வியாழன், 22 ஜனவரி, 2015
ஞாயிறு, 18 ஜனவரி, 2015
புதன், 14 ஜனவரி, 2015
வியாழன், 1 ஜனவரி, 2015
காதில் விழுந்த கதைகள் – இமையம்.
இலக்கியமாகுமா தன் வரலாற்றுக் கதைகள் : இமையம்
நான் உபாராவை
எழுதியதும் என்னுடைய வாழ்க்கை வியக்கத்தக்க அளவுக்கு மாற்றமடைந்துவிட்டது. மராத்தி வாசகர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த
அன்பும், பாராட்டும் என்னுடைய கட்டுப்பாடற்ற கனவுகளையே
விஞ்சிவிட்டது. வாழ்க்கையின் முட்களைத்தவிர வேறெதையும்
அறிந்திராத ஒருவனுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டன. உபாராவுக்குக்
கிடைத்த வரவேற்பு ஒரு வெள்ளத்தைப் போன்றது என்றால் அது மிகையல்ல. இப்போதும் அது தொடர்கிறது. மகாராஷ்டிராவின்
பெரும்பாலான நாளிதழ்கள், வார இதழ்கள், இருவார
இதழ்கள், மாத இதழ்களும், வானொலியும்,
தொலைக்காட்சியும்கூட உபாராவை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்தன.
மகாராஷ்டிராவின் மூலைமுடுக்கெல்லாம் இந்நூலின் அம்சங்கள்
விவாதிக்கப்பட்டன. அதற்காக நூற்றுக்கணக்கான பாராட்டுக்கூட்டங்கள் ஏற்பாடு
செய்யப்பட்டன... சதாராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டுக்கூட்டத்திற்கு
தொலை தூரத்திலிருந்த கிராமாங்களிலிருந்து ஏறத்தாழ முப்பதாயிரம் பேர் மாட்டு
வண்டிகளில் வந்திருந்தனர்... மராத்தி வாசகர்கள் உபாராவை தங்கள் தலைமீது வைத்து
கொண்டாடினார்கள்... அப்பட்டமான பொருளியல் நோக்கிப் பார்த்தாலும் நான் பெற்றது
ஏராளம்.... போர்டு நிறுவனத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாயும், அமெரிக்கப் பயணமும் அளிக்கப்பட்டது. எனக்கு
முப்பத்திரெண்டே வயதாகியிருந்தபோது சாகித்ய அகடாமி விருது வழங்கப்பட்டது.. எனது
தாய்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எனது நூல் அங்கீகாரத்தையும், அன்பையும் பெற்றுவிட்டது. உண்மையில் நானே ஒரு
பிரமுகராகிவிட்டேன். சாலையோரங்களிலும், சாக்கடையின் விளிம்புகளிலும் வளர்ந்த மனிதன் மேலான இடத்திற்கு
உயர்த்தப்பட்டுவிட்டான்” 1 லஷ்மண் மானே
1980-க்குப்
பிறகு இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் நாவல், கவிதை,
சிறுகதை நூல்களுக்குக் கிடைக்கிற வரவேற்பைவிட தன்வரலாற்றுக்
கதைகளுக்குத்தான் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது. தன்வரலாற்றுக்
கதைகள் எழுதப்பட்ட உடனேயே உள்நாட்டு மொழிகளில் மட்டுமல்ல ஆங்கிலம், பிரஞ்ச் போன்ற பல மொழிகளிலும்
மொழியாக்கம் செய்யப்படுகின்றன. படிக்கப்படுகின்றன,
பாராட்டப்படுகின்றன, பரிசுகள்
வழங்கப்படுகின்றன. இதனால் நாவல், கவிதை, சிறுகதை எழுதுவதற்குப் பதிலாக தன்வரலாற்றுக்
கதைகள் அதிகமாக எழுதப்படுகின்றன. தன்வரலாற்றுக் கதைகள் அரசியலாக்கப்படுகின்றன.
வியாபாரமாக்கப்படுகின்றன. உற்பத்திசெய்யப்படுகின்றன. இந்தியாவில் விளிம்புநிலை,
நாடோடி பழங்குடியின, தாழ்த்தப்பட்டோரின்
தன்வரலாற்றுக் கதைகளுக்குக் கிடைக்கிற அமோக வரவேற்பைப் பார்க்கும்போது-இந்திய
சமூகம் பெரிய மனமாற்றத்தை அடைந்துவிட்டதோ, இனி தீண்டாமையைக்
கடைபிடிக்காதோ, நாடோடி பழங்குடியின மக்களை நல்லவிதமாக
நடத்துவார்களோ என்ற எண்ணம் ஏற்படலாம். கல்வி, பொருளாதார மேம்பாடு, ஊடக வளர்ச்சி, போக்குவரத்து, உலக மயம், தாராளமயம்,
வியாபாரமயம், பன்னாட்டு ஐ.டி.கம்பனிகளின்
பெருக்கம் எல்லாம் சேர்ந்து இந்தியர்களின் மனதில், பெரிய
மாற்றத்தை நிகழ்த்திவிட்டது என்றே நினைக்கவைக்கும். ஆனால் சமூக நிகழ்வுகள் உண்மை
அதுவல்ல என்று நிரூபிக்கின்றன.
தீண்டாமையைக்
கடுமையாகக் கடைப்பிடிக்கிற ஒரு சமூகம் எப்படித் தீண்டதகாதவர்களின் தன்வரலாற்றுக்
கதைகளை, நாவல்களை, நாடோடி பழங்குடியின
தன்வரலாற்றுக் கதைகளை விரும்பிப் படிக்கிறது, அமோகமாக
வரவேற்கிறது? பரிசு கொடுக்கிறது, பாராட்டுக்கூட்டம் நடத்துகிறது, மொழியாக்கம்
செய்கிறது? ‘ஐயோ பாவம்’ என்று சொல்வதற்காகவா? ‘இப்படியெல்லாம்
இன்னும் இருக்கிறதா?’ என்று
கேட்பதற்காகவா? ‘நான் தீண்டாமையைக்
கடைப்பிடிப்பதில்லை’ என்று காட்டிக்கொள்வதற்காகவா?’ எல்லாமும்தான். தற்காலத்தில் இது ஒரு நாகரீக
செயல்பாடு, போக்கு. தன்வரலாற்றுக் கதைகள் ஏன்
எழுதப்படுகின்றன? வரவேற்கப்படுகின்றன? தலித் அல்லாதவர்களின் தன்வரலாற்றுக் கதைகள் ஏன் ‘தலித் சுயசரிதை’ என்று மொழியாக்கம்
செய்யப்படுகின்றன. எழுதப்படுகிற எல்லா தன்வரலாற்றுக் கதைகளுக்கும்-வரவேற்பு
இருக்கிறதா? மராத்தி மொழியில் எழுதப்பட்ட ‘உச்சாலியா, உபாரா, குலாத்தி’ என்று பிற்பட்ட இனத்தவர்கள் எழுதிய தன்வரலாற்று நூல்களுக்கு கிடைத்த
வரவேற்பு மஹர் இனத்தைச் சார்ந்த பல எழுத்தாளர்களுக்குக் கிடைக்கவில்லை. அதே மாதிரி தமிழ்நாட்டில் அழகிய நாயகியம்மாள்
எழுதிய ‘கவலைக்கும்’ (1998), ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டிக்கும்’
(2004) கிடைக்கவில்லை. (இவர்கள் இருவரும் இடைநிலை சாதியினர்) கே.ஏ.குணசேகரன்
எழுதிய ‘வடு (2005)’வுக்கும், ராஜ்கெளதமன்
எழுதிய ‘சிலுவைராஜ் சரித்திரம்’(2002),
‘காலச்சுமை’(2003), ‘லண்டனில் சிலுவைராஜ்’
(2004)வுக்கும் கிடைக்கவில்லை. “My brother always told
me, ‘nobody would have bothered to look at your book, If it had been published
ten years before. That’s true. There was a context for it. I must say that it
was great luck for me. Because, it was at that time that I came out with my
writing.”2 என்ற பாமாவின் கூற்றுப்படி அரசியல், சமூகச் சூழல்தான் ஒரு படைப்புக்கான
மதிப்பைத் தீர்மானிக்கிறது.
அரசியல் சூழலால், சமூக சூழலால், புதிய போக்கால் கவனம் பெற்ற எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்துக் குறித்து
என்ன மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள்? “I don’t have any passion for
writing”3 என்று பாமா
கூறுகிறார். ஒரு எழுத்தாளர் இப்படிக் கூறியிருப்பது வியப்பளிக்கிறது.
நிகழ்காலத்தில் எழுத்தாளர்களின் கண்முன்னாலேயே அவர்கள் எழுதிய நூல்கள்
செத்துப்போகிற அவலத்தை – எழுத்தாளர்கள் மட்டுமல்ல சமூகமும்
பார்த்துகொண்டுதான் இருக்கிறது. புதிய போக்குக்காக எழுதப்படும் படைப்புகளின்
ஆயுட்காலம் மிகவும் குறைவானதே. தன் வரலாற்றுக் கதைகளுக்கு கிடைக்கக்கூடிய வரவேற்பு
என்பது அதனுடைய கலைத்தன்மைக்காக அல்ல, அதனுடைய அழகியல்
தன்மைக்காக அல்ல. அதனுடைய வணிகத் தன்மைக்காக மட்டுமே. தன் வரலாற்றுக் கதைகளை
எழுதுவதில் காட்டுகிற ஆர்வம் படைப்பிலக்கியங்களில் இல்லை.
தலித் மக்களின்
வாழ்க்கைக்கும் நாடோடி பழங்குடியின மக்களின் வாழக்கைக்கும்-பொருளாதார ரீதியாக,
வாழ்க்கைமுறை ரீதியாக பெரிய வேறுபாடு இருப்பதில்லை. பொது சமூகம் தீண்டத்தகாதவர்களையும், நாடோடிப்
பழங்குடியினரையும் ஒரே விதமாகத்தான் பார்க்கிறது, நடத்துகிறது.
