புதன், 3 நவம்பர், 2021

மயாணத்தில் பயமில்லை – விமர்சனம் – S.சிவக்குமார்

 Quite recently Manushya Puthran had come out with the 200th issue of “Uyirmai”. I happened to read Thiru Imayam’s story “Mayanathil Bayamillai” (There is no fear at the burial grounds). And a few words:


At the outset let us look at the place at which the story is set. It is not one of those parks, or a decent hotel or the proverbial railways station where the story begins or ends with a send-off. Now now…..Mind you it is the burial ground. The place where there could be a transaction among bodies, about bodies. And the two protagonists (2?) are women! Ordinary women! To what extent the author has probed and understood the mind of women is reflected in this story.


There is this girl who is on a job-routine that involves planning the final send-off to dead-bodies. She determines their further destiny (words are mine) Yes. She is the pit-digger, if you like that word. She is Sita for you. The other is Nagamani who is the helper who has come with mason Palanichami. The story develops through the gradual conversation that occurs between these two.

You know “Uyirmai” is priced at Rs.50 and is readily available at the book stalls. The point is, reading the story first-hand, directly, would be so different. There are plenty of memorable moments each would relish according to their taste, bringing up and orientation. So……..I desist from placing the story in its full form before you. I may be excused………..  

Certain portions left me dumbfounded in this story. Methought it would be better to mention those with the reasons thereof! (Government language? Inevitable!)

These days I never sit to browse or read a book, be it the incomparable S V Rajadurai orSujatha.

“This mason has given me a job in the burial ground. With these thoughts at the back of her mind, Nagamani was oblivious to the surroundings till now” says the author. Now this attitude I have noticed among the TNEB workers who attend to our cable-faults that periodically crop up. So please understand that this intense concentration is not confined to software professional alone. Even men who do such low-end jobs get insulated from the outside world and mind their work.

 

Sita inspects whether she has dug the pit properly. And Imayam says, “The way in which she looked at it,was like looking with admiring eyes at a new born babe”. Stop. Whom are you teasing, dear author? Was it from the imagination of the observer Nagamani or your own? Tell me, honestly.

 

Nagamani casts a hard inquisitive look at Sita. “Doesn’t look like a married woman? does she? Not even a thread woven around her neck. If you are longing for a more descriptive account here is it” The nose-stud had turned black and it wasn’t “pure” gold after all. Nakli hai bhai nakli hai!

Don’t you get scared being alone here. This is Nagamani’s question. Oh! And what an answer from Sita: I have been here for 22 years. No ghost has come upon me. But I get sacred to walk on the roads. These men and their looks, devouring looks! An innocent uttering a simple yet profound truth!

And when she talks on the mobile with her grand dad, “Oh! You bloke! Is the beedi right in your mouth as you are talking to me?” Knowing well that it is difficult to wean him from this habit, Sita yet hopes as they say against hope!

What you….You keep questioning endlessly? In her own euphemistic way Sita asks of Nagamani” Your job here……….Are you a helper to the mason or you job is here to ask me all the questions possible?” A sense of controlled humour!

 

“I may not be able to provide a mouthful to others. Dead Bodies…Yes why not I compensate by dropping my handful of mud on their bodies. That is the reason why I am here” Can an illiterate (unpad as the say in Hindi) think this far and make such pristine statements? All thinking has been original….Let us travel back to Parasakthi. Kalainjar has put forth through Gunasekaran, a delineation of sorts at the court. Marshalling language, points what precision and sagacity. Till this it is undecided whether the credit would go to Kalainjar or Sivaji Ganesan?

Sita “The bloody stomach doesn’t it have any sense of self-respect?” A curse on the stomach!

“As long as we are women men will look at us” Sita says so and may sound philosophical. will be looked and the following is queerer still “May be another ten years. Then what is there to look for in us?”

 

“That day when we came here carrying the corpse of my father….well and this became the place in which I have been brought up, nurtured and what have you?”And see the place she owns!

 

Nagamani is allotted on para. But the main heroine is Sita. In the para that is given to Nagamani she narrates her story briefly. What matters ultimately is the interest in the story!

Parting is part of life, it is held. And see how does this happen? “Tomorrow if I cook some food and bring it here, will you eat that?” asks Nagamani. Kind of tit for tat…..”Why should you bring food from that distance? As long as you come here for work, I will bring cooked food for you”

 

Nagamani is almost speechless but musters enough courage to say “You are such a matured person”

 

What captivated and glued me to my seat was this. Yes, the milieu for the story. And the cast. Two women. When two women meet….you know……….The talk will mostly be pointless.But these talk of life with all its ramifications. The story is created through these conversations. Each one watches the other “slyly”. Only appreciatively, but. They find they are on the same wavelength. Ordinary women, both of them….They have almost lost their lives to the cruel hand of destiny. But have the will to live and want to live as much as it life affords them. Methought that Nagamani was the observer, Sita the protagonist.

 

Year back Sri Balu Mahendra made a seral “Kathai Neram” episodical, based on class stories like these. Will someone come forward? Dreaming is my birthright and fructification….well GOK(God only knows)!

 

 

 

செவ்வாய், 12 அக்டோபர், 2021

மயானத்தில் பயமில்லை - இமையம்

 

மயானத்தில் பயமில்லை



கை வேலய முடிச்சிட்டுத்தான் சாப்புடணும். இரு வந்திடுறன்” என்று சொன்ன பழனிசாமி, வேகமாகத் தண்ணீர்க்குழாய் இருந்த இடத்திற்க்கு நடக்க ஆரம்பித்தான். “இந்த வெயில் நேரத்தில அந்தச் சனியனக் குடிக்காம இருந்தா என்னா? அதக் குடிக்கிறதால என்னாதான் கெடைக்குமோ என்று பழனிசாமியைக் குறைசொன்ன நாகமணி, மண்வெட்டியால் சிமென்ட் கலவையைக் குவித்தாள். பாண்டு, ரசமட்டம், கொத்துக் கரண்டியைச் சுத்தம் செய்தாள். பிறகு தன்னுடைய கை, கால்களில் ஒட்டியிருந்த கலவையைத் தட்டிவிட்டாள். கால் விரல் இடுக்குகளில் ஒட்டிருந்த கலவையை எடுத்துபோட்டாள். தண்ணீர்க்குழாய் இருந்த இடத்துக்கு வந்து கை, கால், முகம் என்று ஒன்றுக்கு இரண்டு முறையாகக் கழுவிக்கொண்டாள். புடவையில், ஜாக்கெட்டில் கலவை ஒட்டிருக்கிறதா என்று பார்த்தாள். ஒட்டிருந்த இடங்களில் தண்ணீரைத் தொட்டு வைத்து துடைத்தாள். மீண்டும் ஒருமுறை கை, கால், முகம் என்று கழுவிக்கொண்டு, சாப்பாட்டு கூடை இருந்த இடத்திற்க்கு வந்தாள். எங்கே உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பார்த்தாள். மயானம் முழுவதும் பிணக்குழி மேடுகளும், சின்னதும் பெரியதுமான கல்லறைகளும், தரைமட்டமாகிவிட்ட பிணக்குழிகளும்தான் தெரிந்தன. பெரிய மரம் என்று ஒன்றுகூட இல்லை. ஆங்காங்கே சின்னச்சின்ன மரக்கன்றுகள்தான் இருந்தன. அவள் நின்றுகொண்டிருந்த இடத்துக்குச் சற்றுத் தள்ளி, கிழக்கில் ஒரு வேப்பமரம் இருப்பது தெரிந்தது. சாப்பாட்டு கூடையை எடுத்துக்கொண்டு வேப்பமரத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மரத்திடம் வந்ததும்தான் நாகமணிக்கு, மரத்துக்குச் சற்றுத் தள்ளி தெற்கில் ஒரு பெண் பிணக்குழி வெட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. உட்கார்ந்து சாப்பிடாமல் பிணக்குழி வெட்டிக்கொண்டிருந்த பெண்ணிடம் போனாள்.

ஒரு இளம் பெண் தனியாகப் பிணக்குழி வெட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்த நாகமணிக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்பெண்ணுக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கும். நல்ல சிவந்த நிறமாக இருந்தாள். நடுத்தரமான உயரத்தில் இருந்தாள். வியர்வையில் ஜாக்கெட் முழுவதுமாக நனைந்திருந்தது. உடல் முழுவதும் வியர்வை வழிந்துகொண்டிருந்தது. கை, கால்கள் என்று ஈரமண் ஒட்டியிருந்தது. அதிசயமான உயிரினத்தைப் பார்ப்பதுபோல் தன்னை ஒரு பெண் பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்ததும் வெட்டுவதை நிறுத்திவிட்டு, நிமிர்ந்துபார்த்து சிரித்துக்கொண்டே, “என்ன அப்படி பாக்குறிங்க?” என்று கேட்டாள்.

“சும்மாதான்” என்று சொன்ன நாகமணி, “என்னா ஊரு” என்று கேட்டாள்.

“சேலம்தான்.”

“பேரு என்னா?”

“சீதா.”

“கூட யாருமில்லியா?”

“எதுக்கு?”

“தனியா இருக்கியே.”

“இன்னிக்கு மட்டுமா தனியா இருக்கேன்?” என்று கேட்ட சீதா இதற்காகத்தான் என்றில்லாமல் சிரித்தாள். நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தாள். பிறகு குனிந்து மண்ணை வெட்ட ஆரம்பித்தாள்.

“பயமா இல்லியா?”

மண்ணை வெட்டுவதை நிறுத்திவிட்டு நிமிர்ந்து நின்று நாகமணியைப் பார்த்து, “எதுக்கு?” என்று சீதா கேட்டாள். அப்போது அவளுடைய இடது பக்க கண்ணில் வியர்வைத் துளி இறங்கியது.

எட்டு, பத்தடி நீளத்தில், நான்கு அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் நின்றுகொண்டிருந்த சீதாவை அதிசயமான பொருள் ஒன்றைப் பார்ப்பதுபோல பார்த்த நாகமணி, “அதிசயம்தான்” என்று அடித்தொண்டையால் சொன்னாள்.

நாகமணி பிறந்த ஊரிலும், கல்யாணம் கட்டிக்கொண்ட ஊரிலும் மயானத்தின் பக்கம் பெண்கள் போகவே மாட்டார்கள். தீட்டுக்காரப் பெண்கள் பேய் பிடித்துக்கொள்ளும் என்று மயானத்தின் பக்கம் திரும்பிகூடப் பார்க்க மாட்டார்கள். நாகமணிக்குப் பேய் என்று சொன்னாலே பயம் வந்துவிடும். மயானம் எப்படி இருக்கும்? பிணக்குழி எப்படி இருக்கும்? பிணத்தை எப்படி புதைப்பார்கள்? என்பதெல்லாம் அவளுக்குத் தெரியாது. இன்றுதான் அவள் மயானத்துக்குள் வந்திருக்கிறாள். சமாதி கட்டுகிற வேலை என்று தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டாள். நேற்று ஒரு வீட்டில் குளியலறை கட்டும் வேலை நடந்தது. வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது, “நாளக்கிக் காலயில டி.வி.எஸ். மயானத்துக்கிட்ட வந்திடு” என்று மட்டும்தான் பழனிசாமி சொன்னான். வந்த பிறகுதான் சமாதி கட்டுகிற வேலை என்று தெரிந்தது. நாகமணிக்கு முகம் சுருங்கிப்போயிற்று. உடனே, ‘உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு போய்விடலாமா? என்று யோசித்தாள். இருபத்திநான்கு கிலோ மீட்டர் தூரம் வந்துவிட்டோம். திரும்பி வீட்டுக்குத்தான் போக வேண்டும். ஒருநாள் சம்பளம் போய்விடும். இன்று மட்டும் வேலை செய்துவிட்டு நாளைக்கு உடம்பு சரியில்லாததால், வரவில்லை என்று சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்தாள். அரைகுறை மனதுடன் வேலையை ஆரம்பித்தாள்.

மயானத்தில் வேலைசெய்ய வரச்சொல்லிவிட்டானே பழனிசாமி என்ற கோபத்தில் அக்கம்பக்கம் பார்க்காமல் வேலையைச் செய்துகொண்டிருந்ததால் அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்றுகூட அவள் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்ப்பதற்கு முயன்றாள். சீதா பிணக்குழி வெட்டிக்கொண்டிருந்த இடத்துக்குச் சற்றுத் தள்ளி மேற்கில் புது பிணக்குழி மேடு தெரிந்தது. பிணக்குழியின் மீது வாடிவதங்கிய நிலையில் பூமாலை ஒன்று கிடந்தது. பிணக்குழி மேடு ஈரம் காயாமல், அதன் மேல், கொட்டப்பட்ட குங்குமம், கரைத்து ஊற்றிய சந்தனம், உடைத்து வைக்கப்பட்டிருந்த தேங்காய், ஊதுபத்தி பாக்கெட், கற்பூரம் இருந்த காகிதம் என்று பலதும் கிடந்தன. பிணத்தைப் புதைத்து ஒன்றிரண்டு நாட்கள்தான் இருக்கும் என்று நினைத்தாள். புதிய பிணக்குழி மேட்டுக்குப் பக்கத்தில் நாச்சிமுத்து கவுண்டர் என்று எழுதியிருந்த சமாதியும், கருப்ப கவுண்டர் என்று எழுதியிருந்த சமாதியும் இருந்தது. அடுத்ததாகப் பிணக்குழி மேடுகளும், ஒன்றிரண்டு சமாதிகளும் தெரிந்தன. மயானத்தைப் பார்க்கபார்க்க நாகமணிக்குப் பயம் கூடியது. “எங்க வேல செய்யுறதுக்குக் கூப்புட்டுக்கிட்டு வந்திருக்கான் பாரு” என்று பழனிசாமி மீது கோபப்பட்டாள்.

“எதுக்கு வெயில்ல நிக்குறிங்க? போயி நிழல்ல ஒக்காருங்க” என்று சீதா சொன்னதும் வேப்பமர நிழலுக்கு வந்தாள் நாகமணி. ஒயர்கூடையிலிருந்த சாப்பாட்டு டப்பாவை எடுத்து திறந்து சாப்பிட ஆரம்பித்தாள். இரண்டு, மூன்று கை சோறுதான் அவளால் சாப்பிட முடிந்தது. மயானத்தில் வந்து உட்கார்ந்து சாப்பிடுகிறோமே என்ற எண்ணம் அவளைச் சாப்பிட விடாமல் தடுத்தது. நல்ல பசி இருந்தாலும் சாப்பிடாமல் வெறுப்புடன் கையைக் கழுவினாள். சோற்று டப்பாவை மூடி ஒயர்கூடையில் வைத்தாள். பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்தாள். சிறிது நேரம் படுக்கலாமா என்று பார்த்தாள். மயானத்தில் எப்படி படுப்பது என்று தயங்கினாள். எந்த இடத்துக்கு வேலைக்குச் சென்றாலும் மதிய சாப்பாடு சாப்பிட்டதும் கொத்தனார், சித்தாள்கள் கொஞ்ச நேரமாவது படுத்திருப்பார்கள். இன்று அதற்கு வழியில்லை. அதனால் எழுந்து சீதாவிடம் போனாள்.

