வியாழன், 6 நவம்பர், 2025

தொல்குடி கலைகளைப் பாதுகாக்கும் முதலமைச்சர்

 

“செழுமை மிக்க சமூகமாகச் சங்ககாலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒரு இனம் கடந்தகால வரலாற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்; அதை ஆவணப்படுத்தி, வருங்காலத் தலைமுறையினருக்குச் சொல்லித் தர வேண்டும். எத்தகைய சிறப்புமிக்க வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்ற பெருமிதம் நமக்கு வர வேண்டும்”

மு.க. ஸ்டாலின்

வரலாற்று அறிவை மட்டுமல்ல, சமூக, பண்பாட்டு, கலாச்சார அறிவையும் இன்றைய தலைமுறையினர் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, ‘ஆதி கலைக்கோல்’ என்ற மாபெரும் பண்பாட்டு விழாவைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நடத்தி வருகிறார். ‘ஆதி கலைக்கோல்’ விழாவில் ஆதிகுடிகளின் கலை, பண்பாட்டு மரபு சார்ந்த இசை, நடனம், பாட்டு, கூத்து போன்ற துறைகளின் பொருட்களைக் காட்சிப்படுத்தியதோடு தெருக்கூத்து, பாவைகூத்துக் கலைஞர்களும் வரவழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். கலைஞர்களைப் பாதுகாப்பதும், அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதன் மூலமே அந்தக் கலைகளைப் பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். அந்த நம்பிக்கையில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். ‘ஆதி கலைக்கோல்’ போன்ற ஒரு பண்பாட்டுத் திருவிழாவை இந்திய அளவில் இதுவரை எந்த மாநில முதலமைச்சரும் நடத்தியதில்லை.

படிப்பு என்பது பாடத் திட்டத்தைப் படிப்பது மட்டுமே அல்ல, சமூகத்தையும், பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் படிப்பதுதான் உண்மையான கல்வி. நாம் வாழும் சமூகத்தையும், அதன் முந்தைய வரலாற்றையும் அறிவதுதான் சமூகப் படிப்பு. ‘படிக்காதே’, ‘படிக்கக் கூடாது’ என்பது ஆரியர் பண்பாடு. ஆனால், ‘படி’ என்று சொல்வது மட்டுமல்ல, எல்லோரும் படிக்க வேண்டும் என்பது தமிழர் பண்பாடு. அதனால்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், “படி, படி, படி, அதற்குத் துணையாக இந்தத் திராவிட மாடல் அரசு என்றும் துணையாக இருக்கும்” என்று அறிவித்திருக்கிறார். நம்முடைய வேர்களைத் தேடிச் செல்ல வேண்டும். நம்முடைய ஆதிகுடிகளின் பண்பாட்டு விழுமியங்களை மீட்டெடுத்து, அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அப்படிப் பாதுகாப்பதன் மூலம் மட்டுமே நமக்கான அடையாளத்தைப் பாதுகாக்க முடியும், தனது வேர்களை இழந்த சமூகம் உலகில் மேம்பட்ட சமூகமாக இருக்க முடியாது. 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து கலை, இலக்கியம், மொழி, பண்பாட்டு, தொல்லியல், கல்வெட்டியல் போன்ற துறைகள் புது வெளிச்சம் பெற்று வருகின்றன. ஒரு அரசு சமூக நலத் திட்டங்களை மட்டுமே நிறைவேற்றுவது முக்கியமல்ல, சமூக, பண்பாட்டு வாழ்வியலை, அதற்குரிய பண்பாட்டு நகர்வுகளை, மறு உருவாக்கங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் விரும்புகிறார். கீழடி, கொடுமணல் ஆதிச்சநல்லூர், சிவகலை, மயிலாடும்பாறை, கொற்கை, அழகன் குளம் போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கிடைத்த பொருட்களைக் காட்சிப்படுத்தி, தமிழர்களுடைய நாகரிகம் எத்தனை பழமையானது என்பதையும் அதன் செழுமையையும் உலகறியச் செய்திருக்கிறார். கீழடியில் உலகமே வியந்து பார்க்கும் வகையில் தொல்லியல் அருங்காட்சியகத்தை அமைத்திருக்கிறார். மேலும், புதிதாக ஏழு இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறார்.

‘ஆதி கலைக்கோல்’ பண்பாட்டு நிகழ்வின் நோக்கம் தெளிவானது. நம்முடைய சமூக மனப்பதிவில் உயர்ந்த சாதியினர் பாடினால் அது உயர்ந்த பாடல்; நாடகம் நடத்தினால் அது உயர்ந்த நாடகம்; நடனம் செய்தால் அது உயர்ந்த நடனம்; மற்றவர்கள் எழுதினால் அது உயர்ந்த இலக்கியம்; மற்றவர்கள் பேசுவது உயர்ந்த மொழி; நாகரிக மொழி. மற்றவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் உயர்ந்த பொருட்கள். ஆனால், இம்மண்ணின் பூர்வகுடி மக்களான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எதைச் செய்தாலும் அது இழிவானது என்ற கருத்தாக்கம் சமூகத்தில் எப்படி உருவானது, நிலை பெற்றது? ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் பேசுவது, நாகரிகமற்ற மொழி, இழிவானது, நீசபாஷை. 

கூத்தில், நாடகத்தில், நடனத்தில், பாட்டில், இசையில், வாத்தியக் கருவிகளில் மேலானது, கீழானது என எப்படி இருக்க முடியும்? சமூகத்தின் பெரும்பான்மையான மக்களின் கலைச் செயல்பாடுகள் இழிவானவை என்றும், சமூகத்தில் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய மக்களுடைய கலை, பண்பாட்டுச் செயல்பாடுகள் மட்டுமே உயர்வானவை என்றும் சமூகம் நம்பி வருகிறது. அந்தத் தவறான நம்பிக்கையை உடைக்கத்தான் ‘ஆதி கலைக்கோல்’ பண்பாட்டு நிகழ்வைத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நடத்திவருகிறார். இதை ‘எதிர்’ செயல்பாடாகக் கருத வேண்டியதில்லை. வரலாற்று உண்மையை நிரூபிக்கும் செயல் என்று கொள்ள வேண்டும். நம்முடைய மரபில் சாதி எப்போது தோன்றியது, சாதியோடு சேர்த்து கலைகளையும் இணைத்துப் பார்க்கும் வழக்கம் எப்போது வந்தது என்பதை ஆராய வேண்டும். நம் நாட்டில் கலையைக் கலையாகப் பார்க்காமல் சாதியாகப் பார்க்கும் பழக்கம் இயல்பல்ல, அது சமூக வன்முறையின் வெளிப்பாடு. 

உலகெங்கும் அறிவை அறிவாக, திறமையைத் திறமையாக, இலக்கியத்தை இலக்கியமாக, ஓவியத்தை ஓவியமாக மட்டுமே பார்க்கிறார்கள். சிற்பம், சினிமா உள்ளிட்ட அனைத்துக் கலைகளையும் கலையாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் அறிவு, திறமை, இலக்கியம், ஓவியம், சிற்பம், நடனம், இசை போன்ற துறைகள் என்று எதுவாக இருந்தாலும், சாதியோடு இணைத்துப் பார்க்கும் மனப்போக்கும், சமூகப் போக்கும் இருக்கிறது. 

‘ஆதி கலைக்கோல்’ முதல் நிகழ்வு 2024 டிசம்பர் 2 அன்று சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தொன்மையான கலைகள், கலாச்சாரம், இலக்கியம், வரலாறு, புத்தகக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, இசைக் கருவிகள் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. பழைய 42 இதழ்களும், குறும்பர், தோடா பழங்குடியின மக்களின் அன்றாட வாழ்க்கைக் குறித்த, பழைய இசைக் கருவிகள் 1000க்கும் மேற்பட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இரண்டாவது நிகழ்வு 2025 செப்டம்பர் 22, 23, 24 ஆகிய தேதிகளில் மூன்று நாள் நிகழ்வாக, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினை மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் முதன்மையான பேசுபொருளாக இருந்தது, இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் விதத்தில் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. கரகம், சிலம்பாட்டம், தெருக்கூத்து, பாவைக் கூத்துகளும் நிகழ்த்தப்பட்டன. சாதிய மேட்டிமைத்தனத்தால் நமது பாரம்பரியமான 300க்கும் மேற்பட்ட நிகழ்த்துக் கலைகளை இழந்துள்ளோம்; இருக்கிற கலைகளையும் இழக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ஆதி கலைக்கோல்’ நிகழ்வை நடத்துகிறோம் என்று மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் குறிப்பிட்டது மிகவும் முக்கியமானது. 

இந்த ஆண்டு நடைபெற்ற ‘ஆதி கலைக்கோல்’ நிகழ்வில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது பழங்காலத்துப் பொருட்களின் கண்காட்சிதான். உழவுக் கருவிகள், வேட்டைக் கருவிகள், இசைக் கருவிகள், ஓவியங்கள், அணிகலன்கள், விளையாட்டுப் பொருள்கள், மண்பாண்டங்கள் (முதுமக்கள்தாழி) போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக, கி.மு.600 – கி.மு. 2200 காலத்தில் பயன்படுத்திய பொருட்களும்கூட இடம்பெற்றிருந்தன.

வாய்மொழி இசை, கருவி இசை என்று இருக்கிறது. கருவி இசையில் நான்கு பிரிவுகள் இருக்கிறது. அந்த நான்கு பிரிவுகளுக்குமான கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. துளையிசைக் கருவிகளான குழல், சங்கு, கொம்பு; கஞ்சிராக் கருவிகளான தாளம், கைத்தாளம், சிறிய தாளம், சிரட்டைத் தாளம், சிலம்பு; நரம்பிசைக் கருவிகளான யாழ், கின்னரம்; தோல் கருவிகளான பறை, முரசு, தண்ணுமை, திமிலை, தமுக்கு, டொக்க, கயம்ப, உடு, டமருசம், ஒத்தை, மகுடி, பெப்பா, உடுக்கை, ஊது கொம்பு, எக்காளம், துக்கரி, சாலரா, சேகண்டி, திமிலை, முரசு, முழவு, போன்றவற்றோடு மூங்கிலாலான பேரியாழ், செங்கோட்டியாழ், வேய்ங்குழல், புல்லாங்குழல், காட்டுக் குழல், மானிடக் குழல் போன்ற பல கருவிகள் வைக்கப்பட்டிருந்தன. திருச்சின்னம், இசைக்கின்னம், வடி சிலம்பு, சரவொளி மணி, சுரபலகை போன்ற கருவிகள் பார்ப்பதற்குப் புதுமையாக இருந்தன. அவற்றைத் தொட்டு உணர்ந்தது மன எழுச்சியைத் தந்தது.

அதோடு கி.மு.600 – கி.மு.2200 காலகட்டத்தில் பயன்படுத்திய கல்கோடாரிகள், தானியங்களை அரைக்கும் கற்கள், அறுவடை செய்யும் கருவிகள், கூழாங்கற்கருவிகள், துளையிடும் கருவிகள், அம்புகள், செதுக்கிகள் போன்ற பொருட்களும் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. கி.மு. 1300 காலகட்டத்தில் பயன்படுத்திய இரும்பினாலான கொழுமுனை, கத்தி, வாள், ஈட்டி, நீர் இறைக்கும் அம்ரி, கீழார் போன்ற கருவிகளும் இருந்தன. கறுப்பு சிவப்பு நிற மண்பாண்டங்களில், சுடுமண் பொம்மைகளில் மனித உருவம், மலைமான், ஆமை உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டிருந்த பொருட்களும், சங்கு வளையல், தந்தத்தினாலான அணிகலன்கள், பந்து போன்ற பல பொருட்களும் இருந்தன.

கண்காட்சியைப் பார்வையிட்ட பிறகு, தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இங்கே வைக்கப்பட்டிருப்பவை சாதாரணப் பொருட்கள் அல்ல; தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்கள். நமக்கான பெருமிதங்கள், இவற்றைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. நமது பண்பாட்டின் வேர்களை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். நமது வரலாறுதான் நமக்கான வாழ்க்கை நெறி. வரலாற்றுச் சாட்சியங்களைப் பார்வையிடுவது மட்டுமல்ல, பாதுகாக்க வேண்டும். பழைய வரலாற்றுச் சாட்சியங்களைப் பாதுகாப்போம், புதிய வரலாற்றுச் சாட்சியங்களை உருவாக்குவோம்” என்று பேசினார்.

கண்காட்சி செயற்கையாக உருவாக்கப்பட்டதல்ல, ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு காலம் இருக்கிறது, வரலாறு இருக்கிறது. வரலாற்றை, வாழ்வியலை நிரூபித்துக்காட்ட இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.

ஒரு இனம் பண்பாட்டில், கலையில் மேம்பட்டது என்று சொல்வதற்கு, அதனுடைய இலக்கியங்களே சான்றுகளாக இருக்கின்றன. அந்த விதத்தில் கி.மு. 711இலேயே தமிழ் மொழியில் தொல்காப்பிய இலக்கண நூல் எழுதப்பட்டிருக்கிறது. உலகில் வேறு எந்த மொழியிலும் கி.பி. 300 – 600 காலத்தில் நீதிநூல்கள் எழுதப்படவில்லை. சமணர்களுடைய காலத்தில்தான் நீதிநூல்கள் எழுதப்பட்டன. இது இருண்ட காலம் என்று சொல்லப்பட்டது. நீதிநூல்கள் செழித்து வளர்ந்த காலம் எப்படி இருண்ட காலமாக இருக்க முடியும். உலகில் முதன்முதலாக இரும்புப் பயன்பாட்டைத் தமிழர்கள் கி.மு. 3345 காலத்தில் தொடங்கினர் என்று அறிவியல் ரீதியாக ஸ்டாலின் அரசு நிரூபித்துள்ளது. இதன் அடிப்படையில், கி.மு. 3345 காலத்திலிருந்து கணக்கிட்டால் இன்றிலிருந்து 5300 ஆண்டுகளுக்கு முந்தையது. கீழடியில் கிடைத்திருக்கக்கூடிய கட்டுமானங்கள் கி.மு.2600 காலத்திலேயே நகர நாகரிகம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது என்பதை நிரூபித்திருக்கிறது. ஆரிய நாகரிகத்தில் வேத காலம் என்று சொல்லப்படுகிறது. அப்போது அவர்களிடம் இருந்தது கிராம நாகரிகம்தான். இதனால்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், “தமிழ்நாட்டிலிருந்துதான் இந்தியப் பண்பாட்டுக்கான வரலாற்றை எழுத வேண்டும்” என்று கூறினார். 

கீழடியில் கிடைத்த மண்பாண்டங்களில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளின் மூலம் தமிழ் மொழியின் வயது 3500 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் பொருள், 3500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மொழி அறிவைப் பெற்றிருந்தனர். தமிழர்கள் கூத்து, இசை, நடனம், ஓவியம், சிற்பக் கலை, உழவுத் தொழில் போன்ற அனைத்துத் துறைகளிலும் மேம்பட்ட சமூகமாக இருந்தனர். இதை நாம் வெறும் வாய்மொழியால் மட்டுமே சொல்லவில்லை. இலக்கிய ஆதாரங்கள், தொல்லியல், கல்வெட்டியல் ஆதாரங்களின் மூலம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தமிழர் பண்பாட்டில் கூத்து மற்றும் நாடகக் கலை வடிவங்கள் தொல்காப்பியக் காலத்திற்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்தது என்பதற்கான இலக்கியச் சான்றுகள் நிறைய இருக்கின்றன. 

“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்” (தொல்காப்பியம் அகம் – 56.) “நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த வீசி வீங்கு இன்னியங்கடுப்ப” (பெரும்பாணாற்றுப்படை 55 – 56), “பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்” (பட்டினப்பாலை – 113), “நாடக மேத்தும் நாடகக் கணிக்கை (சிலப்பதிகாரம் பதிகம் 15), “நாடக மடந்தையர் நலங்கெழுவீதி (மணிமேகலை 4: 51), “கூத்தர் ஆடுகளம் கடுக்கும்” (புறம் – 28), “இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து” (சிலப்பதிகாரம் 3 : 12), “கூத்தாட்டு அவைக்களம்” (திருக்குறள் 332), “நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து” (சிலப்பதிகாரம் 3: 40).

“கூத்தரும் பாணரும் பொருநரும் விறவிலியும்

ஆற்றிடைக் காட்சி உறழதோன்றிப்

பெற்ற பெருவளம் பெறா அர்க் குறிவுறீஇச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்” (தொல்காப்பியம் பொருளதிகாரம், 36) என்று தொல்காப்பியம் சொல்கிறது. மேற்சொன்ன பாடல்கள் மட்டுமல்ல. தமிழ்ச் சமூக வாழ்வில் கூத்து, மக்கள் வாழ்வியலோடு பண்பாட்டுக் கலாச்சாரத்தோடு இரண்டறக் கலந்து ஒன்றாக இருந்திருக்கிறது என்பதற்கான பல நூறு சான்றுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் கூத்தாடும் கலைஞர்கள் சமூகத்தைப் பாடியும் ஆடியும் மகிழ்வித்தாலும் அவர்கள் எப்போதும் வறுமையிலும் பசியிலும் இருந்தனர் என்பதற்கு, “ஆடுபசி உழந்த நின்இரும்பேர் ஒக்கலொடு, நீடுபசி ஒரா அல் வேண்டின் நீடு இன்று” (பொருநராற்றுப்படை – 60 - 61-1) என்ற பாடல் கூறுகிறது. தெருக்கூத்துக் கலையில் மட்டுமல்ல, இசையிலும் தமிழ்ச் சமூகம் செழித்து இருந்திருக்கிறது. கூத்தும் இசையும் நடனமும் சேர்ந்ததுதான் கூத்துக் கலை அல்லது நாடகக் கலை என்பது. 

“ஒரு திறம் கண்ணார் குழலின் கரைபு எழ” (பரிபாடல் 17) “தீம் தொடை விளரி நரம்பின் நயவரு சீறியாழ்” (அகப்பாடல் 279)

“புரிநரம்பின் கொளைப் புகல் பாலையேழும்

எழு உப்புணர் யாழூம் இசையும் கூடக்

குழலளந்து நிற்ப முழ வெமுந்தார்ப்ப

மன் மகளிர் சென்னியராடல் தொடங்க” (பரிபாடல் 7) “வல்லோன் தைவரும் வண்னுயிர்ப் பாலை - நரம்பு ஆர்தன்ன வண்டினமும் முரலும்” (அகப்பாடல் 355), “வல்லான் இயற்றிய பாவை” (மதுரைக்காஞ்சி), “கம்மியர் நூலறிவு புலவர்” (நெடுநல்வாடை), “மண்ணிலும் கல்லிலும் மரத்திலும் சுவரிலும் தெய்வம் காட்டினும் வகுக்க” (மணிமேகலை)

 “நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் வெகுளி பெருமிதம் உவகை என

அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப என” (தொல்காப்பியம் மெய் நூற் – 3). இசை, தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்தது என்பதற்கு இப்படிப் பல சான்றுகளைக் காட்ட முடியும். தமிழர்கள் காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கவில்லை என்பதைத்தான் இப்பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.

தொல்காப்பியத்தின் காலம் கி.மு. 711 எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே சிற்பக் கலை குறித்த தெளிவான நூற்பாக்கள் எழுதப்பட்டிருந்தன. இதன் மூலம் சிற்பக் கலை வடிவமைப்பில் தமிழர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. சிற்பக் கலையில்தான் என்றில்லை ஓவியக் கலையிலும் தமிழர்கள் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள் என்பதற்குச் சிலப்பதிகாரத்தில் வரக்கூடிய பல பாடல்கள் சான்றாக இருக்கின்றன. சுவர், துணி, செப்பேடு, ஓலை, பலகை, கண்ணாடி, தந்தம் போன்ற பொருள்களிலும் ஓவியத்தை வரைந்ததாக பல பாடல்கள் குறிப்பிடுகின்றன. அதற்கு உதாரணமாக, “எண்ணென்கிரட்டி யிருங்கலை பயின்ற, பண்ணியல் மடந்தையர்” (சிலப்பதிகாரம் 22) என்ற பாடலைச் சொல்லலாம்.

தமிழ் இலக்கியங்களில் பிற கலைகளைக் காட்டிலும் நடனக் கலை குறித்த பதிவுகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் வரும் அரங்கேற்றுக் காதை முழுவதும் நடனம் குறித்தே எழுதப்பட்டுள்ளது. ஒரு காப்பியத்தில் நடனக் கலை குறித்த பதிவுகள் எழுதப்பட்டிருப்பது, தமிழ்க் கவிகள் நடனக் கலை அறிவையும், நுணுக்கத்தையும் அறிந்திருக்கிறார்கள் என்பதும், அதை இலக்கியத்தில் நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் வியப்பிற்குரியதாக இருக்கிறது.

“எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது

மண்ணகம் ஒரு வழிவகுத்தனர்” (சிலப்பதிகாரம் புகார் காண்டம்) “வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின்…” (சிலப்பதிகாரம் 3 – 39), “உத்தரப் பலகையோடு அரங்கின் பலகை வைத்த இடை நிலம் நாற்கோல் ஆக” (சிலப்பதிகாரம் புகார் – அரங்கேற்று காதை – 2) “வேத்தியல் பொதுவியல் என்று இவ்விரண்டின் / கூத்தியல் அறிந்து கூத்தியர் மறுகு” (மணிமேகலை) “நாடக மகளிருக்கு நன் களம் வகுத்த / ஓவிய செந்நூல் உரைநூல் கிடக்கையும்” (மணிமேகலை) இப்படி, கட்டடக்கலை குறித்த பதிவுகளும் நம்முடைய பழந்தமிழ் இலக்கியத்தில் நிறைய கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்குத் தெரியவருவது, தமிழர்கள் பழங்காலத்திலேயே கட்டடக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்பதுதான். நம்முடைய திராவிட கட்டடக் கலையின் சிறப்போடு ஒப்பிடும்போது, ஆரிய கட்டடக் கலை எந்த நிலையில் இருந்தது என்பதை ஒப்பிட்டு புரிந்துகொள்ள முடியும்.

