செவ்வாய், 21 அக்டோபர், 2014


இது என்னுடைய புதிய சிறுகதைத் தொகுப்பு - சாவு சோறு
வெளியீடு - க்ரியா பதிப்பகம் - அக்டோபர் 2014.

திங்கள், 13 அக்டோபர், 2014

பரிசு
வீட்டுக்குப் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளைத் தள்ளிக்கொண்டு வாசலுக்கு வந்தார் ராமசாமி. அப்போது திண்ணையில் உட்கார்ந்திருந்த வள்ளுவன் எழுந்து வந்து மூன்றாவது வீட்டைப் பார்த்தான். தவமணி கண்ணில் படவில்லை. நாளக்கி ரெண்டாவது புள்ளெ மோனிசாவுக்குப் பொறந்த நாளுஎன்று யாருக்கோ சொல்வது மாதிரி மெதுவாகச் சொன்னான். அவன் சொன்னதைக் காதில் வாங்காத மாதிரி சைக்கிளைத் தள்ளிக்கொண்டு நடந்தார் ராமசாமி.
துணி எடுக்கணும். கேக்குக்கு ஆர்டர் கொடுக்கணும்என்று முன்பை விடக் கொஞ்சம் வேகமாக வள்ளுவன் சொன்னான். சைக்கிள் தள்ளுவதை நிறுத்திவிட்டுத் தவமணி வீட்டுப் பக்கம் ராமசாமி பார்த்தார். தவமணி இருப்பதற்கான அடையாளம் இல்லை. நிற்பதா போவதா என்று தெரியாமல் குழப்பத்தில் நின்றுகொண்டிருந்தார். வள்ளுவன் ஒன்றும் சொல்லாமல் நிற்கவே ராமசாமி மீண்டும் சைக்கிளை இரண்டு தப்படி தள்ளினார்.
ஒண்ணும் சொல்லாமப் போனா என்னா அர்த்தம்?”
என்னா சொல்லணும்?” வள்ளுவன் மாதிரியே ராமசாமியும் எங்கோ பார்த்தபடி கேட்டார்.
புள்ளைக்கித் துணி எடுக்கணும். கேக்குக்கு ஆர்டர் கொடுக்கணும்.
செய்யி.
பணம்?”
எங்கிட்டெ இல்லெ.
பணமில்லன்னா துணியும், கேக்கும் எப்பிடி வரும்?”
“-----”
பேசாம இருந்தா என்னா அர்த்தம்? புள்ளையோட பொறந்த நாளுன்னு தெரியாதா?”
புள்ளையப் பெத்தவன் நீ. செய்யி. எங்கிட்டெ எதுக்கு சொல்ற?”
புரிஞ்சிதான் பேசுறியா?”
பன்னண்டு மணி கரண்டு. நான் காட்டுக்குப் போயி மோட்டாரு போட்டுத் தண்ணி எறைக்கணும்என்று சொல்லிவிட்டு ராமசாமி சைக்கிளை நகர்த்தினார். அவரை ஒரு மாதிரியாகப் பார்த்தான் வள்ளுவன்.
வள்ளுவனும் ராமசாமியும் நேருக்கு நேர் பேசி ஆறு வருடமாகிறது.  வனஜாவைத்தான் கட்டுவேன் என்று அவன் அடம்பிடித்ததிலிருந்து இருவருக்கும் பேச்சு வார்த்தை நின்றுவிட்டது. அதற்குப் பிறகு இருவரும் இன்றுதான் பேசியிருக்கின்றனர். அதுவும் நிறைய வார்த்தைகளை.
ஒங்கையில காசு இருக்குன்னுதான போற? போ. நேத்து ஒனக்கு பென்சன் வந்திருக்குமின்னு எனக்குத் தெரியாதா?”
சைக்கிளை நிறுத்தினார் ராமசாமி. வீட்டுப் பக்கம் பார்த்து சொன்னார் வந்தா ஒங்கிட்டெ கொடுத்திடணுமா?”
பின்னெ? யாருக்குக் கொடுக்கப்போற?”
யாருக்கோ.
பணத்த யாருக்கோ கொடுக்கிறதுக்கு என்னெ எதுக்குப் பெத்த?” என்று சொல்லும்போதே வள்ளுவனுக்குக் குரல் உடைந்துபோயிற்று.
பெரிய தப்புத்தான். தெரியாம செஞ்சிப்புட்டன்என்று நிதானமாகச் சொன்னார் ராமசாமி. அப்போது வீட்டிற்குள்ளிருந்த வனஜா கத்துவது தெளிவாகக் கேட்டது.
சந்தோசமா இருக்கத் தெரியாத மனுசன்கிட்டெ என்னா பேச்சு? பணத்த வச்சிக்கிட்டு சாவட்டும். அந்தப் பீத்த பணத்த நம்பியா நான் புள்ளை பெத்தன்? நல்ல சோறு திங்காம, நல்ல துணி கட்டாம கல்யாண நாளு, பொறந்த நாளுன்னு கொண்டாடாம கோயில், திருவிழான்னு போவாம காடுகாடுன்னு அலயுற நாயிவுளுக்கு என்னா தெரியும்? உலகம் எப்பிடி இருக்குன்னு தெரியுமா? பணமிருந்தா மட்டும் போதுமா, சந்தோசமா இருக்கத் தெரிய வாணாம்? பெத்தப் புள்ளைக்கி, பேரப் புள்ளைக்கி இல்லாத பணம் எதுக்கு? சுடுகாட்டுக்குப் போகவா? பேங்குல இருக்கிற பணம் சோறு போடுமா? புத்தி இருக்க வாணாம்? மனுசனா இருந்தா எல்லாம் தெரியும். புருசன் பொண்டாட்டி சிரிச்சி பேசுனாலே புடிக்காது. அப்பறம் எங்க பேரப் புள்ளை சிரிக்கிறது புடிக்கும்?” ராமசாமியினுடைய கண்களின் நிறமும், முகத்தின் நிறமும் மாறிவிட்டன. தூக்க முடியாத பாரத்தைத் தூக்கிக்கொண்டு நிற்பது மாதிரி நின்றுகொண்டிருந்தார். அதைப் பார்த்த வள்ளுவன் வேகமாக வீட்டிற்குள் சென்று ஏதோ வனஜாவிடம் சொன்னான். சீ போ. எட்டெஎன்று வனஜா சொன்னது வாசல்வரை கேட்டது. முகத்தைத் தொங்க போட்டுக்கொண்டு வெளியே வந்தான் வள்ளுவன்.
ராமசாமி இயல்பாக சைக்கிளை நகர்த்தினார். பணம் கொடுக்காமப் போறல்ல. போ. ஒம் பணம் இல்லன்னா செத்திடுவன்னு மட்டும் எண்ணாதஎன்று வீம்பாகச் சொன்னாலும் அழுதுவிடுவது மாதிரி இருந்தான். அவனுடைய தோற்றத்தைப் பார்த்ததும் ராமசாமிக்கு மனசு மாறிவிட்டது. சைக்கிளை நிறுத்தி ஸ்டேண்டு போட்டார்.
நீ கல்யாணம் கட்டிக்கிட்டு வந்த நாளயிலிருந்து ஒம் பொண்டாட்டி பொறந்த நாளுக்கு, கல்யாண நாளுக்கு நான் பணம் தரல? புள்ளைங்க பொறந்த நாளக்கி நான் செலவு பண்ணல?”
எல்லாம் நீதான் செய்யுற? அப்பறம் ஏன் இன்னிக்கி இல்லங்கிற?”
நேத்து மாசி மகத்தில ஒங்கம்மாவுக்கு அரிசி கொடுக்க வான்னு கூப்புட்டன். நீ வல்லெ. பெத்த தாயிக்கு வருசத்தில ஒரு நாளு ஒன்னால மெனக்கிட முடியல. இதெவிட ஒலகத்தில வேற என்னா வேல ஒனக்கு? நீதான் வல்லெ. ஒம் பொண்டாட்டியாச்சும் வரணுமில்ல. புதுப்பட சி.டி. வாங்கப் போயிட்ட.
ஓகோ. அதனாலதான் பணம் இல்லங்கிறியா?”
பெத்த தாயிக்கு ஒரு நாளு மெனக்கிட முடியல ஒனக்கு. அப்பறம் நான் ஏன் ஒனக்குப் பணம் தரணும்? ஒனக்குச் சினிமாதான் முக்கியம்.
செத்துப்போன ஒம் பொண்டாட்டிதான் ஒனக்கு முக்கியம். எம் புள்ளை முக்கியமில்ல.
எம் பொண்டாட்டியா?” முனகலாக ராமசாமி கோட்டார். வள்ளுவனையே வெறித்துப் பார்த்தார். லேசாக அவருடைய உடம்பு நடுங்கியது.  உடம்பிலிருந்த சத்தெல்லாம் ஆவியாகிவிட்டது மாதிரி இருந்தது. அடுத்த வார்த்தை பேசக்கூட அவருக்கு உடம்பில் தெம்பில்லை. அப்போது கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துகொண்டு வந்த தவமணி ராமசாமியையும் வள்ளுவனையும் பார்த்தாள். பார்த்த மாத்திரத்திலேயே ஏதாவது பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தாள். வேகமாகப் போய்க் குடத்தை வீட்டிற்குள் வைத்துவிட்டு வந்தாள்.
செத்துப்போன ஒம் பொண்டாட்டிக்கி மகத்தில அரிசி கொடுக்க நேத்து வல்லன்னுதான இன்னிக்கி எம் புள்ளை பொறந்த நாளுக்குப் பணம் தர மாட்டங்கிற?” என்று வள்ளுவன் வேகத்தோடு சொன்னான். அப்போது வீட்டிற்குள்ளிருந்த வனஜா வாழத் தெரியாத ஜென்மம் எல்லாம் எதுக்குத்தான் உசுரோட இருக்குதுவுளோ?” என்று சொன்னாள். 
எனக்கும் எம் புள்ளைங்களுக்கும் இல்லாத பணம் எதுக்கு? நான் ஒனக்குத்தான் பொறந்தனான்னு தெரியலஎன்று சொன்னதும் வள்ளுவனை வெறித்துப் பார்த்தார். ஒரு பேச்சு இல்லை. பெருமூச்சு இல்லை.  நாக்கு இல்லாதது மாதிரி மட்டுமல்ல, தன்னுணர்வும் இல்லாத மாதிரி நின்றுகொண்டிருந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். எதுவும் தெரியவில்லை. இருட்டாகிவிட்டது மாதிரி இருந்தது.
என்னடா தம்பி பேசுற?” என்று கேட்டாள் தவமணி.
அக்கான்னு பாக்க மாட்டான். அசிங்கப்பட்டு போயிடுவ. போ எட்டெ.
அதிர்ந்துபோன தவமணியால் தம்பிஎன்ற வார்த்தையைத் தவிர்த்து அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.
தம்பியும்ல்லெ. கொம்பியுமில்லெ. போ எட்டெ.வள்ளுவன் கத்தினான்.
முப்பது வருசத்தில் அக்கா’  என்ற வார்த்தை தவிர்த்து வேறு வார்த்தை பேசியவனில்லை. முகத்தை முறித்துப் பேசியவனில்லை. எதனால் இன்று தூக்கியெறிந்து பேசுகிறான்? தவமணிக்கு ஒன்றும் பேச முடியவில்லை.  கூனிக்குறுகிப்போய் நின்றுகொண்டிருந்த ராமசாமியைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. அப்பாவப் பாத்து என்னா வாத்தடா கேட்ட?” என்று கேட்டாள். அதற்கு வள்ளுவன் பதில் சொல்லவில்லை. முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டான்.
வீணாப்போன அந்தப் பணமும் சரி, எஞ்செருப்பும் சரி. எதுக்குத் தெருவுல நின்னு ஊராங்ககிட்டெ பேசிக்கிட்டு நிக்குற? வா, வீட்டுக்குள்ளாரஎன்று வனஜா வள்ளுவனைக் கூப்பிட்டாள். 
நாங்க ஊராங்களா வனஜா?” வீட்டிற்குள்ளிருந்த வனஜாவிடம் கேட்டாள் தவமணி.
ஊருக்குப் பெரிய பஞ்சாயத்து வந்துட்டீங்கல்ல. அப்பறம் என்னா கொறச்சலு?” என்று வனஜா சொன்னது தெளிவாகக் கேட்டது. தவமணியினுடைய முகம் தொங்கிப்போயிற்று. ராமசாமியைப் பார்த்தாள். அவருடைய முகம் ஏற்கெனவே செத்துப்போயிருந்தது. சட்டென்று கோபம் வந்துவிட்டது. ஆளாளுக்கு தூக்கியெறிஞ்சி பேசுறீங்களே. இது நல்ல துக்கா?” என்று வள்ளுவனிடம் கேட்டாள்.
போ. எட்டெ. மரியாத கெட்டுடும்.
தவமணி அப்படியே விக்கித்துப்போனாள். பேசுவது வள்ளுவன்தானா என்று சந்தேகம் வந்தது. தொடர்ந்து பேசினால் சண்டைதான் வரும் என்று நினைத்த தவமணி பணம் வேணுமின்னா எங்கிட்ட சொல்லக் கூடாதா? நான் வாங்கித்தர மாட்டனா?” என்று கேட்டாள். வள்ளுவன் வாயைத் திறக்கவில்லை. அப்போது வாசலுக்கு வந்த வனஜா ஊருக்குப் பெரிய பஞ்சாயத்து வந்தாச்சி. அப்பறம் என்ன கொறச்சலு. ஒனக்குச் சோறு மட்டுமில்ல.  பாயும் போடுவாங்க. பக்கத்திலயும் படுப்பாங்க?” என்று சொன்னதுதான். தவமணியும் ராமசாமியும் ஒரே நேரத்தில்  வனஜாவைப் பார்த்தனர். தவமணியின் கண்கள் கலங்கின.
உள்ளாரப் போஎன்று வள்ளுவன் கத்தினான்.
இதெத் தவுத்து வேற ஒனக்கு என்னா தெரியும்?” என்று வனஜா கேட்டதுதான். ஓங்கி வனஜாவின் கன்னத்தில் அறைந்தான். கத்திக்கொண்டே வீட்டிற்குள் போனாள் வனஜா. வாய்தவறி சொல்லியிருப்பா. அதுக்காக அவள நீ கை நீட்டி அடிப்பியா?” என்று தவமணி கேட்டாள்.
நீ இப்பப் போறியா இல்லியா?” என்று காட்டுக்கத்தலாகக் கத்தினான் வள்ளுவன்.
தவமணியின் கண்களிலிருந்து கண்ணீர் வந்தாலும், சமாளித்துக்கொண்டு, “நீ இப்ப கோபமா இருக்க. ஊட்டுக்குள்ளார போடா தம்பி. அப்பாகிட்டபணத்த நான் வாங்கித் தர்றன். இல்லன்னா எம்மான்னு சொல்லு. நான் தர்றன்என்று கேட்டாள்.
ஊராங்க பணம் எங்களுக்கு எதுக்கு?” என்று வீட்டிற்குள்ளிருந்த வனஜா கேட்டாள்.
அழுதுகொண்டே நான் ஊராங்களாடி வனஜா?” என்று தவமணி கேட்டாள்.  வனஜா பதில் பேசவில்லை. ஆனால் மயிரு பணம்என்று சொல்லியது மட்டும் கேட்டது.
திகைத்துப்போன தவமணி வள்ளுவனையும், ராமசாமியையும் பார்த்தாள். இரண்டு பேரும் வேறுவேறு பக்கம் பார்த்துகொண்டு நின்றிருந்தனர்.வாங்கப்பா, ஊட்டுக்குப் போவலாம்என்று தவமணி கூப்பிட்டாள். அவள் கூப்பிட்டதை அவர் கவனிக்கவில்லை. மரக்கட்டை மாதிரி நின்றுகொண்டிருந்தார். மீண்டும் கூப்பிட்டாள். அப்போதும் அவரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. கையைப் பிடித்துக் கூப்பிட்ட பிறகுதான் சுயநினைவுக்கு வந்தார்.
என்னம்மா?”
ஊட்டுக்குப் போவலாம்ப்பா.
இரு வர்றன்என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். கால் மணி நேரம் கழித்து மூன்று நான்கு கைப் பைகளில் ஏதோஏதோ எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
ஊட்டுக்கு வாப்பா.
ஒரு எடத்துக்குப் போயிட்டு வந்துடுறம்மா.
தண்ணி குடிச்சிட்டுப் போப்பா.
வந்துடுறன்என்று சொல்லிவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு ராமசாமி கிளம்பினார்.
வங்கியில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் இருந்தார். எல்லாக் கணக்குகளையும் முடிக்கச் சொல்லிவிட்டார். மேலாளர் சொன்னது, கிளார்க் சொன்னது என்று யார் சொன்னதையும் ராமசாமி கேட்கவில்லை. அவசரமாப் பணம் வேணும்என்று மட்டும்தான் சொன்னார். மூணே முக்கால் லட்சம் பணத்துடனும், லாக்கரில் வைத்திருந்த நகைகளுடனும் நேரே தவமணி வீட்டிற்கு வந்தார். பணப் பையைத் தவமணியிடம் கொடுத்து இதெ ஒந் தம்பிகிட்டெ கொடுத்திடுஎன்று சொல்லிப் பையைக் கொடுத்தார்.
என்னப்பா?”
பணம்.
சரி கொடுத்திடுறன். காலயில சாப்புடலியா?”
முருகேசன் எங்கம்மா?” பேச்சை மாற்றினார்.
காட்டுக்குப் போயிருக்குது.
முத்தமிழ்ச் செல்வி எங்க?”
பள்ளிக்கூடம் போயிருக்கிறா. இன்னிக்கி வெள்ளிக்கிழம, மறந்துப் போச்சா? தண்ணி குடிப்பாஎன்று சொல்லித் தவமணி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள்.
வனஜா கொணந்தான் தெரியுமே. தம்பிக்கித்தான் என்னாச்சின்னு தெரியல. என்னெப் பேசிப்புட்டான். அது பரவாயில்ல. அக்காதானன்னு பேசிப்புட்டான். ஒங்களப் பேச அவனுக்கு வாய் எப்பிடி வந்துச்சி? அதான் தெரியல. அதெ நெனைக்காதீங்க. சாப்புடுங்க. வெறும் வயித்தோட இருந்தா கோவம் கொறயாது.
பசிக்கல. அப்புறமா சாப்புடுறன்.
எம் பேச்சக் கேக்கணும்என்று சொல்லிக்கொண்டே போய் சோறு, குழம்பு, புளிச்சக்கீரை என்று எடுத்து வந்து வைத்தாள்.
அவ ஒன்னெப் பேசுன பேச்ச மறந்திட்டு சோறு போடுற, பெத்த தாயிதான்என்று முணுமுணுத்த ராமசாமி சாப்பிட உட்கார்ந்தார். அரையும்குறையுமாகச் சாப்பிட்டு முடித்ததும் நடந்த எல்லாத்தயும் இந்த அப்பனுக்காக நீ பொறுத்துக்கணும்என்று ராமசாமி சொன்னார்.
தவமணி சிரிக்க முயன்றாள். ஆனால் முடியவில்லை. எந் தம்பிதான என்னெத் திட்டுனான். ஊராங்களா திட்டுனாங்க? முப்பது வருசத்தில அக்காங்கிற வாத்தய இன்னிக்கித்தான சொல்ல மறந்துட்டான்.”   தவமணியின் கண்கள் கலங்கின.
மடியில் வைத்திருந்த கனமாக இருந்த மணிபர்சை எடுத்து தவமணியிடம் கொடுத்தார்.
என்னாப்பா?”
ஒங்கம்மாவோட தாலிக் கொடி. மூக்குத்தி, தோடு, கை வளய. அப்பறம் பாட்டியோட கை காப்பு.
தம்பிகிட்டெ கொடுத்திடணுமா?”
தவமணியை விநோதமாகப் பார்த்தார் ராமசாமி.
எல்லாத்தயும் அழிச்சி புது நக செஞ்சி எம் பேத்தி முத்தமிழ்ச் செல்விக்கிப் போடு.
இன்னமுட்டும் இதெல்லாம் எங்க இருந்துச்சி?”
பேங்குல வச்சிருந்தன்.
இருங்க. தம்பிகிட்டெ கொண்டுபோயி கொடுத்திட்டு வந்துடுறன்என்று சொல்லிவிட்டு நகை இருந்த மணி பர்சையும், பணப் பையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் தவமணி.
எங்க போற? இங்க வா. நகய உள்ளார வச்சிட்டு அப்பறமா போம்மா.
என்னப்பா புதுசா சொல்றீங்க?”
புதுசுமில்லெ. பழசுமில்லெ. நகய உள்ளார வையி. பணத்த மட்டும் எடுத்துக்கிட்டு போயி கொடுத்திடு.
ரெண்டயும் தம்பிகிட்டியே கொடுத்திடுறன்.மீண்டும் வெளியே போக முயன்றவளிடம் நீயும் எம் பேச்ச மீறுறியா?” பரிதாபமாகக் கேட்டார்.
தம்பிக்குத் தெரிஞ்சா வனஜாவுக்குத் தெரிஞ்சா என்னெப் பத்தி என்னா நெனப்பாங்க?”
நான் ஒனக்கா கொடுத்தன்? எம் பேத்திக்குத்தான கொடுத்தன்? அவ பெரிய மனுஷியானதும் செயினு செஞ்சிபோடு. கல்லு வச்ச அட்டிக செஞ்சி போடு.
இப்பத்தான் ஆறாவது படிக்கிறா. அவளுக்கு எதுக்கு நக? அதுவும் இன்னிக்கென்ன அவசரம்?”
அவசரம்தான். ஒங்கம்மா இத்தினி வாத்த எங்கிட்டெ பேசுனதில்லெ தெரியுமா?”  லேசாகச் சிரிக்க முயன்றார். ஆனால் சிரிப்பு வரவில்லை.
நான் எங்கப்பாகிட்டெதான பேசுறன்தவமணி பெயருக்குச் சிரித்தாள். ராமசாமிக்குப் பக்கத்தில் வந்து நின்றுகொண்டு தப்பான பேச்சு வந்துடும்ப்பா. வனஜாகிட்டெ கொடுத்திடுறன். இந்தப் பொருளுக்கு ஒடயவ அவதான்.
இது ஒங்கப்பன் ராமசாமிமேல சத்தியம். நான் வேணுமின்னா நகய உள்ளாரக் கொண்டுபோயி வையி. வேணாமின்னா யாருகிட்ட வேணுமின்னாலும் கொடுகொஞ்சம் வேகமாகச் சொன்னார். தவமணியினுடைய முகம் மாறிபோயிற்று. அப்பாஎன்று கூப்பிட்டாள். அவள் கூப்பிட்டதைக் காதில் வாங்காத ராமசாமி எம் பேத்திக்கி முத்தமிழ்ச் செல்வின்னு நாந்தான பேரு வைச்சன்?” எனறு கேட்டார்.
நீங்க வைக்காம அப்பறம் யாருப்பா வைப்பாங்க?”
பேரு வச்சதுக்காகக் கொடுக்கிறன். புரியுதா?”
