புதன், 30 ஏப்ரல், 2014

காணாமல் போன கவிதைகள் (கவிதை தொகுப்பு)
                                                              நெப்போலியன்.
                                                       விமர்சனம் – இமையம்.

       தமிழில் கவிதை புத்தகங்கள் விற்பனை ஆவதில்லை என்று சொல்லப்படுவது நிஜமல்ல. தமிழில் ஆண்டுக்கு குறைந்தது இருநூறு முதல் முந்நூறு கவிதை தொகுப்புகள் வெளிவரும் நிலையில் கவிதை தொகுப்புகள் விற்பனை ஆவதில்லை என்று கூறுவதை ஏற்பதற்கில்லை. கவிதை படிப்பதும், கவிதை எழுதுவதும் சமூகம் சார்ந்த செயல். சமூகம் சார்ந்த சிந்தனை, அக்கறை, ஈடுபாடு, கவலை. கவிதையை எழுதுவதும் படிப்பதும்தான் முக்கியமானது. விற்பனை அல்ல. உலகில் விற்பனைக்கு எவ்வளவோ இருக்கிறது. விற்பனைக்கான பொருள்களின் பட்டியலில் கவிதை நூல்கள் இல்லாமல் இருந்தால்தான் கவிதைக்கு மதிப்பு. ஒரு கவிஞனின் சிந்தனையும் ஒரு கம்பெனியின் முதன்மை நிர்வாகியின் சிந்தனையும் ஒன்றல்ல. அறிவை, சிந்தனையை, அன்பை எதன் பொருட்டு விற்கிறோம்? நெப்போலியன் தன் கவிதைகளை விற்பனைக்காக, புகழ் பெறுவதற்காக, கவிஞர் என்ற அடையாளத்திற்காக எழுதியது மாதிரி தெரியவில்லை. மாறாக அவருடைய எழுத்தை சமூக அக்கறை, கரிசனம் என்று சொல்ல முடியும்.
       நெப்போலியனின் கவிதைகள் புது உத்தி, சோதனை முயற்சி, சிடுக்கான வாக்கியம், புரியாத தன்மை, மொழி அலங்காரம், ஆங்கிலப் படிப்பின் அகங்காரம் என்று எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. எல்லா படைப்புகளின் நோக்கமும் கருத்து பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். பிரச்சாரம் எல்லை தாண்டாமல் பார்த்துக்கொள்வதில் கவிஞனின் படைப்புத்திறன் அடங்கியிருக்கிறது. ஒரு மதபோதகரின் பிரச்சாரத்திற்கு, ஒரு சாதியவாதியின் பிரச்சாரத்திற்கு, பிற்போக்குவாதியின் பிரச்சாரத்திற்கு நேரெதிரானது ஒரு கவிஞனின் பிரச்சாரம். அந்த பிரச்சாரத்தில் நெப்போலியன் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்.
       நெப்போலியனின் காணாமல் போன கவிதைகள் – தொகுப்பில் சுருக்கமாக பேசுகிறார். அதையும் நேரிடையாக பேசுகிறார். தற்காலக் கவிதைக்கான உயர்ந்த குணங்கள் என்று போற்றப்படுகிற பூடகம், புதிர், மாயத்தன்மை, விளங்காத தன்மை, நவீனத்துவ கோசம் என்று எந்த வேடிக்கையையும் காட்டாமல் எழுதப்பட்ட கவிதைகள். மனதில் பட்டதை மட்டும் நெப்போலியன் எழுதவில்லை. சமூகத்திற்கு எது தேவையோ, எதை சொல்ல வேண்டுமோ அதைத்தான் கவிதைகளாக்கி இருக்கிறார். கவிதையை தனக்கு பரிச்சயமான மொழியில் எழுதியிருக்கிறார். கவிதைக்கு இதுவும் ஒரு அழகுதான். வெளிப்படையான தன்மை கவிதைகளின் பலகீனம் என்று சொல்ல முடியாது. யாருக்கும் புரியாத இருண்மை தன்மைகொண்ட கவிதைகளை எழுதுவதில் பெருமையும் இல்லை. எல்லாருக்கும் புரியும் கவிதை எழுதுவது சிறுமையும் இல்லை. மொழியின் எளிமை குறித்து நமது பார்வை சரியானதாக இல்லை. எளிமையாக சொல்வதையும் நேரடியாக சொல்வதையும்- எளிமையின் வலிமை புரியாமல் இளக்காரமாகப் பார்க்கவும் பேசவும் பழகியிருக்கிறோம். பழமையானது, காலாவதியானது என்று நாம் நம்பும் நம்பிக்கை பிழையானது. வடிவ ரீதியான பரிசோதனைக்காக நெப்போலியன் கவிதைகளை எழுதவில்லை. மாறாக முற்றிலும் நகரமயமான வாழ்வின் நெருக்கடிகள், நவீன வாழ்வின் அபத்தங்கள் இக்கவிதைகள் எனலாம். தான் பார்த்ததை, அனுபவித்ததை, வாழ்ந்ததை எழுதியிருக்கிறார்.
       இலக்கியப் பரிச்சயம் இருக்க வேண்டும். கவிதைகளைப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். அப்படி இல்லாதவர்களால் என் கவிதையைப் படிக்க முடியாது. என் கவிதையைப் புரிந்து கொள்ள முடியாது. நான்கு ஐந்துமுறை படித்தால்தான் என்கவிதை புரியும் என்று சொல்கிற கவிஞர் அல்ல நெப்போலியன். புரியாத கவிதைகள் நிறைந்த தொகுப்புமல்ல காணாமல் போன கவிதைகள். நெப்போலியனின் கவிதைகள் கற்பனையை மாய உலகத்தை, இழந்த பொன்னுலகத்தை, வரப்போகிற பொன்னுலகத்தைப் பேசவில்லை. மாறாக நிகழ்காலச் சமூகச் சிக்கல்களைப் பேசுகிறது. அறிவியலைப் பேசுகிறது. இன்று நாம் நம்முடைய பெருமையாகப் பேசுகிற, விளம்பரப்படுத்திக்கொள்கிற, சாதி, மத, இன அடையாளங்கள் உண்மையில் பெருமைப்படக்கூடியதுதானா என்று ‘ஆறாம் அழிவு‘ என்ற கவிதை கேள்வி எழுப்புகிறது. விந்து யாரோ கொடுக்கிறான். கருமுட்டை யாரோ கொடுக்கிறார். விந்துவையும் கருமுட்டையையும் யாரோ ஒருத்தி தன் கர்ப்பப்பையில் வைத்து வளர்த்து கருவாக்கி, உயிராக்கித் தருகிறாள். குழந்தை உருவாவதற்கு முதலீடு போட்டவரிடம் குழந்தையை ஒப்படைத்ததும் – அந்த குழந்தைக்கு சாதி வந்து விடுகிறது, மதம் வந்து விடுகிறது, இன அடையாளம் வந்துவிடுகிறது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் ஆறாம் அழிவு