“மாடமதுரை” (புறப்பாடல் – 32) “மாடமலி மறுகிற் கூடல்” (திருமுக்காற்றுப்படை – 71) “மாடம் பிறங்கி மலிடிகழ்க்கூடல்” (மதுரைக் காஞ்சி (629). இந்தப் பாடல்கள் வெறும் பாடல்கள் அல்ல, கவிதை வரிகள் அல்ல. இந்த வரிகளின் மூலம் நாம் அறிவது நம் முன்னோர்களின் தொல்குடி வாழ்க்கை முறையை. அந்த வாழ்க்கை முறைதான் நமக்கான இன்றைய வாழ்க்கை முறையைத் தீர்மானிக்கிறது.

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சர் மாண்புமிகு மதிவேந்தன், செயலர் திருமதி லட்சுமி பிரியா, இயக்குநர் ஆனந்த், இயக்குநர் அண்ணாதுரை, தாட்கோ மேலாளர் கந்தசாமி, தாட்கோ சேர்மன் இளையராஜா ஆகியோர் எடுத்த முயற்சியும் ஈடுபாடும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் ‘ஆதி கலைக்கோல்’ நிகழ்வில் வெளிப்பட்டன. பழங்காலத்துப் பொருட்களைப் பார்வையிடும் வாய்ப்பையும், அவற்றைப் பற்றிய இலக்கியப் பதிவுகளைப் படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியிருந்தார்கள். கற்பனையான பண்பாட்டிற்கு எதிராக நிஜமான, உண்மையான பண்பாட்டினை நிலைநாட்டும் செயல்தான் ‘ஆதி கலைக்கோல்’ நிகழ்வு. 

முரசொலி 06.11.2025

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

இலக்கிய ஆசான்கள் 3

செடல்’ நாவலும் நானும் - இமையம்

            கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர் என்ற ஊரில் நான் பிறந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கும் நூறடித் தூரத்துக்குள்ளாகவே மாரியம்மன் கோயில் இருந்தது. கூரை வேய்ந்த மண் சுவரால் கட்டப்பட்டது. மாரியம்மன் கோவில் திண்ணைகளும் அதற்கு எதிரிலிருந்த சிறிய இடமும்தான் பத்து வயதுவரை எனக்கு விளையாடுவதற்கான இடமாக இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் கோயில் திருவிழா எட்டு நாட்கள் நடக்கும். காப்பு கட்டிய நாளிலிருந்து, காப்பு அவிழ்க்கும் நாள்வரை கூத்து நடக்கும். பல ஊர்களில் நாடக செட் இருந்தால் கூட கழுதூரிலிருந்த நாடக செட்டிற்குத்தான் புகழ் அதிகம். செடல் என்ற இளம் வயதுப் பெண் ஆடுவதால், அந்த ஊர் நாடக செட்டிற்கு எப்போதும் புகழும், அதிகக் கிராக்கியும் இருந்தது. எனக்கு ஐந்தாறு வயது இருக்கலாம். மேல் ஆதனூருக்குக் கூத்தாட வந்தபோதுதான் நான் செடலைப் பார்த்தேன், கிருஷ்ணன் வேடத்தில். கிருஷ்ணனையே நேரில் பார்த்தது போல் இருந்தது. அந்த வேடம் என்றும் என் மனதில் இருக்கும்.

மேல் ஆதனூரில் இருந்த நாங்கள் குடும்பப் பிரச்சினையால் கழுதூர் (அதுதான் என் அப்பாவினுடைய சொந்த ஊர்) என்ற ஊருக்கு வந்தோம். நாங்கள் குடியிருந்த தெருவுக்கு வடக்கே நான்காவது தெருவில்தான் செடல் குடியிருந்தார். ஒரு விதத்தில் ஊருக்குக் கடைசியில் என்று சொல்லலாம். பொட்டுக்கட்டி விடப்படும் சாதி என்பதால் அப்படி இருந்திருக்கலாம்.

கழுதூரிலிருந்த மாரியம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடக்கும். ஒவ்வொரு நாள் இரவிலும் தெருக்கூத்து நடக்கும். செடல், பல வேடங்களில் நடிப்பார். முன்வரிசையில், தரையில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். சாவு வீடுகளில், கர்ண மோட்சம் நாடகத்தில், இரவிலும் பகலிலும் பிணம் எடுக்கும்வரை செடல் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். 1984-வரை நான் தெருக்கூத்து பார்ப்பவனாகவும் செடலின் ஆட்டத்தை ரசிப்பவனாகவும் இருந்தேன்.

ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததில் செடலுக்கு முக்கிய பங்குண்டு. கீழ் ஆதனூரில்  ‘லவகுசா’ என்ற தெருக்கூத்தைப் பார்த்தேன். அந்த ஊரில் கோனார்கள் அதிகம். அதனால் ராமாயணம் தொடர்பான நாடகங்களை மட்டுமே நடத்துவார்கள். கழுதூரில் (ஊர்த் தெரு) செல்லியம்மன் கோயில் இருந்தது. அங்கு ஒவ்வொரு வருடமும், பதினாறு  நாட்கள் மகாபாரதம் படிப்பார்கள். மகாபாரதக் கதையைப் பாட்டாகவும் கதையாகவும் சொல்வார்கள். அப்படிச் சொல்கிறவர்களை மகாபாரத  ‘பூசாரி’ என்று சொல்வார்கள். மகாபாரதத்தை என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததில் இவர்களுக்கும் பங்குண்டு.   என்னிடம் மட்டுமல்ல இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மனிதனிடமும் மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் கொண்டுபோய்ச்சேர்த்தவர்கள், நாடோடிகளும், தெருக்கூத்தாடிகளும், மகாபாரத பூசாரிகளுமே. இந்திய மண்ணின் சத்தான பகுதியாகவும் மண்ணுக்கடியில் இருக்கும் நீராகவும், காற்றாகவும், ஒளியாகவும் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் காலாகாலத்துக்கும் நிலைபெறச் செய்தவர்கள்.

செடலின் ஆட்டத்தையும் பாட்டையும் வேடத்தையும் பார்த்தபோதெல்லாம் நானும் தெருக்கூத்தாடியாக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். செடல் வீட்டிற்குப் பக்கத்திலேயே கோவிந்தன் என்பவர் இரவில் தெருக்கூத்தைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். தெருக்கூத்து கற்றுக்கொடுப்பதைப் பலர் வேடிக்கைப் பார்ப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். ‘கூத்து வாத்தியார்’ என்ற கோவிந்தன் பெரும்பாலும் ‘சூரன்’ வேடம்தான் போடுவார். அல்லது பீமன் வேடம். அவர் ஆடும்போது குழந்தைகள் பயப்படுவார்கள். நானும் பயந்திருக்கிறேன்.

இரவில் தெருக்கூத்துப் பார்க்கும்போது, செடல் கிருஷ்ணனாக, பாஞ்சாலியாக, தர்மராக என்று பல வேடங்களில் வருவார். அப்போது செடல், செடலாகத் தெரியாமல், கிருஷ்ணனாக, பொன்னருவியாக, அர்ஜுனனாக மட்டுமே தெரிவார். பகல் நேரத்திலும் திருவிழா நடக்காத நாட்களிலும்,  ஆண்களுடன் ஊர் ஊராகச் சுற்றும் பெண்ணாகவும், பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்ணாகவும் (தேவதாசியாக) தெரிவார். எனக்குத் தெரிந்து, எங்களுடைய ஊரிலிருந்த டீக் கடையில் டீ குடித்த முதல் பெண் அவர்தான். அதே மாதிரி இட்லிக் கடையில் இட்லி சாப்பிட்ட முதல் பெண்ணும் செடல்தான். 90வரை கூட  கிராமங்களில் டீக் கடைக்கு, இட்லிக் கடைக்குப் பெண்கள் போக மாட்டார்கள், அப்படிப் போவது இழிவாகக் கருதப்பட்டது. கல்யாணமாகாத இளம் பெண்கள், சிறு பெண் பிள்ளைகள் தவறு செய்தால், “நீ செடல் மாதிரிதான் ஆவப்போற” என்று சொல்லிதான் திட்டுவார்கள். கெட்ட நடத்தை கொண்ட பெண்களைத் திட்டும்போது, ‘ஒனக்கு செடலே தேவலாம்’ என்றுதான் சொல்வார்கள். மோசமான பெண்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் செடலின் பெயர்தான் முதலில் வரும்.

1996இல் பொங்கல் சமயத்தில் கரிநாள் அன்று காலையில் என்னிடம் வந்து, “பொங்க காசு கொடுங்க சாமி” என்று கேட்டார். அந்த ஒரு நொடியில்தான் எனக்கு ‘தமிழ் இலக்கியத்தின் காவிய நாயகி செடல்’ என்று தோன்றியது. அன்றிலிருந்து ‘செடல்’ நாவல் அச்சுக்குப் போகும் நாள்வரை (2006) அவரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

தெருவில் என்னைப் பார்க்கும்போதெல்லாம்  ‘அத்த மவனே, டீக்குக் காசு கொடு, நாலு இட்லிக்குக் காசு கொடு”,  “வெத்தலபாக்குக்குக் காசு கொடு” என்று என்னிடம் கேட்பார். நானும் கொடுத்திருக்கிறேன். செடலைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த பிறகு, நான் அவர் பணம் கேட்டு ஒரு நாளும் கொடுக்காமல் இருந்ததில்லை. அவருக்குப் பணம் கொடுப்பதைப் புண்ணியமாகக் கருதாமல் பாக்கியமாகக் கருதினேன்.

கழுதூரிலும் விருத்தாசலத்திலும் என்னுடைய வீட்டில் செடலைப் பேச வைத்து, பாட வைத்து நான் கேட்டிருக்கிறேன். அவருடைய வாயாலேயே அவரின் வாழ்க்கையைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒளிவுமறைவு அற்ற பேச்சு. அப்பட்டமான வாழ்க்கை கதை. அவருடைய வாழ்க்கை கதை  எனக்கு ஒரே நேரத்தில் சந்தோஷத்தையும்  துக்கத்தையும் தந்தது. அவருடைய  தம்பி பாலு, அண்ணன் ராஜலிங்கம் இருவரும் என்முன் பல மணி நேரம் தெருக்கூத்துப் பற்றிப் பேசியிருக்கிறார்கள், பாடியிருக்கிறார்கள். கோவிந்தன், நாடக வாத்தியாரின் மகன் குணசேகரன் பல நாட்கள், பல மணி நேரங்கள் தெருக்கூத்தைப் பற்றி, நடிகர்கள் பற்றி அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசினார், பாடினார். மனதளவில் என்னையும் ஒரு தெருக்கூத்தாடியைப்போல  மாற்றியவர் அவர்தான். மகாபாரத, இராமாயண கதாபாத்திரங்களோடு வாழ்ந்ததுபோல்தான் என்னிடம் விவரித்தார்.

செடல் மாதிரி பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசினேன். அதில் ஒருவர் விசுலூர் ஆதிலட்சுமி. பலர் இறந்துபோய்விட்டிருந்தனர். இறந்துபோனவர்களுடைய குடும்பத்தினரிடம் பேசினேன். தேவதாசி முறையைப் பற்றி படித்தேன். கேரளா, ஆந்திரா, கர்நாடகம், அசாம் என்று பல மாநிலங்களில் பொட்டுக்கட்டி விடப்படும் முறை எப்படிப் பின்பற்றப்படுகிறது என்பதைப் படித்தேன். Travels in the Western Penninsula India and in the Island of  Ceylone by Jacob Haafner (Dutch) – (1811),  Nityasumangali by Saskia Kersenboom (1987), The Dancing Girl by Hasan Shah (Urdu) (1791), போன்ற நூல்களையும் படித்தேன். (என்னிடம் அதிகம் வேலை வாங்கிய நாவல் ‘செடல்’தான் - 1996-2006).

நாவல் வெளிவந்ததும் முதல் பிரதியை எடுத்துக் கொண்டுபோய் செடலிடம் கொடுத்தேன். அவருக்குப் படிக்கத் தெரியாது.  ஒரு தாய் முதன்முதலாகத் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்ப்பதுபோல, சிரிப்பும் சந்தோஷமும் கண்ணீருமாகப் புத்தகத்தைத் தடவிப் பார்த்தார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தார். “நான் சொன்னதெல்லாம், பாடினதெல்லாம் இருக்கா?” என்று கேட்டார். “இருக்கு” என்று சொன்னேன். புத்தகத்திற்கு முத்தம் கொடுத்தார். “அத்த மவனே, நான் சாவுறவர இந்த பொஸ்தகம் என்னோட தலமாட்டுலதான் இருக்கும். நான் செத்தா இதெயும் எம் பொணத்தோட வச்சுதான் பொதைக்க சொல்லுவன்” என்று சொல்லிவிட்டு அழுதார்.

“ஒனக்கு பொட்டுக்கட்டி விடும்போது  ‘சாமி என்னிக்குமே சாவப் போறதில்ல. ஒம்மவ என்னிக்குமே தாலியறுக்கப் போறதில்ல’ன்னு பூசாரி ஒங்க அப்பாகிட்ட சொன்னாருன்னு சொன்ன இல்லையா! அதே மாதிரி இப்ப நான் உனக்கு ஒண்ணு சொல்லிட்டுப் போறேன். உனக்கு என்னிக்குமே சாவு இல்ல” என்று சொன்னேன். செடல் நாவலுக்கு சாவு உண்டா?

செடல் எனக்கு இந்தியத் தமிழ்ச் சமூக வாழ்வின் ஒரு பகுதியைக் காட்டித் தந்து படிக்க வைத்தார். அவர் இல்லை என்றால், தேவதாசி முறையைப் பற்றி, பொட்டுக்கட்டும் முறையை பற்றி, அதில் இருக்கக்கூடிய சாதிய ஏற்றத்தாழ்வுகள் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்காது.

செடல் என்னுடைய இலக்கிய ஆசான்களில் முக்கியமானவர். அவர் எதைப் பார்க்கச் சொன்னாரோ அதைப் பார்த்தேன். எதைக் கேட்கச் சொன்னாரோ அதைக் கேட்டேன், எதைப் படிக்கச் சொன்னாரோ அதைப் படித்தேன் - அதுதான் செடல் நாவல். இது செடலின் சுயசரிதை அல்ல.

என்னுடைய இலக்கியப் பேராசான் செடலை வணங்குகிறேன். தமிழ்ச் சமூகத்தின் காவிய நாயகியை வணங்க கிடைப்பது பெரும் பேறு.

சமூக அவலங்கள் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதிக்கின்றன. அவர்களைப் பிறரை அண்டிப் பிழைக்கும் தாழ்நிலைக்குத் தள்ளுகின்றன. ஒவ்வொரு வேளைசோற்றுக்கும் அவர்களது தன்மானத்தை இழக்க வைத்துக் கூனிக்குறுக வைக்கின்றன. ஆதிக்கம் செலுத்துபவர் மற்றும் ஆதிக்கத்திற்கு உட்படுபவர் இருவரது மனித மாண்பையும் சிதைக்கின்றன. ஆனால் அந்த வலி, வேதனைகளால் முற்றும் துவண்டு போகாமல் தங்கள் வாழ்க்கை முறை மூலமாகவே தங்களை மிகப் பெரும் ஆளுமைகளாக உருவாக்கிக் கொள்ளும் சில தலை சிறந்த மனிதர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அத்தகைய சாதனை மனிதர்களின் வாழ்வே அவர்கள் பட்ட சமூக அவலங்களை ஆவணப்படுத்தும் உந்துதலை மற்றவர்களுக்கு உணர்த்துகிறது. அந்த வகையில் செடல் ஒரு சமூக வரலாற்று நாயகி. அதுவே அவரை தமிழ்ப் புத்திலக்கியத்தின் காவிய நாயகி என்ற பெருமைக்கும் உயர்த்துகிறது.

‘செடல்’ நாவலை எழுதி முடித்த பிறகும், அவர் என்னை விட்டுப் போகவில்லை. தமிழ்ச் சமூகத்தின் காவிய நாயகி எப்படி ஒரு கதாசிரியனை விட்டுப் போவாள்?

செடல் என்னிடம் பேசியதைப் போல, பாடியதைப் போல, நடித்துக்காட்டியதைப் போல, இனி உங்களிடமும் பேசட்டும், பாடட்டும், நடித்துக் காட்டட்டும்.

என்னுடைய இலக்கிய ஆசான்கள் 3

 

 

 

செடல்நாவலும் நானும் - இமையம்

            கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், மேல் ஆதனூர் என்ற ஊரில் நான் பிறந்தேன். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கும் நூறடித் தூரத்துக்குள்ளாகவே மாரியம்மன் கோயில் இருந்தது. கூரை வேய்ந்த மண் சுவரால் கட்டப்பட்டது. மாரியம்மன் கோவில் திண்ணைகளும் அதற்கு எதிரிலிருந்த சிறிய இடமும்தான் பத்து வயதுவரை எனக்கு விளையாடுவதற்கான இடமாக இருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் கோயில் திருவிழா எட்டு நாட்கள் நடக்கும். காப்பு கட்டிய நாளிலிருந்து, காப்பு அவிழ்க்கும் நாள்வரை கூத்து நடக்கும். பல ஊர்களில் நாடக செட் இருந்தால் கூட கழுதூரிலிருந்த நாடக செட்டிற்குத்தான் புகழ் அதிகம். செடல் என்ற இளம் வயதுப் பெண் ஆடுவதால், அந்த ஊர் நாடக செட்டிற்கு எப்போதும் புகழும், அதிகக் கிராக்கியும் இருந்தது. எனக்கு ஐந்தாறு வயது இருக்கலாம். மேல் ஆதனூருக்குக் கூத்தாட வந்தபோதுதான் நான் செடலைப் பார்த்தேன், கிருஷ்ணன் வேடத்தில். கிருஷ்ணனையே நேரில் பார்த்தது போல் இருந்தது. அந்த வேடம் என்றும் என் மனதில் இருக்கும்.

மேல் ஆதனூரில் இருந்த நாங்கள் குடும்பப் பிரச்சினையால் கழுதூர் (அதுதான் என் அப்பாவினுடைய சொந்த ஊர்) என்ற ஊருக்கு வந்தோம். நாங்கள் குடியிருந்த தெருவுக்கு வடக்கே நான்காவது தெருவில்தான் செடல் குடியிருந்தார். ஒரு விதத்தில் ஊருக்குக் கடைசியில் என்று சொல்லலாம். பொட்டுக்கட்டி விடப்படும் சாதி என்பதால் அப்படி இருந்திருக்கலாம்.

கழுதூரிலிருந்த மாரியம்மன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடக்கும். ஒவ்வொரு நாள் இரவிலும் தெருக்கூத்து நடக்கும். செடல், பல வேடங்களில் நடிப்பார். முன்வரிசையில், தரையில் உட்கார்ந்து பார்த்திருக்கிறேன். சாவு வீடுகளில், கர்ண மோட்சம் நாடகத்தில், இரவிலும் பகலிலும் பிணம் எடுக்கும்வரை செடல் ஆடியதைப் பார்த்திருக்கிறேன். 1984-வரை நான் தெருக்கூத்து பார்ப்பவனாகவும் செடலின் ஆட்டத்தை ரசிப்பவனாகவும் இருந்தேன்.

ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததில் செடலுக்கு முக்கிய பங்குண்டு. கீழ் ஆதனூரில்  ‘லவகுசா’ என்ற தெருக்கூத்தைப் பார்த்தேன். அந்த ஊரில் கோனார்கள் அதிகம். அதனால் ராமாயணம் தொடர்பான நாடகங்களை மட்டுமே நடத்துவார்கள். கழுதூரில் (ஊர்த் தெரு) செல்லியம்மன் கோயில் இருந்தது. அங்கு ஒவ்வொரு வருடமும், பதினாறு  நாட்கள் மகாபாரதம் படிப்பார்கள். மகாபாரதக் கதையைப் பாட்டாகவும் கதையாகவும் சொல்வார்கள். அப்படிச் சொல்கிறவர்களை மகாபாரத  ‘பூசாரி’ என்று சொல்வார்கள். மகாபாரதத்தை என்னிடம் கொண்டு வந்து சேர்த்ததில் இவர்களுக்கும் பங்குண்டு.   என்னிடம் மட்டுமல்ல இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மனிதனிடமும் மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் கொண்டுபோய்ச்சேர்த்தவர்கள், நாடோடிகளும், தெருக்கூத்தாடிகளும், மகாபாரத பூசாரிகளுமே. இந்திய மண்ணின் சத்தான பகுதியாகவும் மண்ணுக்கடியில் இருக்கும் நீராகவும், காற்றாகவும், ஒளியாகவும் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் காலாகாலத்துக்கும் நிலைபெறச் செய்தவர்கள்.

செடலின் ஆட்டத்தையும் பாட்டையும் வேடத்தையும் பார்த்தபோதெல்லாம் நானும் தெருக்கூத்தாடியாக வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். செடல் வீட்டிற்குப் பக்கத்திலேயே கோவிந்தன் என்பவர் இரவில் தெருக்கூத்தைக் கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்தார். தெருக்கூத்து கற்றுக்கொடுப்பதைப் பலர் வேடிக்கைப் பார்ப்பார்கள். நானும் பார்த்திருக்கிறேன். ‘கூத்து வாத்தியார்’ என்ற கோவிந்தன் பெரும்பாலும் ‘சூரன்’ வேடம்தான் போடுவார். அல்லது பீமன் வேடம். அவர் ஆடும்போது குழந்தைகள் பயப்படுவார்கள். நானும் பயந்திருக்கிறேன்.