பிணக்குழிக்காக வெட்டப்பட்டிருந்த புது மண்ணின் மீது ஏறி நின்றுகொண்டு, குழி எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது, எவ்வளவு நீளத்தில் இருக்கிறது என்று நாகமணி பார்த்தாள். பிணக்குழியையும், பிணக்குழிக்குள் மார்பளவு பள்ளத்தில் நின்றுகொண்டு, வெட்டிய மண்ணை அள்ளி வெளியே கொட்டிக்கொண்டிருந்த சீதாவையும் பார்த்தாள். நோயாளியின் குரலில், “சாவறதுக்கு முன்னாடியே பொணக்குழியப் பாத்திட்டன்” என்று சொன்னாள். பிறகு இதுவரை உலகத்தில் யாருமே கேட்காத கேள்வியைக் கேட்டதுபோல், “பொணத்த இதுல போட்டுத்தான மண்ணத் தள்ளி மூடுவாங்க?” என்று கேட்டாள். “அதுக்குத்தான குழிவெட்டுறது” லேசாகச் சிரித்துக்கொண்டே சீதா சொன்னாள். வெட்டிய குழியின் நீளம், அகலம், பள்ளம் சரியாக இருக்கிறதா, வெட்டிப்போட்ட மண் மீண்டும் குழிக்குள் சரிந்துவிழுகிறதா, குழி நேராக இல்லாமல் வளைந்திக்கிறதா என்று பார்த்தாள். குழியின் ஓரங்களிலிருக்கும் மண் சரிந்து குழிக்குள் விழாமல் இருப்பதற்காகக் கையால் குழந்தையைத் தட்டிக்கொடுப்பதுபோல தட்டிக்கொடுத்தாள். தரை, மேடுபள்ளம் இல்லாமல் இருப்பதற்காக கால்களால் மிதித்துவிட்டாள். கடப்பாறை, மண்வெட்டி, மண் அள்ளும் கூடை என்று ஒவ்வொரு பொருளாக எடுத்து வெளியே போட்டாள். ஒருமுறைக்கு இரண்டு முறை பிணக்குழி சரியாக இருக்கிறதா என்று பார்த்தாள். அவள் பார்த்த விதம் பிறந்த குழந்தை அழகாக இருக்கிறதா என்று பார்ப்பதுபோல இருந்தது. எல்லாம் சரியாக இருப்பதுபோல் தோன்றவே, இரண்டு பக்கமும் கையைக் கொடுத்து ஒரே எம்பாக எம்பி, பள்ளத்திலிருந்து மேலே வந்தாள்.

சீதாவுக்கு உடம்பு முழுவதும் வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. வியர்வை ஈரத்தில் கை, கால்களில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டாள். புடவையில், ஜாக்கெட்டில் ஒட்டியிருந்த மண்ணையும் தட்டிவிட்டாள். தண்ணீர்க்குழாய் இருந்த இடத்துக்குப் போய் முகம், கை, கால்கள் என்று கழுவிக்கொண்டாள். பிணக்குழியிலிருந்து சீதாவுடன் இணைந்தே வந்திருந்த நாகமணி, “பொணம் எப்ப வரும்?” என்று கேட்டாள். “நாலு அஞ்சு மணி ஆயிடும்” என்று சொல்லிவிட்டு முந்தானையால் முகத்தைத் துடைத்துக்கொண்டாள். வேப்பமர நிழலை நோக்கி சீதா நடக்க ஆரம்பித்ததும், அவளுக்குப் பின்னாலேயே நாகமணியும் வந்தாள்.

“பொணத்த நீ பொதைப்பியா? மத்தவங்க பொதைப்பாங்களா?”

“பொதுவா பொணத்துக்காரங்கதான் பொதைப்பாங்க” என்று சொன்ன சீதா, தரையில் உட்கார்ந்தாள். அடுத்து நாகமணியும் உட்கார்ந்துகொண்டாள்.

“எப்ப வீட்டுக்குப் போவ?”

“பொணம் பொதச்சி முடிஞ்சதும்” என்று சீதா சொன்னவிதம் நீ கேட்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல் இருந்தது.

பிணக்குழியை வெட்டிக்கொண்டிருக்கும் போதும், தண்ணீர்க்குழாயில் முகம், கை, கால் என்று கழுவிக்கொண்டிருக்கும்போதும் பார்த்ததைவிட இப்போது நாகமணியால் சீதாவை நெருக்கமாகப் பார்க்க முடிந்தது. லட்சணமான முகம், உடம்பில் சதைப்பிடிப்பு அதிகமில்லாமல் இருந்தது. கல்யாணமான பெண் மாதிரி தெரியவில்லை. கழுத்தில் ஒரு நூல்கூட இல்லை. மூக்கில் மட்டும் கருத்துப்போன கவரிங் மூக்குத்தி இருந்தது. கைகளில் ரப்பர் வளையல்கள்கூட இல்லை. இரண்டு காதுகளிலும் சின்னதாகத் தோடு போட்டிருந்தாள். சீதாவின் முகம், கை, கால்கள் என்று அங்குலம்அங்குலமாகப் பார்த்தாள். நாகமணி தன்னையே பார்க்கிறாள் என்பதை உணர்ந்த சீதா, “என்னா அப்படி பாக்குறீங்க?” என்று கேட்டாள். அவள் கேட்டதற்குப் பதில் சொல்லாமல், “வேற வேலைக்கிப் போனா என்னா?” என்று நாகமணி கேட்டாள். “இந்த வேலைக்கி என்னா கொறச்சல்? இந்த வேலைதான் எனக்குப் புடிச்சியிருக்கு” என்று சொல்லிவிட்டு, கொஞ்சம் சத்தமாகவே சிரித்தாள். சீதா சொன்னதும், சிரித்ததும் நாகமணிக்கு வியப்பை உண்டாக்கியது. ஆச்சரியப்பட்டுப்போய், “இந்த வேலைதான் ஒனக்குப் புடிச்சிருக்கா?” என்று கேட்டாள்.

“ஆமாம்.” 

“இந்த எடத்தில நீ எப்பிடி இருக்க?”

“புடிச்சிதான் இருக்கன். வளையில எலி இருக்கிற மாதிரி.”

“என்னாது? மயானம் ஒனக்குப் புடிச்சியிருக்கா?”

“இந்த எடத்த வுட்டுப் போறதுக்கு எனக்கு மனசே வராது.”

“மனசு வராதா?”

”வராது. இந்த எடத்துக்கு என்ன கொற?”

”என்னா கொறயா?” என்று கேட்டுவிட்டு இரண்டு கைகளாலும் வாயை மூடிக்கொண்டாள் நாகமணி.

சீதா மரத்தை ஒட்டி வைத்திருந்த தன்னுடைய சாப்பாட்டு பையிலிருந்த செல்போனை எடுத்துப் பார்த்தாள். யாரும் அழைக்கவில்லை என்பது தெரிந்தது. மயானத்தின் நுழைவாயிலைப் பார்த்தாள். ஆள் நடமாட்டம் எதுவுமில்லாமல் இருந்தது. “மத்தவங்க வாயிக்கு ஒரு கை சோறு போடத்தான் முடியல. மத்தவங்க பொணத்துக்கு ஒரு கை மண்ணள்ளிப் போடலாமே. அதான் இங்க இருக்கன்” என்று சொல்லி முடிப்பதற்குள், ரொம்பவும் உரிமைப்பட்ட ஆளிடம் பேசுவது மாதிரி, “ஊராங்க பொணத்துக்கு மண்ணள்ளிப் போடணுமின்னு ஒனக்கு என்ன விதியா?” என்று நாகமணி கேட்டதற்கு சீதா எந்த பதிலும் சொல்லவில்லை. 

“மயானத்தில ஆம்பளங்க வரதுக்கே பயப்படுவாங்க. நீ தனியா இருக்கியே?”

“எங்க தாத்தாவுக்கு நாலு நாளா காய்ச்ச. ஒடம்பு நல்லா இருந்தா எங்கூடத்தான் இருப்பாரு.”

“பேய் புடிச்சிக்காதா?”

“இருபத்திரெண்டு வருசமாக இருக்கன். ஒரு பேயும் புடிக்கல. எனக்கு ரோட்டுல நடக்கத்தான் பயம். காருக்காரன் மேல ஏத்திப்புடுவான். தெருவுல நடக்கத்தான் பயம். ஆம்பளங்க முறச்சிமுறச்சி பாப்பாங்க.” பெரிய நகைச்சுவைக்குரிய விஷயத்தைச் சொன்னதுபோல் சிரித்தாள். சீதா பேசியதும், சிரித்ததும் கிறுக்குபிடித்த பெண்ணாக இருப்பாளோ என்ற எண்ணத்தை நாகமணிக்கு உண்டாக்கிற்று.

“குழிவெட்ட எம்மாம் சம்பளம்?”

“ஆயிரம். ஒரு சில பேரு நூறு, இரு நூறு சேத்துத் தருவாங்க. சில பேரு நூறு எரநூற கொறச்சி கொடுப்பாங்க” என்று சீதா சொல்லிக்கொண்டிருக்கும்போது அவளுடைய செல்போன் மணி அடித்தது. போனை எடுத்து “ஹலோ தாத்தா, பொணம் இன்னம் வல்ல. பொணம் வந்து வேல முடிஞ்சதும் சொல்றன். மத்தியானம் சாப்புட்டியா? மாத்தரய போட்டியா? பீடியக் குடிச்சிக்கிட்டே இருக்காத. நானா? இன்னம் சாப்புடல. இப்பதான் வேல முடிஞ்சது. சரி வச்சிடு” என்று சொல்லிவிட்டு செல்போனை நிறுத்தினாள். சீதா போனில் பேசி முடிப்பதற்காகவே காத்துக்கொண்டிருந்த நாகமணி, “ஒங்க தாத்தா குழிவெட்ட மாட்டாரா?” என்று கேட்டாள்.

“முன்னலாம் அவருதான் வெட்டுவாரு. நான் கூட இருப்பன். இப்ப நான் வெட்டுறன். அவருக்கு வயசாயிடிச்சி.”

“குழிமட்டும்தான் வெட்டுவியா?”

“நூறு, இரநூறு பேரோட வர பொணமும் இருக்கு. அஞ்சு, பத்து பேரோட வர பொணமும் இருக்கு. லாரியில, பஸ்ஸில அடிப்பட்டு செத்த அநாதைப் பொணமும் வரும். அநாதப் பொணத்தப் பொதைக்க குழிவெட்டவும், பொதைக்கவும் ஆளுங்க யாரும் வர மாட்டாங்க. போலீசு மட்டும்தான் வரும். வந்தாலும் நூறு, இர நூறுதான் தருவாங்க. மாசத்துக்கு எப்பிடியும் மூனு நாலு அநாதைப் பொணமாச்சும் வந்திடும். அத நான்தான் பொதைப்பன்” என்று சொன்ன சீதா, புழுக்கத்துக்காக முந்தானையை எடுத்து விசிறிக்கொள்ள ஆரம்பித்தாள்.

”பொணத்த எரிக்க மாட்டாங்களா?”

”அதுக்குன்னு ஒருத்தர் இருக்காரு. பேசுன ரூவாயில எட்டணா கொறஞ்சாகூட ஒத்துக்க மாட்டாரு. பொணத்துக்கூடவே புழங்குறவன் வாழறவன் நான். பேசுன சம்பளத்தக் கொறைக்காதிங்கன்னு வாக்குவாதம் பண்ணுவாரு. சம்பளத்தோட அவருக்கு குவார்ட்டர் பாட்டிலும், புரோட்டாவும் வாங்கித் தரணும். இல்லன்னா பொணத்த சரியா எரிக்க மாட்டாரு.”

“அட ஆண்டவனே” என்று சொன்ன நாகமணி, “பொணம் எரிக்கிற எடம் எங்க இருக்கு?” என்று கேட்டாள்.

“பக்கத்திலதான் வடக்கால பக்கம்” என்று சொன்ன சீதா, வடக்குப் பக்கமாகக் கையை நீட்டிக் காட்டினாள்.

 “பொணத்த பொதைக்கிறது நல்லதா? எரிக்கிறது நல்லதா?” சிறு குழந்தையைப்போல நாகமணி கேட்டாள்.

“சாதிக்கேத்த மாதிரி செய்வாங்க” என்று சொன்ன சீதா, லேசாகச் சிரித்துக்கொண்டே, “சித்தாள் வேலக்கி வந்திங்களா? எங்கிட்ட கேள்வி கேக்கறதுக்கு வந்திங்களா?” என்று கேட்டாள்.

“கொத்தனாரு சாப்புட போயிட்டாரு. சாராயத்த குடிச்சாதான் அந்தாளுக்குச் சோறு வவுத்துக்குள்ளார எறங்கும். மத்த எடத்துக்கு வேலக்கிப் போனா மத்தியானத்தில செத்த நேரம் ஒடம்பத் தரயில கிடத்துவம். மயானத்தில அப்படி செய்ய முடியுமா? எல்லா எடமும் பொணம் பொதச்ச எடமா இருக்கு” என்று சொன்ன நாகமணி, பழனிசாமி வருகிறானா என்று பார்த்தாள். அவன் வருகிற மாதிரி தெரியாததால் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

“பொணம் வராத அன்னிக்கி என்னா பண்ணுவ?”

“பொணம் எரிக்கிறவருதான் இன்னிக்கி ஒரு பயலும் சாவலியேன்னு சொல்லி, திட்டிக்கிட்டு இருப்பாரு. கவலப் படுவாரு. நானும் எங்க தாத்தாவும் வேல இல்லாத நாளில முள்ளு செடியிருந்தா புடுங்கிப்போடுவம். மண்ணு சரிஞ்சி கெடக்குற குழி மேட்டுல மண்ண குமிச்சிப் போடுவம். பொணம் வந்தா எந்த எடத்தில வெட்டுறதின்னு எடத்த கண்டுபுடிச்சி கோடு போட்டு வைப்பம். ஒரு சில நேரம் குழிய வெட்டி வச்சிருப்பம்” என்று சொல்லி முடிப்பதற்குள் “சாவு சாவறதுக்கு முன்னாடியே குழிய வெட்டி வச்சிருப்பியா?” என்று கேட்டாள் நாகமணி.

“ஆமாம்.

“சாவறதுக்கு முன்னாடியே எப்பிடி குழிவெட்டி வைக்கிறது? அதிசயம்தான்” என்று சொன்னாள்.

“இதுல என்னா அதிசயம் இருக்கு? ஒரே நாளில ரெண்டு மூணு பொணம் வந்தா என்னா செய்யுறது? பொதைக்கிறதுக்கு எடமில்லன்னா, தரமட்டமாயிட்ட பழய எடத்துலியே மறுகுழி வெட்டுவம். மறுகுழி வெட்டாத எடமின்னு ஒரு எடத்தக்கூட இங்க காட்ட முடியாது. வசதியானவங்க சமாதிய கட்டுறதாலதான் எடப் பிரச்சன. ஒவ்வொரு குழியும் பத்து பொணம் இருவது பொணம் பொதச்ச எடமாத்தான் இருக்கும்.”

“இத்தினி வருசத்தில எம்மாம் பொணக்குழி வெட்டியிருப்ப?”

“இருவதாயிரம், முப்பதாயிரம் இருக்கும். கூடுதலா இருக்குமே தவிர கொறயாது.”

நம்ப முடியாத விஷயத்தைக் கேட்டதுபோல் “யே சாமி” என்று சொல்லி இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டாள் நாகமணி.

“பொணக்குழி வெட்டுன கையோட, பொணத்தப் பொதச்சக் கையோட, ஏதாச்சும் ஒரு பொணக்குழி மேட்டுல குந்திதான் தெனம் சோறு சாப்புடுறன். பொணக்குழி வெட்டுன களப்பப் போக்க தரமட்டமாயிட்ட பொணக்குழியிலதான் படுக்கிறன். இப்பிடித்தான் ஒவ்வொரு நாளும் எனக்கு ஓடியிருக்கு. பத்து வயசா இருக்கும்போது இந்த எடத்துக்கு வந்தன். இப்ப எனக்கு முப்பத்திரெண்டு வயசு. வீட்டுல இருந்த நேரத்தவிட இந்த இடத்திலதான் அதிகமா இருந்திருக்கிறன். சில நாளில பொணம் ராத்திரி ஏழெட்டு மணிக்குக்கூட வரும். பொணத்த பொதச்சப் பின்னாடிதான் வீட்டுக்குப் போவ முடியும்.” என்று சொன்ன சீதாவை அதிசயமான உயிரினத்தைப் பார்ப்பதுபோல நாகமணி பார்த்தாள். சீதா ஒவ்வொரு விஷயமாக சொல்லச்சொல்ல அவளுக்கு வேறு ஒரு உலகத்தில் இருப்பதுபோல் இருந்தது. “பொணம் பொதைக்க வரப்ப எல்லாருமே ஆம்பளைங்களாகத்தான இருப்பாங்க? அத்தன ஆம்பள முன்னாடி நீ ஒத்த பொம்பளயா எப்பிடி நிப்ப? கூச்சமா இருக்காதா?”