ஆகவே நாடோடிப் பழங்குடியினரும் ‘தலித்’கள்தான், அல்லது ‘தலித்’ என்ற
அடையாளத்தின் கீழ்கொண்டுவருவதில் பிழையில்லை. தாழ்த்தப்பட்ட,
ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களின்
இலக்கியம், இயக்கம் எழுச்சிப்பெற்று வரும் நிலையில்-உள் சாதி
முரண்களை, உள் பிரிவு முரண்களை பெரிதுப்படுத்த வேண்டியதில்லை
என்ற வாதம் சரியானதுதானா? தீண்டாமை என்னும் சவுக்கால்
மற்றவர்களோடு சேர்ந்துகொண்டு இடைநிலை சாதியினர் எப்படி அடிக்கிறார்கள் என்பதை
சொல்லக் கூடாது என்கிறார்கள். பிராமணிய கொடுமைகள் குறித்து பேசுகிற அளவிற்கு
இடைநிலை சாதியினரின் கொடுமைகள் குறித்து பேசுவதில்லை. பிராமணிய
கொடுமைகளைக்காட்டிலும் இடைநிலை சாதியினரின் கொடுமைகள் வலிமையானது.
உபாரா, உச்சாலியா, குலாத்தி-மூன்றும்
நாடோடிப் பழங்குடியின சாதி. இந்த மூன்று பிரிவினரும்
ஒருபோதும் தங்களை ‘தீண்டாமைக்குட்பட்ட சாதி என்று
உணர்ந்தது இல்லை. இந்த மூன்று நூல்களும் தலித்-வாழ்வையோ, துயரத்தையோ
அவமானத்தையோ பேசவில்லை. மாறாக தீண்டாமையைக் கடுமையாக
கடைப்பிடிக்கிறவர்கள். உபாரா-வை எழுதிய லஷ்மண்மானே,
உச்சாலியாவை எழுதிய லஷ்மண் கெய்க்வாட், குலாத்தியை
எழுதிய-கிஷோர் சாந்தாபாய் காலே- ஆகியோர் தன்வரலாற்றுக் கதையைத்தான்
எழுதியுள்ளார்கள். மூன்று பேரும் தங்களை மராத்திய
எழுத்தாளர் என்றுதான் பதிவுசெய்துள்ளனர். இந்தியாவின் பிறமொழிகளில் மொழியாக்கம்
செய்யும்போதும், ஆங்கிலத்தில மொழியாக்கம்
செய்யும்போது-தன்வரலாற்றுக் கதை என்றுதான் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
நூலை எழுதியவர்களோ, அச்சிட்டவர்களோ, மொழியாக்கம் செய்தவர்களோ- ‘தலித்’ சுயசரிதை-என்று சொல்லவில்லை. ஆனால் அவற்றை
தமிழில் வெளியிட்ட விடியல் பதிப்பகம் மட்டும் ‘தலித்’ சுயசரிதை-என்று வெளியிட்டுள்ளது. மொழிபெயர்ப்பின் அடிப்படை என்ன? மூல நூலுக்கு குந்தகம் ஏற்படாமல் மொழிபெயர்ப்பதுதானே. நூலின்
வகைப்பாட்டையே சொந்த விருப்பத்தின் பெயரில் மொழிபெயர்ப்பது – என்ன நியாயம்? மொழிபெயர்ப்பாளர்கள் தங்களுடைய
விருப்பத்திற்கு ஏற்ப மொழிபெயர்க்கிறார்கள். வசந்த் மூன் எழுதிய - ஒரு தலித்திடமிருந்து
என்ற தன்வரலாற்றுக் கதையை ‘Gail Omvedt’ ஆங்கிலத்தில்
எப்படி மொழிபெயர்த்தார் என்பதை சொல்கிறார். “இந்நூலின்
ஆங்கில மொழியாக்கம் அமெரிக்க வாசகர்களை மனதில்கொண்டு செய்யப்பட்டுள்ளதால், சில சாதிப் பெயர்கள் நேரடியாகக் குறிப்பிடப்படாமல் அந்தந்த சாதிகளின் தொழிற்
பெயராலேயே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. எண்ணெய்
தயாரிக்கும் சாதி, தோட்டக்கார சாதி, விவசாய
சாதி.“4 இப்படியான
மொழிபெயர்ப்புகள் மூல நூலையும் அதை எழுதிய எழுத்தாளனையும் இழிவுப்படுத்துகிறது. உலகிலேயே அமெரிக்க வாசகர்கள்தான் முக்கியமானவர்களா? அவர்களுக்காகத்தான்
இலக்கியங்கள் எழுதப்படுகின்றனவா?
கைக்காடி
என்னும் நாடோடிப் பழங்குடி இனத்தில் பிறந்தவர் லஷ்மண் மானே. கைக்காடியில் 143-உபசாதிகள் இருக்கின்றன. ஒவ்வொரு
சாதிக்கும் குறிப்பிட்ட தனியான மொழியும், தனியான பண்பாடு,
மரபுகள், நெறிமுறைகளும் இருக்கின்றன.
கைக்காடி சமூகத்தின் முக்கியமான தொழில் மூங்கிலை வெட்டிவந்து கூடை,
முறம் பின்னி விற்பது. பழைய கூடை,
முறம் போன்றவற்றை சீர் செய்து தருதல். இதற்குக்
கூலியாக பணமோ, ரொட்டியோ, பழைய குழம்போ
கிடைக்கும். முந்தாணையில் வாங்கி வந்து
சாப்பிடுவார்கள். கழுதை மீது பொருள்களை ஏற்றிக்கெண்டு
ஒவ்வொரு ஊராகப் போவார்கள். ஒவ்வொரு ஊரிலும்
மேல்சாதியினர் ‘பீ’ பேளுகின்ற
இடத்தில் சுத்தம் செய்துவிட்டு தங்குவார்கள். இப்படி
ஒவ்வொரு ஊராகப் போகும்போது-லஷ்மண் மானே அந்தந்த ஊரில் படிக்கிறார். இண்டர் மீடியட் படிப்பை முடிக்கிறார். படிக்கும்போதே
இவர் சாஷி என்ற பெண்ணைக் காதலிக்கிறார். திருமணமும்
செய்துகொள்கிறார். கைக்காடி-என்ற நாடோடி பழங்குடியின
சமூகம்- ‘மஹர்’ களை எப்படி
பார்த்தது, எப்படி நடத்தியது என்பதையும் சாஷியை திருமணம்
செய்துகொண்டதற்காக-தனது உறவினர்களும், சாதிப்பஞ்சாயத்தும்,
தன்னையும் சாஷியையும் எப்படி நடத்தியது என்பதையும் அவரே சொல்கிறார்:
“மகனே... நல்லா ஞாபகம் வச்சுக்க. சாதிய
காப்பாத்துறதுக்காக, ஒருத்தன் மண்ணக்கூடத் திங்கலாம்.
சாதியில்லாம மோட்சம் கிடையாது.”5 (ப.221) என்றும், “இப்ப எங்கள சாதியிலிருந்து
ஒதுக்கி வைப்பாங்க... நாங்க இனிமே எப்படிப் பொழைக்க முடியும்? சாதி சனங்க எல்லாரும் எங்க வாயீல பீயத் திணிக்கும்போது நான் என்னா பேச
முடியும்?”6 (ப.245)
என்றும், “நாங்க போறம். நீ
எங்க ஊருக்கு வரவும் வாணாம். எங்க மூஞ்சியில
முழிக்கவும் வாணாம். நான் செத்தாலும் வரவும் வாணாம்.
நாஞ் செத்தாலும் நீ எம் பொணத்த தொடவே முடியாது. உனக்கும் எனக்கும் உறவு அத்துப்போச்சி. என்னப்
பொருத்தவர நீ பொறக்கவே இல்ல.”7 (ப.247)
என்றும் லஷ்மண் மானேவின் அப்பா கடுமையாகப் பேசுகிறார்.
“அவ கர்ப்பமா இருக்காளா? என்று ரகசியமாக அப்பா என்னிடம் கேட்டார்.
நான் ஆமாம் என்று சொன்னவுடன் அவருடைய
முகம் வெளிறிப் போனது.”8 (ப.227) என்று
தனது அப்பாவின் மனநிலை குறித்து மானே எழுதுகிறார்.
“எங்கள பாழாக்கிப் போட்டியே... அட நாயே...
உன்னப் பெத்ததுக்கு ஒரு கல்லப் பெத்திருந்தாக்கூட பரவாயில்லியே... நீ பொறந்தப்பவே
செத்திருக்கக் கூடாதா? எங்களுக்கு உன்னால ஒரே
அவமானந்தான்... சாதிசனங்க முன்னால நீ எங்க மூஞ்சியில கரியப்பூசிட்டியே.
நீ செத்து சுடுகாட்டுக்குப் போவ மாட்டியா?”9 (ப.243) என்றும், “அவ மஹர் இல்லங்கிறதுக்கு
என்ன அத்தாட்சி?”10 (ப.244) என்றும், “அட நாசமாப்போனவளே, எங்க குடும்பத்த ரெண்டாக்கிட்டியே. மனுசத்தனமே
இல்லாம நடத்துகிட்ட நீ இப்ப எங்களுக்கு டீ போடுறியா? எதிரிங்க
வூட்டுலயாவது டீக்குடிச்சாலும் குடிப்பமேத்தவிர, ஒம்
பாழாப்போன கையிலிருந்து வாங்கிக் குடிக்க மாட்டம்...எங்க வேணுமின்னாலும்போயி பிச்ச
எடுத்து வயித்த நெரப்புவோமேத்தவிர உன்னோட வூட்டுல ஒரு
சொம்புத் தண்ணீ குடிக்க மாட்டம்.”11
(ப.244) என்றும் மானேவின் அம்மா சாஷு-யிடம் வெறித்தனமாக சண்டை
பிடிக்கிறாள்.
“ஒனக்கு
சாதி வேண்டியதில்ல. ஆனா நாங்க என்ன பண்ணுவம்?
ஒனக்குப் பொறக்கிறப் பசங்க பெரிய ஆளாயிட்டா அவுங்களுக்கு யார்
பொண்ணு தருவா? நீ செத்தா எழவுக்கு யார் வருவாங்க?
ஒங்கப்பன் செத்தா பொணத்த யார் தூக்குவாங்க?... உஞ்சொந்த சனங்களுக்கே நீ எதிரி ஆயிட்டியே... எங்க தலமுறையயே நாசம் பண்ணிட்டியே.”12 (ப.245) என்று மானேவின் தாத்தா பேசுகிறார். பிறக்கப்போகிற குழந்தைகளுக்காக அவர் கவலைப்படுகிறார்.
“இவள
இவங்கம்மா பெத்தபோது நீ அவ கால் மாட்டுல நின்னுக்கிட்டிருந்தியா? அவ மராத்திக்காரிதான்ங்கிறதுக்கு என்ன அத்தாட்சி?... அவ பாப்பாத்தியாவே இருந்தாலும் அவளுக்கு நம்ப சாதியில எடமில்லெ.
அவ மஹராவோ, மாங்காவோதான் இருக்க வேணும்” 13 (ப.275) என்றும், “பந்தயம் வச்சுக்கலாமா? அவ இவனோட சாமானப்
பாத்துத்தான் இவனோட வந்திட்டா. அவ வேற எதுக்கு
வந்திருக்கா?... அவ கீழ்ச்சாதிக்காரியாத்தான் இருக்க வேணும்.
அதனாலதான் அவ உங்கூட வந்திட்டா.
மேல்ச்சாதிக்கார புள்ளைங்க கீழ்ச்சாதிக்காரப் பசங்களக் கல்யாணம்
பண்ணுவாங்கன்னு நெனச்சிக்கிட்டியா? ”14 (ப.247) என்றும் பஞ்சாயத்தார்கள் தங்களுடைய கைக்காடி சாதிக் குறித்தப் பெருமையைப்
பேசுகிறார்கள்.
சாஷி-என்ற மஹர்
இனத்துப் பெண்ணை மணந்துகொண்டதற்காகத்தான் இவ்வளவும் பேசப்பட்டது. லஷ்மண் மானே-தன் உறவினர்களிடம் ‘என் மனைவி ஒரு
மராத்திக்காரிதான்” என்று வாதிட்டாலும், மராத்திக்காரி என்றாலாவது ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணத்தில்தான் அவர்
அப்படி சொல்கிறார். ஆனால் மானேவின் உறவினர்களோ,
சாதிக்காரர்களோ சாஷியை கடைசி வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஆனால்
சாஷி-ஒரு மஹர் அல்லது மாங்-இன பெண்ணாகத்தான் இருக்க
வேண்டும். இதை “உங்கள்
இருவரில் ஒருவர் தீண்டத்தகாதவராக இருந்தால் மட்டுமே எங்களால் உதவ முடியும்”15 (ப.252) என்று கலப்புத் திருமண
நிதிஉதவி அளிக்கும் அதிகாரி சொல்வதிலிருந்து அறிய முடிகிறது. சாஷியை மஹர்-அல்லது மாங்-இனப்பெண் என்று மொத்த நூலிலும் அவர் ஒரு இடத்தில்கூட சொல்லவே இல்லை.
ஆனால் சாஷியை திருமணம் செய்துகொண்டதால் “என்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்னுடனான உறவை முற்றிலுமாகத்
துண்டித்துக்கொண்டுவிட்டார்கள்.”16 (ப.258) என்று எழுதுகிறார். அது மட்டுமல்ல “ஒரு
மஹர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு, இறந்து போன விலங்குகளின்
தோலை உரிக்கின்ற தொழிலாவது இருக்கிறது. நல்ல முறையில்
இல்லாவிட்டாலும் அவன் ஒதுங்குவதற்கு ஒரு கூரை இருக்கிறது.”17 (ப.252) என்று எழுதி தன்னுடைய சாதிக்கு
அதுவுமில்லை என்று குறைப்பட்டுக்கொள்கிறார். தனது சாதி
மஹர்களை எப்படி நடத்தியது என்பதை “தாம் இடம் பெயரும்போது
எதிரே மஹர் சாதிக்காரர் யாராவது வந்துவிடக் கூடாது என்பதில் கைக்காடிகள் கவனமாக
இருக்கின்றனர்.”18 (35)
என்று எழுதியுள்ளார். “என்னுடைய சாதி
பிற்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்தேன்”19. (ப.210) என்று எழுதுகிற மானே-வுக்குத்
தெரியும்-தான் ஒரு தீண்டப்படாத சாதியை சேர்ந்தவன் அல்ல என்பது.
லஷ்மண் மானேவின்
குடும்பத்தார், பஞ்சாயத்தார், பேசும்
பேச்சுகளின் வழியாக, செய்யும் செயல்பாடுகளின் வழியாக, ‘சாஷி’ அவமானப்பட்டு சந்திக்கும் கொடூரங்களின்
வழியே-உபாரா-ஒரு தலித் தன்வரலாற்றுக் கதை அல்ல என்று நிரூபணமாகிறது. மஹர்கள்
எதிரில் வருவதைக்கூட அபசகுனமாக பார்க்கிற மனோபாவம் கொண்டதாக இருக்கிறது கைக்காடி
சமூகம். உபாரா-மானே படிப்பதற்காகப் பட்டக்கஷ்டங்கள்
முதல் பகுதியாகவும், இரண்டாவது பகுதி-அவர் சாஷியை திருமணம்
செய்துகொண்டதால்-ஏற்பட்ட பிரச்சனைகளையும் பேசுகிறது. இது
தீண்டத்தகாதவர்களின் கதையோ, தீண்டதகாதவர்களுக்கு ஆதரவான
கதையோ அல்ல. ஒரு வகையில் தீண்டத்தகாதவர்களை
இழிவுப்படுத்திய கதை.
லஷ்மண் மானே
எழுதிய உபாராவில்தான் இந்த நிலை இருக்கிறது என்றில்லை. ராஜஸ்தானிலிருந்து மேற்கு மகாராஷ்டிரத்தில் குடியேறிய நாடோடி பழங்குடியின
சமூகமான ‘குலாத்தி‘ மஹர்களை இன்னும்
மோசமாகத்தான் நடத்தியுள்ளது.
குலாத்தி சமூகத்தினர் ஆரம்ப காலக்கட்டத்தில் கழைக்கூத்தாடிகளாக இருந்தனர்.
பிறகு பொது வெளியில் நடனமாடினர். படிப்படியாக
நடனமுறை மாறி பொதுமேடைகளில் ஆடுவது, பாடுவது, இரட்டை அர்த்தமுள்ள வசனங்களைப் பேசுவது, ஆண்களை
உற்சாகப்படுத்தி, மகிழ்ச்சிப்படுத்தி பணம் சம்பாதிப்பது.
இதுதான் குலாத்தி சமூகத்தின் தொழில். இந்த
ஆட்டத்திற்கு லாவணி ஆட்டம், தமாஷா, ஜல்ஜா
ஆட்டம் என்றும் பெயர். ஒரு கட்டத்தில் தமாஷா
ஆட்டக்காரிகளின் மீது இருந்த கவர்ச்சியை சினிமாவும், தொலைக்காட்சியும்
கவர்ந்துவிட, தமாஷா ஆட்டக்காரிகள் படிப்படியாக பாலியல்
தொழிலில் ஈடுபட ஆரம்பித்தனர். லாவணி ஆட்டத்திற்காக
பெண்களுக்கு நடனம் மற்றும் பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும். தமாஷா ஆட்டத்தில் மட்டுமல்ல பாலியல் தொழிலிலும், சகோதரன்,
தந்தையே அவர்களை ஈடுபடுத்துவார்கள். பலநேரங்களில்
இப்பெண்கள் குறிப்பிட்ட தொகைக்கு விற்கப்படுவார்கள். தமாஷா
ஆட்டக்காரிகளுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தந்தை யார் என்பது தெரியாததால் – தாயின் பெயரையே குழந்தைகளுக்கு
பயன்படுத்துவார்கள். இது குலாத்தி சமூகத்தின் நடைமுறை.
மரபு. ஒரு தமாஷா ஆட்டக்காரிக்கு முறையற்ற உறவில் பிறந்தவர்தான் Dr.கிஷோர் சாந்தாபாய் காலே. அவர் 1994-ல்
எழுதியதுதான் ‘குலாத்தி (தந்தையற்றவன்).’
நூறு, ஆயிரம்பேர் கூடியிருக்கக்கூடிய பொது வெளியில் கிட்டத்தட்ட நிர்வாண நடனம்
ஆடி, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசி, ஆண்களை
குஷிப்படுத்தி, பல ஆண்களோடு உறவுகொண்டு, ஒரு கட்டத்தில் நானா என்ற (நெசவாளர்) இடைநிலை சாதி ஆணுடன் சேர்ந்து
வாழ்ந்த சாந்தாபாய்-தன் மகன் கிஷோர்-ஒரு தலித் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதை
ஏற்க மறுக்கிறாள். ஒரு தமாஷா ஆட்டக்காரியைவிடவும்-மஹர்
இனத்துப்பெண்-கேவலமானவளாகப் பார்க்கப்படுகிறாள்.
“தன்
மகனுக்கு இவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைத் துணையை அவன் மணக்க மறுத்ததால், ஏற்கெனவே அவள் அவன் மீது கோபமாக இருந்தாள். ஏனென்றால்
அவள் பார்த்த பெண் (குலாத்தி) வரதட்சணையாக ஐந்து லட்சம் ரூபாய் கொண்டு வருவதாக
இருந்தது. அதற்குப் பதிலாக கிஷோர் ஒரு தலித்
எழுத்தாளரின் மகள் சங்கீதாவை மணம் செய்துகொண்டார்... இதனால்
இவரின் தாயார் இவருடன் தன் அனைத்து உறவுகளையும் முறித்துக்கொண்டார்”20 என்றும் “சக்தி வாய்ந்த பஞ்சாயத்தார் அவரை
சாதியிலிருந்து விலக்கி வைத்தார்கள்”21 என்றும்
ஆங்கில மொழிபெயர்ப்பின் முன்னுரையில் எழுதப்பட்டுள்ளது. தந்தையால், சகோதரனால், சொந்தசாதியால் நிர்வாண நடனம் ஆடவிடுகிற,
பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிற, பலமுறை
பணத்திற்காக விற்கப்படுகிற பெண்களைக் காட்டிலும் மஹர் இனப்பெண் கேவலமானவள் என்று
குலாத்தி சமூகம் சொல்கிறது.