இரவில் தெருக்கூத்துப் பார்க்கும்போது, செடல் கிருஷ்ணனாக, பாஞ்சாலியாக, தர்மராக என்று பல வேடங்களில் வருவார். அப்போது செடல், செடலாகத் தெரியாமல், கிருஷ்ணனாக, பொன்னருவியாக, அர்ஜுனனாக மட்டுமே தெரிவார். பகல் நேரத்திலும் திருவிழா நடக்காத நாட்களிலும்,  ஆண்களுடன் ஊர் ஊராகச் சுற்றும் பெண்ணாகவும், பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்ணாகவும் (தேவதாசியாக) தெரிவார். எனக்குத் தெரிந்து, எங்களுடைய ஊரிலிருந்த டீக் கடையில் டீ குடித்த முதல் பெண் அவர்தான். அதே மாதிரி இட்லிக் கடையில் இட்லி சாப்பிட்ட முதல் பெண்ணும் செடல்தான். 90வரை கூட  கிராமங்களில் டீக் கடைக்கு, இட்லிக் கடைக்குப் பெண்கள் போக மாட்டார்கள், அப்படிப் போவது இழிவாகக் கருதப்பட்டது. கல்யாணமாகாத இளம் பெண்கள், சிறு பெண் பிள்ளைகள் தவறு செய்தால், “நீ செடல் மாதிரிதான் ஆவப்போற” என்று சொல்லிதான் திட்டுவார்கள். கெட்ட நடத்தை கொண்ட பெண்களைத் திட்டும்போது, ‘ஒனக்கு செடலே தேவலாம்’ என்றுதான் சொல்வார்கள். மோசமான பெண்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம் செடலின் பெயர்தான் முதலில் வரும்.

1996இல் பொங்கல் சமயத்தில் கரிநாள் அன்று காலையில் என்னிடம் வந்து, “பொங்க காசு கொடுங்க சாமி” என்று கேட்டார். அந்த ஒரு நொடியில்தான் எனக்கு ‘தமிழ் இலக்கியத்தின் காவிய நாயகி செடல்’ என்று தோன்றியது. அன்றிலிருந்து ‘செடல்’ நாவல் அச்சுக்குப் போகும் நாள்வரை (2006) அவரைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

தெருவில் என்னைப் பார்க்கும்போதெல்லாம்  ‘அத்த மவனே, டீக்குக் காசு கொடு, நாலு இட்லிக்குக் காசு கொடு”,  “வெத்தலபாக்குக்குக் காசு கொடு” என்று என்னிடம் கேட்பார். நானும் கொடுத்திருக்கிறேன். செடலைப் பற்றி யோசிக்க ஆரம்பித்த பிறகு, நான் அவர் பணம் கேட்டு ஒரு நாளும் கொடுக்காமல் இருந்ததில்லை. அவருக்குப் பணம் கொடுப்பதைப் புண்ணியமாகக் கருதாமல் பாக்கியமாகக் கருதினேன்.

கழுதூரிலும் விருத்தாசலத்திலும் என்னுடைய வீட்டில் செடலைப் பேச வைத்து, பாட வைத்து நான் கேட்டிருக்கிறேன். அவருடைய வாயாலேயே அவரின் வாழ்க்கையைச் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒளிவுமறைவு அற்ற பேச்சு. அப்பட்டமான வாழ்க்கை கதை. அவருடைய வாழ்க்கை கதை  எனக்கு ஒரே நேரத்தில் சந்தோஷத்தையும்  துக்கத்தையும் தந்தது. அவருடைய  தம்பி பாலு, அண்ணன் ராஜலிங்கம் இருவரும் என்முன் பல மணி நேரம் தெருக்கூத்துப் பற்றிப் பேசியிருக்கிறார்கள், பாடியிருக்கிறார்கள். கோவிந்தன், நாடக வாத்தியாரின் மகன் குணசேகரன் பல நாட்கள், பல மணி நேரங்கள் தெருக்கூத்தைப் பற்றி, நடிகர்கள் பற்றி அவர்களுடைய வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசினார், பாடினார். மனதளவில் என்னையும் ஒரு தெருக்கூத்தாடியைப்போல  மாற்றியவர் அவர்தான். மகாபாரத, இராமாயண கதாபாத்திரங்களோடு வாழ்ந்ததுபோல்தான் என்னிடம் விவரித்தார்.

செடல் மாதிரி பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசினேன். அதில் ஒருவர் விசுலூர் ஆதிலட்சுமி. பலர் இறந்துபோய்விட்டிருந்தனர். இறந்துபோனவர்களுடைய குடும்பத்தினரிடம் பேசினேன். தேவதாசி முறையைப் பற்றி படித்தேன். கேரளா, ஆந்திரா, கர்நாடகம், அசாம் என்று பல மாநிலங்களில் பொட்டுக்கட்டி விடப்படும் முறை எப்படிப் பின்பற்றப்படுகிறது என்பதைப் படித்தேன். Travels in the Western Penninsula India and in the Island of  Ceylone by Jacob Haafner (Dutch) – (1811),  Nityasumangali by Saskia Kersenboom (1987), The Dancing Girl by Hasan Shah (Urdu) (1791), போன்ற நூல்களையும் படித்தேன். (என்னிடம் அதிகம் வேலை வாங்கிய நாவல் ‘செடல்’தான் - 1996-2006).

நாவல் வெளிவந்ததும் முதல் பிரதியை எடுத்துக் கொண்டுபோய் செடலிடம் கொடுத்தேன். அவருக்குப் படிக்கத் தெரியாது.  ஒரு தாய் முதன்முதலாகத் தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்ப்பதுபோல, சிரிப்பும் சந்தோஷமும் கண்ணீருமாகப் புத்தகத்தைத் தடவிப் பார்த்தார். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டிப் பார்த்தார். “நான் சொன்னதெல்லாம், பாடினதெல்லாம் இருக்கா?” என்று கேட்டார். “இருக்கு” என்று சொன்னேன். புத்தகத்திற்கு முத்தம் கொடுத்தார். “அத்த மவனே, நான் சாவுறவர இந்த பொஸ்தகம் என்னோட தலமாட்டுலதான் இருக்கும். நான் செத்தா இதெயும் எம் பொணத்தோட வச்சுதான் பொதைக்க சொல்லுவன்” என்று சொல்லிவிட்டு அழுதார்.

“ஒனக்கு பொட்டுக்கட்டி விடும்போது  ‘சாமி என்னிக்குமே சாவப் போறதில்ல. ஒம்மவ என்னிக்குமே தாலியறுக்கப் போறதில்ல’ன்னு பூசாரி ஒங்க அப்பாகிட்ட சொன்னாருன்னு சொன்ன இல்லையா! அதே மாதிரி இப்ப நான் உனக்கு ஒண்ணு சொல்லிட்டுப் போறேன். உனக்கு என்னிக்குமே சாவு இல்ல” என்று சொன்னேன். செடல் நாவலுக்கு சாவு உண்டா?

செடல் எனக்கு இந்தியத் தமிழ்ச் சமூக வாழ்வின் ஒரு பகுதியைக் காட்டித் தந்து படிக்க வைத்தார். அவர் இல்லை என்றால், தேவதாசி முறையைப் பற்றி, பொட்டுக்கட்டும் முறையை பற்றி, அதில் இருக்கக்கூடிய சாதிய ஏற்றத்தாழ்வுகள் பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்காது.

செடல் என்னுடைய இலக்கிய ஆசான்களில் முக்கியமானவர். அவர் எதைப் பார்க்கச் சொன்னாரோ அதைப் பார்த்தேன். எதைக் கேட்கச் சொன்னாரோ அதைக் கேட்டேன், எதைப் படிக்கச் சொன்னாரோ அதைப் படித்தேன் - அதுதான் செடல் நாவல். இது செடலின் சுயசரிதை அல்ல.

என்னுடைய இலக்கியப் பேராசான் செடலை வணங்குகிறேன். தமிழ்ச் சமூகத்தின் காவிய நாயகியை வணங்க கிடைப்பது பெரும் பேறு.

சமூக அவலங்கள் பெரும்பாலான மக்களின் வாழ்க்கையை மிக மோசமாகப் பாதிக்கின்றன. அவர்களைப் பிறரை அண்டிப் பிழைக்கும் தாழ்நிலைக்குத் தள்ளுகின்றன. ஒவ்வொரு வேளைசோற்றுக்கும் அவர்களது தன்மானத்தை இழக்க வைத்துக் கூனிக்குறுக வைக்கின்றன. ஆதிக்கம் செலுத்துபவர் மற்றும் ஆதிக்கத்திற்கு உட்படுபவர் இருவரது மனித மாண்பையும் சிதைக்கின்றன. ஆனால் அந்த வலி, வேதனைகளால் முற்றும் துவண்டு போகாமல் தங்கள் வாழ்க்கை முறை மூலமாகவே தங்களை மிகப் பெரும் ஆளுமைகளாக உருவாக்கிக் கொள்ளும் சில தலை சிறந்த மனிதர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அத்தகைய சாதனை மனிதர்களின் வாழ்வே அவர்கள் பட்ட சமூக அவலங்களை ஆவணப்படுத்தும் உந்துதலை மற்றவர்களுக்கு உணர்த்துகிறது. அந்த வகையில் செடல் ஒரு சமூக வரலாற்று நாயகி. அதுவே அவரை தமிழ்ப் புத்திலக்கியத்தின் காவிய நாயகி என்ற பெருமைக்கும் உயர்த்துகிறது.

‘செடல்’ நாவலை எழுதி முடித்த பிறகும், அவர் என்னை விட்டுப் போகவில்லை. தமிழ்ச் சமூகத்தின் காவிய நாயகி எப்படி ஒரு கதாசிரியனை விட்டுப் போவாள்?

செடல் என்னிடம் பேசியதைப் போல, பாடியதைப் போல, நடித்துக்காட்டியதைப் போல, இனி உங்களிடமும் பேசட்டும், பாடட்டும், நடித்துக் காட்டட்டும்.

என்னுடைய இலக்கிய ஆசான்கள் 3

 உயிர்மை - ஆகஸ்ட் 2025

 


ஞாயிறு, 20 ஜூலை, 2025

செவ்வாய், 15 ஜூலை, 2025

இயந்திரங்கள் (சிறுகதை) - இமையம்

இயந்திரங்கள் - இமையம்

“ஐயோ மணி ஆயிடிச்சே” என்று சொல்லிக்கொண்டே படுக்கையிலிருந்து எழுந்த லட்சுமிக்குக் கடிகாரத்தைப் பார்த்ததும் பதற்றம் ஏற்பட்டது. சேலையைச் சரி செய்தவாறே அடுப்படிக்குப் போனாள். அவசரஅவசரமாகப் பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவினாள். அரிசியை அலசி குக்கரில் வைத்தாள். அடுப்பைப் பற்ற வைத்தாள். நேற்றிரவே அரிந்து வைத்திருந்த காய்களை எடுத்துவந்து மற்றொரு அடுப்பில் வேக வைத்தாள். 

“என்னா படுத்தே கெடக்குறீங்க? நேரமாவறது தெரியல? எத்தன தடவதான் எழுப்புறது?” என்று கேட்டு லட்சுமி கத்தியதால் அலுத்துக்கொண்டே எழுந்த ராஜு, என்றைக்கும் போல முதலில் கடிகாரத்தைத்தான் பார்த்தான். “முன்னாடியே எழுப்புறதுக்கென்னா?” என்று கேட்டான். “மோட்டாரப் போடுங்க” என்று சொல்லிவிட்டு குடங்களைக் கழுவினாள்  லட்சுமி. 

தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்த லட்சுமி, “ஒங்களாலதான் இன்னிக்கி லேட்டாயிடிச்சி” என்று சொன்னாள். “நான் என்னா செஞ்சன்?” என்று கேட்டான். லேசாகச் சிரித்துக்கொண்டே, “சனிக்கிழம வழக்கத்துக்குப் பதிலா நேத்து ராத்திரி மாத்துனதாலதான்” என்று சொன்னாள். “பொண்டாட்டிக்கிட்டெ படுக்குறத்துக்குக்கூட நாளு, கிழம, நேரம், காலம் பாத்துக்கிட்டா படுக்க முடியும்” என்று வெடுக்கென்று கேட்டான். “நாட்டுல எல்லாத்துக்கும் இப்ப அப்பிடித்தான் ஆயிப்போச்சி. ரெண்டு சம்பளத்துக்கு ஆசப்பட்டா நம்ப இஷ்டமின்னு ஒண்ணும் இருக்காது” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர்க் குடத்தைத் தூக்கிவைத்தாள். 

“இந்தப் பூண்ட உரிங்க” என்று சொல்லி, பூண்டு ஒன்றை ராஜுவிடம் கொடுத்துவிட்டு சேமியாவை வறுக்க ஆரம்பித்தாள் லட்சுமி. “மாவு என்னாச்சி” என்று ராஜு கேட்டான். “தீந்து போச்சி” என்று சொன்னாள்.

“இன்னிக்கி வியாழக்கிழமதானெ? வழக்கமா சனிக்கிழம வர மாவு இருக்குமே.”

“ஒங்க அக்கா மகளுங்க வந்து டேராபோட்டது மறந்துபோச்சா?”

“முன்னெபின்னெ ஒரு கிலோ, ரெண்டு கிலோன்னு சேத்துப்போட்டு அரைக்கணும்.”

“இனிமே அரைக்கிறன் சாமி, கல்யாண மண்டபத்திலெ இருக்கிற மாரி கிரைண்டரும், ஒரு இட்லி குண்டானும் வாங்கிப் போட்டுடுங்க. அப்பிடியே ஒங்க கூட்டத்துக்கும் சேதிய சொல்லிடுங்க.”

“வாய மூடுறியா? காலயிலியே சனியனாட்டம்.” 

“என்னா சொல்லிப்புட்டன்னு கத்துறீங்க? சின்னவன் ஒண்ணுக்கு விட்டு, அதிலியே தூங்கறது தெரியல? தூக்கிக்கிட்டுப் போயி மொகத்தக் கழுவி விடுங்க” என்று சொல்லிவிட்டு வாசலைப் பெருக்குவதற்காகப் போனான் லட்சுமி. 

“கண்ணெ முழிச்சிப்பாரு. கண்ணெத் தொறப்பா” என்று சொல்லிப் பையனை எழுப்புவதற்கு முயன்றான் ராஜு. “எங்கிட்ட கொடுங்க” என்று சொல்லி பையனை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு, “கண்ணெ முழிச்சிப்பாரு. அம்மாவப் பாருடா” என்று சொல்லி கன்னத்தை உருவிவிட்டாள். குக்கரிலிருந்து சத்தம் வந்ததும் வேகமாக அடுப்படிக்குப் போய் அடுப்பை நிறுத்தினாள். “ஒங்க மிஸ் வராங்கப்பா” என்று சொன்னதும் பையன் பட்டென்று கண்களைத் திறந்து மலங்கமலங்கப் பார்த்தான். பிறகு அழ ஆரம்பித்தான். அவனுடைய அழுகையைப் பொருட்படுத்தாமல், பையனுடைய முகம், வாய் என்று கழுவிவிட்டு, “சின்னவனத் தூக்கிக்கிட்டு வாங்க” என்று ராஜுவிடம் சொன்னாள்.

“இதெ ஆத்திக் கொடுங்க” என்று சொல்லி தம்ளர்களையும் பாலையும் கொண்டுவந்து ராஜுவின் முன் வைத்தாள் லட்சுமி. பாலை நன்றாக ஆற்றித் தம்ளர்களில் ஊற்றி இரண்டு பையன்களிடமும் கொடுத்தான் ராஜு. அப்போது டீ தம்பளரைக் கொண்டுவந்து கொடுத்து, “சீக்கிரம் குடிச்சிடுங்க. சூடு ஆறிடும்” என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குப் போனாள்.

“தன்னுடைய டீயைக் குடித்து முடித்துவிட்டு அடுப்படியிலிருந்த லட்சுமியிடம் “இவனுங்களப் பாத்துக்க” என்று சொல்லிவிட்டு கழிவறைப் பக்கம் போனான்.

“சின்னவன் ஹோம் ஒர்க்க முடிக்கல. அதெ எழுத வையிங்க இல்லன்னா ஃபைன் போட்டுடுவாளுங்க” என்று சொல்லிக்கொண்டே கூடத்திற்கு வந்தாள் லட்சுமி. “யாருடா பால கீழ ஊத்துனது? பாலக் கொடுத்த மனுசன் குடிக்கிறமட்டும் இருக்கக் கூடாது. நேத்து ராத்திரி எட்டு மணிக்கு சாப்புட்டெ புள்ளங்களாச்சே, ரவ பாலு வயித்துக்குள்ளார போவ கொடுத்து வைக்கல. எல்லாம் எந் தல எயித்து. காலயிலியே மனுசனுக்கு என்னா கெடுதி வந்துச்சோ தெரியல” என்று பொரிந்து தள்ளினாள். தரையில் ஊற்றியிருந்த பாலைத் துடைத்தெடுத்தாள். சத்தமாக, “சீக்கிரமா வெளிய வாங்க. காலயில எழுந்திருச்சதும் உள்ள போயி ஒக்காந்துக்க வேண்டியது, ஹோம் ஒர்க் நோட்டெ எடுடா” என்று சொன்னாள். பையன்கள் வீட்டுப்பாடத்தை எழுத ஆரம்பித்தனர்.

“பசங்களக் கூட்டிக்கிட்டுபோயி ஆயி இருக்க வையிங்க” என்று சொல்லிவிட்டு வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள் லட்சுமி. “பெரிய பையனைத் தூக்கிக் கொண்டுபோய் கழிவறையில் உட்கார வைத்தான். அப்போது “என்னோட சாப்பாட்டு கேரியர் கம்பியக் காணோம் பாத்தீங்களா?” என்று லட்சுமி கேட்டதற்கு, “எம் மடியிலதான் வச்சியிருக்கன், வந்து எடுத்துக்கிட்டுப் போ” என்று சொல்லி முறைத்தான். அதே வேகத்தில் பையனிடம், “ஆயி இருடா” என்று சொல்லிக் கத்தினான். 

“காலயிலியே இந்த மனுசனுக்கு என்னா வந்திருக்கும்? எதுக்கெடுத்தாலும் சள்ளுப்புள்ளுன்னு விழுறாரு” என்று லட்சுமி சொல்வது ராஜுக்குக் கேட்டது.

கழிவறையில் உட்கார்ந்திருந்த பையன் தரையில் ஏ, பி, சி, டி என்று விரலால் எழுதுவதைப் பார்த்த ராஜு, “சீ. கையை எடு, எழுதுறதுக்கு ஒனக்கு வேற எடமே கெடக்கலியா?

“ஆயி இருந்திட்டானா? சின்னவனத் தூக்கிட்டு வரட்டுமா?” என்று கேட்டுக்கொண்டே வந்த லட்சுமி பையன் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்ததும், “எதுக்கு அழுவுறான்? அழுவாதப்பா. ஸ்கூலுக்கு லேட்டாயிடும். சீக்கிரம் ஆயி இருந்திடு. ஸ்கூலுக்கு லேட்டானா கேட்ட பூட்டிடுவாங்க. நீ வெளியதான் நிக்கணும். ஏன் லேட்டுன்னு கேட்டு மிஸ் அடிப்பாங்கப்பா? அப்பறம் லேட் கம்மர்ஸ்ன்னு ஃபைன் போட்டுடுவாங்க” என்று சொல்லிவிட்டு ராஜுவிடம் “மணி ஆவறது தெரியல? இது ஒரு வேலதானா? போயி அடுப்பக் கொறச்சி வையிங்க, அப்பிடியே சின்னவன் என்னா பண்றான்னு பாருங்க” என்று சொன்னாள். எழுந்துபோனான் ராஜு.

“ஆயி இருடி என் தங்கமே.” 

“ஆயி வல்லம்மா. கால வலிக்குது.”

“அம்மாவுக்கு லேட்டாவுதுப்பா. ஒனக்கு ஆட்டோ வந்துடும்” என்று சொன்ன லட்சுமி, எழுந்து சமையலறைக்கு ஓடினாள். கொதித்துப்போய் வழிந்துகொண்டிருந்த குழம்பை இறக்கி வைத்தாள். “இந்த வீட்டுல எதெத்தான் சரியா செய்ய முடியுது?” என்று சொல்லி அலுத்துக்கொண்டே பொரியலுக்குரிய காயை எடுத்து வேகப்போட்டாள். அடுப்பு மேடையில் வழிந்திருந்த குழம்பைத் துடைத்தெடுத்தாள்.

பையனிடம் வந்து, “இன்னிக்கிப்பூரா இப்பிடியே குந்தியிருப்பியாடா?” என்று கேட்டு, தலையில் பலமாக ஒரு கொட்டுகொட்டிய பிறகுதான் வேலை முடிந்தது.  சின்னப் பையனை அழைத்துக்கொண்டுவந்து உட்கார வைத்த ராஜு,  “ஆயி இருடா. மணி ஆவறது தெரியல. நான் ஆபிஸ் போவணுமா வேணாமா?” என்று சொல்லிக் கத்தியதும் பையன் அழ ஆரம்பித்தான். “புள்ளய எதுக்கு அழ வைக்கிறீங்க? நான் பாத்துக்கிறன். நீங்க போயி ரெடியாவுங்க. அப்பிடியே பசங்களோட பையயும் ரெடி பண்ணுங்க” என்று லட்சுமி சொன்னாள். 

“விடிஞ்சா ஒவ்வொரு நாளும் இதே போராட்டமா இருக்கு, யாண்டா கல்யாணம் கட்டுனமின்னு இருக்கு” என்று சொல்லிக்கொண்டே போனான் ராஜு. “புள்ள வாணாம், பொண்டாட்டி வாணாமின்னு சொல்ற மனுசனுக்கு எதுக்கு வேலயும் பணமும் வேணும்?” என்று சொன்னாள். 