“வேலதான செய்யுறம்?” என்று கேட்ட சீதா சிறிது நேரம் பேசாமல் இருந்தாள். காரணமே இல்லாமல் செல்போனை எடுத்துப் பார்த்தாள். “வயித்துக்கு கூச்சம், வெக்கம் இருக்கா?” என்று கேட்டாள்.

“பொணம் பொதைக்க வரவங்க திட்டுவாங்களா?”

“குழி நீளமா இல்ல, அகலமா இல்லெ, பள்ளம் அதிகமா இல்லனு ஏதாச்சும் சொல்லுவாங்க. அதுகூட நூறு அம்பத கொறச்சிக் கொடுக்கிறதுக்காக. நகக்கடயில, துணிக்கடயில ஓட்டல்ல கணக்குப் பாக்காதவங்க சுடுகாட்டுல வந்துதான் கணக்குப் பாப்பாங்க. கூட்டமா வரதில ஒண்ணு, ரெண்டு பேரு முறச்சிப் பாப்பாங்க மத்தப்படி தொந்தரவு இருக்காது.”

“மயானத்திலியுமா?”

“எங்க இருந்தாலும் நான் பொம்பளதான?” என்று கேட்ட சீதா உற்சாகத்தில் சிரிக்கிற குழந்தையைப்போல சிரித்தாள். பிறகு பக்கத்திலிருந்த அருகம்புல்லைப் பிடுங்கி சிறுசிறு துண்டுகளாகக் கிள்ளிப்போட ஆரம்பித்தாள். என்ன தோன்றியதோ நாகமணியின் பக்கம் பார்த்து, “பொம்பளன்னா ஆம்பள பாக்கதான செய்வாங்க?” என்று கேட்டாள். நாகமணி பதில் சொல்வதற்கு முன்பாகவே, “அதுகூட இன்னம் பத்து வருசம்தான். அப்பறம் எதுக்குப் பாக்கப்போறாங்க?” என்று கேட்டாள். நாகமணி பதில் எதுவும் சொல்லாமல், அவளுடைய முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தாள். அதிசயமான ஆளாக இருக்கிறாளே என்று நினைத்தாள். தன்மையான குரலில், “கல்யாணமாயிடிச்சா?” என்று கேட்டாள்.

“இல்லெ.”

“கட்டிக்க வேண்டியதுதான?”

“எதுக்கு?”

“எதுக்கா?” என்று கேட்ட நாகமணி, சீதாவை ஒருவிதமாகப் பார்த்தாள்.

”கல்யாணம் கட்டுறதுதான முக்கியம்.”

“கல்யாணமான ஒண்ணு ரெண்டு மாசத்திலியே வீட்டுல சண்டை, புருசன புடிக்கலன்னு விஷத்தக் குடிச்சி, தூக்குல தொங்கி செத்துப்போனவங்களோட பொணத்துக்கெல்லாம் குழிவெட்டி இருக்கன், காதல் பிரச்சனயில செத்துப்போன சின்ன பொண்ணுங்களுக்கும் நாலஞ்சி மாச கர்ப்பத்தோட செத்தவங்களுக்கும் குழிவெட்டி இருக்கன். புருசன், பொண்டாட்டி சண்டயில ரெண்டு மூணு புள்ளங்களுக்கு விஷத்தக் கொடுத்து செத்த பொம்பளைங்க, புள்ளங்களையும் சேத்துப் புடிச்சிக்கிட்டு தீக்குளிச்சி செத்த பொம்பளைங்க பொணம், சின்னப் புள்ளைங்க பொணம்னு எம்மாம் குழி வெட்டியிருப்பன்? அதயெல்லாம் பாத்துட்டு கல்யாணம் கட்ட முடியுமா?”

“கஷ்டமா இருக்காதா?”

“வெயில் காலத்தில குழி வெட்டுறது, ஒண்ணு, ரெண்டு பேரு பேசுன சம்பளத்தவிட கொறச்சிக் கொடுக்கிறதெல்லாம் கஷ்டமா இருக்காது. ஒருத்தங்க தரலன்னா இன்னொருத்தங்க தந்திடுவாங்க. தாயோட சேத்து கை புள்ளைங்களயும் பொதைக்கிறப்பதான் கஷ்டமா இருக்கும். சோறு திங்கவே புடிக்காது, தூக்கமும் வராது.”

“அதுக்காக சாவுறமுட்டும் தனியா இருக்க முடியுமா?”

“இதே கேள்வியத்தான் தெனமும் எங்க பாட்டியும், தாத்தாவும் கேக்குறாங்க.”

“ஒங்க தாத்தாவும் பாட்டியும் அப்பனப் பெத்தவங்களா, அம்மாவப் பெத்தவங்களா?”

சீதா எந்தப் பதிலையும் சொல்லவில்லை. அருகம்புல்லைக் கிள்ளிப்போடுவதுதான் முக்கியமான வேலை என்பதுபோல், அருகம்புல்லைக் கிள்ளிப்போட்டுக்கொண்டிருந்தாள். அவள் உட்கார்ந்திருந்த விதம் தனக்குப் பக்கத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருக்கிறாள் என்பதையே மறந்துவிட்டது போலிருந்தது. அக்கம்பக்கம்கூட பார்க்கவில்லை. தலையிலும் தோள் பட்டையிலும் வெயில் அடிப்பதுகூட அவளுடைய கவனத்தில் இல்லை.

“என்னாச்சி?”

“ரெண்டுமில்லெ.”

“என்னம்மா சொல்ற?”

சீதா தூரத்தில் வருகிற ஆளைப் பார்ப்பதுபோல கிழக்குப் பக்கமாக இருந்த பிணக்குழி மேடுகளையும், சின்னதும் பெரியதுமாக இருந்த சமாதிகளையும் பார்த்தாள். அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது கடுமையாக வெயில் அடித்துக்கொண்டிருப்பது.

“என்னம்மா ஆச்சி” மெதுவாகக் கேட்டாள் நாகமணி.

“எங்களுக்கு சொந்த ஊரு ஆந்திரா. எங்கப்பா டிரைவரா இருந்தாரு. லாரி ஓட்டிக்கிட்டு இருந்த பழக்கத்தில இந்த ஊரு முதலாளி, வந்து என்னோட லாரிய ஓட்டுன்னு சொல்ல, எங்கப்பா எங்களக் கூட்டிக்கிட்டு இங்க வந்தாரு. அப்ப எனக்கு ஒம்போது வயசு. வண்டிக்கிப்போனா, திரும்பிவர எட்டு ஒம்போது நாள் ஆவும். ஒருமுற கேரளாவுக்குப் போனப்ப லாரிய ஆக்சிடன்டு பண்ணிட்டாருன்னு, முதலாளி கோவத்தில வேலக்கி வராதன்னு சொல்லிட்டாரு. எங்கப்பா வேற முதலாளிகிட்டயும் போயி டிரைவரா சேரல. தீபாவளி அன்னிக்கி பக்கத்து வீட்டுல கடன் வாங்கிக் கொடுத்து ‘போயி கறி வாங்கிக்கிட்டு வா’ன்னு எங்கம்மா அனுப்பிச்சி. எங்கப்பா கறி வாங்கிட்டு வரல. குடிச்சிப்புட்டு வந்தாரு. ஒரு மாசமா நீ வண்டிக்கிப் போவல. நான் மில்லுக்கு வேலக்கிப் போறன். அதவச்சிதான் சாப்புடுறம். நல்ல நாளில ஒரு துண்டு கறி ஆக்கிப் புள்ளங்களுக்குப் போடலாமின்னுதான் கடன் வாங்கி காசக் கொடுத்தன். நீ என்னா செஞ்சிட்டு வந்திருக்க? இப்படிப்பட்ட ஆளுகூட எப்பிடி நான் சேந்திருப்பன்னு சொல்லி எங்கம்மா தீயவச்சிக்கிச்சி.”

சீதாவினுடைய முகம் இருந்த வாட்டத்தைப் பார்த்தால் எந்த நேரத்திலும் அழுதுவிடுவாள் என்பது போலிருந்தது. ஆனால், அவள் அழவில்லை. அவளுடைய கண்களிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர்கூட வரவில்லை. பெருமூச்சு விடவில்லை. மூக்கை உறிஞ்சவில்லை. அசைந்தும் உட்காரவில்லை.

தூரத்திலிருந்து பிணக்குழி மேடுகளையும் சமாதிகளையும் பார்த்தவாறு சின்னப்பிள்ளைக்குக் கதை சொல்வதுபோல, “எங்கம்மாவ ஆஸ்பத்திரிக்கி தூக்கிட்டுப்போயிட்டாங்க. எந்த ஆஸ்பத்திரின்னு தெரியல. நானும் என் தங்கச்சியும் அழுதுகிட்டே ஒவ்வொரு ஆஸ்பத்திரியா போயி ‘எரிஞ்சிப்போன எங்கம்மாவ கொண்டாந்தாங்களா?’ன்னு கேட்டம்.  ‘இல்ல’ன்னுட்டாங்க. ஏழெட்டு ஆஸ்பத்திரிக்கிப் போயிருப்பம். ஒரு ஆஸ்பத்திரி வாசல்ல நானும் என் தங்கச்சியும் அழுதுகிட்டு நின்னத பாத்திட்டு வாட்ச்மேன், “இது தனியாரு ஆஸ்பத்திரி. பணம் உள்ளவங்கதான் இங்க வருவாங்க. பணம் இல்லாதவங்க கவர்மண்ட் ஆஸ்பத்திரிக்கித்தான் போவாங்க. அங்க போயி கேட்டுப் பாருங்க”ன்னு சொன்னாரு. நாங்க கவர்மண்டு ஆஸ்பத்திரிக்கிப் போனப்ப ராத்திரி ஒம்போது பத்து மணி இருக்கும். வெளியில நின்னுக்கிட்டிருந்த எங்கப்பா எங்கள கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுதாரு.எங்கம்மாவப் பாக்க வுடல. ராத்திரி ரெண்டு மூணு மணிக்கு ஒரு நர்சு வந்து எங்கம்மா செத்திடுச்சின்னு சொன்னாங்க” என்று சொன்ன சீதா, நேருக்கு நேராக நாகமணியைப் பார்த்தாள். அவள் பார்த்த விதம் தூங்கிக்கொண்டிருக்கிற ஒரு குழந்தையைப் பார்ப்பதுபோல இருந்தது. எப்போதுமே சலசலவென்று பேசுகிற பழக்கம் கொண்ட நாகமணிகூட இப்போது ஒரு வார்த்தை பேசவில்லை. சீதாவைப் பார்ப்பது மட்டும்தான் தன்னுடைய வேலை என்பதுபோல பார்த்துக்கொண்டிருந்தாள். நாகமணி எதுவும் கேட்காமலேயே சீதா சொன்னாள்.

“பொணத்தக் கொடுக்கறப்ப சாயங்காலமாயிடுச்சி. நெருப்புல வெந்த பொணத்த வீட்டுக்குத் தூக்கிட்டுப் போவக் கூடாதின்னு நேரா சுடுகாட்டுக்குத் தூக்கிட்டுப் போயிட்டாங்க. என்னையும் என் தங்கச்சியயும் பொணத்தப் பாக்க வுடல. வீட்டுக்குப் போங்கனு சொல்லிட்டு எங்கப்பா பொணத்துக்கூட போயிட்டாரு. வா வீட்டுக்குப் போவலாம்னு என் தங்கச்சி கூப்புட்டா. மயானத்துக்குப் போவோம்னு சொன்னன். மயானம் எங்க இருக்குன்னு தெரியாது. விசாரிச்சிக்கிட்டே போனம். அன்னிக்கித்தான் தெரிஞ்சிது இந்த ஊருல ஏழெட்டு மயானம் இருக்கிறது. ஒவ்வொரு மயானமாப் போயி ‘எங்கம்மா பொணம் இங்க வந்துச்சா’ன்னு கேட்டம். எல்லா எடத்திலயும், ‘இன்னிக்கி பொம்பள பொணம்னு ஒண்ணும் வல்ல’ன்னு சொன்னாங்க. கடசியா இந்த மயானத்துக்கு வந்தம். நாங்க மயானத்துக்கு வந்தப்ப ராத்திரி ஏழெட்டு மணி இருக்கும். யாருமே இல்லெ. திரும்பி வீட்டுக்குப் போயிட்டம்.”

நாகமணிக்கு கண்கள் கலங்கிவிட்டது. பழனிசாமி வந்துவிட்டானா என்று பார்ப்பதற்குக்கூட அவளுக்கு மறந்துபோயிருந்தது. வேப்பமர நிழலில் உட்கார்ந்திருக்கிறோம் என்பதும் அவளுக்கு மறந்துபோய்விட்டிருந்தது. “அப்புறம் என்னாச்சு?” என்று கேட்பதற்குக்கூட தெம்பற்ற மாதிரி உட்கார்ந்திருந்தாள். அவளுடைய கவனமும் பார்வையும் சீதாவின் முகத்தைப் பார்ப்பதில் மட்டும்தான் இருந்தது. 

“மறுநாளு விடிஞ்சதும் இதே இடத்துக்கு வந்தம். மயானத்தில குழிவெட்டிக்கிட்டு இருந்தவர்கிட்ட, ‘நேத்து எங்கம்மா பொணம் இங்க வந்துச்சான்னு கேட்டம். “நெருப்புல வெந்த பொணமா?”ன்னு கேட்டுட்டு பொணம் பொதச்ச எடத்தக் காட்டுனாரு. எங்கம்மாவ பொதச்ச எடத்தப் பாத்திட்டு வீட்டுக்கு வந்தம். ‘மயானத்துக்கா போனிங்கனு’ கேட்டாரு எங்கப்பா. ஆமாம்னு சொன்னம். என்னாலதான் எம் பொண்டாட்டி செத்திட்டா. என் தங்கம் ரெண்டும் அநாதியாயிடிச்சின்னு” சொல்லி எங்களக் கட்டிப்புடிச்சிக்கிட்டு அழுதாரு. அப்புறம் வீட்டுக்குள்ளார போயி தூக்கில தொங்கி செத்திட்டாரு.” பேச்சை நிறுத்திவிட்டு வேப்பமரத்தைப் பார்த்தாள். சூரியன் எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்தாள். ஒருமுறை செருமினாள். பிறகு இதுதான் கடைசி வார்த்தை என்பதுபோல கட்டைக் குரலில் சொன்னாள். “அன்னிக்கி எங்கப்பா பொணத்தத் தூக்கிக்கிட்டு இந்த எடத்துக்கு வந்தவதான், பொறந்து வளந்த எடம் மாதிரி ஆயிடிச்சி.”

சீதா எந்த நேரத்திலும் அழலாம் என்று நாகமணி நினைத்தாள். ஆனால், அவள் அழவில்லை. தூசுபட்ட அளவுக்குக்கூட அவளுடைய கண்கள் கலங்கவில்லை. முகத்திலும் எவ்விதமான மாற்றமுமில்லை. அவள் தன்னுடைய அப்பா, அம்மாவைப் பற்றி சொன்னதுகூட புத்தகத்தில் படித்த உணர்ச்சிகரமான கதையைச் சொன்னதுபோலத்தான் இருந்தது. ஒரு பெண்ணால் இவ்வளவு நிதானமாகப் பேச முடியும் என்பதை இன்றுதான் பார்த்திருக்கிறாள். சீதாவின் அப்பா, அம்மா இறந்த கதையைக் கேட்டதும் நாகமணிக்குத் தன்னுடைய அப்பா, அம்மாவே இறந்துவிட்டதுபோல் மனதில் வருத்தம் உண்டாகிவிட்டது.

“எங்கப்பா செத்த மறுநாளு, எங்கம்மாவ பொதச்ச எடத்தில, எங்கப்பாவ பொதச்ச எடத்தில நானும் என் தங்கச்சியும் சூடம் ஏத்திக் கும்பிட்டதப் பாத்திட்டு வந்து பிணக்குழி வெட்டுறவரு எங்ககிட்ட பேசுனாரு. எங்க கதெய கேட்டதும், அவரோட வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு.”

“போனில பேசுனியே அவரா?”

“ம்.”

“அவங்க வீட்டுல எதுவும் சொல்லலியா?”

“இல்லெ.”

“வேத்துமயா நெனைக்கலியா?”

“அவங்களுக்குப் புள்ளெ இல்லெ. இன்னியவர என்னதான் புள்ளயா நெனைக்கிறாங்க. காசு பணம் இருந்தாத்தான வேத்தும வரதுக்கு?”

 ‘அதிசயம்தான்’ என்று தனக்குள்ளாகவே சொல்லிக்கொண்ட நாகமணிக்கு என்ன தோன்றியதோ, “இப்படி இருக்கயில நீ கல்யாணம் கட்டிக்கிறதுதான் நல்லது” என்று சொன்னாள்.

“நான் ஒருத்தன்கூட போயிட்டா அவங்கள யாரு பாத்துக்குவாங்க? அவங்க உசுரோட இருக்கிறவர நான்தான் பொணக்குழி வெட்டி சோறு போடணும். அவங்க செத்தா நான்தான் பொணக்குழி வெட்டணும், அவங்க பொணத்த நான்தான் பொதைக்கணும், அவங்க பொணக்குழி மேட்டுல நான்தான் சூடம் ஏத்திவச்சி கும்புடணும். அதுவர இந்த எடத்த வுட்டு போவ மாட்டன். மீறிப் போனா என்னெ பாவம் தொரத்தாதா? செத்தாலும் என் பொணம் வேவுமா? எங்கம்மாவ பொதச்ச எடத்த பாக்க வந்தன். அதுவே எனக்கு வாழற எடமாயிடிச்சி. பொணக்குழி வெட்டி பொணத்தப் பொதச்சிதான் சோறு திங்கறன். உசுரோட இருக்கன். இந்த எடத்துக்கு வந்த பின்னால ஒரு வேளகூட நான் பட்டினியா கெடக்கல” என்று சொல்லும்போது சீதாவின் கண்கள் கலங்கின மாதிரி தோன்றியது. லேசாக நகர்ந்து உட்கார்ந்து சீதாவின் இடது கையை, ‘ஒண்ணுமில்லெ பேசாம இரு’ என்பதுபோல் பிடித்தாள். நாகமணி கையைப் பிடித்த பிறகுதான் சீதாவின் கண்கள் கலங்கின. கண்கள் கலங்கியது தெரிந்ததும், அவளுடைய கையை நாகமணி மேலும் இறுக்கமாகப் பிடித்தாள். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை. ஒரு வார்த்தை பேசிக்கொள்ளவில்லை.

சீதாவின் செல்போன் மணி அடித்தது. செல்போனை எடுத்துப் பேசினாள். “குழி ரெடியாதான் இருக்கு. எப்ப வேணும்னாலும் வாங்க” என்று சொல்லிவிட்டு போனை வைத்தாள். வியர்வையைத் துடைப்பதுபோல கண்ணீரை முந்தானையால் துடைத்தாள்.

“சொந்த ஊருக்குப் போயிருக்கலாமில்லெ?”

“அங்க சோத்துக்கு இல்லன்னுதான் எங்கப்பா இந்த ஊருக்கு வந்தாரு.”

“சொந்தக்காரங்க இருப்பாங்கில்ல?”

“போவ ரெண்டு நாளு. திரும்பி வர ரெண்டு நாளு ஆவும். அதுக்கும் மேல போறதுக்கும் வரதுக்கும் பணம் வேணுமில்ல? இப்ப மாதிரி அப்ப செல்போன் இருந்துச்சா சேதிய சொல்றதுக்கு? நாங்களும் போவல. அவங்களும் வரல. வருசமும் ஓடிப்போச்சி. வயித்தில சொமந்த சொந்தமே எங்கள வேணாமின்னு வுட்டுட்டுப் போயிடிச்சி. அதவிட பெரிய சொந்தம் ஒலகத்தில இருக்கா?” என்று கேட்கும்போதே சீதாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்ணீரைத் தடுப்பதற்குச் சிறந்த வழி கைகளைப் பிடித்துக்கொள்வதுதான் என்பதுபோல நாகமணி சீதாவினுடைய இரண்டு கைகளையும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள். கேட்க வேண்டாம் என்றுதான் நினைத்தாள், ஆனாலும், நாகமணி கேட்டாள், “ஒங்கம்மா பொணத்த, ஒங்கப்பா பொணத்த எப்பிடி பொதச்சிங்க?”

“எங்கப்பா ஓட்டிக்கிட்டிருந்த லாரி ஓனர்தான் செலவு செஞ்சாரு.”

“ஒன் தங்கச்சி ஒங்கூடதான் இருக்கா?”

“எங்க தாத்தா ரேணுகா தேவி ஆனந்தன்ங்கிற ஒரு வக்கீல் வூட்டுல வேலக்கி சேத்துவுட்டாரு. வக்கீல் வீட்டுல டிரைவரா இருந்த பையனையே கல்யாணம் கட்டிக்கிட்டா.”

“எங்க இருக்காங்க?”

“இந்த ஊர்லதான்.”

“நீயும் அந்த மாதிரி போயிருக்கக் கூடாதா?”

“எங்க தாத்தாவும், பாட்டியும் வீட்டு வேலக்கிப் போ. மயானத்துக்கெல்லாம் பொட்டபுள்ள வரக் கூடாதின்னுதான் சொன்னாங்க. நான்தான் கேக்கல. எங்கம்மா, எங்கப்பாவ பொதச்ச எடம் இங்கதான இருக்கு? எங்க தாத்தாவுக்கு, பாட்டிக்கு, எனக்குச் சோறுபோடுற எடம் இதுதான? இத வுட்டுட்டு எப்பிடி போறது?” என்று கேட்கும்போதே அவளுக்கு அழுகை வந்துவிட்டது. அக்கம்பக்கம் பார்க்க பிடிக்காத மாதிரி நாகமணியைப் பார்ப்பதற்குக்கூட பிடிக்காத மாதிரி தரையைப் பார்த்தாள். தரையைப் பார்த்த மாதிரியே, “எங்கம்மாவுக்கு எங்களவிட அதோட கோவம்தான் அதுக்குப் பெருசா இருந்திருக்கு” என்று களைப்படைந்த குரலில் சொன்னாள். அப்போது அவளுடைய கண்களில் திரண்டிருந்த கண்ணீர் துளிகள் தரையில் விழுந்தது. அதைப் பார்த்த நாகமணி சீதாவினுடைய கைகளை மேலும் அழுத்தமாகப் பிடித்துக்கொண்டாள். கைகளை வசதியாகப் பிடித்துக்கொள்ள ஏதுவாகக் கொஞ்சம் முன்னால் நகர்ந்து உட்கார்ந்தாள்.

“மனசு கஷ்டமா இருந்தா ஒன் தங்கச்சி வீட்டுக்குப் போயி ரெண்டு நாள் இருந்திட்டு வாயன்.”

“நான் போற நேரமாப் பாத்து பொணம் வந்திட்டா? பொணத்த நாளைக்கிப் பொதச்சிக்கலாமின்னு வச்சிருக்க முடியுமா? முன்ன மாதிரி இல்லெ. பாதி பொணத்த கரண்ட்டுல வச்சி எரிச்சிடுறாங்க. கரண்டுல எரிக்கிறதுபோக மத்த பொணம்தான் எங்களுக்கு வரும். எப்ப குழிவெட்ட சொல்லுவாங்கன்னு ஒக்காந்திருக்கயில எங்க போறது? அவ ‘வா வா’ன்னுதான் கூப்புடுறா. நான்தான் போறதில்ல. அவ எனக்குத் தங்கச்சிதான? அம்மா இல்லியே” என்று சொல்லும்போது சீதாவின் உடல் லேசாக அதிர்ந்தது. கண்ணீரை மறைப்பதற்கான வழி அக்கம்பக்கம் பார்ப்பதுதான் என்பதுபோல் தலையை நிமிர்த்தி தன்னைச் சுற்றிலுமுள்ள இடத்தைப் பார்த்தாள். அவளுடைய பார்வையில் பட்டதெல்லாம் பிணக்குழி மேடுகளும், சமாதிகளும், வெயிலும்தான்.

“ஒன் தங்கச்சி வீட்டுக்காரரு எப்பிடி?”

“ஆம்பள புள்ள வேணுமின்னு வருசத்துக்கு ஒண்ணுன்னு நாலு பொட்ட புள்ளைங்களப் பெத்துவச்சியிருக்கான். நல்லத்தனமா இருக்கிறப்ப எல்லாரும் நல்லவங்கதான். கோவம் வந்திட்டா எல்லாரும் கெட்டவங்கதான்.” அவள் சொன்ன விதம் மற்றவர்களுக்குக் கேட்டுவிடக் கூடாது என்று சொன்னதுபோல் இருந்தது. மயானத்தின் நுழைவுவாயில் பக்கம் பார்த்தாள். வேட்டு சத்தம் கேட்கிறதா, வெடி விடுகிற, சேகண்டி அடிக்கிற சத்தம் கேட்கிறதா என்று பார்த்தாள். பிணமும் வரவில்லை. வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை என்பது தெரிந்ததும் நாகமணியின் பக்கம் பார்த்தாள். சீதா மயானத்தின் நுழைவுவாயில் பக்கம் பார்த்தது தெரிந்ததும் நாகமணியும் பழனிசாமி வருகிறானா என்று பார்த்தாள். ஆளை காணவில்லை என்பதால் அடுத்த கேள்வியைக் கேட்டாள்.

“இருக்கிறது சொந்த வீடா?”

“ரோட்டோரம். கவர்மண்ட் எடம்.”

“கஷ்டமா இருக்கா?”

“என்னா கஷ்டம்? வேல செய்யுறம். சோறு சாப்புடுறம்.”

சீதாவுக்கு நன்மை செய்வதுபோல், “எங்ககூட சித்தாள் வேலக்கி வந்திடன்” என்று சொன்னாள்.

“இந்த வேலயும், இந்த எடத்தில இருக்கிறதும்தான் புடிச்சிருக்கு.”

“அடிப்பாவி ஊருலகமே இந்த எடத்துக்கு வரத்தான பயப்படுது.”

“பயந்தாலும் வந்துதான ஆவணும்?” என்று சொன்ன சீதா லேசாக சிரித்தாள். பிறகு “எங் கதெயவே பேசிக்கிட்டிருந்திட்டன். நீங்க யாருன்னுகூட நான் கேக்கல” என்று சங்கடமான குரலில் சொன்னாள்.

‘எப்படியாப்பட்ட கதய சொல்லிட்டு என்னெப் பத்தி கேக்குறாளே’ என்று ஆச்சரியப்பட்டாள். தூங்கிக்கொண்டிருக்கிற கைக்குழந்தையினுடைய முகத்தை ஆசையாகப் பார்ப்பதுபோல் சீதாவின் முகத்தைப் பார்த்த நாகமணி, “பத்தொம்பது வயசில கல்யாணம். தாலியக் கட்டுன வேகத்தில ரெண்டு புள்ளயக் கொடுத்தான். வந்த சோலி முடிஞ்சிப்போச்சின்னு மண்ணுக்குள்ளார போயிட்டான் எம் புருசன்காரன். பொறந்தது ரெண்டும் பொட்ட. பாக்குமட்ட உரிக்க, களவெட்டன்னு போய்க்கிட்டிருந்த என்னெ சித்தாள் வேலயில இழுத்துவுட்டது சாப்புட போயிருக்கானே அந்தக் கொத்தனாருதான். எங்க ஊரு ஆளு. குடிகாரன். மத்த கொத்தனாருவுளுக்கு இவன் மோசமில்லெ. பொறந்த வீட்டிலயும் சரி, புருசன் வீட்டிலயும் சரி சொல்லிக்கிற மாதிரி ஒண்ணுமில்லெ. ஒனக்குப் பொணக்குழி வெட்டுனாத்தான் சோறு. எனக்கு சாந்து சட்டி தூக்குனாத்தான் சோறு. ஒவ்வொரு நாளும் அடுப்புல வச்ச வெறகு மாதிரிதான்” என்று நாகமணி சொல்லிக்கொண்டிருக்கும்போது சாப்பிடுவதற்காகப் போயிருந்த பழனிசாமி மயானத்துக்குள் வந்துகொண்டிருப்பது தெரிந்தது. ‘அதுக்குள்ளார வந்திட்டானா’ என்று நினைத்தாள். 

“மணியாயிடிச்சே. கலவய கலந்து வைக்காம என்னா மீட்டிங் போட்டுக்கிட்டு இருக்க?” என்று தூரமாக வந்துகொண்டிருக்கும்போதே பழனிசாமி கோபமாகக் கேட்டான்.

“போன ஆளு வரட்டுமின்னுதான் இருந்தன். மயானத்தில ஒரு பொம்பளயத் தனியா வுட்டுட்டு உச்சிபொழுதுக்கு நீ போவலாமா? பயமா இருக்காதா?” என்று பழனிசாமியை மடக்குவதுபோல் நாகமணி கேட்டாள், “அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம். சட்டுன்னு வந்து வேலயப்பாரு” என்று சொல்லிக்கொண்டே சமாதி கட்டுகிற இடத்துக்குப் போனான் பழனிசாமி.

நாகமணிக்கு உடனே எழுந்து போக வேண்டும்போலவும் இருந்தது. இன்னும் சிறிது நேரம் சீதாவிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் போலவும் இருந்தது. “நாளக்கி இங்க இருப்பியா?” என்று கேட்டாள்.

“நான் வேற எங்க போவ முடியும்?” என்று சொன்ன சீதா, பெரிய நகைச்சுவைக்கான விஷயத்தைச் சொல்லிவிட்டதுபோல சிரித்தாள்.

“காலையில வேலக்கி வந்ததிலிருந்து மத்தியானம் வர, நாளயிலிருந்து சமாதி கட்டுற வேலைக்கி வரக் கூடாதின்னு இருந்தன். இப்ப இந்த வேல முடியுறவர வரலாமின்னு இருக்கன்.”

“கொத்தனாரு திட்டப்போறாரு போங்க” என்று சொல்லிக்கொண்டே எழுந்து நின்றாள். சீதா எழுந்துவிட்டதால் நாகமணியும் எழுந்துகொண்டாள்.

“நாளக்கி நான் சோறாக்கி எடுத்தாரன் நீ திம்பியா?” என்று நாகமணி கேட்டாள். அவள் கேட்ட விதம் நாளைக்கு எனக்கு நீ பிச்சை போடுவாயா என்று கேட்பதுபோல் இருந்தது. நாகமணியை உச்சிமுதல் உள்ளங்கால்வரை கவனமாகப் பார்த்த சீதா, “இந்த எடத்துக்கு நான் வந்து எத்தினியோ வருசமாயிடிச்சி. யாரும் எங்கிட்ட வந்து ஒக்காந்து இம்மாம் நேரம் பேசிக்கிட்டிருந்ததில்ல. நானும் வாயத் தொறந்து பேசுனது இல்லெ. ஒங்ககிட்ட பேசபேசத்தான் மறந்துபோனதெல்லாம் எனக்கே ஞாபகத்துக்கு வந்துச்சி” என்று சொல்லும்போது அவளுடைய கண்கள் கலங்கின. கண்களுக்குள்ளேயே கண்ணீரை அடக்கிவைப்பதற்கு முயன்றாள். முடியவில்லை. கண்களைத் துடைத்துக்கொண்டு “நீங்க எதுக்கு அம்மாம் தூரத்திலிருந்து எடுத்தாரணும்? சோறுதான? நீங்க இங்க வேலக்கி வரமுட்டும் எடுத்தார வேணாம். நான் ஆக்கி எடுத்தாரன்” என்று சீதா சொன்னதைக் கேட்ட நாகமணி, “நீ பெரிய மனுஷிதான்” என்று சொன்னாள்.

 “மீட்டிங் போட்டது போதும் வா. வேல நடக்கலன்னா சம்பளம் தர மாட்டாங்க, ஞாபகத்தில வச்சிக்க” என்று சொல்லி பழனிசாமி கத்திய பிறகுதான் நாகமணி “வரன்” என்று சொல்லிவிட்டு சமாதி கட்டுகிற இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். சீதா மயானத்தைப் பார்த்தாள். மயானம் முழுவதும் வெயில் நிறைந்திருப்பது தெரிந்தது.

சாப்பிடலாம் என்று சோற்று டப்பாவை திறந்தபோது செல்போன் மணி அடித்தது. செல்போனை எடுத்துப் பேசினாள். “இன்னொரு பொணம் வருதா? இன்னொரு குழிய வெட்டி வைக்கணுமா? வெட்டுறன் தாத்தா. போன வச்சிடு” என்று சொன்ன சீதா, செல்போனை நிறுத்திவைத்தாள். சாப்பிடாமலேயே சோற்று டப்பாவையை மூடி வைத்தாள். புதிதாக வர இருக்கும் பிணத்துக்கு எந்த இடத்தில் குழி வெட்டலாம் என்று பார்ப்பதற்காக போனாள்.

உயிர்மை மாத இதழ் அக்டோபர் 2021

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

கவர்மண்ட் பிணம் - இமையம்

                                                                கவர்மண்ட் பிணம் 

புழுதிக் காலோடு வீட்டுக்குள் போக வேண்டாம் என்று நினைத்தாள் ஜெயந்தி. வீட்டுக்குப் பின்புறமாகச் சென்று சிமென்ட் தொட்டியிலிருந்த தண்ணீரில் கால், கை, முகம் என்று கழுவினாள். முகத்தை முந்தானையால் துடைத்துக்கொண்டே வந்து வாசலில் உட்கார்ந்தாள். “தண்ணி கொண்டாப்பா” என்று ஜீவாவிடம் சொன்னாள். அவன் தண்ணீரைக் கொண்டுவருவதற்காகப் போனான். வீட்டு வாசலில் ஒரு ஆம்புலன்ஸ் வந்து நின்றது. ஆம்புலன்ஸிலிருந்து இரண்டு போலீஸ்காரர்களும், கவச உடை அணிந்திருந்த ஒரு ஆளும் இறங்கி ஜெயந்தியிடம் வந்தார்கள். ‘எதற்காக இங்கே வருகிறார்கள்..?’ என்று யோசித்தாள். சட்டென்று எழுந்து நின்றுகொண்டாள்.

தடிமனாக இருந்த போலீஸ்காரர், “சென்னையிலிருந்து லாரியில வந்தியாம்மா?” என்று கேட்டார்.

“ஆமாம் சார்.” 

“ஏம்மா அந்த லாரியில வந்த?”

“என்னாச்சி சார்?” பதற்றத்துடன் கேட்டாள் ஜெயந்தி. 

“அது கோயம்பேடு மார்க்கெட்டிலிருந்து வந்த லாரிம்மா.”

“அதனால என்ன சார்?” என்று கேட்ட ஜெயந்திக்கு லாரி எங்காவது விபத்துக்குள்ளாகியிருக்குமோ என்ற கவலை உண்டாயிற்று.

“கோயம்பேடு மார்க்கெட்டுலதான் இப்ப கொரோனா அதிகமா பரவியிருக்குன்னு தெரியவாணாமா?” என்று போலீஸ்காரர் கேட்டார். அப்போது வீட்டுக்குள்ளிருந்து தண்ணீர் சொம்புடன் வந்த ஜீவா, இரண்டு போலீஸ்காரர்கள், கவச உடை அணிந்திருந்த ஒரு ஆள், ஆம்புலன்ஸ் வேன் என்று நிற்பதைப் பார்த்ததும் பயந்துபோய் அப்படியே நின்றுவிட்டான்.

“சரி பரவாயில்லெ. வண்டியில ஏறு” கவச உடை போட்டுக்கொண்டிருந்த ஆள் சொன்னான்.

“எதுக்கு சார் என்னெ வண்டியில ஏறச் சொல்றிங்க?” கோபம் வந்துவிட்ட மாதிரி ஜெயந்தி கேட்டாள்.

“கோயம்பேட்டுல வேல செய்யுற ஆளுங்களுக்குத்தான் இப்ப கொரோனா அதிகமா இருக்கு. நீ அவங்ககூட லாரியில வந்திருக்க. அதனால ஒன்னெயும் செக்கப்பண்ண சொல்லிட்டாங்க” என்று தடிமனாக இருந்த போலீஸ்காரர் சொன்னார். 

“நான் கோயம்பேட்டுலயிருந்து வரல சார்.”

“லாரியில ஒன்னா வந்தியா இல்லியா?” கோபமாகக் கேட்டார் போலீஸ்காரர்.

“நான் லாரியில வந்தன்னு ஒங்களுக்கு யாரு சொன்னது?” என்று கொஞ்சம் வேகமாகவே கேட்டாள் ஜெயந்தி. 

“ஆளுங்கள ஏத்திக்கிட்டு வந்த லாரிக்காரன விக்கிரவாண்டி டோல்கேட்டுல புடிச்சாச்சி. எந்தெந்த ஊர்ல ஆளுங்கள எறக்கிட்டு வந்தான்ங்கிறத விசாரிச்சி ஒவ்வொரு ஆளா புடிச்சிக்கிட்டிருக்கம். ஒங்கூட திண்டிவனம் கெடங்கல் ஆளுங்க மூணு பேரு எறங்குனாங்கில்ல? அவங்களயும் புடிச்சாச்சி. அவங்கதான் ஒன்னெப் பத்தி சொன்னாங்க” என்று போலீஸ்காரர் சொன்னதும் ஜெயந்திக்கு முகம் மாறிவிட்டது. ‘லாரியில வந்தது தப்பாப் போச்சே’ என்று நினைத்தாள்.

ஜெயந்தியின் புருசன் ஐயனாருக்கு கேன்சர் நோய். சென்னை அடையாறு மருத்துவமனையில் நான்கு மாதம் வைத்திருந்தாள். இரண்டு மாதத்துக்கு முன்பு, “இனிமே வீட்டுக்கு அழச்சிக்கிட்டுப் போயிடுங்க. மாசாமாசம் வந்து மாத்தரய வாங்கிக்கிட்டுப் போயிடுங்க” என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இரண்டு மாதமாக முதல் தேதியில் சென்று மாத்திரை வாங்கிக்கொண்டு வந்துவிடுவாள். ஊரடங்கு அறிவித்துவிட்டதால் ஒரு மாதம் மாத்திரை வாங்குவது விட்டுப்போய்விட்டது. மாத்திரை சாப்பிடாததால் ஐயனாரின் உடல்நிலை மோசமாகிவிட்டது. என்ன செய்வது என்று தவித்துக்கொண்டிருந்தாள். சென்னையிலிருந்த தன்னுடைய அக்காவுக்கு உடம்பு சரியில்லை என்று பார்ப்பதற்காக எதிர்வீட்டு செல்வம் மோட்டார் பைக்கிலேயே சென்னைக்குப் போகிற செய்தி தெரிந்தது. அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, தன்னையும் அழைத்துக்கொண்டுபோகச் சொன்னாள். ”போலீஸ் மறிக்கும்” என்று சாக்குபோக்கு சொன்னான் செல்வம். காலில் விழுந்து கும்பிட்டு “வண்டிக்கு எண்ணெ போடுறன்” என்று சொன்ன பிறகுதான் சரி என்று அழைத்துக்கொண்டுபோய் இறக்கிவிட்டான். 

மருத்துவமனைக்குள் போகக் கூடாதென்று மறித்தவர்களிடம் ஒரு மணி நேரத்துக்கு மேல் கெஞ்சி கூத்தாடினாள். அதன் பிறகுதான் உள்ளே விட்டார்கள். மாத்திரைகளை வாங்கிய பிறகுதான் எப்படி ஊருக்குப் போவது என்ற கவலையே வந்தது. நடக்க ஆரம்பித்தாள். பசி எடுத்தது. தாகமாக இருந்தது. ஒரு வாய் தண்ணீர் குடிக்கலாம் என்றால் ஒரு டீக்கடை, இட்லிக்கடைகூட இல்லை. சென்னையே பூட்டிக்கொண்டு கிடந்தது. ரோட்டில் ஆட்களைப் பார்ப்பதே அபூர்வமாக இருந்தது. தனியாக வந்து மாட்டிக்கொண்டோமே என்ற கவலையில் நடந்து கொண்டிருந்தாள். தாம்பரத்தைத் தாண்டி வரும்போது ஒரு லாரி நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தாள். சிறுநீர் கழித்துவிட்டு வந்த டிரைவரிடம் ஐயனாருக்கு உடம்பு சரியில்லாதது, மாத்திரை வாங்க வந்தது என்று தன்னுடைய கதையைச் சொல்லி இரண்டு மடங்கு பணம் தந்து லாரியில் ஏறிக்கொண்டு திண்டிவனம் வந்தாள். லாரிக்காரனிடம் தன்னுடைய கதையைச் சொன்னது தவறாகிவிட்டதே என்று நினைத்தாள். 

“லேட்டாக்காதம்மா” போலீஸ்காரர் சொன்னார். 

“இப்பதான் சார் வந்தன். இன்னம் தண்ணிக்கூட குடிக்கல. மாத்தரயக்கூட தரயில வைக்கல, பாருங்க” என்று சொல்லி மடியில் வைத்திருந்த மாத்திரைப் பொட்டலத்தைக் காட்டினாள். 

“அதுக்கு நாங்க என்னா பண்றது? மாத்தரயக் கொடுத்திட்டு வந்து வண்டியில ஏறு” என்று போலீஸ்காரர் கண்டிப்பான குரலில் சொன்னதும், ஜெயந்திக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “எம் புருசன் எப்பிடி கெடக்குறாருன்னு வந்து பாருங்க சார் தெரியும். முன்னப்பின்ன சொல்லாமகொல்லாம திடுதிப்புன்னு யாரோ மோடியாம் பஸ், கார நிறுத்திப்புட்டாரு. வீட்ட விட்டும் வெளிய வரக் கூடாதுன்னு சொல்லிப்புட்டாரு. ஒரு மாசமா மாத்தர சாப்பிடாததால ஒடம்பு மோசமாயிடிச்சிங்க. ஆஸ்பத்திரியில மல்லுக்கட்டி, மாருக்கட்டி காலுல விழுந்து கும்பிட்டுத்தான் மாத்தரய வாங்கிக்கிட்டு வந்தன். அங்கியே என்னெ நூறு செக்கப்பு பண்ணித்தான் உள்ளாரயே வுட்டாங்க” என்று உண்மையைச் சொன்னாள்.

“அங்க செக்கப்பண்ணினது செல்லாது. இங்க புதுசா பண்ணனும். இது கலக்டர் ஆர்டர்.”

“வீட்டுல யாருமில்லெ சார். எம் மாமியாரு இன்னிக்கி காலயிலதான் மவ வீட்டுக்குப் போச்சி. அது இருந்தாக்கூட பரவாயில்ல. வந்திடுவன். இப்ப வீட்டுல இந்த ரவ பையன்தான் இருக்கான். இன்னிக்கோ நாளைக்கோன்னு சாவக் கெடக்குற ஆள வுட்டுட்டு எப்பிடி சார் வர முடியும்? வீட்டுக்கு வந்து அவரு முகத்தக்கூட நான் இன்னும் பாக்கல” என்று சொல்லும்போதே ஜெயந்திக்கு அழுகை வந்துவிட்டது.

ஜெயந்தியின் வீட்டின் முன்பு ஆம்புலன்ஸ் நிற்கிறது. இரண்டு போலீஸ்காரர்களும், கவச உடை அணிந்த ஒரு ஆளும் வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்ததும் தெரு சனம், ஊர் சனம் என்று கூடிவிட்டார்கள். மணியக்காரர், தோட்டி, தலையாரி என்று வந்துவிட்டார்கள்.

“ஒன்னெ செக் பண்ணிட்டு இன்னிக்கே வுட்டுடுவாங்கம்மா. வா, வண்டியில ஏறு” என்று தடிமனான போலீஸ்காரர் தணிந்த குரலில் சொன்னார்.

“கொரோனா வந்து செத்தாலும், நான் வண்டியில ஏற மாட்டன் சார்” என்று சொன்னதும், உயரமாகவும், மெல்லிசாகவும் இருந்த போலீஸ்காரர் ஜெயந்தியின் கையைப் பிடித்து இழுப்பதுபோல் பக்கத்தில் வந்ததும் இரண்டடி பின்னால் நகர்ந்து நின்றுகொண்டாள். கோபம் வந்ததுபோல், “என்னா சார் செய்யுறிங்க?” என்று கேட்டாள். பிறகு “செத்தாலும் புருசன், புள்ளையோட நான் வீட்டுலியே செத்துப்போறன்” என்று சொன்னாள். ”நீ மட்டும் செத்தா பரவாயில்லெ. ஊர்ல பரவிட்டா என்னா செய்யுறது? ஊர்ல பரவக் கூடாதின்னுதான் ஒன்னெ கூப்புடுறம். விஷயம் புரியுதா?” என்று தடிமனாக இருந்த போலீஸ்காரர் சொன்னதும், “நான் லாரியில அர மணி நேரம்கூட வந்திருக்க மாட்டன். அதுக்குள்ளாரியா எனக்கு ஒட்டிக்கிச்சி?” ஆத்திரத்துடன் கேட்டாள்.

“ஒனக்கு கொரோனா இருக்குன்னு சொல்லல. லாரியில வந்ததால செக் பண்ணனும் அவ்வளவுதான். ‘காண்டாக்ட்டுல‘ உள்ளவங்கள புடிக்கணும். இதான் கலக்டர் ஆர்டர். வண்டியில ஏறு.”

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு பிரேமா, “அவ புருசன் சாவ பொழைக்கக் கெடக்குறாரு சார். இந்த நெலமயில கூப்புட்டா என்னா சார் அர்த்தம்?” என்று கேட்டாள். பிரேமாவைத் தொடர்ந்து இரண்டு, மூன்று பெண்கள் ஜெயந்திக்காகப் பரிந்து பேசினார்கள். ஐயனாருக்கு உடம்புக்கு ரொம்ப மோசமாக இருக்கிறது என்பதையும் சொன்னார்கள். எல்லோருடைய வாயையும் அடைப்பது மாதிரி தடிமனான போலீஸ்காரர், “இது கலக்டரோட ஆர்டரும்மா. இதுல நாங்க ஒண்ணும் செய்ய முடியாது. எதாயிருந்தாலும் தள்ளி நின்னே பேசுங்க. ஒருத்தர்கூட மாஸ்க் போடல” என்று போலீஸ்காரர் கறாராகச் சொன்னார்.

“வாயிக்கு வாயி கலக்டர் ஆர்டருன்னு சொல்றீங்களே, என் புருசன் சாவ பொழைக்கக் கெடக்குறாரு, அவருக்கு யாரு மாத்தர வாங்கிக் கொடுப்பா? ஒரு மாசம் வுட்டுப்போயி இன்னிக்கி விடியக்காலம்தான் போனன். இன்னம் நான் சோறுகூட திங்கல. பச்சத் தண்ணி பல்லுல படல.”

“நேரத்த வளத்தாத. வண்டியில ஏறு இல்லன்னா கொரோனாவால செத்திடுவ.”

“செத்தாப் போறன் சார்” போலீஸ் என்ற பயம்கூட இல்லாமல் சொன்னாள் ஜெயந்தி.

“பொம்பளயாச்சேன்னு பாக்குறன். இல்லன்னா இவ்வளவு நேரம் பேசிக்கிட்டிருக்க மாட்டன். புரியுதா? ஒழுங்கு மரியாதியா வண்டியில ஏறு” தடிமனான போலீஸ்காரர் எச்சரிக்கை செய்வது மாதிரி சொன்னதும், “இத கேக்குறதுக்கு ஒலகத்திலெ எந்த சாமியும் இல்லியா?” என்று சொல்லி ஜெயந்தி வாய்விட்டு அழுததைப் பார்த்ததும் ஜீவாவுக்கும் அழுகை வந்தது. ஜீவாவின் கண்களைத் துடைத்துவிட முயன்றாள். உடனே இரண்டு போலீஸ்காரர்களும் பாய்ந்துவந்து மறித்துக்கொண்டனர்.