தவமணி பேசவில்லை. தலையைத் தாழ்த்திக்கொண்டாள். ரகசியம் மாதிரி பேரு கெட்டுடும்ப்பாஎன்று சொன்னாள். சிறிது நேரம் தவமணியையே கூர்ந்து பார்த்துவிட்டு லேசாகக் குரலை உயர்த்தி ஒங்கப்பன் பேரு கெட்டுப்போனா பரவாயில்லியா? பாவத்தோட என்னெ சாவச் சொல்லுறியா? ஜென்மக்கடன்ல ஆயிரத்தில லட்சத்தில ஒண்ணக்கூட நான் அடைக்கக் கூடாதா? என்னெ எதுக்கு பாவியாக்கப் பாக்குற? அதுக்குத்தான் ஒன்னெ வளத்தனா? அப்பன் பேச்ச மீறிப் பேச எப்பக் கத்துகிட்டெசாவுறமுட்டும் எம் மின்னால நின்னு ஒங்கம்மா ஒரு வாத்த பேசுனதில்ல தெரியுமா?” என்று கேட்கும்போதே ராமசாமியினுடைய கண்கள் கலங்கின. அதைப் பார்த்ததும் தவமணி பதறிப்போனாள். அவளுக்கும் கண்கள் கலங்க ஆரம்பித்தன. முதன்முதலாக ராமசாமியினுடைய கண்கள் கலங்கி இப்போதுதான் பார்க்கிறாள். அதிசயம்தான் என்று நினைத்தாள்.
சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவுமில்லை. தலையைக் கவிழ்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ராமசாமியியைப் பார்க்கப் பிடிக்காமல் தண்ணி கொண்டாரட்டாப்பா?” என்று கேட்டாள்.
ஒங்கம்மா யாருன்னு ஒனக்குத் தெரியுமா? ஒனக்கு மட்டும்தான் தாயின்னு நெனைக்காத. அந்தப் பொம்பளைக்காக நான் செய்யுறன்.மீண்டும் ராமசாமியினுடைய கண்கள் கலங்க ஆரம்பித்தன.  லேசாகக் கோபம் வந்த மாதிரி குண்டான் குண்டானா ஆக்கிப்போட்ட பொம்பளைக்கி நான் ஒரு கைப்புடி மண்ணு அள்ளிப் போடக் கூடாதுங்கிற? பெத்த தாயின்னு உரிமை கொண்டாடுற? அந்த ஒரு பொம்பள உசுரோட இருந்திருந்தா என்னெப் பாத்து ஏன்?’ன்னு யாராச்சும் கேக்க முடியுமாதம்பிக்காரன்னு ஒண்ணும் கேக்காம வர்ற? எம் பொண்ணப் பாத்து என்னா கேள்வி கேட்டுப்புட்டா? என் கொல சாமி செத்துப்போச்சிஅவருடைய கண்களிலிருந்து ஊற்று மாதிரி கண்ணீர் வழிய ஆரம்பித்தது.  தவமணியினுடைய கண்களிலிருந்தும் அதே அளவுக்கு நீர் இறங்கிற்று. அதே நேரத்தில் அவளுக்கு எல்லாமே புதுசாக இருந்தது. ராமசாமி அதிர்ந்து பேசுவது, அதிகம் பேசுவது, கண்கலங்குவது எல்லாமே புதிது. விரோதிகளிடம், சண்டைக்காரர்களிடம்கூட அவர் சத்தம் போட்டுப் பேசியது கிடையாது.  தெருவில், ஊரில் யாராவது தானாக வந்து பேசினால்தான் பேசுவார்.  மொத்தம் எட்டு ஊரில் வேலை பார்த்திருக்கிறார். எந்த ஊரிலும் கெட்ட பெயர் இல்லை. தலைவலி, காய்ச்சல் என்று அடிக்கடி லீவ் போட மாட்டார். சர்வீஸில் ஒரு நாள்கூட மெடிக்கல் லீவ் போட்டதே கிடையாது. பள்ளிக்கூட நாட்களில் சொந்தக்காரர்களுடைய கல்யாணம், சாவு, நல்லது கெட்டது என்றால்கூடப் போக மாட்டார். மற்றவர்களைக் காரியத்திற்குப் போகச் சொல்லிவிட்டுப் பள்ளிக்கூடத்திற்குத்தான் போவார். மீறிக் கேட்டால், ‘சோறு போடுற எடத்துக்குப் போவாம இருந்தா, சோறு எப்பிடி வரும்? நான் வருவன்னு பத்து புள்ளெ குந்தியிருக்கும்ல?’ என்று கேட்பார். சனி, ஞாயிறு மட்டும்தான் காட்டுக்குப் போவார். ஓய்வு பெற்ற இந்த இரண்டு வருசமாகத்தான் தினமும் காட்டுக்குப் போகிறார்.
தவமணிக்குச் சொந்த சித்தப்பாதான் ராமசாமி. தவமணி பிறந்த எட்டாவது மாதத்தில் அவளுடைய அப்பா பெரியசாமி மழைக்காகப் புளியமரத்தின் கீழ் ஒதுங்கி நின்றபோது இடி விழுந்து இறந்துவிட்டார்.  நினைவு தெரிந்த நாளிலிருந்து ராமசாமியைத்தான் அப்பாஎன்று கூப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். ஒரு நாள்கூட, ஒரு முறைகூட, வாய் தவறிக்கூட சித்தப்பாஎன்று கூப்பிட்டதில்லை. அப்படிக் கூப்பிட அவளுக்கு வாயும் வராது. ராமசாமி எப்போதும் தவமணியை அம்மாஎன்றுதான் கூப்பிடுவார். எங்கு போய் எங்கு வந்தாலும் வீட்டிற்குள் நுழையும்போது அம்மாஎன்று கூப்பிட்டுக்கொண்டேதான் வருவார். இத்தனை வருசத்தில் ஒருநாள்கூட, ஒருமுறைகூட, வாய்த்தவறிக்கூட தவமணிஎன்று கூப்பிட்டதில்லை. அப்படிக் கூப்பிட அவருக்கு வாயும் வந்ததுமில்லை. இது எங்க அண்ணன் மவஎன்று யாரிடத்திலும் இதுவரை அவர் சொன்னதில்லை. கல்யாணப் பத்திரிகையில் மட்டும்தான் பெரியசாமி மகள் என்று போட்டார்.
தவமணி வயதுக்கு வந்த பிறகு பத்தாவது படிக்கும்போதே வெளியூரிலிருந்து சொந்தக்காரர்கள் பெண் கேட்டு வந்தார்கள். வெளியூர்ல எம் பொண்ணக் கொடுத்திட்டா, தெனம் அதெ எப்பிடி நான் பாக்க முடியும்அது கையால நான் எப்பிடித் தண்ணி வாங்கி தெனம் குடிக்க முடியும்அதனால வெளியூர்க்காரனுவுளுக்கு எம் பொண்ணக் கொடுக்க மாட்டன்என்று பிடிவாதமாக மறுத்துவிட்டார்.  படித்துகொண்டிருந்த பிள்ளையைப் பெண் கேட்டு வந்து தொல்லை கொடுத்ததால் தன்னுடைய அக்கா மகன் முருகேசனுக்கே கட்டிவைத்தார். அதில் தவமணிக்கும், அவளுடைய அம்மா முருவம்மாளுக்கும் வருத்தம்தான். முருகேசன் உதடு பிளந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பான். எல்லாவற்றுக்கும் மேலாக மூன்றாவது வீடு வேறு என்று ஆயிரம் வருத்தம் இருந்தாலும், ஊர்ப் பெண்கள் கிண்டல் கேலி செய்தாலும், எதையும் தாயும் மகளும் வெளியே சொல்லவில்லை. தவமணியைக் கேட்டதற்கு அப்பா சொன்னா சரிதான்என்று  சொல்லிவிட்டாள். முருவம்மாள் வாத்தியாரு போட்டா கணக்கு சரியாத்தான் இருக்கும். பெத்தவனுக்குத் தெரியாதா புள்ளைய எங்க கொடுக்கணுமின்னுஎன்று சொல்லிவிட்டாள். தவமணிக்குக் கல்யாணமாகிப் பதினைந்து வருசமாகிவிட்டது. அவளுடைய அம்மா முருவம்மாள் இறந்து ஆறு வருசமாகிவிட்டது. முருவம்மாளின் கரும காரியம் முடிந்த எட்டாம் நாள்தான் தன்னுடைய அண்ணன் பெரியசாமிக்குச் சேர வேண்டிய பாகத்தில் தனியாக முருகேசனைப் பயிர் வைத்துகொள்ளச் சொன்னார். வனஜா கல்யாணம் கட்டிக்கொண்டு வந்த பிறகுதான் தவமணியைத் தனியாகச் சோறு ஆக்கச் சொன்னார். 
ராமசாமிக்கு ஆசிரியர் வேலை கிடைத்த ஐந்தாவது வருசத்தில் கல்யாணம் நடந்தது. கல்யாணம் கட்டிக்கொண்டு வந்தாலும் தனம், முருவம்மாள் சொல்வதைத்தான் கேட்டாள். அக்காஎன்ற வார்த்தை மாறாது. முருவம்மாள் இறந்த இரண்டாவது வருசத்தில் தனம் இறந்தாள். வனஜா வீட்டிற்குள் வருவதற்கு முன் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. வள்ளுவன்கூட முருவம்மாளிடமும் சரி, தவமணியிடமும் சரி, ஒரு சொல் எதிர்த்துப் பேசியவனில்லை. முருவம்மாளை பெரியம்மாஎன்று ஒருநாளும் அவன் கூப்பிட்டதில்லை. அப்படிப்பட்டவன்தான் இன்று யாரும்
சொல்லாத வார்த்தையைச் சொல்லிவிட்டான். வனஜா அதிகம் பேசக் கூடியவள்தான். எது பேசினாலும் ஆள் இருக்கும்போது பேச மாட்டாள். அவளும் இன்று எல்லை மீறிதான் பேசினாள். எதனால்? பொதுவாக ராமசாமியிடம் எது கேட்டாலும் வள்ளுவன் தவமணி வழியாகத்தான் கேட் பான். அதுவும் கல்யாணமான பிறகு வள்ளுவனுக்கும் ராமசாமிக்குமிடையே பேச்சு வார்த்தை சுத்தமாக நின்றுவிட்டது. இரண்டு பேருக்கு மிடையில் தவமணிதான் அல்லாடுவாள். இன்று தண்ணீர் எடுக்க போகாமல் இருந்திருந்தால், வழியில் கோமளாவிடம் பேசிக்கொண்டு நின்றிருக்காவிட்டால், வள்ளுவன் நிச்சயம் அவளிடம்தான் பணம் கேட்கச் சொல்லி யிருப்பான். எது சொன்னாலும் சொல்லிவிட்டு ராமசாமி தவமணியிடம் பணத்தைக் கொடுத்திருப்பார். அந்த நேரத்தில் இல்லாதது தன்னுடைய தவறுதான் என்று நினைத்தாள். தலையைக் கவிழ்த்துக்கொண்டு குறுகிப் போய் உட்கார்ந்திருக்கும் ராமசாமியைப் பார்க்கப்பார்க்க அவளுக்கு அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.
அப்பாஎன்று கூப்பிட்டாள்.  ராமசாமியிடம் எந்த அசைவுமில்லை.  ராமசாமிக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி வேணுமா?” என்று கேட்டாள்.  வேண்டாம் என்பது மாதிரி தலையை ஆட்டிவிட்டு அவள் வாயைத் திறப்பதற்காகவே காத்திருந்த மாதிரி சொன்னார் ஒங்கப்பன், அதாம், எங்கண்ணன் சாவுறப்ப நான் பதினொண்ணாவது படிச்சிக்கிட்டிருந்தன்.  திடீர்னு செத்ததால ஆடுமாடு மேய்க்க, காடு கரயப் பாக்க ஆளில்லன்னு என்னெப் பள்ளிக்கூடத்திலிருந்து ஒங்க பாட்டி நிறுத்திப்புடிச்சி. அம்மா சொன்னா சரின்னு நானும் பள்ளிக்கூடத்துக்குப் போவல. எங்கப்பா வாயத் தொறக்கல. ஒரு நாளு நானு காட்டுல ஏரு ஓட்டிக்கிட்டிருந்தன். அதெப் பாத்த ஒங்கம்மாவுக்கு என்னாச்சின்னு தெரியல. பக்கத்தில கள வெட்டிக்கிட்டிருந்த எங்கம்மாகிட்டெ போயி நான் இந்தக் காடு கரயப் பாக்க மாட்டனா, ஆயிரம் ஐநூறு காணியா சம்பாரிச்சி வச்சியிருக்கிற? அதெப் பாக்க ஆளில்லன்னு பள்ளிக்கூடத்தில குந்தியிருந்தவன இயித்தாந்து வெயில்ல வதங்க வுட்டுயிருக்க. நாளக்கிப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு.  இல்லன்னா நான் மருந்தக் குடிச்சிட்டு செத்திடுவன்னு சொல்லிச் சண்ட புடிச்சுது. மறுநாளு காட்டுக்குப் போன என்னெ மறிச்சு இயித்துக்கிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போச்சி.  மூணு மாசமாச்சி.  இனிமே சேக்க முடியாது.  இந்த வருசம் கவருமண்டு பரிட்ச வேறன்னு சொல்லி ஹெட்மாஸ்டரு கத்துறாரு. என்னெ இயித்துக்கிட்டு ஒவ்வொரு வாத்தியாருகிட்டயும் போச்சி. ஒவ்வொருத்தங்க காலுலயும் வியிந்து கும்புட்டுச்சி. கருத்தான பையன் சாரு. கெட்டியாப் படிச்சிக்குவான். அப்பிடி பாசாவலன்னா என் மசுரு அறுத்துகிறன்னு சொல்லி சத்தியம் செஞ்சிச்சி. வெளிய போ. வெளிய போன்னு கத்துனதப் பாக்கல. ஹெட்மாஸ்டரு ரூமுகிட்டயே பகல் முழுக்க நின்னுச்சி. இந்தப் பயலுக்குக் கண்ண கொடுங்க சாமி, பொழச்சிக்குவான்னு சொல்லி, பத்து இருபது முற கால்ல வியிந்து கும்புட்டப்பறம், அதுவும் சாயங்காலம் மணியடிச்சப்பதான் சேத்துக்கிறன்னு சொல்லி அந்த ஹெட்மாஸ்டரு சொன்னாருஎன்று சொல்லும்போதே அவருடைய குரல் உடைந்துபோயிற்று. கண்களில் கண்ணீர் திரை கட்டி நின்றது. வாயிலிருந்து வார்த்தை வெளியே வரவில்லை. அடுத்துப் பேசுவதற்குள் அவருக்குத் தத்தளிப்பாகிவிட்டது. அவரை என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவமணியும் தத்தளித்துப்போனாள். சிறிது நேரம் பேசாமலிருந்த ராமசாமி சொன்னார் பதனொண்ணு பாசானன்.
மூணு நாலு ஊருக்கு நான் மட்டும்தான் பாசு. அடுத்து என்னா செய்யுறதுன்னு தெரியல. எங்க மனு போடுறதுன்னு தெரியல. பேசாம வுட்டுட்டன்.  ஒரு மாசம் ஓடிப்போச்சி. படிச்சது போதும். மேக்கொண்டு படிக்க வைக்க என்னால முடியாதுன்னு ஒங்க பாட்டி சொல்லிடிச்சி. அப்பவும் ஒங்க தாத்தா வாயத் தொறக்கல. அப்பத்தான் ஒங்கம்மா வாத்தியாருக்குப் படியன்னு சொல்லிச்சி. சரின்னு விண்ணப்பம் போட வடலூருக்குப் போனன். சாயங்காலம் வந்தா ஒங்க பாட்டி ஊட்ட யாரு பாக்குறது, காட்ட யாரு பாக்குறது? வெள்ளச் சட்ட போட்டா காட்டுல குனிஞ்சி நிமுந்து வேல செய்ய மாட்டான்னு சொல்லிக் கத்துது. ஒங்கம்மாவுக்கும் ஒங்க பாட்டிக்கும் சண்ட நடக்குது. நான் ஒண்ணும் சொல்லாம காட்டுக்குப் போயிட்டன். சண்டயில ஒங்கம்மாதான் ஜெயிச்சிச்சி. ட்ரெயினிங் ஸ்கூலுக்கு மனு போட்டன். எடம் கெடச்சிச்சி. படிச்சன். படிப்பு முடிஞ்சி, பதிஞ்சிவச்ச எட்டாம் மாசமே வேல கெடச்சிது.கரண்ட் நின்றது மாதிரி சட்டென்று பேச்சை நிறுத்தினார். வீட்டின் வாசல் பக்கம் பார்த்தார். தவமணியைப் பார்த்தார். துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டார்.
முதன்முதலா நிராமணியிலதான் எனக்கு வேல கெடச்சது. முத அன்னிக்கி வேலக்கிப் போயிட்டுத் திரும்பி சாயங்காலம் வந்துகிட்டிருக்கன்.  ஏயி எட்டு வீடு தள்ளி வரும்போதே வாசலக் கூட்டிக்கிட்டிருந்த ஒங்கம்மா என்னப் பாத்திட்டு தெருவுன்னுகூடப் பாக்காம ஓடியாருது. வேர்த்துப் போயி, கருத்துப்போயி, முழங்காலு முட்டும் புழுதி படிஞ்சிப்போயி வந்த என்னெப் பாத்திட்டு ஒங்கம்மா கண்ணுல தண்ணி வுடுது. அயிதுகிட்டே பொடி சுட்டுதா, தடத்தில முள்ளு கெடந்து குத்திச்சா, தடத்தில கல்லு இருந்து குத்திச்சா? சக்கிலிகிட்ட சொல்லி ஒரு செருப்பு வாங்கிப்போடுன்னு சொல்ல எம் புத்தியில ஒரைக்கலியேன்னு சொல்லிக்கிட்டெ குனிஞ்சி முந்தாணியால என் முழங்காலுமுட்டும் படிஞ்சிருந்த புழுதியத் தொடைக்குது. என்னெ செய்யுற? கால வுடுன்னு சொல்றன். கேக்கல.  எங்காலத் தூக்கிப் பாத்திட்டு நாளக்கி நீ போற தடத்தில போயி கூட்டி வைக்கிறன். முள்ளு குத்தாம, கல்லு குத்தாம போயிட்டு வான்னு சொல்லிக் கண்ணு கலங்குது. நான் வௌயாட்டுக்கு நடக்கிற தடத்தப் போயி யாராவது கூட்டுவாங்களா? பேசாம வீட்டுக்கு வான்னு சொன்னன்.  அதுக்கு ஒங்கம்மா கேக்குது :
கூட்டுனா என்னா தப்பு?”
தெனம் போயி எப்பிடிக் கூட்டுவ?”
நிராமணி ஒரு தப்பிடி தூரம்தான? ஒரே ஓட்டமா ஓடிப் போயி கூட்டிப்புடுவன்.
ஏயி மையிலு தெரியுமா?’
ஏயி மையிலா இருந்தா என்ன? எச்சி துப்பி அது காயுறதுக்குள்ளார கூட்டிப்புட்டு வந்துடுவன். அதெவிட எனக்கு வேற வேல என்னா இருக்கு ஒலகத்திலெ?”
இத்தினி வருசமா காலுல செருப்பு போடாமத்தான இருந்தன்?”
செருப்புப் போடணுமின்னு தெரிஞ்சாத்தான? நான் கூட்டி வச்சிடுறன். நீ முள்ளுக் குத்தாம போயிட்டு வா.
அப்பறம் நான் ஒண்ணும் பேசல. சாமின்னு ஒண்ணு ஒலகத்தில இருந் தாக்கூட அது வாயிலிருந்து அப்பிடியொரு வாத்த வராது.
ராமசாமி உடல் குலுங்க அழுதார். அழுதுகொண்டே சொன்னார். செருப்பு தச்சிப் போடணுமின்னு தோணல. பணமில்லாம இல்லெ. ஆனா சைக்கிளு வாங்கணுமின்னு தோணல. அப்பலாம் மத்தியான சோறுன்னு ஒண்ணு இல்லெ. ரெண்டு வருசம் கழிச்சித்தான் ஒங்கம்மா ஒரு தூக்கு வாளியில சோறு கொடுத்துது.
எதுக்குப்பா இப்ப அழுவுறீங்க?”
எங் காலு புழுதிய ஒங்கம்மா தொடச்சிது. எஞ் செருப்பும் சரி, அந் தாளு பணமும் சரின்னு ஒன் தம்பிப் பொண்டாட்டி சொல்றா. நான் ஒனக்குத்தான் பொறந்தனான்னு தெரியலங்கிறான் ஒன் தம்பி. சாமின்னு ஒண்ணும் ஒலகத்தில இல்லெ. மனுசங்கதான் சாமியும், பூதமும், பேயும்.
என்னிக்கும் இல்லாம இன்னிக்கி எதுக்கு மாஞ்சிமாஞ்சி அழுவுறீங்க? நீங்க அழுவுறதப் பாத்திட்டு நான் உசுரோட இருக்கணுமா?” என்று கேட்ட தவமணி அழுதாள். அழுதுகொண்டே பாட்டி செத்த அன்னிக்கி நீங்க அழுவுல. எங்கம்மா செத்தன்னிக்கும் அழுவல. சின்னம்மா செத்தன்னிக்கும் அழுவல. புத்திகெட்டதுங்க பேசுச்சிங்கிறதுக்காக நீங்க அழுவலாமாப்பா? என்னிக்கும் இல்லாம இன்னிக்கி ஏன் ரெண்டு பேரும் அதிசயமா பேசுனாங்கன்னு தெரியலஎன்று சொல்லிவிட்டுப் பக்கத்திலிருந்த தண்ணீர்ச் சொம்பை எடுத்து நீட்டி தண்ணி குடிங்கப்பா. மனசு ஆறிடும்என்றாள்.
ஒங்கம்மாவ நெனச்சன். மத்தவங்க பேசுனத நான் நெனக்கல. மத்த வங்க யாரும் எம் மனசுல இல்லெ.
தவமணி கொடுத்த தண்ணீரை வாங்கி ராமசாமி குடிக்கவில்லை. வேண்டாம் என்றுகூடச் சொல்லவில்லை. அவள் தண்ணீர் கொடுத்ததுகூட அவருடைய கண்களில் படவில்லை.
சாப்புட்டு நான் தெருமுட்டும் போயிட்டு வந்தாக்கூட போதும். வவுறு உள்ளாரப்போயி கெடக்குதே. இரு ஒரு சொம்பு கூழு கரச்சித் தரன்னு
சொல்லி ஓட்டமா ஓடிப் போயி ஒரு சொம்பு கூழோட வந்து நிக்கும். அப்பலாம் நெல்லு சோறு ஏது? எம்மாம் சொன்னாலும் கேக்காது. குடிச்சாத்தான் ஆள வுடும். ஒரு நாளக்கி ஆறு ஏழு சொம்பு குடிக்காம வுடாது. ஆம்பள வெறும் வவுத்தோட கெடக்கக் கூடாது. ஒண்ணுக்குட்டா கரஞ்சிப் போயிடும்ன்னு சொல்லும். ஆனா ஒங்க பாட்டிக்கிட்ட கூழு வாணாமின்னு நான் சொன்னாபோதும் குடிச்சா குடி, குடிக்காட்டி போ. ஒன்னோட வவுறுதான் காயப்போவுதுன்னு சொல்லிப்புட்டு ஆடு மேய்க்க, மாடு மேய்க்கன்னு போயிடும்என்று சொன்ன ராமசாமி பேச்சை நிறுத்தினார்.