“ஒன்னோட தண்ணி பாட்டல காணுமே எங்கடா போட்ட?” என்று ராஜு பெரிய பையனிடம் கேட்டான். “தெரியல.” “ஒனக்கு என்னாத்தான் தெரியும்?” என்று சொல்லி முறைத்துவிட்டு தண்ணீர் பாட்டிலை தேட ஆரம்பித்தான். “பாட்டில தேடுறதே தெனமும் பெரிய வேலயா போச்சி” என்று சொல்லிக் கத்த ஆரம்பித்தபோது, “ஏங்க, பெரியவன அழச்சிக்கிட்டுவந்து பல்ல வெளக்கி வுடுங்க” என்று லட்சுமி சொன்னது கேட்டது. “இவ எப்பச் செத்துத் தொலவான்னு தெரியல” முனகிய ராஜு பையனிடம், “பல்லு வெளக்க போடா” என்று சொன்னான்.

“ஏங்க, அடுப்ப நிறுத்திப்புட்டு, துண்டெ எடுத்துக்கிட்டு வாங்க” என்று சொல்லி குளியலறையிலிருந்து லட்சுமி கத்தியது கேட்டது. கையிலிருந்த பென்சில் டப்பாவை விட்டெறிந்துவிட்டு போய் அடுப்பை நிறுத்தினான். துண்டைத் தேடி எடுத்துக்கொண்டு குளியலறைக்குப் போனான். இரண்டு பையன்களுக்கும் துவட்டிவிட்டான். இரண்டு பேருக்கும் கால் சட்டை, மேல் சட்டை என்று போட்டு விட்டான். தலை காய்ந்ததும் எண்ணெய் தடவிவிட்டான். பெரிய பையன், “எனக்கு இன்னும் பெல்ட்டு போடல” என்று சொன்னான். ராஜு பெல்ட்டைத் தேட ஆரம்பித்தான். பெல்ட் கிடைக்கவில்லை. ராஜுவோடு சேர்ந்து லட்சுமியும் தேட ஆரம்பித்தாள். பெல்ட் கிடைக்காததால் “இன்னிக்கி மட்டும் பெல்ட்டு இல்லாம போப்பா” என்று லட்சுமி சொன்னதும், “மிஸ் அடிப்பாங்கம்மா. ஃபைன் போட்டுடுவாங்க” என்று சொல்லிவிட்டு பையன் அழ ஆரம்பித்தான்.

 “நெனச்சதுக்கெல்லாம் ஃபைன், ஃபைன்னு சொல்லி புள்ளைகள மிரட்டி வச்சியிருக்காளுவோ பாரு. என்னா பள்ளிக்கூடமோ” என்று சொல்லிவிட்டு கடிகாரத்தைப் பார்த்தாள். “நேரம் எப்பிடித்தான் ஓடிப் போவுதோ தெரியல. பைய ரெடி பண்ணுங்க. இன்னிக்கி நான் லேட்டாத்தான் வருவன். ஸ்டாஃப் மீட்டிங் இருக்கு. ஸ்டாஃப் மீட்டிங்கின்னுதான் பேரு தன்னோட பெருமய பேசவே அந்த ஹெட்மாஸ்டருக்கு நேரம் பத்தாது. புதுசா வந்திருக்கிற டீச்சர்கிட்டெ பேசுறதுதான் நாள் முழுக்க அந்தாளு செய்யுற ஒரே வேல” என்று சொன்னாள்.

“பெல்ட்டுப்பா” என்று பெரிய பையன் சொன்னதைக் காதில் வாங்காமல் அவனுடைய காலில் ஸாக்ஸை மாட்டிவிட ஆரம்பித்தான் ராஜு. “இன்னிக்கிப் பள்ளிக்கூடம் வேண்டாம்ப்பா” என்று பெரிய பையன் சொன்னதை ராஜுவோ, லட்சுமியோ பொருட்படுத்தவில்லை. “சின்னவன பள்ளிக்கூடத்தில சேத்தது தப்பா போச்சி. அவனாலதான் பெரியவனும் தகராறு செய்யுறான். தீயற வாடை வருதே” என்றவாறு பதட்டத்துடன் அடுப்படிக்கு ஓடினாள். பொரியலுக்கு வேக வைத்திருந்த காய் முழுவதும் தீய்ந்துபோயிருந்தைப் பார்த்து, திடுக்கிட்டு “எல்லாச் சனியனயும் தேச்சிக் கழுவணுமே. பள்ளிக்கூடத்திலியும் மாரடிக்க வேண்டியிருக்கு, ஊட்டுலயும் மாரடிக்க வேண்டியிருக்கு” என்று சொல்லிக்கொண்டே பாத்திரத்தைத் தூக்கி, கழுவுகிற இடத்தில் போட்டாள்.

“பெல்ட்டுப்பா” என்றான் பெரிய பையன். அவன் சொன்னது காதில் விழுந்தாலும் விழாதது மாதிரி இருந்தான்.

தோள்பையில் சாப்பாட்டு டப்பாக்களை எடுத்து வைத்த லட்சுமி, “ஒங்க அக்கா மவ பெரியவ பொழுதினிக்கும் ஊட்டுல டி.வி.யப் பாத்துக்கிட்டு சும்மாதான குந்தியிருக்கிறா? அவள வந்து கொஞ்ச நாளக்கி இங்க இருக்கச் சொல்லுங்களேன். அவளுக்குக் கல்யாணம் காரியமின்னா நீங்கதான நோட்டு எடுக்கணும்” என்று சொன்னாள்.

“சொன்னா வருவாதான், யாரா இருந்தாலும் ஒன்னால ஒரு வாரம்தான் ஓட்ட முடியும். அப்பறம் அது சொத்த, இது சொத்தன்னு பேச ஆரம்பிச்சி, பிரச்சனய உண்டாக்கிடுவ.”

“நான்தான் பிரச்சனய உண்டாக்குற ஆளா?”

“பேச்செ விடு. காசு போனாப்போவுது, ஒரு வேலக்காரிய புடி. ஒனக்கு ஒரு நாள் சம்பளம் வேலக்காரிக்கு ஒரு மாச சம்பளம். அதனால ஸ்கூல்ல இருந்து பசங்கள அழச்சிக்கிட்டு வர்ற மாரி ஒரு வேலக்காரிய தேடிப் புடி.”

“ஒங்க அக்கா மவ வந்தா என்னா? வேலக்காரியோட என்னால மல்லுக்கட்ட முடியாது.” 

“சும்மா இருடி. அக்கா மவ நொக்கா மவன்னுக்கிட்டு.”

“மவ ஊட்டுலப் போயி மாசக்கணக்குல டேராப் போடுற ஒங்கம்மாவ வந்து இருக்க சொல்லுங்களேன் பாப்பம். அதெ செய்யல, இதெ செய்யலங்கிற பேச்சுத்தான். ஒரு நாளக்கி மூணு பஸ் ஏறி சாவுற நான் எதுக்கு மத்தவங்களுக்குச் செய்யணும், பண்ணணும்? யாரால எனக்கு என்னா ஒதவி இருக்கு.”

“ஒங்கம்மாவ வந்து இருக்கச் சொல்லேன்.”

“எதுக்கு? ஒங்க ஊட்டு புள்ளகள எங்கம்மா வந்து வளக்கணுமா? எங்கம்மா என்ன ஒங்க ஊட்டு வேலக்காரியா? ஒதவிக்கு ஒரு சனியனும் இருக்காது. காசு புடுங்க மட்டும் வந்துடுங்க மாசா மாசம்.”

“பேசுறத நிறுத்து. மணி ஆவறது தெரியல? பசங்களோட பென்சில் பாக்ச, பைய செக் பண்ணு. ஏதாச்சும் இல்லாமப் போயிடப் போவுது.”

“எனக்கு மத்த வேல இல்லியா? காய் வேற தீஞ்சிப் போச்சி. ரசம் இன்னம் கொதிக்கல. அடுப்புல ஏகப்பட்ட வேல கெடக்கு. நீங்களே செக் பண்ணுங்க. ஒங்க பைய ரெடி பண்ணிட்டீங்களா?” என்று கேட்டுவிட்டு வேகமாக அடுப்படிக்குப் போனாள். போன வேகத்திலேயே “அடடா?” என்று லட்சுமி அலுத்துக்கொண்டாள். 

“என்னோட பென்சிலக் காணோம்” என்று சின்னப் பையன் சொன்னதும், “நேத்துத்தான புது பென்சில் வாங்கித் தந்தன். ஒரே நாளிலியே எயிதிக் கிழிச்சிட்டியா? எங்கடா தொலச்சா? ஒரு நாளக்கி ஒரு பென்சிலா தொலப்ப?” என்று ராஜு கேட்டதும், பையனுடைய கண்கள் கலங்கின.

அடுப்படியிலிருந்த லட்சுமி “வண்டிய எடுத்து வெளிய வையிங்க, எம் பாட்டில்ல தண்ணீ ஊத்தி வையிங்க. ஆம்பள ஆச்சிக்கு மேலதான் இருக்கு பொம்பள ஆச்சி. கால் காசின்னாலும் கவர்மண்டு வேலன்னு சொன்ன காலமெல்லாம் போயிடிச்சி. வேலய விட்டு நின்னுட்டா போதுமின்னு இருக்கு. எஸ்மா, டெஸ்மான்னு சொல்லி ஒரு உத்தரவிலியே பல லட்சம் பேர ஊட்டுக்கு அனுப்பிட்டாங்களே. இப்பிடி இருக்கிற நாட்டத்தான் ஒலகத்திலியே பெரிய ஜனநாயக நாடுன்னு சொல்றாங்க. எஸ்மா, டெஸ்மான்னு எவன்தான் சட்டம் போட்டான்னு தெரியல” என்று சொல்லிக்கொண்டே குளியலறைப் பக்கம் ஓடினாள் லட்சுமி.

தன்னுடைய பை, லட்சுமியினுடைய பை, பையன்களுடைய பை என்று ஒவ்வொன்றாகத் தயார் செய்துகொண்டிருந்தான் ராஜு. அவசரத்தில் பொருள்களை மாற்றிமாற்றி வைத்தான். முன்னால் கிடக்கிற பொருள்கூட அவனுடைய கண்ணில் படவில்லை. கோபத்தில் “சனியன் புடிச்ச ஊடு இருக்கு” என்று சொன்னான்.

குளித்துவிட்டு வந்த லட்சுமி அவசரஅவசரமாக துணிகளை மாற்றிக்கொண்டு பையன்களுடைய பையைச் சரிபார்த்தாள். “சின்னவனோட ஸ்நாக்ஸ் டப்பாவக் காணுமே. பிஸ்கட் வைக்கலியா?” என்று கேட்டாள். டப்பாவைத் தேட ஆரம்பித்தான் ராஜு. பிஸ்கட் டப்பா போன மாயம் தெரியவில்லை. “வீட்ட ஒழுங்கா வச்சியிருந்தாத்தானே எல்லாம் ஒழுங்கா இருக்கும்.” புலம்பினான் ராஜு.

பெரிய பையன் திடுதிடுவென்று சமையலறைக்கு ஓடிப்போய் கிரைண்டருக்குள் கிடந்த பாட்டிலை எடுத்துவந்து கொடுத்தான். ராஜுவும் லட்சுமியும் சிரித்தனர். “ஆட்டோக்காரன் வத்துடுவானே” என்று சொல்லி பாட்டிலை எடுத்துக்கொண்டு லட்சுமி ஓடினாள்.

“அப்பா என்னோட பெல்ட்டு” என்று சொல்லி பெரிய பையன் சிணுங்கினான். ராஜுக்குச் சொல்ல முடியாத எரிச்சல் உண்டாயிற்று. “எங்கடா வச்ச? வச்ச பொருள் வச்ச எடத்திலெ இல்லாம எங்க போயிடும்? இது வீடா, இல்லெ காடா?” என்று சொல்லிக் கத்தினான். தண்ணீர் பாட்டிலை கொண்டுவந்த லட்சுமி “சாயங்காலம் பஜ்ஜி சுட்டுத் தரண்டா” என்று சொல்லி பெரிய பையனை சமாதானப்படுத்த முயன்றாள். அவன் அழுவதைப் பொருட்படுத்தாமல் அவனுடைய வாயில் உப்புமாவைத் திணித்தாள்.

ஆட்டோ சத்தம் கேட்டதும் பையன்களுடைய புத்தகப்பை, சாப்பாட்டுப்பை என்று எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போனான் ராஜு. பையன்களை இழுத்துக்கொண்டு வந்தாள் லட்சுமி. வாசலுக்கு வந்தபோது அவளுடைய பிடியிலிருந்து கையைப் பிடுங்கிக்கொண்டு சின்னப் பையன் வீட்டுக்குள் ஓடினான். ஓடிய வேகத்திலேயே பெரியவனுடைய பெல்ட்டுடன் ஓடி வந்தான். ராஜுவும் லட்சுமியும் சிரித்தனர். பையன்களை ஆட்டோவில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தனர். 

“ஒரு நாளக்கி எத்தன தடவ கூட்டுனாலும் வீடு களம் மாதிரிதான் இருக்கு” என்று சொன்ன லட்சுமி வீட்டைக் கூட்ட ஆரம்பித்தாள். குளிப்பதற்காக வந்த ராஜுவிடம், “என்னோட வாச்சிய எங்க வைச்சன்னு தெரியல. பாத்தீங்களா?” என்று கேட்டாள்.

“இல்லெ.”

 “ஒங்க பைய ரெடி பண்ணீட்டிங்களா? கொஞ்சம் லேட்டாப் போனாலே பஸ் போயிடும். வழி நெடுக பஸ் மறியல், சால மறியல்னு தெனம்தெனம் ஏதாச்சும் நடக்குறதால போயிச்சேருவமான்னே சந்தேகமாயிடுது. எவன்தான் புளியமரத்த வெட்டி ரோட்டுல போட கத்துக் கொடுத்தானோ. ஒரு பஸ்ஸ வுட்டா, எல்லா பஸ்ஸயும் விடுற மாரி ஆயிடும். வெளிய போயிட்டு வீட்டுக்கு வந்தாத்தான் உண்டு.”

“ரெடியாவு.”

“பக்கத்து வீட்டு மணி நம்ப சின்னப் பையன் வயசுதான். அதுக்குள்ளார எல்லா ரைம்சும் சொல்றான். கையெழுத்தும் வந்துடுச்சாம். அவங்கம்மா சொல்றாங்க.”

“எதுனா வந்துட்டுப் போவுது.” 

“நம்ப பசங்களயும் டியூசன்ல சேத்திடலாமா?”

“நாலு, அஞ்சி வயசிலியே டியூசன் படிச்சி அவனுங்க ஒண்ணும் புடுங்க வேணாம். எல்.கே.ஜி. யூ.கே.ஜி.யிலேயே டியூசன் படிச்சிட்டுத்தான் நீயும் நானும் வேலக்கி வந்தமா? போயி ரெடியாவு. மணி ஆவறது தெரியாம” என்று சொன்ன ராஜு வேகமாகக் குளியலறை பக்கம் போனான்.


உயிர்மை ஜூன் 2025


வியாழன், 12 ஜூன், 2025

‘காலனி’ – சொல் நீக்கத்தின் மூலம் வரலாற்று நாயகனான முதலமைச்சர் இமையம்

 “இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவுப்படுத்தும் அடையாளமாக ‘காலனி’ என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் மாறி இருப்பதால்,


இனி இந்தச்சொல்லை அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப்புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ‘பள்ளப்பட்டி’,‘பறையப்பட்டி’,‘நாவிதன்குளம்’,‘சக்கிலிப்பட்டி’, ‘பறையன்குளம்’ என்று இருக்கும் சாதியைக் குறிக்கும் பல ஊர்ப் பெயர்களும் மாற்றப்படும்” என்று 29.4.2025இல் சட்டமன்றத்தில் அறிவித்ததால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், வரலாற்றில் நீடித்த, நிலைத்த புகழைப் பெற்றுவிட்டார். சிறைக்கு வருபவர்களிடமும் இனி ‘சாதி’ குறித்துக் கேட்கக்கூடாது, சாதி சார்ந்த பதிவுகள் ஆவணங்களில் இடம்பெறக் கூடாது என்று அரசாணையும் வெளியிட்டுள்ளார். 

சமூகத்தின் எளிய மக்கள் வாழும் ஒரு பகுதியைக் குறிக்க, சேரி, பறத்தெரு, பள்ளத்தெரு, அருந்ததியர்தெரு, காலனி, ஹரிஜனகாலனி, பழையகாலனி, புதுகாலனி, அம்பேத்கர்காலனி, ஆதிதிராவிடர் காலனி என்று ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான சொற்கள் இருந்தன, இனி அரசு ஆவணங்களில் இந்தச் சொற்கள் இருக்காது. இரயில்வே காலனி, ஜெயேந்திரர் காலனி, எஸ்.பி.ஐ காலனி என்று நகரங்களில் பல காலனிகள் இருக்கின்றன. அதனால் ‘காலனி’ என்ற சொல்லை நீக்குவதன் மூலம் பெரிய நன்மை ஏற்பட்டுவிடாது என்று சொல்கிறார்கள். நகர்ப்புறங்களில் ‘காலனி’ என்ற சொல் சாதியைக் குறிப்பதில்லை. ஆனால் கிராமங்களில், ‘காலனி’ என்ற சொல் பட்டியலின மக்களைக் குறிக்கும் சொல்லாக, அவர்கள் வாழும் பகுதியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. 

இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாக தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் ‘காலனி’ என்ற சொல் பொதுவான குடியிருப்புப் பகுதி என்று அர்த்தப்படுத்தாமல் பட்டியலின மக்கள் வாழும் பகுதியைக் குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டிருக்கிறது. பள்ளிச்சான்றுகளில்(EMIS), ஆதார் அட்டையில், வாக்காளர்அட்டையில், வங்கி புத்தகத்தில், குடும்ப அட்டையில், பாஸ்போர்ட்டில் என்று அனைத்து அரசு ஆவணங்களிலும் ‘காலனி’, ‘பழையகாலனி’, ‘புதுகாலனி’, ‘அம்பேத்கர்காலனி’ என்ற சொல் இடம் பெற்றிருக்கும்.ஆவணங்களை எடுத்துக் கொண்டு போய் அரசு அலுவலகத்தில் காட்டும்போது முகவரியைப் படித்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரியின் மனதில், “நீயா?” “நீங்களா?” என்ற எண்ணம் ஏற்படுகிறது. உடனே அவருடைய சிந்தனையில், முகத்தில் மாற்றம் நிகழ்கிறது. அந்த மாற்றத்தால் அதிகாரியின் நடத்தையில், உடல்மொழியில், பயன்படுத்தும் சொற்களில் வெளிப்படும் அலட்சியத்தை, புறக்கணிப்பை அனுபவித்தவர்களுக்குத் தெரியும், அது தரும் வலி என்னஎன்பது. 

இதுவரை அரசு ஆவணங்களில் ஊர் என்பது வேறாகவும், ‘காலனி’ என்பது வேறாகவும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இனி ஊர் என்று மட்டும் தான் இருக்கும். 

பிரிட்டிஷ் நிர்வாகம், 90 நாடுகளுக்கு மேல் காலனிய மேலாதிக்கம் செய்தது. பிரான்ஸ் 70 நாடுகளுக்கு மேலாகவும், ஸ்பெயின் 35 நாடுகளுக்கு மேலாகவும், மற்றும் போர்த்துகல், டச்சு, பெல்ஜியம், ஜெர்மனி போன்ற பிற ஐரோப்பிய நாடுகளும் நூற்றுக்கணக்கான பல பகுதிகளை காலனி மேலாதிக்கம் செய்தன. பிறநாட்டினரின் அரசாட்சியின் கீழ், ஆதிக்கத்தின் கீழ், நிர்வாகத்தின் கீழ் இருந்த எல்லாநாடுகளுமே ‘காலனி’ய நாடுகள் தான். மேலாதிக்கம் செய்த நாடுகளையும் காலனிய நாடுகள் என்றுதான் சொல்லப்படுகின்றன. இந்தியாவும் ‘காலனி’ய நாடாகத்தான் இருந்தது.

இன்று நாம் பயன்படுத்துகிற விதத்தில் ‘காலனி’ என்ற சொல்லோ, ‘சேரி’ என்ற சொல்லோ பழையகாலத்தில் பயன்படுத்தப்படவில்லை. ‘சேரி’ என்ற சொல் அனைவரும் ‘சேர்’ந்து வாழும் இடம் என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘காலனி’ என்ற சொல் எப்படித் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறதோ அதே மாதிரி தான், ‘சேரி’ என்ற சொல்லும் இழிவுபடுத்தும் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது

  ‘காலனி’ என்ற சொல் எப்படி உருவானது? உழவுசெய்’ அல்லது ‘சுற்றிவா’ என்னும் பொருள் குறித்த ‘க்வெல்’ என்னும் தொல் இந்தோ ஐரோப்பிய வேர்ச்சொல்லில் இருந்து ‘கொலெயரே’ மற்றும் ‘கொலொனுஸ்’ ஆகிய இலத்தின் வார்த்தைகள் உருவாகின. இவ்வார்த்தைகளுக்கு உழவு செய்பவன் மற்றும் குடியேறுபவன் என்று பொருள் கூறப்படுகின்றன. இவற்றிலிருந்தே அனைத்து நவீன ஐரோப்பிய மொழிகளான பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துக்கீசியம், ஆங்கிலம், டச்சு மற்றும் ஜெர்மன் ஆகியவற்றில் ‘காலனி’ என்ற வார்த்தை உருவாகிறது. கி.பி 15 ம் நூற்றாண்டில் இருந்து கி.பி 20 ம் நூற்றாண்டு வரையிலான ஐரோப்பிய ஏகாதிபத்தியம் செய்த நில ஆக்கிரமிப்புகளுக்கு காலனி ஆதிக்கம் என்ற பெயர் வழங்கப்பட்டது. அந்த ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகள் காலனிகள் என்றே அழைக்கப்பட்டன. 1947-ல் சுதந்திரம் அடையும் வரை இந்தியா பிரிட்டிஷ் காலனி என்றே அறியப்பட்டது. 