“தொடக் கூடாதும்மா. நீ இப்பத்தான் வந்திருக்க. பையன் வீட்டுல இருந்திருக்கான்.”

“அவன் என் புள்ளெ சார்.”

“கொரோனா வந்த பிறகு பொண்டாட்டிக்கிப் புருசன் வாண்டாம். புருசனுக்குப் பொண்டாட்டி வாண்டாம். தாயிக்கிப் புள்ள வாண்டாம், புள்ளைக்கித் தாயி வேண்டாமின்னு ஆயிப்போச்சி. ஒலகத்தில நடக்கிறத டி.வி.யில பாக்குறியா இல்லியா?” என்று போலீஸ்காரர் கேட்டார்.

கவச உடை போட்டுக்கொண்டிருந்த ஆள், “நேரமாவுது சார்” என்று சொன்னதும் போலீஸ்காரர் “வண்டியில ஏறும்மா” என்று சொன்னார்.

“எம் புருசன வுட்டுட்டு வர முடியாது சார்.”

“நல்ல விதமா சொன்னா கேக்க மாட்ட. கையப் புடிச்சி இழுத்துக்கிட்டுப் போவணுமா?” என்று சொல்லிக் கையைப் பிடித்து இழுத்தார் போலீஸ்காரர். இரண்டு, மூன்று உள்ளூர் ஆட்கள் வந்து போலீஸ்காரரிடம், “அவ புருசனுக்கு ஒடம்பு சரியில்ல சார். ஒரு மாசமா மாத்தர வேற சாப்புடல. மோசமா இருக்கு. எப்ப வேணும்ன்னாலும் உசுரு அடங்கிடும் சார்” என்று ஜெயந்திக்காகப் பரிந்து பேசினார்கள். 

போலீஸ்காரருக்குக் கோபம் வந்துவிட்டது, “எல்லாரும் டி.வி.யப் பாக்குறிங்கதான? நாடு என்னா நெலமயில இருக்கு? ஒலகம் என்னா நெலமயில இருக்குன்னு தெரியும்தான? இந்தம்மா மட்டும் வந்தா ஒரு ஆளோட முடிஞ்சிடும். இன்னிக்கு ஒரு ராத்திரி ஓடிப்போச்சின்னா, நாளக்கிக் காலயில ஊரயே அள்ளிக்கிட்டுப் போயி செக் பண்ணணும். ஆஸ்பத்திரியில தங்க வைக்கணும். இல்லன்னா ஊருக்கே தட உத்தரவு போடுற மாரி ஆயிடும். பரவாயில்லியா?” என்று கேட்டதுதான், ஜெயந்திக்காக, ஐயனாருக்காகப் பரிந்து பேசியவர்கள் எல்லாம் பின்வாங்க ஆரம்பித்தனர். 

கூட்டம் கூடியிருப்பதால்தான் எல்லோரும் அதிகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்த வி.ஏ.ஓ., “எல்லோரும் கலஞ்சிபோங்க. காத்துல பரவுதுன்னு சொல்றாங்க. எல்லோரும் அவுங்கஅவுங்க வீட்டுக்குப் போங்க. இல்லன்னா ஒங்களயும் புடிச்சிக்கிட்டுப்போற மாதிரி ஆயிடும்” என்று சொல்லிச் சத்தம் போட்டார். அவருக்கு உதவி செய்வதுபோலத் தோட்டியும், தலையாரியும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.

ஜெயந்தி தன்னால் முடிந்தவரை கெஞ்சிப்பார்த்தாள். அழுதுபார்த்தாள். தன்னுடைய மாமியார் வந்ததும் தானாக வருவதாகச் சொன்னாள். ஜீவாவைக் காட்டி, அவன் தனியாக இருக்க மாட்டான் என்று சொன்னாள். அவள் சொன்ன எதையும் காதுகொடுத்துக் கேட்கவில்லை. அவள் கையெடுத்துக் கும்பிட்டதையும், காலில் விழுந்து கும்பிட்டதையும் பொருட்படுத்தாமல் போலீஸ்காரர்கள் தாங்கள் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தனர்.

“கலக்டர் உத்தரவு, வண்டியில ஏறு.” 

இனித் தப்பிக்க முடியாது என்று நினைத்த ஜெயந்தி கடைசியாக, “இந்த மாத்தரயக் கொடுத்திட்டு வரன்” என்று சொன்னாள்.

“பையன்கிட்டெ கொடுத்திடு” என்று சொன்னதைக் கேட்காமல் வீட்டுக்குள் போனாள். அவளுக்குப் பின்னால் ஜீவாவும் போனான்.

“ஏங்க.. ஏங்க..” என்று ஜெயந்தி கூப்பிட்டாள். ஐயனாரிடமிருந்து எந்தச் சத்தமுமில்லை. கையைப் பிடித்து ஆட்டிய பிறகுதான் லேசாகக் கண்களைத் திறந்து பார்த்தான். “மாத்தர வாங்கியாந்துருக்கன். கரச்சி வாயில ஊத்தட்டுமா?” என்று கேட்டாள். ஐயனாரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லாததால், “மத்தியானம் சோறு கொடுத்தியா?” என்று ஜீவாவிடம் கேட்டாள்.

“கேட்டன். வாணாமின்னு கைய ஆட்டிட்டாரு.”

“பசி மயக்கத்தில கெடப்பாரு” என்று சொன்ன ஜெயந்தி, அவசரஅவசரமாக ஒரு கைப்பிடி சோற்றைப் போட்டுக் கரைத்துக் கூழாக்கி வாயில் ஊற்றிவிட்டாள். மூன்று மாத்திரைகளைத் தண்ணீரில் போட்டு ஊறவைத்து ஐயனாரின் வாயில் ஊற்றினாள்.

கோழிக்கு அள்ளிப்போடுவதுபோல் நான்கு ஐந்து வாய் சோற்றைத் தன்னுடைய வாயில் அள்ளிப்போட்டுக்கொண்டாள். தண்ணீர் குடிக்கும்போது, “வெளிய வர்றியா இல்லியா?” என்று போலீஸ்காரர்கள் கத்துவது கேட்டது.

“ராத்திரிக்கு சோறு கொடுக்கணும். மாத்தர கொடுக்கணும்.”

“சரி” என்று ஜீவா சொன்னான். 

“கோயம்பேட்டிலிருந்து வந்த லாரியில ஏறி வந்ததால, என்னெ செக்கப்பு பண்ணனும்னு போலீஸ் வந்து கூப்புடுது. வண்டி வந்து வாசல்ல நிக்குது. போயிட்டு வந்திடுறன். ஒங்கம்மாவுக்கு போன்போட்டன். எடுக்கல. எப்ப வருதின்னு தெரியல. பஸ், காருன்னு எதுவுமில்ல. எப்பிடி நடந்து வருதோ தெரியல. ரோட்டுல நடந்து வரதுக்கே போலீஸ் வுட மாட்டங்குது. வந்தா பேசச் சொல்லு. முடிஞ்சா போன வேகத்தில வந்திடுறன். தம்பி இருக்கான். பாத்துக்குவான். வரட்டா?” என்று கேட்டாள். ஐயனார் எதுவும் சொல்லாததால், “தம்பி அப்பாவப் பாத்துக்க” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே கவச உடை அணிந்திருந்த ஆள் வீட்டுக்குள் வந்து, “சொன்னா புரியாதா? வாம்மா வெளிய” என்று சொல்லி கத்தினான். பிறகு “மாத்து சேல எடுத்துக்க” என்று சொன்னான்.

“எதுக்கு?”

“தேவப்படும். வா வெளிய.”

ஒரு சீலை, சட்டையென்று எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள். அவளுக்குப் பின்னால் ஜீவாவும் வந்தான்.

ஜெயந்தி வீட்டுக்குள் சென்று பத்து நிமிடத்துக்கு மேல் இருந்தாள் என்ற காரணத்துக்காக அவளுடைய வீட்டைத் தனிமைப்படுத்த சொன்னார் வி.ஏ.ஓ. வீட்டைத் தனிமைப்படுத்துவதற்காகத் தோட்டியும், தலையாரியும் பத்து, இருபது கட்டைகளைக் கொண்டுவந்து போட்டுத் தடுப்புக் கட்ட ஆரம்பித்திருந்ததைப் பார்த்ததும் ஜெயந்தியும் ஜீவாவும் குழம்பிப்போனார்கள். என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குக்கூட விடாமல், கவச உடை அணிந்திருந்த ஆள் ஜெயந்தியின் கையைப் பிடித்துக்கொண்டுபோய் ஆம்புலன்ஸில் ஏற்றினான். “பத்திரமா இருப்பா. அப்பாவ பாத்துக்க” என்று ஜெயந்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே கதவை மூடிவிட்டார்கள். கவச உடை அணிந்திருந்த ஆள் வண்டியில் ஏறியதும் ஆம்புலன்ஸ் புறப்பட்டுவிட்டது. போலீஸ்காரர்கள் வி.ஏ.ஓ.விடமும், தோட்டி, தலையாரிடமும் ஏதோ ரகசியமாகச் சொல்லிவிட்டு போனார்கள்.

“அந்தம்மாவுக்கு கொரோனா பாதிப்பு இருக்கா, இல்லியான்னு தெரியுறவரைக்கும் யாரும் இந்த வீட்டுக்குள்ளார போகக் கூடாது. அந்தம்மா பையன்கிட்டயும், புருசன்கிட்டயும் யாரும் போவக் கூடாது. ரெண்டு பேருக்கும் தொத்தி இருக்கலாம். மீறிப் போனா அவங்களயும் போலீஸ வச்சி அழச்சிக்கிட்டுப் போற மாரி இருக்கும்” என்று அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்தவர்களிடம் வி.ஏ.ஓ. கடுமையான குரலில் எச்சரிக்கை செய்தார். அவர் சொன்ன விதம் வெடிமருந்து கிடங்குக்குள் போய்விடாதீர்கள் என்பதுபோல் இருந்தது. பிறகு மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு போனார். 

கூட்டம் கலைய ஆரம்பித்தது. தோட்டியும், தலையாரியும் தடுப்புக் கட்டையைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். பிள்ளைகள் மட்டுமே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ஜீவாவும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

வீட்டை அடைத்த மாதிரி மூன்று பக்கமும் தடுப்புக் கட்டைகளைக் கட்டி முடித்த தோட்டியும் தலையாரியும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பிள்ளைகளிடம், “இது கொரோனா புடிச்ச வீடு. இங்க யாரும் நிக்கக் கூடாது” என்று சொல்லி பயமுறுத்திவிட்டுப் போனார்கள். வேடிக்கை பார்ப்பதற்குப் புதிதாக எதுவும் இல்லாததால் பிள்ளைகளும் ஒவ்வொருவராகத் தங்களுடைய வீட்டுக்குப் போக ஆரம்பித்தனர். 

ஜீவா மட்டும்தான் நின்றுகொண்டிருந்தான். மூன்று பக்கமும் கட்டியிருந்த தடுப்புக் கட்டைகளைப் பார்த்தான். அப்போது அவனுக்கு ஐயனார் கூப்பிடுவதுபோல் தோன்றியது. வேகமாக வீட்டுக்குள் ஓடினான்.

ஐயனார் படுத்துக்கொண்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் போய் நின்றுகொண்டு “எதுனா வேணுமா?” என்று கேட்டான். பதிலில்லாததால், “தண்ணி வேணுமா?” என்று கேட்டான். அடுத்த கேள்வியாக, “சோறு வேணுமா?” என்று கேட்டான். ஐயனார் எதுவும் பேசாததால் தூங்கிக்கொண்டிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான். இருட்டிவிட்டது மாதிரி இருக்கவே விளக்கையும் போட்டான். டி.வி.யைப் போட்டான். 

“அம்மா எங்கடா?” என்று ஐயனார் கேட்டதுபோல் அவனுக்குத் தோன்றியது.

“அம்மாவ கொரோனாக்காரங்க புடிச்சிக்கிட்டுப் போயிட்டாங்க. நம்ப வீட்ட சுத்தி தடுப்புக் கட்ட கட்டிட்டாங்க. நம்ப வீட்ட எல்லோரும் ‘கொரோனா புடிச்ச வீடு’ன்னு சொல்றாங்கப்பா. ஆயா இன்னம் வல்லெ” என்று தானாகவே சொன்னான். ஐயனார் எதுவும் பேசாததால், “மாத்தர போட்டதால தூக்கமா வருதா?” என்று கேட்டான். பக்கத்தில் போய் நின்றுகொண்டு “ஒண்ணுக்குப் போவணுமா? கக்கூஸ் போவணுமா? பசிக்குதின்னா சோறு எடுத்துத் தரன். ஆயா ஆக்கிவச்சிட்டுப் போயிருக்கு” என்று சொன்னான். அதற்கும் ஐயனார் பதில் சொல்லாததால் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ரகசியம்போல “அப்பா” என்று கூப்பிட்டான். இதற்கு முன் இந்த மாதிரி எந்தக் கேள்விக்கும் ஐயனார் பதில் சொல்லாமல் இருந்ததில்லை. கையை அசைத்துப்பார்த்தான். காலை அசைத்துப்பார்த்தான். கன்னத்தில், தலையில் லேசாகத் தட்டிப்பார்த்தான். தூங்குகிற குழந்தையை எழுப்புவதுபோல் மீண்டும் கை காலை அசைத்துப்பார்த்தான். ஐயனாரிடமிருந்து எந்த அசைவும் இல்லை. மூக்கில் கை வைத்துப்பார்த்தான். மூச்சுக் காற்று வரவில்லை. 

பயத்தில் அவனுக்கு நடுங்க ஆரம்பித்தது. அடுப்பில் வைத்த வாணலி மாதிரி அவனுக்கு வாய் உலர்ந்துபோயிருந்தது. 

மெலிந்து எலும்பும் தோலுமாக, கருத்துப்போயிருந்த ஐயனாரின் உடலையே பார்த்துக்கொண்டிருந்தான். கண்களும் வாயும் திறந்தபடியே இருந்தன. திறந்திருந்த ஐயனாரின் வாயையே பார்த்துக்கொண்டிருந்தான். டி.வி.யில் விளம்பரம் ஓடுகிற சத்தம் கேட்டதும்தான் ஐயனாரின் உடலிலிருந்து பார்வையைத் திருப்பினான். வேகமாக நடந்தால் பெரிய ஆபத்து வந்துவிடும் என்பதுபோல் சத்தம் எழுப்பாமல் வெளியே வந்தான். வாசலுக்கு முன் கட்டியிருந்த தடுப்புக் கட்டையைப் பிடித்தபடி தன்னுடைய ஆயா வருகிறாளா, அம்மா வருகிறாளா என்று பார்த்தான்.

மளிகைக் கடைக்குப் போய்விட்டு வந்த கௌதமி, தடுப்புக் கட்டையை ஒட்டித் தனியாக நின்றுகொண்டிருந்த ஜீவாவைப் பார்த்துவிட்டு “என்னடா?” என்று கேட்டாள். “என்னடா?” என்று அவள் கேட்டதும்தான் ஜீவாவுக்கு அழுகை வந்தது. அவன் அழுவதைப் பார்த்து மிரண்டுபோன கௌதமி, “ஏன்டா அழுவுற?” என்று கேட்டாள். “எங்கப்பா செத்திட்டாரு” என்று சொல்லிவிட்டு, அழுத ஜீவாவைப் பார்த்து பயந்துபோய் ஒரே ஓட்டமாகத் தன்னுடைய வீட்டுக்கு ஓடிவிட்டாள். ஜீவா தடுப்புக் கட்டை ஒன்றில் லேசாகத் தலையைச் சாய்த்துக்கொண்டு விம்மினான். சிறிது நேரத்தில் கௌதமியும், அவனுடைய அம்மா கிருஷ்ணவேணியும் வந்தார்கள்.