ராமசாமியையே பார்த்துக்கொண்டிருந்த தவமணிக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. ராமசாமி இவ்வளவு பேசுவாரா, அவரால் இவ்வளவு பேச முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. எப்போதோ நடந்து முடிந்ததையெல்லாம் எதற்காக இப்போது சொல்கிறார். அதுவும் முருவம்மாள் பற்றிக் கதைகதையாகச் சொல்கிறாரே என்று ஆச்சரியப்பட்டுப்போனாள். பொதுவாக, ஊருக்குள் முருவம்மாளைப் பற்றிச் சொல்லும்போது எல்லாருமே பேக்குஎன்றுதான் சொல்வார்கள். தவமணியும் அப்படித்தான் நினைத்துக்கொண் டிருந்தாள். எந்தத் தூண்டுதலும் இல்லாமல், தவமணியிடம் சொல்கிறோம் என்ற உணர்வுகூட ராமசாமியிடம் இருந்த மாதிரி தெரியவில்லை. மிகவும் அடங்கின குரலில் சொன்னார்.
ஒங்கம்மாவுக்கு ருசிபசியா சோறு ஆக்கத் தெரியாது. அதுக்கு நேரமும் இருக்காது. ஒரு சோறு, ஒரு குழம்பு, இதத்தான் தெனம் ஆக்கும். மிஞ்சினா புளிச்சக் கீர வைக்கும். குழம்புல உப்ப அள்ளிப் போட்டுடும். இல்லன்னா உப்பு போடவே மறந்திடும். சோறு திங்கிற ஏனத்த சரியா கழுவியிருக்காது. கல்லு இல்லாம, உமி இல்லாம சோறு ஆக்காது. என்னிக்கி ஆக்கினாலும் சோத்தில புளிப்பு ஒறப்புக்குப் பஞ்சமிருக்காது. சோறு ஆக்க தெரியாதது மட்டுமில்ல, சோத்தக் கொஞ்சமாப் போடவும் தெரியாது. எப்ப வச்சாலும் குத்துகுத்தாத்தான் அள்ளி வைக்கும், வட்டி நெறஞ்சிபோவும். கேட்டா சோத்தத்தானத் திங்க முடியும்? காசு பணத்தயா திங்க முடியும்? சோத்தத் தின்னுன்னு சொல்லும். நான் ஒண்ணும் சொல்ல மாட்டன். ஒங்க தாத்தாவும் ஒண்ணும் சொல்ல மாட்டாரு. ஆனா ஒங்க பாட்டிதான் சண்டபுடிச்சிடும். திருத்தமா சோறு குழம்பு ஆக்கத் தெரியுதா பாரு? சுத்தம் கெட்ட நாயி. செம்பறி ஆடு மேய்ச்சவளுக்கு எப்பிடி ருசிபசியா சோறு ஆக்கத் தெரியும்?’ன்னு கத்தும். அதுக்கு ஒங்கம்மா பெருமயா சிரிச்சிக்கிட்டே வாத்தியாரே ஒண்ணும் சொல்லலியாம். ஒனக்கென்ன? நான் வாத்தியாருக்குத்தான சோறு ஆக்குனன்? ஒனக்கா ஆக்குனன்? நாக்குக்கு ருசியா வேணுமின்னா நீயே ஆக்கித் தின்னு. வவுத்துப் பசிக்கி சோறு திங்கிறமா, நாக்கு ருசிக்கி திங்கிறமா? சோறு ஆக்குறது மட்டும்தான் எனக்கு வேலயா?’ன்னு திருப்பி சண்டபோடும். சாவுற முட்டும் அந்தச் சண்ட நிக்கல.
மொத மாச சம்பளத்தில ஒங்கம்மாவுக்கு வெலகொண்ட சீல ஒண்ணு எடுத்தாந்து கொடுத்தன். ஒரு தூக்குத் தங்கத்தத் தூக்கிக் கொடுத்திட்ட மாரி அந்த சீலயத் தூக்கிக்கிட்டு ஊடு ஊடாப் போயி, தெருத்தெருவாப் போயி சீலயக் காட்டிஎங்க வாத்தியாரு எடுத்தாந்ததுன்னு காட்டுச்சி. ஊருல ஒரு ஆளயும் வுடல. எல்லாருக்கிட்டயும் காட்டுச்சி. ஒங்கம்மா சிரிச்சி அன்னிக்கித்தான் பாத்தன். காட்டுக்குப் போவாம வீட்டுல அன்னிக்கித்தான் ஒங் கம்மா எனக்குத் தெரிஞ்சி குந்தியிருந்துச்சி.சட்டென்று துண்டை எடுத்து முகத்தை மூடிக்கொண்டார். லேசாக அவருடைய உடம்பு அதிர்ந்தது.
சிறிது நேரம் பேசாமல் உட்கார்ந்திருந்துவிட்டுத் தானாகவே சொன்னார். அந்தச் சீலயக் கடசி முட்டும் ஒங்கம்மா கட்டவே இல்லெ. தீவாளி, பொங்க அன்னிக்கி எடுத்துப் பாத்திட்டு வச்சிடும். உசுரோட இருந்தப்ப அது வேணும், இது வேணுமின்னு கேட்டதில்ல. சாவுறப்பக்கூட எம் மவ தவமணியப் பாத்துக்க. கை வுட்டுடாதன்னு ஒரு வாத்த சொல்லல. எம் மேல அம்மாம் நம்பிக்க. கல்லோ மண்ணோ வட்டி நிறய அள்ளிவச்சி தின்னுன்னு சொல்ல எனக்கு இன்னிக்கி ஆளில்ல. ஒங்க தாத்தா செத்தது, ஒங்க பாட்டி செத்தது, ஒங்கப்பன், ஒங்க சின்னம்மா செத்தது எதுவும் எந் நெஞ்சில இல்ல. ஒங்கம்மா செத்தது மட்டும்தான் இந்த நெஞ்சுகூட்டுல இருக்குஎன்று சொல்லும்போதே ராமசாமியினுடைய கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் வழிந்தது.
ஒவ்வொரு மாசி மகத்திலயும் ஒங்கம்மாவுக்கு மட்டும்தான் நான் அரிசி கொடுக்கிறன். ஒவ்வொரு மாசமும் அம்மாசி விரதம் ஒங்கம்மாவுக்காக மட்டும்தான் இருக்கறன். நான் பொண்டாட்டி புள்ளைன்னு ஆன பின்னாலயும் என் வவுத்தத் தடவிப் பாத்து சோறு போட்ட பொம்பளம்மா.
ராமசாமிக்கு அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. முதன்முதலாக வாய்விட்டு அழுதார். உட்கார முடியாமல் தரையில் படுத்துக்கொண்டு கைக்குழந்தை மாதிரி விம்மி அழ ஆரம்பித்தார். அதிகம் பேசாதவர், அதிகமாகச் சிரிக்காதவர், அழாதவர் என்று பெயர் எடுத்திருந்த ராமசாமி இப்போது கதறி அழுதுகொண்டிருக்கிறார். தன்னுடைய அம்மாவுக்காக இவ்வளவு அழுகிறாரே என்று நினைத்ததும் அவளுடைய கண்களிலும் கண்ணீர் நிறைந்தது. ராமசாமியை இப்படி அழ வைத்துவிட்டார்களே என்று வள்ளுவன்மீதும், வனஜாமீதும் கோபம் உண்டாயிற்று. இன்று மட்டுமா அழுகிறார்? வனஜாவுக்கும் வள்ளுவனுக்கும் என்று கல்யாணம் நடந்ததோ அன்றிலிருந்துதான் அழுகிறார்.
வள்ளுவன் கடலூரில் காலேஜில் படிப்பதற்கு, போவதற்கு முன்புவரை ராமசாமி மாதிரியே அடுத்தவரிடம் பேசாத, அடுத்த வீட்டுக்குப் போகாத, டீக்கடை பக்கம் போகாத, சொன்ன வேலையை தட்டாமல் செய்கிற பையனாகத்தான் இருந்தான். ராமசாமி வாத்தியாரு பையனில்லியா. எப்பிடி மாறி இருப்பான்?’ என்றுதான் ஊரில் சொல்வார்கள். அப்படிப்பட்ட பையன்தான் பிஎஸ்.ஸி மூன்றாவது வருசம் படிக்கும்போது திடீரென்று ஒரு நாள் வந்து வனஜா பற்றிய விசயத்தை தவமணியிடம் சொன்னான்.
அதிர்ச்சியடைந்துபோன தவமணி கடைக்கிப் போயி உப்பு வாங்கியாடான்னா வெக்கப்பட்டுக்கிட்டு கடைக்கிக்கூட போவாத நீயா காதல் பண்ற?” என்று கேட்டுச் சிரித்தாள்.
அப்பாகிட்ட நீதான் சொல்லணும் அந்தப் புள்ளெ ஓடிப் போவலா மின்னு சொல்லுதுஎன்று வள்ளுவன் சொன்னதைக் கேட்டதும் தவமணிக்கு வாய் அடைத்துப்போயிற்று.
வெளிய சொல்லாதடா. மானம் போயிடும்.
அப்பாகிட்ட நீ பேசு.
ஓடிப்போவலாமின்னு சொல்றவ யாருடா?”
எங்கூடப் படிக்குது. அவுங்கப்பா டீக் கட வச்சிருக்காரு.
டீக் கடதான் பெரிய சொத்தா? நிலம்கிலம்ன்னு ஒண்ணும் இல்லியா? வயக்காடு, மோட்டாரு கொட்டான்னு ஒண்ணும் இல்லியா?”
“------”
பத்து டீ கிளாசி எம்மாம் வெலடா இருக்கும்? நல்ல பொண்ணத்தான் புடிச்சிருக்க. இன்னும் மூணு மாசம்தான படிப்பு இருக்கு. அதெ முடி. படிப்பு முடிஞ்சதும் அப்பாகிட்ட சொல்றன். இப்ப சொன்னா ஒன்னாலதான் அந்தப் பய கெட்டுப்போயிட்டான்னு கத்துவாருஎன்று சொன்னதை அவன் கேட்கவில்லை. வேறுவழியின்றி வள்ளுவனுடைய அம்மாவிடம் மட்டும் ரகசியமாக விசயத்தைச் சொன்னாள். அதைக் கேட்ட தனம் ஊட்டுல நெருப்ப வச்சிட்டானேஎன்று சொல்லி அழுதாள். அவள் அழுததைப் பார்த்த தவமணி எதுக்கு இப்ப அழுது ஊரக் கூட்டுற. நான் போயி அந்தப் புள்ளைக்கிட்ட படிப்ப முடி. அப்பறம் பேசிக்கலாமின்னு சொல்லிட்டு வர்றன்என்று சொல்லி தனத்தைச் சமாதானப்படுத்தி
விட்டு ராமசாமிக்குத் தெரியாமல் கடலூருக்குப் போனாள். வனஜாவிடம் பேசினாள். சரி என்று தலையை ஆட்டிய வனஜா சாமி கோவிலில் சத்தியம் செய்த மாதிரி, மூன்றாவது ஆண்டு கடைசி பரீட்சை எழுதின கையோடு வீட்டிற்கு வந்துவிட்டாள். அன்றுதான் ராமசாமிக்கு விசயம் தெரிந்தது. கோபப்படவில்லை. திட்டவில்லை அமைதியாக சொன்னார்.
ரிசல்ட்டு வரட்டும். பி.எட் படிங்க. ஒரு வருசம்தான். படிப்பு செலவ நானே செய்யுறன். பி.எட் முடிஞ்சதும் கல்யாணத்த முடிக்கிறன். வேல எப்ப வந்தாலும் வரட்டும்.
ராமசாமியினுடைய வார்த்தையை வனஜா காது கொடுத்துக் கேட்க வில்லை. ஒரே பிடிவாதமாக நின்றாள். சாகப்போவதாக மிரட்டினாள். வள்ளுவனிடம் கேட்டால் வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. வேறு வழியின்றி மான வெட்கத்திற்கு அஞ்சி கடலூருக்குப் போனார். வனஜாவினுடைய அப்பா அம்மாவிடம் பேசிக் கல்யாணத்திற்கு நாள் குறித்தார். கல்யாணத்திற்கு என்று வனஜாவினுடைய அப்பா அம்மா ஒரு காசு செலவு செய்யவில்லை. அவர்களுடைய குடும்ப மொத்த சொத்து ஒரு பாய்லர், பத்து கண்ணாடி டீ கிளாஸ் மட்டுந்தான்.
கல்யாணமாகி ஐந்து வருசம்தான் ஆகிறது என்றாலும் வனஜாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்துவிட்டன. முதல் குழந்தை பிறந்தபோது குலசாமி பெயரை வைக்கச் சொன்னார் ராமசாமி. ரேஷ்மா என்று பெயர் வைத்தாள் வனஜா. இரண்டாவது குழந்தை பிறந்தபோது தன்னுடைய அம்மா பெயரை வைக்க சொன்னார். க்ருஷி என்று வனஜா பெயர் வைத்தாள். மூன்றாவது குழந்தை பிறந்தபோது தவமணியினுடைய அம்மா பெயரை வைக்கச் சொன்னார். மூன்றாவது குழந்தையின் பெயர் மோனிகா. மூன்றும் பெண் குழந்தையாக இருப்பதால் ஆண் குழந்தை வேண்டும் என்று ஒவ்வொரு மருத்துவமனையாகப் போகிறார்கள். அதற்கும் ராமசாமிதான் முகம் சுளிக்காமல் பணம் கொடுக்கிறார். தவமணிதான் பணத்தை வாங்கிக் கொடுக்கிறாள்.
காடு எங்கு இருக்கிறது என்பது வனஜாவுக்குத் தெரியாது. காட்டில் என்ன வேலை நடக்கிறது என்பது தெரியாது. நாள் முழுவதும் டி.வி. பார்ப்பாள். புதுப் படம் வந்தால் உடனே சி.டி. வாங்கி வந்து படத்தைப் பார்த்தால்தான் அவளுக்குத் தூக்கம் வரும். கரண்ட் இல்லையென்றால் அவளுக்குத் தலையே வெடித்துவிடும். குப்பக்காட்டுக்கு வந்து மாட்டிக்கிட்டனேஎன்று கத்த ஆரம்பிப்பாள். வாரப் பத்திரிகை ஒன்றை விட மாட்டாள். எல்லாவற்றையும் அவளுக்குப் படிக்க வேண்டும். இல்லையென்றால் பைத்தியம் பிடித்துவிடும். டவுனு புள்ள அப்பிடித்தான் இருக்கும். பின்
னால மாறிடும்என்று நினைத்தார்கள். வனஜா ஒரு நூல்கூட மாற வில்லை. ஏன் மாறவேண்டும் என்பது அவளுடைய கேள்வி. தனம் செத்த மறு மாதமே வீட்டிலிருந்த பசுமாட்டை யார் குப்பையை அள்ளுறது. யார் தீனிபோடுறது?” என்று விற்க வைத்தாள். ஒரு நாளைக்கு நான்கு ஐந்து முறை டீ குடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை. கடையில்தான் இப் போது பால் வாங்குகிறாள். ராமசாமி ஓய்வு பெற்றபோது கிடைத்த பணத்திலிருந்து வயலை ஒட்டி நான்கு ஏக்கர் நிலத்தை வாங்க வேண்டும் நினைத்தார். முருகேசன் விவசாயம் செய்துகொண்டிருந்த நிலத்தில் கிணறு வெட்ட வேண்டும் என்று விரும்பினார். மாடுகள் கட்டுவதற்காகப் போட்டிருந்த கூரைக் கொட்டகையை மாற்றிக் கல்சுவர், ஓடு போட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் வனஜா நினைத்ததுதான் நடந்தது. ஹீரோ ஹோண்டா வண்டி வந்தது. ஹோம் தியேட்டர் வந்தது. ஏ.சி. வந்தது. விலை உயர்ந்த கேமரா உள்ள இரண்டு செல்போன் வந்தது. ஏற்கெனவே மூன்று பீரோ நிறைய துணி இருந்தது. அது பத்தாது என்று புதிதாக, கண்ணாடி வைத்த, லாக்கர் உள்ள இரண்டு பீரோ வந்தது.
ராமசாமி அதிகமாக மட்டுமல்ல, தேவையில்லாமல் ஒரு காசுகூடச் செலவு செய்ய மாட்டார். வள்ளுவனும் அப்பிடித்தான் இருந்தான். வனஜா வீட்டிற்குள் வந்தாள்: பீரோ, கட்டில், மெத்தை, மாவு அரைக்க, துணிகள் துவைக்க இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டி எல்லாம் வந்தது.
வீட்டிலிருந்த வடக்கயிறு, பூட்டாங்கயிறு, ஏர், கலப்பை, முறம், புட்டி, மரக்கால், பல்லம், மாகாணி என்று ஒவ்வொன்றாக மாட்டுக் கொட்டகைக்கு மாறியது. முன்பு ராமசாமி வீட்டில் சோறும் ஒரு குழம்பும் மட்டும்தான் இருக்கும். வனஜா வந்தபிறகு ரசம் வந்தது. மோர், தயிர் வந்தது. தினமும் இட்லியும் தோசையும் வந்தது. மத்தியானம் சுடுசோறும் வந்தது. பொரியலும் வந்தது. காலையிலும் சாயங்காலமும் டீ வந்தது. முட்டைப் பொரியல், ஆம்லெட் வந்தது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கறிக் குழம்பும் வந்தது.
ராமசாமி சொன்னால்தான் வள்ளுவன் காட்டுக்குப் போவான். வேலை
செய்வான். வீட்டுச் செலவு, காட்டுச் செலவு எல்லாம் ராமசாமிதான் செய்ய வேண்டும். மூன்று பிள்ளைகளுக்கும் வள்ளுவனுக்கும், வனஜாவுக்கும் தேவையான எல்லாவற்றுக்கும் ராமசாமிதான் செலவு செய்ய வேண்டும். இது வேணும், அது வேணும்என்று கேட்க மட்டும்தான் பிள்ளைகளை ராமசாமியிடம் அனுப்புவாள். மற்ற நேரங்களில் ராமசாமியிடம் சேர விட மாட்டாள். சேர்ந்தால் அந்தாளுக்கு இருக்கிற பிச்சக்காரப் புத்தி எம் பொண்ணுவுளுக்கும் வந்துடும்என்று சொல்லி வனஜா தடுத்துவிடுவாள். நடக்கத் தெம்பு இல்லாத புள்ளைய பள்ளிக்கூடத்தில சேக்க வாண்டாம். மூணு வயசிலியே பள்ளிக்கூடத்துக்குப் புள்ளை போவ ணுமா?” என்று கேட்டார். அவருடைய பேச்சை மீறி கள்ளக்குறிச்சியில் கொண்டுபோய் பிரி.கே.ஜியில் சேர்த்தாள். இருபது கிலோமீட்டர் தூரம் பிரி.கே.ஜி படிப்பதற்காகப் பிள்ளை தினமும் போய் வருகிறது.
கல்யாணமான புதிதில் விட்டுப்போன பாடத்த எழுதி முடிங்கஎன்று ராமசாமி சொன்னார். அதைக் கேட்காமல் வள்ளுவனை சிங்கப்பூருக்குப் போஎன்று தூண்டிவிட்டாள் வனஜா. யார் சொல்லியும் கேட்காமல் சிங்கப்பூர் போயே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நின்றான். ஒண்ணே கால் லட்சம் செலவு செய்து அனுப்பிவைத்தார். போன இருபதாம் நாள் என்னால வேல செய்ய முடியல. முப்பது மாடி, நாப்பது மாடி, ஒசரத்தில நின்னுகிட்டு வேல செய்ய சொல்லுறாங்க. நான் இங்கியே இருந்தா ஒரு மாசத்தில செத்திடுவன்என்று சொன்னான். ஆள் உயிரோட இருந்தால் போதும் என்று பணம் கட்டி அவனை வரவழைத்தார் ராமசாமி.
காரணமின்றி முருங்கய ஒடிச்சி வளக்கணும். ஆம்பளப் புள்ளைய அடிச்சி வளக்கணும்என்று ஊரார்கள் சொல்வது தவமணியின் நினைவுக்கு வந்தது.
அப்பாஎன்று கூப்பிட்டாள்.
பையக் கொண்டுபோயி கொடுத்திடும்மா.
நீங்க எழுந்திருங்க. நான் போறன்.
ராமசாமி எழுந்து உட்கார்ந்தார். துண்டால் முகத்தை அழுத்தித் துடைத் துக்கொண்டார். பணப் பையை எடுத்துகொண்ட தவமணி நீங்களும் வாங்கஎன்று கூப்பிட்டாள்.
நான் எதுக்கு அங்க?” என்று ராமசாமி எவ்வளவோ மறுத்துப்பார்த்தார். தவமணி கேட்கவில்லை. வேறு வழியின்றி எழுந்த ராமசாமி தன்னுடைய வீட்டு வாசல்வரை வந்தார். என்ன நினைத்தாரோ உள்ளே போகாமல் வாசலிலேயே நின்றுகொண்டார்.
வீட்டிற்குள் சென்ற தவமணி பணப் பையை வனஜாவிடம் கொடுத்தாள். பையை வாங்கிப் பார்த்த வனஜாவின் முகம் மாறிவிட்டது.
இதெ எதுக்கு எங்கிட்ட கொடுக்குறீங்க? ஊதாரி ஒதறிட்டான்னு சொல்லவா? அந்தாள நம்பியா நான் புள்ளைய பெத்தன்? அந்தாளு பணம் எங்களுக்கு வாணாம். எம் புள்ளை பொறந்த நாளக்கி புதுத்துணி எடுத்துத் தர மாட்டன்னுதான் காலயில அம்மாம் தகராறு. பேச்சு. நேத்து அந்தாளுப் பொண்டாட்டிக்கி மாசி மகத்தில அரிசி கொடுக்கப் போவலன்னுதான் அம்மாம் சண்ட. புதுசா ஒரு படம் வந்திருக்கு. அந்த சி.டிய வாங்கியாந்து கொடுத்திட்டுப் போன்னன். அதான் லேட்டாயிப்போச்சி. அதுக்காக எம் புள்ளைக்கித் துணி எடுக்க மாட்டன்னு சொல்றதா? ஒங்கப்பனுக்குச் செத் துப்போனவங்கதான் முக்கியம். உசுரோட இருக்கிறவங்க முக்கியமில்ல. வயித்துக்குத் திங்காம சேத்துவச்சி என்னாப் பண்ணப்போறம்? காலயில இல்லாத பணம் இப்ப எப்பிடி வந்துச்சி. தூக்கிட்டுப் போயி அந்தாளு மூஞ்சியிலே கெடாசு. அந்தாளுப் பணமும் சரி, ந்தா வாசல்ல கெடக்குல்ல செருப்பு, அந்தச் செருப்பும் சரிஎன்று சொல்லிக் கத்த ஆரம்பித்தாள். என்ன பேசுற வனஜா? வாய அடக்கிப் பேசுஎன்று சொன்ன தவமணியின் வார்த்தை வனஜாவின் காதில் விழவில்லை.
தம்பி எங்க?” என்று கேட்டாள். அதற்கும் பதில் இல்லை. வனஜா தூக் கிப்போட்ட பணப் பையை எடுத்து அவளுடைய மடியில் போட்டுவிட்டு தம்பி வந்தா கொடுத்திடுஎன்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தாள்.