கவிதை. நம்முடைய சமூகம் யாரையெல்லாம் சமூக விரோதிகள், கொள்ளையர்கள் என்று சொல்கிறது? சொல்லியது? சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனையும், சம்பல் பள்ளத்தாக்கு பூலான்தேவியையும் கொள்ளையர்கள் என்று சமூகமும், ஊடகங்களும் அடையாளப்படுத்தின. வீரப்பனும், பூலான் தேவி மட்டும்தான் கொள்ளையர்களா? வாழ்வில் ஒருபோதும் சிகப்பாக மாறவே முடியாது என்று தெரிந்தும் – சிகப்பாக மாற முடியும் என்று கிரீம் தயாரிப்பவர்கள், அதை விளம்பரப்படுத்துகிறவர்கள் யார்? விவசாய நிலங்களையெல்லாம் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் யார்? நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களை நடத்திக்கொண்டிருப்பவர்கள் யார்? முற்றும் துறந்த சாமியார்கள், துறவிகளுக்கு எப்படி உலக நாடுகளில் யோகா கிளைகளும் கோடிக் கணக்கில் சொத்துகளும இருக்கின்றன? தங்க கட்டிகளை படுக்கையில் படர்த்தி வைத்து தூங்கியது யார்? மூன்று நான்கு தொலைக்காட்சி சேனல்களை யார் வைத்திருக்கிறார்கள்? உண்மையான கொள்ளைர்கள் யார்? உண்மையான சமூக விரோதிகள் யார்? என்று ஒரு கவிதை கேட்கிறது. கற்பனையை எழுதுகிற எழுத்தைவிட நிஜத்தை எழுதுகிற எழுத்துக்கு அதிக வலிமை உண்டு. இப்படி வலிமை நிறைந்த கவிதைகள் என்று வேடம், ஆத்தா, காயம், நாற்காலி, வாசல், நிறம், விளிம்பு, கறியாடுகள், மாற்றத்தின் காற்று என பல காணாமல் போன கவிதைகள் தொகுப்பில் இருக்கின்றன.
       நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் ஏன் நாளுக்குநாள் பெருகியபடியே இருக்கின்றன என்று ஒரு கவிதை கேட்கிறது. படித்த, நாகரீகமடைந்த, பண்பாட்டில் சீர்பெற்ற, பொருளாதார மேம்பாடு பெற்ற சமூகத்தில் முதியோர் இல்லங்கள் எப்படி உருவாக முடியும்? எது படித்த சமூகம், எது நாகரீகச் சமூகம், எது அறிவார்ந்த, பண்பாட்டில், நாகரீகத்தில் சீர்பெற்ற சமூகம் என்று கேட்பதற்காகத்தான் நெப்போலியன் கவிதையே எழுதியிருக்கிறார். கவிதைகள் ஏன் எழுதப்படுகின்றன, ஏன் படிக்கப்படுகின்றன என்பதற்கு சாட்சிகளாக பல கவிதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.
       வார்த்தைகள், சொற்கள் என்பது எவ்வளவு முக்கியமானது? சொற்களின் இயல்பை, தன்மையை, அதன் உண்மையான பொருளை உணர்ந்துதான் பேசுகிறோமா, எழுதுகிறோமோ என்று ஒரு கவிதை கேட்கிறது. குறிப்பாக கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகக்காரர்கள் சொற்களை சரியான பொருளில் சரியான விதத்தில்தான் பயன்படுத்துகிறார்களா? இன்று சராசரியாக ஒரு தமிழ் குடும்பத்தில் ஒரு நாளில் மட்டும் ‘சூப்பர்‘ என்ற சொல் குறைந்தது ஐநூறு முதல் ஆயிரம்முறை உச்சரிக்கப்படுகிறது. இப்படியான சமூகம் மொழியின் வளமை குறித்து பெருமை குறித்து பேசமுடியுமா என்று நெப்போலியனின் கவிதை ஒன்று கேட்கிறது. மொழிக்கான வளம், வலிமை என்பது அதன் இலக்கிய படைப்புகள்தான். இலக்கிய படைப்புகள் தரமாக இல்லாதபோது மொழி மட்டும் வளமாக இருக்குமா? இப்படி காணாமல்போன கவிதைகள் தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையும் நிகழ்கால சமூகத்தின் மிகவும் சிக்கலான பிரச்சினைகளையே மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. முக்கியமாக முந்தைய தலைமுறையினருக்கும், இன்றைய தலைமுறையினருக்குமான மனவேறுபாடுகள், அம்மாக்கள் அனாதைகளாக்கப்படுவது, அறிவியலும், பணமும், நாகரீகமும் எவ்வாறு மனிதர்களை தனித்தனி தீவுகளாக்குகிறது என்பதெல்லாம் வலியோடு பேசப்பட்டுள்ளது. நகர வாழ்வின் சிக்கல்களில் ஊழலும் மனதின் அவஸ்தைகள்தான் நெப்போலியனின் கவிதைகள். நகர மயம், தொழில் மயம், நவீன மயம், உலக மயம் என்பதெல்லாம் எப்படி மனிதர்களை தனித்த அடையாளமற்றவர்களாக, பணம், பொருள் என்பதைத்தாண்டி சிந்திக்க மறந்தவர்களாக, சுய அடயாளங்களை துறந்தவர்களாக எப்படி மாற்றியிருக்கிறது? மனிதனும் இன்று ஒரு பொருள்தான், பொருள்களை மட்டுமே தேடுகிற மனிதன், என்று ஒரு கவிதை நிரூபிக்க முயல்கிறது.
       இதெல்லாம் முக்கியமான விஷயமா என்று நாம் எளிதில் ஒதுக்கித்தள்ளி விடுகிற, புறக்கணித்துவிடுகிற, அலட்சியப்படுத்துகிற பல விஷயங்கள்தான் நெப்போலியனின் கவிதைக்கான மையமாக இருக்கிறது. நிகழ்கால பிரச்சினைகளை மட்டுமே பேசுவது இத்தொகுப்பின் சிறப்பு. கவிதைகளுக்கான வடிவத்தை கவிதைகளே முடிவு செயதிருப்பது மற்றொரு சிறப்பு. தனி மனிதனின் கண்ணீரைவிட, துயரத்தைவிட, இழப்பைவிட சமூகத்தின் கண்ணீர், துயரம், இழப்பு முக்கியமானது. நிஜமான கலைஞன் தனிமனித புலம்பல்களை, சோகங்களை எழுதமாட்டான். மாறாக சமூகத்தையே எழுதுவான். அந்த வகையில் நெப்போலியன் சமூகத்தின் எழுத்தாளராக இருக்கிறார்.
       காணாமல் போன கவிதைகள் புத்தகம் கண்களிலிருந்து மறைந்து போகலாம். கவிதைகள் மனதில் நிற்கும்.