“என்னடா ஆச்சி?” என்று கிருஷ்ணவேணி கேட்டாள்.

“எங்கப்பா செத்திட்டாரு.”

“எப்பிடிடா சொல்ற?”

“பேசல. கை காலு அசயல” என்று ஜீவா சொன்னதைக் கேட்ட கிருஷ்ணவேணி, “அழுவாம இருடா வரன்” என்று சொல்லிவிட்டு வேகமாக ஓடினாள். அவளோடு கௌதமியும் ஓடினாள்.

தெருவிலிருந்த சனங்களையெல்லாம் அழைத்துக்கொண்டு வந்தாள் கிருஷ்ணவேணி. ஆண், பெண் என்று இருபது, முப்பது பேர் இருப்பார்கள். பிள்ளைகள் என்று பத்து, இருபது பேர் இருப்பார்கள். பெரியவர்களாக இருந்த எல்லோருமே போட்டி வைத்தது மாதிரி கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார்கள்.

“செத்திட்டாருன்னு எப்பிடிடா சொல்ற?”

“பேசல. கை காலு அசையல” என்று ஜீவா சொன்னபோது கூட்டத்திலிருந்த ஒரு பெண், “ஐயோ கடவுளே” என்று சொன்னாள்.

“நீ எப்ப பாத்த?”

“தடுப்புக் கட்ட கட்டிட்டுப் போனாங்கில்ல. அப்பதான் போய்ப் பாத்தன்.”

“ஒங்க அம்மாவுக்கு, ஒங்க ஆயாவுக்குத் தெரியுமா?”

“தெரியாது.”

“ஒங்க ஆயா எங்க?”

“எங்க அத்த ஊருக்குப் போயிருக்கு.”

“ஒங்கிட்ட போன் இருக்கா?”

“இல்லெ.“

“ஒங்கம்மா நெம்பர சொல்லு” என்று ஒரு ஆள் கேட்டார். “ஒங்காயா நெம்பர சொல்லு” என்று மற்றொரு ஆள் கேட்டார். ஜீவா தன்னுடைய அம்மாவின் போன் எண்களையும், ஆயா திருமேனியின் போன் எண்களையும் சொன்னான். கூட்டத்தில் இருந்தவர்கள் கேள்வி கேட்கக்கேட்கத்தான் அவனுக்கு அழுகை அதிகமாக வந்தது.

கூட்டத்திலிருந்த பல பேரும் ஜெயந்திக்கும், திருமேனிக்கும் போன் போட்டார்கள். இருவரின் செல்போன்களுமே அணைத்துவைக்கப்பட்டிருக்கின்றன என்று சொல்லிச் சலித்துக்கொண்டார்கள். ஒரு ஆள் “ஒங்கத்த நெம்பரு தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாது” என்று ஜீவா சொன்னான்.

கூட்டத்திலிருந்த ஆண்கள், பெண்கள் என்று எல்லோருமே திரும்பத்திரும்ப திருமேனிக்கும் ஜெயந்திக்கும் போன் போட்டுக்கொண்டே இருந்தார்கள். ஐயனார் இறந்துவிட்ட செய்தி ஊர் முழுவதும் பரவி, ஊர்ச்சனமே தடுப்புக் கட்டையின் முன் கூடிவிட்டார்கள். ஆனால், சத்தியம் செய்துவிட்டதுபோல் ஒரு ஆள்கூட தடுப்புக் கட்டைக்குள் போகவில்லை. வீட்டுக்குள் போனால் கொரோனா ஒட்டிக்கொள்ளுமோ என்ற அச்சம் அந்த இடத்தில் இருந்த எல்லோருக்குமே இருந்தது. பட்டியில் விடப்பட்ட ஆட்டுக்குட்டி மாதிரி தடுப்புக் கட்டைக்கு உள்ளே ஜீவா மட்டும் தனியாக நின்றுகொண்டிருந்தான். காட்சிக்குரியப் பொருளைப் பார்ப்பதுபோல் அவனைக் கூட்டம் பார்த்துக்கொண்டிருந்தது.

ஜீவா சொன்னதை நம்பாமல் காலேஜில் படித்துக்கொண்டிருந்த அருண்குமார் ஐயனார் செத்துவிட்டானா, இல்லையா என்று பார்ப்பதற்காகத் தடுப்பு கட்டைக்குள் நுழைந்தான். “போவாத, போவாத” என்று மொத்த கூட்டமும் தடுத்துப்பார்த்தது. யாருடைய பேச்சையும் கேட்காமல் ஒரே ஓட்டமாக வீட்டுக்குள் ஓடினான். இரண்டு மூன்று நிமிஷம் கழித்து வந்து, “செத்திட்டாருதான்” என்று சொன்னான்.

“தோட்டிக்கி போன்போடு, தலயாரிக்கு போன்போடு” என்று கூட்டத்திலிருந்த பலரும் சொன்னார்கள். பலரும் போன்போடவும் செய்தார்கள். “ஸ்விட்ச் ஆப்பாயி இருக்கு” என்று சொன்னார்கள். தோட்டி வீட்டுக்கும் தலையாரி வீட்டுக்கும் ஆள் அனுப்பினார்கள். சிறிது நேரத்தில் மோட்டார் பைக்கில் தோட்டியும் தலையாரியும் வந்தார்கள். 

“இந்த வீட்டுக்கிட்டெ யாரும் நிக்கக் கூடாது. பெரிய வம்பாயிடும். கூட்டம் கலஞ்சி போங்க. நாங்க பாத்துக்கிறம். ஆபத்தான வீடு. ஆபத்த வெல கொடுத்து வாங்காதிங்க” என்று சொல்லி எல்லோரையும் துரத்திவிட்டார்கள். 

“சோறு வேணுமாடா?” கிருஷ்ணவேணி கேட்டாள்.

“...”

 “என்னா வேணும் சொல்லுடா?”

“எங்கப்பா செத்திட்டாரு.”

ஜீவா அழுதுகொண்டிருப்பதையும், “எங்கப்பா செத்திட்டார்” என்று கிருஷ்ணவேணியிடம் சொன்னதையும் அருண்குமார் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தான். அதைப் பார்த்த தலையாரி, “அழுவுற பயல ஏன்டா படம் எடுக்கிற?” என்று கோபத்துடன் கேட்டார்.

“வாட்ஸ் ஆப்பில போடப்போறன்” என்று அருண்குமார் சொன்னதும் அவனைத் திட்டி அனுப்பினார் தோட்டி. கிருஷ்ணவேணியை நிற்கவிடாமல் தோட்டியும் தலையாரியும் துரத்திவிட்டனர். ஒதுங்கி நின்றுகொண்டிருந்தவர்களையும், “கொரானா புடிச்சிக்கும் போங்க” என்று சொல்லி விரட்டியடித்தனர். அவர்கள் பேசிய விதமும், சனங்களை விரட்டிய விதமும் எரிந்துகொண்டிருக்கிற வீட்டுக்குள் போகாதீர்கள் என்று தடுப்பதுபோல் இருந்தது. 

கூட்டம் குறைய ஆரம்பித்ததும் தோட்டியும் தலையாரியும் மோட்டார் பைக்கில் கிளம்பி விட்டார்கள். ஜீவா மட்டும்தான் இருட்டில் நின்றுகொண்டிருந்தான். அவனைச் சுற்றி இருட்டு மட்டும்தான் நிறைந்திருந்தது. தன்னுடைய ஆயா வருகிறாளா, அம்மா வருகிறாளா என்று பார்த்தான். மூன்று பக்கமும் கட்டியிருந்த தடுப்புக் கட்டையைப் பார்த்தான். அப்போது அவனுக்கு, “யே தம்பி” என்று ஐயனார் கூப்பிட்டதுபோல் இருந்தது. மெதுவாக வீட்டுக்குள் வந்தான்.

“அப்பா” என்று லேசான குரலில் கூப்பிட்டான். எந்தப் பதிலும் இல்லை. வாய் அசைகிறதா, கண்கள் அசைகிறதா என்று பார்த்தான். எதுவுமில்லை. இடுப்பிலிருந்து நழுவிக்கிடந்த கைலியைச் சரிசெய்தான். விலகிக் கிடந்த கைகளையும், கால்களையும் சேர்த்துவைத்தான். கொடியில் கிடந்த ஜெயந்தியின் புடவை ஒன்றை எடுத்துத் தூங்குகிற ஆளுக்குப் போர்த்திவிடுவதுபோல் ஐயனாரின் உடலில் போர்த்திவிட்டான். புடவைக்கு வெளியே கைகள், கால்கள் தெரிகின்றனவா என்று பார்த்தான். பிறகு டி.வி.யைப் பார்க்க ஆரம்பித்தான். டி.வி.யைப் பார்த்தப்படியே தூங்கிவிட்டான்.

2

“ஜீவா… ஜீவா…” என்று ஐயனார் கூப்பிடுவதுபோல் இருக்கவே தூக்கம் கலைந்து கண்விழித்துப் பார்த்தான். ஏழு மணி இருக்கும். ஜெயந்தியும், திருமேனியும் இல்லாத நேரத்தில் ஐயனாரை, சிறுநீர் கழிப்பதற்கு அழைத்துக்கொண்டு ஜீவாதான் போவான். கைலியை விலக்கிப் பிடித்துக்கொள்வான். சிறுநீர் முன்னேபின்னே என்று ஒழுகினால் “நேரா நில்லுப்பா” என்று சொல்வான். சில நேரங்களில் ஐயனாரின் உயிர்நிலையைப் பிடித்து சிறுநீர் கழிக்கச் செய்வான். கக்கூஸுக்கு அழைத்துக்கொண்டு போனால், ஐயனார் எழுந்ததும் கக்கூஸில் தண்ணீர் ஊற்றிவிடுவான். அவ்வாறு செய்யும்போதெல்லாம் ஐயனார், “எஞ் சாமிடா நீ” என்று சொல்லிவிட்டு அழுவான்.  எப்போதும் கேட்பதுபோல ஐயனாரிடம், “ஒண்ணுக்குப் போவணுமா, கக்கூஸ் போவணுமா?” என்று ஜீவா கேட்டான். வழக்கம்போல தூக்கி உட்காரவைப்பதற்குப் போனபோதுதான் ஐயனார் நேற்று சாயங்காலமே இறந்துவிட்டது நினைவுக்கு வந்தது, வெளியே வந்தான். அவன் வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்ததுபோல் ஏழெட்டு தொலைக்காட்சிக்காரர்களும், நான்கைந்து பத்திரிகைக்காரர்களும், உள்ளூர் ஆட்கள் பத்து, இருபது பேரும் தடுப்புக் கட்டைக்கு அருகில் வந்தனர். தடுப்புக் கட்டைகளின் வழியாகத் தொலைக்காட்சிக்காரர்கள் மைக்கை நீட்டினார்கள். கேமராமேன்கள் வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். பத்திரிகைக்காரர்கள் ஜீவாவைப் பல கோணங்களில் போட்டோ எடுக்க ஆரம்பித்தனர்.

மைக்கை நீட்டிக்கொண்டிருந்த தொலைக்காட்சிக்காரர்களில் ஒரு ஆள் ஜீவாவிடம் கேட்டார், “ஒங்கப்பா நேத்து சாயங்காலம் செத்திட்டாராமே நிஜமா?”

ஜீவாவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. மிரண்டுபோய் தொலைக்காட்சிக்காரர்களையும், பத்திரிகைக்காரர்களையும், திரண்டிருந்த கூட்டத்தையும்  பார்த்தான். 

“எங்கப்பா செத்திட்டார்னு சொல்லி நீ அழுத வாட்ஸ் ஆப்பில பாத்தம்.”

“...”

“ராத்திரி எங்கிருந்த?”

“வீட்டுல.”

“பொணத்துக் கூடவா?”

“ம்.”

“பொணத்துக்கூட படுத்திருக்க பயமா இல்லியா?”

“...”

“அழுதியா?”

“...”

“ராத்திரி தூங்குனியா?”

“டி.வி. பாத்துக்கிட்டே தூங்கிட்டன்.”

“ராத்திரி சாப்புட்டியா?” 

“இல்லெ.”

“ஒங்க வீட்டுக்கு யாரும் வல்லியா?”

“இல்லெ.”

“ஏன்?”

“கொரோனா புடிச்சிக்கும்னு.”

“இப்ப ஒனக்கு என்னா வேணும்?”

“...”

“ஒனக்கு என்னா வேணும்?”

“...”

“சொல்லு தம்பி” என்று தொலைக்காட்சிக்காரர் திரும்பத்திரும்பக் கேட்டதால் ஜீவா சொன்னான். “எங்கப்பாவப் பொதைக்கணும்.” 

“அப்பிடியே கேமராவப் பாத்து சொல்லு.”

“எங்கப்பாவப் பொதைக்கணும்.”

“...”

“எங்கப்பாவப் பொதைக்கணும்.”

தொலைக்காட்சிக்காரர்கள் தன்னிடம் கேள்வி கேட்பதையும் வீடியோ எடுப்பதையும், பத்திரிகைக்காரர்கள் போட்டோ எடுப்பதையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய ஆயா வந்துவிட்டாளா, அம்மா வந்துவிட்டாளா என்று பார்த்தான். 

“தந்தையின் பிணத்துடன் இரவு முழுவதும் படுத்திருந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஜீவா குறித்து உள்ளூர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது கேட்கலாம்” என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு தொலைக்காட்சிக்காரர்களும் உள்ளூர் ஆட்களிடம் பேட்டி எடுக்க ஆரம்பித்தனர். பேட்டி கொடுப்பதற்காக உள்ளூர்க்காரர்களிடையே கடுமையான போட்டி இருந்தது. 

“ஐயனாரின் பிணத்தை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்க வேண்டும் என்பதும், பிணத்தை உடனடியாக எடுக்காவிட்டால் ஊரில் கொரோனா பரவிவிடும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும் உள்ளூர்வாசிகள் சொன்னதைக் கேட்டோம். ஐயனாரின் பிணத்தை மாவட்ட நிர்வாகம் அடக்கம்செய்யும் என்று நம்புவோம்” என்று சொல்லிப் பேட்டியை முடித்தனர். பிறகு, வி.ஏ.ஓ. தாசில்தார், கலக்டர் என்று ஒவ்வொருவருக்கும் போன் போட்டுக்கொண்டிருந்தனர். 

தலையாரி, தோட்டி, வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தாரோடு, பத்துக்கும் அதிகமான போலீஸும் என்று ஒன்பது மணிக்கு வந்தனர். பிணக்குழி வெட்ட ஏற்பாடு செய்ய முயன்றனர். ஊர் சனமெல்லாம் ஒன்றாகத் திரண்டு வந்து ஊர் சுடுகாட்டில் புதைக்கக் கூடாது என்று தகராறு செய்தனர். ஊரார்களிடம் தாசில்தார் சமாதானம் செய்து பார்த்தார். சமாதானம் எடுபடாததால் சுடுகாட்டுக்குக் கடைசியில் இருக்கும் முள்காட்டில் புதைப்பது என்று முடிவானது. ஐயனாருக்கு சொந்தபந்தம் என்று அதிகமில்லை. வீட்டைத் தவிர சொத்துப்பத்து என்று எதுவுமில்லை. அதனால் அவனுக்காக யாரும் அதிகமாகப் பேசவுமில்லை. ஐயனாருடைய பங்காளி முத்துக்கருப்பன் மட்டும்தான் குழி வெட்டுவதற்குச் சம்மதித்தான். ஆனால், அவனுடன் வருவதற்கு யாரும் சம்மதிக்கவில்லை. குழி வெட்ட ஆட்கள் யாரும் வராததால் ஜே.சி.பி. இயந்திரத்துக்கு ஏற்பாடு செய்தார் தாசில்தார். 