வாசலில் நின்றுகொண்டிருந்த ராமசாமியின் முகத்தைத் தவமணியால் பார்க்க முடியவில்லை. வாங்கப்பா போவலாம்என்று மட்டும் சொன்னாள். வனஜா சொன்ன வார்த்தைகள் அத்தனையும் அவருடைய காதிலும் விழுந்திருக்கும் என்று நினைக்கும்போதே அவளுக்குக் கண்கள் கலங்கின. வர மாட்டேன் என்று சொன்னவரை அழைத்துவந்தது தன்னுடைய தவறுதான் என்று நினைத்தாள். சட்டென்று கோபம் தலைக்கு ஏறியது. ஆனால் ராமசாமி ஒரு வார்த்தை பேசவில்லை. கோபத்தில், அவமானத்தில் வெடித்து கிளம்புவதற்குப் பதிலாக அவருடைய மனம் குளிர்ந்துபோயிற்று. ஒன்றும் சொல்லாமல் சென்று சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார். அப்பா, அப்பாஎன்று கூப்பிட்ட தவமணியினுடைய வார்த்தைகள் அவருடைய காதில் விழவில்லை.
ராதா செட்டியாருடைய துணிக்கடையில் வந்து நின்றது ராமசாமி யினுடைய சைக்கிள். வேட்டி, துண்டு, சீலை என்று வாங்கிக்கொண்டு சைக் கிளை எடுத்தார். நேரே கதிர்வேல் வீட்டிற்கு வந்தார். கதிர்வேல் இல்லை. அவனுடைய பொண்டாட்டி அஞ்சலைதான் இருந்தாள். அவளிடம் துணிப் பையைக் கொடுத்தார். மடியில் வைத்திருந்த அரைப் பவுன் தாலியையும் எடுத்துக் கொடுத்தார்.
கல்யாணத்துக்கு இன்னம் ஒரு மாசம் இருக்கயில இதுக்கெல்லாம் இப்ப என்னங்க அவசரம்? அதுவும் வெயில்ல வந்திருக்கீங்க? எடுத்துக்கிட்டுப் போயி ஊட்டுல வைங்க. நாங்க குடும்பத்தோட வந்து வாங்கிக்கிறம்என்று சொல்லித் துணிப் பையையும், தாலி இருந்த காகிதப் பொட்டலத்தையும் திருப்பிக்கொடுக்க முயன்றாள் அஞ்சலை.
இன்னிக்கி நல்ல நாளு. அதான் நானே கொண்டாந்தன். முதமுத கொடுக்கிறன். மாங்கல்யத்தத்  திருப்பித் தரியே இது நல்லதா? போ. போயி ஊட்டுல வையி.
ஒன்றும் சொல்லாமல் நின்றுகொண்டிருந்தாள் அஞ்சலை. அப்போது குச்சியை ஊன்றிக்கொண்டு கதிர்வேலுவினுடைய அம்மா பூங்காவனம் வந்தாள். ராமசாமியைக் கண்டு ஆச்சரியப்பட்டாள்.
என்னா சாமி, இம்மாம் தொலவு வந்திருக்கீங்க?”
ஒன்னெப் பாக்கத்தான் வந்தன்.
ஆள வுட்டா நானே வந்திருக்க மாட்டனா சாமி?”
வயசான காலத்தில நீ எதுக்கு அலயுற? அலஞ்சதெல்லாம் போதாதா? பேசாம ஊட்டுலியே இரு. அங்க இங்க அலயாதஎன்று சொன்ன ராமசாமிக்கு என்ன தோன்றியதோ விரலில் கிடந்த மோதிரத்தைக் கழற்றிப் பூங்காவனத்திடம் கொடுத்தார். மோதிரத்தை வாங்கிப் பார்த்த பூங்காவனம் வெலகொண்ட சாமான் வாண்டாம் சாமிஎன்று சொல்லித் திருப்பிக் கொடுத்தாள்.
வாண்டாம் வச்சிக்க. என் நெனவா ஒன் வெரல்ல மாட்டிக்க.
சாவப்போற கெழவிக்கி எதுக்குச் சாமி நக? சாமி வெரல்ல கெடந் தாத்தான் அழவுஎன்று சொல்லி மோதிரத்தைத் தரையில் வைத்தாள் பூங்காவனம்.
எம் பேச்சக் கேக்கணும். மோதரத்த எடுத்து அழிச்சி ஒம் பேரப் புள்ளிவுளக்குத் தோடு மூக்குத்தின்னு செஞ்சி போடு.
பண்டத்த எடுத்துக்கங்க சாமி. நான் சாவுற அன்னிக்கி ஒரு முழக் கோடித் துணி எடுத்தாந்து ஊரு மெச்ச எம் பொணத்துமேல போடுங்கஎன்று
சொல்லிப் பூங்காவனம் கும்பிட்டாள். குனிந்து மோதிரத்தை எடுத்த ராமசாமி அஞ்சலையிடம் கொடுத்தார். மடியை விரித்துப் பிடித்து மோதிரத்தை வாங்கிக்கொண்டாள்.
பத்தரமா இருஎன்று சொல்லிவிட்டு ராமசாமி சைக்கிளை எடுத்தார். பூங்காவனம் ராமசாமி சென்ற திசையில் கையெடுத்துக் கும்பிட்டாள்.  அதை அவர் பார்க்கவில்லை.
பூங்காவனத்தையும், வண்ணான் ஊட்டயும் கை வுட்டுடாத. இந்த ஊட்டுக்காக ஒம் பாட்டன் காலத்திலிருந்து ஒழச்சவங்க. ஊட்டுக்கு வந்தா வெறும் வவுத்தோட அனுப்பிடாத. ஒரு கை சோறு போட மறந்திடாத. யாரு வந்து இந்த ஊட்டு வாசப்படியில நின்னாலும் மனசு குளுந்துபோறாப்ல நாலு நல்ல வாத்த பேசு. வவுறு குளுந்துபோறாப்ல ஒரு கை அன்னம் போடு. நான் செத்தா மாசாமாசம் அம்மாவாச விரதம் இருக்க வாணாம். மகத்துக்கு மகம் அரிசி கொடுக்க வாணாம். தெவசம் கொடுக்க வாணாம். நம்ப ஊட்டு வாசல்ல அன்னம் கேட்டு ஏனத்த நீட்டுனவங்களுக்கு இல்லன்னு மட்டும் சொல்லிடாத. இப்பிடியாப்பட்ட புள்ளயவா நீ பெத்தன்னு எமன் என்னெ செக்குல போட்டு ஆட்டிச் சித்ரவத செய்வான். சாட்டயால அடிப்பான். பல்லிக் குழியில, அரணக் குழியில தள்ளிடுவான்என்று சாவதற்கு முன்பு தன்னுடைய அம்மா உண்ணாமலை சொன்னது நினைவுக்கு வந்ததும் ஹேண்டில்பாரை அவருடைய கைகள் அழுத்திப் பிடித்தன. சைக்கிள் வேகமாக ஓடியது.
முதல் மாதச் சம்பளத்தில ஒரு சீலை எடுத்துவந்து கொடுத்தார். சீலை யைப் பார்த்ததுமே உண்ணாமலையினுடைய முகம் மாறிவிட்டது. இந்தச்
சீலய எதுக்குடா எடுத்தாந்த? இடுப்புல நிக்காத சீல? பொட்டச்சி ஒடம்ப மறைக்கிறதுக்குத்தான் சீல? எடுத்துக்காட்டுறதுக்கா? இப்பிடியான சீல எடுக்கவா ஒன்னெ வாத்தியாருக்குப் படிக்க வைச்சன்? எந்த நாயி ஒனக்கு வாத்தி வேல போட்டுக் கொடுத்தான்? இந்தச் சீலயக் கட்டிக்கிட்டு நான் தெருவுல நடக்கவா? ‘வாத்தியாரு அம்மா கட்டியிருக்கிற சீலயப் பாருடான்னு ஊருக்கார பயலுவோ சிரிக்கணுமா? ஒரு வாத்தியாரோட அம்மா என்னா சீல கட்டணுமின்னு ஒனக்குத் தெரிய வாணாம்? ஒனக்கு எந்த வாத்திப் பயடா படிச்சிக் கொடுத்தான்? எந்தக் கடயில எடுத்தியோ அங்கியே கொண்டுபோயி திருப்பிக் கொடுத்திடுஎன்று சொல்லிக் கொடுத்து விட்டாள். ஆனால் கொடுத்த வேட்டித் துண்டை ஒன்றும் சொல்லாமல் அவருடைய அப்பா வாங்கிக்கொண்டார். ஒரு வேட்டி, ஒரு துண்டு, ஒரு கோவணத் துணி இதுதான் அவருடைய சொத்து. வேட்டியை இடுப்பில் கட்ட மாட்டார். அழுக்காகிவிடும் என்று தலைப்பாகையாகக் கட்டி யிருப்பார். எப்போதும் கோவணத்தோடுதான் இருப்பார். எங்காவது ஊருக்குப் போகும்போது மட்டும்தான் துண்டைத் தேடுவார்.
சைக்கிளைக் கொண்டுவந்து வண்ணான் வீட்டின் முன் நிறுத்தினார். வீட்டில் யாருமில்லை. பக்கத்து வீட்டிலிருந்த கிழவனைக் கூப்பிட்டு சட்டைப் பையிலிருந்த மூவாயிரத்தைக் கொடுத்து குஞ்ஞம்மாகிட்ட கொடுத்திடுஎன்று சொல்லிக் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
நீதான் என்னெ பெத்தியான்னு தெரியலஎன்று வள்ளுவன் சொன் னது நினைவுக்கு வந்த மறு நொடியே தனத்தைப் பற்றி மனம் நினைக்க ஆரம்பித்தது.
நீங்க பெத்த புள்ளைதான? அவன் மேல குத்தமில்ல. நாம்பப் பெத்த புள்ளைமேல நாம்பளே கொற சொன்னா ஊரு நம்புமா? ஒங்கள அப்பா ஆக்குனது அவந்தான். ஒங்கள தாத்தா ஆக்குனதும் அவந்தான். அதுக்காக எல்லாத்தயும் பொறுத்துக்கிட்டுத்தான் ஆவணும். தூண்டிவுடுறா. அவன் ஆடுறான். நெருப்ப வைக்காட்டி அடுப்பு ஏன் எரியப்போவுது?” என்று எப்போதும் வள்ளுவனுக்காகப் பரிந்து பேசுவாளே என்று நினைத்ததுமே அவ சீக்கிரம் செத்ததும் நல்லதுதான். உசுரோட இருந்தாத்தான் எல்லாத் துன்பமும்என்று சொல்லி முனகிய ராமசாமி முன்னைவிட வேகமாக சைக்கிளை மிதித்தார்.
சைக்கிளைக் கொண்டுவந்து மோட்டார் கொட்டகைக்கு முன் நிறுத்தினார். ஒரு முறை வயலைச் சுற்றிவந்து பார்த்தார். நெல் வயல் காய்ந்து போயிருந்தது தெரிந்தது. மோட்டார் கொட்டகையைத் திறந்து மோட்டாரைப் போட்டார். வெளியே வந்து வயலுக்குள் தண்ணீர் பாய்வதைப் பார்த்தார். வரப்பில் உட்கார்ந்து ஒரு கை தண்ணீர் அள்ளி குடித்தார்.  வரப்பிலேயே சிறிது நேரம் நடந்தார். ஒரு இடத்தில் இரண்டு மூன்று குத்துப் பயிர் சாய்ந்திருந்தது, அதை நேராக்கிவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.  முதல் வயல் முடிந்து இரண்டாவது வயல் தண்ணீர் பாய்ந்து முடியும்வரை வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தார்.  தண்ணீர் பாய்ந்து முடிந்ததும் வந்து மோட்டாரை நிறுத்திவிட்டு வெளியே வந்து மேற்கில் பார்த்தார். சூரியன் சற்றைக்கெல்லாம் மறைந்துவிடும் போலிருந்தது. என்ன தோன்றியதோ மோட்டார் கொட்டகைக்குப் பின்புறமிருந்த தென்னை மரத்திடம் வந்து சிறிது நேரம் சாய்ந்து நின்றுகொண்டு வயலைப் பார்த்தார்.  பக்கத்திலிருந்த வாழை மரத்தைத் தடவிகொடுத்தார். எதிரிலிருந்த எலுமிச்சைச் செடியில் ஒரு இலையைப் பறித்து முகர்ந்துபார்த்தார்.  பிறகு வாயில் போட்டு மென்று தின்றார். அப்போதுதான் மோட்டார் கொட்டகைக்கு வடக்கில் இருந்த மாமரத்தில் சுற்றி வைக்கப்பட்டிருந்த மாட்டினுடைய கயிறு கண்ணில் பட்டது. சுற்றுமுற்றும் பார்த்தார். ஆள் அரவமில்லை. மாமரத்திலிருந்த கயிற்றை எடுத்துக்கொண்டு வந்தார். மோட்டார் கொட்டகைக்குள் சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.

* * * * *

 உயிர்மை - அக்டோபர் 2014
சாம்பன் கதை - இமையம்

“சாம்பன் வேற யாருமில்லை.  ஜாம்பவதிக்கும் கிருஷ்ணருக்கும் பிறந்தவன்.  பகவான் கிருஷ்ணரின் மகன்தான்.  இந்தக் கதையில் வருகிற சாம்பன்.  விசுவாமித்திர முனிவரின் சூழ்ச்சியில் அரிச்சந்திரன் வெகு துன்பப்பட்டான்.  சகுனியின் சூழ்ச்சியால் துரியோதனாதிகள் துன்பப்பட்டு  மாண்டார்கள்.  நாரதரின் சூழ்ச்சியால் சாம்பன் பட்ட துன்பம்தான் இது.
•••••••••
“உலகை வலம்வந்து சஞ்சாரம் செய்துகொண்டிருந்த நாரத முனிவருக்குத் திடீரென்று கிருஷ்ணரைச் சந்திக்க வேண்டும் என்று தோன்றிய மறுகணமே துவாரகைக்குப் புறப்பட்டார். யது குல வம்சத்தில் மேலான பண்புகொண்ட வாசுதேவரை முதலில் சந்திக்கச் சென்றார்.  மகா முனிவரின் வருகையைக் கண்டு உளம் மகிழ்ந்து, முனிவருக்குரிய மரியாதைகளைச் செய்து வரவேற்றார் வாசுதேவர்.  வாசுதேவரைச் சந்தித்த பிறகு ரைவதக மலையின் உச்சியில் வசித்துவந்த கிருஷ்ணரிடம் சென்றார் நாரதர்.  தன் மாளிகைக்கு வந்த நாரதரை ஓடிவந்து வரவேற்றதோடு வேண்டிய உபசரணைகள் செய்தார் கிருஷ்ணர்.  அதோடு விருஷ்ணி இனத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோரும் வந்து வணங்கினர்.  கிருஷ்ணரின் மனைவிகள், மகன் பிரத்தியுமனன் உட்பட யாவரும் முனிவரின் முன் தாழ் பணிந்து நின்றனர்.  கிருஷ்ணரின் வரவேற்பில் மகிழ்ந்துபோன நாரதரின் பார்வை தோட்டத்துப் பக்கம் திரும்பியது.  ஆயிரம் கோடி சூரியன் ஒன்றாக இணைந்ததுபோன்ற ஒளியுடன் சாம்பன் பெண்களுடன் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்தது.  அவன் யாரென்று நாரதர் கேட்டார்.  எனக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த மகன் சாம்பன்” என்று கிருஷ்ணர் கூறினார்.  கிருஷ்ணரின் மாளிகையில் நாரதர் வெகுநேரம் இருந்தார். ஆனால் சாம்பன் வந்து வணங்கவில்லை.  இளைஞர்களுடனும் பெண்களுடனும் விளையாடுவதிலேயே அவனுடைய கவனம் இருந்தது.  தோட்டத்திலிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் சாம்பனுடன் பேசவும், அவனோடு சம்போகம் செய்யவும் துடித்ததையும் நாரதர் கண்டார்.
 கிருஷ்ணரின் மகன்களிலேயே பேரழகனாக சாம்பன் இருந்தான்.  எல்லையில்லாத சௌந்தரியனாகவும், தேவாம்சம் பொருந்தியவனாகவும், அக்னி குண்டத்தில் வார்க்கப்பட்ட ஒளிப்பிழம்பாகவும் இருந்தான்.  அவன் மேனி பொன்னை உருவாக்கி வார்த்ததுபோல இருந்தது.  அவனைக் காணப் பெண்கள் போட்டியிட்டு ஓடுடினார்கள். யாதவ குலப் பெண்களுக்குச் சாம்பன் என்றால் உயிர் என்பதை அறிந்த நாரதர், தான் வந்து இவ்வளவு நேரமாகியும் தன்னை வந்து வணங்கி மதியாமல் இருக்கிறானே என்று சாம்பன் மீது கோபம் உண்டாயிற்று.  சாம்பனைப்பற்றி விசாரித்தார். அவனைப்பற்றி எல்லாருமே நல்லவிதமாகவே சொன்னார்கள்.  குறை என்று ஒருவரும் ஒன்றும் சொல்லவில்லை.  அதனால் முனிவரின் கோபம் கூடுதலாயிற்று.  எந்த மேனியழகைக்கொண்டு பெண்களைக் கவர்ந்து- அந்தக் கவர்ச்சியிலேயே மயங்கிக்கிடக்கிறானோ-அந்த மேனியழகைக் குலைத்து நாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.    என்ன செய்தால் சாம்பனைப் பழிதீர்க்க முடியும் என்று யோசித்தார்.  அவனைப்பற்றிக் குற்றம் சொன்னால் யாரும் ஏற்க மாட்டார்கள்.  சிறந்த பண்பாளன், கருணையுள்ளவன், தூஷணையாக யாரையும் பேச மாட்டான் என்று அறிந்த நாரதர் மனித மனத்தில் எது அதிக பொறாமையை உண்டாக்கும் என்று யோசித்தார்.  உலகிலேயே பொறாமைத் தீயை வளர்ப்பது பெண்ணாசைதான்.  பெண்களும் சாம்பனை நோக்கித்தான் ஓடுகிறார்கள்.  அதனால் அதை வைத்தே ஒரு சூழ்ச்சி நாடகம் செய்யலாம், சாம்பனைத் தண்டனிட்டு தன் காலடியில் விழ வைக்கலாம் என்று நினைத்து தனது சூழ்ச்சியை தந்தைக்கும் மகனுக்குமிடையே உருவாக்கினார்.  கிருஷ்ணரிடம் “உன் குலத்தில் ஒரு இழிவின் நிழல் படிந்திருக்கிறது.  அதுவும் ஜாம்பவதியின் மகன் சாம்பனின் மூலமாக என்று கூறினார் நாரதர். 
கிருஷ்ணர் சாம்பனின் நற்பண்புகளையும், பெரியவர்களிடத்தில் அவன் நடந்துகொள்ளும் பாங்கையும் சொன்னார்.  அது நாரதருக்கு மேலும் சினத்தை உண்டாக்கிற்று.  “உன்னுடைய பதினாறாயிரம் மனைவியரும் சாம்பனின் அழகில் மயங்கிக் கிடக்கிறார்கள்.  அவனுடைய உறவுக்காகத் தவம் கிடக்கிறார்கள் என்று நாரதர் சொன்னதும்-நாரதரை முதன் முறையாக கிருஷ்ணர் எதிர்த்துப் பேசி வாதம் செய்தார்.  “ருக்குமணி, சத்தியபாமா, ஜாம்பவதி, காந்தாரி, பிரஸ்வாசினி, விரதினி போன்ற எட்டுப் பேரைத்தவிர மற்றவர்கள் அனைவரும் சிறைமீட்டுக் கொண்டுவரப்பட்டு, எனக்கு மனைவியாக்கப்பட்டவர்கள். அவர்களும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள்.  அவர்கள் மீது குற்றம் சொல்வதை நம்புவதற்கில்லை”
“ருசு வேண்டுமா?
 “கொடுங்கள்
“நேரம் வரும்போது தருகிறேன்”“ என்று கோபமாகக் கூறிவிட்டு கிருஷ்ணரின் மாளிகையைவிட்டு வெளியேறினார்.  கிருஷ்ணர் பலவிதமாகச் சிந்தனை செய்தார்.  எந்த வகையிலும் சாம்பனின் மீது அவரால் குறை காண முடியவில்லை.  அந்த விசயத்தை அதோடு மறந்துவிட்டார்.  ஆனால் சூதும், வாதும், நயவஞ்சகமும், கெடுபுத்தியும் கொண்ட நாரதர் மறக்கவில்லை.  சாம்பன் மீதான கோபம் தணல்போல அவருடைய நெஞ்சுக்குள் எரிந்துகொண்டிருந்தது.  தக்க நேரம் வரட்டும் என்று காத்திருந்தார்.  அதற்கான நேரம் வந்ததும் துவாரகைக்குப் புறப்பட்டார்.
       பூங்காவனத்தில் பெண்களோடு உல்லாசமாக இருந்த சாம்பனைச் சந்தித்து “உன் தந்தை உடனே உன்னை ரைவதக மலைப் பூங்காவிற்கு வரச்சொன்னார் என்று கூறினார்.  அது கிருஷ்ணர் தன் பதினாறாயிரம் மனைவியருடன் உல்லாசமாக இருக்கிற நேரமாகையால் அப்போது யாரும் அந்த இடத்திற்கு செல்ல மாட்டார்கள்.  அதனால் சாம்பன் தயங்கினான்.  “என்னைச் சந்தேகப்படுகிறாயா? என்று நாரதர் கேட்டதும் “அப்படியில்லை.  முனிவருக்கெல்லாம் முனிவர் தாங்கள்.  தங்களுடைய வாயிலிருந்து வரக்கூடிய சொல் எப்படிப் பொய்யாக இருக்க முடியும்?  தங்கள் உத்தரவுப்படியே நான் சென்று என் தந்தையைச் சந்திக்கிறேன்“ என்று கூறி, நாரதரை வணங்கிவிட்டு கிருஷ்ணரின் அந்தப்புர பூங்காவிற்குச் சென்றான். 
வழியில் பூனை குறுக்காச்சு, புதுப்பானை எதிராச்சு.  வாணியனும் சாணானும் எதிரில் வரலாச்சு.  தாலியறுத்த முண்டையும், வழுக்கை மொட்டையடித்த பிராமணத்தியும் வாராளாம் நேரெதிரில்.  தீய சகுனங்களை கண்டு மனம் கலங்கினாலும் பெரிதுமதைப் பாராமல் நடக்கலானான் சாம்பன். 
