகனுக்கு உடம்பு நடுங்கியது. கோபத்தில் உதடுகள் துடித்தன. சுற்றும்முற்றும் பார்த்தான். சீறப்போகும் பாம்பு மாதிரி சிவமாலையைப் பார்த்தான். “'நான் பெத்த புள்ளயவே எனக்கு எதிரா ஏவி வுடுறியாடி? வா ஒன்னெ வச்சிக்கிறன். புள்ளயா புருசனான்னு ஒனக்குக் காட்டுறன்” என்று சொல்லிவிட்டு வேகமாகப் போய் உரலில் உட்கார்ந்து தலையை கவிழ்த்துக்கொண்டான்.
வேகமாக எழுந்த சிவமாலை முந்தானையை வேகமாக உதறி இடுப்பில் செருகினாள். தலைமுடியை உதறி, தட்டி முடிந்துகொண்டு, மூக்கைச் சிந்திவிட்டு முருகனிடம் வந்து வீறாப்பாக நின்றுகொண்டு, “இப்ப எம் புள்ளக்கி பதிலு சொல்லு. கேக்குறதுக்கு ஆளில்லன்னு நெனச்சிக்கிட்டியா?” என்று கேட்டவளுக்குச் சிரிப்பு வந்தது. கதிரவனிடம் வந்து, “போதும்டா சாமி. ஒரு வருசம் ஒன்னெ என் வவுத்தில சொமந்ததுக்கு, ஏழெட்டு வருசம் மாருல செமந்ததுக்கு, பீ, மூத்திரத்த அள்ளுனதுக்கு இது போதும்டா. இப்பத்தாண்டா எம் மனசு குளுகுளுன்னு இருக்கு. அவன் எவ கூடயோ போறான், எவ கூடயோ வரான், எனக்கென்னா? கண்ணாட்டம் ரெண்டு புள்ள இருக்கு. அது போதாதா எனக்கு? இந்த வயசிலதான் எனக்குப் பிரிசன் ஆச கேக்குதா?” என்று கேட்டாள்.
“வாய மூடுறி” என்று துளசி சொன்னாள்.
“பாஞ்சி நாளா எம் புள்ளிவோ சரியா சோறு குடிச்சிதுவுளோ இல்லியோ? காலேஜுக்கும் போவல. எம் புள்ளிவோ பொழப்பு கெட்டுப்போச்சே” என்று சொன்ன சிவமாலை, முருகன் பக்கம் திரும்பி, “வா, ஒன்ன வச்சிக்கிறன். பெரியாண்டவர் கோவுல்ல ஒனக்குச் சீட்டு கட்டறன், கைகாலு வெளங்காம பண்றன்” என்று சொன்னாள்.
“வாப்பா போவலாம்” என்று கதிரவனிடம் சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள். பத்து தப்படி தூரம் போனதும் நின்று திரும்பிப் பார்த்தாள். கோகிலாமணி துளசியிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும், “நானே பெத்தவ வாணாமின்னு போறன். ஒனக்கு என்னாடி ஒறவு? பொயிது ஆவுதே, நேரத்தில ஊட்டுக்குப் போவனுமின்னு அறிவு வாணாம் கயிசர நாயிக்கு? இதாண்டி பொட்ட கழுதயோட புத்திங்கிறது” என்று சொல்லிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். அவளோடு நடந்துகொண்டிருந்தான் கதிரவன்.
“பேயாட்டம் சிலுப்பிக்கிட்டுப் போறா பாரு” என்று சொன்ன துளசி, “யேய், சிவமால சோறு குடிச்சிட்டு போடி” என்று சொன்னாள். துளசியின் குரல் கேட்டு நின்ற சிவமாலை, “நீ செத்தாதான் இனி ஒன் ஊட்டுல அடி வைப்பன். நீயும் ஒந் தம்பியும் ஆக்கித் தின்னுட்டு மண்ணாப் போங்க. வெளங்க மாட்டீங்க. தொலங்க மாட்டீங்க. கொள்ளயில போயிடுவீங்க” என்று சொல்லிவிட்டு முன்பைவிட வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“அதுக்கு மட்டும் எதுக்கு வர்ற? வராமியே இரு. அதான் ஒனக்கும் நல்லது, எனக்கும் நல்லது” என்று துளசி சிரித்தபடியே சொன்னது சிவமாலைக்குக் கேட்கவில்லை.
“வாப்பா போவலாம்” என்று கோகிலாமணி முருகனைக் கூப்பிட்டாள்.
“நான் வல்ல நீ போம்மா” என்று சொல்லிவிட்டு துளசியை முறைப்பது மாதிரி பார்த்தான்.
“அம்மா ஊட்டுக்குப் போவுது. வாப்பா, நாம்பளும் போவலாம்” என்று சொல்லி கோகி
லாமணி முருகனின் கையைப் பிடித்து இழுத்தாள். முருகன் மறுபேச்சு பேசவில்லை.
உயிர்மை _ மே 2025
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக