வெள்ளி, 26 டிசம்பர், 2025

முதலமைச்சரின் நோக்கத்தை நிறைவேற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் (ம) பழங்குடி மாநில ஆணையத்தைப் பயன்படுத்துங்கள் - இமையம்

 முதலமைச்சரின் நோக்கத்தை நிறைவேற்ற தமிழ்நாடு ஆதி திராவிடர் (ம) பழங்குடி மாநில ஆணையத்தைப் பயன்படுத்துங்கள் - இமையம்


தமிழ்நாட்டில் பிறப்பால், வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால் பிற சமூகக் காரணிகளால் SC – ST மக்கள்மீது, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ யார் தாக்குதல் நடத்தினாலும், சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வன்கொடுமைக்குள்ளானவர்களுக்கு உரிய இழப்பீட்டை விரைவாகப் பெற்றுத்தருவதற்காகவும் அமைக்கப்பட்டதுதான் இந்த தமிழ்நாடு ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் ஆணையம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் மாநில அளவில் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் SC - ST ஆணையம் இருந்தாலும்கூட, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும், விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும், வன்கொடுமைகளுக்கு ஆளான மக்களின் சட்டக் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆணையத்தை 2021இல் அமைத்தார்.

ஆணையத்தின் தலைவராக உயர்நீதிமன்ற, ஓய்வுபெற்ற நீதிபதியும், உறுப்பினர் செயலராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும், துணைத் தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களும் கொண்ட தன்னாட்சி அமைப்பு. ஆணையம் தன்னிடம் வரும் புகார் மனுக்கள்மீது மூன்று மாதங்களுக்குள் தீர்வை எட்ட முயல்கிறது.

2025 மார்ச் மாதத்தில் மட்டும் வேலூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில், மாவட்ட ஆட்சித் தலைவரின் முன்னிலையில், மாவட்டத்தின் அனைத்துத் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆய்வுக்கூட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை, தேவைகளைக் கூற ஏற்பாடு செய்யப்பட்டது. பெறப்படும் மனுக்கள்மீது உடனே தீர்வு வழங்கப்படுகிறது. உடனே தீர்வு எட்ட முடியாத பிரச்சினைகளுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காணப்பட்டு, அதற்கான அறிக்கை ஆணையத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். ஐந்து மாவட்டங்களிலும் ஆய்வுக் கூட்டத்தை ஆணையம் நடத்தியபோது, தாட்கோ மூலம் கடன் பெறப்பட்ட பயனாளிகள் 225 பேர், சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 191 பேர். தீர்வு உதவித்தொகையாக மூன்று கோடியே பதினாறு லட்சத்து பன்னிரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய் (ரூ.3,16,12,500) வழங்கப்பட்டது. விலையில்லா வீட்டு மனைப்பட்டா 1,475 பேருக்கும், 206 தையல் இயந்திரங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டை 138 பேருக்கும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இது ஆணையத்தின் முயற்சியால் நடந்திருக்கிறது. அரசின் நலத்திட்டங்கள் SC - ST மக்களுக்குச் சென்றுசேர்கிறதா என்பதைக் கண்காணிப்பதும், சாதிய வன்கொடுமைகள் நடைபெறும் இடங்களில் காவல்துறை எவ்வாறு செயல்படுகிறது, வழக்குகள் முறையாக நடக்கின்றனவா, சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு உதவித்தொகை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை அவதானிப்பதும், காவல்துறையைச் சரியாகச் செயல்பட வைப்பதும் ஆணையத்தின் பணிகளில் முக்கியமானவை.

இந்த ஆணையம் தமிழ்நாட்டில் வாழ்கிற SC - ST மக்களுக்கான சட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பு. அது எந்த விதத்திலும் பிற சமூகத்திற்கு எதிரானது அல்ல. சமூகக் குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதும், சமூகக் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தருவதும்தான் ஆணையத்தின் நோக்கம்.

ஆணையம் என்று ஒன்று இருக்கிறது என்பதும், அது SC - ST மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பதும் அனைத்து மக்களுக்கும் தெரிந்திருக்கிறது என்று சொல்ல முடியாது. விவரமறிந்தவர்கள், சங்கத்தினர், அமைப்பினர் மட்டுமே ஆணையத்தை அணுகக்கூடிய நிலைதான் இன்றும் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து SC - ST மக்களும் ஆணையத்தை அணுகும் நிலை ஏற்பட வேண்டும். அப்படி அணுகும்போதுதான் ஆணையம் மேலும் வலுப்பெறும். ஆணையத்தை அமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நோக்கம் நிறைவேறும்.

ஆணையத்திற்குப் புகார் மனுக்களை நேரில் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தபால் மூலமாகவும் இமெயில் வழியாகவும் அனுப்பலாம். ஆணையத்திற்கு வரும் மனுக்களை வெறும் புகார், குற்றச்சாட்டு, தேவை சார்ந்தது என்று மட்டுமே அணுகாமல், மனுவில் ஒரு மனிதருடைய, ஒரு குடும்பத்தினுடைய, ஒரு ஊரினுடைய அத்தியாவசியத் தேவை, வலி, ஏக்கம், பரிதவிப்பு, அவலம், உயிர் வாழ்தலுக்கான பாதுகாப்பு, கண்ணீர் அனைத்தும் நிறைந்திருப்பதாகவே பார்க்கிறது. யாரையும் நிற்க வைக்கக்  கூடாது, யாரையும் காக்க வைக்கக்  கூடாது, மனம் நோகும்படி யாரையும் பேசக் கூடாது என்பது ஆணையத்தின் அடிப்படை நெறிகளாக இருக்கின்றன. 

5300 ஆண்டுகளுக்கு முன்னதாக இரும்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சமூகம், 3200 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை பயன்படுத்திய சமூகம், கீழடியில் நகர நாகரீத்தோடு வாழ்ந்த சமூகம், தொல்காப்பிய இலக்கண நூல் கண்ட சமூகம், சங்க காலத்தில் பெண்களும் கல்வி கற்றறிந்த சமூகமாக இருந்த தமிழ் இனம், பக்தி இலக்கிய காலத்தில் மொழியும் இலக்கியமும் கோவிலோடு இணைந்தது. அதன் பிறகுதான் சாதிய சமூகமாக மாறியது. 1100 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றி வந்த சாதிய பாகுபாடுகளை ஒரு நாளில், சட்டத்தால் மட்டுமே, நிர்வாகத்தால் மட்டுமே களைய முடியாது. மனம் மாற்றத்தின் மூலம் மட்டுமே சாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முடியும். மனிதர்களாக இருப்பதும். மனித மான்பை காப்பதும்தான் தீர்வு.

குரலற்றவர்களுக்கான குரலாக, பாதுகாப்பற்றவர்களுக்குப் பாதுகாப்பாக, உரிமை கோருபவர்களுக்கு உரிமையைப் பெற்றுத்தரும் அமைப்பாக ஆணையம் செயல்பட வேண்டும் என்றால் அனைத்து SC - ST மக்களும் தங்களுடைய சட்டபூர்வமான உரிமைகளுக்காக ஆணையத்தை அணுகினால்தான் சாத்தியம். ஆணையம் உங்களுக்கானது. அதை நீங்கள் பயன்படுத்தும்போது அந்த அமைப்பு உயிர் பெறும், முழுமை பெறும்.

 தொடர்புக்கு:


தமிழ்நாடு ஆதி திராவிடர் (ம) பழங்குடியினர் மாநில ஆணையம்,

எண் - 725, இரண்டாவது மாடி,

எல்.எல்.ஏ. பில்டிங்,

அண்ணா சாலை, சென்னை 600 002.

email: tnscstcommission@gmail.com


மொழி அழிவைத் தடுத்த முதலமைச்சர்

 மொழி அழிவைத் தடுத்த முதலமைச்சர்

இமையம்

2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மக்களுடைய மொழி அழியும் நிலையில் இருக்கிறது. அதை அழியவிடக் கூடாது, பாதுகாக்க வேண்டும். அழியும் நிலையிலுள்ள மொழிக்குப் புத்துயிர் கொடுக்க வேண்டும். பழங்குடியின மக்களின் வாய்மொழிப் பாடல்களையும், பேச்சு வழக்கினையும் பாதுகாக்க வேண்டும். மொழி இழப்பு என்பது கலாச்சார, பண்பாட்டு இழப்பு. நாம் நமது கலாச்சார, பண்பாட்டு செல்வங்களை இழக்கக் கூடாது. அதைப் பாதுகாக்க வேண்டும். அதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்குகிறேன். அதன் மூலம் ‘தொல்குடி மின்னணுக் காப்பாகம்’ உருவாக்கப்படும். அதன் மூலம் தோடர் சமூகத்தின் சடங்குப் பாடல்கள், இருளர் சமூகத்தின் மரபுவழி மருத்துவ நடைமுறைகள், காணிக்காரர் சமூகத்தின் கதை சொல்லும் ஓவியங்கள், வாய்மொழிப் பாடல்கள், வாய்மொழிக் கதைகள், நம்பிக்கைகள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அதற்காக www.tholkudi.com இணையதளம் உருவாக்கப்படும். பழங்குடி மொழிகளை ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் (SPPEL) என்ற அமைப்பு உருவாக்கப்படும். நான் அறிவித்த இந்தப் பணிகளை எல்லாம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இவ்வண்டே செய்து முடிக்கும்” என்று அறிவித்தார்கள்.

முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 2024, செப்டம்பர் 27, 28 தேதிகளில் ‘தமிழகப் பழங்குடியினரின் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல்’ என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கை நடத்தியது. இந்தக் கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருக்கிற மொழியியல் அறிஞர்கள், மானுடவியல் அறிஞர்கள், சமூக விழுமியங்கள் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.

கருத்தரங்கில் பேசப்பட்ட கருத்துகளையெல்லாம் தொகுத்து, அதன் அடிப்படையில், அழியும் நிலையிலுள்ள தமிழகப் பழங்குடியின மக்களின் மொழியையும் பண்பாட்டையும் வாய்மொழிப் பாடல்களையும் வாய்மொழிக் கதைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறது.

2025 ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகப் பழங்குடியினர் நாளன்று, ‘தொல்குடி மின்னணுக் காப்பக’த்தைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு மருத்துவர் மதிவேந்தன் அவர்கள் தொடங்கிவைத்தார்கள். இந்தத் தொல்குடி மின்னணுக் காப்பகத்தின் மூலம் தமிழ்நாட்டின் பழங்குடியின மக்களான காணிக்காரர், நரிக்குறவர், இருளர், தோடர், குறும்பர் இன மக்களுடைய பேச்சு மொழி, மரபுவழி பண்பாடு, கலாச்சாரம், பாட்டு, இசை, நடனம், பழக்கவழக்கம், சடங்கு முறைகள், வழிபாட்டு முறைகள் ஆகிய அனைத்தும் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுவிட்டதென்றே சொல்லலாம். தமிழ்நாட்டில் இருக்கிற பழங்குடியின மக்களின் வாழ்வை முழுமையாக அறிவதற்கு, படிப்பதற்கு இனி www.tholkudi.in என்ற இணையதளம் அமைந்துவிட்டது.

’தொல்குடி மின்னணுக் காப்பகம்’ அமைப்பதில் www.tholkudi.in இணையத்தை உருவாக்குவதிலும், இணையத்தில் பழங்குடியின மக்களுடைய வாழ்க்கைசார்ந்த அனைத்துத் தரவுகளையும் தொகுத்துப் பதிவேற்றம் செய்ததிலும், அமைச்சர் மதிவேந்தன், அரசு செயலர் லட்சுமி பிரியா, இயக்குநர் அண்ணாதுரை ஆகியோரின் அக்கறையும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் போற்றத் தக்கது. இனி தமிழ்நாட்டின் பழங்குடியின மக்களுடைய மொழியும் பண்பாடும் காலம் முழுவதும் வாழும்.

மொழியையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் ஏன் பாதுகாக்க வேண்டும்? தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இதற்குக் கூடுதல் அக்கறையும் கவனமும் செலுத்தினார் என்பதை அறிய வேண்டும். ஒரு மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவன் பேசுகிற, அவன் வாழ்கிற சமூகம் பேசுகிற மொழி முக்கியமாக, அந்த மொழியில் இருக்கிற இலக்கியம் முக்கியமானது. தனக்கென்று ஒரு மொழியும் இலக்கியமும் இலக்கணமும் இல்லாத மனிதன் கிட்டத்தட்ட ஆடையற்ற மனிதனுக்குச் சமம். தமிழ்நாட்டின் பழங்குடியின மக்கள் ஆடையற்ற மனிதர்களுக்குச் சமமாக வாழக் கூடாது, அவர்களுடைய மொழியும், பண்பாடும் காலம் முழுவதும் வரலாறு நெடுகிலும் நிலைத்துநின்று வாழ வேண்டும் என்ற நோக்கில்தான் மு.க.ஸ்டாலின் இதற்காக அக்கறை கொண்டிருக்கிறார்.

மொழி ஏன் முக்கியமானது, அதை ஏன் பாதுகாக்க வேண்டும், மனிதன் எப்போது பேசினான் என்பதை யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தான் நினைப்பதைப் பிறரிடம் சொல்ல வேண்டும், பிறர் சொல்வதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போதுதான் பேச்சு மொழி உருவாகி இருக்க வேண்டும். சத்தத்தை எழுப்பி தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். சத்தம் அல்லது ஒலி என்பதுதான் பேச்சு. அல்லது மொழி என்பது. பிற விலங்குகளிடமிருந்து எந்தவிதத்தில் மனிதன் மேம்பட்டவன், வேறுபட்டவன் என்பதற்கு அவன் பேசுகிற மொழியும் எழுதுகிற மொழியும்தான் காரணம்.