குலாத்தி இனப்
பெண் ஒரு மஹர் ஆணுடன் ஓடிவிட்டால் என்ன நிகழும் என்பதற்கு குஷும் என்ற பெண்ணின்
கதையை காலே சொல்கிறார். “குஷும் அழகான பெண்ணாகவும்,
குலாத்திகளிலேயே சிறந்த நடனக்காரியாகவும் இருந்தவள். அவள் நடனம் மிகவும் பிரபலமானது. ஏராளமாக பணம்
சம்பாதித்தாள். என் அம்மாவைவிட ஓரிராண்டு மூத்தவள்.
நெர்லா குலாத்திகள் சிறந்த நடனக்காரிகள் என்பதை என் அம்மாவும்
இவளும் நிலைநாட்டியிருந்தார்கள். குஷும் ஒருமுறை
பம்பாய் சென்று, லால்பாக்கிலிருந்த அனுமான் அரங்கில் தன்
நிகழ்ச்சியை நடத்தியிருந்தாள். இந்த நடனத்தைப்
பார்த்து மிகவும் கவரப்பட்ட பம்பாய் திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில்
நடிக்க அவளுக்கு வாய்ப்புத் தந்தார்கள்… தன் வெற்றியின்
உச்சத்திலிருந்தபோது, ஒருநாள் தன் குடும்பத்தை உதறிவிட்டு
கும்ளே என்பவருடன் ஓடிப்போனாள். ஓடிப்போனது மட்டுமல்ல,
மிகத்தாழ்த்தப்பட்ட மஹர்சாதிக்காரனோடு ஓடிப்போயிருந்தாள்.
என் அம்மாவைப்போலவே குஷுமும், தன்
குடும்பத்தின் கோபத்திற்கும், வசைகளுக்கும் ஆளானாள்.
அவள் மகன் சஞ்சயை அவளிடமிருந்து பறித்துவிட்டார்கள். குலாத்தி சாதியிலிருந்து அவள் விலக்கி வைக்கப்பட்டாள். அவளை வீட்டிற்குள் அனுமதித்தால், அவள்
குடும்பத்தையும் சாதியிலிருந்து விலக்குவதாக எச்சரித்தார்கள். குலாத்திப்பெண் மஹரை மணந்து கொள்வது மாபெரும் குற்றமாகப் பார்க்கப்பட்டது.” 22 (ப.74)
மஹருடன்
ஓடிப்போவதற்கு முன்பு குஷும்-க்கு பிறந்த ‘சஞ்சய்’ என்ற மகனை ஹரினானா – என்ற குலாத்தி ஆண் குஷுமிடம்
கொண்டுபோய் சேர்த்துவிடுகிறார். அதற்காக அவரை சாதியிலிருந்து விலக்கி
வைக்கிறார்கள்.
“உன்னோட
மகன் ஒரு குலாத்தி பையனை தூக்கிட்டு போயி, மஹரோட வீட்டுல
விட்டுட்டான். அதனால நாங்க அவனை சாதியைவிட்டு
விலக்கிட்டோம். உன்னோட மகனை எப்புவுமே
ஊட்டுக்குள்ளவிடக் கூடாது. இதுக்கு நீ ஒத்துக்கிறயா.” 23 (ப.75)
“ஹரினானாவின்
அப்பா அமைதியாக ஆமாம் என தலையாட்டினார். தன் சொந்தக்
குடும்பத்திலிருந்து, தன் பெற்றோர், மனைவி,
சகோதர, சகோதரிகளிடமிருந்து ஹரினானா
பிரிக்கப்பட்டார். திருடன் என அறிவிக்கப்பட்டார்.
தாயையும், மகனையும் ஒன்று சேர்த்ததுதான் அவர்
செய்த குற்றம்.... ஹரினானாவால் பல ஆண்டுகள்வரை தன் குடும்பத்தைச் சந்திக்க
முடியவில்லை. அவளுடைய இளம் மனைவி, அவன் இழப்பை மௌனமாகத் தாங்கிக் கொண்டாள்.” 24 (ப.75)
“குஷும்,
பம்பாயிலிருந்து லாத்தூருக்குக் குடிபெயர்ந்தாள். கும்ளே மூலம் அவளுக்கு இரு மகள்கள். குலாத்திகளைப்
பொருத்தவரையிலும், அவர்கள் மஹர்சாதிக்காரர்கள்.
ஆகவே, அவர்களை முற்றாக விலக்கி
வைத்திருந்தார்கள்... இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் சொந்த ஊருக்கு அவள்
வந்து சேர்ந்தாள். ஆனால், காலம்
எதையும் மாற்றிவிடவில்லை. நெர்லாவின் குலாத்திகள் அவளை
மன்னிக்கவே இல்லை. பெரும்பாலானோர் அவளுடன் பேசவோ
அல்லது அவளை தங்கள் வீட்டுக்கு அழைக்கவோ இல்லை. தங்களை
குலாத்திகளாக ஏற்றுக்கொள்ளும்படி பெரியவர்களிடம் அவள் மகள்கள் அழுது
கெஞ்சினார்கள். ஆனால், பெரியவர்கள்
சம்மதிக்கவில்லை. கடைசியாக, அவர்கள்
கனத்த மனத்தோடு நெர்லாவை விட்டுச்சென்றார்கள்.”25 (ப.76) என்று மகருடன் ஓடிப்போன குஷும்-க்கும், அவளுடைய
இரண்டு மகள்களுக்கும் நடந்த துயரத்தை காலே எழுதியுள்ளார். இதன் மூலம் குலாத்தி
சமூகம் மஹர்களை மிகவும் கேவலமான முறையில் நடத்தியிருக்கிறது என்பதை அறிய முடியும்.
சட்ட ரீதியாகவும் குலாத்தி சமூகம் பிற்பட்டோர் பட்டியலில்தான் இருக்கிறது.
மருத்துவப்படிப்புக்கான இடம் பிற்பட்டோர் பட்டியலில்தான் காலேவுக்கு
ஒதுக்கப்பட்டது. ஆகவே குலாத்தியும் தலித் தன்வரலாற்று கதை அல்ல.
கைக்காடி,
குலாத்தி சமூகங்கள் மஹர்களை எப்படி நடத்தியது என்பதோடு மற்றொரு
நாடோடிப் பழங்குடியின சமூகமான உச்சாலியா- மஹர்களை எப்படி நடத்தியது என்பதை லஷ்மண்
கெய்க்வாட் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள
பழங்குடியின சமூகங்களில் ஒன்று பத்ரூத். அதில் ஒரு உப
பிரிவு உச்சாலியா. ஆங்கிலேயர்கள் இவர்களை
குற்றப்பரம்பரையினர் பட்டியலில் வைத்திருந்தனர். உச்சாலியா
சமூகத்தினரின் முக்கியமான தொழில்-திருட்டு. இந்தியா
முழுவதும் இச்சமூகத்தினர் ‘சாந்த் மூர்ச்சா’ என்று அழைக்கப்படுகின்றனர். ‘சாந்த்’ என்றால் சந்தை. ‘மூர்ச்சா’ என்றால் திருடன். அதாவது ‘உச்சாலியா’ என்றால் சந்தையில் திருடுபவன்
என்று பொருள். ஜேப்படித் திருட்டு, சாமான்களைத் திருடுவது, ஏமாற்றுதல், மோசடி செய்தல், பேசிக்கொண்டே ஏமாற்றித் திருடுவது,
போலி தங்க நகைகளைக் காட்டி உண்மையான தங்க நகைகளைப் பறிப்பது.
ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் திறமையாகத் திருடுவார்கள்.
நல்ல தேர்ச்சிப்பெற்ற திருக்காட்டுக்காரியாக இருந்தால் அந்தப்
பெண்ணை மணப்பதற்கு போட்டியிருக்கும். உச்சாலியா
சாதியில் எந்தக் குழந்தை பிறந்தாலும் அது பிறக்கும்போதே-குற்றப் பரம்பரையினர் என்ற
முத்திரையோடுதான் பிறக்கும். இப்படியான உச்சாலியா
நாடோடிப் பழங்குடியின மக்கள் மஹர்களை எப்படி நடத்தினார்கள்?
“பாவானி
அம்மன் வழிபாட்டின்போது கெடா வெட்டப்பட்டது. மாமிசத்திற்காகப்
பல சாதியினரும் கூடைகளை வைத்துள்ளனர். மாங்
சாதிக்காரர்களின் கூடைகள் மற்ற கூடைகள் இருந்த இடத்திற்குச் சற்று தூரத்தில்
வைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூடைகளிலும் அம்மா
மாமிசத்தை வைத்தாள். ஆனால் கூடையின் மீது கை
பட்டுவிடாதவாறு எச்சரிக்கையாக இருந்தாள்.”26 (ப.49) என்றும், “மஹர்’, ‘மாங்’ ஆகிய சாதிக்காரர்களுக்கு பாட்டில்களும்
தேஷ் முக்குகளும் தனியாக டம்பளர்களும், தட்டுகளும்
வைத்திருப்பது மாதிரி நாங்களும் சாதியிலிருந்து விலக்கப்பட்டவர்களுக்காக உணவும்,
தண்ணீரும் கொடுப்பதற்காக தனியாகத் தட்டுகளை வைத்திருந்தோம்.”27 (ப.81) என்று எழுதியதின் வழியே
உச்சாலியா சமூகம் மஹர்களை நடத்தியவிதம் தெளிவாகிறது.
“பிற்பட்டவர்களுக்கான
பால் பண்ணை ஒன்றை அண்ணி நடத்தினார்”28 (ப.219).
என்பதின் மூலம் உச்சாலியா – ‘தலித்’ தன்வரலாற்றுக் கதை அல்ல என்பது நிரூபணமாகிறது. ஆனால் உச்சாலியாவை தமிழில் மொழிபெயர்த்த
எஸ்.பாலச்சந்திரன் “தமிழ் இலக்கியச் சூழலில்
உச்சாலியாவை வாசிக்கும் நமக்கு இவ்விசயம் கவனத்திற்குரியதாக இருக்கிறது.
இக்காரணத்தால்தான் ‘உச்சாலியா’ தலித் படைப்பு என்ற மதிப்பையும் பெறுகிறது”29 என்று முன்னுரையில் சொல்கிறார். ‘இவ்விசயம்
மிகவும் கவனத்திற்குரியது என்று எழுதியுள்ளார்.