பூங்காவில் கிருஷ்ணர் தம் மனைவியரோடு நிர்வாணக் கோலத்தில் உல்லாசமாக இருந்ததைக் கண்டான்.  அவமான உணர்வால் குன்றி வெட்கி திரும்ப நினைத்தான்.  அப்போது கிருஷ்ணர் சிறைமீட்டு வந்த பல பெண்களில் பலர் சாம்பனின் அழகில் மயங்கி மோகம் கொண்டனர். தங்களுடைய மேனியழகை அவனுக்குக் காட்ட தந்திரபோயாயங்கள் செய்தனர்.  சாம்பன் மீது மோகம்கொண்ட பெண்களைப் பார்த்து கிருஷ்ணர் “நீங்கள் அத்துணை பேரும் என்னுடைய பத்தினிகளாகயிருந்தும், அந்த ஒழுக்கத்திலிருந்து தவறியபடியால் வரும் பிறவிகளில் வேட்டை நாயாகப் பிறவியெடுத்து காடு மலைகளில் அலைந்து திரிய வேண்டும்.  கொள்ளைக்காரர்களிடம் சிக்கித் தவிக்க வேண்டும்.  அடுத்தடுத்த பிறவிகளில் பேயாகப் பிறப்பீர்கள் என்று சாபமிட்டார்.  அதே கோபத்தோடு சாம்பன் பக்கம் திரும்பி “வரக்கூடாத இடத்திற்கு வந்தாய்.  செய்யத் தகாத நீசச் செயலைச் செய்தாய்.  பெற்ற தாய்களையும் மோகம் கொள்ள வைக்கும் உன் மேனியழகு இந்தக் கணமே அழிவதாக.  உன் முன்னால் இத்தனை ஆயிரம் பேரும் நாணித் தலை குனிந்து நிற்பதுபோல உன்னைக்கண்டு உலகம் நாணி ஒதுங்கட்டும்.  எந்த மேனியைப் பார்த்து பெண்கள் மோகம் கொண்டார்களோ அந்த அழகிய மேனி அழியட்டும்.  உலகமே உன்னைக் கண்டு அசிங்கப்பட்டு விலகிப்போகும்படியான குஷ்டரோகம் உன்னைப் பிடிக்கட்டும்.  உன்னைக் கண்டார் நகைக்கவும், நாணவும் வேண்டும்.  உலகமெல்லாம் பழிப்பதற்கு ஆளாவாய். பூமியில் விதைக்கப்படும் தானியம்போல் உன் மேனியெங்கும் இக்கணத்திலிருந்து நோய்க்கூறுகள் முளைக்கட்டும் என்று சாபமிட்டார்.  மின்னல் வெட்டுகிற நேரம்தான். எல்லாம் முடிந்துவிட்டது.
       “நானாக வரவில்லை.  நாரத முனிவர் சொல்லித்தான் வந்தேன்.  என் மீது எந்தத் தவறும் இல்லை.  எனக்கு ஏன் கொடிய சாபத்தைத் தந்தீர்கள் என்று அழுதபடியும் தொழுதபடியும் கேட்டான் சாம்பன்.  அவனுடைய தேகம் பதறிற்று.  ருக்குமணி, சத்தியபாமா, ஜாம்பவதி மூவரும் தாரைதாரையாகக் கண்ணீர்விட்டு அழுதனர்.  கோபம் தணிந்த பிறகுதான் கிருஷ்ணருக்குச் சகல உண்மைகளும் புரிந்தது.  புத்திரசோகம் அவரைக் கவ்வி மனம் மாறுகிற நேரமாகப் பார்த்து அந்த இடத்தில் பிரசன்னமானார் நாரதர்.
 “கிருஷ்ணா எல்லாமறிந்தவன் நீ. புத்திரன் என்றுகூடப் பார்க்காமல் அவசரப்பட்டுவிட்டாயே.  இது பொறாமைக் குணம்.  அதிலிருந்து நீயும் தப்பவில்லை என்பது ருசுவாகிவிட்டது.  பெண் மனதைப் புரிந்துகொள்ள உனக்கு ஒரு வாய்ப்பு.  உண்மை புரிந்ததா?  உன் கண்ணெதிரிலேயே உன் மனைவியர் பிற ஆடவன் மீது, அதுவும் மகன் மீதே மோகம் கொண்ட காட்சியைப் பார்த்தாய்.  சாபமும் கொடுத்தாய்.  முன்பொரு காலத்தில் என்னிடம் ருசு கேட்டாய்.  ருசுவைக் கொடுத்துவிட்டேன்.  இப்போது என்ன செய்யப்போகிறாய்?  சாம்பன் குற்றமற்றவன் என்பது எனக்கும் தெரியும், உனக்கும் தெரியும்.  தெரிந்தும் சாபமிட்டாய்.  சாபத்திலிருந்து எப்படி அவனை விடுவிக்கப்போகிறாய்?  அதேநேரத்தில் சாம்பனுக்குச் சாபம் கிடைக்க வேண்டும், அதை அவன் அனுபவித்தே தீர வேண்டும் என்பதும் என் விருப்பம் என்று நாரதர் சொன்னார்.
       கிருஷ்ணர் சஞ்சலத்தில் ஆழ்ந்து பேச முடியாமல் நின்றார்.  அவருடைய சஞ்சலத்தைப் போக்கும் விதமாக “நான் குற்றமற்றவன்.  ஒரு பாவமும் அறியாதவன்.  ஒரு தீங்கும் செய்யாதவன்.  எனக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை?  என்னை ஏன் சபித்தீர்கள்? என்று சாம்பன் கேட்டான்.  அவன் உள்ளம் எரியும் தீக்கோளமாக இருந்தது.  ருக்குமணி, சத்தியபாமா, ஜாம்பவதி மூவரும் கிருஷ்ணரின் காலில் விழுந்து வணங்கியதோடு, நாரதரின் காலிலும் விழுந்து துதித்துப் போற்றி சாம்பனைச் சாபத்திலிருந்து விடுவிக்கக் கோரினர்.  அப்போது நாரதர் கிருஷ்ணரைப் பார்த்து கள்ளத்தனமாகச் சிரித்து “உண்மையைச் சொல்லும் நேரம் வந்துவிட்டது.  தாயாக இருந்தாலும், தாரமாக இருந்தாலும், புத்திரர்களாக இருந்தாலும் ஆசாபாசங்களை நீக்கி உண்மையைப் பேசுவதுதானே கிருஷ்ணா தர்மம்.  புத்திர பாசம் வாயை அடைக்கிறதா? என்று நாரதர் கேட்டதும் புத்தி தெளிந்த மாதிரி கிருஷ்ணர் சொன்னார்.  “சாம்பா.  நீ ஜனித்த நேரத்திலேயே உனக்குக் குஷ்டரோகம் விதிக்கப்பட்டிருந்தது.  இதை நீ அனுபவித்துத்தான் தீர வேண்டும்.  நோய் வரவேண்டிய நேரம் வந்துவிட்டது.  கோபத்தில் அதை நான் என் வாயால் சொன்னேன்.  அவ்வளவுதான்.  நாரதர் இந்த நாடகத்தை நடத்தாவிட்டால் உன் மீது இருந்த பாசத்தால் மறந்திருப்பேன்.  விதிப்பயனிலிருந்து யாரும் தப்ப முடியாது.  நாரதருக்கு ஏதோ ஒரு வகையில் கோபமூட்டியிருக்கிறாய்.  நீ அவருக்கு உரிய மரியாதை செய்யவில்லை.  நீ அவரிடம் சரணாகதியடைய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாக இருக்கிறது.  நீ அவரிடமே சரணடை.
“எனக்கு வர இருக்கிற நோய் எப்போது என்னை விட்டு அகலும்?  சாபத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும்.  நான் எப்போது புறப்பட வேண்டும்?  பாவினானென்கிற பேராச்சு.  அதனால் நெஞ்சமும் ரணமாச்சு என்று வருந்தி வினவினான் சாம்பன்.
“இப்போதே உன் உடலில் நோய்க்கான அறிகுறி தெரிகிறது.  நீ இன்றே இப்போதே புறப்பட வேண்டும்”“ என்று சொல்லிவிட்டுக் கிருஷ்ணர் மனம் கலங்கி தன் புத்திரனை பார்க்க முடியாமல் தத்தளித்தார்.  “சாம்பா உடனே நீ புறப்படு.  நாளும் கோளும் இன்று நன்றாக இருக்கிறது.  புறப்படு.  செய்தாருக்குச் செய்த பலன் கிடைக்கும்.  நதிக் கரையோரம் யாரும் அறியாவண்ணம் தங்கியிரு.  நோய் முழுவதும் உன்னை ஆக்கிரமித்த பிறகு என்னைத் தியானி.  மற்றதை அப்போது சொல்கிறேன்.  வல்லமை உள்ளவன் வானத்தை வில்லாக வளைப்பான். புத்திசாலி துரும்பைத் தூணாக்குவான்.  இது உனக்குச் சோதனைக்காலம் என்று சொல்லிவிட்டு நாரதர் மாயமாக மறைந்துவிட்டார்
       சாம்பன் திகைத்துப்போய்ப் பேசுவது அறியாது நின்றான்.  மனக்கவலை ரம்பம் மாதிரி அவன் உள்ளத்தை அறுத்தது.  நெருப்பில் விழுந்த புழுப்போலவும் தூண்டிலில் சிக்கிய மீன்போலவும் அவன் உள்ளம் துடித்தது.  துக்கம் அவன் உள்ளத்தில் சமுத்திரப் பேரலையாய் எழுந்தது.  கடல் பொங்குவது மாதிரி அவனுடைய உள்ளம் பொங்கிற்று.  அவனுடைய உள்ளத்திலிருந் நெருப்பு துவாரகை நகரை மட்டுமல்ல யது குலத்தையே அழிக்க வல்லது.  ஆனாலும் தந்தையை எதிர்த்து அவன் பேசவில்லை.  மனதை கல் போன்று மாற்றிக்கொண்டான்.  ஜாம்பவதியும் ஒரு சொல் பேசவில்லை.  “தந்தையின் வாக்குப்படியே நட என்றே சொன்னாள்.  சாபத்தை அவன் வெறுப்போடு ஏற்கவில்லை.  தன் முற்பிறப்பின் தீவினை என்றே நம்பினான்.  மாடமாளிகை, பொன், பொருள், ஆடை ஆபரணங்கள், கையாள், ஏவலாள், படைகள், சேனைகள், மனதை மயக்கிய யது குல அழகிகள், பொன் என ஒளிரும் மனைவி லட்சுமணா எல்லாவற்றையும் ஒரு நாழிகையில் மறந்தான்.  தான் பெற்ற சாபம் மட்டுமே அவன் சிந்தையில் இருந்தது.  சற்று முன்புவரை ஆடல், பாடல், பெண்களுடன் உல்லாசம், காமக்களியாட்டம் என்றிருந்த சாம்பனின் நிலை ஒரு நொடியிலேயே பூகம்பத்தில் சிக்கிய மாளிகை மாதிரி சிதறிப்போயிற்று.  இடி விழுந்த மரம் எரிந்து கருகிப்போவதுபோல அவன் உள்ளம் கருகிப்போயிற்று.  சொத்து, சுகம், பொன், பொருள், மாளிகை, வாழ்ந்த மனிதர்கள் எல்லாவற்றையும் இழக்க வேண்டிவந்துவிட்டதே என்று மனம் நொந்தான்.  எரிமலைக் குழம்புபோல, அக்கினிக் குண்டம்போல அவன் நெஞ்சமிருந்தது. அதுவும் ஒரு கணம்தான்.  பிறகு மனம் தெளிந்தவனாக “உத்தரவு தந்தையே.  உங்கள் வார்த்தைகள்தான் எனக்கு மந்திரம்.  உங்கள் கோபம் எனக்குச் சாபம்.  உங்கள் அன்பும் எனக்குச் சாபம்தான்.  உங்களுக்கு மகனாக பிறந்ததும் சாபம்தான்.  சாபத்தை வரமாகப் பெற்றிருக்கிறேன் என்று கூறினான்.
 “உனக்கு வேண்டியதையெல்லாம் எடுத்துச் செல் என்று கிருஷ்ணர் கூறினார்.  “பொன், பொருள், யானை, குதிரை, சேவையாள் எதுவும் வேண்டாம்.  தாங்கள் கொடுத்த சாபத்தை மட்டும் நான் சுமந்து செல்கிறேன் என்று கூறி வணஙகி நின்றான்.  கிருஷ்ணர் ஆசி கூறியதும் தன் தாய்மார்களை ருக்குமணி, சத்தியபாமா, ஜாம்பவதி, மூவரையும் வணங்கினான்.  மூன்று பெண்களும் அழுதார்கள்.  மகனைக் கட்டித்தழுவினார்கள்.  யது குலப் பெண்கள் கணவனின் ஆணையை மீற முடியாது.  கறந்த பால் முலை புகா.  கடைந்தெடுத்த வெண்ணெய் மோருக்குள் புகா.  மலர்ந்த பூவும், உதிர்ந்த காயும் மரம் புகா.  செய்தவினை இல்லையென்று ஆகா.  அதனால் சாபத்திலிருந்து விடுபட மகனுக்கு நல்லாசி கூறினார்கள். 
       சாம்பன் தன் மாளிகைக்கு வந்தான்.  வேலையாள், பணியாள், யது குல கன்னியர் என்று யாரையும் அவன் சந்திக்கவில்லை.  தன் மனைவி லட்சுமணாவை மட்டும் சந்தித்து நடந்தவற்றை விளக்கிக் கூறினான்.  லட்சுமணாவின் அழுகையும், கூக்குரலும் மாளிகையை நடுங்கவைத்தது.  “தந்தையின் சாபத்திலிருந்து தப்பிக்க முடியாது.  இது விதி.    விதியின் பயன்.  இதை யாராலும் மாற்ற முடியாது.  விடைகொடு என்று கேட்டான்.  உடன் வருவதாக லட்சுமணா கூறினாள்.  அவன் அவள் கோரிக்கையை ஏற்கவில்லை.  “நீயும் நானும் கணவன் மனைவி என்றாலும் இருவரும் ஒன்றல்ல.  சந்தர்ப்பத்தால் இணைந்திருக்கிறோம்.  எனக்கான சாபம் உன்னைச் சேராது.  இரண்டு உடல்கள்.  இரண்டு உயிர்கள்.  இரண்டு மனங்கள்.  இரண்டு உலகங்கள்.  கணவன் மனைவி என்ற பந்தத்தால் மட்டுமே நாம் இணைந்திருக்கிறோம் என்று சாம்பன் லட்சுமணாவுக்கு வேண்டிய புத்திமதிகளை கூறினான்.  “சாரையும் சர்ப்பமும்போல நாம் சரசமுடன் இணைந்திருந்த காலத்தை மறந்தீரா?  இது என் கடைசி ஆசை.  இன்றிரவு என்னோடு இணையுங்கள் என்று லட்சுமணா கூறியதைச் சாம்பனால் தட்ட முடியவில்லை.  அதனால் அன்றிரவு சாம்பன் சம்போகம் செய்தாலும் அது உடல் மட்டுமே ஈடுபட்ட ஒன்றாக இருந்தது.  விடிகாலையில் இருள் விலகுவதற்கு முன்பாகவே “யது குலத்தில் பிறந்தவர்கள் தந்தையரை விமர்சிப்பதில்லை.  எனக்கு என் தந்தை சாபத்தை மட்டுமே தரவில்லை.  அதிலிருந்து விமோசனம் பெறுவதற்கான உபாயத்தையும் சொல்லியிருக்கிறார்.  சாபத்திலிருந்து விடுதலை பெற்று திரும்பி வருவேன்.  காத்திரு.  சித்தம் கலங்காதேஎன்று கூறி லட்சுமணாவிடம் விடைபெற்று யார் கண்ணிலும் படாமல் நகரத்தை விட்டு வெளியேறினான்.
       நகரத்தைவிட்டு வந்து யாரும் அறியாவண்ணம் கடற்கரையோரம் சிறு குடிசையில் தங்கினான் சாம்பன்.  பகலில் அவன் வெளியே வருவதே இல்லை.  நகரத்தில் நடக்கும் கேளிக்கைகள், விளையாட்டுகள், இளைஞர்கள் கூச்சலிடுவது அவ்வப்போது அவனுக்குக் கேட்கும்.  மது மயக்கத்தில் யதுகுல பெண்களும், ஆண்களும் கடற்கரையில் விளையாடுவதை எப்போதாவது பார்ப்பான்.  “மனம் ஆசைப்படுவது மட்டும் வாழ்க்கை இல்லை என்று அவன் தனியாகத் தங்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே தெரிந்துகொண்டான்.  பழைய நினைவுகள் அலைகளாய் எழுப்பிக்கொண்டிருந்தன.  ராஜ வம்சம் என்பதையும், ராஜகுல வாழ்க்கையையும் எண்ணிக் கலங்கினான் இல்லை.  ஆனாலும் அவன் மனம் சமுத்திரத்தில் ஆடும் படகு மாதிரி தடுமாறிக்கொண்டிருந்தது. 
ஓராண்டு முடிவதற்குள்ளாகவே குஷ்டரோகம் அவன் உடல் முழுவதும் பரவிவிட்டது.  முற்றிலும் குரூபியாகிவிட்டான்.  நோயால் உடலின் பாகங்கள் தேய ஆரம்பித்தன.  அங்கத்தில் ஆங்காங்கே குழிப்புண்கள் உருவாகி முழுத் தோற்றத்தையும் மாற்றிவிட்ட பிறகு ஒரு நாள் கிருஷ்ணரைப் பார்க்கப் புறப்பட்டான்.  துவாரகையில் இருந்தவர்கள் யாருக்குமே அவன் சாம்பன்தான் என்று தெரியவில்லை.  முன்பு அவன் அழகில், உடலின் ஒளியில் மயங்கி விளக்கொளியில் வந்து விழும் பூச்சிகள்போல வந்து குவிந்த பெண்கள் எல்லாம் ஒதுங்கிச் சென்றனர்.  நகரத்தின் வீதிகளில் மட்டுமில்லை, மாளிகையில்கூட ஒருவருக்கும் அவனை அடையாளம் தெரியவில்லை.  அவனுடைய மனைவி லட்சுமணாவுக்குக்கூட அவனை அடையாளம் தெரியவில்லை.  கிருஷ்ணரும் ஜாம்பவதி மட்டுமே அவனை அடையாளம் கண்டனர்.  மகனின் தோற்றத்தைக் கண்டு ஜாம்பவதி கண்ணீர்விட்டு அழுதாள்.  ஆற்றில் போகும் அளவுக்கு அவளுடைய கண்ணீர் பெருகிற்று.  சாம்பனின் நிலையைக் கண்டு நிலை தடுமாறிய கிருஷ்ணருக்குக் காந்தாரி மகா பாரதப்போர் முடிந்து பாண்டவர் பட்டாபிஷேகம் செய்தபோது கொடுத்த சாபம் நினைவுக்கு வந்தது.  “கிருஷ்ணா!, சூதகா, என் ராஜ்ஜியத்தை அழித்தாய், கௌரவர்கள் நூறு பேரையும் சூது செய்தும் நயவஞ்சகம் செய்தும் அழித்தாய்.  நான் வானப்பிரஸ்தம் போகிறேன்.  இன்று நான் எப்படி என் புத்திரர்களை இழந்து தவித்து அழுகிறேனோ, அதேமாதிரி நீயும் அழ வேண்டும்.  மகனை இழந்து நீயும் வாடுவாய்.  நான் பத்தினியாக இருந்தால் என் சாபம் பலிக்கட்டும் என்று சொன்னாள்.  “காந்தாரி கொடுத்த சாபத்தால்தான் சாம்பா உனக்கு இந்தத் தீங்கு நேர்ந்தது.
 தந்தையே உங்களைத் துன்புறுத்த வரவில்லை.  அடுத்து நான் செய்ய வேண்டியது என்ன? என்று அறியவே வந்தேன்.
“நாரத முனிவரை மனதில் தியானி.  அவர்தான் இதற்கான உபாயத்தை உனக்குச் சொல்ல முடியும்.  நாரதர் சூழ்ச்சி செய்தார் என்று சிந்தை கலங்க வேண்டாம்.  நல்லது நடக்கவும், அறத்தை நிலைநாட்டவும்தான் இந்தச் சூழ்ச்சியைச் செய்தார்
 சாம்பன் நாரத முனிவரை வணங்கித் தியானம் செய்தான்.  அவன் தியானித்த மறுகணமே நாரதர் அவ்விடத்தில் பிரசன்னமானார்.  அவரை பூஜை செய்து வணங்கி “மகா முனிவரே என்னுடைய சபலபுத்தியால் தங்களுக்குரிய மரியாதையைச் செய்யத் தவறிவிட்டேன்.  அதற்கான தண்டனை எனக்கு கிடைத்துவிட்டது.  என் தந்தையின் சாபத்தின்படி குஷ்டரோகம் என் உடல் முழுவதும் பரவிவிட்டது.  இதிலிருந்து விடுபடுவதற்கான உபாயத்தைக் கூறி அருள வேண்டும்”“ என்று கேட்டான்.
       சாம்பனின் பணிவு நாரத மகாமுனிவரின் மனதைக் குளிர்வித்தது.  “விருஷ்ணி குல ரத்தினமே.  உன் நடத்தை, பேச்சு, உன் பெருந்தன்மை, சொல் மீறாமை அனைத்தும் என் மனதைக் குளிர்வித்தது.  சூரியன் மட்டும்தான் கண்ணுக்குத் தெரிந்த ஒரே கடவுள், ஒளிரூபன்.  அவனுடைய சொரூபம் நெருப்பேயாகும்.  நீ அவரை நோக்கித்தான் வணங்க வேண்டும், அவரை நோக்கித்தான் பயணப்பட வேண்டும்.  உடனே நீ சூரிய உலகத்திற்குச் செல்.  ஒளிக்கடவுளையே வணங்கு.  பயணத்தில் நீ மிகுந்த துன்பத்தை அடைவாய்.  ஆனாலும் உன் துன்பம் வீண் போகாது.  அப்பன் செய்த பாவம் பிள்ளைமேலே என்பதுபோல காந்தாரி கிருஷ்ணருக்கு இட்ட சாபத்தை நீ அனுபவித்துத்தான் தீரவேண்டும். பாரதப் போரில் கிருஷ்ணன் செய்த தவறுகளுக்கான தண்டனையையும் கிருஷ்ணனுடைய வாரிசான நீதான் அனுபவிக்க வேண்டும். பத்தினி இட்ட சாபம்.  பாரதப்போரில் ஒரு பாவமும் செய்யாதவள் காந்தாரி மட்டும்தான். அவள் செய்த ஒரே தவறு தன் கண்களைக் கட்டிக் கொண்டதுபோல தன் வாயையும்  கட்டிக்கொண்டதுதான்.  அவள் இட்ட சாபமாயிற்றே.
“தங்களுடைய கருணைக்கு பணிகிறேன்.  சூரிய உலகம் எங்கே இருக்கிறது.  அங்கு நான் எப்படிச் செல்லவேண்டும்?
       “நீ இங்கிருந்து வடக்குக் கடற்கரை நோக்கிப் போகவேண்டும். அங்கிருந்து வடகிழக்குத் திசையில் திரும்பி செல்.  ஒரு பருவகாலம் கழித்து சந்திரபாகா நதிக்கரையை அடைவாய்.  அங்கு பேரொளிமிக்க சூரிய தேவன் ஆணுருவம்கொண்டு வீற்றிருக்கிறார்.  அவரைப்போய் வணங்கு.  உன் சாபம் விலகும்.  உன் பயணத்தில் இடர் ஏதாவது ஏற்பட்டால் என்னை தியானம் செய்.  உனக்கு வேண்டிய உபாயங்களைச் செய்து தருகிறேன்.“  
 மகா முனிவரே தங்கள் கருணையே கருணை என்று கூறிவிட்டு நாரதரையும், கிருஷ்ணரையும் வணங்கிவிட்டு சூரியத்தலம் நோக்கி புறப்படத் தயாரானான்.  அப்போது “உன் பயணத்திற்குத் தேவையான பொன், பொருள், செல்வம், பணியாள், ஏவலாள் என்று எவ்வளவு வேண்டுமோ அவ்வளவையும் எடுத்துச் செல் என்று கிருஷ்ணர் கூறினார்.