1996இன் கணக்கெடுப்பின்படி உலகில் 6703 மொழிகள் பேசப்பட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதன்படி அமெரிக்கா கண்டத்தில் 1000த்துக்கும் அதிகமான மொழிகளும் ஆசியக் கண்டத்தில் 2165 மொழிகளும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் சுமார் 2011 மொழிகளும் பேசப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றன. இது துல்லியமான புள்ளிவிவரமல்ல. இந்தப் புள்ளிவிவரங்கள் 21ஆம் நூற்றாண்டிலும் அப்படியே இருக்கின்றன என்று சொல்ல முடியாது. உலகமயமாக்கலின் காரணமாகப் பல பேச்சு மொழிகள் வேகமாக அழிந்துவருகின்றன. இந்திய ஒன்றிய அரசுகூட ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்ற முழக்கத்தை முன்னிறுத்துகிறது. இந்த முழக்கம் இந்திப் பண்பாட்டை நிலைநிறுத்தவும், பல தேசிய இனங்களுடைய மொழியை, பண்பாட்டை அழிப்பதற்குமான முயற்சியே, இதுபோன்ற சூழ்ச்சிகளிலிருந்து மொழியை, பண்பாட்டை எப்படிக் காப்பாற்ற முடியும்? தாய் மொழி பேசுபவர்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்குதல், கல்வி நிலையங்களில் பாடத் திட்டத்தை உருவாக்குதல், சிறுபான்மை மொழிகளைப் பாதுகாக்க, கொள்கைகளை வகுத்தல், நிதி ஒதுக்கீடு செய்தல், சிறுபான்மை மொழியை மதிக்கும் அமைப்புகளை உருவாக்குதல் போன்ற காரியங்களால்தான் அழியும் மொழிகளைத் தக்க வைக்கவும், பாதுகாக்கவும் முடியும். மொழியைப் பராமரித்தல், ஆவணப்படுத்துதல், இலக்கண சொல்லகராதி, வாய்மொழி மரபுகளை ஆவணப்படுத்துதல் போன்ற காரியங்கள்தான் அழியும் நிலையிலுள்ள மொழிக்குப் புத்துயிர் அளிக்கும். அப்படியான பணியைத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் செய்துவருகிறார். மொழியியலாளர்கள், பூர்வீகச் சமூகங்கள், அரசுசாரா அமைப்புகள், யுனெஸ்கோ போன்ற சர்வ தேச அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகின் தொன்மையான மொழிகளான பாபிலோனியா, தமிழ், சமஸ்கிருதம், பழங்கால எகிப்திய மொழி என்று சொன்னாலும் சமஸ்கிருதம் கிட்டத்தட்ட செத்துப்போன ஒரு மொழிக்கு ஒப்பானதாகத்தான் இருக்கிறது. தமிழ் மொழியின் வயது 3500 ஆண்டுகளுக்கு முந்தையது என்று அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் அது எதனால் உயிர் வாழ்கிறது என்றால் அதுவே பேசும் மொழியாகவும் இருக்கிறது, இலக்கிய, இலக்கண மொழியாகவும் இருப்பதால்தான். மொழி மனிதர்களுக்கான தொடர்புக்கானது மட்டுமல்ல, வாழ்விற்கானது. அந்த மக்களின் அடையாளத்திற்கானது. திராவிட மொழிக் குடும்பத்திலேயே மிகவும் பழமையானது தமிழ். சில மொழிகள் வெறும் பேச்சு மொழியாக மட்டுமே இருக்கின்றன. அதனால், எளிதில் மறைந்துபோகின்றன. சில மொழிகள் இன்றும் வீட்டிற்குள்ளேயே பேசப்படும் மொழியாக இருக்கின்றன.

பழங்குடியின மக்களுடைய மொழி, பண்பாடு, கதைகள், வாழ்வியல், நெறிமுறைகளைக் காப்பதற்காக மட்டும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் போராடவில்லை. பழங்குடியின மாணவ மாணவிகளைப் படிக்க வைக்கவும் அவர்களைச் சமூகத்தில் மேம்பட்ட நிலைக்குக் கொண்டுவருவதற்காகவும் போராடுகிறார். திட்டங்களைக் கொண்டுவருகிறார்.

மலைப்பகுதியில் வாழக்கூடிய பழங்குடியின மாணவ மாணவிகள் குடும்பச் சூழல், நிலவியல் காரணிகள், போக்குவரத்துப் பிரச்சினைகள் என்று பல காரணங்களால பள்ளிக்குச் செல்ல முடியாத சூழலும் இடைநிற்றலும் அதிகரித்துவருவதைத் தடுப்பதற்காக ‘தொல்குடி திட்ட’த்தைக் கொண்டுவந்தார். இந்தத் திட்டத்தின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின குடியிருப்புகளில் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவதுதான். அதன் அடிப்படையில் உண்டு உறைவிடப் பள்ளி மாணவ மாணவிகளுக்காக 26 வாகனங்கள் வாங்கப்பட்டன. திருச்சி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் செயல்பட்டுவரும் பள்ளிகளுக்கு வாகன வசதி செய்யப்பட்டது. இந்த ஆறு மாவட்டங்களில் மட்டும் 74 உண்டு உறைவிடப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. இவற்றில் 3600 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை ‘இன்னாடு’ என்ற கிராமத்தில் வாகன வசதியை ஏற்படுத்தித் தந்ததன் மூலம் பள்ளியில் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இடைநிற்றல் இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழங்குடியின மாணவர்கள் கல்வி நலனில் காட்டும் அக்கறையைப் பற்றியும் பழங்குடியின செயலர் லட்சுமி பிரியா, இயக்குநர் அண்ணாதுரையின் செயல்பாடுகளைப் பாராட்டி, ஆனந்த விகடன் இதழும், தி இந்து நாளேடும் விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கின்றன. பழங்குடியின மக்கள் மட்டுமல்ல, பொதுச் சமூகமும் ஊடகங்களும் பாராட்டுவது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உழைத்த உழைப்பிற்குக் கிடைத்த வெகுமதியாகும்.

பழங்குடியின மக்களுடைய சுகாதார சேவைகளுக்காக நடமாடும் 20 வேன்களும் அவசரகால சேவைகளுக்காக 25 ஆம்புலன்ஸ்களும் இயக்கப்பட்டுவருகின்றன. அக்டோபர் 5, 2025 முதல் இந்த வாகனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பழங்குடியின மாணவ மாணவிகள் ஆரம்ப கல்வி மட்டுமல்ல, உயர் கல்வி பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் மதிவேந்தன், துறையின் செயலர் லட்சுமி பிரியா, இயக்குநர் அண்ணாதுரையும் பெரும் முயற்சிகளை எடுத்துவருகின்றனர். அனைவருக்கும் சம வாய்ப்புகளை உருவாக்கித் தருவதுதானே சமூக நீதி, சமநீதி என்பது. கல்வியில் சமூக நீதியை நிலைநாட்டிய விதத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களுக்குத் திசைகாட்டிகளாக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையும் மேற்கொண்ட சீரிய முயற்சிகளால இதுவரை இல்லாத அளவிற்குப் பழங்குடியின மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளில் 20 சதவிகிதம் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். வரும் ஆண்டுகளில் இந்த சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் தமிழ்நாட்டு பழங்குடியின மாணவ மாணவிகள் உயர் கல்வியில் எந்தளவிற்கு முன்னேற்றம் பெற்றுள்ளனர் என்பதையும் அறிய வேண்டும்.

கடந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மாணவ மாணவிகள் தேசிய ஃபேஷன் தொல்நுட்ப நிறுவனத்தில் 42 பேர் சேர்ந்துள்ளனர். காலணி வடிவமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் 39 பேர் சேர்ந்துள்ளனர். பிர்லா தொழில்நுட்ப நிறுவனத்தில் (ராஞ்சி) 16 பேர் சேர்ந்துள்ளனர். இந்திய சுற்றுலா பயண மேலாண்மை நிறுவனத்தில் 10 மாணவர்களும் மத்திய பிளாஸ்டிக் பொறியல் மற்றும் தொழில் நிறுவனத்தில் 9 பேரும் சேர்ந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 பேரும், பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் 8 பேரும் உயர் கல்வி பயில்வதற்காகச் சேர்ந்துள்ளனர். அதோடு இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம், பகல்பூர், நேஷனல் இன்ஸ்டிடியூட் அஃப் ஹேண்லூம், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரானிக்ஸ் கோரக்பூர், இந்திய கடல்சார் நிறுவனத்தில் 6 பேரும், ராஜீவ் காந்தி பெட்ரோலிய நிறுவனத்தில் 4 பேரும் சேர்ந்துள்ளனர். இப்படிப் பட்டியலிட்டுகொண்டே போகலாம். அந்தளவிற்குத் தமிழ்நாட்டில் உயர் கல்வி பெறும் பழங்குடியின மாணவ மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. 

நீலகிரி மலையில் வசித்துவரும் தோடா மக்களால் பேசப்படும் மொழி தோடா. இம்மொழியைப் பேசக்கூடியவர்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் இல்லை. அதனால் அம்மொழி அழிவின் விளிம்பிற்கு வந்துவிட்டது. அதே மாதிரி ‘கோட்டா’ என்ற மொழியும் படுகர் இன மக்களால பேசப்படும் ‘படுகா’ என்ற மொழியும், இருளர் இன மக்கள் பேசும் ‘இருளா’ என்ற மொழியும் அழியும் நிலைக்கு வந்துவிட்டன. பழங்குடியின மக்களுடைய மொழி மட்டும்தான் அழிந்துவருகின்றன என்று சொல்லிவிட முடியாது. பழங்குடியின மக்கள் தமிழில் பேச அதிகம் விரும்புகின்றனர் என்பதும் மேற்சொன்ன பழங்குடியின மொழிகள் அழிவிற்குக் காரணமாக இருக்கின்றது. இன்றைய தலைமுறையினர் ஆங்கிலத்தில் பேசுவதையே அதிகம் விரும்புகின்றனர். கல்வி, மற்றும் பொது வாழ்வில் பயன்படுத்தும் மொழியின் பரவலும் தாக்கமும் சிறுபான்மை மொழிகளை அழிவை நோக்கி நகர்த்துகின்றன. எழுத்து வடிவம் இல்லாத பல நாடோடி இன மக்களுடைய மொழிகள் அழிவதைத் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதே மாதிரிதான் நீலகிரி மலையில் பேசப்பட்டு வந்த ‘எரவல்லா’ என்ற பழங்குடியின மொழி கிட்டத்தட்ட அழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

தமிழ்நாட்டில் வாழும் சௌராஷ்டிரா இன மக்களால் பேசப்பட்டு வந்த மொழி சரிவைக் கண்டுள்ளது. அதே மாதிரி தஞ்சாவூர் பகுதியில் வாழ்ந்த மராத்தியர்கள் பேசிய மொழியும் இன்று இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. ஒரு இனம் தனக்கான மொழியை இழக்கிறது என்றால் அந்த இனம் தனக்கான கலாச்சார அடையாளத்தை இழக்கிறது என்று அர்த்தம்.

மொழி வளர்ச்சியிலும் அழிவிலும் அரசியல் பொருளாதாரம் போன்ற காரணிகள் முக்கிய பங்காற்றுகின்றன. மொழி பயன்பாட்டிலும் ஆதிக்கம் செய்கிற மொழிகள் இருக்கின்றன. ஆதிக்கத்திற்குட்படுகிற அழிந்துபோகிற சிறுபான்மை மொழிகளும் இருக்கின்றன. உலகில் பேசப்படுகின்ற மொழிகளில் இந்த நூற்றாண்டிற்குள் 1500 மொழிகள் மறைந்துபோய்விடும். மொழியியல் வல்லுநர்கள் கூறுவது மிகைக்கூற்று அல்ல.

இந்தி எதிர்ப்பு என்ற நெருப்பு தமிழ்நாட்டில் ஏன் இன்றுவரை கனன்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம். இந்தியை எந்த விதத்திலாவது தமிழ்நாட்டிற்குள் புகுத்திவிட வேண்டும் என்று விரும்புகிற ஒன்றிய அரசின் நோக்கத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை (National Educational Policy) ஏன் ஒன்றிய அரசு கொண்டுவர முயல்கிறது? இது ஒரு வகையான மொழித் திணிப்புத்தான். முயற்சிதான்.

Central Institute of Indian Congress நிறுவனத்தின் முன்னால் இயக்குநர் D.G. ராவ், “இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 220 மொழிகள் அழிந்துள்ளன” என்று அறிவித்திருக்கிறார். “இந்தியாவில் இருக்கின்ற மொழிகளில் 197 மொழிகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன” என்று UNESCO அறிவித்துள்ளது. இமய மலையிலும் அதனை ஒட்டியுள்ள பிரதேசங்களிலும் வாழும் பழங்குடியின மொழிகளான அகோம், ஆண்ட்ரோ, ரெங்காஸ், செங்மாயி, டோல்சா போன்ற மொழிகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

முரசொலி 12.11.2025



SC ST - ST மாணவர்களை ஜெர்னலிசம் படிக்கவைக்கும் முதலமைச்சர்

 SC - ST மாணவர்களை ஜெர்னலிசம் படிக்கவைக்கும் முதலமைச்சர்

இமையம்

“சாதி, மதம், பொருளாதாரம், சமுதாயச் சூழல் என்று எதுவுமே ஒருவர் கல்விக்குத் தடையாக இருக்கக் கூடாது.” - மு.க.ஸ்டாலின்

அனைவருக்கும் சமமான கல்வி என்பதுதான் தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கை. பிறப்பின் அடிப்படையிலோ, பிற காரணங்களாலோ ஒருவருக்குக் கல்வி மறுக்கப்படக் கூடாது என்பதனால், தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் கல்விக்குத்தான் அதிக முன்னுரிமை தந்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாட்டில் அனைத்துச் சமூகத்தினரும் தரமான உயர்கல்விவரை பெற்றிருக்கிறார்கள். பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில்தான் பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘புதுமைப் பெண் திட்டம்’கூட அதற்காக உருவாக்கப்பட்டதுதான்.