ஆனால் கவனத்திற்குரிய விசயம் எது என்று எழுதவில்லை. பதிப்பாளர் உரையில் “மராத்தி தலித் படைப்புகளாக
லட்சுமண் மானேவின்-உபாரா, லட்சமண் கெய்க்வாட்டின் உச்சாலியா,
கிஷோர் சாந்தபாய் காலேவின் குலாத்தி-ஆகிய நூல்கள் இப்பிரச்சினைகளை
எதிர்கொள்வதற்கு முன்னுதாரணங்களாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை”30 என்று எழுதப்பட்டுள்ளது. ‘இப்பிரச்சினைகளை
எதிர்கொள்வதற்கு முன்னுதாரணங்களாக விளங்கும்’- என்று
எழுதிய பதிப்பாளர்-என்ன பிரச்சனைகள் என்று எழுதவில்லை.
சாதிய அடுக்கில் மராத்திகளுக்கான
இடம்?
உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய
நாடோடி பழங்குடியின சமூகத்தினர் மஹர், மாங் – போன்ற தீண்டாமைக்குட்படுத்தப்பட்ட சாதிகளை மட்டுமல்ல, மராத்திக்காரர்களையும் தீண்டத்தகாத சாதியாகவே பார்க்கிறது. நடத்துகிறது.
காசிபாய் என்கிற பெண்ணுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அந்தநேரத்தில் காசிபாயின்
தாய்வழி பாட்டி எப்போதோ ஒரு மராத்திக்காரனுடன் ஓடிப்போய்விட்டிருந்த கதையை
பேசுகிறார்கள். மராத்திக்காரனுக்கு பிறந்த காசிபாயின்
தாய் தீண்டதகாதவள். ஆகவே இந்தத் திருமணத்தை நடத்தக் கூடாது என்று பஞ்சாயத்தார் முடிவெடுக்கின்றனர்.
“பெண்ணோட
அம்மா கறை படிஞ்சவ. நம்ப பஞ்சாயத்தில வச்சி அவ இன்னும் தீட்ட தொலைக்கல”31 (ப.160) என்றும், “காசிபாய் அவளோட பாட்டி மக வயத்திலதானே பொறந்தா? அதனால
அவப்பொறப்பே கறைப்படிஞ்சதுதானே… காசிபாய் கறைபடியாதவள்
என்றும், (ஏனென்றால் தாய் ஒரு உச்சாலியா சாதிக்காரனுக்குப்
பிறந்தவள்) தன்னுடைய அம்மா வீட்டைப் பொருத்தவரையில் சிறிது கறை படிந்தவள் என்றும்
பஞ்சாயத்து முடிவு செய்தது”32 (ப.83) என்றும் உச்சாலியா சாதிப்பஞ்சாயத்தில் நடந்த நிகழ்வுகளை லஷ்மண்
கெய்க்வாட் எழுதுகிறார்.
என்ன தண்டனை
கொடுக்கலாம் என்று பஞ்சாயத்து ஆராய்கிறது. “மணப்பெண்ணின் தாய்வழிப்பாட்டி ஒரு மராத்திக்காரனோடு வாழ்ந்துவந்தாள். ஆகவே
மணப்பெண்ணின் தாய் மராத்திக்காரனுக்குப் பிறந்தவள். அவள் எங்கள் சாதியைச் சேர்ந்த
ஒருவனை திருமணம் செய்திருந்தாலும், அவள் மீது ஏற்கெனவே
படிந்திருந்த கறையை அவள் இன்னும் கழுவியிருக்கவில்லை. முகூர்த்த நேரம்
கடந்துவிட்டது. எனினும் அவர்கள் திருமணத்தை நடத்தவிடவில்லை... சிலர் அவளை மலம்
தின்ன வைக்கலாம் என்றார்கள். சிலர் அவளுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம்
விதிக்கலாம் என்றார்கள். மணப்பெண்ணின் தாயின் தலையை மொட்டை அடித்துவிடலாம் என்று
ஒருவர் எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தக்க யோசனையைக் கூறினார். பஞ்சாயத்தார்கள் இதை
ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள். அந்த பெண்ணின் தலையை மொட்டை அடிப்பது என்று ஏகமனதாக
பஞ்சாயத்து முடிவு செய்தது... மணப்பெண்ணின் தாய்க்கு மொட்டை அடித்தபிறகுதான்
திருமணம் நடந்தது. திருமணம் நடந்தபோது மொட்டை அடித்த தலையை மறைப்பதற்காக ஓயாமல்
மணப்பெண்ணின் அம்மா போராடிக்கொண்டேயிருந்தாள்”33 (ப.161) என்று தன் சாதிப் பஞ்சாயத்தில் நடந்த கொடூரம் குறித்து
எழுதுகிறார். உச்சாலியா சமூகத்தினர் மஹர், மாங், சுஹ்ரா சாதிகளை மட்டுமல்ல மராத்தியர்களையும் தீண்டத்தகாத சாதியாகத்தான்
நடத்தியுள்ளது என்பதை காசிபாயின தாய்க்கு நடந்த கொடூரத்தின் மூலம் அறிகிறோம்.
கீழ்ச்சாதிக்காரர்களை
விலைக்கு வாங்கி திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்துகிற பழக்கமும் உச்சாலியா
சமூகத்தினரிடம் இருந்தது என்பதை வண்ணார் சாதியைச் சேர்ந்த நாரய்யா –வின் இரண்டு மகன்களை விலைக்கு வாங்கிய கதையை கெய்க்வாட் சொல்கிறார். “அந்த வண்ணானின் மூத்த மகன் தகதய்யாவை ஹால்காராவின் கோபால் நூற்றைம்பது
ரூபாய்க்கு வாங்கினான். திருடும் தொழிலுக்கு அவன் விரைவிலேயே பயன்படுவான் என்பது
அவனுடைய எண்ணம். இளையவன் நாரய்யாவை எங்கள் கும்பலைச் சேர்ந்த துளசிராம் நூறு
ரூபாய்க்கு வாங்கினான்.“34 (ப.35).
உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய
மூன்று தன்வரலாற்றுக் கதைகளும், மஹர், மாங்-சமூகத்தினரை
எவ்வளவு இழிவுப்படுத்தியிருக்கிறது பாருங்கள். இழிவுப்படுத்தியதற்காக-அதை
தலித் சுயசரிதை என்று கொணடாட வேண்டும், தலித்
இலக்கியத்திற்கு, எழுச்சிக்கு முன்னோடியாக கொள்ள வேண்டும்
என்று விடியல் பதிப்பகம் சொல்கிறது. மொழிபெயர்ப்பாளர்களும் அப்படித்தான்
சொல்கிறார்கள். கேவலப்படுத்தியது எப்படி பெருமைக்குரியதாக, ஆக்கச்
சக்தியாக இருக்க முடியும்? இந்த மூன்று நூல்களையும்,
தலித் இலக்கியத்திற்கு முன்னுதாரணங்களாக கொள்ள வேண்டும் என்று
சொல்வது-என்ன அரசியல்? கைக்காடி, உச்சாலியா,
குலாத்தி ஆகிய மூன்று நாடோடி பழங்குடியின மக்களை-பொது சமூகம்
தீண்டதகாதவர்களாக ஒரு இடத்திலும் நடத்தவில்லை. அப்படிப்
பார்க்கவுமில்லை. சாதிசார்ந்த இழிவுகளை இவர்கள்
எங்குமே சந்திக்கவில்லை. இந்த மூன்று சமூகத்தினரும்
ஒரு இடத்தில்கூட தங்களை தீண்டதகாதவர்களாக உணரவில்லை. இந்த
மூன்று நூல்களிலும் விவரிக்கப்படுகிற வாழ்க்கை 1970-1994-காலக்கட்டம் என்பதையும்
நினைவில் கொள்ள வேண்டும். அதேநேரத்தில் ஒரு மஹர் சாதிப்பெண் சந்திக்கும்
தீண்டாமையின் கொடுமையை பேபி காம்ப்ளி எழுதுவதையும் பார்க்கவேண்டும். “மேல் சாதியினர் பயன்படுத்தும் ஒழுங்கான பாதையில் அவர்கள் போகக் கூடாது.
மேல் சாதிக்காரர்கள் யாராவது அந்தப் பாதையில் எதிரில் நடந்து
வந்தார்களென்றால் மஹர் சாதியினர் பாதையிலிருந்து இறங்கி முட்கள் நிறைந்த
புதர்களுக்கிடையில் நடந்து செல்ல வேண்டும். மேலும்,
எதிரில் ஏதாவது மேல் சாதி ஆண்கள் வந்தார்கள் என்றால் அப்பெண்கள்
புடவையால் உடல் முழுவதையும் மூடியபடி, அருகில் வந்தவுடன் ‘இந்த ஏழை மஹர் சாதிப் பெண் உங்கள் கால்களில் விழுந்து வணங்குகின்றேன்
முதலாளி என்று சொல்ல வேண்டும்.”35 (ப.82) இந்தநிலை எந்த நாடோடிப் பழங்குடியினருக்கு ஏற்பட்டது?
கைக்காடி,
உச்சாலியா, குலாத்தி ஆகிய மூன்று நாடோடி
பழங்குடியின சமூகம் – எப்போதும் தங்களுடைய – சாதியப் பெருமையை, சாதிய ஒழுக்கத்தை மரபை முழுமையாக கடைப்பிடித்தே வந்திருக்கிறது.
லட்சுமண் மானே, கிஷோர், லட்சுமண்
கெய்க்வாட் மூன்றுபேருமே படித்தவர்கள். படிக்கும்போது பள்ளியிலோ, கல்லூரியிலோ, விடுதியிலோ, பொதுவெளியிலோ,
வேலை பார்த்த இடங்களிலோ தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டோம், தீண்டாமையினால் ஒதுக்கிவைக்கப்பட்டோம், தீண்டாமையின்
கொடுமையை அனுபவித்தோம் என்று எந்த இடத்திலும் எழுதவில்லை. மாறாக செய்கிற தொழிலின்
காரணமாக அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பிறப்பினால் ஏற்பட்ட அவமானத்தை,
இழிவை, ஒதுக்குதலை, புறக்கணித்தலை
இவர்கள் ஒருபோதும் அனுபவித்ததே இல்லை.