கி.பி.1498ஆம் காலகட்டத்தில் போர்த்துக்கீசியரும், அவர்களையடுத்து டச்சுக்காரர்களும், பிரிட்டிஷ்காரர்களும், டேனிஷ்காரர்களும், பிரெஞ்சுக்காரர்களும் இந்தியாவுக்கு வந்தார்கள்.அவர்கள் குடியிருப்பதற்காக உருவாக்கியப் பகுதிகளை‘காலனி’(colony) என்ற வார்த்தையால் அழைத்தார்கள். இந்திய நகரங்களில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கிற குடியிருப்புப் பகுதிகளை ‘காலனி’ என்ற சொல்லால் தான்அழைக்கிறார்கள். ஆனால் காலப்போக்கில் ஏற்பட்ட பல வினோத நடைமுறைகளில், தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதியை ‘ஊரில்’ இருந்து வேறான ‘காலனி’ பகுதியாக அழைக்கும் முறையும் ஏற்பட்டது. ‘காலனி’ என்றாலே பட்டியலின மக்கள் வாழும் பகுதி என்ற சொல்லாடல் தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் வேரூன்றி விட்டது.

கி.மு.7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் தொல்காப்பியத்தில், 'சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து /தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்/ புலனென மொழிப் புலனுணாந் தோரே' என்று பொருளதிகாரத்தில் வருகிறது. சேரியில்(ஊரில்) வாழக் கூடிய மக்களுடைய மொழி எளிமையானது, அனைவருக்கும் புரியக்கூடியது என்ற அர்த்தத்தில் தான் எழுதப்பட்டிருக்கிறது. சமுகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி என்ற பொருளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இளம்பூரணார் உரையும் இதே பொருளைத்தான் குறிக்கிறது.கி.மு. 300 – கி.பி. 100 காலத்தில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் பதினெண் மேற்கணக்கு நூல்களில் ‘சேரி’ என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது. குறுந்தொகையில் ஆறுபாடல்களில்(231, 258, 262, 298, 251) ‘சேரி’ என்ற சொல் இடம்பெற்றிருக்கிறது.தெரு, ஊர், கூடி வாழும் இடம் என்ற பொருளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.“புன்னைஅம்சேரிஇவ்வூர்” (320)“புன்னை ஓங்கிய புலால் எம்சேரி”(251) என்று தான் எழுதப்பட்டிருக்கிறது. பட்டியலின மக்களையோ,அவர்கள் வாழும் பகுதி என்றோ எழுதப்படவில்லை. 

அகநானூற்றில் 15பாடல்களில் (15, 65, 76, 110, 115, 140, 146, 200, 216, 220, 276, 346, 383, 386, 390) ‘சேரி’ என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது. எந்த ஒரு பாடலிலும் பட்டியலின மக்களைக் குறிக்கும் விதமாகவோ,அவர்கள் வாழும்பகுதியைக் குறிக்கும் விதமாகவோ எழுதப்படவில்லை.“யானும் நூன் சேரியனே”(386) “அவர் சேரியாம் செலினே" (110) என்று தான் எழுதப்பட்டிருக்கிறது. நற்றிணையில் 9 பாடல்களில் (63, 77, 145, 175, 171, 249, 331, 342, 380) ‘சேரி’ என்ற சொல் இடம் பெற்றிருந்தாலும் பட்டியலின மக்களைக் குறிக்கும் சொல்லாக, அவர்கள் வாழ்கிற இடத்தைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படவில்லை. “கல்லென் சேரிப் புலவற் புன்னை” (63) என்று தான் எழுதப்பட்டிருக்கிறது. ‘செறிந்த சேரி செம்மல்மூதூர்’ என்று 15ஆவது பாடலில் வருகிறது. இதற்கு நன்றாக வடிவமைக்கப்பட்ட செழுமையான பழைய நகரம் என்றுதான் பொருள். பிரெஞ்சுமொழியில் ‘சேரி’ என்ற சொல் ‘அன்புள்ள’ என்ற பொருளில் தான் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. 

கி.பி. 2ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மதுரைகாண்டத்தில் –புறஞ்சேரி இருத்தகாதையில், கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளும் மதுரை நகருக்கு வெளியே ‘மாதிரி’ வீட்டில் தங்கியிருந்த இடம் புறஞ்சேரி. அங்கே தங்கியிருந்தவர்கள் பிராமணர்கள். சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலத்தில் பிராமணர்கள் ஊருக்குள், அதாவது சேரிக்குள் இல்லை. ஊருக்கு வெளியே ‘புறஞ்சேரி’யில் இருந்திருக்கிறார்கள். புறஞ்சேரியில் வாழ்ந்தவர்கள் எப்படி சேரிக்குள் வந்தார்கள் என்பதையும்,சேரிக்குள் வாழ்ந்தவர்கள் எப்படி புறஞ்சேரிக்குள் வந்தார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வரலாற்றைப் படிக்க வேண்டும். கி.பி.6ஆம் நூற்றாண்டில் பக்தி இலக்கியம் எழுதப்பட்டாலும் சோழர்கள் காலத்தில்தான்அவை பரவலாக்கப்பட்டன.

கி.பி.7, 8-ஆம் நூற்றாண்டுகளிலும், அதன் பிறகு சோழர்கள் ஆட்சியின்போதும், முன்னோர் வழிபாடு, நடுகல் வழிபாடு மற்றும் பிற சிறுதெய்வ, நாட்டார் வழிபாட்டு முறைகளைத் தவிர்த்துப் பெருந்தெய்வ வழிபாட்டு முறை மேலோங்குகிறது. பிரமாண்டமான கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆகமவிதிகள் பின்பற்றப்படுகின்றன. சைவசாமிகள் பெருகுகின்றன. அதுவரை சமூகத்தின் பொதுச்சொத்தாக இருந்த கல்வி அறிவு, நாகரிகம், பண்பாடு, கலை அனைத்தும் கோயிலின் கருவறைக்குள் இருந்த இருட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்படுகின்றன. கருவறையின் கதவைத் திறக்கிற அதிகாரம் பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டதும், கோயிலுக்குள் யார் வர வேண்டும், யார் வரக் கூடாது, யார் எங்கே வாழ வேண்டும், யார் படிக்க வேண்டும், யார் படிக்கக் கூடாது, கோயில் இருக்கும் தெருவில் யாரெல்லாம் நடக்கக்கூடாது என்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டு, மன்னர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அவை நடைமுறைக்கு வந்த பிறகுதான் (மனுநீதி), புறஞ்சேரி ஊரின் மையமாகவும், ஊரின் மையமாக இருந்த சேரி புறஞ்சேரியாகவும் மாறுகிறது. சேக்கீழார் எழுதிய பெரியபுராணத்தில் தான் முதன் முதலாக ‘தீண்டாச்சேரி’ என்ற சொல் இடம் பெறுகிறது. இது 12-ஆம் நூற்றாண்டு. இக்காலகட்டத்தில் தான் பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நடந்தால் தீட்டு என்ற கருத்தாக்கம் தமிழர் வாழ்வில் வலுவாக நிலைபெறுகிறது.கேரள மாநிலம் வைக்கத்தில்உள்ள வைக்கத்தப்பன் (சிவன்கோயில்) கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் நடப்பதற்கு உரிமை கேட்டுத்தான் பெரியார் போராடினார், சிறை சென்றார்.

சோழர்கள் ஆட்சிக்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்தவர்கள் விஜயநகரப் பேரரசு(14ஆம்நூற்றாண்டுமுதல்17ஆம்நூற்றாண்டுவரை). சோழர்களை விடவும் விஜயநகரப் பேரரசைச் சேர்ந்த மன்னர்கள், வர்ணாசிரம தர்மத்தைக் கூடுதல் அக்கறையுடன் பின்பற்றவும், செயல்படுத்தவும், பாதுகாக்கவும் செய்தார்கள். விஜயநகரப் பேரரசுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் (16ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டு வரை) வைதீக முறையையும் வர்ணாசிரம தர்மத்தையும் மிக வன்மையுடன் செயல்படுத்தி போற்றிப் பாதுகாக்கவே செய்தார்கள். இவர்களுடைய காலத்தில் தான் சிற்றிலக்கியங்கள் செழித்தன. நாயக்கர்கள், மராட்டியர்கள் மற்றும் நவாபுகளின் ஆட்சியின் முடிவின் போது தான் பிரிட்டிஷ் நிர்வாகம் வருகிறது. 

பட்டியலின பழங்குடி மக்களை மேன்மைப்படுத்துகிறேன் என்று சொல்லி ‘ஹரிஜன்’ என்று அழைத்தார் காந்தி. கோயிலுக்குள் போகவும், கோயில் இருக்கும் தெருவில் நடக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்த மக்கள் எப்படி ஹரியோட குழந்தைகளாக இருக்க முடியும்? ‘ஹரிஜன காலனி’ என்ற புதுப்பெயரை உருவாக்கியவர் காந்தி தான்.

மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு, தீண்டாமைக்குள்ளான அனைத்து மக்களையும் ஒரே அடையாளத்தின் கீழ் கொண்டுவந்து பட்டியலிட்டனர் பிரிட்டிஷ் நிர்வாகத்தினர். இது சிறுசிறு மன்னர்களையும், நிர்வாகப் பிரிவுகளையும் ஒன்றிணைத்து ‘இந்தியா’ என்று அழைத்தது போலத்தான். பறையர், பஞ்சமர் என்று அழைக்கக் கூடாது, ‘ஆதிதிராவிடர்’ என்று அழைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில்1922இல் தீர்மானம் கொண்டு வந்தார் எம்.சி.ராஜா. சட்டம் நிறைவேறிய காலத்திலிருந்து இன்றுவரை ‘ஆதிதிராவிடர்’ என்று தமிழிலும், SC என்று ஆங்கிலத்திலும் சாதிச் சான்றுகளில் இடம் பெறுகிறது. இந்த மண்ணின் பூர்வகுடிகள், திராவிட இனத்தைச்சேர்ந்தவர்கள் (பறையர்கள் அல்ல). ஆதிதிராவிடர்கள் என்று முதன் முதலில் பேசியும் எழுதியும் வந்தவர் அயோத்தித்தாச பண்டிதர். 

பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் இந்தியா சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது. அவர்களது வாழிட நிர்வாக வகைப்படுத்தல் பதிவேடுகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ‘சேரி‘ மற்றும் இதர சாதி குறித்த இழிபெயர்கள் ஆவணங்களில் அச்சேறின. அந்தப் பட்டியலில் நாளடைவில் ‘காலனி’ என்ற சொல்லும், ‘சேரி’ என்ற சொல்லுக்குச் சமமாக பட்டியலின மக்கள் வாழும் பகுதியை மட்டுமே அடையாளப்படுத்துகிற சொல்லாக சேர்ந்து கொண்டது. அதனால் இன்றும் தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான ஊர்களின் பெயர்கள் ‘சேரி’ என்ற சொல்லோடு முடிவதைப் பார்க்க முடியும். ‘பாண்டிச்சேரி’, ‘வேளச்சேரி’ – என்பது படியலினத்தவர் வாழும் பகுதி மட்டுமே அல்ல. ‘சேரி’,‘காலனி’ என்ற சொற்கள் எல்லோரையும் அவமானப்படுத்துவதில்லை.எல்லோரும் வாழும் இடத்தைக் குறிப்பதில்லை. நாகப்பட்டினமாவட்டத்தில் ‘பார்ப்பனசேரி’ என்று ஒரு ஊர் இருக்கிறது.

 முதலமைச்சரின் அறிவிப்பினால் ஊரகக் கிராமப்புறங்களில் அரசு ஆவணங்களில் இருக்கும் ‘காலனி’ என்ற சொல் நீக்கப்படும். நகர்ப்புறங்களில் இருக்கும் பொதுவான குடியிருப்பைக் குறிக்கும் ‘காலனி’ என்ற சொல் ஆவணங்களிலிருந்து நீக்கப்படாது. ‘காலனி’ என்ற சொல்லுக்கு மாற்றாக மலர்களின் பெயர்கள், புலவர்களின் பெயர்கள், அறிவியல் அறிஞர்களின் பெயர்கள் வைக்கப்படும். எக்காரணம் கொண்டும் அரசியல் தலைவர்களின் பெயர்கள் வைக்கப்படமாட்டாது.

‘காலனி’ என்ற பெயர் நீக்கப்படும் என்ற அறிவிப்பு சமூகநலத்திட்ட அறிவிப்பல்ல. உலகமே ‘காலனி’ என்ற சொல்லை வேறுவிதமாகப் பயன்படுத்துகிறபோது தமிழ்நாட்டில் சாதியைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்துவது சட்டத்திற்குப் புறம்பானது. அதனால் அச்சொல்லை நீக்குகிறேன் என்று அறிவித்திருக்கிற தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காலம் தோறும் போற்றப்படுவார். 


முரசொலி 12.06.2025



திங்கள், 9 ஜூன், 2025

சொந்த வீடு - இமையம்

 படுக்கையை விட்டு எழுந்த துளசியம்மாள் ஜன்னலுக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு வெளியே பார்த்ததும், ‘ஊருக்குப் போய் வந்தால் என்ன’ என்ற எண்ணம் வந்தது.

“மவனும் மருமவளும் பெரிய வேலயில இருக்கயில, நீ மட்டும் எதுக்கு இங்க இருந்துகிட்டு ஒத்தயில கஷ்டப்படுற? ஒம் மருமவ ஒனக்கு மட்டுமா தனியா ஒல வச்சி வடிக்கப்போறா? போயி நாலு ஊரு, நாட்டெ பாத்துட்டு வா” என்று ஊரில் சொல்லாதவர்கள் இல்லை. அப்படிச் சொல்லும்போதெல்லாம் துளசியம்மாளுக்குச் சந்தோஷமாக இருக்கும். ஊரை விட்டுவந்து இருபத்தியெட்டு நாட்களாகிறது. இப்போது ஊருக்குப் போனால் ஊர்க்காரர்கள், “மவன் ஊட்டுக்குப்போயி இட்லியும் தோசயும் தின்னதால ஊரு நெனப்பெல்லாம் இல்லாமப் போயிடுச்சா?” என்றுதான் கேட்பார்கள். 

ஊருக்குப்போய் தன் மகனும் மருமகளும் எப்படிப்பட்ட வீட்டில் இருக்கிறார்கள், வீட்டில் என்னென்ன பொருட்களை வைத்திருக்கிறார்கள், என்னென்ன விதமான சாப்பாடெல்லாம் சாப்பிடுகிறார்கள் என்பதையெல்லாம் சொல்ல வேண்டும் என்ற ஆசை உண்டாயிற்று. மகனைப் பற்றியும் மருமகளைப் பற்றியும், அவர்களுடைய பெருமைகளைப் பற்றியும் சொல்வதற்காகவே ஊருக்குப் போக வேண்டும் என்று நினைத்தாள். 

ஊருக்குப் போகிறேன் என்று சொன்னால், “வயசான காலத்திலெ, சரியா நடக்க முடியாத நிலையில, ஒத்தயில தனியா எதுக்கு இருக்கணும்? ஒங்களால எங்களுக்கு என்னா தொந்தரவு. ஊருக்குப் போறங்கிற பேச்ச விட்டுட்டு வேற பேச்சு பேசுங்க” என்று சொல்லி வாயை அடைத்துவிடுவார்களோ என்று யோசித்தாள்.

மகனுடைய பெருமைகளையும் மருமகளுடைய பெருமைகளையும் ஊரார்களிடம் போய் சொல்லாமல் எப்படி இருப்பது? ஒரே ஒரு நாள் மட்டும் போய்விட்டு வந்துவிடுகிறேன் என்று சொல்லிப் பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு அறையைவிட்டு வந்தாள்.

ஹாலில் லதா புத்தகம் படித்துக்கொண்டிருந்தாள், கெளதமும், கௌசிகாவும் அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ஏதோ எழுதிக்கொண்டிருந்தனர். ராமன் தன் அறையில் கணினியில் எதையோ டைப் செய்துகொண்டிருந்தான். துளசியம்மாளை யாருமே பார்க்கவில்லை. அடுப்படிக்கு வந்து தண்ணீர் குடித்தாள். 

ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்ததிலிருந்து வீடு என்னவாயிற்றோ என்ற கவலை வந்துவிட்டது. துளசியம்மாவுக்கு ஒரு மாதத்திற்கு முன் உடம்பு சரியில்லாமல் போய், படுத்த படுக்கையாகிவிட்டதைப் பார்க்க வந்த ராமன், “இனிமே நீ இங்க இருக்கவே கூடாது. நெலம் இருக்கிறதாலதான இங்கியே இருக்கணுங்கிற. அது இல்லன்னா இங்க என்னா இருக்கு? நெலத்தயும் வீட்டையும் வித்துடலாம். ஒன்னெ இனிமே தனியா விடுறது நல்லதில்லெ” என்று சொல்லிக் கட்டாயப்படுத்தி நிலத்தை விற்றான்.

வீட்டையும் தோட்டத்தையும் விற்க முடியாது என்று துளசியம்மாள் பிடிவாதம் பிடித்ததாலும் அவன் அக்கா மூன்று பேருமே வீட்டை விற்க வேண்டாம் என்று சொன்னதாலும்தான் விற்கவில்லை. நிலத்தை விற்ற கையோடு சென்னைக்கு வந்ததுதான். வீடு என்னவாகியிருக்கும்? தோட்டத்தில் இருந்த புளியமரத்தின் பழத்தை எல்லாம் யாராவது உலுக்கிக்கொண்டு போய்விடுவார்களே, தோட்டத்தைச் சுற்றி நின்றுகொண்டிருந்த ஏழெட்டு வேப்ப மரங்களிலிருந்த பழத்தையெல்லாம் பிள்ளைகள் பொறுக்கிக்கொண்டு போய்விடுவார்களே என்று பல கவலைகள் மனதில் நிறைந்தது. வீட்டில் தினமும் யாரையாவது விளக்கு ஏற்றச் சொல்லிவிட்டு வந்திருக்கலாம். ராமன் படுத்திய அவசரத்தில் ஒழுங்காக எதையும் செய்யவில்லையே என்று தன்னையே நொந்துகொண்டாள். 

துளசியம்மாள் அறைக்குள் வந்ததுகூடத் தெரியாமல் ராமன் கணினியில் எதையோ டைப் செய்துகொண்டிருந்தான். ராமனுடைய முகத்தைப் பார்த்தாள். இந்த நேரத்தில் அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தாள். அப்போது எதேச்சையாகப் பார்த்த ராமன், “என்னம்மா?” என்று கேட்டான். “ஒண்ணும் இல்லப்பா சும்மாதான் வந்தன். நீ வேலயப் பாரு” என்று சொல்லி, ராமனுடைய நாற்காலிக்கு எதிரில் இரண்டு மூன்றடி தள்ளி தரையில் உட்கார்ந்தாள். “ஊட்டுக்கு வந்ததிலிருந்து இந்த மிஷினிலியே ஒக்காந்து வேல பாக்குறியே. கண்ணு கெட்டுப் போவாது? செத்த படுத்தா என்ன?” என்று கேட்டாள். 

ராமன் கண்களை அழுத்தி தேய்த்துவிட்டுக்கொண்டு, “பொழப்பு அப்பிடி இருக்கு. என்னா செய்ய முடியும். பதவி பெருசுன்னா வேலயும் அப்படித்தான இருக்கும். மத்தியானம் சாப்புட்டியா?” என்று கேட்டான்.

“சாப்புடாம என்னப்பா.”

“சாயங்காலம் டீ, காபி குடிச்சியா?” என்று கேட்டுவிட்டு, ஹாலில் உட்கார்ந்திருந்த லதாவைப் பார்த்து, “சாயங்காலம் டீ, காபி ஏதாச்சும் அம்மா சாப்புட்டிச்சா?” என்று கேட்டான். லதா பதில் சொல்லவில்லை. “பொயிதோடவே சாப்புட்டம்பா” என்று துளசியம்மாள்தான் சொன்னாள்.

“ஏம்மா ஒரு மாதிரியா இருக்க?” 

“எப்பியும்போல நல்லாத்தான் இருக்கன், ஊருக்குப் போயிட்டு வரலாமின்னு நெனைக்கிறன்.”

“பேசாம இரும்மா. ஊருகீருன்னுக்கிட்டு.” 

“'ஊடு என்னாச்சின்னு தெரியல. நான் இங்க வந்த நாளா வெளக்கு ஏத்தாம ஊடு இருண்டுபோயிக் கெடக்கும்.”

“அதுக்குத்தான் நான் அன்னிக்கே அதெயும் சேத்து வித்துடலாமின்னு சொன்னன். நீ கேக்கல, அக்காவுளும் கேக்கல. அந்த ரவ ஊட்டுக்காக நீ ஊருக்குப் போவணுமா? திரும்பியும் ஒடம்பு சரியில்லாம போனா என்னா செய்வ?” கரிசனத்தோடு கேட்டான் ராமன்.

“நீ பொறந்து வளந்த ஊட்ட மட்டரகமா பேசாதப்பா.” 

“நான் பொறந்தங்கிறதுக்காக அந்த ரவ வீட்டுலியே சாவுறமுட்டும் இருக்கச் சொல்றியாம்மா?”

“கூடுன்னாலும் குருவிக்கு அதுதாம்ப்பா அரண்மன. இன்னிக்கி நம்பளுக்குப் பணம் காசி வத்துட்டதால அது ஊடு இல்லன்னு ஆயிடாது. நீ அந்த ஊட்டுக்கு வர வாணாம். நான் மட்டும் போயி என்னா ஏதுன்னு பாத்துட்டு வந்துடுறன்.”