 ‘படி’ என்று சொல்வது திராவிட மாடல். ‘படிக்காதே’, ‘படிக்கக் கூடாது’ என்பது ஆரிய மாடல். சமஸ்கிருதத்தை இன்றுவரை படிக்கக் கூடாது என்றுதான் வைத்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டுப் பெண்களே சமஸ்கிருதத்தைப் படிக்கக் கூடாது என்று தடைவிதித்தவர்கள்தான். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது தமிழ் இலக்கியம், வர்ணாசிரம தர்மத்தைச் சொல்வது சமஸ்கிருத இலக்கியம். பல நூற்றாண்டுகளாகக் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், மூடநம்பிக்கைகளின் பெயரால் ஒரு பிரிவினருக்கு மட்டுமே கல்வி என்ற நிலை இருந்துவந்தது. 1921 நீதிக் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற நிலை உருவானது. அண்ணாவினுடைய ஆட்சிக் காலத்தில், கலைஞருடைய ஆட்சிக் காலத்தில் தமிழ்ச் சமூகத்தை எந்தெந்த விதத்தில் படிக்கவைக்க முடியுமோ அந்தந்த விதத்தில் படிக்கவைக்க முயற்சிகளை மேற்கொண்டார்கள். மு.க. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் பல படிகள் முன்னே போய் ஆரம்பக் கல்வி முதல், உயர்கல்வி வரை உலகத் தரத்திலான கல்வி என்ற நிலை உருவாகியிருக்கிறது. பெண்களை உயர்கல்வி பெற வைக்க வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.

 தமிழ்நாட்டில் மட்டும்தான் மாவட்டம்தோறும் மருத்துக் கல்லூரிகள், மாவட்டம்தோறும் பொறியியல் கல்லூரிகள், தாலுக்கா அளவில் ஒவ்வொரு கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆரம்பப் பள்ளி இல்லாத ஊரில்லை. கலைக் கல்லூரி இல்லாத தாலுக்கா இல்லை. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டம் இல்லை என்ற நிலையை தி.மு.க. அரசு ஏற்படுத்தியிருக்கிறது. “தமிழ்ச் சமூகத்தை அறிவுச் சமூகமாக, அறிவியல் மனப்பான்மையுள்ள சமூகமாக மாற்ற வேண்டும் என்பதே திராவிட இயக்கத்தின் கொள்கை. அக்கொள்கையை நிறைவேற்றியே தீருவேன்” என்ற உறுதியான நிலைப்பாட்டுடன் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்.

இன்றைய நிலையில் எல்லா கல்விப்புலங்களிலும் அனைத்துச் சமுதாய மாணவ மாணவிகளும் இருக்கிறார்கள். ஆனால், ஊடகத் துறையில் SC - ST மாணவ மாணவிகளின் பங்களிப்பு போதிய அளவில் இல்லை என்பதைக் கண்டறிந்த முதலமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் ‘சென்னை இதழியல் கல்வி நிறுவன’த்தை உருவாக்கி இருக்கிறார். இந்த நிறுவனம் ஊடகவியல் படிக்க வேண்டும், ஊடகவியல் துறையில் பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிற, தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவ மாணவிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கான கல்வியை வழங்கிவருகிறது. இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும்தான் SC – ST மாணவர்களுக்கான ‘இதழியல் கல்வி நிறுவனம்’ மாநில அரசால் தொடங்கப்பட்டிருக்கிறது. இது தமிழ்நாட்டின் ‘முதலமைச்சர் லட்சியத் திட்டம்’ என்றுகூடச் சொல்லலாம். அறிவுத்துறை எதுவாக இருந்தாலும் அவற்றில் அனைத்துச் சமூகத்தினரும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருப்பது சமூக நீதியாக இருக்க முடியாது. ஊடகத் துறையில் சாதிய மேலாதிக்கம் இன்றுவரை இருக்கிறது. அந்நிலையை ஊக்குவிக்கக் கூடாது. ‘ஒருசிலர்தான் அறிவாளிகள், ஒரு சிலருக்கு மட்டும்தான் அறிவு இருக்கிறது, இருக்கும்’ என்று கற்பிதத்தை உடைக்க வேண்டும். ‘ஒரு சிலருக்கு’ என்பதைப் ‘பலருக்கும், எல்லோருக்கும்’ என்ற நிலையை உருவாக்கத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர், ‘சென்னை இதழியல் கல்வி நிறுவன’த்தைத் தொடங்கியிருக்கிறார். எல்லாமும் எல்லோருக்கும் என்பதுதான் திராவிட மாடல் அரசு என்பது.

 ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’ ஓராண்டு முதுகலை சான்றிதழ் படிப்பை (Diploma) வழங்குகிறது. அதோடு 9 நாட்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சிப் பட்டறையும் நடத்துகிறது. அதற்காக தமிழ்நாடு முழுவதிலிருந்தும் திறமையான மாணவ மாணவிகளைக் கண்டறிந்து, விண்ணப்பங்களைப் பெற்று, அதிலிருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதோடு ரூ.20,000 ஊக்கத்தொகையுடன் முன்னணி ஊடக நிறுவனங்களில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது. இந்த ஓராண்டில் மட்டும் இருமுறை உண்டு உறைவிடப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றுள்ளது. இந்தப் பயிற்சிப் பட்டறையில் நிரந்தர பணியாளர்களோடு பிற ஊடக நிறுவனங்களில் பணியாற்றிக்கொண்டிருக்கும் திறமைவாய்ந்த, புகழ்பெற்ற ஊடகவியலாளர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

 ‘சென்னை இதழியல் கல்வி நிறுவன’த்துடன் சமூக நீதி மற்றும் சமத்துவ மையம், சென்னை சமூகப் பணி கல்லூரியுடன் இணைந்து ஒரு வாரக் கால உண்டு உறைவிடப் பயிற்சிக்கான நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. மொத்த நிகழ்வையும் ஒருங்கிணைப்பது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை. இதன் அடிப்படை நோக்கம் இந்திய அளவிலும், உலக அளவிலும் SC – ST மானவ மாணவிகளை மதிக்கத்தக்க ஊடகவியலாளர்களாக உருவாக்குவதுதான்.

தமிழ்நாட்டில் இயங்கிவரும் அனைத்துத் தனியார் ஊடகவியல் கல்வி நிறுவனங்களில்கூட வழங்கப்படாத பல சிறப்புப் பயிற்சிகள் ‘சென்னை இதழியல் கல்வி நிறூவன’த்தில் வழங்கப்படுகின்றன. அச்சு ஊடகம், தொலைக்காட்சி, வானொலி, இணைய ஊடகங்களில் செய்தியை உருவாக்கும் நடைமுறை பயிற்சிகள், செய்முறை வகுப்புகள், வீடியோ எடிட்டிங், ஒளிபரப்பு (Broadcasting), செய்தித் தொகுப்பு, தரவு இதழியல், தொழிற்நுட்பப் பயிற்சிகள், ஒலி மற்றும் ஊடகத் திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதன் அடைப்படை நோக்கம் SC – ST மாணவ மாணவிகள் தகுதிவாய்ந்த ஊட்கவியலாளர்களாக மாற வேண்டும். அவர்களுடைய பங்களிப்பும் ஊடகத் துறையில் இருக்க வேண்டும் என்பதுதான்.

 ‘சென்னை இதழியல் கல்வி நிறுவன’த்தைத் தொடங்குவதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் 7.75 கோடியை 18.7.2025 அன்று ஒதுக்கினார். திரு. N. ரவி, இந்த நிறுவனத்தின் தலைவராகவும் (The Hindu, Former Chief Editor), A.S.பன்னீர் செல்வம், இயக்குநராகவும் (Former Reader’s Editor of the Hindu) செயல்பட்டுவருகிறார்கள். திரு. N. ரவியின் உழைப்பும், திரு. A.S.பன்னீர் செல்வத்தின் உழைப்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளர் திருமதி லட்சுமி பிரியா போன்றவர்களுடைய நோக்கமும் உழைப்பும் அக்கறையும் அர்ப்பணிப்பு உணர்வும் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் நற்பெயரைப் பெறவும் நல்ல நிறுவனமாக வளரவும் நிச்சயம் காரணமாக இருக்கும். ஊடகவியல் கல்வி என்பது, வேலை பெறவும், திறமையைக் காட்டுவதற்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்டது அல்ல. சமூகத்தையும் அதன் இயங்கியல் போக்கைக் கண்டுணரவும் தன் கருத்தை நேர்மையாகப் பதிவு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. சமூகப் பொறுப்பை வெளிப்படுத்துவதற்கான வழியாக இருப்பது ஊடகக் கல்வி. எல்லாப் படிப்பிற்கும் மேலானது சமூகக் கல்வி. சமூகத்தை யார் படிக்கிறார்களோ அவர்களே மேம்பட்டவர்கள்.

தமிழ் மொழியில், பண்பாட்டில், கலாச்சாரத்தில், வாழ்வியல் நடைமுறையில் மறுமலர்ச்சியை உருவாக்கியவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் மூவருமே இதழியலாளர்களே! அவர்கள் உருவாக்கிய இதழியல் நெறிகளைக் கற்க வேண்டும். படிக்கிறோம் என்பதைவிட, எதைப் படிக்கிறோம், யாரை முன்னோடிகளாக எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கியமானது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடிஇனத்தவர் 19ஆம் நூற்றாண்டிலேயே பல பத்திரிகைகளையும் பதிப்பகங்களையும் நடத்தி இருக்கிறார்கள் என்பது பலருக்கும் நம்ப முடியாததாக இருக்கும். 1894ஆம் ஆண்டிலேயே ‘பறையன்’ என்ற இதழை இரட்டைமலை சீனிவாசன் நடத்தியிருக்கிறார். ‘ஒரு பைசா தமிழன்’ என்ற இதழை 1907ஆம் ஆண்டிலேயே அயோத்திதாசர் பண்டிதர் நடத்தியிருக்கிறார். ‘திராவிடத் தீபிகை’ – 1847, ‘சங்கமம்’ – 1870, ‘திராவிட வர்த்தமானி’ – 1882, ‘திராவிட பாண்டியன்’ – 1893 ஆகியவை திராவிட இயக்க இதழ்கள் உருவாவதற்கும், வளர்வதற்கும் முன்னோடிகளாக அமைந்தவை. தமிழில் இதழியல் துறை வளர்வதற்கு வித்திட்டவை இந்த இதழ்கள்தான். 

அண்மையில் கேரளப் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருதத் துறையின் தலைவர் மற்றும் டீன், “பறையனும் புலயனும் சமஸ்கிருதத்தைப் படித்ததால் அசுத்தமாகிவிட்டது. அவற்றைச் சுத்திகரிக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார். சமஸ்கிருதம் மட்டுமல்ல, IIT, IIM என்று எந்தக் கல்வி நிறுவனத்தில் படிக்கப் போனாலும், இதே போன்ற தொனியில் குரல்கள் கேட்பதை நாம் அறிவோம். “பிராமணர்கள் படிக்கும்போது தரம் உயர்ந்துவிடும், மற்றவர்கள் படிக்கும்போது தரம் தாழ்ந்துவிடும்” என்று சொல்பவர்களுடைய வாயில் ஆசிடை ஊற்றுவதுபோலத்தான் அனைவருக்கும் உயர் கல்வி என்ற நிலைப்பாட்டை எடுத்துவருகிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

தமிழ்நாட்டில் எல்லாத் துறைகளிலும் எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும். எந்தத் துறையும் யாருக்கும் ஏகபோகத் துறையாக இருக்கக் கூடாது என்ற லட்சிய நோக்கில் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’, SC – ST மாணவ மாணவிகள் ஊடகத் துறையில் தங்களுடைய பங்களிப்பையும் திறமையையும் வெளி உலகிற்குக் காட்டுவதற்குப் பெரிய வாசலாக இருக்கும். எதையும் சிதைக்காது, சீர் செய்யும். யாரையும் பிரிக்காது, ஒன்றுசேர்க்கும். யாரையும் தாழ்த்தாது, சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது, தோளோடு தோள் நின்று அரவணைக்கும், எதையும் இடிக்காது, மாறாக உருவாக்கும் என்பது திராவிட மாடல். மு.க. ஸ்டாலின் அரசின் முழக்கம், கொள்கை. அந்தக் கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ‘சென்னை இதழியல் கல்வி நிறுவனம்’.

முரசொலி 21.12.2025

காலத்தில் வாழும் வாக்கியங்களை உருவாக்கிய முதலமைச்சர்

 காலத்தில் வாழும் வாக்கியங்களை உருவாக்கிய முதலமைச்சர்

இமையம்

மனித இனம் எப்போது பேச ஆரம்பித்தது என்பது குறித்து, தெளிவான ஆய்வு முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை. அதே மாதிரி எழுத்துகளை எப்போது உருவாக்கினார்கள் என்பது குறித்தும் இறுதியான ஆய்வு முடிகள் வெளியிடப்படவில்லை. உலகின் மூத்த மொழிகளாக, ஹீப்ரு, சீனம், சமஸ்கிருதம், தமிழ் என்று இறுதி செய்யப்பட்டுள்ளன. சைகை மொழியிலிருந்து ஒழுங்கற்ற ஒலிகளின் வழியே தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்ட பிறகு ஓரளவு சொற்களின் ஒழுங்கமைவிற்கு வந்தவன் பேச ஆரம்பித்த மனிதன், பேச்சை ஒரு கலையாக வளர்த்தெடுத்தான். இன்று அதிகம் பேசுபவர்களை ‘ஓட்டை வாயன்’ என்றும், அதிகம் பேசதவர்களை, ‘உம்மணாமூஞ்சி’ என்று பல பட்டப்பெயர்களைச் சொல்லி அடையாளப்படுத்துகிறோம்.