   
காணாமல் போன கவிதைகள்
(கவிதை தொகுப்பு)
நெப்போலியன்.
தங்கதாய் வெளியீடு,
121 சாரதா நகர், மச்சுவாடி,
புதுக்கோட்டை.
விலை – ரூ.140.
·         Hindu Tamil Daily Dated 30.04.2014


செவ்வாய், 29 ஏப்ரல், 2014

நிஜமான கலைஞனின் எழுத்து-திலகவதி

நிஜமான கலைஞனின் எழுத்து-திலகவதி
தமிழகத்தில் ஆழிப்பேரலை ஏற்படுத்திய பேரழிவுக்கு மறுநாள் இரவு இமையத்தினுடைய மண்பாரம் என்கின்ற சிறுகதைத் தொகுப்பை படித்தேன்.  அன்று இரவு அத்தொகுப்பு என்னுடைய தூக்கத்தை விழுங்கிவிட்டது.  நான் 1994 முதல் இமையத்தினுடைய எழுத்துக்களை தொடர்ந்து படித்து வருகிறேன்.  அவருடைய கோவேறு கழுதைகள் தமிழில் இதற்கு இணையான நாவல் இல்லைஎன்று திரு.சுந்தரராமசாமி எழுதியபோது மற்ற வாசகர்களைப்போல நானும் அதிர்ந்து போனேன்.  அது மிகையான கூற்றென்று தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் கூச்சலிட்டபோது அக்கூச்சலை தவிர்ப்பதற்காக நான் நாவலை வாசித்தேன்.  அந்நாவலை வாசித்தபோது சுந்தரராமசாமியின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை அறிந்தேன்.  அந்நாவல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் தமிழில் வேறு எந்த நாவலும் ஏற்படுத்தவில்லை.  1994லிலிருந்து இன்று வரை அந்த தாக்கம் எனக்குள் இருந்துகொண்டு இருக்கிறது.  அதில் சிறுமாற்றம் ஏற்படவில்லை என்பது ஒரு நாவலுக்கான வெற்றி என்று நான் கருதுகிறேன். 
     இமையத்தினுடைய இரண்டாவது நாவலான ஆறுமுகம் தமிழ் சமூகத்திற்கு ஒரு புதிய வாழ்வை, புதிய அனுபவத்தை அறிமுகப்படுத்தியது.  அந்நாவலின் விமர்சனக்கூட்டத்தில் 1999ல் விருத்தாசலத்தில் நான் கலந்து கொண்டது நினைவுக்கு வருகிறது.  அப்பொழுது நாவல் குறித்து நான் பேசியதும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.  கோவேறு கழுதைகள் சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கக்கூடிய ஒரு பிரிவினரை சமூகத்தின் பொதுப்பார்வைக்கு கொண்டு வந்ததென்றால் அதே அளவுக்கு சமூகத்தின் இருண்ட பகுதியில் இருந்த ஒரு வாழ்வை பொது சமூகத்தின் பார்வையில் வைத்தது.  இந்த இரண்டு நாவல்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதொரு தமிழ் சமூகம் அறிந்த மறந்த ஒரு வாழ்வை மீண்டும் பொது சமூகத்தினுடைய கவனத்திற்கு கொண்டு வந்தார்.  செடல் நாவல் மூலமாக நாம் ஏற்கெனவே அறிந்திருந்த வரலாறு என்று நம்பியிருந்த பொய்மையை பொய்யென்று காட்டியது இந்நாவல்.  தமிழ், இந்திய சமூகம் காலங்காலமாக தனக்கென்று உருவாக்கி வைத்திருக்கும் தனி மனித-சமூக அறம், நீதிநெறிகளுக்கெதிரான அதே நேரத்தில் நிஜமான ஒரு சமூகத்திற்கான அர்த்தபூர்வமான ஒரு அறத்தையும், நீதிநெறிகளையும் இந்நாவலின் மூலமாக வெளிப்படுத்தியிருப்பதை ஒரு வாசகனால் உணர முடியும்.  இவருடைய நாவல்களுக்கு அடுத்த நிலையில் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல் என்ற மூன்று சிறுகதை தொகுப்புகளின் வழியே தன்னுடைய வாழ் அனுபவங்களை கலை இலக்கியப் படைப்புகளாக தந்திருக்கிறார்.  ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு வகையில் நம்மை துன்புறுத்துகின்றன.  நாம் பார்க்கத் தவறிய ஒரு வாழ்வை அவர் தன்னுடைய கதைகளின் வழியாக நமக்கு காட்சிப்படுத்துகிறார்.  