நாடோடி
பழங்குடியின சமூகம் பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி
வைக்கப்படவே இல்லை. கைக்காடி சமூகம் கூடை, முறம் செய்து
ஊரில்தான் விற்கவேண்டியிருக்கிறது. லாவணி ஆட்டத்தை குலாத்தி சமூகம்
பொதுவெளியில்தான் நடத்தவேண்டும். அதேமாதிரி திருட்டுத்தொழிலைச் செய்கிற உச்சாலியா
சமூகத்தினர் மக்கள்கூடும் – சந்தையில்தான்
செய்திருக்கிறார்கள். ஊரின் பொது இடங்களில் நடப்பதற்கு இவர்களுக்கு எந்த தடையும்
இல்லை. இவர்களைப் பார்த்து மேங்குலத்தவர்கள் ஒரு போதும் தீட்டுப்பட்டுவிடும் என்று
ஒதுங்கிச் சென்றதே இல்லை. “பழைய கூடை, முறங்களை சீர்செய்து கொடுத்துவிட்டு ரொட்டியும், பழைய
குழம்பையும் ஊர்ப்பஞ்சாயத்து தலைவர் வீட்டிலிருந்து என் அம்மா வாங்கி வந்தாள்” என்று உபாராவில் லட்சுமண் மானே எழுதுவதிலிருந்து தெரிகிறது. பொது வெளியில்
இயங்குவதற்கு இவர்களுக்கு எப்போதும் எந்தத்தடையும் இருந்ததில்லை. இந்த மூன்று
நூல்களிலும் எங்குமே “தலித்” என்றோ, தீண்டதகாதவர்கள் என்றோ குறிப்பிடப்படவே
இல்லை. ஆனால் தங்களுடைய மக்கள் தீண்டாமையை எவ்வாறு கடைப்பிடித்து வந்தனர் என்பதையும்
எந்தக் கலப்பு இருந்தாலும் – பெண் கலப்பு மட்டும் கூடாது
என்பதில் எவ்வளவு உறுதியாக இருந்தனர் என்பதையும் தெளிவாக எழுதியுள்ளனர்.
அப்படியிருக்கும் போது, இந்நூல்களை
பதிப்பகங்களும், ஊடகங்களும், குறிப்பாக
தன்னார்வ தொண்டுநிறுவனங்களும் தலித் படைப்புகளாகவும்,, தலித்படைப்புகளுக்கான
முன்மாதிரிகளாகவும் எப்படி முன்னிறுத்தின? ‘It as a remarkable of a
dalit autobiography’36 என்று
அர்ஜுன் டாங்களே உபாராவிற்கு கூறியிருப்பதும், ‘This book also brings
in the problems of faced by the dalits in india’37 என்று உச்சாலியாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளர்
கூறியிருப்பதும் வினோதமானது. உச்சாலியா தீண்டாமையைக் கடைப்பிடிக்கிற சாதியாக
இருக்கும்போது அது எப்படி தலித் பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கு சிறந்த நூலாக
இருக்க முடியும். தலித், நாடோடி பழங்குடியின தன்வரலாற்றுக்
கதைகளை வெளியிடுகிற பதிப்பகங்கள், அவற்றை பிறமொழிகளில்
மொழிபெயர்க்கிறவர்கள் பெரும் அரசியல் செய்கிறார்கள். இந்த அரசியல் முற்றிலும்
வியாபாரத்தை முதன்மையாகக் கொண்டது. தற்காலத்தில் தலித் படைப்புகள், நாடோடிப்பழங்குடியினரின் கதைகள் அமோகமாக விற்பனையாகக்கூடியப் பொருளாக இருக்கிறது.
அதனால்தான் இந்த அரசியல். விற்பனைக்காகவே பலபடைப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதை “I am aware of the translation market and how dalit literature
has now become marketable.”38 என்று பாமாவும் ஒப்புக்கொள்கிறார்.
நாடோடிப்பழங்குடியினரின்
தன்வரலாற்றுக் கதைகளுக்கும், மதம்மாறிய
கிருத்துவர்களின் தன்வரலாற்றுக் கதைகளுக்கும், தீண்டத்தகாதவர்களின்
தன்வரலாற்றுக் கதைகளுக்கும் உள்ள பெரும்வேறுபாட்டை பேபி காம்ப்ளி, சரண்குமார் லிம்பாலே ஆகியோரின் தன்வரலாற்றுக் கதைகளிலிருந்து
அறியமுடியும்.
“கடையின்
வாசலில், கடைக்காரனைவிட்டு மிகவும் விலகி நின்று, தன் முந்தானையை எடுத்துத் தன் தலையைச்சுற்றி இரண்டு கைகளால்
விரித்துப்பிடித்துப் பணிவும் மரியாதையும் கலந்த குரலில், மிகுந்த
அடக்கத்துடன் தனக்கு வேண்டிய பொருட்களைத் தரும்படி கேட்பாள், ‘முதலாளி, தயவு செய்து இந்த இழிவான மஹர் இனப்
பெண்ணிற்கு ஒரு பைசாவிற்கு சிகைக்காயும் அரை மூடித் தேங்காயும் தருவீர்களா?’ அந்தக் கடைக்காரரின் குழந்தைகள் காலைக்
கடனைக் கழிக்க வரிசையாக முற்றத்திற்கு வருவார்கள். கடைக்காரர்
அந்த கபடமற்ற குழந்தைகளுக்கு சமூக நடத்தையைக் கற்றுக் கொடுப்பார். ‘டேய், சாபு அந்த அழுக்கான மஹர் பொம்பளை அங்கு
நின்றுகொண்டிருப்பது உன் கண்களுக்குத் தெரியவில்லையா? அவளைத்
தொட்டு விடாதே. தள்ளிப் போ’, உடனே நம் மஹர் இனப் பெண்,
தன் கந்தல் உடையை அந்தச் சிறுவன் மீதுபட்டு அவனை
தீட்டுப்படுத்திவிடாமல் ஒதுக்கிப் பிடித்துக்கொண்டு, “பார்த்துப்
போங்க சின்ன முதலாளி, அந்தப் பக்கம் போங்க. என்னருகில் வராதீர்கள். என்னைத்
தொட்டுவிட்டீர்கள் என்றால் தீட்டுப்பட்டுவிடுவீர்கள். கடைக்காரர் வெளியில் வந்து அவளைவிட்டு விலகி நின்று அவள் கேட்ட
பொருட்களைத் தூக்கி வீசுவார். அவற்றை அவள் தன்
முந்தானையை விரித்துப் பிடித்துக்கொள்வாள். அவள்
மிகவும் பணிவுடன் தன் கையிலுள்ள காசை வாயிற்படியில் வைப்பாள். அந்தக் காசு அந்த முதலாளியை தீட்டுப் படுத்தாது.”39 (ப.31,32) என்று
பேபி காம்ப்ளி எழுதியுள்ளார்.
சரண்குமார்
லிம்பாலே எழுதிய அனார்யா (நாதியற்றவன்)–வில் “எங்கள் ஊரில் சிவராம் என்பவனுக்குச்
சொந்தமான டீக்கடை ஒன்று இருந்தது. அங்கே மஹர்களுக்கும் மாங்குகளுக்கும் தனியாகக்
குவளைகள் வைக்கப்பட்டிருந்தன... நாங்கள் சாலையில் நடந்து செல்லும்போது மேல்
ஜாதிக்காரர்கள் யாராவது எதிரில் வந்தால் நாங்கள் அவர்களுக்கு வழிவிட்டு விலகிச்செல்ல
வேண்டும்... நாங்கள் பிறப்பதற்கு முன்பே எங்கள் மீது ஜாதி திணிக்கப்பட்டுவிடுகிறது”40 (ப.114) என்று எழுதியுள்ளார். ஆனால்
கைக்காடி, உச்சாலியா, குலாத்தி
சமூகத்துப் பெண்கள் தெருவில் நடப்பதற்கு எந்தத் தடையும் இல்லை, கடைகளில் பொருள்களை வாங்கும்போது ஒருபோதும் அவமானப்படுத்தப்படவில்லை
என்பதையும் ஒப்பு நோக்க வேண்டும்.
பிற்பட்டோர்
இனத்தைச் சேர்ந்த நாடோடிப் பழங்குடியின மக்களின் தன்வரலாற்றுக் கதைகளை-‘தலித்’ தன்வரலாற்றுக் கதைகள் என்று வெளியிட்டதுப்போலவே, தன்வரலாற்று
கதைகளை-நாவல் என்று வெளியிட்ட செயலும் தமிழில் நடந்துள்ளது. பாமாவின் கருக்கு
(1992). ராஜ்கௌதமனின் ‘சிலுவை ராஜ் சரித்திரமும் (2002
தமிழினி பதிப்பகம்) காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ் - தன்வரலாற்றுக் கதைகள்தான். சிவகாமியின் ‘உண்மைக்கு
முன்னும் பின்னும்‘ (2012) ஆகிய நூல்களும் நாவல்
கலையின் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை எளிய வாசகனால்கூட புரிந்துகொள்ள
முடியும். மீறி இவைகள் நாவல்கள்தான் என்று சொன்னால்-தமிழ் வாசகர்ளின் தரம் குறித்த சந்தேகம்
வருகிறது.
மதம்மாறிய தலித் கிருத்துவர்கள் – யார்?
கைக்காடி,
உச்சாலியா, குலாத்தி ஆகிய நாடோடிப்
பழங்குடியின சமூகமக்கள் எப்படி தீண்டாமையைக் கடைப்பிடித்தார்களோ, அதே மாதிரிதான் தலித் கிருத்துவர்கள், தலித்கள் மீது
ஒரு வகையான தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள்.
மதம்மாறிய தலித் கிருத்துவர்கள்
தாங்கள் தீண்டாமைக்குட்பட்ட இனம் அல்ல என்று நினைக்கிறார்கள். பெரும்பான்மையினர் தங்களை
உயர்ந்த குலமாகவே கருதுகிறார்கள். அவர்களுடைய நடவடிக்கைகளும் செயல்பாடுகளும்
ஓயாமல் அந்த மனப்பான்மையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். தாங்கள் மேம்பட்டகுலம்
என்று சொல்லிக்கொள்வதில்தான் அவர்களுக்கு பெருமிதம். கர்வம்.