மனிதர்கள் பிறந்ததிலிருந்து சாகும்வரை பேசிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எவ்வளவு வார்த்தைகளைப் பேசியிருப்பான்? கணக்கிட முடியாது. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பேசுகிற வார்த்தைகளில் எவ்வளவு அர்த்தமுள்ளது, எவ்வளவு அர்த்தமற்றது என்பது பிரித்துப்பார்க்கவும் முடியாது. எண்ணிப்பார்க்கவும் முடியாது. பேசிய வர்த்தைகளில் எத்தனை வார்த்தைகள் நினைவில் இருக்கும், தெரியாது, பேச்சிலேயே சிறந்த பேச்சு, பேசாமல் இருப்பதுதான். வார்த்தைகளைக் குறைத்துப் பேசுவதும், தேர்ந்தெடுத்துப் பேசுவதும் முக்கியமானது. பேசுகிற வார்த்தைகளைவிட பேசாத வார்த்தைகளுக்குத்தான் மதிப்பு அதிகம். உலகிலேயே சிறந்த மொழி, மௌனம்தான். பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும். பேச தேவையில்லாத இடத்தில் பேசாமல் இருப்பது சிறந்தது.

 மனிதர்கள் அதிகம் செலவழிப்பது வார்த்தைகளாக இருக்கிறது. பணத்தை எண்ணிஎண்ணி செலவு செய்கிறார்கள். வார்த்தைகளை மட்டும் எண்ணாமல், சிந்திக்காமல் செலவு செய்கிறார்கள். காரணமே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எந்தக் கடையில் சாப்பிட வேண்டும், எந்தக் கடையில் சாப்பிடக் கூடாது, எந்தக் கடையில் துணி எடுக்க வேண்டும், எந்தக் கடையில் துணி எடுக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறவர்கள், பேச்சு என்று வரும்போது கவனமாக இருப்பதில்லை. சாதாரணமாக இருக்கும்போது பேசுகிற வார்த்தைகளுக்கும், கோபத்திலிருக்கும்போது பேசுகிற வார்த்தைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அன்பாக இருக்கிற நேரத்தில் பேசுகிற வார்த்தைகளைவிட கோபத்தில் பேசுகிற வார்த்தைகளைத்தான் அதிகம் நினைவில் வைத்திருக்கிறார்கள். வாயில் வருவதையெல்லாம் பேசுவது, பேச்சு அல்ல. வார்த்தைகள் அல்ல. தேர்ந்தெடுத்து, யோசித்து, திட்டமிட்டு வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற அக்கறை 90% பேரிடம் இல்லை. அதை ஒரு குற்றமாகவும் கருத முடியாது. பொதுவாக மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது என்பது தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து மட்டுமே. சமூகம் சார்ந்து பேசுகிறவர்கள் அரிது. அதிகம் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது அரிது. எழுத்தாளர்கள் எழுதும்போது மட்டும்தான் வார்த்தைகளின் மீது அக்கறை கொண்டிருப்பார்கள். பேசும்போது அப்படி இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. பொதுவாக மனிதர்கள் பேசிக்கொள்வது இயல்பானதாக இல்லாமல் செயற்கையாகவே இருக்கும். இவன் பொய் சொல்கிறான், நடிக்கிறான் என்ற விதத்தில்தான் இருக்கும்.

கவிஞர்கள் கவிதையைப் பற்றியும், பொருளாதார அறிஞர்கள் பொருளாதாரத்தைப் பற்றியும், அறிவியல் அறிஞர்கள், கல்வியாளர்கள், கல்வெட்டியல், தொல்லியல் அறிஞர்கள் அந்தந்த துறை சார்ந்தவற்றை மட்டுமே பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். யார் என்ன பேசினாலும், எழுதினாலும் ஒருசிலர் பேசுவதும், எழுதுவதும் மட்டுமே மக்களால் திரும்பத்திரும்ப நினைவுகூரப்படுகின்றன, மேற்கோள்கள் காட்டப்படுகின்றன. வால்டேர், பெர்னாட்ஷா, தாகூர், காந்தி, அம்பேத்கர், ஷேக்ஸ்பியர், பெரியார், அண்ணா, கலைஞர்கள் போன்றவர்கள் சொன்னது, எழுதியது மட்டுமே சமூகத்தின் அனைத்துத் தரப்பினராலும் நினைவுகொள்ளப் படுகின்றன. 

வெற்று முழக்கங்களை, கோசங்களை உருவாக்குவது எளிது. அது அந்தந்தக் கணத்தில் தோன்றி மறைந்துவிடும். எக்காலத்துக்குமான, எல்லா மக்களுக்குமான வாக்கியங்களை உருவாக்குவது எளிதல்ல. சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டவர்கள் பேசுவதும், எழுதுவதும் மட்டுமே காலத்தில் நிற்கின்றன. அரசியல் கூட்ட மேடையாக இருந்தாலும், பள்ளி, கல்லூரி, பட்டிமன்றம் என்று எதுவாக இருந்தாலும், எல்லா மேடைகளிலும் மேற்கோள் காட்டப்படும் வாக்கியங்களை உருவாக்குவதும், அப்படி உருவாக்கப்பட்ட வாக்கியங்கள் காலம் கடந்து நிற்பதும் எளிய காரியமல்ல. மு.க.ஸ்டாலின் உருவாக்கியிருக்கிறார். எப்படி?

18ஆம் நூற்றாண்டிலிருந்தே ‘திராவிடம்’ என்ற சொல், அரசியல் களத்தில் அதிகமாகப் புழக்கத்திலிருக்கிறது. ‘திராவிட மரபு’ குறித்து, ‘திராவிட மொழி குடும்பம்’ குறித்து பல நூற்றாண்டுகளாகப் பேச்சு இருந்துவருகிறது. ‘திராவிடம்’, திராவிட இனத்தவரின் தனித்தன்மை குறித்துப் பலர் பேசியிருக்கிறார்கள். மொழியியல் வல்லுநர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்களும் பேசியிருக்கிறார்கள். தற்காலத்தில் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார். திராவிடம், திராவிடர் என்ற சொல் யாரைப் பற்றிப் பேசுகிறது. எந்த அடையாளத்தை முன்னிறுத்துகிறது. ‘திராவிட மாடல்’ என்ற புதிய சொல்லாட்சியை உருவாகியிருக்கிறார். ‘திராவிடம்’ என்பது என்ன என்பதைப் பற்றியும், அது பேசுகிற அரசியல் பண்பாட்டைப் பற்றியும் மு.க.ஸ்டாலின் புதிதாக உருவாக்கிய, பேசிய, எழுதிய வாக்கியங்களை உருவாக்கி இருக்கிறார். உலகிலேயே மிகவும் கடினமானது காலத்தால் அழியாத சொற்களை உருவாக்குவது.

 ‘உயர்ந்தவர் தாழ்ந்தவர்’ என பிரிப்பதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல்.

“ ‘திராவிடம்’ என்ற சொல் ஒரு காலத்தில் இடத்தின் பெயராக, இனத்தின் பெயராக, மொழியின் பெயராக வழங்கப்பட்டு வந்திருந்தாலும், இன்று ‘திராவிடம்’ என்றால் அது ஒரு அரசியல் தத்துவத்தின் பெயராக இருக்கிறது.”

“ ‘திராவிட மாடல்’ என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும். எதையும் சிதைக்காது, சீர் செய்யும். யாரையும் பிரிக்காது, அனைவரையும் ஒன்று சேர்க்கும். யாரையும் தாழ்த்தாது, அனைவரையும் சமமாக நடத்தும். யாரையும் புறக்கணிக்காது, தோளோடு தோள் நின்று அரவணைக்கும்.”

“இரத்த பேதம் கூடாது, பால் பேதம் கூடாது என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கை.”

“திராவிட இயக்கத்தில் அடிப்படைக் கொள்கை என்பது சாதி ஒழிப்பும் பெண்ணுரிமையும்தான்.”

உலகில் தோன்றிய மொழிகளில் தமிழும் ஒன்று. மூத்தமொழிகள் என்று சொல்லப்படுவதில் இன்று பல மொழிகள் புழக்கத்தில் இல்லை. ஆனால், தமிழ்மொழி தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை மக்கள் பேசும் மொழியாகவும், இலக்கிய, இலக்கண, செம்மொழியாகவும் இருப்பது தமிழ். எத்தனையோ படையெடுப்புகள், அரசு நிர்வாக மாற்றம், மொழி திணிப்பு, மொழி அழிப்பு, மொழி ஆதிக்கம் என்பதோடு அரசியல் நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் என்று கொடுத்தும்கூட தமிழ் மொழி இன்றும் உயிரோடு இருக்கிறது. உலகில் எந்த நாட்டினரைவிடவும், தமிழர்கள் கூடுதலான மொழிப்பற்றுக் கொண்டவர்கள் என்பது உலகம் அறிந்த ஒன்று. நீதிக் கட்சியும் திராவிட இயக்கமும் தி.மு.க.வும் மொழியை முதன்மைப்படுத்தி அரசியலைக் கட்டமைத்தவர்கள். அண்ணாவும் கலைஞரும் தமிழை முதன்மையான பண்பட்டுக் கருவியாக மாற்றியவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள். அவர்கள் மரபில் வந்த மு.க.ஸ்டாலின் மொழி குறித்து என்ன பேசினார், எழுதினார்?

    “தமிழால் நாம் இனைந்தால் நம்மை

    மதத்தால், சாதியால் பிரிக்க முடியாது.”

 “தமிழ் வாழ்க என்று சொல்வதால் நாம் மற்ற மொழிக்காரர்களுக்கு எதிரிகள் அல்ல. தமிழன் என்று சொல்வதால் மற்ற தேசிய இனத்தவர்களுக்கு நாம் எதிரிகள் அல்ல.”

“எந்த நாட்டில் வாழ்ந்தாலும் நமது தாய் மண்ணை மறந்துவிடாதீர்கள் என்பதே தமிழர்களுக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.”

“எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேர்களை விட்டுவிடுவதில்லை. என்பதைப் போல தமிழையும், தமிழ்நாட்டையும் விட்டுவிடாதீர்கள்.” 

இந்தியாவில் இருக்கிற கட்சிகளில் முதன்மையான கட்சி தி.மு.க. 75 ஆண்டுகளைக் கடந்தும் வலிமையோடு இருக்கிற கட்சியின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிற தான் எப்படிப்பட்டவன், எந்தக் கொள்கையால் வளர்க்கப்பட்டவன், எந்தக் கொள்கையின் அடிப்படையில் கட்சியை வழிநடத்துகிறேன், ஆட்சியை எந்த லட்சிய நோக்கத்தின் அடிப்படையில் நடத்துகிறேன் என்பதை மிகவும் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் ‘சில சொற்களில்’ சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன சில வார்த்தைகளே அவர் யார் என்பதைச் சொல்லிவிடுகிறது. அந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் அல்ல என்பதைக் காலம் நிரூபிக்கும்.

“கழகம்தான் என் களம். திராவிடம்தான் என் உயிர்க் கொள்கை. தமிழ்நாட்டுக்குச் செய்யும் நன்மையே எனது அன்றாடப் பணி. சிறு வயதிலிருந்தே நான் என்னை இப்படித்தான் வடிவமைத்துக்கொண்டேன்.”

“சுயமரியாதைக் கொள்கையில் தந்தை பெரியார், இனமான எழுச்சியில் அண்ணா, இயக்கத்தை வழிநடத்துவதில் கலைஞர், மொழி உரிமையில் இனமானப் பேராசிரியர் இவர்கள்தான் என்னை செத்துக்கிய சிற்பிகள்.”

மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளவர்கள் கடவுள்கள் அல்ல, மனிதர்கள். தமிழ்நாடு வளர வேண்டும். உயர வேண்டும் என்ற லட்சியத்திற்காகப் போராடியவர்கள். சமூக மேம்பாட்டிற்காக யார் போராடினார்களோ, ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டை மறுஉருவாக்கம் யார் செய்தார்களோ, அவர்கள்தான் தன்னை உருவாக்கிய, செதுக்கிய சிற்பிகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, வெற்று அறிவிப்பல்ல. சாதாரணமாக மு.க.ஸ்டாலின் அதிகமாகப் பேசுபவர் அல்ல. அதிகமாகச் சிந்திப்பவர். குறைவாகப் பேசுபவர்தான், பேச்சைவிட மௌனத்தை விரும்புகிறவர் அவர். பேச வேண்டிய நேரத்தில் பேசுகிறார். அவர் ஒரு வார்த்தை பேசினால் அது இந்தியாவையே அதிர வைப்பதாக இருக்கும். ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்று அவர் சொன்ன வார்த்தை ஹைகூ கவிதை மாதிரி இருந்தாலும் அச்சொல் இந்தியாவையே அதிரவைத்தது. காலத்தால் அழியாத சொற்களாக நிலைபெற்றுவிட்டது. “தமிழ்நாடு போராடும், தமிழ் வெல்லும்” என்பது இன்று தமிழ்ச் சமூகத்தில் பெரிய முழக்கமாக, வரலாற்று முழக்கமாக மாறிவிட்டது.

திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் அரசியல் சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தை வழிநடத்துபவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, தமிழ்நாட்டின் அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்குத் தனது லட்சியமாக இருப்பது என்ன என்பதைப் பற்றி மு.க.ஸ்டாலின் என்ன சொல்லியிருக்கிறார்?