இந்த காட்சிப்படுத்துதல் என்பது மற்ற எழுத்தாளர்கள் காட்சிப்படுத்தாத ஒன்று அல்லது காட்சிப்படுத்த தவறிய ஒன்று ஒரு கதையை படிப்பது என்பது நமக்குள் நாமே நம்மை பயணம் செய்வது.  ஒரு கலைப்படைப்பின் வெற்றி என்பது அது வாசகனுக்குள் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பொறுத்தே அமைகிறது.  ஒரு கடமைக்காக அன்றி முழு மன ஈடுபாட்டுன் நான் ஒரு கதையைப் படிக்கிறேன் என்றால் நிச்சயமாக அது இமையத்தினுடைய சிறுகதைகளாக இருக்கிறது.  இதற்கான காரணம் இமையத்தினுடைய சிறுகதைகள் காட்டுகின்ற உலகம் எனக்கு மிக நெருக்கமானதாக இருக்கிறது.  கதைகளில் வருகின்ற மனிதர்கள் கற்பனைகளில் உருவானவர்களாக இல்லாமல் நமக்குத் தெரிந்தவர்களாகவும் அறிந்தவர்களாகவும் ஒரு விதத்தில் நாமே அந்தப் பாத்திரங்களாக இருப்பது என்பதும் ஒரு கலைஞன் நமக்குத் தரக்கூடிய பெரிய உபசரிப்பாக இருக்கிறது.  இமையத்தினுடைய கதைகள் பலநேரங்களில் என்னைக் கண்ணீர் விட வைத்திருக்கிறது.  கூச்சப்பட வைத்திருக்கிறது.  இப்படியான ஒரு சமூகத்தில் நாம் வாழ்கிறோம் என்று வெட்கப்பட வைக்கின்றது.  இமையத்தின் கதைகளில் பெரும்பாலும் பெண்களே அதிகளவில் இடம் பெறுகிறார்கள்.  அப்பெண்கள் தங்களுடைய துயரத்தை வலியை வேதனையை கண்ணீராக சொற்களாக ஓயாமல் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள்.  இந்த சொற்கள் தேய்ந்துபோன சொற்கள் அல்ல, அர்த்தமிழந்த சொற்கள் அல்ல.  நம்மை அலைக்கழிக்கக்கூடிய சொற்கள்.  முகம் என்ற கதையில் வரக்கூடிய பெண்ணாக இருக்கட்டும், ஆசை கதையில் வரக்கூடிய பெண்ணாக இருக்கட்டும், வீம்பு, சொந்தவீடு ஆகிய கதைகளில் வரக்கூடிய பெண்கள் யாரோ அல்ல.  என்னுடைய உறவினர்கள்போல இருக்கிறார்கள்.  இந்த நெருக்கம்தான் ஒரு கதையினுடைய வலிமை என்று கூறலாம்.  இந்த கதைகள் தரக்கூடிய அனுபவம் என்பது வார்த்தைகளின் வழியாக விவரிக்க முடியும் என்று தோணவில்லை.  வலியை உணர முடியும்.  அன்பை உணர முடியும்.  ஆனால் அதை பருப்பொருளைப் போல வெளிக்காட்ட முடியாது.  அதேபோன்றுதான் ஒரு இலக்கியப்படைப்பு தரும் அனுபவம் என்பது நாம் உணரக்கூடியது.  நம்முடைய உணர்வுகளில் ஏற்படும் மாற்றம்தான் நிஜமான கலைஞன் ஏற்படுத்தும் மாற்றம்.     

     தமிழில் இன்று நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.  அந்த குவியலிலிருந்து ஒரு வாசகனாக ஒரு நூலைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது என்பது அயர்ச்சித் தரக்கூடியதாக இருக்கின்றது.  ஆனால் இமையத்தினுடைய சிறுகதைகள் நம்மை புதுஉலகத்திற்குள் இட்டு செல்கிறது.  அந்த உலகம் நம்மை கலைப்படைய செய்வதில்லை.  மாறாக நாம் வாழ்கிற காலத்தையும் சமூகத்தையும் உற்றுநோக்கக்கோறுகிறது.  இந்த உற்றுநோக்குதல் வழியாக சமூகம் குறித்த நாம் வாழும் காலம் குறித்த புதிய பார்வையை, புதிய வெளிச்சத்தை இமையத்தினுடைய கதைகள் காட்டுகின்றன.  இந்த வேறுபாடுதான் பிற எழுத்தாளர்களின் எழுத்திலிருந்து இமையத்தினுடைய எழுத்துக்கள் வேறுபடுகின்றன.  இமையத்தினுடைய எழுத்துக்கள் பல்வேறு அரசியல் காரணங்களினால், சமூக சூழல் காரணமாக போதிய வெளிச்சம் பெறாமல் இருக்கலாம்.  அவர் வெளிச்சத்தை நோக்கி நகராதவராக இருக்கலாம்.  ஆனால் அவருடைய எழுத்துக்கள் என்றும் வாசகனுடைய மனதை உலுக்கி எடுப்பவையாக இருக்கின்றன.  விமர்சனம் என்பது கதை சொல்வதல்ல. 

இமையத்தின் படைப்புலகம்.

இமையத்தின் படைப்புலகம்.
மூன்று பேர் – மூன்று பார்வைகள்.