‘In reality,
there is no difference between Hindus and Christians in the way they treat
dalits.’41 என்று பாமா
கூறுகிறார். இந்நிலையில் கிருத்துவர்கள் (தலித்)
எழுதுகிற படைப்புகள் மட்டும் எப்படி தலித் படைப்புகளாக இருக்க முடியும்?
நிஜத்தில்-நாடோடிப் பழங்குடியினர் எழுதிய தன்வரலாற்று கதைகளையும்,
தலித் கிருத்துவர்கள் எழுதிய நாவல்-தன்வரலாற்றுக்
கதைகளையும்-கொண்டாடுவதின் வழியே-நிஜமாகத் தீண்டாமைக் கொடுமையை அனுபவித்தவர்களின்
எழுத்தைப் புறக்கணிக்கிற செயல் நடந்துள்ளது. இச்செயல் பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர், ஊடகம், தன்னார்வத்
தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து செய்கிற
கூட்டுச் செயலாக இருக்கிறது. இதற்கு வெறும் லாப
நோக்கம் மட்டும் காரணமாக இருக்க முடியாது.
ஒவ்வொரு சாதியும்
எப்படி தனக்குக்கீழ் அடுக்கிலுள்ள சாதிகளை தீண்டாமைக்குள்ளாகியது என்பதை உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய
மூன்று நூல்களின் மூலம் அறியமுடியும். அதே நேரத்தில் மஹர்களை இழிவுப்படுத்தியதில்
இந்த மூன்று இனங்களும் ஒன்றாக இருந்தாலும் – இவர்கள்
மஹர்களைவிட பொருளாதார ரீதியாக, கல்விரீதியாக மேம்பட்ட சமூகம்
அல்ல. இச்சமூகங்களின் அவலம், துயரம், வேதனை,
கண்ணீர், பொய் என்று சொல்ல முடியாது. இந்த
மூன்று நூல்களையும் எழுதியவர்கள் தீண்டாமையைக் கடைப்பிடித்தவர்கள் அல்ல. ஆனால்
தங்களுடைய சமூகம் எப்படித் தீண்டாமையை பிராமணிய இந்து
மத நடைமுறைகளை வெறியோடு கடைப்பிடித்தார்கள் என்பதை
பகட்டு இல்லாமல் சொன்னவர்கள். ஒருவகையில் இந்திய சாதியப் படிநிலைகளை புரிந்துகொள்ள
உதவியவர்கள்.
‘முள்’ (2008 – முதல் பதிப்பு, ஆழி பதிப்பகம்) என்பது முத்து மீனாள் எழுதியது.
(முத்துமீனாள் இடைநிலை சாதியைச் சார்ந்தவர். ) புத்தகத்தில் ‘தன்வரலாற்றுக் கதை’ என்றோ, நாவல் என்றோ குறிப்பிடப்படவில்லை. நான்கு
பதிப்புகள் வந்துவிட்டன. ‘முள்’-ளிற்கு இந்தியா டுடே இதழில் விமர்சனம் எழுதிய
சுகுமாரன் “முத்து மீனாளின் வாழ்க்கைக் கதையின் சில
பகுதிகளைச் சொல்லும் இந்நூல் சில காரணங்களால்
முக்கியமானது. முத்து மீனாளின்
பிள்ளைப்பருவத்திலிருந்து தொடங்கி திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளைச்
சொல்கிறது இந்த புத்தகம்”44 என்று
எழுதுகிறார். அதே நூலுக்கு தினமணி நாளிதழ் “யாரும் அறியாத ஓர் உலகத்தை வாசகர் தெரிந்துகொள்வதற்கான பதிவு இந்நாவல்.
தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் தனி இடம் இந்நூலுக்கு உண்டு”45 என்று
எழுதுகிறது. ஒரே நூலுக்கு நாவல் என்றும், தன்வரலாற்றுக்கதை என்றும் எப்படி விமர்சனம் வர முடியும்? மீறி வந்தாலும் நூலாசிரியரோ, பதிப்பகத்தாரோ
இரண்டையும் எப்படி நூலில் சேர்த்தார்கள்? நூலாசிரியருக்கும்
பதிப்பகத்தாருக்கும்-‘முள்‘ நாவலா,
தன்வரலாற்றுக் கதையா- என்று தெரியுமா? தெரியாதா? இந்நூல் பல கல்லூரிகளில் பாடமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். கல்லூரிகளில் இந்நூலை – நாவல் என்று
பாடம் நடத்துவார்களா? தன்வரலாற்றுக் கதை என்று நடத்துவார்களா?
கேள்வித்தாள் எப்படித் தயாரிப்பார்கள்?
உபாரா, உச்சாலியா, குலாத்தி ஆகிய
மூன்று நூல்களும் மூலத்திலும் மொழிபெயர்ப்புகளிலும் தன்வரலாற்று கதை-என்றுதான்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூன்று
நூல்களுக்கும் சுகனும் ஷோபாசக்தியும் தொகுத்த- ‘கருப்பு’ என்ற இலக்கியத் தொகுப்பு நூலில் விமர்சனம்
எழுதிய அ.மார்க்ஸ் - ‘புதினம்’ என்றே
எழுதியுள்ளார். ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி (2004)‘
நிச்சயம் நாவல் அல்ல. அது ஒரு வரலாற்று பதிவு. வீரப்பனைத் தேடிய
கர்நாடக அதிரடி படையினர் செய்த மனித உரிமை மீறல்கள் குறித்த பதிவு. நெஞ்சை
பதறவைக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. 2004ல் ‘வனம்‘
வெளியிட்ட ஐந்து பதிப்புகளிலும், 2009ல்
வெளியிட்ட விடியல் பதிப்பகமும், 2013ல் வெளியிட்ட எதிர்
வெளியீடும் – நாவல் என்றே வெளியிட்டுள்ளன. தன்வரலாற்றுக் கதைகளை நாவல் என்று வெளியிடுகிற எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் செய்ய விரும்பும் அரசியல் என்ன?
‘உண்மைக்கு
முன்னும் பின்னும்‘ (2012 உயிர்மை பதிப்பகம்), என்பது சிவகாமி எழுதிய நாவல். இந்நூலை படிக்கிற சாதரண வாசகனுக்கும் இது
நாவலல்ல. தன்வரலாற்றுக் கதைதான் என்பது எளிதில் தெரிந்துவிடும். ஒரு நூலை படிக்கும்போதே “இது
அவரோட கதெதான். எனக்குத் தெரியும்“ என்று ஒரு வாசகன்
சொல்வானானால் அது நாவலல்ல. தன்வரலாற்றுக் கதையை எழுதுவதற்கு - எழுதபடிக்க தெரிந்தால் மட்டுமே போதும்.
கன்னட மொழியில்
எழுதப்பட்ட ‘ஊரும்
சேரியும்‘ (1996) சித்தலிங்கையா, ‘கவர்மண்ட் பிராமணன்‘ (1998) அரவிந்த மாளகத்தி, ‘பசித்தவர்கள்‘ (1999) தேவனூரு மகாதேவ – ஆகிய நூல்கள் மிகவும் தெளிவாக தலித் தன்வரலாற்றுக் கதைகள் என்று
வெளியிடப்பட்டுள்ளன. அதேமாதிரி இந்தி மொழியில் வெளியான பேபி ஹால்தார் எழுதிய ‘விடியலை நோக்கி‘ (2007) என்ற நூலும் தன்வரலாற்றுக்
கதை என்றுதான் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மலையாள மொழியில்தான் அதிக அளவில்
தன்வரலாற்றுக் கதைகள் எழுதப்படுகின்றன. ‘ஸீ.கே.ஜானுவின்
வாழ்க்கை வரலாறு’ (2003), ‘நளினி
ஜமீலா’, ‘ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்’ (2005) டி.இ.ஈச்சரவாரியார், ‘நான் வாழ்ந்தேன்
என்பதற்கான சாட்சிகள்’ (2007) நாயர், ‘திருடன் மணியன் பிள்ளை’ (2013)
ஜி.ஆர்.இந்துகோபன், ‘ஆமென்’ (2011)
- சிஸ்டர் ஜெஸ்மி போன்ற தன்வரலாற்றுக் கதைகள் கேரளத்தில் பெரிய வரவேற்பைப்
பெற்றுக் கொண்டாடப்பட்டன. தற்காலத்தில் நாவல், கவிதை,
சிறுகதைகள் எழுதுவதைவிட தன்வரலாற்றுக் கதைகளையே மலையாளிகள் அதிகம்
எழுதுகின்றனர். இதனால் நாவல், சிறுகதைகள், கவிதை நூல்கள் அதிக கவனம் பெறாமல் போகின்றன. மலையாள மொழிகளில்
எழுதப்படுகிற தன்வரலாற்றுக் கதைகள் நாவல் என்ற பெயரில் வெளியிடப்படுவதில்லை.
மலையாள மொழியில் எழுதப்பட்ட எந்தவொரு தன்வரலாற்றுக் கதையும் சாதியை, சாதியப் பிரச்சினைகளைப் பேசுவது இல்லை. அதனால் கேரளத்தில் சாதிகள் இல்லை
என்றோ, சாதிய இழிவுகள், கொடுமைகள்
இல்லை என்றோ பொருள் இல்லை. அங்கும் சாதிகளும் இருக்கின்றன. சாதிய இழி செயல்களும்
இருக்கின்றன. ஆனால் சாதிக் குறித்த இழிவுகள் இதுவரை பேசப்படவில்லை. மலையாளிகள்
சாதிக்குப் பதிலாக வர்க்கப் பிரச்சினையை முதன்மைப்படுத்துகிறார்கள். வர்க்க பிரச்சினையும்
சாதி பிரச்சினையும் ஒன்றா? வர்க்கப் பிரச்சினை ஒழிந்தால்
சாதி பிரச்சினை தானாக தீர்ந்துவிடும் என்று நம்புவது – சாதிகளால்
மட்டுமே கட்டமைக்கப்பட்ட இந்திய சமூகத்தில் இது - எவ்வளவு பெரிய மூட நம்பிக்கை.