“இந்த நாடே சமத்துவபுரமாக மாற வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். கொள்கை. இலக்கு.”

“என்னுடைய இலக்கு, திராவிட மாடல் என்று பெயர்.”

“தமிழ்நாட்டில் எந்தத் தனிமனிதருக்கும் அரசாங்கத்திடம் வைக்க கோரிக்கை மனு இல்லாத ஒரு நிலையை உருவாக்க வேண்டும். அதுதான் லட்சியம்.”

“ஒரு மாநிலத்தினுடைய வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக, தொழில் வளர்ச்சியாக மட்டுமே இருக்கக் கூடாது, சமுதாய வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும்.”

“தமிழ்நாட்டு அனைத்துத் துறைகளிலும் தலைசிறந்த மாநிலமாக மாற வேண்டும் என்பதே எனது ஆட்சியின் முழுமுதல் இலக்கு.”

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக தமிழ்நாட்டை எந்தப் பாதையில் வழிநடத்த விரும்புகிறேன். வழிநடத்துகிறேன் என்பதை வெளிப்படுத்தியிருப்பதை அவருடைய வார்த்தைகளே வெளிப்படுத்திவிட்டது. அதோடு, 

“இது சாமானிய மக்களுக்காக நடத்தப்படுகிற ஆட்சி. சாமானியர்களின் ஆட்சி” 

என்றும் சொல்லியிருக்கிறார். ஒரு ஆட்சி என்பது எளிய மக்களுக்கான ஆட்சியாக இருக்க வேண்டும். அதுதான் நல்லாட்சிக்கான இலக்கணம்.

“மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக, மக்கள் விரும்பும் அரசாக, மக்கள் கவலைகளைப் போக்கும் அரசாக, மக்கள் கனவு காணும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழகம் அரசு செயல்படும்” 

என்ற பிரகடனத்தை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார், இது வெறும் அறிவிப்பல்ல, வெற்று பேச்சல்ல, முதல்வரின் லட்சியம், கனவு. செயல் திட்டம்.

உலகில் மூத்த மொழிகளில் ஒன்று தமிழ். பண்டைய காலத்திலேயே தமிழர்கள் மொழி அறிவைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் கல்வி அறிவைப் பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அரிய இலக்கிய படைப்புகள் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து கல்வியைப் பெறுவதில் தமிழ்ச் சமூகம் முன்னோடியாக இருக்கிறது. மதம், கடவுள், நம்பிக்கை – மனுஸ்மிருதி போன்ற கற்பிதங்களால் கல்வி பலருக்கும் மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால், நீதிக்கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் என்று ஆட்சிக்கு வந்ததோ அதிலிருந்து முதன்மையான நோக்கமாக இருப்பது கல்வி மறுக்கப்பட்டவர்களுக்குக் கல்வியை வழங்குவது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலைக் கல்வி வரை தமிழ்நாட்டு மாணவ மாணவிகள் முதலிடம் பெற வேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டுவருகிறார். கல்வியைப் பற்றி கூறும்போதெல்லாம், ‘அறிவாயுதம் ஏந்துக’ என்றுதான் சொல்லிவருகிறார்.

“கல்வி மட்டும்தான் நம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றும், கல்வி மட்டும்தான் நமக்கு மதிப்பைத் தேடித் தரும். கல்வியால் பெறக்கூடிய பெருமை மட்டும்தான். எதனாலும் அழிக்க முடியாது.”

“மனிதர்களை மதிவாளர்களாக்குவதும் மாமேதைகளாக்குவதும் மனிதர்களாக்குவதும் கல்விதான்.”

நான் எழுத்தாளனில்லை, கவிஞனில்லை என்று பல இடங்களில் பேசியிருக்கிறார். எழுதியிருக்கிறார். ஆனாலும், அவர் கல்வி, அரசு, பொருளாதாரம், சமூகம், மொழி, கொள்கைப் பற்றி பேசியிருப்பதும், எழுதியிருப்பதும், அவர் ஒரு தேர்ந்த எழுத்தாளர் என்பது தெரிகிறது. இருநூறு பக்கங்களில் எழுதுவதை விடவும் இரண்டு வரிகளில் எழுதுவதுதான் சவாலானது. அந்தச் சவாலில் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றிருக்கிறார்.

“அன்பு என்பது சாதி பார்க்காது, மதம் பார்க்காது, மொழி பார்க்காது, இனம் பார்க்காது, நிறம் பார்க்காது. பால்பேதம் பார்க்காது.”

இந்த வாக்கியங்கள் மு.க.ஸ்டால்னுடைய உலகளாவிய பார்வையைக் காட்டுகிறது. சாதி, மதம், இனம், நாடு என்று மக்களிடையே பல வேற்றுமைகளும் வெறுப்புணர்வுகளும் மேலோங்கியிருக்கிறது. அவை தேவையற்றவை. ‘மனிதர்களாக இருப்போம். மனித மாண்பைக் காப்போம்’ என்பதுதான் மு.க.ஸ்டாலினுடைய வேண்டுதலாக இருக்கிறது. சகமனிதர்களிடம் அன்பாக இருப்பதில் என்ன பிரச்சினை, உண்மையான அன்பு எல்லா வேறுபாடுகளுக்கும் பிரிவினைகளுக்கும் இடமளிக்காது.

 “மனிதர்கள் அனைவரும் சமம் என்பதுதான் சமத்துவம். யாரையும் வேற்றுமையாகப் பார்க்காதே என்பதுதான் சகோதரத்துவம். அனைவருடனும் சேர்ந்துவாழ் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள்மீது இரக்கம் காட்டு என்பதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராக் குரல் கொடு என்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடு என்பதுதான் தியாகம். உன்னிடம் இருப்பதை இல்லாதவருக்குக் கொடு என்பதுதான் பகிர்தல்.”

இது வேதம் சொன்னதல்ல. யோகிகள், முனிவர்கள், தத்துவவாதிகள், சமய போதகர்கள் சொன்னதல்ல. மு.க.ஸ்டாலின் சொன்னது. ஜென் தத்துவம்போல இருக்கிறது. புத்தர் சொன்னதுபோல் இருக்கிறது. மனிதர்கள் மீதான அன்பு யாருக்கு இருக்கிறதோ, எல்லையில்லா கருணை யாரிடம் இருக்கிறதோ, அவர்களிடம்தான் இது போன்ற சொற்களைப் பெற முடியும். ஒரு சாமியார் சொன்னார், ஒரு கடவுள் சொன்னார் என்று சொன்னால், அதிலும் வெளிநாட்டினர் என்றால், அந்த வார்த்தைகளின் மீது சமூகத்திற்கு ஒரு மதிப்பு வருகிறது. அதையே ஒரு அரசியல்வாதி சொன்னால் ஏற்க மறுக்கிறது. ஒரு அரசியல்வாதியாக நின்று இந்த வார்த்தைகளை ஸ்டாலின் எழுதவில்லை. ஒரு மனிதனாக, சமூகத்தை நேசிக்கும் ஒரு மனிதனாக சொன்ன வார்த்தைகள். இந்த வார்த்தைகள் என்றும் சாகாது. “போலியான பெருமைகளால் யாரும் வளர முடியாது” என்று அவர் சொன்னது இந்த இடத்தில் நினைவூட்டுவது முக்கியம். வாழ்க்கை அனுபவம்தான். வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துச் சமூகத்திற்காகப் பேசவைக்கிறது. சகமனிதனின் மீது, சமூகத்தின் மீது பற்று இல்லாதவர்களால் சமூகம் எப்போதும் நினைவுக் கொள்ளும், கொண்டாடும் வார்த்தையை உருவாக்கிவிட முடியாது. 

“மக்களுக்காக இருப்பவர்கள் நாங்கள். மக்களோடு இருப்பவர்கள் நாங்கள். மக்களுக்காகவே வாழ்பவர்கள் நாங்கள்.”

மொழிப் பற்றி, கல்வி, அரசு நிர்வாகம், சமூகம், கட்சி, கொள்கை, விவசாயம், பொருளாதாரம், தொல்லியல், ஜனநாயகம், நாடு, மக்கள், மாணவர்களின் முன்னேற்றம் என்று பல துறைகள் பற்றி பேசியிருக்கிறார். எழுதியிருக்கிறார். அது கொள்கை பிரகடனமல்ல. அரசியல் கோஷமல்ல. எதிரிகளுக்கு விடுக்கப்பட்ட சவால்கள் அல்ல. அன்றாட அறிவிப்புகளுக்காக, அறிக்கைகளுக்கு மு.க.ஸ்டாலின் பேசியவை அல்ல. எழுதியவை அல்ல. ஒவ்வொரு துறை சார்ந்தும் ஆழ்ந்த ஈடுபாடும் அக்கறையும் அந்தந்தத் துறைகளின் முக்கியத்துவம் அறிந்து பேசப்பட்டவை. எழுதப்பட்டவை. காலத்தில் கரைந்துபோகாத சொற்கள்.

 “எப்போதுமே இலக்குதான் முக்கியம். அதை அடைவதற்கு உழைப்புதான் முக்கியம். இலக்கும் உழைப்பும் ஒன்றுசேர்ந்தால் அவர்களை யாராலும் வெல்ல முடியாது” என்று மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். எழுதியிருக்கிறார். இந்த வாக்கியம் எக்காலத்திற்கும் பொருந்தும். எல்லாச் சமூகத்திற்கும் பொருந்தும். ஒவ்வொரு மனிதனும் தீர்மானித்துக்கொள்ள வேண்டியது. இலக்கு, உழைப்பு இரண்டும் இல்லாதவர்களால் வாழ்க்கையில் எந்த இலக்கையும் அடைய முடியாது. இந்தச் சொற்கள் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கையிலிருந்து அவருடைய உழைப்பிலிருந்து உருவாகிவந்த சொற்கள். கால்த்தில் நிற்கும் சொற்கள்.

பொதுவாக அரசியல்வாதிகள் மாற்றிமாற்றிப் பேசுவார்கள் என்றும் சந்தர்ப்பத்திற்கேற்ப பேசுவார்கள்,சூழ்நிலைக்கேற்ப கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள் என்றும் சமூகத்தில் ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது பொய்யென்று சொல்ல முடியாது. பொது சமூகத்தின் நம்பிக்கை மு.க.ஸ்டாலினுக்குப் பொருந்தும். நீதி கட்சியின் கொள்கை என்னவோ, தி.மு.க.வின் கொள்கை என்னவோ, அதுதான் மு.க.ஸ்டாலினின் கொள்கை. கட்சியின் அடிப்படை கொள்கைகளிலிருந்து அவர் ஒரு நூல் அளவுகூட மாறவில்லை. அதுதான் அவருடைய பலம். தி.மு.க.வின் பலம். மு.க.ஸ்டாலின் பேசிய வாக்கியங்களும், எழுதிய பல வாக்கியங்களும் ஏன் இன்று திரும்பத்திரும்ப நினைவுகூரப்படுகின்றது. மேற்கோள் காட்டப்படுகின்றது என்றால், கொள்கை வழி வந்த பேச்சு, கொள்கை வழி எழுத்து என்பதால்தான்.

“நான் என் பலத்தை நம்பியே அரசியல் செய்ய நினைக்கிறேன். எனது பலம் எனது இலக்கில் இருக்கிறது.” 

மு.க.ஸ்டாலினின் இந்த வாக்கியம் அவர் யார் என்பதைக் காட்டுகிறது. அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதையும் காட்டுகிறது. ஒவ்வொரு அரசியல்வாதியும் பின்பற்ற வேண்டிய அரசியல் நெறி. பிறருடைய பலவீனத்தை நம்பி அரசியல் செய்கிறவர், நிஜமான அரசியல்வாதி அல்ல.


07.12.2025 முரசொலி

08.12.2025

எளியவர்களுடைய குரலைக் கேட்கும் முதலமைச்சர்

 எளியவர்களுடைய குரலைக் கேட்கும் முதலமைச்சர்

இமையம்

தமிழ்நாட்டில் ஆறாவது முறையாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையில் அமைந்தது. இந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் பின்பற்றப்பட்டு வருகின்றன. பள்ளிகளில் வழங்கப்படும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, தெலுங்கானாவிலும் பஞ்சாப்பிலும் டெல்லியிலும் பின்பற்றப்படும் என்று அந்தந்த மாநில முதலமைச்சர்கள் அறிவித்திருக்கிறார்கள். கனடா நாட்டுப் பிரதமரும், இங்கிலாந்து நாட்டுப் பிரதமரும் ‘காலை உணவுத் திட்ட’த்தை வரவேற்றதோடு நடைமுறைப்படுத்தப் போகிறோம் என்றும் அறிவித்திருக்கிறார்கள். இதே போன்று, ‘விடியல் பயணத் திட்டம்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, ‘புதுமைப் பெண் திட்டம்’, ‘நான் முதல்வன் திட்டம்’ போன்றவை இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களும் பின்பற்றக்கூடிய திட்டங்களாக இருக்கின்றன. இத்திட்டங்கள், மக்கள் கோரிக்கை வைத்துக் கொண்டுவரப்பட்டவை அல்ல. மு.க.ஸ்டாலினின் சிந்தனையில், சமூக அக்கறையில் உருவான திட்டங்கள். அதே மாதிரி எளியவர்களின் குரலைக் கேட்டு, கோரிக்கைகளை ஏற்று புதிய திட்டங்களையும் சட்டங்களையும் நிறைவேற்றிவருகிறார்.