இமையம்: என் காலத்து எழுத்தாளன்
-அ.ராமசாமி.
தொடர்ச்சியாகத் தனது அடையாளத்தை தன் எழுத்தின் வழியே தக்க வைத்து வருபவர் இமையம். கடந்த 20 ஆண்டுகளாக எழுதி வரும் இமையம் கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல் என மூன்று நாவல்களையும் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல் என மூன்று சிறுகதைத் தொகுதிகளையும் தனது புனைகதை எழுத்தாகத் தந்துள்ளார். இந்த ஆறு நூல்களையும் தமிழின் மிக முக்கியமான பதிப்பகம் க்ரியா வெளியிட்டுள்ளது. க்ரியாவின் எழுத்தாளர் என்ற அடையாளமே தமிழின் முக்கியமான அடையாளம்தான்.    
இமையத்தின் மூன்று நாவல்களில் கோவேறு கழுதைகளும் செடலும் தமிழ்நாட்டின் வடபகுதிப் பேச்சு மொழியை வெளிப்பாட்டுக் கருவியாகக் கொண்டவை என்றும், அந்த வட்டாரத்து மனிதர்களின் வாழ்க்கைச் சித்திரம் என்றும் தோன்றலாம். ஆனால் அவற்றின் மையப் பாத்திரங்களான ஆரோக்கியமும் செடலும் மனித வாழ்வின் - குறிப்பாகத் துயரார்ந்த இந்தியப் பெண்களின் வகைமாதிரிகள், சடங்கியல் சார்ந்த நம்பிக்கைகளாலும், விதிக்கப்பெற்ற வாழ்க்கையை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டாத இந்தியப் பெண்களின் துயரத்தையும் தமிழில் எழுதியதில் அண்மைக்காலச் சாதனையாளராக இமையமே முன் நிற்கின்றார். அதிலும் செடல் நாவலின் கட்டமைப்பும் பாத்திர வார்ப்புகளும் தமிழின் ஒப்பற்ற பேரிலக்கியமான சிலப்பதிகாரம் தரும் உணர்வையும் ஈர்ப்பையும் அளிக்கவல்ல மாபெரும் படைப்பு.
உலக இலக்கியத்தின் பொதுமைக்கூறுகளை உள்வாங்கித் தன் நிலத்தின் பரப்பின் மீதும் மொழியின் மீதும் ஆழமான பிடிமானத்துடன் செயல்படும் இமையத்தின் சிறுகதைகள் கடந்து வந்துள்ள கட்டங்கள் முக்கியமானவை. ஒற்றைக் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி விட்டு அது இயங்கும் வெளியை விவரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்திய தொடக்ககாலக் கதைகளிலிருந்து அண்மைக்காலக் கதைகள் நவீனத் தமிழ்ச் சமூகத்தின் சிடுக்குகளையும் சிக்கல்களையும் பேசுபவனவாக மாறி இருக்கின்றன. அவர் எழுத வந்த காலத்தின் போக்கோடு இணைந்து பயணம் செய்யும் எழுத்தாளராக இந்தக் கதைகள் அவரை அடையாளப் படுத்துகின்றன. தன் பார்வைக்குள் படும் வட தமிழ் நாட்டுக் கிராமங்களின் வாழ்க்கையின் பகுதியாகவே தன் கதை வெளிகளையும் பாத்திரங்களையும் தெரிவு செய்யும் இமையம் ,அந்தக் கதைகள் எழுப்பும் பிரச்சினைகளை அந்தப் பகுதிகளுக்கு உரியதாக மட்டும் வைத்திருப்பதில்லை என்பது மிக முக்கியமான ஒன்று. இந்தக் காரணங்களுக்காகவே இமையத்தின் கதைகள் வட்டார மொழியில் எழுதப்பட்ட போதும் வட்டார எழுத்து என்ற அடையாளத்தைத் தகர்த்து இந்திய எழுத்தாகவும் உலக எழுத்தாகவும் கவனம் பெற வேண்டியனவாக இருக்கின்றன. சமூகத்தில் நிலவும் வேறுபாடுகள் சார்ந்து ஒடுக்கப் படுகிறவர்களின் துயரத்தை எழுதும் படைப்பாளிகள் கவனம் கொள்ள வேண்டிய அம்சம் இது. இமையத்தின் கதைகள் சமகாலத்தின் மீதான விமரிசனங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. நம் காலத்தின் முக்கியமான இரண்டு பிரச்சினைகளை அவரது அண்மைக் காலக் கதைகளில் வாசித்திருக்கிறேன். உலகமயப் பொருளாதாரத்தின் வரவுக்குப் பின்னால் நமது கிராமங்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று  நிலமிழப்பு. ஒன்றிரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கும் சிறுவிவசாயிகள் தங்கள் நிலங்களை விவசாயமல்லாத வேறு காரியங்களுக்கு விற்றுவிட்டு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்திலிருந்து வந்தவன் என்ற வகையில் எனது நேரடி அனுபவம் இது. ஆனால் வேதனையையும் வலியையும் மறைத்துக் கொண்டு விடாப்பிடியாக நிலத்தை விற்க மறுக்கும் இரண்டு மனிதர்களை தனது இரண்டு கதைகளில் எழுதிக் காட்டியிருக்கிறார் இமையம்.
அந்த இருவருமே வயதானவர்கள். தங்களின் தேவை அன்றாட உணவு மட்டுமே என நினைக்கும் பழைய மதிப்பீட்டு மனிதர்கள். பணம் முக்கியமில்லை; எனக்குத் தேவையான வரகுச் சோறைத் தரும் இந்த நிலம் தான் எனக்கு முக்கியம் என நினைக்கும் தங்கம்மாளைத் தனது சோறுபணம் கதையில் சந்திக்க வைத்தார். அவளை ஒத்து இன்னொரு வயதானவரைஉயிர்நாடி கதையில் எழுதிக் காட்டியிருந்தார். உலக மயத்தின் வரவால் ஊதிப் பருத்துக்  கொண்டிருக்கும் ரியல் எஸ்டே தொழிலைப் போலவே நகரங்களில் மானாங்கண்ணியாக வலைய வரும் ஒரு வர்க்கமாக இருப்பவர்கள் தகவல் தொழில் நுட்பக் கூலிகள் (ஐ.டி). முகமறியாத மனிதர்களால் முகம் பார்க்காமலேயே தேர்வு செய்யப்படும் கூலிகளாக மாறும் இளையவர்கள் எதைப் பெறுகிறார்கள்; எதை இழக்கிறார்கள் என்பதைச் சொல்லும் வேலை, ஃபேமிலி  கதைகளை எழுதி வாசகர்களுக்குத் தந்துள்ள இமையம் என் காலத்தின் எழுத்தாளராக இருக்கிறார். 2012 இல் அச்சில் வந்த தமிழ் புனைகதை எழுத்துகளில் அதிகம் வாசிக்கப் பெற்ற கதையாக மட்டுமல்ல; விவாதிக்கப்பெற்ற கதையாகவும் அமைந்தது இமையத்தின்   பெத்தவன்    நெடுங்கதை. தமிழின் மிக முக்கியமான எழுத்தாளராக இருக்கிறார் இமையம். காலம் தந்த பரிசு அவருடைய கதைகள்.