“மொதல்ல போயிப் பாத்துட்டு வரன்ம்ப. அப்புறம் அங்கியே தங்குறன்ம்ப. ஏசி போட்டுக்கிட்டு நான் இங்க படுத்துத் தூங்குவன். நீ தனியா அங்க மண்ணுத் தரயில கெடப்பியாம்மா?” என்று ராமன் கேட்டது துளசியம்மாளின் நெஞ்சில் சந்தோஷத்தை உண்டாக்கியது. மகன் தன்மீது பாசத்தோடுதான் இருக்கிறான் என்று நினைத்தாள்.

பத்து வருசத்துக்கு முன்பு திடீரென்று ஒருநாள் ராமன் வந்து, “எங்கூட வேல பாக்குற பொண்ணு ஒண்ணு இருக்கு. நம்ப குடும்பத்துக்குத் தோதுபட்டுவரும். ரெண்டு சம்பளம் வந்தா நம்பளுக்கு நல்லதுதான? பொண்ணு நம்ப இனம்தான்” என்று சொன்னான்.

“பொண்ணு ஒனக்குப் புடிச்சிருந்தா சரி. நீதான அந்தப் பொண்ணுகூட வாழப் போற?” என்று துளசியம்மாள் சொன்னாலும், தன் மகள்களை அனுப்பி பெண் எப்படி இருக்கிறாள் என்று பார்த்துவர அனுப்பினாள். பெண்ணைப் பார்த்துவிட்டு வந்து, “பொண்ணு நல்ல நிறமாத்தான் இருக்கு. படிச்சியிருக்கு. தம்பிகூடத்தான் வேல பாக்குது. ரெண்டு சம்பளம் வந்தா, தம்பி நல்லாதான இருப்பான்” என்று மூன்று பேருமே சொன்னார்கள்.

லதாவுக்கும் ராமனுக்கும் கல்யாணம் நடந்த பிறகு எப்போதாவது சென்னைக்கு வரும்போது, ‘படிச்சி இருக்கா, வேலயில இருக்கா, அவகிட்ட வாயக் கொடுக்கக் கூடாது’ என்ற எண்ணத்தில் லதாவிடம் தேவையில்லாமல் ஒருவார்த்தைக்கூட பேச மாட்டாள் துளசியம்மாள். ஏதாவது பேச வேண்டும் என்றால்கூட ராமனிடம்தான் சொல்வாள். துளசியம்மாள்தான் என்றில்லை, அவளுடைய மூன்று மகள்களும்கூட அநாவசியமாக லதாவிடம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டார்கள். 

“படிச்ச பொண்ணு, வேலயில இருக்கிற பொண்ணு, மெட்ராஸிலியே பொறந்து வளந்து, வேல பாக்குற பொண்ணு, அதுகிட்ட வாயக் கொடுக்க வேணாம்” என்று ஒதுங்கிப்போய்விடுவார்கள். ஊர்த் திருவிழா, உறவினர்களுடைய ‘நல்லது கெட்டது’ என்று நூறு சொன்னால் பத்து விசேஷத்திற்குத்தான் லதா வருவாள். மற்ற விசேஷங்களுக்கு ஏன் வரவில்லை என்று கேட்டால், ‘வேல, வர முடியல” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிடுவாள். அவளுடைய அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்காவிடம் பேசுகிற வார்த்தைகளில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட ராமன் சம்பந்தப்பட்ட ஆட்களிடம் பேச மாட்டாள்.

ராமன் கோபித்துக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே, துளசியம்மாளும், அவளுடைய மகள்களும் லதாவிடம் அதிகம் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டார்கள். வாய்த்துடுக்கான ராமனுடைய கடைசி அக்கா ராஜம்மாள்கூட லதாவிடம் குறைத்தே பேசுவாள். அப்படி இருக்கும்போது எதற்காக லதா ஒரு மாதிரியாக இருக்கிறாள் என்பதுதான் துளசியம்மாளுக்குப் புரியவில்லை. 

“சும்மா கெடக்குற ஊட்டெ பாத்து ஊருல நாலு பேரு நாலு விதமா பேச மாட்டாங்க? நம்பப் பொருளுன்னு ஊருல அது ஒண்ணுதான இருக்கு. அதெ என்னா ஏதுன்னு பாத்துட்டு வரக் கூடாதா? ஒனக்கும் ஒம் பொண்டாட்டிக்கும்தான் பேங்க் வேல ஓயல. நாள் பொயிதினிக்கும் சீக்குப்புடிச்ச கோழியாட்டம் குந்துன எடத்திலதான் நான் குந்திக்கெடக்குறன். சும்மா குந்தியிருந்து எனக்குப் பழக்கம் இருக்கா? கவருமண்டுல கேசு அடுப்பு தரன்னாங்க. போன வருசம் டி.வி. கொடுத்தானில்லெ அந்த மாரி. ஊருல அப்பப்ப தலய காட்டுலன்னா மணியக்காரன் கேசு அடுப்ப எடுத்துக்கிட்டுப்போயிடுவான். அப்பறம் மாசா மாசம் வாங்குற இலவச அரிசியும் வாங்கல.” 

“விடும்மா ஊடு, காடுன்னுக்கிட்டு. அதெல்லாம் ஒரு வீடா?”

“என்னப்பா அப்பிடிப் பேசுற? நீ பொறந்து வாயிந்த மண்ணு அது. அந்த ஊட்டுலதான் நான் ஒங்கப்பாகூட நாப்பத்தாறு வருசம் இருந்தன். அவுரு செத்த இந்த ஏயி வருசமாவும் அந்த ஊட்டுலதான் இருந்தன். இந்த இருவத்தி எட்டு நாளாத்தான் இங்க இருக்கன்.”

“ஒனக்கு இங்க என்னா கொற, சொல்லு. லதா எதுனா சொன்னாளா?”

“அந்தப் பொண்ண கொற சொன்னா வாயி அயிவிப் போயிடும். ஊரான் ஊட்டுப் புள்ளெய பாத்து பொழப் பேச்சுப் பேசுறதா?” என்று சொன்ன துளசியம்மாள். திரும்பி லதாவின் பக்கம் பார்த்தாள். அதுவரை ராமன் உட்கார்ந்திருந்த அறையைப் பார்த்துக்கொண்டிருந்த லதா சட்டென்று முகத்தைத் தொலைக்காட்சிப் பக்கம் திருப்பிக்கொண்டாள். அது தெரிந்ததும் துளசியம்மாளுக்குத் தான் பேசுவது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் வந்தது. 

“அந்த ஊட்டயும் வித்துப்புட்டாதான் நீ ஊரு பேச்ச எடுக்க மாட்டன்னு நெனக்கிறன்.”

“அப்பிடிச் செய்யாத தம்பி. நான் போனதுக்குப் பின்னாடி ஒன் இஷ்டம்போல செஞ்சிக்க. அந்த ரவ ஊட்டுலதான் நாத்தனாரு ரெண்டு பேருக்கும் கொழுந்தனாரு மூணு பேருக்கும் கண்ணாலம் கட்டிவச்சன். ஒன்னோட அக்காளுவோ மூணு பேரு கண்ணாலமும் அந்த எடத்திலதான் நடந்துச்சி. ஒன்னோட ஒரு கண்ணாலம் மட்டும்தான் மண்டபத்திலே நடந்துச்சி. நாலு புள்ளெய நான் அந்த எடத்திலதான் பெத்தன். அக்காளுவோ மூணு பேரும் ஆளுக்கு மூணு நாலு புள்ளிவோன்னு அதுலதான் பெத்தாளுவோ. ஒரு கொறயும் கெடயாது. எல்லாப் புள்ளிவுளும் ஒரு பழுதும் இல்லாம மண்ணுல தரிச்சி நெலச்சி நிக்குதுவோ. நல்ல காரியமின்னு இல்லெ. ஒங்கப்பா சாவோட சேத்து நாலு கெட்ட காரியத்தயும் அந்த ஊட்டுலதான் தம்பி பாத்தன்.”

“அதெல்லாம் சரிம்மா. எல்லாக் காலத்துக்கும் அதையே பேசிக்கிட்டு இருக்க முடியுமா? அந்தக் காலம் வேற, இந்தக் காலம் வேற. ஒங்காலத்திலெ ஒரு வல்லம் சோளமோ வரகோ இருந்தா போதும், ஒரு நாளுபொழுது ஓடிடும். இப்ப அப்பிடியா? எம்மாம் வாங்குனாலும் பத்தல? ஒரு புட்டியில சோளம் வரவுன்னு எடுத்துக்கிட்டுபோயி செட்டிக் கடயிலெ கொடுத்தா உப்பு, மிளகா, புளின்னு கொடுப்பான். இப்ப அப்பிடியா? சோளக் கதிரு கொடுத்துத்தான நானே ஐஸ், மிட்டாயின்னு வாங்கித் தின்னுயிருக்கன். இப்ப தானியத்த கடயில கொடுத்தா எவன் வாங்கிக்கிட்டு பொருளு கொடுக்கிறங்கிறான் சொல்லு.”

“ஊடு முயிக்க மிஷினா வாங்கிப்போட்டா எப்பிடிப்பா சம்பளம் பத்தும்?”

“இன்னிக்கி இருக்கிற ஒலகம் ஒனக்குப் புரியாதும்மா. கம்ப்யூட்டர் இல்லன்னா இந்தப் பசங்களுக்குப் பொழுது போகாது. ஏ.சி.யில்லன்னா தூக்கம் வராது” என்று சொன்ன ராமன் ஹால் பக்கமாகப் பார்த்து, “லதா, தண்ணி கொடு” என்று சொன்னான். லதா படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டுப் போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். அந்த இடத்தில் நிற்பதற்குப் பிடிக்காததுபோல் திரும்பவும் ஹாலில் போய் உட்கார்ந்துகொண்டாள். லதாவின் முகம் எப்போதும் போல் இல்லாமல் இருப்பதாக துளசியம்மாளுக்குத் தோன்றியது. தலைவலியாக இருக்குமா, உடம்பு சரியில்லாமல் இருக்குமா என்று சந்தேகப்பட்டு லதாவின் பக்கம் திரும்பி, “ஒடம்புக்கு முடியலியாம்மா?” என்று கேட்டாள். துளசியம்மாள் கேட்டதைக் காதில் வாங்காத மாதிரி லதா உட்கார்ந்திருந்தாள். தொலைக்காட்சியின் சத்தத்தில் கேட்டிருக்காது என்று நினைத்துக்கொண்டு ராமன் பக்கம் திரும்பினாள். அவன் ஏதோ ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தான்.

அவன் படிப்பதைப் பார்த்ததும் துளசியம்மாள், “நான் ரூமுக்குப் போறம்பா” என்று சொன்னாள். “இரும்மா. என்னா அவசரம்?”

படித்துக்கொண்டிருந்த காகிதத்தை மேசைமீது வைத்தான். மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே தணிந்த குரலில், “சின்ன வயசு புள்ளைங்க மாரி அங்க போறன், இங்க போறன்னுக்கிட்டு அலயாதம்மா. இனிமே அலஞ்சி திரிஞ்சி என்னா செய்யப்போற? மழயில நனயக் கூடாது, வெயில்ல அலயக் கூடாது, காட்டுலப் போயி கஷ்டப்படக் கூடாதின்னுதான என்னெ படிக்க வச்செ?”

“ஆமா.”

“எனக்கு சௌகரியம் வந்தா அது ஒனக்கும் வந்த மாதிரிதான். அதனால வயசான காலத்திலெ எங்கேயும் அலயாம இரு. அந்த வீடு எப்பிடியாவது கெடந்தா போவுது. மொதல்ல ஒன்னெக் கவனிச்சிக்க. என்னோட ஒரு மாச சம்பளத்தோட மதிப்புக்கூட அந்த ஊடு இருக்காது.”

“பணமும் ஊடும் ஒண்ணாவாது தம்பி.” 

“அப்பிடின்னா இது வீடு இல்லியா?”

“ஊட்டுல இருக்கிற நாலு சனமும் சண்டக்காரங்க மாரி மூலாமூலக்கி குந்திக்கிட்டு ஒருத்தருக்கொருத்தரு பாத்துக்காம, பேசிக்காம இருக்கிறதுதான் ஊடா? பத்து சனம் வந்து போற எடத்துக்குப் பேருதான் ஊடு. நம்ப ஊட்டுல என்னிக்காச்சும் ஒரு மூட்டெ தானியம்கூட இல்லாம இருந்திருக்கா? இல்லாதவங்க, வழிப்போக்கின்னு யாராச்சும் ஒரு நாளாச்சும் வந்து சோறு வாங்காம இருந்திருக்காங்களா? காலயிலெ ஏயி எட்டு மணிக்கி ஊட்டப் பூட்டிட்டுப் போயி, வெளக்கு வைக்கிற நேரத்துக்கு வந்து அவதிஅவதின்னு எதியோ ஆக்கித் தின்னுப்புட்டு தூங்க வேண்டியது. அப்புறம் காலயில எயிந்திருச்சி ஓட வேண்டியது” என்று துளசியம்மாள் சொன்னபோது லதா திரும்பி அறைப் பக்கம் பார்த்தாள். அவளுடைய பார்வையும் முகமும் ஒரு மாதிரியாக இருப்பதாக துளசியம்மாளுக்குத் தெரிந்தது.

“இது நம்ப ஊர் இல்ல. புரியுதாம்மா” என்று ராமன் கேட்டான்.

படிக்கிற காலத்திலும், வேலைக்குப் போன பிறகும், ராமன் அதிகமாகப் பேச மாட்டான். கல்யாணமான இந்தப் பத்து வருசத்தில் அவன் துளசியம்மாளிடம் பேசிய வார்த்தைகளை எண்ணிவிடலாம். இங்கு வந்து நிலையாகத் தங்கிய இந்த இருபத்தியெட்டு நாட்களில் இன்றுதான் அதிசயமாகக் கூடுதலாகப் பேசியிருக்கிறான். அதுகூட அவளுக்குப் பிடிக்கவில்லையா? “சாப்புட்டியா?”, “டீ குடிச்சியா?”, “ஜாக்கிரதயா பூட்டிக்கிட்டு, டி.வி.யப் பாத்துக்கிட்டு இரு” என்பதுதான் அவன் தினமும் பேசுகிற வார்த்தைகள். அதற்கு மேல் அவனும் பேச மாட்டான், இவளும் பேச மாட்டாள். அப்படியிருக்கும்போது லதா கோபப்படுவதற்கு விசயமில்லையே. தான் இங்கு வந்திருப்பது அவளுக்குப் பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் உண்டாயிற்று. “யாரு மனசுல என்னா இருக்கோ” என்று சொல்லி முனகினாள். “ஊடு மட்டுமில்லெ. ஊட்டுக்குப் பின்னால இருக்கிற புளியமரத்துப் பழங்களயும், வேப்பமரத்துப் பழங்களயும் யாராவது பறிச்சிக்கிட்டுப் போயிடுவாங்கப்பா, அதனால் அதெயெல்லாம் பொறுக்கி உரு சேத்துட்டு வரன். அக்காளுவுளயும் பாத்திட்டு வந்துடுறன். ஊர்ல இருந்தா வாராவாரம் மொற வச்சிக்கிட்டு வந்து பாப்பாளுங்க. நான் இல்லன்னு நம்ப ஊட்டுக்கு வராம இருப்பாளுவோ. இல்லாதப்பட்ட ஊடுன்னாலும் பொறந்த எடத்துக்குப் போயிட்டு வரதுதான் பொண்ணுங்களுக்குச் சந்தோஷம்”

“இல்லாதவங்க பறிச்சிக்கிட்டுப் போனா போறாங்கம்மா. எட்டணா, ஒரு ரூவாய எல்லாம் பெருசா பேசிக்கிட்டு. விடும்மா அந்தப் பேச்ச. பேன் காத்து சூடாயிருந்தா ஏ.சி. போடச் சொல்றன். அந்த ரூம்ல போயி படுத்துக்க” என்று ராமன் சொன்னபோது அறைப் பக்கம் லதா பார்த்ததை துளசியம்மாள் கவனித்தாள்.

“அதெல்லாம் வாண்டாம்ப்பா” என்று சொன்னாள். லதாவினுடைய மனதை அறிந்துவிட வேண்டும் என்று நினைத்தாள். “அந்தப் புள்ளெதான செருமப்படுது. வேலைக்கும் போயிக்கிட்டு ரெண்டு புள்ளெவுளயும் வளக்கிறதின்னா சும்மாவா? அந்தப் புள்ளெ ஊட்டுலயிருந்தும் ஒருத்தரும் வந்து ஒத்தாச பண்ற மாரி தெரியல. ஒண்டிக்காரப் புள்ளெ என்னாப் பண்ணும்” என்று சொல்லிவிட்டு லதாவைப் பார்த்தாள்.

லதா இந்த முறை திரும்பிப் பார்க்காதது மட்டுமல்ல; துளசியம்மாளின் பேச்சைக் கேட்ட மாதிரியே காட்டிக் கொள்ளவுமில்லை. தனியாக ஆளில்லாத இடத்தில் உட்கார்ந்திருப்பது மாதிரி இருந்தது அவளுடைய தோற்றம். ‘ஊருக்கு எதுக்குப் போறங்குறீங்க? இங்க உங்களுக்கு என்ன கஷ்டம், கடைசி காலத்தில நாங்கதான உங்களப் பாக்கணும். பேசாம இருங்க’ என்று ஒரு வார்த்தை ஏதாவது லதா சொல்வாள் என்று எதிர்பார்த்தாள். அவளிடமிருந்து சிறு முனகல் சத்தம்கூட வரவில்லை. “பொய்யாக்கூட பேசலியே, வாய் வாத்தக்கூட அவளுக்குப் பஞ்சமாப் போயிடிச்சே” என்று பொருமினாள் துளசியம்மாள்.

 ‘இதே அவளோட அம்மாவா இருந்தா வாய மூடிக்கிட்டு இருப்பாளா? அவளோட சொந்தக்காரங்களா இருந்தா வாயத் தொறக்காம இருப்பாளா?’ என்று யோசித்த துளசியம்மாளுக்கு முதன்முதலாக லதாவின் மீது சந்தேகம் வந்தது. சந்தேகக் கண்ணோடு லதாவைப் பார்த்தாள். “சரிம்மா வேற ஒண்ணுமில்லியே” என்று கேட்டான் ராமன்.

“எங்கிட்ட என்னப்பா சேதி இருக்கப்போவுது? ஒக்காந்தே கெடக்குறதுதான் கஷ்டமா இருக்கு. தனியா ஆளில்லாத ஊட்டுல எப்பிடி பொயிதினிக்கும் ஒக்காந்திருக்கிறது?”

“ஒக்காந்து இருக்கிறதிலெ என்னம்மா கஷ்டம்?”

“வேல செய்யாம எப்பிடித் தம்பி இருக்கிறது? ஒக்காந்துகிட்டே சோறு தின்னா, தின்னச் சோறு எப்பிடிச் செரிமானம் ஆவும்?”

“எழுவது வயசிக்கு மேல ஒன்னால என்னம்மா வேல செய்ய முடியும்?”

“இப்பிடி இருக்கிற பொருள அப்பிடித் தூக்கிப்போடாம, அப்பிடி இருக்கிற பொருள இப்பிடித் தூக்கிப்போடாம எப்பிடியிருக்கிறது? சும்மா குந்திக்கெடக்குறது பித்துப் புடிச்சாப்ல இருக்கு தம்பி.” துளசியம்மாவின் குரலில் சலிப்பு கூடியிருந்தது.

“வீட்டுல இருக்க போர் அடிச்சா அக்கம்பக்கத்திலெ பேசிக்கிட்டு இரேன். பக்கத்தில இருக்கிற கோயிலுக்குப் போயிட்டுவாயேன்.”

“எந்தச் சனத்த தெருவுல பாக்க முடியுது? காலயிலேயே அங்க இங்கேன்னு ஓடிப்போவுதுவோ. இருக்கிற ஒண்ணு ரெண்டு பேரும் கேட்டப் பூட்டிக்கிட்டு, கதவச் சாத்திக்கிட்டு உள்ளாரியே டி.வி.யப் பாத்துக்கிட்டு கெடக்குதுவோ. அநாத காட்டுக்கு வந்த மாரி இருக்கு. காரு சத்தம்தான் ராத்தியும் பகலும் ஓயாம கேக்குது. சத்தத்தில தூக்கம் வர மாட்டங்குது. நீ சொல்ற கோயிலுக்குப் போயிட்டு, திரும்ப ஊட்ட கண்டுபிடிச்சி வர வழி தெரியுமான்னு தெரியல.”

“சென்னைன்னா அப்பிடித்தாம்மா இருக்கும். பசங்கக்கூட பேசிக்கிட்டு இருக்க வேண்டியதுதான?”

“ஒனக்காவது ஒரு நேரம் வுட்டா ஒரு நேரம் ரெண்டு வாத்த பேச நேரம் இருக்கு. அதுவுளுக்கு அதுகூட இல்லெ. இங்கிலிஸிலியே பேசிக்குதுவோ. காலயிலேயே போயி சாயங்காலம்தான் வருதுவோ. அப்புறம் எயிதுதுவோ. அதிலயும் ரவ நேரம் கெடச்சா இந்தா இந்த மிஷினுக்கு மின்னாடி வந்து குந்திக்குதுவோ. ஒம் புள்ளிவுள ஓடி ஆடி வௌயாண்டு நான் என் கண்ணால பாக்கல தம்பி.”

“இங்கலாம் அப்பிடித்தாம்மா.”