என்னுடைய கோரிக்கைகளை ஏற்று மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் பல அரசாணைகளை வெளியிட்டுள்ளார். நம்ப முடிகிறதா? என்னுடைய ‘கோவேறு கழுதைகள்’ நாவலைக் கடலூர் மத்தியச் சிறையில் படித்ததாகவும், பரோலில் வரும்போது தங்களைப் பார்க்க வேண்டும் என்றும் ஒரு கைதி கடிதம் எழுதியிருந்தார். பிறகு ஒருநாள் அந்தக் கைதி என்னைப் பார்க்கவந்தார். சிறைச்சாலையிலுள்ள பல கைதிகளுக்கு மூச்சுக்காற்றாகவும், சூரிய வெளிச்சமாகவும் இருப்பது நூலகம்தான். ஆனால், சிறைச்சாலையில் உள்ள நூலகங்களில் போதிய நூல்கள் இல்லை. காற்றோட்டமும் வெளிச்சமும் இருக்கை வசதியும் இல்லை என்று சொன்னார். அதோடு, “நம்முடைய முதலமைச்சரின் கவனத்திற்குப் போனால் செய்து தந்துவிடுவார்” என்றும் சொன்னார். “எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன். “நடப்பது தி.மு.க. ஆட்சி. முதலமைச்சர், கலைஞரின் மகன். புத்தகங்களின் அருமை எப்படித் தெரியாமல் இருக்கும்?” என்று கேட்டார். ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் ஒரு கைதியின் கோரிக்கையையும் நம்பிக்கையையும் எப்படி நிறைவேற்றுவது என்று தெரியவில்லை. முதலமைச்சரின் கவனத்திற்கு எப்படிக் கொண்டுசெல்வது என்பதும் எனக்குத் தெரியவில்லை.

என்னுடைய ‘கோவேறு கழுதைகள்’ நாவலைப் படித்துவிட்டு, ‘புதிரை நலவண்ணார் வாரியம்’ அமைத்தார் கலைஞர். நான் கோரிக்கை வைக்கவில்லை, திரு. ரவிக்குமார் சட்டமன்றத்தில் பேசினார். அதை வைத்து கலைஞர் நாவலைப் படித்தார், வாரியம் அமைத்தார் என்பது என் நினைவுக்கு வந்தது. GOMS No: 114. AD & TW6 Department நாள்: 15.10.2005இன் படி தமிழ்நாட்டிலுள்ள புதிரை நல வண்ணார் வாரியத்தின், உறுப்பினர்களுக்காக ஆண்டுக்கு 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. 24,588 உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. அட்டவணைப் பிரிவுகளில் 60ஆவது இடத்தில் உள்ளது புதிரை வண்ணார் சமூகம். தலைவர் கலைஞர் செய்யும்போது என் அண்ணன் தளபதி செய்ய மாட்டாரா என்ற எண்ணத்தில் மார்ச் 25, 2022 அன்று ‘தி தமிழ் இந்து’ நாளேட்டில் ‘சிறைச்சாலை நூலகங்கள் மேம்படுத்தப்படுமா?’ என்று தலைப்பிட்டு கட்டுரை எழுதினேன். மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈட்டுவதற்காக அன்று துபாயில் இருந்தார். எப்படித்தான் கட்டுரையைப் படித்தாரோ தெரியவில்லை. அவருடைய தனிச் செயலாளராக இருந்த திரு. உதயச்சந்திரன் இ.ஆ.ப.விடம், “ஊருக்கு வந்ததும் அரசாணை வெளியிடப்பட்டு உடனடியாகச் சிறைச்சாலை நூலகங்கள் மேம்படுத்தப்படும், சொல்லிவிடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். அந்தத் தகவலை துபாயிலிருந்த திரு. உதயச்சந்திரன் அவர்கள் என்னிடம் தொலைபேசி வாயிலாகச் சொன்னார். நான் வியந்துபோனேன்.

முதலமைச்சர் நாடு திரும்பிய மறுநாளே 9 மத்தியச் சிறைகளுக்குத் தலா 2000 நூல்களும், 5 பெண்கள் சிறப்பு சிறைகளுக்குத் தலா 500 நூல்களும் 14 மாவட்டச் சிறைகளுக்குத் தலா 500 நூல்களும், 113 கிளைச் சிறைகளுக்குத் தலா 500 நூல்களும் நூலகத் துறையின் வழியாக அனுப்பிவைத்தார். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு நிதி ஒதுக்கினார். பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரைக்காக சிறைச்சாலை நூலகங்களை மேம்படுத்தியவர் என்றால் அது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினாகத்தான் இருக்க முடியும். இது ஒரு உலக அதிசயம்.

சிறைச்சாலை நூலகங்களுக்குப் புத்தகத் தானம் தருவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. ஒரு தனிநபர் தன்னுடைய புத்தகச் சேகரிப்பைத் தானமாகச் சிறைச்சாலைகளுக்கு அனுப்ப இயலாத நிலை இருக்கிறது. பல அடுக்கு தணிக்கை இருக்கிறது. அதனால் எளிதில் ஒருவர் சிறைச்சாலைக்குப் புத்தகம் அனுப்ப முடியாது. பழைய நடைமுறைகளில் மாற்றம் வேண்டும் என்று திரு. உதயச்சந்திரன், இ.ஆ.ப. மூலமாக முதலமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தேன். மறுநாளே தமிழ்நாடு முழுவதும் மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளிலும், சென்னையில் நடைபெறும் புத்தகக் காட்சியிலும், ஐம்பெரும் இலக்கிய விழாக்களிலும் தனி அரங்கு ஏற்படுத்தப்படும், அந்த அரங்கில் புத்தகத் தானம் செய்ய விரும்புகிறவர்கள் புத்தகங்களைத் தரலாம். அந்த அரங்கில் சிறைத் துறையைச் சார்ந்த பணியாளர் புத்தகங்களைப் பெற்றுக்கொள்வார். தானமாகப் பெறப்பட்ட புத்தகங்கள் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துச் சிறை நூலகங்களுக்கும் நேரடியாகப் பகிர்ந்தளிக்கப்படும் என்று அறிவித்தார்கள். முதலமைச்சர் அறிவித்ததுபோல, சென்னை புத்தகக் காட்சியிலும் மாவட்டந்தோறும் நடைபெறும் புத்தகக் காட்சிகளிலும் தனி அரங்கு அமைக்கப்பட்டு, புத்தகங்கள் பெறப்பட்டுவருகின்றன. இப்போது சிறைச்சாலை நூலகங்கள் புத்தகங்களால் நிரம்பியிருக்கின்றன. தனக்கு அன்பளிப்பாக வரக்கூடிய புத்தகங்கள் அனைத்தையும் நூலகங்களுக்கு அளித்துவருகிறார். இச்செயல் இந்தியாவில் வேறு எந்த மாநில முதலமைச்சரும் செய்யாத அரிய செயல்.

“என்னைச் சந்திக்க வருகிறவர்கள், புத்தகங்களுடன் வர வேண்டும். சால்வை, துண்டு, வேட்டி கொண்டுவருவதைத் தவிர்க்க வேண்டும். புத்தகங்கள் மூலமாகத்தான் சமூகத்தில் அறிவுப் புரட்சி ஏற்பட வேண்டும்” என்று அறிவித்தார்கள். அதோடு, “அறிவுதான் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும். அறிவியல் பாதைக்கு அழைத்துச் செல்லும். சமூகம் அறிவியல் பாதையில்தான் செல்ல வேண்டும்” என்று மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவித்தார்.

மூன்றாவதாக நான் முதலமைச்சரிடம் வைத்த கோரிக்கை, “சென்னை பாரிமுனையிலிருந்து, தாம்பரம்வரை பொதுக் கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்” என்பது. முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருந்த திரு. உதயச்சந்திரன், இ.ஆ.ப. அவர்களிடமும் கடிதம் வழங்கினேன். மிக முக்கியமான கோரிக்கை என்று முதலமைச்சர் பாரிமுனைமுதல் தாம்பரம்வரை பொதுக் கழிப்பிட வசதியை ஏற்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டார். தேவையான நிதியையும் ஒதுக்கித் தந்தார். பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சரின் ஆணைக்கிணங்க பொதுக் கழிப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவதில் திரு. உதயச்சந்திரன், இ.ஆ.ப. முனைப்புடன் செயல்பட்டார்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள், மாற்றுச் சீறுநீரக அறுவைச் சிகிச்சையைத் தனியார் மருத்துவமனைகளில் செய்துகொள்ள அரசு உதவி பெற வேண்டுமானால் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.75,000 என்றிருந்தது. கலைஞர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மாற்றுச் சிறுநீரகம் பொருத்துவதற்கான குடும்ப ஆண்டு வருமானத்தை உயர்த்தித் தர வேண்டும் என்று 10 ஆண்டுகள் அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது பல முறை கோரிக்கை வைத்தேன். காது கொடுத்துக்கூடக் கேட்கவில்லை. ஆனால், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும், தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் மனுவாக அளித்தேன். மறுவாரமே குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 75,000 என்பதை மாற்றி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கி அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையால் தமிழ்நாட்டில் பல ஆயிரக் கணக்கான நோயாளிகள் பலன் பெற்றுவருகின்றனர். அதே மாதிரி டயாலிஸிஸுக்குச் செல்லும் நோயாளிக்கு மட்டுமல்ல, அவருடன் செல்லும் உதவியாளருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க கோரிக்கை வைத்தேன். அந்தக் கோரிக்கையும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் நிறைவேற்றி தந்தார்கள்.

தொழில் முதலீடு ஈர்ப்பதற்காக தமிழ்நாட்டின் முதலமைச்சர் 27.08.2025 அன்று அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது இரவு ஒன்பது மணிக்கு Dr. அருள் செலஸ்டீன் பிரேமா என்பவர் திருநெல்வேலியிலிருந்து எனக்கு போன் செய்து ஒரு தகவலைச் சொன்னார். அவர் பணிபுரியும் கல்லூரியில் தற்காலிக உதவிப் பேராசிரியராக மணிமேகலை என்பவர் பணியாற்றிக்கொண்டிருக்கிறார். அவர் அதே கல்லூரியில் படித்தவர். யார் யாரெல்லாம் அவருக்குப் பாடம் நடத்தினார்களோ அவர்களோடு சரிசமமாக உட்கார வேண்டிய சூழல். அதனால் மணிமேகலைக்கும் பிற உதவி மற்றும் பேராசிரியர்களுக்கிடையே மனக்கசப்பு, வெறுப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்குச் சாதியும் ஒரு காரணம். இதனால் மணிமேகலையின் மீது புகார் கொடுக்க, விஷயம் துணை வேந்தர் வரை சென்றது. ஈகோ பிரச்சினை. விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. விசாரணையின்போது விசாரணைக்குழுவினர் கேட்ட கேள்விகள் அத்தனைக்கும் உடனடியாக, தயங்காமல் பதில் சொன்ன மணிமேகலை தன்னுடைய ஊரின் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்டார். மூன்று, நான்கு மணிநேரம் வற்புறுத்திக் கேட்டும் ஊரின் பெயரைச் சொல்ல மறுத்துவிட்டார். அதனால் அந்தப் பெண்ணை பணியிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்பதை Dr. அருள் செலஸ்டீன் பிரேமா சொன்னார். மணிமேகலையின் ஊரின் பெயர் ‘பறையன்குளம்’. அதைத்தான் அவர் சொல்ல மறுத்துவிட்டார் என்பதையும் சொன்னார். நான் அதிர்ந்துபோனேன். அப்போதே அமெரிக்காவிலிருந்த தமிழ்நாட்டின் முதலமைச்சரின் தனிச் செயலாளர் மருத்துவர் உமாநாத், இ.ஆ.ப.விடம் ‘பறையன்குளம்’ என்ற பெயரை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். “ஊருக்கு வந்ததும் செய்துவிடலாம்” என்று சொன்னார். முதலமைச்சரின் சிறப்பு தனிச் செயலர் அண்ணன் தினேஷ் அவர்களிடமும் அன்றிரவே பேசினேன். “தலைவரிடம் சொல்கிறேன், ஊருக்கு வந்ததும் மாற்றிவிடலாம்” என்று சொன்னார்.