தமிழ் இந்திய சமூகத்தின் வாழ்வு இமையத்தின் எழுத்து
                                                                        - திலகவதி
             இமையம் என்ற எழுத்தாளரை 1994 இல் வெளிவந்த கோவேறு கழுதைகள் நாவல் மூலம் அறிந்தேன். அந்நாவல் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஆனால் சமூகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கக்கூடிய வண்ணார் இனத்தைச் சார்ந்த எளிய மக்களின் வாழ்வை எந்த ஆடம்பரமும் இல்லாமல் வாழ்வை அதன் போக்கிலேயே மிகவும் நேர்மையாக மட்டுமல்ல நேர்த்தியாகவும் பதிவு செய்திருந்தார்.  அந்நாவல் குறித்து தமிழில் இதற்கு இணையான மற்றொரு நாவல் இல்லை என்று எழுத்தாளர்  சுந்தரராமசாமி எழுதியிருந்தார்.  அது மிகையான கூற்று அல்ல என்பதை கோவேறுகழுதைகள் நாவலை படித்தவர்கள் உணருவார்கள்.  அந்நாவல் வந்து பத்தொன்பது ஆண்டுகளாகிவிட்டது.  ஆனாலும் அந்நாவல் குறித்த பேச்சு, சர்ச்சை விவாதம் இன்றும் தொடர்கிறது.  விற்பனையும் அதிகரித்துவருகிறது.  இலக்கிய உலகில் குறிப்பாக தமிழ் இலக்கிய உலகில் இது அபூர்வமாக நிகழ்ந்த ஒன்று.  ஒரு எழுத்தாளனுக்கு, ஒரு கலைஞனுக்கு இதைவிட அங்கீகாரம் வேறு என்ன இருக்க முடியும்?
                இமையத்தின் இரண்டாவது நாவல் ஆறுமுகம். கோவேறுகழுதைகள் நாவலில் கிராமம், அதனுடைய உண்மையான வாழ்க்கை முறையை எவ்விதமான குறுக்கீடுமின்றி அசலான இலக்கிய படைப்பாக எழுதிய இமையம்.  ஆறுமுகம் நாவலில் நகரம் அதன் இயங்குமுறை தீமைகள் குடும்பச் சிதைவுகள், ஆங்கில கல்வி, நாகரீகம்  என்று வருகிற அதே நேரத்தில் நகரங்களில் சேரிப் பகுதிகள் உருவாகவும் செய்கின்றன.  இமையத்தின் கண்கள் சேரிப்பகுதிகளில் மையம் கொள்கிறது.  பாண்டிச்சேரி, அதையொட்டி அமைந்துள்ள ஆரோவில், அதைச்சுற்றியுள்ள கிராம வாழ்க்கை முறை, தொழிற்சாலைகளின் பெருக்கம், அங்கு குறைந்த ஊழியத்தில் இளம்பெண்கள் பணிபுரிவது, உழைப்பு சுரண்டல் மட்டுமல்ல பாலியல் வன்முறைகள் என்று இளம்பெண்கள் அனுபவிக்கும் இடர்கள் என்று நாவல்விரிகிறது.  குறிப்பாக பாலியல் தொழிலாளர்கள் அவர்கள் வாழும்விதம், அவர்களுக்கிடையிலான தொழிற்போட்டிகள், ஆண்களின் வக்கிரச் செயல்கள், பாலியல் தொழிலில் வாடிக்கையாளர்களை அழைத்துவரும் சிறுவர்கள்-சிறுமிகள்.  எதுவும் மிகை அல்ல.  வாழ்வை அதன் நிஜத்தன்மைக்கு பங்கம் ஏற்படாமல் இலக்கிய அழகியல் குறையாமல் இமையம் எழுதியிருப்பார்.  ஒரு தேர்ந்த எழுத்தாளன் தோற்றுப்போகக்கூடிய தருணங்களில் இமையம் அதுமாதிரியான சந்தர்ப்பங்களை மிக இயல்பாக, மிக லகுவாக தாண்டிச்செல்வார்.  நல்ல கலைஞர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.  இமையம் கலைஞன்தான், சந்தேகமில்லை.
                ஒரு எழுத்தாளனாக, கலைஞனாக, உச்ச நிலையை இமையம் தொட்டது அவருடைய மூன்றாவது நாவலான செடலில்தான்.  இந்திய தமிழ்ச்சமூகத்தின் அசலான முகம் எது, நாம் நமக்கான பெரும் செல்வமாக கருதுகிற நம்முடைய மரபுகள், புராண, இதிகாச, ஐதீக கதைகளின் முகத்தை செடல் நாவல் மூலம் காட்டித்தருகிறார்.  ஒரு வரலாற்றை பொய்யென காட்டிய நாவல் இது.  இந்நாவலில் வரக்கூடிய தாழ்த்தப்பட்ட இனத்து மக்களிலேயே தாழ்த்தப்பட்ட இனமாக இருக்கக்கூடிய கூத்தாடி இனத்தைச் சார்ந்த செடல் - என்ற சிறுமி கிராம சிறுதெய்வத்திற்கு பொட்டுக்கட்டிவிடப்படுகிறாள்.