       “தந்தையே! என்னை மன்னியுங்கள்.  நேற்றைய வாழ்க்கை என்பதை நான் மறந்துவிட்டேன்.  தாங்கள் சொல்கிற பொருள்களையெல்லாம் எடுத்துச் சென்றால் நேற்றைய வாழ்க்கையிலிருந்து என்னால் விடுபட முடியாது.  நான் விருந்துக்குச் செல்லவில்லை.  குஷ்டரோகத்தைவிட எனக்கு நேற்றைய வாழ்வைப் பற்றிய எண்ணம்தான் அதிக துன்பம் அளிக்கிறது.  எனக்கு அது வேண்டாம்.  என் பயணம் உல்லாசத்துக்கானது அல்ல.  எனக்குப் புகழ் வந்தாலும் இழிவு வந்தாலும் இரண்டும் தங்களையே சாரும்.  என் பயணம் சாபத்திலிருந்து, நோயிலிருந்து விடுபடுவதற்கானது.  ஆகவே என் பயணத்திற்கு நல்லாசி கூறுங்கள்.  அதை மட்டும் எடுத்துச் செல்கிறேன் என்று கூறி கிருஷ்ணரை மண்டியிட்டு வணங்கினான். 
“உன் மனம் விரும்பும்படி நடக்கட்டும்.  உனக்குச் சகல மங்கலமும் உண்டாகட்டும் என்று கிருஷ்ணர் ஆசி கூறினார்.  சாம்பன் நாரத முனிவரையும் வணங்கினான்.
       சாம்பன் துவாரகையைவிட்டு வெளியேறினான்.  கல், முள், கட்டாந்தரை, ஓடை, ஆறு, நதி, மலை, குகை, பாலைவனம் என்று நடக்க ஆரம்பித்தான்.  இரவு பகல் பாராது,  காற்று, மழை, வெயில் பாராது நடந்தான்.  பசி, தாகம் ஏற்பட்டபோது வழியில் கிடைத்த காய்கனி, கிழங்குகளை உண்டான்.  காட்டாற்றுத் தண்ணீரைக் குடித்தான்.  சிறிது காலத்திலேயே அவன் காட்டுவாசியைப்போல மாறி ஆறு, மலைகள், நதிகள், பறவைகள், மரம், செடி, கொடிகளுடன் பேசக் கற்றுக்கொண்டான். மனதிலுள்ளதை அப்படியே பேசினான். பயணத்தில் உலகில் தான் தனியன்.  தனக்கென்று யாருமில்லை.  நோய் மட்டுமே சொந்தம்.  வேறில்லை என்பது தெரிந்ததும் பொன், பொருள், செல்வம், மாளிகை, பெண்கள்பற்றிய ஆசைகள் எல்லாம் தீயில் விழுந்த பூச்சிகள்போல மடிந்துபோயின.  அவனுடைய உள்ளம் அப்பழுக்கற்ற பளிங்கு மாதிரி இருந்தது.  ஜனனத்திற்கும் மரணத்திற்குமிடையே மனித மனம் கட்டும் கோட்டைகள் என்ன?  உலகிலுள்ள ஜீவராசிகளிலேயே கீழ்த்தரமான புத்தியும், சூதுவாதும், நயவஞ்சகமும், பேராசையும், பொருளாசையும் கொண்டு அதற்காக எத்தகைய தீய செயல்களிலும் ஈடுபட்டுத் துரோகம், வஞ்சகம் செய்வதோடு மாங்கல்ய தோசம் செய்வதுமான குணம் இழிபிறவியான மனிதனுக்கே உண்டு என்று தெளிந்த காரணத்தினால் சாம்பன் தன் பழைய வாழ்க்கையை மறக்க முயன்றான்.  பழையவற்றை நினைத்தால் இன்று வாழ முடியாது.  படிப்படியாக நாரதர், கிருஷ்ணர் மீது இருந்த கோபம் தணிந்தது.  அவர்கள் மீது கூடுதலான பற்று ஏற்பட்டது.  இது என் விதி.  இதை நான் அனுபவித்தே தீரவேண்டும் என்று நினைத்த காரணத்தினால் அவன் சாபத்திலிருந்து விடுபடுவதைப்பற்றியே சிந்தித்தான்.  தான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியம் அவனை வழிநடத்தியது.  வழியில் காண முடியாததையெல்லாம் கண்டான்.  அப்போதுதான் அவனுக்குத் தெரிந்தது. மனம் எப்போதும் தண்ணீர் மாதிரி ஓடிக்கொண்டேயிருப்பது என்பது.  தண்ணீரைப் பிடித்து வைப்பது முடிகிற காரியமா?  முடிந்தாலும் எவ்வளவு நேரத்துக்கு?
                ஒரு நாள் அந்திப்பொழுதில் அவன் ஒரு வனாந்தரத்தை அடைந்தான்.  களைப்பால் ஒரு ஆலமரத்தின் நிழலில் உட்கார்ந்து இளைப்பாறினான்.  அப்போது எறும்பு முதல், யானை வரையிலான எண்பத்தியெண்ணாயிரம் ஜீவராசிகளும் அவனைச் சுற்றியிருந்தன.  ஒன்றுகூட தானாக வந்து அவனை இம்சிக்கவில்லை.  அப்போது இத்தனை ஜீவராசிகள் இருந்தும் ஒன்றுகூட என்னைத் துன்புறுத்தவில்லை.  இருந்தும் என் மனம் ஏன் சஞ்சலம் கொள்கிறது?  அப்படியானால் என் மனம்தான் என்னை இம்சிக்கிறது.  அதிலிருந்து விடுபட்டால் துன்பம் இருக்காது, பேதங்கள் இருக்காது.  மனம்தான் நோயை உண்டாக்குகிறது, நேற்றைய வாழ்வுக்காக ஏங்குகிறது.  முதலில் அதிலிருந்து விடுதலை பெற வேண்டும். நோயிலிருந்து, சாபத்திலிருந்து விடுபடுகிறேனோ இல்லையோ மனதிலிருந்து-அதன் ஆசைகளிலிருந்து விடுபட வேண்டும்.  ஈசன் அதற்காகத்தான் எனக்கு இந்தச் சாபத்தைத் தந்திருக்க வேண்டும், யாரையும் நிந்திப்பதில் பயனில்லை என்று நினைத்தான்.  மனதிலிருந்து விடுதலை.
       சாம்பனின் வழியில் எதிர்ப்பட்ட ஆறு, குளம், காடு, மலை, குகை,நதி,மிருக இனங்கள், மனித சஞ்சாரமற்ற தனிமை ஆகியவை அவனுக்கு இருந்தது.  “சாம்பா, நீ நோயிலிருந்து, சாபத்திலிருந்து விடுதலைபெறப் போகவில்லை.  உன்னிடமிருந்து- உன் மனதிடமிருந்து, அதன் ஆசைகளிலிருந்து விடுதலை பெறப் போகிறாய் என்பதை உணர்வாயாக“” என்று ஒவ்வொன்றும் சொல்லிற்று.  அந்த வார்த்தைகள் காய்ந்த  பயிருக்குத் தண்ணீர் ஊற்றியதுபோல், கடலில் தத்தளித்தவனுக்குத் துடுப்பு கிடைத்ததுபோல் இருந்தது.  மதியப் பொழுதில் ஒரு ஆற்றை அடைந்தான்.  குஷ்டரோகி என்பதால் யாரும் அவனைப் படகில் ஏற்றிக்கொள்ளவில்லை.  வணங்கிக் கேட்ட பிறகுதான் ஏற்றிக்கொண்டார்கள்.  ஆனாலும் படகிலிருந்த ஒருவரும் அவனிடம் பேசவில்லை.  மற்றவர்களுக்குச் சங்கடம் தராத வகையில் படகின் ஒரு மூலையில் சாம்பன் உட்கார்ந்திருந்தான்.  படகுப் பயணம் முடிந்ததும், கடல் வந்தது.  கடற்கரையோரமாக வடதிசையில் நடந்தான்.  எந்த இடத்திலிருந்து வடக்கில் பிரயாணிக்க வேண்டும் என்பது தெரியவில்லை.  நேர்வடக்காகச் சென்றால் குவலயாஸ்வனின் வழிவந்தவர்களின் ஆட்சியிலுள்ள சிந்து நாடு.  அங்கு உறங்க முனிவரது ஆசிரமம் இருக்கும் என்று நாரத முனிவர் கூறியது நினைவுக்கு வந்ததும் நம்பிக்கை பெற்றவனாக நடந்தான்.  இரவாகிவிட்டது.  பிறைச் சந்திரன் தோன்றினான்.     கடற்கரையோரமுள்ள மீனவக் குடிசைகளுக்குச் சென்று “துவாரகையிலிருந்து வருகிறேன்.  வடகிழக்கில் சந்திரபாகா நதிக்கரையோரமுள்ள சூரிய தலத்துக்கு செல்ல வேண்டும்.  வழி தெரிந்தால் சொல்லுங்கள் என்று கேட்டான்.  “அதுபற்றி எங்களுக்குத் தெரியாது.  ஆனால் உன்னைப் போன்ற நோயாளிகள் ஆற்றைக் கடந்து செல்வதைப் பார்த்திருக்கிறோம் என்று கூறினார்கள்.  அன்றிரவு மீனவக் குடிசைகளின் ஓரமாக ஆற்றுமணலில் சந்திரனைப் பார்த்தவாறே கண்ணயர்ந்தான். 
விடியற்காலையிலேயே மீனவர்களின் உதவியோடு ஆற்றைக் கடந்தான்.  அங்கே ஒரு தவசியைக் கண்டான்.  அவரை வணங்கி சூரியத்தலைம் பற்றிக் கேட்டான்.  “பஞ்ச நதிப்பிரதேசத்தில் சூரியத்தலம் இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கே உன்னைப்போன்ற சருமநோயாளிகள் செல்வதையும், நோய் நீங்கித் திரும்பி வருவதையும் கண்டிருக்கிறேன்.  ஆனால் நோய் எப்படி நீங்குகிறது என்பது எனக்குத் தெரியாது.  நீ அங்கு போக வேண்டும் என்றால் ஆற்றைக் கடந்து வந்திருக்கக் கூடாது.  திரும்பிச் செல் என்று கூறினார்.  அவரை வணங்கிவிட்டு ஆற்றைக் கடந்து வந்து கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  ஏழு பருவங்கள் நடந்தான்.  எட்டாவது பருவம் ஆரம்பித்த முதல் நாள் அந்தி நேரத்தில் சந்திரபாகா நதிக்கரைக்கு வந்து சேர்ந்தான்.  அங்கிருந்தவர்களிடம் “சிந்து நதியிலிருந்து பிரிந்து செல்லும் சந்திரபாகா நதி இதுதானா? என்று கேட்டான்.  பலர் அவன் தோற்றத்தைக் கண்டு பதில் பேசவில்லை.  வயதான ஒரு படகோட்டி மட்டும் “நீ சொல்கிற இடம் அக்கரையில்தான் இருக்கிறது. அக்கரையிலிருந்து ஏழு நாள் நடக்க வேண்டும்.  ஏழாம் நாள் ஒரு ஆறு குறுக்கிடும்.  ஆற்றைக் கடந்தால் நீ சொல்கிற இடம் வந்துவிடும் என்று கூறினான்.  கிழவரைச் சாம்பன் வணங்கினான்.  திரும்பி படகோட்டியின் உதவியால் மறுகரைக்கு வந்து படகோட்டி கூறியபடி நடக்க ஆரம்பித்தான். 
அவனுடைய சிந்தையில் சூரியத்தலம் மட்டுமே இருந்தது.  இதுநாள்வரையில் அவன் எந்த நோக்கமும் இல்லாமல் இருந்தான். பெண்களுடன்கூடி மகிழ்வதே வாழ்க்கை என்று எண்ணியிருந்தான்.  உடம்பு என்பது ஒரு புழுக்கூடு என்று இப்போது தெரிந்திருந்தது. அந்தக் கூட்டை வைத்துக்கொண்டா இத்தனை ஆட்டம் ஆடினோம் என்று மனம் நொந்தான்.  எல்லாம் போன பிறகும் அவன் உள்ளத்தில் சிறு நெருப்புத் துண்டு மாதிரி ஒரு ஒளியிருந்தது.  அதன் வெளிச்சத்தில் அவன் நடந்துகொண்டிருந்தான்.  அந்த ஒளி சூரியத்தலம் என்ற ஒளிதான்.  இரவுப்பொழுது வந்தது.  வனாந்திரத்தில் படுத்திருந்தான்.  கொடிய விலங்குகள் குறித்த பயமெல்லாம் அவனிடமிருந்து போய்விட்டிருந்தது.  விதிப்பயன் எதுவோ அதுதான் நடக்கும்.  மாறி எதுவும் நடக்காது.  உடலில் பூட்டியிருந்த ஆபரணங்களையெல்லாம் ஒன்வொன்றாகக் கழட்டி வைப்பது மாதிரி மனதிலிருந்த ஆசைகள் எல்லாம் ஒவ்வொன்றாக அவனைவிட்டு போய்விட்டன.  தந்தையின் பெயரைக்கூட அவன் எங்கும் பயன்படுத்தவில்லை.  உடம்பு காற்றடைத்த பை என்பதை உணர்ந்துவிட்டதால் இரவு பகல் பேதம் அவனிடமில்லை.  பேதம் ஆசை கொண்ட மனதிற்குத்தான்.  அதனால் நன்றாகத் தூங்கிவிட்டு மறுநாள் புறப்பட்டான்.  அன்றைய பொழுதின் அந்தி நேரத்தில் ஒரு ஆறு வந்தது. ஆற்றைக் கடந்ததும் குடிசைகள் கண்ணில்பட்டன.  குடிசைகளை நோக்கி நடந்தான்.  எதிர்ப்பட்டவர்களிடம் “இதுதான் சூரிய தலமா? என்று கேட்டான்.  “அப்படித்தான் சொன்னார்கள் என்று ஒரு குஷ்டரோகி சொன்னான்.  அவனைச் சூழ்ந்து நின்ற எல்லாருமே குஷ்டரோகிகளாக இருந்தனர்.  அந்த இடத்திலிருந்த குழந்தைகளுக்கும் குஷ்டரோகம் இருந்தது.
       “கிரக ராஜன் சூரியதேவன் வீற்றிருக்கும் இடம் எங்கே இருக்கிறது? என்று சாம்பன் கேட்டதும் அங்கிருந்தவர்கள் சிரித்தனர்.  கூட்டத்திலிருந்த கிழவன் “உன்ன மாதிரிக் கேள்விப்பட்டுத்தான் நாங்களும் வந்தோம்.  ஆனா நீ சொல்ற இடம் எதுன்னு எங்களுக்குத் தெரியாது,  வனத்துக்குள்ளார ஒரு கோவில் இருக்கு.  அத சூரிய சேத்திரம்ன்னு சொல்றாங்க என்று கூறினான். 
“அங்க கிரக ராஜனின் உருவம் பொறித்த சிலை இருக்கிறதா? என்று சாம்பன் கேட்டதும் கூட்டத்திலிருந்தவர்கள் சிரித்தனர்.
“அங்க ஒரு சிலை இருக்கு.  அதுக்கு நாங்க தினமும் கும்பிடு போடுவோம்.  அங்க ஒரு ரிஷி இருக்காரு.  போனா புடிச்சிவச்சிக்கிட்டு உபதேசம் பண்ண ஆரம்பிச்சிடுவாரு.  அதனால நாங்க அவர்கிட்ட அதிகமா போறதில்ல.  அவர் சொன்னபடி சூரிய ஒளி படும்படியா உட்கார்ந்திருப்போம்.  அப்பறம் பிச்சை எடுக்கப்போய்விடுவோம் என்று கிழவன் சொன்னான்.
      
“பிச்சையா? என்று சாம்பன் கேட்டான்.  கூட்டத்திலிருந்த எல்லோரும் சிரித்தனர்.  கூட்டத்திலிருந்த நீலாட்சி என்ற இளவயது பெண் சிரித்துக்கொண்டே “ராசா மகனா இருந்தாலும் இந்த இடத்துக்கு வந்துட்டா பிச்சைதான் எடுக்கணும்.  நீ ராசா மகனா?  நீ பேசுவது எல்லாம் வனத்து ரிஷி பேசுற மாதிரியே இருக்கு என்று சொல்லிவிட்டு உரசுவது மாதிரி சாம்பனிடம் வந்து நின்றாள்.  அவளுடைய இடுப்பிலிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது.  குஷ்டரோகத்தால் பார்ப்பதற்கு அசூசைபடும்படியாக இருந்தாள்.  கூட்டத்திலிருந்த கிழவன் “நேற்று நீலாட்சியின் புருசன் செத்துவிட்டான்.  இன்றிலிருந்து நீ அவளோடு சேர்ந்துகொள்.   அவளுக்குப் புருசனாகவும், பிள்ளைக்குத் தகப்பனாகவும் இரு“” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான்.  அங்கிருந்த குஷ்டரோகிகளின் பேச்சு சாம்பனுக்கு விநோதமாக இருந்தது.  “நான் இந்தப் பெண்ணோடு சேரவோ தங்கவோ முடியாது.  நேற்றுதான் அவளுடைய புருசன் இறந்தான் என்று சொன்னீர்கள்.  அதற்குள் எப்படி இப்படிப் பேசுகிறீர்கள்?”“ என்று கேட்டான்.  “வாழ ஆசைப்படுகிறவர்களுக்கத்தான் சட்டம் திட்டம் எல்லாம்.  சாக ஆசைப்படுகிறவர்களுக்கு எதுவுமில்லை.  தினம் இங்கு ஒரு ஆள் செத்துப்போகிறான்.  அதேமாதிரி தினமும் உன்னை மாதிரி ஒரு ஆள் வந்து சேருகிறான்.  அதனால் இருக்கிறவரை மகிழ்ச்சியாக இரு என்பதும், தனித்து இருக்காதே-அது உன்னை சீக்கிரத்தில் சாகடித்துவிடும் என்பதால் ஆணும் பெண்ணும் சேர்ந்துதான் இருப்போம்.  ஒரு இரவுகூட நாங்கள் தனியாக இருப்பதில்லை.  இந்த வனத்தில் மழை பெய்யாமல் இருந்தாலும் இருக்கும்.  ஆனால் பெண்களுக்குப் பிள்ளை பிறப்பது மட்டும் நிற்காது.  வேப்பஞ்சாற்றில் தேன் கலந்து குடித்தாலும் அதன் கசப்பு மாறாது.  நொய்யரிசி கொதி தாங்காது என்று ஒரு ஆள் சொன்னான்.
       “நீங்கள் செய்வது தவறு.  நோய் வந்தால் மருந்தைத்தான் தேடிப்போக வேண்டும்.  அதற்குப் பதிலாக பல நோய்களை வாங்கக் கூடாது என்று சாம்பன் சொன்னதும் “நீ வனத்து ரிஷி மாதிரி பேசுற.  அவரை மாதிரியே உபதேசம் பண்ணுற. இப்போது இங்க நான் மட்டும்தான் தனியாள்.  அதனால் நீ என்னோடுதான் இருக்க வேண்டும்.  பிள்ளையைப் பிடி என்று சாம்பனிடம் பிள்ளையைக் கொடுத்தாள் நீலாட்சி.  கூட்டத்திலிருந்த கிழவன் “நீலாட்சி சொல்வதுதான் சரி.  ஆண்களுக்குப் பெண்களும், பெண்களுக்கு ஆண்களும் சரியாக இருக்கிறோம்.  நீலாட்சி மட்டும்தான் தனி.  நீயும் தனி,  விடிவதற்குள் செத்துப்போகலாம்.  அதுவரை ஏன் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது?  அவளுக்கு மட்டும் மகிழ்ச்சியில்லை.  உனக்கும் இல்லை. அவளைக் கட்டியணைத்துக் கனிவாய் முத்தமிடு என்று சொன்னான்.  “துன்மார்க்கமாக மதியீன செயலைச் செய்ய மாட்டேன்.  வேசியராசையை எப்போதோ விட்டுவிட்டேன்.  ஒருபோதும் அநாச்சரமான காரியம் செய்ய மாட்டேன்.  செத்துவிடுவோம் என்று எப்படிச் சொல்ல முடியும்?  சாவதற்காக நாம் இங்கே வரவில்லையே.  நோய் சரியாகி திரும்பிப் போக வேண்டும் என்ற எண்ணத்தோடுதானே இங்கே வந்தீர்கள்.  அந்த எண்ணம்தான் நமக்கு நம்பிக்கை-உயிர்.  அதை இழந்தால் நாம் பிணம் போன்றவர்கள்தான் என்று சாம்பன் சொன்னதும் “எங்களுக்குப் புத்திமதி சொல்ல நீ யார் என்று கேட்டு சண்டைக்கு வந்தனர்.  அப்போது குறுக்கிட்ட நீலாட்சி தன் கூட்டத்து ஆட்களிடம் சாம்பன் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று சொல்லிச் சத்தம் போட்டாள். கூட்டம் அமைதியடைந்தது. 
“நீங்கள் வந்த நோக்கத்தை மறக்காதீர்.  நம்பிக்கையை இழக்காதீர்.  நோயிலிருந்து விடுபட ஆசைப்படுங்கள்.  திரும்பி ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படுங்கள்.  உங்கள் நோக்கம், ஆசை பிறரைத் துன்புறுத்தாது.  பிறருக்குக் கேடு விளைவிக்காது.  நம்முடைய நம்பிக்கையில்தான் நம் எதிர்காலம் இருக்கிறது.  உலோக குணத்தை கைவிடுங்கள்.  ஈனத்துவம் படைத்த ஜென்மமாக இருக்க வேண்டாம் என்று சொன்னான் சாம்பன். 
“வனத்து ரிஷிமாதிரி, ராஜா மகன் மாதிரி பேசுற“ என்று கூறிவிட்டு அவரவர் குடிசைக்குக் திரும்பினர்.
       நீலாட்சியும் சாம்பனும் மட்டுமே இருந்தனர்.  உரசி, உறவாடி, அணைத்து, முத்தமிட்டுப் பார்த்தாள்.  குடிசைக்குள் இழுத்துப் பார்த்தாள்.  எதற்குமே சாம்பன் இசையவில்லை.  பிச்சையெடுத்து வந்த சோற்றில் ஒரு பகுதியைக் கொடுத்தாள்.  அதை வாங்கி சாப்பிட்டுவிட்டு “விந்தையான வார்த்தைகளைப் பேசுகிறாய்.  நான் உன்னை போகிக்க மாட்டேன்.  நான் என்றும் உனக்குத் துணையாக, விளக்கின் திரியாக, ஒரு சகோதரனாக இருப்பேன் என்று கூறிவிட்டு நீலாட்சியின் குடிசைக்கு வெளியே அன்றைய இரவுப் பொழுதை கழித்தான்.  இருள் பிரியும்முன்னே எழுந்து கிழக்கு நோக்கிப் புறப்பட்டான்.  பல ஆயிரம் மலர்கள் பூத்திருந்ததைக் கண்டதும் தன் ஆயுள் காலம் முழுவதும் இங்கேயே தங்கி கழித்துவிடலாம் என்று நினைத்தான்.  மகிழம்பூ வாசனை அடித்தது. ஆதித்தியரைக் கண்டதும் இவரை எப்படி நான் வணங்குவேன், எப்படி நான் பூஜை செய்வேன், சாபத்திலிருந்து எப்படி விடுதலை பெறுவேன் என்று சிந்திக்கலானான்.  மனமுருகி வணங்கினான்.  மும்முறை வலம் வந்துவிட்டு ஆற்றங்கரைக்கு நடந்தான்.  அப்போது கீழ்வானத்தில் குங்குமப் பந்தாக, அக்னிக் கோளமாக சூரியதேவர் தோன்ற-அவரைக் கைகூப்பி வணங்கி நின்றான் சாம்பன்.