இலங்கையில்
தோட்டக்காட்டீ என்ற சொல் குறிக்கும் – பெண், அவளுடைய வாழ்க்கை முறை – குறித்து எழுதப்படவில்லை. தோட்டக்காட்டீகள், தோட்டக்காட்டான்
குறித்து மௌனம் மட்டுமே இன்றுவரை இருக்கிறது. மலையாளிகள் வர்க்கப் பிரச்சினையை
முதன்மைப்படுத்துவதை போன்றது இது – இலங்கையில் தமிழர் என்ற
பொது அடையாளத்தைப் பேசுவது. நாம் வாழும் வெளியை சாதி என்ற அதிகாரம்தான்
தீர்மானிக்கிறது. யாழ்ப்பாணத் தமிழரும் மலையகத் தமிழரும் ஒன்றல்ல. வெற்றி பெற்ற
வியாபாரிகளாக கல்லாவுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள், நிலவுடைமையாளர்களாக இருப்பவர்கள், அதிகம் படித்த,
அதிகாரத்தில் இருந்த, பாதுகாப்பாக முதலில்
வெளிநாடுகளுக்கு பயணப்பட்டவர்கள் யார்? நிச்சயம்
தோட்டக்காட்டீகளோ, தோட்டக்காட்டான்களோ அல்ல.
தன்வரலாற்றுக்
கதைகளில் மட்டும்தான் எழுத்தாளர்கள் தன்னுடைய கதையை எழுதுகிறார்கள் என்று இல்லை.
நாவல் என்ற வடிவத்திலும் எழுத்தாளர்கள் தங்களுடையக் கதையைத்தான் எழுதுகிறார்கள்.
ஒவ்வொரு கதையிலும் நாவலிலும் அதன் ஆசிரியர்தான் முதன்மையான பாத்திரமாக
இருக்கிறார். நவீன நாவல், கலையின்
தேடல், கலைஞனின் தரிசனம் என்பது என்ன? தன்னைத்தவிர
வேறு எதையும் பார்க்காத, எதையும் கற்றுத்தராத படைப்புகளே
உற்பத்தி செய்யப்படுகின்றன. எழுத்தாளர்கள் சாட்சியம் சொல்கிறார்கள். அதையே நாவல்
கலை என்கிறார்கள். சாட்சியம், வாக்கு மூலம் அளிக்கவே தமிழ்
எழுத்தாளர்கள் போட்டிப்போடுகின்றனர். இது இலங்கை எழுத்துக்கும் பொருந்தும். ஞானம்
பத்திரிக்கையில் தொடராக வந்த தெணியானின் ‘இன்னும்
சொல்லாதவை’ என்பது மட்டும்தான் தன்வரலாற்றுக் கதை என்ற
பெயரில் வெளிவந்தது. நாவல் கலைக்கான அழகியல் கூறுகளும், தன்வரலாற்றுக்
கதைக்கானக் கூறுகளும் அடிப்படையில் வேறுபட்டவை. இந்த வேறுபாட்டை அறிந்து
செயல்படுபவனே நுட்பமான கலைஞன். வரலாறு, அரசியல், சமூகநிகழ்வு, தன் கதை என்று அனைத்தையும் இணைத்து
எழுதப்படுவதுதான் நாவல்.
தலித் சுயசரிதை
என்பது இப்படித்தான் இருக்கமுடியும். “மிகவும் களைப்புடனும் அழுக்குடனும் உள்ள மஹர் சாதிப் பெண்கள் சாலையின் ஒரு
பக்கத்தில் மிகுந்த அடக்கத்துடன் யாரையும் அவமதித்துவிடாமல் செல்வர்.
மற்றவர்களிடம் இருந்து மறைந்து தங்களை முழுவதுமாய் வெளிப்படுத்திக்
கொள்ளாமல் இருக்க முயல்வார்கள். முடிந்தவரை அவர்கள்
மற்ற கீழ்ச்சாதியினர் வசிக்கும் சந்துகள் வழியாகத்தான் செல்வர். அந்தத் தெருக்கள் வின்கர் சந்து, மலி சந்து, டெலிசந்து என்று அழைக்கப்படும். அங்குள்ள
அனைத்து வீடுகளிலும் மார்பு உயரத்திற்கு சுவரைப்போல மேடை கட்டப்பட்டிருக்கும்.
மஹர் சாதியினர் நேராக தங்கள் வீட்டு வாசலுக்கு வந்துவிடக் கூடாது
என்பதற்காகவே இவ்வாறு கட்டி வைத்திருப்பார்கள். மஹர்
சாதிப் பெண்கள், மேடைக்கு இந்தப் பக்கம் நின்று சத்தம்
கொடுப்பார்கள். ‘அம்மா விறகு வந்திருக்கிறது!
மஹர் சாதிப் பெண் விறகு கொண்டுவந்திருக்கிறேன்... விலை பேசி முடித்து விட்ட பிறகு மஹர் சாதிப் பெண்களின் வேலை
முடிந்துவிடாது. அவர்கள் அந்த விறகுக் கட்டுகளை
எடுத்துச் சென்று வீட்டின் பின்பக்கம் வைத்துக் கட்டை அவிழ்த்து விறகுகளை ஒழுங்காக
அடுக்கி வைக்க வேண்டும். ஒவ்வொரு விறகிலும் தன் தலை
முடியோ, தன் புடவையிலிருந்த நூலோ ஒட்டிக்கொண்டிருக்கிறதா
என்பதையும் கவனமாய் ஆராய வேண்டும். மஹர்
சாதிப் பெண் வேலை செய்வதை நிழலில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் விறகை
வாங்கிய பெண் (பார்ப்பன) ‘கவனமாகப் பார். ஒவ்வொரு விறகையும் எடுத்து நன்றாகப் பார். உன்
புடவையின் நூல் ஏதாவது ஒட்டிக்கொண்டிருந்துவிட்டது என்றால் பெரும்
பிரச்சனையாகிவிடும். உனக்கு என்ன? நீ போய் விடுவாய். எங்களுக்குத்தான் செலவு.
எங்கள் வீடு தீட்டுப்பட்டுவிடும். நாங்கள்
மாட்டுச் சாணி போட்டுத் தரையை மெழுகிவிட வேண்டிவரும். எங்கள்
வீட்டில் உள்ள அனைத்துத் துணிகளையும் துவைக்க வேண்டிவரும். உன் முட்டாள் தனத்தால் எங்களுக்கு இவ்வளவு தொந்தரவு வந்துவிடும்.
கடவுள், இவற்றை எப்படிப் பொறுத்துக்கொள்வார்.
சொல்? கடவுளுக்கும் தீட்டுப்பட்டுவிடும்
அல்லவா? அதனால்தான் சொல்கிறேன். ஒவ்வொரு விறகையும் நன்றாகப் பார்த்து அடுக்கி வை!”42 (ப.85,86)
ஒரு மஹர்
இனப்பெண் விற்கும் விறகில் அவளுடைய தலைமுடியோ, கட்டியிருக்கும்
சீலையின் ஒரு நூலோ ஒட்டியிருக்கக் கூடாது. அப்படி ஒட்டியிருந்தால் அது
மனிதர்களுக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தீட்டை ஏற்படுத்திவிடுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக விற்கப்படுகிற விறகில் மஹர் இனப்பெண்ணின் இரத்தம்
பட்டிருந்தால் அது பெரும் தீட்டாகிவிடுகிறது. தீண்டாமைக் கொடுமை என்பது இதுதான்.
உண்மையான தலித் தன்வரலாற்றுக் கதை தனிமனித துயரத்தைவிட ஒடுக்கப்பட்ட இனத்தின்
வலியையும் கண்ணீரையும் பேசும். அப்படிப் பேசுவது வியாபாரத்திற்காக. நிகழ்காலப்
போக்கிற்காக அல்ல. பிராமணிய இந்து மதம் உருவாக்கிய கடவுள்களும், சாதி அமைப்பும், மத
அமைப்பும் தீண்டாமையை எப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று கற்றுத்தருவதற்காகவே
உருவாக்கப்பட்டுள்ளன. அப்படியே நம்முடைய இலக்கியப் படைப்புகளும் இருப்பது
ஏற்புடையதல்ல.
***
துணை நூற்பட்டியல்.
1. லஷ்மண் மானே
- உபாரா (அன்னியன்) 2001,
விடியல்பதிப்பகம், 11 பெரியார் நகர்,
மச்சக்காளி
பாளையம், கோவை – 15.
மேற்கோள் வரிசை எண் – 1,5,6,7,8,9,10,11,12,13,14,15,16,17,18,19,36.
2. பாமா
- Vendatta – 2011. Oxford University press,
Chennai.
மேற்கோள் வரிசை எண் - 2,3,38,41.
3. Dr. கிஷோர் சாந்தாபாய் காலே -
குலாத்தி (தந்தையற்றவன்) 2001,
விடியல்பதிப்பகம், 11 பெரியார் நகர்,
மச்சக்காளி பாளையம், கோவை – 15.
மேற்கோள் வரிசை எண் – 20,21,22,23,24,25.
4. லஷ்மண் மாருதி கெய்க்வாட் -
உச்சாலியா (பழிக்கப்பட்டவன்) 2001,
விடியல்பதிப்பகம், 11 பெரியார் நகர்,
மச்சக்காளி பாளையம், கோவை – 15.
மேற்கோள் வரிசை எண் – 26,27,28,29,30,31,32,33,34,37.
5. பேபி காம்ப்ளி
- சுதந்திரக்காற்று (2010), எதிர் வெளியீடு,
96 நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி.
மேற்கோள் வரிசை எண் – 35,39.
6. சரண்குமார் லிம்பாலே
- அனார்யா (நாதியற்றவன்) 2003,
விடியல்பதிப்பகம், 11 பெரியார் நகர்,
மச்சக்காளி பாளையம், கோவை – 15.
மேற்கோள் வரிசை எண் – 40.
7. முத்துமீனாள்
- முள் (2008) – ஆழிப்பதிப்பகம், 12 முதல்
பிரதான சாலை, யுனைட்டட் இந்தியா
காலனி, கோடம்பாக்கம், சென்னை –
24.
மேற்கோள் வரிசை எண் – 44,45.
8. வசந்த் மூன்
- ஒரு தலித்திடமிருந்து, விடியல்பதிப்பகம்,
11 பெரியார் நகர், மச்சக்காளி பாளையம்,
கோவை – 15
மேற்கோள் வரிசை எண் – 4.
உயிர்மை – ஜனவரி 2015