                செடல் என்ற சிறுமியின் வாழ்க்கையின் வழியாக- நாவல் அவளுடைய வாழ்க்கையை மட்டும் விவரிக்கவில்லை.  அவள் வாழ்ந்த சமூகத்தின் வாழ்வை அக்காலத்தின் வாழ்வை, அச்சமுகத்தின் வாழ்வை ஒளிவு மறைவின்றி, விருப்புவெறுப்பின்றி எழுதியிருப்பார்.  நாவல் மேலும் ஒரு விரிவான தளத்திற்கு  செல்கிறது.  பொட்டுக்கட்டிவிடப்பட்ட பெண்களின் வாழ்க்கை, தெருக்கூத்துக்காரர்களின் வாழ்க்கை, தெருக்கூத்தின் அழகியல் கூறுகள், பசி, வறுமை, சாதிய ஒடுக்குதல்கள் என்று நாவல் விரிகிறது.
                செடல் நாவல் காட்டும் உலகம்தான்.  இந்திய தமிழ்ச் சமூகத்தின் உலகம் வாழ்க்கை.  ஒரு எழுத்தாளனாக இமையம் வாழ்க்கையை அணுகியிருக்கும் விதம் பிரமிப்பு ஊட்டுவதாக இருக்கிறது.  உலகத்தரமான நாவல் இது.  மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல் ஆகிய மூன்று சிறுகதை தொகுப்புகளை இமையம் இதுவரை எழுதியிருக்கிறார்.  கடந்த இருபதாண்டுகளில் தமிழில் வெளிவந்த மிகசிறந்த தொகுப்புகள் இவை என்று சொல்வதில் எனக்குத் தயக்கமில்லை.  2012-ல் வெளிவந்த இமையத்தின் பெத்தவன் என்ற நெடுங்கதை இதுவரை முப்பதாயிரம் பிரதிகள் விற்றுள்ளது.  இது தமிழ் இலக்கிய உலகில் அபூர்வநிகழ்வு.  பெத்தவன் மட்டுமல்ல இமையத்தின் ஒவ்வொரு சிறுகதையுமே வாசகர் மனதை உலுக்கி எடுக்க வல்லவைதான்.  உயிர்நாடி, வேலை, திருட்டுப்போன பொண்ணு, பேராசை போன்று எல்லாக் கதைகளுமே சிறுகதைக்கான இலக்கணத்தோடு, அழகியலோடு, சமூகத்தின் நிஜமான முகத்தை காட்டுவதாகவே இருக்கிறது.  மூன்று தொகுப்பிலும் மொத்தம் நாற்பது கதைகளே இருக்கின்றன.  ஒவ்வொரு சிறுகதையும் எவ்வளவு முக்கியமானது சாலப்பொருத்தமானது என்பதைவிட வாசகர்களின் அனுபவமாக ஒவ்வொரு கதையும் எப்படி மாறியிருக்கிறது என்பதை படித்தவர்கள் உணருவார்கள்.  இட்டுக்கட்டியது, கற்பனையானது என்று எதையும் இமையத்தின் எழுத்துக்களில் காட்டமுடியாது.
                இமையம் என்ற எழுத்தாளனை நான் தொடர்ந்து வாசித்துக்கொண்டு வருகிறேன்.  இருபது ஆண்டுகளாக ஒரு வாசகனை ஒரு எழுத்தாளன் பின் தொடர்ந்து வரச்செய்யமுடியுமா என்றால் முடியும் என்றுதான் இமையத்தின் எழுத்துக்கள் நிரூபித்து இருக்கின்றன.  இமையத்தின் எழுத்துக்களில் அலங்காரம் இருக்காது, மொழிக்கவர்ச்சி இருக்காது, மாயஜால வித்தைகள் இருக்காது, மாறாக வாழ்க்கை அசலான வாழ்க்கை இருக்கும்.  ஒரு சமூகத்தில் எழுத்தாளனின் கடமை என்ன, வேலை என்ன என்பதை இமையத்தின் எழுத்துக்கள் காட்டுகின்றன.  எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத எழுத்து.  தொலைக்காட்சியின் ஆதிக்கம் மேலோங்கியிருக்கிற இன்றைய காலக்கட்டத்திலும் இலக்கிய ஆக்கங்கள் தொடர்ந்து படிக்கப்படுகிறது என்றால் அதற்கு இமையம்  போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்கள்தான் காரணம் சாட்சி.                                                                                                                                                                                                                                                               