“நான் ஊர்ல இருந்தா தண்ணிக்கிப் போகயில ரெண்டு பேத்துக்கிட்ட பேசலாம். வெளிய வாசலுக்குப் போவயில ரெண்டு பேத்துக்கிட்ட பேசலாம். ஊடு கூட்ட, வாச கூட்டன்னு எம் பொயிது போயிடும். வாசல்ல ஒக்காந்தா ஊரு சனங்களயே பாத்துப் பேசிப்புடலாம். இங்க இருந்தா, ஒம் மூஞ்சிய நான் பாக்கலாம், எம் மூஞ்சிய நீ பாக்கலாம், அவ்வளவுதான்” என்று சொல்லும்போது லதா எதையோ தேடுவது மாதிரி ராமனுக்குப் பக்கத்தில் வந்து தேடினாள். அதைப் பார்த்ததும் துளசியம்மாளுக்கு என்ன தோன்றியதோ சற்று அழுத்தமாகவே, “நம்ப ஊட்டுக்குப் போனாத்தான் தம்பி எனக்கு நல்லாத் தூக்கம் வரும்” என்று சொன்னாள். “என்னம்மா சொல்ற?” என்று ஆச்சரியத்துடன் ராமன் கேட்டான்.

பக்கத்திலிருந்த லதா ஒரு வார்த்தை பேசாதது மட்டுமல்ல துளசியம்மாள் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அதையும் இதையும் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் நாற்காலியில் உட்கார்ந்து தொலைக்காட்சியைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள். லதாவையே பார்த்த துளசியம்மாவால் அவள் மௌனத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ராமனுக்கும் லதாவுக்கும் கல்யாணம் முடிந்து சரியாகப் பத்து வருசங்கள் முடிந்துவிட்டன. இந்தப் பத்து வருசத்தில் லதாவுக்கும் துளசியம்மாளுக்கும் சிறு சண்டையோ மனக்கசப்போ வந்ததில்லை. மகன் வீட்டுக்கு வந்தால் ஒரு நாள், இரண்டு நாள்தான் தங்குவாள். அதற்குமேல் அவளால் இருக்க முடியாது. “வீட்டு வேல கெடக்கு, காட்டு வேல கெடக்கு” என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள். ராமனுடைய அக்காள்கள்கூட எப்போதாவதுதான் சென்னைக்கு வருவார்கள். எப்போது வந்தாலும் ஒருநாள், இரண்டு நாள்தான் தங்குவார்கள். கூடுதலாக ஒருநாள்கூட இருக்க மாட்டார்கள். லதாவினுடைய குணம் அவர்களுக்குத் தெரியும். இப்போதுதான் இருபத்தியெட்டு நாள் தங்கியிருக்கிறாள். அப்படியிருக்கும்போது ஏன் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டேன்கிறாளே என்று ஆச்சரியப்பட்டுப் போனாள் துளசியம்மாள்.

ஒரு வார்த்தைகூட பேசாத பெண் போடுகிற சோத்தை எப்படிச் சாப்பிடுவது, இத்தனை நாட்களாக என்ன எண்ணத்தில் சோறு போட்டிருப்பாள். தன்னைத் தனியாகப் படுக்க வைத்த மாதிரி, சாப்பிடுகிற தட்டையும் தனியாகத்தான் வைத்திருப்பாளோ? செல்லாத பொருளை மூலையில் போட்டு வைப்பது மாதிரி தன்னை தனியாகப் போட்டுவிட்டாளோ என்ற சந்தேகம் வந்ததுமே, “விடிஞ்சதுமே நான் ஊருக்குப் போறன். என்னெ காரு ஏத்திவிட்டுடு தம்பி” என்று சொன்னாள்.

“முட்டாள்தனமா பேசாம, போயி படும்மா” என்று சொன்ன ராமன் லதாவின் பக்கம் பார்த்து “லதா, அம்மா ஏதோ உளறிக்கிட்டு இருக்கு, அதெ என்னா ஏதுன்னு கேளு” என்று முறைப்பாடு செய்தான். லதா, அறைக்குள்ளும் வரவில்லை, வாயையும் திறக்கவில்லை. 

ஒரு நாள்கூட, “சாப்புட வாங்க” என்றோ, “சாப்புடுங்க”என்றோ சொன்னதில்லை. “சாப்புடுறீங்களா?”, “டீ குடிக்கிறீங்களா?” என்றுதான் கேட்டிருக்கிறாள். இந்த இருபத்தியெட்டு நாட்களாக இந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர வேறு ஒரு வார்த்தைகூடப் அவள் பேசவில்லை என்பது இப்போதுதான் நினைவுக்கு வந்தது. ‘மகள்களுடைய வீட்டுக்குப் போகாமல் இங்கு வந்து ஏன் உட்கார்ந்திருக்கிறாள் என்று நினைக்கிறாளா?’ லதாவைப் பற்றி நினைக்கநினைக்க துளசியம்மாளுக்குக் கோபம் வந்தது. 

“நான் இங்க இருக்கிறது ஒனக்குத் தொந்தரவா இருக்காம்மா?” என்று நேரடியாகவே லதாவிடம் கேட்டாள். துளசியம்மாள் கேட்டதைக் காதில் வாங்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள் லதா. முன்பைவிட இப்போதுதான் துளசியம்மாளுக்கு அதிகக் கோபம் உண்டானது. ஒரு வார்த்தை பேசினால் என்ன? துளசியம்மாளுக்கு வெட்கமாக இருந்தது. சம்பந்தமில்லாத இடத்தில் உட்கார்ந்திருப்பதுபோல் தோன்றியது. உடனே ஊருக்குப் போய்விட வேண்டும் என்று நினைத்தாள். ராமனுடைய அக்காள்கள் மூன்று பேருமே சாதாரண குடும்பங்களில்தான் கல்யாணம் கட்டிக்கொண்டு போனார்கள். எல்லாருக்குமே காட்டு வேலைதான். “எங்கூட வந்து ரெண்டு நாளு இரும்மா” என்று மூன்று பேருமே போட்டிப்போட்டுக்கொண்டு கூப்பிடுவார்கள். “நீங்க வந்து இருந்திட்டு போங்க” என்று துளசியம்மாள் சொல்லிவிடுவாள். மீறிப்போனாலும் ஒரு வேளை சாப்பாட்டுடன் “வீட்டுல வேல கெடக்கு, காட்டுல வேல கெடக்கு” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிடுவாள். 

கௌதமும் கெளசிகாவும் இவளாகப் பேசினால்தான் பேசுவார்கள். அப்படியே பேசினாலும் இவள் கேட்கிற கேள்விக்கு மட்டும்தான் பதில் சொல்வார்கள். ஆனால் அவளுடைய மகள்களுடைய பிள்ளைகள் துளசியம்மாள் மேல் உயிரையே விட்டுவிடுவதுபோல்தான் இருப்பார்கள். இந்தப் பிள்ளைகள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஒவ்வொரு விசயமாகத் துளசியம்மாள் யோசித்தாள். தன்னுடைய அறைக்குப் போய்விடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த துளசியம்மாள், “காலயில நான் ஊருக்குப் போறன். ஒனக்கு செலவா இருக்கல” என்று சொல்லிவிட்டு வெளியே வந்தாள். அவளுக்குப் பின்னாலேயே வந்த ராமன், “ஒன்னால எனக்கு என்னம்மா செலவு?” என்று கேட்டான்.

“குந்த வச்சி சோறு போடுற இல்லெ. அதான் செலவு. ஒரு ஆளுக்குச் சோறு போடுறதின்னா சும்மாவா?”

“அதிகமாப் பேசாத, திட்டிப்புடுவன். ஊருக்குப் போவ வேற காரணம் இருந்தா சொல்லு. இப்பவே எங் கார்லியே அனுப்பி விடுறன்.”

 “இங்க இருக்கிறது ஜெயில்ல இருக்கிறது மாதிரி இருக்குப்பா.”

“இந்த ஊர்ல நெறயா பேரு அப்படித்தாம்மா இருக்காங்க.”

“பதினெட்டாவது மாடியில இருக்கிறது, ஆகாசத்துல இருக்கிற மாதிரி இருக்குப்பா. எங்காலு தரய மிதிச்சு இருவத்தியெட்டு நாளாச்சிப்பா.”

வியாழன், 5 ஜூன், 2025

ஆசைகள் - இமையம்

ஆசைகள் - இமையம்

டுத்த எடுப்புலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? போன வருசமே மயமாரி இல்லெ. கொல்ல நல்லாவும் வௌயல. இந்த வருசமாச்சும் மய நல்லா பேஞ்சி, கொல்ல நல்லா வௌயணுமின்னு கீய வியிந்து கும்புட்டுட்டு மம்பட்டிய எடு” என்று மாரியம்மா சொன்னதும், ஒரு இலந்தை முள் செடியை வெட்டப்போன துரைசாமி மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு கிழக்கு முகமாக விழுந்து கும்பிட்டான். அவன் தரையில் விழுந்து கும்பிட்டதைப் பார்த்ததும், சங்கரும் ராணியும் தாங்களாகவே விழுந்து கும்பிட்டனர். அவர்கள் கும்பிட்டதைப் பார்த்ததும் மாரியம்மாவுக்குச் சிரிப்பு வந்தது. “கிராக்குக்குப் பொறந்ததுங்க” என்று சொன்னாள்.

“இந்த வருசம் என்னா கதயா ஆவப்போவுதோ? நாம்ப ஒண்ணு நெனச்சா காடு ஒண்ணு நெனைக்குது. மானம் பேஞ்சிக் கெடுக்கப்போவுதா? காஞ்சிக் கெடுக்கப்போவுதா? யாரு கண்டா?” என்று சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்து இலந்தை முள் செடியை வெட்டினான் துரைசாமி. அடுத்து, கண்ணில் பட்ட புல், பூண்டு, நுனா செடிகள் என்று வெட்ட ஆரம்பித்தான். அவன் வெட்டிப்போடுகிற செடிகளை எடுத்து ஒன்றுசேர்த்து குவிப்பதற்காக சங்கரும் ராணியும் போட்டி போட்டனர். “இந்த செடிய வெட்டுப்பா, இந்த முள்ள வெட்டுப்பா” என்று சங்கரும் ராணியும் ஒவ்வொரு செடியின் முன்னும் ஓடிச் சென்று காட்டினர். 

புல், பூண்டு, காவாளச் செடி, ஊனான் கொடிகளையும் இன்னும் கையால் பிடுங்க முடிகிற செடி, கொடிகளையும் மாரியம்மா பிடுங்கிப்போட்டுக்கொண்டிருந்தாள். மழை பெய்து இரண்டு நாட்களாகிவிட்டாலும் மண்ணில் ஈரம் இருந்ததால் செடிகொடிகளைப் பிடுங்குவது எளிதாக இருந்தது. 

 “கிட்டகிட்ட வராதீங்க, ஒரு நேரம் மாரி ஒரு நேரம் இருக்காது. மம்பட்டியோட எல கழட்டிக்கிட்டு வந்து மேல பட்டாலும் பட்டுடும். வெட்டுன பிறவு எடுங்க, வெட்டுறதுக்கு மின்னாடியே கிட்ட வராதீங்க” என்று துரைசாமி சொன்னான். அவன் சொல்வதைக் காதில் வாங்காமல், முன்பு போலவே ஓடிஓடிச் சென்று செடி, கொடிகளைக் காட்டவும், வெட்டுவதற்குள்ளாகவே அவற்றை எடுக்கவும் சங்கரும் ராணியும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தனர்.

வரகு விதைத்து அறுத்திருந்த நிலம் என்பதால் பூண்டுச் செடிகள்தான் அதிகமாக முளைத்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக நுணாச் செடிகள், இலந்தை முள் செடிகள், ஓணான் கொடிகள் முளைத்திருந்தன. எரு கொட்டி வைத்திருந்த இடங்களில் மட்டும் கோரையும், அம்மக்காய் செடியும் நாத்து நட்டு வளர்த்தது போல் முளைத்திருந்தன. கோரைப்புல்லையும் அம்மக்காய்ச் செடிகளையும் வேரோடு பிடுங்கிப்போட ஆரம்பித்தாள் மாரியம்மா.

“நீங்க ஒண்ணும் செடியக் காட்ட வாணாம். நானே பாத்து வெட்டிக்கிறன். நீங்க அம்மாகிட்டப் போங்க” என்று சொல்லி துரைசாமி விரட்டியதும் சங்கரும் ராணியும் ஓடிவந்து மாரியம்மாவுடன் சேர்ந்து கோரைப் புல்லையும் அம்மக்காயையும் பிடுங்க ஆரம்பித்தனர். இருவரும் வேகவேகமாகப் பிடுங்கியதால் கோரையும் அம்மக்காய் செடியையும் வேரோடு பிடுங்காமல் அரைகுறையாகப் பிடுங்கினார்கள். அதைப் பார்த்த மாரியம்மா, “பாதிப் பாதியா புடுங்குனா திலுப்பியும் மொளச்சிக்கும், ரவ ஈக்கு இருந்தாக்கூடப் போதும், உசுரு பொழச்சிக்கும். செடியோட தலையப் புடிச்சிப் புடுங்கக் கூடாது. செடியோட சூத்துல புடிச்சிப் புடுங்கணும்” என்று சொன்னதோடு, செடிகளைப் பிடுங்கியும் காட்டினாள். அவள் பிடுங்கியது மாதிரியே சங்கரும் ராணியும் பிடுங்க ஆரம்பித்தனர்.

மூன்று தக்காளிச் செடிகளும், ஏழெட்டு மிளகாய்ச் செடிகளும் வளர்ந்திருந்தன. அவற்றை ராணியும் சங்கரும் போட்டிபோட்டுக்கொண்டு பிடுங்கினர். மிளகாய், தக்காளிச் செடிகளை மாரியம்மாவிடம் காட்டி, “இதெ நான் எடுத்துக்கிட்டுப்போய் ஊட்டுக்குப் பின்னால நட்டு வைக்கப்போறன்” என்று ராணி சொன்னாள். சங்கர், “நானும்தான்” என்று சொன்னான். “ஊட்டுக்குப் போறதுக்குள்ளார வதங்கிப்போயிடும். நட்டு வச்சாலும் மொளைக்காது. தூக்கிப்போட்டுட்டு வேலயப் பாருங்க” என்று மாரியம்மா சொன்னாள். மிளகாய், தக்காளிச் செடிகளை இடது கையில் வைத்துக்கொண்டே குனிந்து கோரை, அம்மக்காய் செடிகளைப் பிடுங்கிப்போட ஆரம்பித்தனர். மாரியம்மா எரு கொட்டி வைத்திருந்த அடுத்த இடத்திற்குப் போனாள். போகும்போதே கண்ணில்பட்ட பூண்டு செடிகளையும் சீலைப் புல்லையும் பிடுங்கிப்போட்டுக்கொண்டே போனாள். அவளோடு சேர்ந்துகொண்டு சங்கரும் ராணியும் போனார்கள். 

துரைசாமி கண்ணில்பட்ட முள் செடிகளையும் பிற செடி, கொடிகளையும் வெட்டிப்போட்டுக்கொண்டே போனான். நிலத்தின் சனி மூலையில் ஒரு தோட்டப்பாய் அளவுக்கு அருகு முளைத்திருந்தது. அதை வெட்ட ஆரம்பித்தான். அருகுவின் வேர் படர்ந்திருந்த இடமெல்லாம் ஓர் அடி ஆழத்திற்கு வெட்டினான். ஒரு கணு அருகு இருந்தால்கூட போதும், முளைத்துவிடும். முளைப்பதோடு கொடி மாதிரி படர்ந்துவிடும். அதனால் சிறு துண்டு அருகுகூட இல்லாமல், வேர்கூட இல்லாமல் வெட்டி போட்டான். 

“இங்க ஒரு எடத்தில் அருவம் புல்லு இருக்கு, வந்து வெட்டு” என்று மாரியம்மா கூப்பிட்டாள். “வட்டம் போட்டு அடையாளம் பண்ணி வை, வந்து வெட்டுறன்” என்று துரைசாமி சொன்னான். அருகு படர்ந்திருந்த இடம்வரை வட்டமாகக் காலால் வட்டமிட்டாள் மாரியம்மா. அவள் வட்டமாகப் போட்ட இடத்திலேயே சங்கரும் ராணியும் காலால் வட்டம் போட ஆரம்பித்தனர். 

ஒரு இடத்தில் வரகு பயிரும், அம்மக்காய் செடியும் கொசகொசவென்று தண்ணீர் ஊற்றி வளர்த்தது மாதிரி வளர்ந்திருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட மாரியம்மா, “ஒரம் போட்டு வளத்த மாதிரி வளந்து நிக்குது பாரேன்” என்று சொல்லிவிட்டு அம்மக்காய் செடிகளைப் பிடுங்க ஆரம்பித்தாள். சங்கரும், ராணியும் வரகுச் செடியைப் பிடுங்கிப்போடுவதைப் பார்த்த மாரியம்மா, “அதெப் புடுங்க வாணாம். ஏர் ஓட்டும்போது தானாவே செத்துப்போவும்” என்று சொன்னாள். 

அப்போது பக்கத்து நிலத்துக்காரி கருப்பாயி வந்தாள். “என்னா மாரியம்மா விடியறதுக்குள்ள வந்திட்டியா? கொல்ல வேல பாதி முடிஞ்சிப்போச்சே!” என்று சொன்னாள். சங்கரும் ராணியும் புல் பூண்டு செடியைப் பிடுங்குவதைப் பார்த்துவிட்டு, “பள்ளிக்கூடத்துப் புள்ளிவுள ஏண்டி கொண்டாந்து காட்டுலப் போட்டு அடிக்கிற?” என்று கேட்டாள்.

“இப்பியே காடு எது, ஊடு எதுன்னு தெரிஞ்சிக்கிட்டா நல்லதுதான. நம்ப காட்டுலதான செய்யுதுவோ” என்று மாரியம்மாள் சொன்னாள்.

“இப்பத்தான் பத்தாவது படிச்சவனே பெரிய படுப்புப் படிச்சாப்ல குனிஞ்சி நிமிந்து வேல செய்ய மாட்டங்கிறான். காட்டுக்கு எதுக்கு என்னெ கூப்புடுறன்னு கேக்குறான்.”

“ஒங் கொல்லயிலெ வேல முடிஞ்சிப் போச்சா?”

“அட நீ ஒண்ணு, நான் ஒருத்தியா எம்மா வேல செய்ய முடியும்? தண்ணீ கொண்டாந்தன், கால் தடுக்கி ஊத்திப்புட்டன். குடமும் ஒடுக்கு வியிந்துப்போச்சி, அதுக்காக சாயங்காலம் ஊட்டுல என்னா சண்ட நடக்கப் போவுதின்னு தெரியல.”

“வேணுமின்னா போட்ட? காலு தடுக்கிறதுக்கு யாரு என்னா பண்ண முடியும்? ஆனாலும் ஒம் மாமியாக்காரி இருக்காளே யே அப்பா.”

“அந்தப் பாவியப் பத்தி பேசி, எதுக்கு இந்த நேரத்தில வவுத்து எரிச்சலக் கிளப்புற? குதிரன்னு சொன்னா கழுதன்னு அர்த்தம் பண்ணிக்கிறவகிட்ட வந்து மாட்டிக்கிட்டன். எந்த நேரத்திலெ என்னப் புடிச்சி அந்தக் குருடி மவன்கிட்ட கொடுத்தாங்களோ, அன்னாமுன்னா நான் படுறது சொல்லி மாளாது. நாக்க வறட்டுது, ரவ தண்ணி கொடு” என்று கருப்பாயி கேட்டதும், மாரியம்மா தண்ணீர் எடுத்துக்கொண்டு வா என்று சொல்வதற்குள்ளாகவே வன்னி மரத்தின் கீழ் வைத்திருந்த தண்ணீர்க் குடத்தை நோக்கி சங்கர் ஓட்டமாக ஓடினான்.

“ஒனக்குத் தேவலாம். வரவு வெறச்ச கொல்ல. வேல சட்டுன்னு முடிஞ்சிடும், எனக்கு அப்பிடி முடியுமா? சோளம் வெறச்ச கொல்ல. ரெண்டு காணி பூராவும் தட்டய இயித்து ஆவுணுமே” என்ற சலிப்புடன் சொன்னாள் கருப்பாயி.

“இந்த வருசம் என்னா பயிரு வுடப் போற?”

“இனிமே இந்த சோளம், வரவு மொகத்திலியே முழிக்கக் கூடாது. கல்ல, எள்ளுன்னு பணப்பயிறா வுட வேண்டியதுதான்.”

“சோத்துக்கு என்னாப் பண்ணுவ?”

“இன்னம் எம்மாம் நாளக்கித்தான் சோள சோத்தயும், வரவு சோத்தயுமே தின்னுக்கிட்டு இருக்கிறது. இப்பத்தான் ரேசன் கடயில இலவசமா அரிசிப் போடுறானே. அப்பறம் என்னா இருக்கு?”

“அதுவும் சரிதான்.”

தண்ணீரைக் குடித்து முடித்த கருப்பாயி, “வெயில்ல புள்ளியுளப் போட்டு வாட்டாத” என்று சொல்லிக்கொண்டே தன் நிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். 

நான்கு இடங்களிலிருந்த அருகம்புல்லை வெட்டினான் துரைசாமி. அதோடு கண்ணில்பட்ட இலந்தை, நுனா செடிகளையும் வெட்டினான். ஒன்றிரண்டு இடங்களில் முனைத்திருந்த எருக்கஞ்செடிகளையும் வெட்டினான். ஒரே இடத்தில் ஏழு எட்டு பனங்கன்றுகள் முளைத்திருந்ததைக் கண்டு, “நடு கொல்லயில எப்பிடி மொளச்சியிருக்கும்” என்று சொல்லிவிட்டு பனங்கன்றுகளை வெட்ட ஆரம்பித்தான். அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் ராணி.