நான் தமிழ்நாட்டில் சாதிப் பெயர்கள் உள்ள பட்டியலைத் தயாரித்தேன். அதோடு ஆதார், பேன் கார்டு, குடும்ப அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களில் காலனி, ஹரிஜன காலனி, புதுக்காலனி, மேட்டுக் காலனி, பழையக் காலனி, அருந்ததியர் காலனி, அம்பேத்கார் காலனி, அருந்ததியர் தெரு என்று பதிவாகி இருப்பது குறித்து ஆராயவும் சிந்திக்கவும் தொடங்கினேன். ஆவணங்களைச் சேகரித்தேன். தமிழ்நாட்டில் பறையன்குளம், பள்ளப்பட்டி, நாவிதன்பட்டி, சக்கிலிபட்டி என்று பல ஊர்ப்பெயர்கள் இருப்பதையும் அறிந்துகொண்டேன். இதற்கிடையில் நான் மணிமேகலையை மனதில் கொண்டு ஆனந்த விகடனில் (19.12.2024) ‘அடங்காத அழுகை’ என்ற சிறுகதையை எழுதினேன். அக்கதை பரவலான கவனத்தை ஈர்த்தது. பேசுபொருளானது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னை மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்தார். 28.2.2025 அன்று நான் பொறுப்பேற்றுகொண்டேன். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகுதான் தமிழ்நாட்டில் விஜிலென்ஸ் கமிட்டி மாநிலக் கூட்டம் நடைபெற ஆரம்பித்தது. 2025இல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் நான் பங்கேற்றேன். தமிழ்நாடு முதலமைச்சர் என்னைப் பேச அனுமதித்தார். முதலமைச்சர் வழங்கிய அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, “தமிழ்நாட்டில் காலனி என்ற சொல் இழிவுபடுத்தும் சொல்லாக இருக்கிறது. அச்சொல்லை அரசு ஆவணங்களிலிருந்து நீக்க வேண்டும். பறையன் குளம், பள்ளப்பட்டி, நாதவிதன்பட்டி, சக்கிலிப்பட்டி என்று சாதிப்பெயர்களைக் கொண்ட கிராமங்களின் பெயர்களை நீக்க வேண்டும், மாற்ற வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். நான் சொன்னபோது அமைதியாகக் கேட்டுக்கொண்டார். எதுவும் செய்ய மாட்டாரோ என்று நான் சந்தேகப்பட்டேன். ஆனால், நான் மட்டுமல்ல, தமிழ்நாடே எதிர்பார்க்காத, ஒரு கோடி மக்களுக்கும் மேலாக வாழக்கூடிய ஆதிதிராவிடர், அருந்ததியர் மக்கள் காலம்காலமாக ஒரு சொல்லின் வழியாக சுமந்துவந்த இழிவை, அவமானத்தை, சங்கடத்தைப் போக்கும் விதமாக 29.4.25 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்ததோடு நிற்காமல் 6.10.25 அன்று அரசாணையும் வெளியிட்டார். ‘அரசாணை (நிலை) எண் 313’ஐ வெளியிட்டதோடு தன் வேலை முடிந்துவிட்டது என்று எண்ணாமல் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் 14.10.25க்குள் குடியிருப்புகள், சாலைகள், தெருக்கள், பொது சொத்துகள், பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும். பெயர் மாற்றம் தொடர்பாக 24.10.2025க்குள் அரசிதழில் வெளியிட வேண்டும். 19.11.2025க்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். “இந்த மண்ணின் ஆதிகுடிகளை இழிவுப்படுத்தும் அடையாளமாக ‘காலனி’என்ற சொல் பதிவாகி இருக்கிறது. ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்டாமையின் குறியீடாகவும், வசைச் சொல்லாகவும் மாறி இருப்பதால், இனி இந்தச் சொல்லை அரசு ஆவணங்களிலிருந்தும், பொதுப் புழக்கத்திலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சாதி சார்ந்த தொனியோ, அடையாளமோ குறிக்காத வகையில் மாற்றுப் பெயர்களை வைக்க வேண்டும். இப்பணி 19.11.2025 தேதிக்குள் முடிவடைய வேண்டும்” என்று உத்தரவிட்டார். ஊரின் எல்லையில் வைக்கப்பட்டிருந்த போர்டுகளில் எழுதப்பட்டிருந்த ‘காலனி’ என்ற சொல் அழிக்கப்பட்டு புதிய பெயர்கள் எழுதப்பட்டுவருகின்றன. பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு, பெயர்களும் மாற்றப்பட்டு வருகின்றன. அரசு ஆவணங்களிலும் ‘காலனி’ என்ற சொல் நீக்கம் குறித்த பணி துரிதகதியில் நீக்கப்பட்டுவருகின்றன.

நான் தி இந்து நாளேட்டில் ‘Signing off an entrenched symbol of stigma (on 11.08.2025)’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினேன். Front Line (28.05.2025) பத்திரிகையிலும் The New Indian Express (01.06.2025) நாளேட்டிலும் விரிவான பேட்டி அளித்தேன். கலைஞர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்தேன். சன் தொலைக்காட்சியில் 20 நிமிடப் பேட்டி அளித்தேன். ‘காலனி’ என்ற சொல்நீக்கத்தின் மூலம் ‘வரலாற்று நாயகனான முதலமைச்சர்’ என்ற கட்டுரையை முரசொலியில் 12.6.25 அன்று எழுதினேன். அதோடு ‘ஆனந்த விகடன்’ மற்றும் பல யூடியூப் சேனல்களுக்கு ‘காலனி’ சொல் நீக்கத்தின் அவசியம் குறித்துப் பேசினேன். நகராட்சி நிர்வாகத் துறை செயலாளர் திரு. கார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்களையும்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அவர்களையும் சந்தித்து காலனி சொல் நீக்கத்தின் அவசியம் குறித்து விரிவாகப் பேசினேன். தலைமைச் செயலாளர் திரு. முருகானந்தம் இ.ஆ.ப. அவர்களிடமும் முதலமைச்சரின் தனிச் செயலர் திரு. சண்முகம் இ.ஆ.ப. அவர்களிடமும் தொடர்ந்து பேசினேன். பெரும் போராட்டம். ஒற்றை ஆளாகப் போராடிக்கொண்டிருந்தேன்.

நான் சாதாரணமான ஆள். சமூகத்தின் விளிம்புநிலையில் வாழக்கூடியவன். என்னுடைய கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தில் அறிவித்து, அரசாணை வெளியிட்டு காலம்காலமாக இழிவின் அடையாளமாக அவமானத்தில் அடையாளமாக வாழ்விடத்தின் அடையாளமாக இருந்த ‘காலனி’ என்ற சொல்லை நீக்கிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரலாற்றில் நீடித்த, நிலைத்த, என்றும் அழியா புகழைப் பெற்றுள்ளார். சாதிய வன்மம் நிறைந்த நம் சமூகத்தில் இப்படியொரு அரசாணையை வெளியிட்டு அதைச் செயல்படுத்துவது என்பது மு.க.ஸ்டாலின் என்ற கொள்கைவாதியால், லட்சியவாதியால் மட்டுமே செய்ய முடியும்.

முதலமைச்சர் செய்த வரலாற்றுச் சாதனையை, காலகாலத்துக்குமான பெருமையைப் பற்றி தமிழ் அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், இந்திய அளவிலான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், யூடிபர்கள் வாயைத் திறக்கவில்லை. மௌனம் காத்தார்கள். எல்லாருமே சாதியவாதிகள் என்பதை நிரூபித்தார்கள். ஆனால், முதலமைச்சர் துணிச்சலாக முடிவெடுத்தார். இப்படியொரு முடிவை இந்திய அளவில் எடுத்த முதலமைச்சர் 

மு.க. ஸ்டாலின் மட்டும்தான். தன் முடிவில் வெற்றியும் கண்டார்கள். ஆனால், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, “நான் ஆட்சிக்கு வந்ததும், அந்த அரசாணையை ரத்து செய்வேன்” என்று பொதுக் கூட்டத்தில் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். சாதியைக் காக்க விரும்புகிறவர்கள் யார்? சாதிச் சார்ந்த இழிவைப் போக்க விரும்புகிறவர்கள் யார் என்பதைக் காலம் சொல்லும். வரலாறு சொல்லும். காலத்தின் நாயகன் மு.க.ஸ்டாலின்.

‘காலனி’ என்ற சொல்லை, பொதுப் புழக்கத்திலிருந்தும், அரசு ஆவணங்களிலிருந்தும் நீக்கிய மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் இன மக்கள், இந்த பூமி உள்ளவரை, காலம் உள்ளவரை, வரலாறு உள்ளவரை, நன்றிக் கடன் பட்டவர்கள். 

ஒரு எழுத்தாளனாக நான் இதுவரை ஒன்பது நாவல்கள் ஒன்பது சிறுகதைத் தொகுப்புகள், பல கட்டுரைகள் எழுதியிருந்தாலும் அதனால் எனக்குக் கிடைத்த பெயர் புகழைவிட சந்தோஷத்தைவிட, பெருமையைவிட எனக்குக் கிடைத்த கௌரவமாக, மரியாதையாக நான் கருதுவது ஒரு எழுத்தாளனின் கோரிக்கைகளை ஏற்று அரசாணையை வெளியிட்டதோடு, ‘காலனி’ என்ற சொல்லையும் பறையன் குளம், பள்ளப்பட்டி, நாவிதன்பட்டி, சக்கிலிபட்டி என்றிருந்த பல ஊர்களின் பெயர்களையும் மாற்றி, நதிகள், மலர்கள், மற்றும் அறிவியல் அறிஞர்களின் பெயர்களாக மாற்ற அரசாணை வெளியிட்டு, அதை நடைமுறைப்படுத்தியதுதான் என்னுடைய வாழ்நாள் சாதனையாக, பெருமையாகக் கருதுகிறேன். எனக்கு அந்தப் பெருமையை தேடித்தந்தவர் என்னுடைய அண்ணனும், என்னுடைய தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்தான்.

வாழ்க எம்மான் மு.க. ஸ்டாலின்

முரசொலி 17.12.2025

செவ்வாய், 23 டிசம்பர், 2025

ஹனிபாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் முதலமைச்சர்

 ஹனிபாவின் நூற்றாண்டைக் கொண்டாடும் முதலமைச்சர்

இமையம்

1977இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது எனக்கு வயது 12. எங்களுடைய ஊருக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக மாலை வேளையில் ஒரு அம்பாசிடர் கார் வந்தது. காருக்குள் இருந்தவர் துண்டுப் பிரசுரங்களை அள்ளி வீசிக்கொண்டேபோனார். துண்டுப் பிரசுங்களைப் பொறுக்குவதற்காகத் தெருப் பிள்ளைகள் எல்லாம் காரைப் பின்தொடர்ந்து ஓடினார்கள். அப்படி ஓடிய சிறுவர்களில் நானும் ஒருவன். யார் அதிகத் துண்டுப் பிரசுரங்களைப் பொறுக்கிச் சேர்க்கிறார்கள் என்பதில் சிறுவர்களான எங்களுக்குள் ஒரு போட்டி. அதனால், காரைப் பின்தொடர்ந்து தெருத்தெருவாக ஓடிக்கொண்டிருந்தோம். அப்படி ஓடிக்கொண்டிருக்கும்போது காரில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியில், ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்ற பாடலைப் போட்டார்கள். அந்தக் கணத்தில்தான் கலைஞர் எனக்குள் வந்தார். தி.மு.க. எனக்குள் வந்தது.

 ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’, ‘அண்ணா அழைக்கின்றார்’, ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’ போன்ற பாடல்கள், சினிமாப் பாடல்களைப் போன்றில்லாமல் வேறாக இருந்தன. பாடிய குரலும் வேறாக இருந்தது. 12 வயதில் கேட்ட அந்தப் பாடல்களை இன்றும் கேட்கிறேன். பாடல் வரிகளும் பாடிய குரலும் எனக்குள் அப்படியேதான் இருக்கின்றன. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்பட்டதில்லை. ஏற்படாது. யார் எழுதிய வரிகள், யார் பாடியது, எதற்காகப் பாடியது என்பது எதுவும் எனக்கு அப்போது தெரியாது, ஆனால், பாடல் வரிகளும், பாடிய குரலும் என் இரத்தத்தோடு கலந்துவிட்டது. சினிமாப் பாடல்களைப் பாடும் குரல்கள் போன்று இல்லை, கிராமத்துக் குரல். ஒருவிதத்தில் நாட்டுப்புறத்தான் குரல். கட்டைக்குரல். அதே நேரத்தில் தனித்த குரல். அந்தக் குரலில், ‘கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே’ என்ற பாடலை எப்போது கேட்டாலும் அப்போது எனக்குள் ஒரு மாற்றம் நிகழும். அந்த மாற்றத்தை, அந்த சந்தோஷத்தை வார்த்தைகளினால் சொல்லிவிட முடியாது. 

தி.மு.க.வைப் பற்றியும், கலைஞரைப் பற்றியும், நீதிக்கட்சி, திராவிடர் இயக்கம் பற்றியும் பாடல்களை யார் எழுதியது, எந்தச் சூழலில் எழுதப்பட்டது, பாடியது யார், எதற்காக, யாருக்காகப் பாடினார் என்பதெல்லாம் பின்னாளில்தான் நான் தெரிந்துகொண்டேன். மாபெரும் அரசியல், சமுதாய இயக்கத்திற்கு ஒரு பாடகர் தன் குரலின் வழியாகச் செய்த பங்களிப்பு, காலம் முழுவதும் நிற்பதாக மாறிவிட்டது. இது காலம் சொல்லும் வரலாறு.

பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் தி.மு.க.வையும் கடைநிலை மனிதன்வரை தன்னுடைய இசையின் மூலம் கொண்டுபோய் சேர்த்த பெருமை, ‘இசை முரசு’ என்று கலைஞரால் போற்றப்பட்ட நாகூர் ஹனிபாவுக்கு மட்டுமே உண்டு. இப்படியொரு பாடகர் இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லை.

1935இல் மலேசியாவில் வேலை பார்த்துவந்த தனது தந்தைக்காக ‘சைபுல் இஸ்லாம்’, ‘தாருல் இஸ்லாம்’, ‘குடி அரசு’ போன்ற இதழ்களை வாங்கி அனுப்புகிற வேலையைப் பார்த்தவர் ஹனிபா. முதலில் தான் படித்துவிட்டு, பிறகு தந்தைக்கு அனுப்பினார். அந்தப் படிப்பால், பத்திரிகைகளால்தான் திராவிட இயக்கப் பற்றாளரானார். 12, 13 வயதிலேயே கலைஞருடன் இணைந்து திருவாரூர் ஒடம்போக்கி நதியில் நடந்த திராவிட இயக்கக் கூட்டங்களுக்குச் சென்றவர். கடைசிவரை கலைஞரை, ‘மு.க.’ என்று உரிமையுடன் அழைத்தவர். 1939இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். 13 வயது என்பதால் காவல் துறையினர் சிறைக்கு அனுப்பவில்லை. 