அபூர்வமான படைப்பாளி – இமையம்.
                                                                 நா. ரமணி.
     இமையத்தின் முதல் நாவல் கோவேறு கழுதைகள். இதில் வரும் முக்கியமான பெண், வண்ணாத்தி ஆரோக்கியம். கால மாற்றத்தால் ஏற்பட்ட அவளது துயரங்களும் அல்லற்பாட்டு ஆற்றாது புலம்பி அழுத கண்ணீரும்தான் கோவேறு கழுதைகள். எத்தனை வகை மாதிரியான பேச்சுகள் – ஆறுதல் தரும் பேச்சு ஆணவப்பேச்சு, ஆதங்கமான பேச்சு, சண்டை கண்டணப் பேச்சுகள், சுய புலம்பல் பேச்சு நெகிழ்ந்து பாட்டாகி விடுதல், வன்புணர்ச்சிக்கு ஆளாகும் கையறு நிலையில் ஓரிரு சொற்றொடர்களில் மட்டுமே வரும் மேரியின் மனதைப் பிழியும் கெஞ்சல். பேச்சு மொழிக்குள்ளிருக்கும் ஆகக்கூடிய வல்லமை இமையத்தால் இந்நாவலில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
      கோவேறு கழுதைகள் இடம்சார்ந்து ஒரு சிறிய கிராமம். இரண்டாவது நாவலான ஆறுமுகத்தில் இடம் விரிவடைகிறது. இதில் வரும் தனபாக்கியம் அழகானவள். தன் காதல் கணவனை இழந்துவிட்ட நிலையில், அவனைப் போன்றேயிருக்கும் தன் மகன் ஆறுமுத்தை வளர்த்து ஆளாக்க வேலைக்குச் செல்கிறாள். பாலியல் உறவு பிரச்சனையாக முளைக்கிறது. இதனால் அவளுக்காகவே வாழும் தந்தை முத்துக்கிழவன் தற்கொலை செய்துகொள்கிறார். மகன் ஆறுமுகம் வீட்டைவிட்டு ஓடிப்போகிறான். இநத் ஓடிப்போதலின் பயணம் நாவலை இட, மக்கள், வாழ்வு சார்ந்த விரிந்த தளத்தில் செல்லவைக்கிறது. இறுதியில் வரும் தனபாக்கியத்தின் தற்கொலை, பிற மரணங்கள் சார்ந்து இந்நாவலில் இமையம் வாழ்வு, போராட்டம், மரணம் பற்றிய ஆய்வை படைப்பாக முன்வைத்துள்ளார்.
      மூன்றாவது நாவலான ‘செடல்‘ உயர்வகுப்பு மக்களுக்கான கோயில்களுக்கு குறிப்பிட்ட இனப்பெண்கள் பொட்டுக்கட்டி விடப்பட்டதைப் போல் கிராமத்து சிறு கோயில்களில் தாழ்த்தப்பட்ட இனச் சிறுமிகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு ‘சாமி பிள்ளை‘யாக பொட்டுக்கட்டி விடப்படும் சிறுமிதான் செடல். சாமிபிள்ளையான அவள் அவளது ஊரிலேயே வயதுக்குவந்த அந்தப் பொழுதில், கொட்டும் மழையில் ஆதரவின்றிப் புறக்கணிக்கப்படுகிறாள். அதனால் ஊரைவிட்டு வெளியேறும் அவள் நாவலின் போக்கில் கூத்துக்கலைஞர்களால் ஆதரிக்கப்படுகிறாள். கூத்துக்கலையில் திறமைசாலியாகி விடுகிறாள். ஒரு பெண்ணின் தனிமையான வாழ்வு – குறித்த பார்வை நாவல் முழுவதும் விரவிச் செல்கிறது. கிராம விழாக்களில் புராண மாந்தர்களின் வேஷம் கட்டியும், இறப்புகளில் வேஷம் கட்டாமலும் கூத்தை ஆட்டமும் பாட்டுமாக கோலோச்ச வைத்திருக்கிறார் இமையம். இறுதியில் ‘செடல்‘ கூத்துக்கலைக்கான அர்ப்பணிப்பாக நிறைவு கொள்கிறழது. (செடல் நாவலின் வழி பொட்டுக்கட்டுதல் குறித்து தமிழகச் சட்டப் பேரவையில் பேசப்பட்டது)
      இமையத்தின் சிறுகதைத்தொகுதிகள் – மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், நெடுங்கதை, பெத்தவன். எளிய வேளாண்மையில் சூல்கொண்டவை இவரது மண்பாரம் போன்ற ஆரம்பகாலச் சிறுகதைகள். நிலவொளியின் வனப்புகளும் எளிய கிராம மக்களின் உழைப்பும் இயற்கையுடனான போராட்டமும் கொண்டவை. கிராமச் சிறுவர்களின் விளையாட்டும் மனோபாவங்களும், அனுபவங்களும் இவரது பல சிறுகதைகளில் தனித்துவம் கொண்டிருக்கிறது.
      நகர் வாழ்வின் நகர்வு கிராமங்களில் புகுந்து இடைவினை புரிவது வீடியோ மாரியம்மன், உர்நாடி (நிலமும், வீட்டடி மனைக்குமான முரண்) போன்ற பல கதைகளில் ஊடுறுவி நிற்கிறது.
      ‘பெத்தவன்‘ நெடுங்கதை சமகால எரியும் ஜாதி- காதல் பிரச்சனையை முன்வைக்கிறது. இக்கதையின் வீச்சு சமூகத்துக்குள் பாய்ந்திருப்பதால் இன்றும் கூட இமையம் போன்றோரின் பேனா வலிமையானதுதான்.
      இமையத்தின் மொத்தப்படைப்புகளையும் உள்வாங்கும்போது இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் நவீனப் பாங்கையும் சமூக அறம் நோக்கி அது மேலும் விரிவடைவதையும் அறியலாம். மேலும்மேலும் எதிர்பார்ப்பதற்குரிய அபூர்வமான படைப்பாளியாக அவரை நம்பலாம். 


புதன், 23 ஏப்ரல், 2014

20.04.2014 அன்று திருவள்ளுர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராதவிதமாக ரவிக்குமாரினுடைய சிறுகதைத் தொகுப்பான கடல் கிணறு அச்சாகி வந்தது. புத்தகம் கையில் கிடைத்த போது திருநின்றவூர் என்ற இடத்தில் பிரச்சாரத்தில் இருந்தார். புத்தகம் வந்த மறுநிமிடமே அதே இடத்தில் புத்தகம் வெளியிடப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி வெளியிட நான் பெற்றுக்கொண்டேன்.
ரவிக்குமார் அரசியல் கட்சி சார்புடையவராக இருந்தாலும் வேட்பாளராக இருந்தாலும் அவருடைய மனம் எப்போதும் இலக்கியம் சார்ந்தே இயங்குகிறது என்பதற்கு இந்த புத்தக வெளியீடு நல்ல சான்று.

திங்கள், 14 ஏப்ரல், 2014

அண்ணல் அம்​பேத்கர் அவர்களின் 123வது பிறந்த தினத்தின் ​போது மா​லை அணிவித்து உ​​ரையாற்றிய​போது....