ஒரு இடத்தில், தோட்டப்பாய் அளவுக்குச் சுக்கங்காய் செடி படர்ந்திருந்தது. முதலில் செடியை வெட்டாமல் அதிலிருந்த காய்களைப் பறித்தான். ராணியிடம் இரண்டு, மூன்று காய்களைத் தின்னச் சொல்லிக் கொடுத்தான். தன் வாயிலும் ஒரு காயைப் போட்டு மென்று தின்றான். சங்கரைக் கூப்பிட்டு அவனிடமும் மூன்று, நான்கு காய்களைக் கொடுத்தான். எஞ்சிய பத்து, இருபது காய்களைத் துண்டில் போட்டு சிறு மூட்டையாகக் கட்டி வைத்துவிட்டு செடியை வெட்டினான். வெட்டிய செடியைச் சுருட்டி அவனே எடுத்துக்கொண்டுபோய் குவியலாகப் போட்டிருந்த இடத்தில் போட்டான். நிலத்தில் புல், பூண்டு, செடி, கொடி, முள்செடி என்று இருக்கிறதா என்று பார்க்க ஆரம்பித்தான். அவன்கூடவே சங்கரும் ராணியும் போனார்கள். “நிழலுக்குப் போங்க. சுக்கங்காய எடுத்துக்கிட்டுப்போயி தின்னுங்க” என்று சொன்னான். துரைசாமியின் பேச்சைக் கேட்காமல் சங்கரும் ராணியும் அவன் பின்னாலேயே அலைய ஆரம்பித்தனர்.

தண்ணீர்க் குடத்துடன் வந்த கோசலை, “என்னாடி மாரியம்மா வேல முடிஞ்சிட்டாப்ல இருக்கு” என்று கேட்டுக்கொண்டே வந்தாள். “இதென்ன ஐம்பது, நூறு காணியா? கோமணத்துணியாட்டம் ரவ நெலம். வேல முடியாம என்னா செய்யும்? தல சொமயோட நிக்குற போ, போயி நேரத்தோட ஆளுவுளுக்குத் தண்ணியக் கொடு” என்று மாரியம்மா சொன்னாள்.

“என்னாத்த பாத்து என்னாத்துக்கு ஆவப்போவுது? நாம்ப ஒண்ணு நெனச்சா மானம் ஒண்ணு நெனைக்குது, பூமி ஒண்ணு நெனைக்குது. சாவுற முட்டும் இந்தக் கல்லுகருமாந்தரம்தான். இந்த வருசம் மானம் என்னாத்த செய்யப்போவுதோ? எம்மாம் பாடுபட்டு என்னாத்துக்கு ஆவப்போவுதோ? நாலு புதுத்துணிய எடுத்துக் கட்டிப்பாக்க போறமா, ஒரு நக நட்டத்தான் எடுத்துப் போட்டுப்பாக்கப் போறமா? நம்ப சுயிநாதம் மண்ணுல கெடந்து பொரள வேண்டியதுதான். யே, தண்ணி கொடத்துல காக்கா ஒக்காருது பாரு” என்று சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.  

“யே, யேய்” என்று கத்திக்கொண்டே காக்காவை விரட்ட ஓடினான் சங்கர்.

“கருப்பாயி ஊட்டுக் காட்டுல போயி சோளத்தட்டயும் சருவும் கொண்டா. நெருப்ப வச்சி கொளுத்தி வுட்டுட்டுப் போவலாம்” என்று துரைசாமி சொன்னான். “செடி கொடி, முள்ளு மெளாறலாம் காய வாணாமா? பச்சயா இருந்தா எப்பிடி எரியும்” என்று பதிலுக்குக் கேட்டாள். 

“காஞ்சிது போதும், போயி சோளத்தட்டயக் கொண்டா, எரியுறவர எரியட்டும்.”

“சொன்னா கேக்கணும். மூள இருந்தாத்தான கேக்குறதுக்கு?” என்று சொல்லி முனகிக்கொண்டே கருப்பாயி நிலத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மாரியம்மா. அவள் எங்கே போகிறாள் என்று தெரியாமல் சங்கரும் ராணியும் அவளை நோக்கி ஓட்டம் பிடித்தனர்.

பிடுங்கிப்போட்டிருந்த, வெட்டி, கொத்திப் போட்டிருந்த செடி, கொடி, முள் எல்லாவற்றையும் ஏழெட்டு இடத்தில் குவியலாகக் குவித்துப் போட்டிருந்தான். மாரியம்மா கொண்டு வந்திருந்த சருகையும், சோளத்தட்டையையும் வைத்து ஒரு குவியலில் நெருப்பை உண்டாக்க முயன்றான் துரைசாமி. செடி கொடிகள் பச்சையாக இருந்ததால் நெருப்பு பற்றவில்லை. நெருப்புப் பற்றாததைப் பார்த்து, “காயணும் காயணுமின்னு சொன்னத கேட்டாதான” என்று சொல்லி மாரியம்மா முனகினாள். அவள் முனகியதைப் பொருட்படுத்தாமல், “இன்னம் ஒரு கொடங்க சோளத்தட்ட கொண்டா” என்று துரைசாமி சொன்னான். அவனை முறைத்துப் பார்த்துவிட்டுப் போனாள் மாரியம்மா. 

பெரும்பாடுபட்டுத்தான் நெருப்பை உண்டாக்கினான் துரைசாமி, “நெருப்புக்கிட்ட போவாதீங்க. நெருப்புப் பொறி கண்ணுல பட்டுடும்” என்று மாரியம்மா கத்திக்கொண்டேயிருந்தாள். அவள் கத்துவதைப் பொருட்படுத்தாமல் சங்கரும் ராணியும் எரிகிற நெருப்புக்குப் பக்கத்தில் கிடந்த செடி, கொடி, புல் பூண்டுகளை எடுத்துப் போட்டவாறு இருந்தனர். துரைசாமி ஒவ்வொரு குவியலுக்கும் நெருப்பு வைத்துக்கொண்டே போனான். கடைசி குவியலுக்குப் பக்கத்தில் ஒரு முறம் அளவுக்கு ‘அருகு’ முளைத்திருந்தது தெரிந்ததும் மண்வெட்டியை எடுத்துவரச் சொல்லி வெட்டினான். மண்ணுக்குள்ளிருந்து மூன்று, நான்கு பூரான்கள் வெளியே வந்து அங்குமிங்கும் ஓடின. ஒவ்வொரு பூரானாக அடித்துக் கொன்றான். செத்த பூரான்களை எடுத்து ஒருவர் மீது ஒருவர் போடப்போவது மாதிரி சங்கரும் ராணியும் பயமுறுத்தி பாசாங்கு செய்தனர்.

“சீ நாயிவுள, எதுல வௌயாடுறதின்னு ஒரு இது இல்லியா? வாங்க கயிதவுளா” என்று சொல்லி ராணியையும் சங்கரையும் அழைத்துக்கொண்டு வன்னிமர நிழலில் வந்து உட்கார்த்தாள் மாரியம்மா. வன்னி மரத்தின் அடியில் கட்டெறும்புகள் திரிந்துகொண்டிருப்பதைப் பார்த்ததும், “மரத்துக்கிட்டெ போவாதீங்க, ஒரே எறும்பா கெடக்கு. கடிச்சா தடிச்சிப்போயிடும்” என்று சொன்னாள்.

பொன்வண்டு ஒன்று பறந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதைப் பிடிப்பதற்காக சங்கர் ஓடினான். அவனோடு ராணியும் ஓடினாள்.

ஒவ்வொரு குவியலாகப் பார்த்துக்கொண்டே வந்தான் துரைசாமி. எரியாமல் கிடந்த செடி கொடிகளை எடுத்து நெருப்பில் போட்டான். ஒரு சில குவியல்களை நன்றாக எரியும்படி கிண்டி கிளறிவிட்டான். தவறிப்போய் எதையாவது வெட்டாமல் விட்டுவிட்டோமோ என்ற சந்தேகத்தில் நிலத்தை ஒருமுறைச் சுற்றிப் பார்த்துவிட்டு வன்னி மர நிழலுக்கு வந்தான். வியர்வையைத் துடைத்துக்கொண்டே தரையில் உட்கார்ந்தான். “கருப்பாயி வந்தாளே என்னா சொல்லிட்டுப்போனா?” என்று கேட்டான்.

“வரவு, சோளமின்னு வெறைக்காம, எள்ளு கல்லன்னு வெறைக்கப்போறாளாம். நம்பளும் கல்ல எள்ளுன்னு இந்த வருசம் வெறைக்கலாமா?”

“சோத்துக்கு ஒங்கப்பன் ஊட்டுலயிருந்து வருமா?”

“எங்கப்பன் ஊட்டெ எதுக்கு இப்ப இயிக்கிற? இப்பத்தான் ரேஷன்ல இலவச அரிசி கொடுக்கிறான்னுல. வரவ அரச்சிச் சாவணும். சோளத்த துவச்சி சாவணும். இதுன்னா அரிசிய வாங்குனமா ஓலயில போட்டமான்னு போயிடும்.” 

“மாட்டுக்குத் தீனி?”

“இப்பத்தான் டிராக்டர வச்சி ஏறு ஓட்டுறாங்க. வரவு, சோளம், நெல்லு அறுக்கவும் மிஷினு வந்துடுச்சி.”

“அப்ப மாடு வாணாங்கிற? வாசல எதால தெளிப்ப? ஊட்ட எதால மொழுவ?”

“நீ வரவு, சோளமின்னே வெறச்சிக்கிட்டு இரு. நானா வாணாங்கிறன். இந்தா, அடுத்த எட்டாம் நாளு மூட்டுத்தரன்னு காதுல, மூக்குல கெடந்ததோட, காலுல கெடந்த கொலுசயும் அடவுவச்ச. ஆச்சி, வருசம் அஞ்சி. போன பொருளு இன்னம் ஊடு திரும்பல. கேட்டா வட்டியே சாப்புட்டிருக்கும், புதுசா வாங்கிப்புடலாம்ங்கிற. நான் செத்தாதான் வாங்குவ?” என்று சொல்லும்போதே மாரியம்மாவுக்குக் கண்கள் கலங்கின.

“வித்து சாராயம் குடிச்சிட்டனா?”

“எனக்குத்தான் இல்லெ. அந்தக் குட்டிக்கி ஒரு பொருளு எடுத்து வைக்க வாணாமா?”

“பாலு குடிக்கிற புள்ளைக்காடி சீரு கேக்குற?”

“அவ பாலு குடிக்கிற புள்ளயா? ஆச்சி பதனாலு வயசு. பள்ளிக்கூடம் தொறந்தா ஒம்பதாவதுக்குப் போவப்போறா, எந்த நேரத்திலயும் வயசுக்கு வந்துடுவா. அன்னிக்கிப் போயி ஒவ்வொரு பொருளும் வாங்குவியா?”

“அதான் ஒந்தம்பி இருக்காரில்ல பட்டி பரூர் ஜமீன், அவுரு கொண்டாந்து வண்டி வண்டியா எறக்கிட மாட்டாரா?” என்று சொல்லிவிட்டு கிண்டலாகச் சிரித்தான். துரைசாமியை எரித்துவிடுவது மாதிரி பார்த்த மாரியம்மா. “எந் தம்பிகிட்டெ போவலன்னா ஒனக்குத் தூக்கம் வராது. நேத்தா தாலி கட்டிக்கிட்டு வந்தன், எந் தம்பி கொடுக்கிறதுக்கு. எனக்கு இருக்கிறதே ஒரு தம்பி. போன மொற வந்தப்ப, என்னா எதுன்னு கேக்கலன்னு கோவிச்சிக்கிட்டு போனவன் ரெண்டு, மூணு மாசமா இந்தத் திச திரும்பாம இருக்கான்” என்று சொல்லும்போதே மாரியம்மாவின் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

“வெளயுற கொல்லயும் வௌயாமப் போறதுக்கு அயிவுறியா? நானே ஆத்த மாட்டாதவன் ஊத்த வெட்டி எறக்கிறமாரி இந்த மண்ணுல கெடந்து உருண்டு புரண்டுக்கிட்டு கெடக்குறன்” என்று சொல்லிவிட்டு எழுந்து ஒவ்வொரு குவியலாகச் சென்று எரியாமல் கிடத்தவற்றைக் குவித்துப்போட்டு எரிய விட்டான்.

வன்னி மர நிழலுக்கு ராணியும் சங்கரும் வந்தனர். ராணியைப் பக்கத்தில் உட்கார வைத்து அவளுடைய தலையில் பேன் பார்க்க ஆரம்பித்தாள் மாரியம்மா. வன்னி மரத்துக்கு வந்த துரைசாமி, “வெளயுற கொல்லயில எவளாவது பேனு பாப்பாளா? நேரம் என்னா ஆவுது? பொடி சுட ஆரம்பிச்சிடிச்சி, ரெண்டு மையிலு தூரம் போவ வாணாமா? புள்ளிவோ எப்பிடி இந்தப் பொடியில ஊடுப் போயிச் சேரும்?” என்று கேட்டான்.

“புள்ளிவோமேல ரொம்ப அக்கறதான்” என்று ஒரு தினுசாகச் சொன்னாள் மாரியம்மா. 

“புள்ளப் பெத்தவனுக்குத் தெரியாதாடி? புள்ளக்கி என்னா செய்யுறதின்னு?”

“தெரியாம என்னா கெடக்கு. பள்ளிக்கூடத்துக்குப் போற எடத்தில ‘இந்தமாரி’ ஆயிப்போச்சின்னு வந்து நின்னா அன்னிக்கி ஆடுவியா?” என்று கேட்டாள். துரைசாமி பதில் பேசவில்லை. தூரத்தில் எரிந்துகொண்டிருந்த நெருப்பைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“காதுல, மூக்குல போட்டுக்கிறதுக்கு ஒரு பொட்டுத் தங்கம் எம் பொண்ணுக்கு இருக்கா? காலுக்கு ஒரு கொலுசுகூட இல்ல. எனக்கு இருக்கிறதே ஒரே ஒரு பொட்டப் புள்ளெ, அதுக்கு இந்த வயசில போட்டு அழகு பாக்காம அப்பறம் எப்பப் போட்டுப்பாக்கறது?” 

“நாளக்கி ஏறு ஓட்டணும். பருவத்தில மய பேயணும். வெரைக்கணுமேன்னு கவலப்படாம துணிய எடு, நகய எடுன்னு என்னமோ பேசிக்கிட்டு இருக்கிறவ?”

“நல்லத் துணி கட்டாம, நல்ல சோறு திங்காம இருக்குறதுக்கு எதுக்குக் காட்டுல வந்து பாடுபடணும்?”

“நகதான எடுக்கணும்? எடுத்திடலாம், கொல்ல வௌயட்டும்.”

“கொல்ல என்னிக்கி நல்லா வெளஞ்சிருக்கு? நீ நக எடுத்து எம்புள்ளக்கிப் போடுறதுக்கு. ஒரு கருவ மணிகூட எடுத்துப்போட மாட்ட. நான் போட்டுக்கிட்டு வந்தது இருந்தா நான் எதுக்கு ஒங்கிட்ட கேக்கப்போறன்?” என்று சொன்னதும் அவளை முறைத்துப் பார்த்தான் துரைசாமி. 

“ஒடம்புத் தெரியாமத்தான் பூட்டிவுட்டு அனுப்புனாங்க ஒங்க அப்பனும், அம்மாளும். ஏண்டி போக்கத்தப் பேச்சப் பேசிக்கிட்டுக் கெடக்குற?”

“கட்டுன துணியோடதான் வந்தனா? ஏயி எட்டு பவுனு போட்டுக்கிட்டு வல்ல? எல்லாத்தயும் வித்துத் தின்ன வாயாலதான் சொல்ற ஒண்ணும் போட்டுக்கிட்டு வல்லன்னு. அதயும்தான் மண்ணாப்போன சாமிவோ பாத்துக்கிட்டு இருக்கு. இன்னிக்கோ நாளைக்கோ எம்பொண்ணு தெரண்டு நிக்கப்போறா, அதுக்கு என்னாச் செய்யப்போற?” என்று எதிராளியிடம் கேட்பது மாதிரி கேட்டாள். அதற்குச் சிரித்துக்கொண்டே, “அதான் ஒந்தம்பி இருக்காரில்ல மந்திரி. அவுரு எடுத்துக்கிட்டு வர மாட்டாரா அக்கா மவளுக்குக் கிலோ கணக்குல தங்கத்த?” 

“இன்னொரு தரம் எந் தம்பிய இயித்தா மானம் மரியாத பூடும். நீ பெத்தப் புள்ளக்கி எந் தம்பி எதுக்குக் கிலோ கணக்குல தங்கம் போடணும். இந்த வருசம் காட்டுல என்னா பயிர் வுடப் போற?” என்று கேட்டாள்.

“என்னாடி புது கேள்வியெல்லாம் கேக்குற? எப்பியும் போல வரவு, சோளமின்னு தூவி வுட்டுட்டுப் போவ வேண்டியதுதான?”

“எள்ளு, கல்லப் போடு. மூணு மாச பயிறு. கார்த்திக ஐப்பசியில கையிக்குக் காசி வந்துடும். எள்ளு, கல்லயப் புடுங்குனதும் கொத்தமல்லிய தூவி வுடு, அதுவும் மூணு மாசம்தான். பொங்க கழிஞ்சி திருனா போடுற சமயத்தில் கையிக்குக் காசி வந்துடும். போன வருச பொங்க, தீவாளிக்குக்கூட ஒரு சீட்டித்துணிகூட எடுத்துத் தரல. காடு வெளயட்டும்ன்னு சொன்ன. காடு என்னிக்கி வௌயறது, நீ என்னிக்கி புது துணிய எடுத்துத் தர்றது? ஊரு ஒலகத்திலே பொட்டச்சிவோ எல்லாம் எப்பிடி மேனி கொலயாம இருக்காளுவோ, நம்பளுக்குத்தான் எந்தக் கொடுப்பனயும் இல்லியே.”

“எள்ளு, கல்லன்னு போட்டுட்டு சோத்துக்கு ரேசன் கடயிலப்போயி நிக்கப்போறியா?”

“ஊரே நிக்குதில்ல.”

“வெக்கம் மானம் இருந்தா நிக்க மாட்டானுவோ.”

“ஊரு நடப்பு தெரியணும். இல்லன்னா ஒலக நடப்பாவது தெரியணும். ஒண்ணுக்கும் ஒதவாத மண்ணாந்தய கட்டிக்கிட்டு என்னாப் பண்றது? தண்ணி வேணுமின்னா குடிச்சிபுட்டு மிச்சத் தண்ணிய கீய ஊத்திப்புட்டு கொடத்த எடு” என்று ராணியிடம் சொல்லிலிட்டு எழுந்தாள். தலைமுடியை அவிழ்த்து, உதறித் தட்டிவிட்டு மீண்டும் கொண்டை போட்டாள். “வாடா பயலே" என்று சங்கரைக் கூப்பிட்டுக்கொண்டே நடக்க ஆரம்பித்தாள். 

மாரியம்மாளுக்கு அடுத்து சங்கரும், அவனுக்கு அடுத்து ராணியும் நடந்துகொண்டிருந்தனர். கடைசியில் துரைசாமி நடந்துகொண்டிருந்தான். வண்டி பாட்டைக்கு வந்தபோது யாரிடமோ சொல்வது மாதிரி, “வர எட்டாம் நாளு பள்ளிக்கூடம் தொறக்கப்போவுது. பயலக் கொண்டுபோயி ஆறாவது சேக்கணும். அவனுக்கு ஒரு புதுத்துணி எடுக்க வாணாமா?” என்று கேட்டாள்.

“தோளுல மாட்டுறமாரி பையும் வேணும்மா” என்று சங்கர் சொன்னான்.

“எனக்குப் புதுப்பாவாடயும் சட்டயும் எடுக்கணும்மா. யூனிபார்ம் கிழிஞ்சிப்போச்சி. புள்ளைங்க கிண்டல் பண்ணுதுவோ” என்று ராணி சொன்னாள்.

“புது பேனா, புது ஜாமண்டரி பாக்ஸ், செருப்பு எல்லாம் வாங்கித் தரணும். இப்பியே துணி எடுத்து கொடுத்தாத்தான் டெய்லரு தச்சி தருவான்” என்று சங்கர் சொன்னான். அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே ராணி, “எனக்கும் புது பேனாவும் ஜாமண்ட்ரி பாக்ஸும் வேணும்” என்று சொன்னாள். “பாதயப் பாத்து போம்மா” என்று துரைசாமி சொன்னான்.

ஆறாம் வகுப்பு போவது பற்றியும், என்னென்ன பொருள்களை வாங்கித்தர வேண்டும் என்பது பற்றியும் சங்கர் சொல்லிக்கொண்டே நடந்தான். ராணியும் தன் பங்குக்குத் தனக்கு வேண்டிய பொருட்களின் பட்டியலைச் சொல்ல ஆரம்பித்தாள்.

 “எல்லாம் வாங்கித்தரன். காடு வெளயட்டும். மொதல்ல தடத்தப் பாத்து நடங்க. எல்லாத்துக்கும் மானத்து மகாராசன் மனசு வைக்கணும், கொல்ல வெளயணும்” என்று சொன்னான். 

 ‘எல்லாம் வாங்கித் தரன்’ என்று துரைசாமி சொன்னதைக் கேட்டதும் சங்கரும் ராணியும் தாங்கள் கேட்ட எல்லாப் பொருள்களும் கிடைத்துவிட்டது மாதிரி மகிழ்ச்சியில் மாரியம்மாளைத் தாண்டி முன்னால் போட்டிபோட்டுக் கொண்டு ஓடினர். சிறிது தூரம் சென்றதும் சட்டென்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு ராணி உட்கார்ந்தாள். 

“கால இடிச்சிக்கிட்டியாடி” என்று 

கேட்டுக்கொண்டே விஷயம் புரியாமல் ராணியை நோக்கிப் போனாள் மாரியம்மா.