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வுக்கு அழைத்தபோது,  “எனக்கு ஒரே இறைவன். ஒரே கட்சி. ஒரே தலைவன் (கலைஞர்)” என்று சொன்னவர். கடைசிவரை தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளதாவர். அதனால்தான் ‘கற்பு நெறி தவறாதவர்’ என்று கலைஞர் புகழ்ந்தார். அதோடு நிற்காமல்,  “ஆடாமல் அசையாமல், அலை பாயாமல், சபலத்திற்கு ஆட்படாமல், எதிரிகள் கோடியிட்டு அழைத்தாலும் தொடேன், தொடேன் என்கிற உறுதிமிக்க இசைவாணர்” என்று எழுதினார். 1961இல் அவர் தி.மு.க.விலிருந்து ஈ.வெ.கி. சம்பத் பிரிந்தார். கண்ணதாசனும் பிரிந்தார். அப்போது ஹனிபா நாகை சலீமிடம் சொல்லி பாடலை எழுதவைத்து, பாடிய பாடல்தான். ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’. இப்பாடலை 1961இல் பாடியிருந்தாலும் பின்னாளில் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்த போதும். வை.கோபால்சாமி, தி.மு.க.விலிருந்து பிரிந்தபோதும் தி.மு.க. மேடைகளில் அதிகம் ஒலித்த பாட்டு இதுதான். தி.மு. கழகத்திற்குத் துரோகம் செய்பவர்களுக்காக ஹனிபா உருவாக்கிய பாடல். அன்று மட்டுமல்ல, எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் பாடல். 

1940 முதல் 2006ஆம் ஆண்டுவரை, அதாவது 65 ஆண்டுகளில் பல்லாயிரக் கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். எந்த இசைக் கலைஞரும் செய்யாத சாதனை, ‘ஹனிபாவுக்கு ஒலிபெருக்கியே தேவையில்லை’ என்று பெரியார் புகழ்ந்துள்ளார். ஹனிபா எந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றாலும் ஒத்திகை பார்க்கிற பழக்கமற்றவர். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் பாடுகின்ற வல்லமை படைத்தவர். இந்தி எதிர்ப்புப் போராட்ட சமயத்தில் பாரதி தாசன் எழுதிய, ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!’, ‘தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’, ‘பாண்டியர் ஊஞ்சலில் பாடி வளர்ந்த பைந்தமிழ்’ ஆகிய பாடல்களை ஹனிபா பாடினார். பாரதி தாசனின் பாடல் வரிகளும் ஹனிபாவின் குரலும் இந்தி எதிர்ப்புப் போராட்டக்காரர்களுக்குப் பெரும் ஆற்றலைத் தந்தது. எழுச்சியைத் தந்தது. பாரதி தாசன்மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். அதைவிடவும் தமிழ் மொழி மீது அதிகப் பற்றுக்கொண்டவர். அதனால்தான், ‘தமிழ் எங்கள் தாய் மொழி. இஸ்லாம் எங்கள் மார்க்க வழி’ என்று சொன்னார்.

ஹனிபா பாடியதில் ஒரு பாடல்கூட காலத்தால் மங்கிப்போகவில்லை. மாறாக, புது ஆற்றல் கொண்டு ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘அண்ணா அழைக்கின்றார்’ (1955), ‘கல்லக் குடிகொண்ட கருணாநிதி வாழ்கவே’ (1953) ‘வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா’ (1961), ‘எத்தனை கலைஞர்கள் இருந்தாலும் தமிழ் வித்தகக் கலைஞர்’ (1962), ‘ஓடிவருகிறான் உதய சூரியன்’ (1984), ‘கம்பீரக் கலைஞர் எங்கள் கருணாநிதி (1984),  ‘ஆசை ஆசை கலைஞர்மீது ஆசை’ போன்ற பாடல்கள் தி.மு.க.வின் கிளைக்கழக நிகழ்ச்சி முதல், ஒன்றிய, நகர மாவட்ட, மாநில மாநாடுகளில் இன்றுவரை ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. தி.மு.க. இருக்கும்வரை ஒலிக்கும். தி.மு.க. மாநாடுகளில் மட்டுமல்ல, தி.மு.க. நடத்தும் போராட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும்கூட ஹனிபாவின் பாடல்கள்தான் அனைவரையும் ஒன்றிணைக்கும் கருவியாக இருக்கிறது. முன்பு அல்ல, இன்றல்ல என்றும் தி.மு.க.வின் பிரச்சாரப் பீரங்கியாக இருப்பது ஹனிபா பாடிய பாடல்கள்தான். அந்த நாட்டுப்புறத்துக் குரல்தான். தி.மு.க. போன்ற ஒரு கட்சியையும், ஹனிபா போன்ற ஒரு பாடகரையும் உலகில் எங்குமே காண முடியாது. அதிசயமான கட்சி. அதிசயமான தொண்டன்.  ‘ஆசை ஆசை கலைஞர் மீது ஆசை’ என்ற பாடலில் ‘உன்னை அடித்து விளையாட ஆசை’ என்று பாடியிருக்கிறார். இப்படிப் பாடுவதற்கு ஹனிபாவுக்கு மட்டுமே ஆற்றல் உண்டு. தி.மு.க. நிகழ்ச்சிகளில் மட்டுமல்ல, கட்சிக்காரர்களுடைய திருமண நிகழ்ச்சிகளிலும் பிற நிகழ்ச்சிகளிலும் ஹனிபா பாடிய பாடல்கள்தான் ஒலிக்கின்றன. இது ஒரு உலக அதிசயம்.

திராவிட இயக்கக் கொள்கைகளுக்காகப் பாடியதோடு ஹனிபா பல திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார்.  ‘குலேபகாவலி’ படத்திலும்  ‘பாவ மன்னிப்பு’ படத்திலும் எல். ஜி. கிருஷ்ணனுடனும் T.M. சௌந்திரராஜனுடனும் இணைந்து பாடியிருக்கிறார்.  ‘செம்பருத்தி’ படத்தில், ‘நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு’ காலகாலத்திற்கும் ஏற்ற பாடல். காதலர்களால் கொண்டாடப்படும் பாடல். இப்பாடலை நான் சோகமாக இருக்கும்போதெல்லாம் விரும்பி ஆசையாகக் கேட்டிருக்கிறேன். இப்போதும் கேட்கிறேன். தமிழ் மொழியில் மட்டுமல்ல, சிங்கள மொழியிலும் இந்தி, உருது, அரபு மொழிகளிலும் பாடியிருக்கிறார். தன்னுடைய வாழ்நாளில் பல மொழிகளில் தனிப் படல்களையும்,  சினிமாப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் பாடியவர். பல்லாயிரக் கணக்கான இசைக் கச்சேரிகளை நடத்தியவர்தான் என்றாலும் ஹனிபா முறையாக இசை கற்றவர் அல்ல என்பதுதான் நாம் கவனம் கொள்ள வேண்டிய விஷயம். ‘இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ (1963) என்ற பாடலை இஸ்லாம் சமூகத்தினர் மட்டுமல்ல, இந்து மடாதிபதிகளும்கூட இன்றும் விரும்பிப் பாடுகின்றனர். எல்லா மக்களாலும் கொண்டாடப்படும் பாடல். இஸ்லாம் சமூகம் இருக்கும்வரை ‘இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலும் ஹனிபாவின் குரலும் இருக்கும். அழியாத பாடல். அழியாத குரல்.

திராவிட இயக்கக் கொள்கைகளில், சுயமரியாதைக் கொள்கைகளில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் ஹனிபா என்பதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும். கொள்கைக் குன்று. முஸ்லிம் என்றாலும் இளம் வயதிலேயே பெரியாரை வரவழைத்து நாகூரில் கூட்டம் போட்டவர், தான் கட்டிய வீடுகளுக்கு, ‘கலைஞர் இல்லம்’, ‘அண்ணா இல்லம்’ என்று பெயர் வைத்தவர். பெரியாரோடு முரண்பட்டு திராவிடர் கழகத்தை விட்டுப் பிரிந்தபோது, அண்ணாவுடன் வந்தவர். தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து அண்ணாவால் விருந்து கொடுக்கப்பட்டவர். கலைஞர், பேராசிரியர் அன்பழகன் இருவரின் தோள்களிலும் கையைப் போட்டுக்கொண்டு போட்டோவுக்கு ஸ்டைலாக ‘போஸ்’ கொடுத்தவர். அதிசயமான போட்டோ அது. கட்சியின் தலைவரும் பொதுச் செயலாளரும் ஹனிபாவுக்கு அளித்த கௌரவம் அது.

சிங்கப்பூர், மலேசியா என்று வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் செய்துவிட்டு வந்த அண்ணா, ஹனிபாவை அழைத்து, “வீட்டுக்கு வீடு உன் பாட்டுதான் ஒலித்துக்கொண்டிருந்தது” என்று சொன்னார். ஹனிபா பாடிய இயக்கப் பாடல்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல உலகெங்கும் வாழ்கிற தமிழர்கள் வீடுகளில் எல்லாம் அன்று மட்டுமல்ல, இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. அதே மாதிரி, ‘இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லை என்று சொல்லுவதில்லை’ என்ற பாடலும் உலகெங்குமுள்ள தமிழர்கள் இல்லங்களில் எக்காலத்திலும் ஒலிக்கும் பாடலாக இருக்கிறது. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, ‘தமிழ் மணக்கும் திசையெல்லாம் தேடினேன் உன்னை’ (1969) என்ற பாடலை ஹனிபா பாடியவிதம் ஒரு லட்சம் முறை கேட்டாலும் சலிப்பே வராது. இப்பாடலைக் கேட்டால் அண்ணாமீது பற்றும் மதிப்பும் கூடும்.

‘ஹனி’ என்றால் தேன். ‘பா’ என்றால் பாட்டு. ஹனிபாவின் பாட்டு தேனாக இனிக்கிறது. எனவே அவருக்கு ஹனிபா என்று பெயர் வைத்தவர்களைப் பாராட்ட வேண்டும்” என்று ஹனிபாவைப் பற்றி கலைஞர் பேசியும் எழுதியும் இருக்கிறார். தமிழ்நாட்டில் ஆயிரம் பாடகர்கள் இருந்தாலும், ஹனிபாவுக்கான இடம் என்பது யாராலும் இட்டு நிரப்ப முடியாத இடம். இசை வானில் பறந்த தனித்த பறவை. எளிய கருவிகளையும், நான்கைந்து கருவிகளையும் மட்டுமே கொண்டு ஹனிபா உருவாக்கிய இசைக் கோர்வை என்பது அலாதியானது. உன்னதமானது. தனித்துவமானது.

எழுத்தாளர், பத்திரிகையாளர், ஓவியர், பாடகர் என்று பல பரிமாணங்களைக் கொண்ட ஆபிதீன் என்பவர்தான் ஹனிபாவின் முழு வளர்ச்சிக்கும் காரணமானவர். அவரே பாடகராக இருந்தும், தனக்கு வந்த வாய்ப்புகளையெல்லாம் ஹனிபாவுக்காகத் தந்தவர். புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தந்தவர். ஹனிபாவின் திறமையைக் கண்டறிந்தவர். ஹனிபாவின் நூற்றாண்டில் ஆபிதீனை நினைவுகொள்வது அவசியம். அதிசயமான மனிதர்.

தி.மு. கழகத்திற்கும் அழிவில்லை. ஹனிபாவின் பாடல்களுக்கும் அழிவில்லை. தலைமுறை தலைமுறையாகத் தொடரும் கொள்கை உறவு. ஹனிபாவின் நூற்றாண்டை ஒட்டி தமிழ்நாட்டின் முதலமைச்சர், சிறப்பு மலர் ஒன்றை அரசின் சார்பாக வெளியிடுகின்றார், நூற்றாண்டு விழாவையும் நடத்துகின்றார், இயக்கத்திற்காக உழைத்தவர்களைப் பாதுகாப்பதிலும் அவர்களுடைய நினைவுகளைப் போற்றுவதிலும் தீராத தாகம் கொண்டவர்தான் மு.க. ஸ்டாலின். பாசமும் அக்கறையும் ஹனிபாமீது கொண்டவர். சாதாரண எளிய கட்சிக்காரனையே கொண்டாடித் தீர்க்கிறவர், ஹனிபாவின் நூற்றாண்டை எளிமையாகக் கொண்டாடுவாரா என்ன?

கட்சிக்காக உழைத்த யாரையும் தி.மு.கழகம் மறந்ததில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளிக்கத் தவறியதில்லை. ஹனிபாவுக்குக் கட்சியில் பல பொறுப்புகள் வழங்கப்பட்டன. சட்டமன்ற மேலமை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அவர் மறைந்த பிறகு நாகூர் தைக்கால் தெருவிற்கு ஹனிபா பெயர் சூட்டப்பட்டுள்ளது. சில்லடி கடற்கரை சாலைக்கும் சிறுவர் பூங்காவிற்கும் ஹனிபாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தி.மு.க. என்கிற சமுதாய இயக்கம் இருக்கும்வரை நாகூர் ஹனிபா இருப்பார். தி.மு.க.வின் மேடைகளில் முதல் குரலாக அவருடைய குரலே ஒலிக்கும். தி.மு.க. மேடைகளை எக்காலத்திலும் அலங்கரிக்கும் ஹனிபாவின் குரல். அவருடைய பாடல் இல்லாமல் தி.மு.க. மேடை இருக்காது.

முரசொலி 21.12.2025

ஞாயிறு, 14 டிசம்பர், 2025

தண்டகாரண்யத்தில் சீதை - இமையம் சிறுகதை தொகுப்பு

என்னுடைய புதிய சிறுகதைத் தொகுப்பு "தண்டகாரண்யத்தில் சீதை" வெளிவந்துள்ளது. 

தொடர்புக்கு:
க்ரியா பதிப்பகம்
எண் 58, TNHB காலணி, 
சானடோரியம், தாம்பரம் 
சென்னை - 600 047
கைபேசி: +91-72999-05950
மின்னஞ்சல்: crea@crea.in
creapublishers@gmail.com