“பொணத்த சீக்கிரம் எடுக்கப்பாருங்க. செத்துப்போனவன் பொண்டாட்டி நேத்து வீட்டுல இருந்துருக்கு. அதனால, செத்துப்போனவனுக்கும் கொரோனா ஒட்டியிருக்கும்” என்று ஊர்க்காரர்கள், தாசில்தாரிடம் தகராறு செய்துகொண்டிருந்தனர். போலீஸ்காரர்கள் “எட்டப் போங்க. ஊருக்கே தொத்திக்கும்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

தூரத்தில் தன்னுடைய ஆயா திருமேனியும் அத்தை சங்கரியும் வருவதைப் பார்த்ததும் ஜீவா அழ ஆரம்பித்தான். தடுப்புக் கட்டைக்குள் நுழைந்துபோவதற்கு முயன்ற திருமேனியையும், சங்கரியையும் பாம்பு இருக்கும் புற்றிடம் போகாதீர்கள் என்பதுபோல் வேகமாக வந்து இரண்டு போலீஸ்காரர்கள் மறித்துக்கொண்டனர். தடுப்புக் கட்டையைத் தாண்டிக்கொண்டு வெளியே வருவதற்கு முயன்ற ஜீவாவையும் விடவில்லை.

“என்னெ வுடுங்கய்யா” என்று சொன்னாள் திருமேனி. 

“உள்ளார போவக் கூடாது. பொணம் வெளிய போன பின்னாலதான் போவலாம்” என்று போலீஸ்காரர் திட்டவட்டமாக சொன்னார்.

“எம் பேரனயாச்சும் வெளிய வுடுங்க.”

“பொணம் போவட்டும்.”

“எம் புள்ள மூஞ்சியப் பாக்க வுடுங்க சாமி.” 

“கொரோனா புடிச்சிக்கும்மா” அக்கறையான குரலில் சொன்னார் போலீஸ்காரர்.

“எம் புள்ளயே செத்திட்டான். இனிமே நான் உசுரோட இருந்து என்னா செய்யப்போறன்?” நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதாள் திருமேனி.

“பொணத்துக்கு வா கட்டு கட்டணும். கை கட்டு, கால் கட்டுன்னு கட்டணும் சாமி. என்னெ வுடுங்க.”

“அதெல்லாம் முடியாதும்மா.”

“நெத்தி காசி வைக்கணும்ங்க.”

“முடியாது.”

“பொணத்துக்கிட்ட நல்ல விளக்க ஏத்தி வைக்கணும்ங்க.”

“எந்த நேரத்தில என்னம்மா பேசிக்கிட்டிருக்க?” போலீஸ்காரர் முகத்தைச் சுளித்தார்.

“எம் புள்ளெ உசுரு அடங்குறப்ப பக்கத்தில இல்லியே. என்னா பாவம் செஞ்சனோ கடவுளே? எம் பேரப்புள்ள ராத்திரி பூராம் எப்பிடிதான் வீட்டுல இருந்துச்சோ” என்று சொல்லி ஜீவாவைப் பார்த்து அழுதாள். பிறகு பக்கத்தில் அழுதுகொண்டிருந்த சங்கரியைப் பார்த்து, “ஒங்கண்ணன் எப்பிடி செத்துப்போயிருக்கான் பாத்தியாடி?” என்று கேட்டு அழுதாள். திருமேனி என்ன கேட்டாள் என்பதை கவனிக்காமல் “ஒம் முகத்தக்கூட இந்தப் பாவியால பாக்க முடியாம போச்சே அண்ணா. எப்பிடித்தான் தனியா செத்து கெடந்தியோ? அநாதப் பொணமா கெடந்திட்டியே” என்று சொல்லி சங்கரி தன்போக்கில் அழுதுகொண்டிருந்தாள். 

“எம் புள்ள செத்த மாரி ஒலகத்தில யாரும் சாவக் கூடாதுடா கடவுளே” என்று சொன்னாள் திருமேனி.

பதினோரு மணி வாக்கில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. வேனிலிருந்து கவச உடை அணிந்திருந்த நான்கு பேர் இறங்கினார்கள். போலீசிடம் பேசினார்கள். தாசில்தாரிடம் பேசினார்கள். வேகமாக வீட்டுக்குள் போனார்கள். பெரிய பாலித்தீன் கவரில் பிணத்தை வைத்துக் கட்டி வாசலுக்குத் தூக்கிக்கொண்டு வந்தபோது சங்கரியும் திருமேனியும் தலையிலேயே அடித்துக்கொண்டு வீறிட்டு அழ ஆரம்பித்தனர்.

“நீர் மால எடுத்தாந்து பொணத்தக் கழுவ வாணாமா?” என்று கேட்டாள் திருமேனி. 

“கொரோனா பொணத்தக் கழுவக் கூடாதும்மா” என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார். 

“எம் மவன் பொணத்த நாங்கதான பொதைக்கணும்? எங்க சாதி முறைப்படித்தான சடங்கு செய்யணும்?”

“இப்ப இது ஒங்க பொணம் இல்ல. கவர்மன்டு பொணம்.”

“என்னாது கவர்மன்டு பொணமா?”

“ஆமாம்மா. கவர்மன்டு பொணத்துக்கு நீங்க சொந்தம் கொண்டாட முடியாது. உசுரோட இருந்தா கொரோனா இருக்கா இல்லியான்ன டெஸ்ட் பண்ணிப்பாத்திருக்கலாம். இப்ப அதுக்கு வழியில்ல. கோயம்பேட்டுலயிருந்து வந்த லாரியில ஏறுனதாலதான் இம்மாம் சிக்கலும். போயி ஒரு ஓரமா ஒக்காரு” என்று திருமேனியிடம் சொன்னார் போலீஸ்காரர்.

கவச உடை அணிந்திருந்த ஆட்களிடம், “கொஞ்சம் இருங்க” என்று சொன்னார் தாசில்தார். கவச உடை அணிந்திருந்தவர்கள் பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றாமல் வாசலிலேயே வைத்தனர். உடனே உள்ளூர்க்காரர்கள் சிலர், “பொணத்த ஒடனே எடுங்க சார். செத்தவனோட பொண்டாட்டி, நேத்து வீட்டுல இருந்துருக்கு. அவன்கூட பேசியிருக்கு. செத்துப்போனவனுக்கும் கொரோனா தொத்தியிருக்கும். ஊர்ல பரவிட்டா பெரிய தொந்தரவா போயிடும் சார்” என்று சொன்னார்கள்.

“செத்தவரோட பொண்டாட்டி வந்துகிட்டிருக்கு. வந்ததும் எடுத்திடலாம்” என்று தாசில்தார் சொன்னதை உள்ளூர்க்காரர்கள் ஏற்காமல் தகராறு செய்ய ஆரம்பித்தனர். உள்ளூர்க்காரன் ஒருவன் இறந்துவிட்டான் என்ற கவலையோ, வருத்தமோ ஒருவரிடமும் இல்லை. ‘ஐயோ பாவம்’ என்று யாரும் சொல்லவில்லை. எப்போது பிணத்தை எடுப்பார்கள் என்ற கவலை மட்டும்தான் எல்லோரிடமும் இருந்தது.

“டி.வி.காரங்க பாத்துக்கிட்டிருக்காங்க. ஊர்ல கலவரமின்னு நியூஸ் போட்டுடுவாங்க” என்று போலீஸிடம் சொல்லிக் கூட்டத்தைக் கலைக்கச் சொன்னார் தாசில்தார்.  போலீஸ்காரர்கள் “இங்க நிக்கக் கூடாது” என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைப்பதற்கு முயன்றனர். அப்போது திருமேனி, “பாழும் ஊரே” என்று சொன்னாள்.

ஒரு மணி வாக்கில் ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. ஆம்புலன்ஸிலிருந்து ஜெயந்தி இறங்கி வருவதைப் பார்த்ததும் திருமேனியும் சங்கரியும், அலறியபடி ஓடினார்கள். இரண்டு போலீஸ் வந்து கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துகொள்ள போகிறவர்களைத் தடுத்து நிறுத்துவது மாதிரி இருவரையும் மறித்துக்கொண்டனர். 

“பக்கத்தில போவக் கூடாது. தொட்டுப் பேசக் கூடாது.”

“பாவிவுளே” என்று சொல்லி அழுதாள் திருமேனி. 

“இப்படி செத்துப்போறதுக்கா மெட்ராசுக்குப் போயி மாத்தரய வாங்கியாந்தன்” என்று சொல்லி முகத்திலும், தலையிலும் அடித்துக்கொண்டு அழுதாள் ஜெயந்தி. அவள் அழுததை ஊரே பார்த்தது. ஆனால், ஒருவர்கூட வந்து, “அழுவாத” என்று சொல்லவில்லை. அக்னிக் குழியிடமிருந்து தள்ளியே நிற்பதுபோல் அவளிடமிருந்து ஊர்சனம் விலகியே இருந்தது.

“முகத்தப் பாக்க வுடுங்க” என்று கேட்டதற்கு ஒரே வார்த்தையாக “முடியாது” என்று போலீஸ்காரர்கள் சொல்லிவிட்டார்கள்.

“பாக்கறதுக்கு வுடாததுக்கு எதுக்குக் கூட்டியாந்தீங்க?” என்று ஜெயந்தி கோபமாகக் கேட்டாள்.

“அதுக்கு கலக்டர் ஆர்டர் இல்லம்மா.”

“செத்த புருஷனோட முகத்தப் பாக்கக் கூடாதுன்னு சொல்றதுதான் கலக்டரோட சட்டமா?” ஆங்காரத்துடன் கேட்டாள். 

“சட்டம் பேசாத” என்று சொல்லி போலீஸ்காரர் முறைத்தார்.

“பொணத்தோட முகத்தப் பாக்கல. தாலி அறுக்கல. பொணத்து மேல ஒரு சொம்பு தண்ணி ஊத்தல. எந் தலயிலயும் தண்ணிய ஊத்திக்கல” என்று சொல்லி போலீஸிடம் ஜெயந்தி தகராறு செய்துகொண்டிருப்பதைப் பார்த்த தாசில்தார் வந்து, “என்னம்மா?” என்று கேட்டார்.

“பொணத்து முகத்த பாக்க வுடுங்க சார்.”

“அது முடியாதும்மா. பேக் பண்ணியாச்சு.”

“தாலி அறுக்கல சார்.”

“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம்.”

“சாவு தீட்டோட நான் ஆஸ்பத்திரிக்கி திரும்பப் போவ முடியாது சார்.”

“கவர்மண்ட் பொணத்துக்குத் தீட்டெல்லாம் கெடயாதும்மா. ஒன்னோட ரத்தம் டெஸ்ட்டுக்குப் போயிருக்கு. அது பாஸிட்டிவா நெகட்டிவான்னு தெரிஞ்ச பின்னாலதான் நீ எதயும் செய்யலாம்” என்று சொன்ன தாசில்தார், “இந்தம்மாவ வேன்ல ஏத்துங்க” என்று அதிகாரத்துடன் சொன்னார். ஜெயந்தியைக் கடைசிவரை பிணத்திடம் விடவில்லை. தடுப்புக் கட்டைக்கு வெளியே இருந்தபடியே மூட்டையாகக் கட்டப்பட்டிருந்த பிணத்தைத் தூரத்திலிருந்தே பார்ப்பதற்கு மட்டும் அனுமதித்தார்கள்.  

கவச உடை அணிந்திருந்த ஆட்களிடம், “பொணத்தத் தூக்குங்க” என்று தாசில்தார் சொன்னார். அப்போது திருமேனி, “பொணத்துக்குக் கொள்ளி வைக்கல சார்” என்று சொன்னாள்.

“கவர்மண்ட் பொணத்துக்குக் கொள்ளியெல்லாம் வைக்க முடியாது. கொஞ்சம் தள்ளி நின்னு பேசு” என்று சொல்லி முறைத்தார்.

கவச உடை அணிந்திருந்தவர்கள் பிணத்தை வேனில் ஏற்றியதையும் வேன் சுடுகாட்டை நோக்கிப் போவதையும் தொலைக்காட்சிக்காரர்கள் வீடியோ எடுத்தனர். திருமேனி, சங்கரி, ஜீவா, ஜெயந்தி அழுவதையும் வீடியோ எடுத்தனர். பிறகு சுடுகாட்டை நோக்கி ஓட ஆரம்பித்தனர்.

“வேன்ல ஏறும்மா” என்று ஒரு போலீஸ்காரர் சொன்னார்.

“எம் மவன பாக்கணும் சார். தடுப்புக் கட்டக்குள்ளாரியே எப்பிடி வதங்கிப்போயி தனியா நிக்குறான் பாருங்க.”

“...”

“எம் மாமியாக்கிட்ட பொணக்குழியில மேட்டுல பாலு ஊத்தச் சொல்லிட்டு வரன்.”

“இருக்கிறவங்க பாத்துக்குவாங்க. நீ வண்டியில ஏறு.” 

“ஒரு சொம்பு தண்ணியக் கொண்டார சொல்லி அதுல தாலியக் கழட்டிப் போட்டுட்டு வரன் சார்.”

“அதுக்கெல்லாம் பர்மிஷன் இல்லெ. இது தொத்து நோவும்மா. பக்கத்தில நின்னாலே தொத்திக்கும். நேத்து நீ வீட்டுக்குள்ளார போனதாலதான் ஒம் புருசன் பொணத்துக்கிட்ட யாரயும் போவ விடல தெரியுமா? வண்டியில ஏறு” என்று சொன்னார். “முடியாது” என்று சொன்ன ஜெயந்தியைக் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய் ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். அடுத்த நொடி ஆம்புலன்ஸ் புறப்பட்டுவிட்டது. ஆம்புலன்ஸ் சென்ற திசையை வெறித்தவாறு நின்றுகொண்டிருந்தான் ஜீவா. அவனுடைய கண்களில் கண்ணீர் நிறைந்தது.

பிணம் சுடுகாட்டுக்குப் போன பிறகு ஒரு மணி நேரம் கழித்து கிருமிநாசினி தெளிப்பதற்கான வண்டி வந்தது. ஐயனார் வீட்டைச் சுற்றி தெளித்ததோடு, அந்தத் தெரு முழுவதுமே கிருமிநாசினியைத் தெளித்தது. தோட்டி, தலையாரி, வி.ஏ.ஓ., தாசில்தார், போலீஸ் என்று எல்லோரும் போன பிறகுதான் திருமேனி, ஜீவாவைக் கவனித்தாள். அவனுக்கு ‘மொட்ட போடணுமே’ என்று நினைத்தாள். ஜீவாவுக்கு மொட்டை போடுவதற்கு ஆட்களைக் கூப்பிட்டுப்பார்த்தாள். ஒரு ஆள்கூட வரவில்லை. மொட்டை போடுவதற்கு வராததோடு, பக்கத்தில் நின்று பேசுவதற்குக்கூட பயந்தார்கள். பேசும்போதுகூட கரண்ட் கம்பிக்குப் பக்கத்தில் போகக் கூடாது என்பதுபோல் தள்ளி நின்றே பேசினார்கள். 

“இப்படியாப்பட்ட ஊரிலியா இத்தன வருசமா குடியிருந்தன்? சொந்த ஊரும் எதிரியாயிடிச்சி. சொந்த சனங்களும் எதிரியாயிடிச்சி. பெத்த மவன் பொணத்தத் தொடக்கூட முடியாமப்போயிடிச்சே. நான் பாவிதான்” என்று சொல்லி புலம்பிக்கொண்டே நடந்துசென்று கடையில் பிளேடு வாங்கிக்கொண்டு வந்தாள். வீட்டைக் கழுவிக்கொண்டிருந்த சங்கரியைக் கூப்பிட்டு ஒரு சொம்பு தண்ணீர் கொண்டுவரச் சொன்னாள். ஜீவாவை வீட்டு வாசல் முன் உட்கார வைத்தாள். சங்கரி கொடுத்த சொம்பு தண்ணீரில் ஒரு கை அள்ளி ஜீவாவின் தலையில் தெளித்தாள். முடியை மழிக்க ஆரம்பித்தாள் திருமேனி.


அந்திமழை மாத இதழ்
அக்டோபர் 2021