       ஒரு முனிவர் ஆதிசக்தீஸ்வரரை வணங்கி நிற்பதைக் கண்டான்.  அவரிடத்திலே சென்று தொழுது “முனிவரே சாபத்தின் விளைவாய் குஷ்டரோகியாகி இங்கு வந்துள்ளேன் என்று சாம்பன் கூறியதைக் கேட்டுப் பின்னால் வருமாறு கூறிவிட்டுத் தன் ஆசிரமத்திற்குச் சென்றார் முனிவர். “தென்கிழக்குத் திசையில் வெயிலைப் பார்த்து உட்கார்.  பூஜை முடிந்ததும் உன்னிடம் பேசுகிறேன்”“ என்று சொல்லிவிட்டுப் பூஜை செய்யப் போனார்.  முனிவர் கூறியபடியே சாம்பன் வெயிலில் உட்கார்ந்தான்.  மறுகணமே சூரியதேவனை மனதில் நினைத்து தியானம் செய்தான்.  அவன் கண்கள் மூடியிருந்தன.  உடல் அசைவற்றிருந்தது.  ஆனால் மனம் பேசியபடியே இருந்தது.  “சூரியதேவரே! எனக்கு விதிக்கப்பட்ட சாபத்திலிருந்து விடுதலை கொடு.  பொன், பொருள், செல்வம், பெண் மோகம் எல்லாவற்றிலிருந்தும் விலகிவந்துவிட்டேன்.  என் மனதிலிருந்தும் விடுதலை கொடு. அவன் எவ்வளவு நேரம் தியானத்திலிருந்தான் என்பது தெரியாது.  முனிவரின் குரல் கேட்டுக் கண்விழித்தான்.  “கிரக ராஜனை வணங்கிவிட்டுக் கனிகளைச் சாப்பிடு என்று கொடுத்தார்.  அவரை வணங்கிக் கனிகளைப் பெற்றுக்கொண்டான்.  அவன் எதிரில் உட்கார்ந்து “உன் கதையைக் கூறு என்று கேட்டார்.  “மண் பாண்டம், ஓடு ஸ்வாமி.  அதற்கு என்ன கதை இருக்க முடியும்?  ஒரு கைப்பிடி சாம்பலாகும் உடல், ஆசைகளால் நிறைந்த பை என்று சாம்பன் சொன்னதும் முனிவர் அவனை வினோதமாகப் பார்த்தார்.  விவரமானவன்.  மற்ற நோயாளிகளைப் போன்றவன் அல்லன் என்றும் எட்டு கர்மங்களையும் அறிந்தவன் இவன் என்றும் தெரிந்தது. 
“இங்கு வந்ததன் நோக்கம்?”
“விடுதலை.  சாபத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக.
“சாபமா?
“ஆம் ஸ்வாமி.
“இந்த இடத்தைப்பற்றி யார் கூறியது?
“நாரதர்.
“நாரதரா?  அவரை நீ பார்த்திருக்கிறாயா?  எல்லா வர்ஷங்களிலும், எல்லா அந்தரிட்சத்திலும் நடமாடும் நாரதரைப் பார்த்தாயா?  நம்ப முடியவில்லையே,.  அப்படியென்றால் நீ பாக்கியவான்தான்.  நீ யார்? என்று முனிவர் கேட்டார்.
‘‘ஸ்வாமி.  என் மீது கருணை கொள்ளுங்கள்.  கோபம் கொள்ளாதீர்கள்.  தக்க தருணம் வரும்போது கூறுகிறேன்.
“உன் விருப்பப்படியே ஆகட்டும்.
“ஸ்வாமி காலையில் சூரியதேவனை வணங்கினீர்கள்.  ஆனால் பூஜை செய்யவில்லை,  ஏன்?
“எனக்கு வேதம் படிக்க உரிமை உண்டு.  ஆனால் பூஜை செய்ய உரிமையில்லை.  நான் தேவலோக இனத்தைச் சேர்ந்த பிராமணன்.  சிவப்பு மையால் சூரியனைத் தரையில் வரைந்து வணங்குகிறேன்.  இந்த சூரியதலத்தை யார் நிறுவினார்கள் என்று எனக்குத் தெரியாது.  நான் வரும்போது இப்படித்தான் இருந்தது.  கிரகராஜனின் மூலத்தானமும், அத்தமனத்தலமும் இதுதான்.  பூகோளத்தின் ஒரு பக்கம் அவர் ஒளிரும்போது அவரது கடைசி கிரணங்களுக்குச் சிறப்பான சக்தி உண்டு.  அது பல சரும நோய்களைத் தீர்க்க வல்லது.  அதனால்தான் நான் இங்கு வந்தேன்.  வந்ததிலிருந்து அத்தமன சூரியனை வணங்கி வருகிறேன்.  என் உடலிலிருந்த நோய்க்குறிகள் படிப்படியாக மறைந்துவிட்டன.
“இது ஒரு இடம்மட்டும்தானா?
“இந்த நாட்டின் உதயாசலத்தில் சூரியன் முதலில் தோன்றுகிறார்.  வட கிழக்கு மூலையில் உதிப்பதால் ‘கோணாத்தியர்  அல்லது ‘மூலை அகத்தியார் என்று அழைக்கப்படுகிறார்.  இந்த மூலத்தானத்தில்தான் தென்மேற்குத் திசையில் அவர் மறைகிறார்.  யமுனைக்குத் தெற்கே, துவாரகைக்கு அருகில் நண்பகலில் அவர் வீற்றிருக்கிறார்.  அந்நிலையில் அவர் பெயர் ‘கலாப்பிரியர்’.  பெருநோயிலிருந்து விடுபட இந்த மூன்று காலங்களில் சூரிய கிரணங்கள் பட வேண்டும்.
“ஒரே நாளில் மூன்று இடங்களுக்கும் எப்படிச் செல்ல முடியும்?
“ஒரு ஆண்டை மூன்று காலங்களாகப் பிரித்து அந்தந்தக் காலங்களில் அந்தந்த இடங்களில் வழிபடவேண்டும்.  நானும் அவ்வாறுதான் வழிபட்டுவந்தேன்.  கிரகராஜனுக்கு ஆதித்தியன், சவிதா, சூரியன், மிக்ரன், சர்க்கன், பிரபாகரன், மார்த்தாண்டன், பாஸ்கரன், பானு, சித்திரபானு, ரவி என்ற பனிரெண்டு பெயர்களில், பனிரெண்டு மாதங்களில், பனிரெண்டு இடங்களில் வீற்றியிருக்கிறார்.  நீ அந்தந்த மாதங்களில், அந்தந்த இடங்களுக்குச் சென்று புனித நீராடி வழிபட்டால்தான் உன் நோய் நீங்கும்.
“பனிரெண்டு புனித தலங்கள் எது, பனிரெண்டு புனித நதிகளின் பெயர்கள் என்ன?”
“சந்திரபாகா, புஷ்கரம், நைமிஷம், குருட்சேத்திரம், பிருதுநஞ்சம், கங்கை, சரஸ்வதி, சிந்து, பயஸ்வினி, யமுனை, தாமிரா, சிப்ரா.  எல்லா இடங்களுக்கும் சென்றுவர ஆறு பருவங்கள் ஆகும்.  உன்னால் முடியுமா?
“தங்களின் கருணையும் ஆசியும் இருந்தால் முடியும் ஸ்வாமி.
“ஒவ்வொரு மாதத்திலும் வளர் பிறையில் ஏழாம் நாளில் சூரிய கிரணங்களுக்குச் சிறப்பான சக்தி உண்டு.  அன்று நீ விரதமிருந்து சூரியதேவரை வணங்க வேண்டும்.
“அடுத்தது என்ன செய்ய வேண்டும்? பணிவுடன் சாம்பன் கேட்டான்.
“பனிரெண்டு தலங்களுக்கும் சென்று வா.  அப்போது சொல்கிறேன்.
“மற்ற நோயாளிகளையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன்.
“அவர்கள் யாருடைய பேச்சையும் கேட்பதில்லை. மதிப்பதில்லை. அவர்கள் நீசர்கள். உடைந்த பானைகளை ஒட்டவைக்க முடியுமா?
“தங்களின் ஆசீர்வாதம் இருந்தால் முடியும் ஸ்வாமி.
மனம் பூரித்த முனிவர் “என் பரிபூரண ஆசி உனக்கு எப்போதும் உண்டு,  போய் வா என்று கூறியதும் அவரை வணங்கிவிட்டு குஷ்டரோகிகளின் குடிசைகளுக்கு வந்தான்.  அவனைச் சூழ்ந்துகொண்டு “அந்த ரிஷி உனக்கு உபதேசம் செய்திருப்பாரே என்று சொல்லிக் கேலி செய்தனர். அதைக் கேட்டு மிகுந்த மனவாட்டமுற்றான்.  “ரிஷியை மரியாதை குறைவாகப் பேசாதீர்கள்.  அவர் நம் எல்லாரையும்விட மேலானவர்.  அவரை வணங்கி பூஜிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.  மகா புருஷர் அவர்.“ சாம்பன் சொன்னதை யாருமே காதில் வாங்கிக்கொள்ளவில்லை.  ரிஷியோடு சாம்பனையும் சேர்த்துக் கிண்டல் செய்தனர்.  பிச்சையெடுத்துக் கொண்டு அப்போது நீலாட்சி வந்தாள்.  “என்ன உன் பாத்திரம் நிறைந்ததா? என்று சாம்பன் கேட்டான்.
“இல்லை.
“அது எப்போதும் நிறையாது.  அதுதான் பிச்சைப் பாத்திரத்தின் சாபம்.
“நீ எப்போது பார்த்தாலும், சாபம்-சாபம் என்றே பேசுகிறாய்.  கிடைத்திருப்பது போதும்.  அதில் உனக்கும் தருகிறேன்.  சாப்பிடு.
“கொடு.  சாப்பிடுகிறேன்.  சாப்பிட்டு இரவு தங்கிவிட்டு விடிந்ததும் பிரயாணம் போகிறேன்.  நீயும் வா.
“என்ன பிரயாணம். என்னை ஏன் கூப்புடுகிறாய்? உயிரோடு இருக்கும்வரை இந்த இடத்திலேயே இருந்து சாகாமல் ஏன் அலையப் போகிறாய்? என்று கேட்டபடியே வந்து சாம்பனை உரசினாள். நீலாட்சி.
“குடல் அனலைத் தணிப்பது மட்டும் முக்கியமல்ல.  மனதின் அனலையும் தணிக்க வேண்டும். மானுட களங்கம் நான்.  உனக்கு மனக்காயம் உண்டாக்க மாட்டேன்.  சண்டாள காரியம் செய்ய மாட்டேன்.  படுபாதகச் செயலைச் செய்ய என்னைத் தூண்டாதே.   பஞ்சமா பாதக செயல் செய்யும் குலத்தில் நான் பிறக்கவில்லை.  அபகீர்த்தி வந்துவிடும். நீச குலத்தில் பிறந்தவன் அல்ல நான்.  கைகேயின் சொல் கேட்டு தசரதன் மாண்டான்.  ஜானகியின் சொல் கேட்டு மான் பின்னோடி ஸ்ரீராமன் வெகு துன்பப்பட்டான்.  சூர்ப்பனகையின் சொல் கேட்டு ராவணன் தம் சுற்றத்தாரோடு மாண்டான்.  ஆதலால் ஸ்திரிகள் சொல் கேட்பது தர்மம் அல்ல.  பேயைக் கொண்டாலும் பெண்ணைக் கொள்ள மாட்டேன்.  எல்லாவற்றையும் மறந்துவிட்டுத் தூங்கு.  அதுதான் உனக்கு மருந்து.  உடம்பு என்பது புழுக்கூடு என்று அறியும்போது உனக்குத் தெரியும் மோகம் என்பது ஒன்றுமில்லை என்று.  நீ எதற்காக இங்கு வந்தாய்?’‘
“குஷ்டத்தைப் போக்க.
“குஷ்டம் போய்விட்டதா?
“இல்லை.
“குஷ்டத்தைப் போக்க என்ன பிரயத்தனம் செய்தாய்?
“ஒன்றுமில்லை.
“அவ்வாறு செய்யாததுதான் தவறு.  ஒன்றும் செய்யாமல் எப்படிப் போகும்?  நோயைப் போக்கத்தான் நான் யாத்திரை செல்கிறேன்.  நான் உங்களைப் போன்றவன்தான்.  குஷ்டரோகி.  எனக்கு நம்பிக்கை இருக்கிறது.  அதனால் பனிரெண்டு புனித தலங்களுக்கும், பனிரெண்டு புனித நதிகளுக்கும் சென்று புனித நீராடி சூரியனை வழிபடப் போகிறேன்.
“நாங்கள் யாரும் வரவில்லை.  இவன் பொய்யன்.  மை வேலை, சித்து வேலை தெரிந்தவன்.  வசியம், மாந்திரீகம் செய்து கெடுக்கப் பார்க்கிறான் என்று சொல்லிக் கூட்டம் கத்தியது.  நீலாட்சிதான் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினாள்.  “நீ சொல்வதை உபதேசம் பண்ணாமல் சொல்.  என்ன புனித தலம் என்று நீலாட்சி கேட்டாள்.
“நம் வாழ்க்கையில் எஞ்சியிருப்பதென்ன?
“சாவு.
“நீ ஏன் ஊரிலேயே சாகாமல் இங்கு வந்தாய்?
“வரும்போது நம்பிக்கை இருந்தது.  இப்போது இல்லை.
“அதுதான் பிரச்சனை.  நம்பிக்கையை விட்டதுதான் சிக்கல்.  நம்மிடம் எஞ்சியிருக்கும் ஒரே விசயம் நம்பிக்கை.  அதை இழந்ததுதான் நீங்கள் இப்படியானதற்குக் காரணம்.  குளிக்கப்போய் யாராவது சேற்றைப் பூசிக்கொள்வார்களா?  நாம் மீண்டும் சரியாவோம்.  நம்பு என்று சொல்லி சத்தியம் செய்தான்.  குஷ்டரோகம்பற்றி, அது தீருவதுபற்றி, சூரியத்தலம் உள்ள இடங்கள், புனித தலங்கள், புனித ஆறுகள் ஓடுகிற விசயம்பற்றியெல்லாம் கூறினான்.
“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? நீலாட்சி கேட்டாள்.
“வனத்து ரிஷி மட்டுமல்ல நாரத முனிவரும் சொன்னார்.
“நாரதரா? என்று கூட்டம் கேட்டது.  “ஆம் என்று கூறி, தான் யார் என்பதை மட்டும் மறைத்துவிட்டு நாரதர் கூறிய வரலாற்றையெல்லாம் கூறிவிட்டுக் கடைசியாக “காலையில் என்னோடு வருவது யார்?  நாம் போவது சித்தர் வழி, ரிஷி வழி, முனி வழி, சிவன் வழி.  அதனால் நமக்குத் தெய்வத்தின் அனுக்கிரகம் எப்போதும் இருக்கும் என்று சொன்னான்.
“நான் வர்றேன் என்று நீலாட்சி சொன்னாள்.  மற்றவர்களிடம் அவள்தான் பேசினாள்.  அவளுடைய பேச்சுதான் எடுபட்டது.  இரவாகிவிட்டது.  நிலவின் வெளிச்சத்தில் அனைவரும் உட்கார்ந்து-சாம்பனிடம் புனித தலங்கள் புனித நதிகள் குறித்து விபரம் கேட்டனர்.  அன்றிரவு முழுவதும் பேசினார்கள்.  இருள் விலகுவதற்கு முன்பாகவே எழுந்து ஆற்றில் குளித்துவிட்டுக் கூட்டமாகச் சென்று ரிஷியை வணங்கினர்.  ரிஷி ஆச்சரியப்பட்டார்.  “மங்களமாக சென்று வா. உன் செயலுக்கு அழிவில்லை.  நீ நினைத்த காரியம் செயமாகும்.  காரியத்தில் வெற்றியடைந்தால் ஒளிஞானம் பெறுவாய்.  பூவுலகைவிட்டுச் சுவர்க்கத்திற்குப் போவாய்.  கல்லார் நெஞ்சில் நில்லார் ஈசன். ஏழு சப்தமிகளில் நீதி, நியமப்படி விரதமிருந்தால் தோசத்திலிருந்து விடுபடலாம் என்று சாம்பனையும் மற்றவர்களையும் அனுப்பினார்.
சாம்பனுக்குப் பின்னால் எழுபது பேர் இருந்தனர்.
 அவர்கள் அனைவரும் பனிரெண்டு தலங்களுக்கும் சென்று வணங்கி, பனிரெண்டு புனித நதிகளில் நீராடி, பனிரெண்டு பருவங்கள் முடிந்து சந்திரபாகா நதியின் அத்தமனதலத்துக்கு வந்தபோது சாம்பனையும் சேர்த்து மொத்தம் பதினைந்து பேர்களே எஞ்சியிருந்தனர்.  யாத்தரையின்போது உடல் நலமில்லாமல் பலர் இறந்தனர். நடக்க முடியாமல் ஒரு சிலர் அங்கங்கே தங்கிவிட்டனர்.  பிள்ளைகளையும், புருசனையும் இழந்த பெண்கள் சாம்பனைக் கொடூரமான வார்த்தைகளால் திட்டினார்கள்.  அவர்களையெல்லாம் நீலாட்சிதான் சமாதானப்படுத்தினாள். 
பனிரெண்டு பருவங்கள் முடிவதற்குள்ளாகவே அவர்களுடைய உடம்பில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  உடலில் உணர்ச்சிகள் உண்டாக ஆரம்பித்திருந்தன.  புருவ முடியும், தலை முடியும் உதிர்வது நின்று போயிருந்தது.  ஆண்களுக்குத் தாடி, மீசை மீண்டும் வளர ஆரம்பித்திருந்தன.  உடலில் தேய்மானம் நின்றுபோயிருந்தது.  சிந்து நதியைக் கடந்து செல்லும்போது சாம்பனுக்கு ஒரு மரப் பதுமை கிடைத்தது.  அது சூரிய தேவனின் சிலையை ஒத்திருந்தது.  அந்தப் பதுமையோடு சென்று வனத்து ரிஷியை மெய்யொழுகி வணங்கினான் சாம்பன்.  உளம் மகிழ்ந்த ரிஷி சாம்பனையும் மற்றவர்களையும் வாழ்த்தினார்.  “சாம்பா, இந்த மரப் பதுமையை இங்கே பிரத்ஷ்டை செய்.  இது கற்பகத்தருவால் ஆனது.  அடுத்து நீ இன்னொரு மகத்தான காரியத்திற்குத் தயாராக வேண்டும்.  முன்பு ஒருமுறை பூஜை செய்ய எனக்கு உரிமையில்லை என்று சொன்னேன் அல்லவா.  அதனால் பூஜை செய்ய உரிமையுள்ள பிராமணர்கள் சாகத் தீவில் இருக்கிறார்கள்.  அவர்களைப் பாரதவர்ஷத்துக்கு அழைத்து வரவேண்டும்.  இந்த இந்த காலங்களில் இன்னஇன்ன பூஜை செய்தால் குஷ்டரோகம் குணமாகும் என்பதை அவர்கள்தான் கணித்திருந்தார்கள்.  அதோடு அவர்களுக்கு மருத்துவமுறையும் தெரியும்.  முன்பு அவர்களில் சிலர் இங்கு இருந்தனர்.  அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லையென்று திரும்பிப் போய்விட்டார்கள்.  அங்கு போவது மலையைக் குடைந்து எலி போவது போன்றது.  வழி கடுமையானது.  நீ முதலில் அந்தரிட்சத்துக்குப் போ.  அதைக் கடந்தால் தேவருலகம், இலாவிருத வர்ஷம். அதை தாண்டினால் சாகத் தீவு.  நீ அங்கு சென்று உரிய பிராமணர்களைக் கொண்டு வரவேண்டும்.  அதற்கு முன் இந்தப் பதுமையை நிறுவு.
“உங்களின் ஆசிப்படியே நடக்கும்”“ என்று சாம்பன் கூறினான்.
“இந்தச் சிலைக்குக் கோவில் எழுப்புவதற்கு விசுவகர்ம இனத்தவர்களை கொண்டு வரவேண்டும்.  இங்கிருந்து தென்மேற்குத் திசையிலுள்ள பிரதேசத்தில் இருக்கிறார்கள்.  அவர்களைக் கொண்டு வரவும், பராமரிக்கவும் நிறைய பொருள் வேண்டும்.  நான் ஆண்டி.  நீ குஷ்டரோகி.  என்ன செய்வது? என்று ரிஷி பெரும் கவலையுடன் சொன்னதைக் கேட்டு “ஸ்வாமி நான் பொருளுக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சாம்பன் சொன்னதும், ஆச்சரியத்துடன் “எப்படி? என்று ரிஷி கேட்டார்.  சாம்பன் தன் வரலாற்றைச் சொன்னான்.
“மகாபாரதப் போரையே ஒற்றையாளாக நடத்திய கிருஷ்ணரின் மகனுக்கா இந்த நோய்? பூதலம் போற்றும் கிருஷ்ணரின் மகனா நீ? என்று கேட்டார் ரிஷி.
“ஸ்வாமி.  பழைய வாழ்க்கை என்னை ஈர்க்கவில்லை.  பாம்பு தன் தோலை உரிப்பதுபோல அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டுவிட்டேன்.  இது புகழ் உடல் அல்ல.  புழு உடல்.  வாளால் நோயை வீழ்த்த முடியாது.  நோய், சாபம் எனக்கு முக்கியமல்ல.  பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்புவது, சாகத் தீவிலிருந்து பிராமணர்களைக் கொண்டு வருவதுதான் என் லட்சியம்.  என் ஆசை நிறைவேற ஆசி கூறுங்கள்.  நான் உடனே துவாரகைக்குப் புறப்பட வேண்டும்.
“சாம்பா.  உன்னிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.  மேன்மையான பண்புகள் இருக்கின்றன.  இன்னும் சில நாட்களில் வளர்பிறையின் ஏழாம் நாள் வருகிறது.  அன்று சூரிய தேவனின் பதுமையைப் பிரதிர்ஷ்டை செய்.  மறுநாள் புறப்படு.  உன் காரியம் வெற்றியடையும்.  நீயும் சிரஞ்சீவியாக இருப்பாய்.  ஈரேழு பதினாறு லோகங்களிலும் உனக்குக் கீர்த்தி உண்டாகும். இந்த இடத்தைப் புண்ணிய பூமியாக்கு என்று கூறினார்.  அவரை வணங்கிவிட்டுத் திரும்பும்போது அவனோடு இருந்தவர்கள் எல்லாம் அவனுடைய கதையைக் கேட்டு மலைத்துப்போயினர்.  கிருஷ்ணரின் மகன் என்பதை யாருமே நம்பவில்லை.  அவனுடைய காலில் விழுந்து வணங்க வந்தபோது தடுத்து நிறுத்தி “நான் இப்போது கிருஷ்ணரின் மகனல்ல.  குஷ்டரோகி.  உங்களில் ஒருவன்.  உங்களோடு இருப்பவன்.  உங்களோடுதான் என் ஆயுட்காலம் முடியும்.  நீங்களே என் பந்தம் என்று சொல்லி ஒவ்வொருவரையும் கட்டித் தழுவினான்.  நோயாளிகள் கண்ணீர்விட்டு அழுதனர்.
“நாம் உடனே பதுமையைப் பிரதிர்ஷ்டை செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  அடுத்து நான் துவாரகைக்குப் புறப்பட வேண்டும்.  அதற்கு உங்களுடைய துணை இருந்தால்தான் முடியும் என்று கூறினான்.  ஒரே குரலில் அனைவரும் “நீ சொல்வதை அடிமாறாமல் செய்கிறோம் என்று வாக்களித்தனர்.  படுக்கப்போகும் முன் புதிதாக வந்திருந்த நோயாளிகளைச் சந்தித்தான் சாம்பன்.  நிழல்போல அவனோடு இருந்தாள் நீலாட்சி.
       பதுமையை நிறுவிய மறுநாள் “சாம்பா நாம் சூரியதேவனுக்குக் கோவில் எழுப்ப வேண்டும்.  நீ துவாரகைக்குப் புறப்படு என்று நீலாட்சி சொன்னாள்.  ஆனால் அவளுடைய கண்கள் கண்ணீரைச் சிந்தின.  அவனுடைய வரலாற்றை அறிந்தபிறகு அவள் ஒரு நூல் சாம்பனிடமிருந்து விலகியே இருந்தாள்.  அதை அறிந்த சாம்பன் “நீலாட்சி நீதான் என் ஆற்றலின் ஊற்று.  நீ இல்லாவிட்டால் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது.  நீ எனக்கு விளக்கு போன்றவள்.  உன்னுடைய வெளிச்சத்தில்தான் நான் பனிரெண்டு புண்ணிய தலங்களில் சென்று வழிபடவும், நீராடவும் முடிந்தது.  சூரிய தேவருக்கு அடுத்தபடியாக உன்னைத்தான் என் மனம் வணங்குகிறது என்று சாம்பன் சொன்னதும் நீலாட்சி கதறியழுதாள்.
  “உன்னிடம் தகாத முறையில் நான் மோகம் கொண்டேன்.  மோகிக்க ஆசைப்பட்டேன்.  அது என் உடல் செய்த தவறு.  நான் இன்று உயிரோடிருக்க நீதான் காரணம்.  எனக்குக் கண்களைத் தந்தவன் நீ.  உன் வழியாகத்தான் நான் இப்போது இப்பூவுலகைக் காண்கிறேன்.  நான் பாக்கியம் செய்தவள்.  உடம்புக்கும் மனசுக்குமான வேறுபாட்டை நீதான் காட்டித்தந்தாய்.  உடம்பு என்பது ஓட்டைத் துருத்தி.  மண்பாண்டம்.  நான் பூமியில் நிற்பதற்கு நீதான் ஆணிவேர்.   நான் நடக்கிற பாதை நீதான்.  உன்னை என் குலகுருவாக எண்ணித் தினமும் மனதிற்குள் பூஜை செய்கிறேன் என்று நீலாட்சி சொன்னதைக் கேட்டு “நீ கானகத்தில் மலர்ந்த அதிசயப்பூ நீலாட்சி.  நீயே என் குரு.  வழிகாட்டி.  உன்னுடைய அன்பும், கருணையும், பெருந்தன்மையுமே என்னை வழிநடத்துகிறது.  தாயைப்போல கருணையுள்ள பாங்கியாகிய நீலாட்சியேநீயும் மற்றவர்களும் ஆசீர்வாதம் தந்து, என்னை அனுப்பி வையுங்கள் என்று சொல்லி அவளிடமும் மற்றவர்களிடமும் விடைபெற்று, ஒரு குதிரையை ஏற்பாடு செய்துகொண்டு துவாரகைக்கு வாயு வேகத்தில் புறப்பட்டான் சாம்பன்.
       பிறைகாலத்தில் சாம்பன் துவாரகையை அடைந்தான்.  அவனைக் கண்டு கிருஷ்ணர் அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்.  ஜாம்பவதியும் மற்ற தாய்மாரும் கண்ணீரோடு அவனை வரவேற்று உபசரித்து கட்டித்தழுவினர்.  கிருஷ்ணரின் மாளிகையில் மகிழ்ச்சி வெள்ளம் ஓட ஆரம்பித்து ஒரு கணம்தான் இருக்கும்.  ஒருநாள்தான் தங்கப் போகிறேன் என்று சாம்பன் சொன்னது எல்லாருடைய காதிலும் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியதுபோலிருந்தது.  அனைவரும் கண்ணீர்விட்டு அழுதனர்.  அவனுடைய மனதை மாற்ற முயன்றனர்.  சாம்பன் தன் முடிவில் உறுதியாக நின்றான்.  தான் செய்ய இருக்கிற காரியம் குறித்துப் பேசி அனைவரையும் சமாதானம் செய்தான்.  லட்சுமணாவைத் தேற்றுவதுதான்  சமுத்திரத்தைக் கடப்பதுபோலிருந்தது.  அன்றிரவு தங்கி மறுநாள் காலையிலேயே அளவிலா பெரும் செல்வத்துடன் துவாரகையைவிட்டுக் கிளம்பினான்.
       சாம்பனின் தேர் புயலைப்போல சீறிப் பாய்ந்தோடியது.  விசுவகர்ம இனத்தவர்களைச் சந்தித்தான்.  தான் செய்ய இருக்கும் காரியம் குறித்துப் பேசி, வேண்டிய பொன், பொருள், செல்வம் கொடுத்து-அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு பிறைகாலம் கழித்து சூரிய தலத்துக்கு வந்து சேர்ந்தான்.  சூரியதேவனுக்குக் கோவில் எழுப்புவுதற்கான தக்க ஏற்பாடுகளைச் செய்தான்.  ஏழு பிறைக்காலம் நீலாட்ச்சியின் உதவியோடு கோவில் பணிகளைச் செய்தான்.  எட்டாம் பிறை முதல் நாள் தன் பயணத்தை ஆரம்பித்தான்.  மற்ற நோயாளிகள அவனை வழியனுப்பி வைத்தனர்.
       பஞ்சநதி நிலப்பரப்பைக் கடந்து இமாலயத்தின் அடிவாரத்திற்குச் சென்று சேர சாம்பனுக்கு ஒரு பிறைக்கு மேலாயிற்று.  அங்கிருந்து அந்தரிட்சத்தை நோக்கிப் பயணமானான்.  அந்தரிட்சத்தை நெருங்கநெருங்க கந்தருவர் கண்ணில் பட ஆரம்பித்தனர்.  ஆண்களும் பெண்களும் மிகவும் சௌந்தரியழகு பெற்றவர்களாக இருந்தனர்.  குதிரைகள், மலையாடுகளின் மீதே பயணம் செய்தனர்.  மலைக் குன்றுகளுக்கு நடுவே அமைந்திருந்தது அந்தரிட்சம்.  படகின் மூலம் சாவரி செய்து ஆற்றைக் கடந்தான்.  இலாதவர்ஷத்துக்குச் செல்வதற்கான பாதையைக் கேட்டறிந்தான்.  வடமேற்குத் திசையில் பயணம் செய்து சாகத் தீவை அடைவதற்குள் பத்து பிறைக்காலம் முடிந்துவிட்டது.  சாகத் தீவுவாசிகள் தேவர்களைப்போல இருந்தனர்.  மகர் இனத்துப்  பெரியவர்களைப் பழம், புஷ்பம், தர்ப்பை, திருமஞ்சனம் முதலானவை கொடுத்து வந்தனம் செய்து தான் வந்திருக்கும் நோக்கம் பற்றி சாம்பன் எடுத்துரைத்தான். தன் குல வரலாற்றையும் தக்க விதத்தில் சொன்னான்.  மகர் இனத்துப் பெரியவர் ஒருவர் “உன் பேச்சும் செய்கையும் நம்பும்படியாக இருக்கிறது.  கிருஷ்ணரைப்பற்றி நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.  எங்கள் இனத்து ஆட்கள் அங்கு வருவார்கள்.  அவர்களுக்குரிய மரியாதை கிடைக்குமா? என்ற கேட்டார்.
“வேதமோதுகிற அந்தணர்களே! திவ்விய வஸ்திராபரணங்கள் தருவேன்.  கஸ்தூரி முதலிய வாசனைத் திரவியங்கள் தருவேன்.  வேண்டிய தானங்களும் தட்சணைகளும் தருவேன்.  நல்ல பயிர் நிலங்களும், காராம் பசுக்களும் கொடுப்பேன். கோதானம் செய்வேன். பொன், பொருள், தங்க ஆபரணங்களும் தருவேன்.  உங்களுக்கு ஒரு குறையும் இருக்காது.  என்னோடு பதினெட்டுக் குடும்பங்கள் வரட்டும்.  நான் எழுப்பிக்கொண்டிருக்கும் சூரிய தேவர் கோவிலில் பூஜைகள் செய்ய வேண்டும்.  அதோடு எங்கள் நாட்டில் குஷ்டரோகத்தின் தாக்கம் அதிகம் இருக்கிறது.  அதையும் நீங்கள் ஒழிக்க வேண்டும்.  இதுவே என் விருப்பம் என்று சாம்பன் கூறியதை கேட்டு மகர் இனத்தவர்கள் அவன் மீது நம்பிக்கை கொண்டனர்.  அவனோடு பாரத வர்ஷத்துக்கு வருவதற்குப் பதினெட்டுக் குடும்பங்கள் தயாராயின்.  மலைக்கழுதைகள், குதிரைகள், பெரிய மலையாடுகள் பூட்டிய தேர்களில் சாம்பனும் பதினெட்டு மகர் இனத்துக் குடும்பங்களும் பிரயாணத்தை ஆரம்பித்தன.
                சாம்பன் மகர் இனத்தவர்களோடு சூரியதலத்துக்கு வந்து சேர்ந்தபோது சூரியதேவரின் கோவில் தேர் போன்ற வடிவில் பாதிக்குமேல் முடிந்திருந்தது.  அதைக் கண்டு சாம்பன் மகிழ்ச்சியுற்றான்.  மகர் இனத்தவர்கள் சாம்பன் பொய் கூறவில்லை என்பதையறிந்து அவனை வாழ்த்தினர்.  ஓமச்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.  வழியில் சாம்பனுக்கு மகர் இனத்தவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக அவனுடைய தோற்றத்தில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது.  அதை கண்டு மற்றவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர்.  அவனுடைய உடல் தோற்றத்தில் தெரிந்த இயற்கை காட்சிகளையும், மனித உருவங்களையும் கண்டு அதிசயத்தனர்.  மற்ற நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க மகர் இனத்தவர்களிடம் வேண்டிக்கொண்டான்.  வனத்து ரிஷியைச் சந்தித்து தக்க ஆலோசனைகளைப் பெற்று ஆறு மகர் இனத்தவர்களை மட்டும் அங்கே தங்கச் செய்துவிட்டு மற்ற மகர் இனத்தவர்களையும், விஸ்வகர்ம இனத்தைச் சேர்ந்த கொஞ்சம் பேரையும் அழைத்துகொண்டு யமுனையின் தென்கரையில் வடமதுரைக்கு அருகில் ஒரு ஓமச்சாலையை நிறுவினான்.  அங்கு சூரிய தேவருக்கு ஒரு கோவில் எழுப்பும்படி விசுவகர்ம இனத்தவர்களைக் கேட்டுக்கொண்டான்.  ஆறு மகர் இனத்தவர்களை அங்கே தங்கச் செய்தான்.  மீதமுள்ள மகர் இனத்தவர்களையும், விசுவகர்ம இனத்தை சேர்ந்தவர்களையும் அழைத்துக்கொண்டு உட்ர நாட்டில் பிராசி நதியின் கிளையொன்று சந்திரபாகா என்ற பெயருடன் ஓடிச்சென்று கடலில் கலக்கிற இடத்திற்கு வந்தான்.  அங்கு ஒரு ஓமச்சாலையை நிறுவினான்.  சூரிய தேவருக்கு கோவில் எழுப்ப விசுவகர்மர்களைக் கேட்டுக்கொண்டான்.  எஞ்சியிருந்த ஆறு மகர் இனத்தவர்களையும் தங்க வைத்தான்.  சாம்பனின் செயல் கண்டு மகர் இனத்தவர்களும், விசுவகர்ம இனத்தவர்களும் வாழ்த்தினர்.  சூரிய தேவருக்குக் கோவில் எழுப்பும் பணியில் முழு மனதுடன் ஈடுபட்டனர்.  அனைவரிடமும் விடைபெற்று சூரிய தலத்துக்குப் போவதற்கு தயாரானான்.
       சூரிய தலத்துக்குச் சாம்பன் வந்து சேர ஒரு ஆண்டாகிவிட்டது.  அவன் வரும்போது அங்கு சிறு நகரம் உண்டாகியிருந்தது கண்டு ஆச்சரியப்பட்டான்.  நகரவாசிகள் அந்த இடத்திற்கு “சாம்ப பூர்” என்று பெயரிட்டிருந்தனர்.  மகர் இனத்து பிராமணர்களின் சிகிச்சையால் குஷ்டரோகிகள் பழைய நிலைக்குத் திரும்பியிருந்தனர்.  புதிய நோயாளிகளும் வந்திருந்தனர்.  சூரியதேவனின் கோவிலில் முக்கால பூஜையும் முறையாக நடந்துகொண்டிருந்தது.  எல்லாவற்றையும் கண்டு மனம் பூரித்த சாம்பன், “வேத நெறிமுறைகள் காப்பாற்றப்பட வேண்டும்.  அறநெறி, ஒழுக்க நெறிகள் தவறாது இருந்தால்தான் தர்மம் தழைக்கும் என்று மகர் இனத்தவர்களிடம் கூறினான்.  வனத்து ரிஷியை சந்திக்கச் சென்றான்.
       ரிஷியின் ஆணைப்படி காலப்ரிய, காலநாத்தலம், கிழக்குக் கடற்கரையின் கோணவல்லபத்தலம் ஆகிய மூன்று தலங்களிலும் நான்கு மாதம் என்று தங்கி ஓராண்டைக் கழித்தான்.  அவனுடைய பழைய கூட்டாளிகளுடன் சேர்ந்து மூன்று கோவில்களின் பணிகளையும் பார்த்தான்.  கோவிலை நெருங்கநெருங்க தேவலோகம் போன்றிருந்தது.  கோவிலுக்கு வெளியே தேவர், யட்சர், கந்தருவர், அப்சரசுகளின் உருவம் பதித்த சிலைகள் இருந்தன. கோவில் பெரிய தேர் போன்ற வடிவில் உருவாக்கப்பட்டிருந்தது.  நான்கு வாயில்கள் இருந்தன.  வாயில் காப்போராக பிங்களா, தண்டநாயகன், ரஜனா, ஸ்தோசா, கால்மாஸ், பட்சி, வியோமன், நக்னதிண்டி ஆதித்தியர், வசுக்கள், அசுவினிகள், மாருதர் யாவரும் அவரவர் இடத்தில் வீற்றிருந்தனர்.  பனிரெண்டு ஆண்டு காலத்தில் மூன்று கோவில்களும் முழுமையாகப் பூர்த்தியடைந்தன.
       ஒருநாள் “நான் கிழக்குக் கடற்கரையில் கோணர்க்கத்தலத்தில் தங்கி கோணாத்தியரின் வழிபாட்டில் ஈடுபடப்போகிறேன்என்று கூறினான் சாம்பன்.  அதைக்கேட்ட நீலாட்ச்சி நான் கற்பதுமையல்ல.  மானிடப் பிறப்பு.  நீதான் என் மகா மைத்திரன்.  உயிர் போன்றவன்.  அதனால் நீ ஆண்டுக்கொரு முறையாவது இங்கு வந்து செல்ல வேண்டும்.  இதுவே என் இறுதி விருப்பம் என்று நீலாட்சி சொன்னாள்.
“நீலாட்சி நான் உன்னைச் சந்தித்த அந்தப் பொழுதையும், இரவையும் நான் மறக்கவில்லை.  அன்று நீ ஒரு கை அன்னமிட்டாயே.  அதை நான் மறக்க மாட்டேன். நீ ஒருத்தி மட்டுமில்லாமல் போயிருந்தால் எந்தக் காரியமும் நடந்திருக்காது.  அன்று நீதான் எனக்கு நம்பிக்கையளித்தாய்.  நீதான் என் ஆதி மூல சக்தி. நீ நீச குலத்தில் பிறந்தவளாக இருந்தும் புத்தியால் உயர்ந்து விளங்கினாய். உன் பேச்சுக்குத்தான் நோயாளிகள் கட்டுப்பட்டனர். உங்களுடைய உழைப்பால்தான் மூன்று கோவில்களும் எழுந்தன. நீங்கள் உழைப்பால் உயிர் வாழ்கிறவர்கள். அதனாலேயே நீ என் சகோதிரி ஆனாய். நீலாட்ச்சி. என்று சொன்ன சாம்பனின் காலில் விழுந்து கண்ணீர் சொரிந்து சொன்னாள் நீலாட்சி. 
“நீ வராமலிருந்தால் நான் எப்போதோ மண்ணாகிவிட்டிருப்பேன்.  சூரியதேவரின் ஆலயங்களையும், பனிரெண்டு புனித தலங்களையும் பார்த்திருக்க முடியாது, பனிரெண்டு புனித நதிகளிலும் நீராடியிருக்க முடியாது.  பழைய நிலைக்கு வந்துவிட்டேன்.  அது முக்கியமல்ல.  நீதான் முக்கியம்.  நீதான் எனக்குச் சூரியதேவனைக் காட்டித்தந்தாய்.  நீயே என் ஆவி.  இன்றிலிருந்து இந்த வனம் மைத்திரேய வனம் என்று அழைக்கப்படும்.
       உணர்ச்சிவசப்பட்டான் சாம்பன்.  கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.  நீலாட்சியை மார்போடு அணைத்து “மைத்திரேயியே வனத்தை சேர்ந்த ஒரு மைத்திரேயன் தன் மைத்திரேயியிடம் வாக்குத் தவற மாட்டான். சகோதரன் தன் சகோதிரிக்கு அளித்த இடம். மித்திரவனம். ஆண்டுதோறும் உன்னைச் சந்திப்பேன் என்று வாக்குக் கொடுத்தான்.  “எனக்கு இந்த வரம் போதும்.  இதுவே என் ஆபரணம்.  பொக்கிஷம் என்று நீலாட்சி சொன்னாள்.  மற்றவர்களிடமும் சாம்பன் விடைபெற்றான்.  அப்போது அங்கே நாரத முனிவர் பிரசன்னமானார்.  முனிவருக்கு வேண்டிய சகலவிதமான மரியாதைகளையும் செய்து வணங்கினான்.
“சாம்பா நீ பழைய ரூபத்தை அடைந்துவிட்டாய்.  உன் சாபமும் தீர்ந்தது.  நீ உடனே துவாரைகைக்குப் புறப்படு. உன்னைப் பிடித்தப் பீடை நீங்கிவிட்டது என்று நாரதர் கூறினார்.
“நான் இனி துவாரகைக்குத் திரும்பப் போவதில்லை.  மகா முனிவரே என்று தாழ்பணிந்து கூறினான் சாம்பன்.
“ஏன்?  உன் பந்துக்கள் எல்லாம் உன் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.
“வாழ்க்கை என்பது என்ன, மனம் என்ன என்பதைப் புரிந்துகொண்டுவிட்டேன்.  நான் இப்போது விரும்பும் வாழ்க்கை துவாரகையில் இல்லை.  இந்த மித்திரவனத்தில்தான் இருக்கிறது.  மலையளவுக்குக் குவியல் குவியலாக ஒன்பது வகை ரத்தினங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் போக மாட்டேன்.  சூரியதேவனை வழிபட்டு இங்கேயே என் காலத்தைக் கழிக்க திட்டமிட்டுள்ளேன்.  மயானத்தை ஆள எனக்கு விருப்பமில்லை.  பொன்னுக்கும் மண்ணுக்கும் நான் ஆசைப்படவில்லை.  அந்த ஆசையெல்லாம் எப்போதோ செத்துவிட்டது.  பழைய நினைவுகளை அறுத்துவிட்டேன்.  எனக்கு ஆசி கூறுங்கள் மகா முனிவரே. சூரிய தலத்துக்கு வரும் வழியில் பூதக்கூட்டங்களும் பேய்களும், துஷ்ட விஷ ஜந்துக்களும் விளையாடும் மயானக்கரையிலும் தங்க நேரிட்டது.  அடர்ந்த வனத்திலும், அத்துவானக்காட்டிலும்  உறங்கியிருக்கிறேன்.  பல இரவுகள் நட்சத்திரங்களையும் சந்திரனையும் பார்த்தவாறு இருந்திருக்கிறேன்.  அந்த இரவுகளில்தான் சூறைக்காற்றில் இருக்கும் தீபம் போன்றது மானிட வாழ்வு என்பதை அறிந்துகொண்டேன்.  மானிடப் பிறப்பு அற்பமானது.  தந்தை இருந்தார்.  தாய், யானை, சேனை, படை, பரிவாரங்கள், மாளிகை, அளவிலா செல்வம் எல்லாம் இருந்தது.  ஆனால் இங்கு வந்தபோது நான் தனியாகத்தான் வந்தேன்.  என் நோய் மட்டுமே என்னோடு இருந்தது.  சுடுகாட்டிற்கும் நான் தனியனாகத்தான் செல்வேன் என்பதைச் சொல்லி தந்தது சுடுகாட்டில் நான் கழித்த இரவுகள்தான்.  அந்த இரவுகளை நான் பொக்கிஷமாக மனதில் வைத்திருக்கிறேன். வேறு பொக்கிஷங்கள் வேண்டாம் முனிவரே. ஆண் பெண் என்பது சதை பிண்டம் மாமிசம் என்பதை நான் அறிந்துக்கொண்டேன். என்று நாரதரைத் தொழுது நின்றான் சாம்பன்.
தேவாமிர்தம் உண்டதுபோல மனம் பூரித்த நாரதர் “சாம்பா நீ சூரியதேவனுக்கு மூன்று கோவில்களை எழுப்பி இருக்கிறாய்.  உலகில் யாரும் செய்யாதது.  அதனால் எல்லா உலகத்திலும், எல்லா காலத்திலும் உன் பெயர் நிலைத்திருக்கும்.  ஈரேழு புவனங்களிலும் உன் புகழ் பரவும்.  தேவாதி தேவர்களும் உன்னை வாழ்த்துவார்கள்.  வா சூரியதேவனை வழிபடலாம் என்று கூறி சாம்பனை அழைத்துகொண்டு கோவிலுக்குள் போனார் நாரதர்.
“எல்லா ஜீவராசிகளும், எல்லா தேவர்களும், எல்லா வேதங்களும் வணங்குவதற்குரிய கிரகராஜனே! என் பூஜையை ஏற்றுக்கொள் என்று கூறி சூரிய தேவனை வழிபட்டார் நாரதர்.  “இன்று முதல் கிரகராஜனின் பெயர் சாம்பாதித்தியன்.  இனிமேல் இந்தப் பெயரில்தான் சூரியதேவன் வழிபடப்படுவார் என்று நாரதர் கூறினார்.  சாபம் பெற்றபோதுகூட அழாத சாம்பன் முதன் முதலாகக் கண்ணீர்விட்டு அழுதான்.  அவனை ஆரத்தழுவிய நாரதர் “அடுத்து உன் திட்டம் என்ன?” என்று கேட்டார். 
“ஆற்றங்கரைக்குச் செல்கிறேன்.  புதுக் குஷ்டரேகிகள் யாராவது  வந்திருந்தால் அவர்களை அழைத்து வந்து சூரியதேவனை வழிபடச் செய்வேன் என்று கூறி நாரதரை வணங்கிவிட்டு ஆற்றங்கரைக்கு நடக்க ஆரம்பித்தான் சாம்பன்.
------------

உயிர்மை, ஜனவரி 2014